ஜீவஜோதி






(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8

தேவதேவி சொல்லியதைப் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்த சித்ரா, “மகாராணி! என் அன்பு விலை கொடுத்து வாங்கியதாயிருந்தால் அதைத் தயங்காமல் உங்களுக்குத் தானம் கொடுத்துவிடுவேன். உங்களுடைய ராஜ்யமும், போக பாக்கியங்களும் எனக்கு வேண்டாம். என் ஜோதியை என்னிடம் திரும்பக் கொடுத்துவிடுங்கள். நாங்கள் உங்களுடைய தேசத்தைவிட்டே போய்விடுகிறோம். உங்கள் ஆணையை மீறி ஏன் அமரகிரியில் நான் தங்கினேன் என்று கேட்டீர்கள். உங்கள் ஆணையை மீறுவோர்களுக்கு என்ன தண்டனை கிடைக்குமென்பது எனக்குத் தெரியும். தெரிந்துதான் அமரகிரியிலேயே நான் தலைமறைவா யிருந்தேன். என் கணவர் மீது நீங்கள் ஒரு கண் வைத்திருப்பதை நான் அறிந்த வினாடி முதல் என் உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பது எனக்குத் தெரியாததில்லை என் காதல் பரிசுத்தமானது. பட்டம் பதவிகளுக்காக என் இதயத்திலிருந்து என் கணவரை விலக்க நான் தயாராயில்லை. அது முடியக்கூடியதுமில்லை. உங்கள் சக்தியைப் பிரயோகித்து என்னை அழித்துவிட்டு உங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ளுங்கள். மனம் விரும்பிய கணவனுடன் நான் வாழமுடியாவிட்டாலும் கணவனுக்காக உயிரையே தியாகம் செய்தவளென்ற பெயராவது எனக்குக் கிடைக்கட்டும்” என்றாள்.
சித்ரா இவ்விதம் சொல்லுகையில் சாந்தமாகவும், அமைதியாகவுமிருந்த தேவதேவியின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல் அடைவதையும், திரிசூலத்தைப் பற்றிக்கொண்டிருந்த அவளுடைய கரம் கோபத்தில் பதறுவதையும் பாலாஜி கவனித்துக் கொண்டிருந்தான். தன்னுடைய பேச்சுக்கு எவரும் ஒரு வார்த்தை பதில் பேசுவதை பொறுத்து அறியாத தேவதேவி சினந்து எழுந்தால் என்ன நடக்குமென்பதை ஏற்கனவே இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் பார்த்திருந்த பாலாஜிக்கு சித்ராவின் மரணம் சமீபித்துவிட்டதைப் போலத் தோன்றியது.
“என்ன சொன்னாய்? நயமாகப் பேசியும் என் கோரிக்கைக்கு இணங்க முடியாதென்றா சொல்லுகிறாய்? நன்றாக யோசித்துச் சொல்லு!” என்றாள் தேவி. இவ்வார்த்தைகளை அவள் பேசினாளென்று சொல்லுவதை விட படபடப்புடன் சிந்தினாளென்று சொல்லுவதே பொருத்தமாயிருக்கும். வேகமாக அடிக்கும் காற்றில் இளம் மாந்துளிர் எப்படித் துடிக்குமோ அவ்விதம் தேவியின் உதடுகளும் கரங்களும் துடிப்பதை பாலாஜியும் ஜோதிவர்மனும் கவனித்தார்கள்.
“இதில் யோசிப்பதற்கு ஒன்றுமேயில்லை தேவி! உங்கள் அதிகாரமும் அகங்காரமும் என் பதியை என்னிடமிருந்து பறித்துக் கொண்டு விட முடியாது. சாவுக்குப் பயந்தாலல்லவா உங்களுடைய மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் நான் பயப்பட வேண்டும்? சாவுக்குப் பயந்திருந்தால் உங்கள் ஆணையை மீறி அமரகிரியில் அரைக்கணம் நான் தாமதித்திருப்பேன்? நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஜோதியை உள்ளன்புடன் காதலித்ததற்கு திருமணப் பரிசாக எனக்குச் சாவு கிடைக்கட்டும். பிறருடைய புருஷனைத் துராகிருதமாகக் கைப்பற்றிக் கொண்ட கீர்த்தி உங்களுக்குக் கிடைக்கட்டும்! ஏன் நிற்கிறீர்கள் மகாராணி? நடத்துங்கள் உங்கள் கொலைத் தொழிலை!” என்று கிணீரென்று சொல்லிவிட்டு ஜோதிவர்மன் நின்ற இடத்தை நோக்கி அம்புபோலப் பாய்ந்து ஓடினாள்.
ஆனால், சித்ரா ஜோதியை நெருங்குவதற்குள் “நில்! அப்படியே நில்!” என்று அதிபயங்கரமான தொனியில் முழங்கிய தேவதேவி திரிசூலத்தைச் சுழற்றிக்கொண்டு பாய்ந்து வந்தாள். ஜோதிக்கும் சித்ராவுக்குமிடையில் தேவதேவி நீட்டிய திரிசூலத்தை சித்ரா அலட்சியமாகப் பற்றி உதறிய பொழுது மின்சாரத்தினால் தாக்கப்பட்டவளைப் போல சித்ரா அதே இடத்தில் தொப்பென்று சுருண்டு விழுந்தாள். இரண்டே இரண்டு வினாடிகள் வரை, இரண்டு முறை கண் மூடித்திறக்கும் நேரம் வரை சித்ராவின் கைகளும் கால்களும் வாயும் கண்களும் வலிப்பு ஏற்பட்டு இழுப்பதைப் போல இழுத்தன. மறுகணம் அவள் அசைவற்றுச் சவமாகி விட்டாள்.
சித்ரா விழுந்ததும் ஜோதிவர்மன் “அய்யோ சித்ரா!” என்று அலறிக்கொண்டே அவள் அருகில் ஓடினான். விழுந்து கிடந்த சித்ராவைத் தன் மடியில் தூக்கிவைத்துக்கொண்டு “சித்ரா! சித்ரா நான்தான் உன் ஜோதி! விழித்துப் பாரேன்!” என்று அவன் அலறினான்.
“உங்களுடன் சித்ரா இனிப் பேசமாட்டாள். இனி எந்தக்காலத்திலும் உங்களோடு பேசமுடியாத இடத்துக்கு அவள் போயே போய்விட்டாள். பாவம் விட்டில் பூச்சி நெருப்பை முத்தமிட்டு சாவை மணந்து கொண்டு விட்டது. நன்றிகெட்ட இந்த நாயிடம் கொண்ட பச்சாத்தாபத்தினால் அவளுக்கு உயிர்ப் பிச்சையளிக்க விரும்பினேன்! என் ராஜ்யத்தையே தாரைவார்ப்பதற்குக் கூடத் தயாரா யிருந்தேன்.ஆனால், ‘பதவி பூர்வபுண்யானாம்’ என்ற பழமொழி எப்படிப் பொய்யாகும்? பூர்வஜென்ம வினைப் பயன் அவளை என் திரிசூலத்துக்குப் பலியாக்கிவிட்டது. திரிசூலத்தைத் தீண்டி மரணத்தை அவளே வலுவில் தழுவிக் கொண்டாள்?” என்றாள் தேவதேவி.
“ராட்சசி! நீயும் ஒரு பெண்ணா? நிரபராதியான என் மனைவியைப் பலிவாங்கி விட்டாயே! உனக்கு அவள் என்ன அபசாரம் செய்தாள்?” என்று தழுதழுத்த குரலில் கேட்டான் ஜோதி. அவன் பேசிய வார்த்தையின் ஒவ்வொரு சொல்லிலும் துவேஷமும் வெறுப்பும் பிரதிபலித்தன.
“அவள் என்ன அபசாரம் செய்தாள்? சித்ரா எனக்கு என்ன அபசாரம் செய்தாள்? எனக்கும் பல நூற்றாண்டுகளாக நான் காத்திருக்கும் என் பிரபுவுக்குமிடையில் குட்டிச் சுவரைப்போல நிற்பதைவிட அவள் இன்னும் என்ன அபசாரம் செய்யவேண்டும்? அவள் உங்களுடைய கண்களில் படாமல் நேற்றே அழிக்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள் பெரியப்பாவின் கருணை உள்ளம் நேற்று அவளைக் காப்பாற்றியது. இன்று அவளுடைய திமிரடித்தனமும் துடுக்கும் அவளை மாய்த்துவிட்டது. இதற்கு யார் ஜவாப் தாரி?” என்றாள் தேவி.
“யார் ஜவாப்தாரியா? நீதான் ஜவாப்தாரி! காமாந்தகாரப் பிசாசே நீதான் ஜவாப்தாரி! நான் யார் தெரியுமா? உன்னைப் படுகொலை செய்து சந்திரிகாவின் சபதத்தை நிறைவேற்றப் பிறந்தவன்! விஜய கேசரியின் வம்சத்தில் தோன்றி உன் ரத்தத்தைப் பிழிந்து ருசிபார்க்கக் கடல் கடந்து வந்தவன்! என் கண்மணியைக் கொன்ற உன்னை இதோ என்ன செய்கிறேன் பார்?” என்று சொல்லிக்கொண்டு எழுந்த ஜோதிவர்மன், பாலாஜி ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியில் பிரமை பிடித்துப்போய் நிற்பதை அலட்சியமாகப் பார்த்துவிட்டு இடுப்பில் சொருகிக் கொண்டிருந்த பிச்சுவாக் கத்தியுடன் தேவதேவியை நோக்கிப் பாய்ந்தான்.
அவ்வளவு நேரமும் அதிர்ச்சியில் செயலற்றுப் போயிருந்த பாலாஜிக்கு நிலைமை எல்லைமீறிப் போய்விட்ட தென்ற ஞானோதயம் பிறந்தது. அவர் ஜோதிக்கும் தேவதேவிக்கும் மத்தியில் போய் நின்றுகொண்டு “என்ன முட் டாள்தனமான காரியம் செய்கிறாய் ஜோதி! தெய்வாம்சம் பொருந்திய தேவியைக் கொல்லுவதன் முன்னால் என்னைக் கொன்று போட்டுவிட்டுப்போ! படாத பாடுபட்டு வளர்த்த உன் பெரியப்பனைக் கொன்றுவிட்டு தேவியிடம் போ!” என்றான்.
ஜோதிவர்மன் ஒரு கணம் தயங்கினான். என்னைக் கொன்று போட்டுவிட்டு தேவியிடம் போ என்று பாலாஜி சொல்லியதைக் கேட்டதும் ஜோதிக்குத் தலைசுற்றுவதைப் போலிருந்தது. “இப்படி நீங்களா சொல்லுகிறீர்கள் பெரியப்பா! உலகத்தை ஏமாற்றும் இந்தப் பில்லி சூனியக்காரி சரியாக உங்களையும் ஏமாற்றியிருக்கிறாள். இவள் தேவ அம்சமில்லை. மிகமிகக் கொடிய ராட்சத அம்சம். ரத்தவெறி பிடித்த இந்தப் பிசாசு உலகத்திலிருப்பதை அனுமதிக்கக் கூடாது. சித்ராவைத் தொடர்ந்து இவளையும் மேலோகத்துக்கு அனுப்பினால்தான் என் ஆத்மா சாந்தியடையும். சந்திரிகாவின் ஆணையை ஏற்று விஜயகேசரியின் மரணத்துக்கு வஞ்சம் தீர்ப்பதற்காக இந்தக் காட்டுமிராண்டித் தேசத்துக்கு நான் வந்தேன். வந்த இடத்தில் இந்த ராட்சசியைக் கொன்று பழிவாங்க இன்னொரு காரணமும் கிடைத்துவிட்டது. காமவெறி பிடித்த அவளைச் சும்மா விடக் கூடாது. நகருங்கள் பெரியப்பா! ஒரே குத்தில் இவள் இதயத்தைப் பிளந்து போட்டு விடுகிறேன்!” என்று முழங்கினான் ஜோதி.
பாலாஜி தன் முழுப்பலத்தையும் பிரயோகித்து ஜோதியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு “ஜோதி! வேண்டாம். தேவியிடம் பலப் பரிசோதனை செய்யாதே. அவள் சற்றுப் பலமாக மூச்சுவிட்டாலே நீ பஸ்மீகரமாகி விடுவாய். உன் கத்தியும் கோடரியும் அவளை ஒன்றும் செய்யாது. என் பேச்சைக் கேள்!” என்று கதறினார். அவரின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள ஜோதிவர்மன் வெறி பிடித்தவனைப்போல திமுறுவதையும் அவன் கையில் கூர்மையான பிச்சுவாக் கத்தி பளபளவென்று பிரகாசிப்பதையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டு சற்றுத் தூரத்துக்கப்பால் நின்றாள் மலைக்கன்னி.
அவள் பிறகு சொன்னாள்:- “அய்யா பெரியவரே! விஜயகேசரியை விட்டுவிடுங்கள். சந்திரிகாவின் கணவனைக் கொன்றதற்காகவும் சற்று முன்னால் என் பிரஜைகளில் ஒருவளான சித்ராவைக் கொன்றதற்காகவும் என்னைப் பழி வாங்க அவர் விரும்புகிறார். அவருடைய விருப்பத்தை யாரும் தடைசெய்ய வேண்டியதில்லை. விஜயகேசரியிடம் கொண்ட தூய்மையான காதலுக்காக நான் இரண்டு படு கொலைகளைச் செய்ய வேண்டி நேரிட்டது என்னவோ உண்மைதான். அதை நான் மறுக்கவில்லை. எவரிடம் கொண்ட பிரேமைக்காக நான் கொலைகாரியாக மாற வேண்டியிருந்ததோ அவருடைய கையினாலேயே சாவதை விடப் பெரிய பாக்கியம் வேறு ஒன்றும் எனக்கு இருக்க முடியாது. விஜயகேசரியை அடைவதற்காக எனது ராஜ்யத்தையும் செல்வாக்கையும் சக்திகளையும் சித்ராவுக்குத் தியாகம் செய்துவிடுவதாகச் சற்று முன்புதான் சொன்னேன். இப்பொழுது அவை எல்லாவற்றையும்விட உயர்ந்த எனது உயிரையே தியாகம் செய்யவும் சித்தமாக இருக்கிறேன். சென்ற 2500 ஆண்டுகளாக என் உயிரைச் சந்தோஷத்துடன் சுமந்து கொண்டிருக்கிறேனென்று நீங்கள் நினைக்கிறீர்களா? எனக்கிருக்கும் செல்வ சுகங்களைச் சிறிதளவேனும் நான் அனுபவித்து ஆனந்தமாக வாழ்ந்திருப்பேனென்று நீங்கள் எண்ணுகிறீர்களா? விஜயகேசரியிடம் லயித்துப் போன என் மனம் போக பாக்கியங்களை யெல்லாம் உதறித் தள்ளி எவ்விதம் என்னைத் துறவறத்தில் ஈடுபட்டிருந்ததென்பதை என்றைக்காவது ஒரு நாள் அறியும்பொழுது காதல் உணர்ச்சி ஒரு பெண்ணை இந்த நிலைமைக்கும் உட்படுத்துமா என்று எண்ணி ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். என்றைக்காவது ஒருநாள் சர்வஞான சித்தரின் வாக்குப்படி என் பிரபு என்னைத் தேடிக் கொண்டு இங்கு வருவார். என்னை ஆட்கொள்ளுவார் என்ற ஒரு நம்பிக்கையுடன் சுமக்க முடியாமல் இந்த உயிரை 25 நூற்றாண்டுகள் வரை சுமந்து கொண்டிருந்தது எனக்குப் போதும். முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் என் வைராக்கிய வாழ்க்கைக்கு இன்றுடன் ஒரு முடிவு ஏற்பட்டுவிடட்டும். மரித்துப் பிறந்தாலாவது என் பிரபுவை அடுத்த ஜன்மங்களில் ஒன்றில் அடையமுடிகிறதா என்று பார்க்கிறேன். நான் சந்திரிகாவின் கணவனைக் கொன்றது யாரை உத்தேசித்து? இப்பொழுது சித்ராவைக் கொலை செய்ய நேரிட்டதும் யாரை உத்தேசித்து? சரித்திரம் அறிந்திரா ஆண்டுகள் வரை ஜீவனை வைத்துக் கொண்டு அநாகரிக ஜனங்களின் மத்தியில் நான் வாழ்வது யாருக்காக? அவரே என்னைக் கொலை செய்து வஞ்சம் தீர்த்துக் கொள்ள விரும்பினால் அதன் பிறகு நான் யாருக்காக உயிர் வாழவேண்டும்? வேண்டாம்? போதும் இந்த வாழ்க்கை! என் அன்புக் காதலன் கையினாலேயே என் வாழ்க்கைக்கு ஒரு முடிவு ஏற்பட்டுவிடட்டும். தயவு செய்து விஜயகேசரியை விடுங்கள்!”
தேவதேவி இவ்விதம் உணர்ச்சி வேகத்துடன் சொல்லி விட்டு கையிலிருந்த திரிசூலத்தைத் தூர வீசியெறிந்தாள். தலையில் தரித்திருந்த நவரத்தின மகுடத்தைச் சுழற்றி அவள் தரையில் எறிந்தபொழுது “கிணீர்” என்ற சப்தத்துடன் விழுந்து, மகுடத்திலிருந்து முத்துக்களும் நவரத்தினங்களும் உடைந்து தெறித்து சிதறின. கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டு கண்களையும் இறுக்க மூடிக் கொண்டு “சாவைத் தழுவ நான் தயார்! உள்ளன்புடன் பல நூற்றாண்டுகளாகப் பூஜித்த கணவனைத் தழுவ முடியாத இந்தச் சரீரம் சாவைத் தழுவி மண்ணுடன் மண்ணாவதற்குத் தயாராயிருக்கிறது! இன்றோடு என் வாழ்வும் அந்தஸ்தும் அரசும் சர்வமும் நசிந்து நாசமாகட்டும்! என் பிரபுவின் விருப்பத்தை எதிர்ப்பின்றி நிறைவேற்றிய திருப்தியாவது எனக்கு ஏற்படட்டும்!” என்று தழுதழுத்த குரலில் சொன்னாள் தேவதேவி.
“தேவி! இதென்ன பேச்சு?” என்றான் பாலாஜி ஒன்றும் புரியாமல்.
“இது எங்கள் சொந்த விஷயம். எனக்கும் என் பிரபுவுக்குமிடையில் யாரும் குறுக்கே நிற்க வேண்டாம். தயவு செய்து அவரை விருப்பம்போலச் செய்யவிட்டுச் செல்லுங்கள்! என் உயிரில் என்னை விட உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை? தயவு செய்து அவரை விடுங்கள்” என்று தேவதேவி வற்புறுத்தவும் ஜோதியைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்த பாலாஜி அவனைவிட்டு சற்று விலகி நின்றான்.
பாலாஜி தனது பிடியை விட்டு விலகியதும் ஜோதிவர்மன் சற்று நேரம் வரையில் தேவதேவியின் மீது வைத்த விழியை எடுக்காமல் செயலற்றுப் போய் பிரமை பிடித்த மாதிரி நின்றான். அவனைத் தேவதேவி விழித்துப் பார்க்கவேயில்லை. இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு அவள் அசைவற்று நின்றாள். பாலாஜியோ தனது வெறிபிடித்த மகனையும் மலைக்கன்னியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நின்றான்.
சிறிது நேரத்துக்குப்பின் கண்களை விழித்துப் பார்த்த தேவதேவி, “ஏன்? ஏன் சமைந்துபோய் நிற்கிறீர்கள் பிரபு? உங்கள் கொலை வெறியையும் வஞ்சத்தையும் தீர்த்துக் கொள்ள இப்பொழுது யாரும் உங்களுக்குக் குறுக்கே நிற்கவில்லையே! கதையிலும் கவிதைகளிலும் காலவெள்ளத்தின் கோடானுகோடி ஆண்டுகளிலும் மனித சமுதாயம் கண்டும் கேட்டுமிராத வைராக்கியம் நிறைந்த எனது சோக நாடகத்துக்கு முற்றுப் புள்ளி வைத்த பெருமையை ஈட்டிக் கொள்ளுங்கள்! நேற்று வந்த ஒரு காட்டுப் பெண்ணுக்காக யுகயுகாந்திரங்களில் எப்பொழுதுமே கேட்டிராதபடி, ஆயிரமாயிரமாண்டுகளாக மனம் விரும்பியவனைப் பூஜித்த ஒரு அபலைப் பெண்ணைக் குத்திக் கொன்று வீழ்த்தி வெறியைத் தணித்துக் கொண்ட பெருமை உங்களுக்குச் சேரட்டும்! மனம் வரித்த காதலனுக்காக சர்வ வல்லமை பொருந்திய ஒரு ராணி சற்றும் எதிர்பார்க்காமல் உயிரைத் தியாகம் செய்தாளென்ற பெருமை எனக்குக் கிடைக்கட்டும்! ஏன் தயங்குகிறீர்கள் பிரபு?” என்றாள்.
தேவியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஜோதியின் மனதைக் குத்திப் பிளப்பதைப் போலிருந்தன. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் விஜயகேசரியை அவள் கொன்றதும் சற்று முன்னால் தனது கண்ணெதிரிலே சித்ராவைக் கொலை செய்ததும் உண்மைதானென்றாலும் “இந்தக் கொலைகளுக்கு யார் ஜவாப்தாரி? எவரை முன்னிட்டு இவ்விரு கொலைகளையும் நான் செய்ய நேரிட்டது?” என்று தேவதேவி இடித்துக் காட்டிக் கேட்டது “குற்றவாளி நீ தான்! நீயேதான்!” என்று ஜோதிக்கு அவன் அந்தராத்மா உணர்த்திக் காட்டுவதைப் போலிருந்தது.
”தேவதேவி சொல்லுவதைப்போல நேற்று முளைத்த சித்ரா தன் காதலுக்காகத் தனது ராணியையே எதிர்த்துச் சாவைத் தழுவத் தயாராயிருந்தால் பல நூற்றாண்டுகளாக இதயத்தின் அடிவாரத்திலே தனது காதல் தெய்வத்தை வைத்துக் கொண்டு புழுங்கும் தேவதேவி கொலைத் தொழிலில் இறங்கியதில் என்ன ஆச்சரியம்? நம் எல்லோரையும் போல உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்ட ஒரு மனிதப் பிறவிதானே அவளும்? இதுதான் போகட்டும்! உண்மையில் சித்ராவை தேவதேவி கொன்றாளென்று தான் சொல்ல முடியுமா? சித்ராவுக்கு சர்வத்தையும் தியாகம் செய்து விடுவதாக அல்லவா அவள் சொன்னாள்? சித்ரா சற்று முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால் அவளாகவே தேவதேவியின் திரிசூலத்தை ஸ்பரிசித்து உயிரை விட்டாள்? இதை எப்படிக் கொலையென்று சொல்லி அதற்கு தேவியைக் குற்றம் சாட்ட முடியும்.
தேவதேவி சர்வவல்லமை பொருந்தியவளென்பதில் சந்தேகமேயில்லை. அவளிடம் அமானுஷ்யமான சக்திகள் இருக்கின்றன. பெரியப்பா சொல்லுவதைப் போல விரும்பினால் அவள் நம்மைப் பொசுக்கி அழித்துவிட முடியும். அப்படிப்பட்ட ஒரு ராணி திரிசூலத்தையும் மணி முடியையும் வீசியெறிந்துவிட்டு ஒரு சாதாரணக் குற்றவாளியைப்போல ஏன் என் எதிரில் நிற்க வேண்டும்? என் கையினால் உயிரை விடுவதற்கும் அவள் தயாராயிருப்பதில் அவளுடைய இதய சுத்தியும் காதலின் தூய்மையும் விளங்கவில்லையா? நான் விஜயகேசரியின் சந்ததியைச் சேர்ந்தவனென்பது எனக்குத் தெரியும். அது தேவிக்கும். தெரிந்திருப்பது ஒன்றே அவளுடைய அமானுஷ்யமான சக்திக்கும் புனிதமான காதலுக்கும் அத்தாட்சியில்லையா? அப்படிப்பட்ட ஒரு புனிதவதியையா நாம் குத்திக் கொல்லுவது?”
இவ்விதம் ஜோதியின் மனத்திற்குள் ஒரு பெரிய போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அதே சமயம் அவனையும் அறியாத ஒரு மயக்க சக்தி, விவரம் புரியாத ஒரு அந்தரங்க உணர்ச்சி அவனை ”போ! போ! தேவியின் அருகில் போ! ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உன்னை நினைத்து நினைத்துத் தவம் புரியும் காதலியை ஏற்றுக் கொள்ளப் போ!” என்று அவனைப் பிடித்துத் தள்ளுவதைப் போலிருந்தது. தனது மனப்போராட்டம் மட்டுமல்ல, அதற்கு வெளியேயிருந்து ஒரு மர்மமான சக்தி தன்னை இயக்கி தேவியிடம் நெருங்கித் தள்ளுவதைப்போல அவன் உணர்ந்தான். அவன் கையிலிருந்த பிச்சுவாக் கத்தி அவன் கையிலிருந்து நழுவி கிணீரென்ற சப்தத்துடன் கீழே விழுந்தது. மெதுவாக அடிமேல் அடியெடுத்து வைத்து, தூக்கத்தில் சுய நினைவின்றி நடப்பதைப் போல அவன் தேவியை நோக்கி நடந்தான். கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக முகமலர்ச்சியுடன் இரண்டு கரங்களையும் ஆவலோடு நீட்டிக் கொண்டு நின்ற மலைக்கன்னியின் இருதயம் அதிவேகமாக அடித்துக் கொண்டது.
“வாருங்கள் பிரபு! வாருங்கள்! உங்கள் அடிமையை அங்கீகரிக்க வாருங்கள்! ஆஹா! இந்த இன்பமயமான நாளுக்காக எவ்வளவு இரவும்பகலும் நான் ஏங்கிக் கொண்டிருந்தேன். சித்தர் வாக்கு சூரிய சந்திரர்கள் திசை மாறாமலிருக்கும் வரையில் ஒருபோதும் பொய்க்கா எவ்வளவு பொறுமை தென்ற திடநம்பிக்கையுடன் யோடு காத்திருந்தேன் பொறுத்தவர் பூமியாள்வார் என்பார்கள். என் பொறுமையின் பரிசு இதோ! இதோ, இதோ எனக்குக் கிடைக்கப் போகிறது. ஜனசமூகமே! அகண்ட பிரமாண்ட சராசரங்களே! தேவகாந்தர்வகின்னர கிம்புருடர்களே! என் பிரபு என்னை ஏற்பதைக் கண்குளிரப் பாருங்கள். என் வைராக்கியமும் விரதமும் திக்கெட்டும் கொட்டி முழங்கிக் கொண்டு வெற்றி பெறுவதைக் கண்டு களியுங்கள். காதல் புனிதமானது, தெய்வீகமானது, காலத்தினால் கரையாதது, செந்தணலில் எரியாதது என்ற பழைய தத்துவத்தை நான் நிலை நிறுத்துவதை எல்லோரும் பாருங்கள்! என் விஜயகேசரி எனக்குக் கிடைத்து விட்டார்! என்னை ஏற்றுக் கொண்டு விட்டார். இப் பார் முழுவதிலும் இனி என்னைவிடப் பெரிய பாக்கியசாலி வேறு யார்” என்று தன்னையே மறந்து மள மளவென்று பேசியவாறு ஜோதியை ஸ்வீகரித்துக் கொள்ள இரண்டு கரங்களையும் அகல விரித்துக் கொண்டு முன் வந்தாள் மலைக்கன்னி.
சற்று நேரத்துக்கு முன்புவரை வெறிபிடித்ததைப் போல முழங்கிய ஜோதிவர்மன் பேச்சுக் காட்டாமல் மந்திர சக்தியினால் மயக்கப்பட்டதைப்போல தேவதேவியிடம் செல்லுவதைப் பார்த்து பிரமித்துப்போய் நின்றான் பாலாஜி.
அருகில் வந்த ஜோதியை ஆவலுடன் ஆலிங்கனம் செய்து கொண்ட மலைக்கன்னி பாலாஜியைப் பார்த்து “அய்யா! உங்கள் முன்னிலையில் லஜ்ஜையின்றி என் பிரபுவை ஆலிங்கனம் செய்வதற்கு என்னை மன்னியுங்கள். உங்கள் உதவியில்லாவிட்டால் உங்களுடைய ஆசியும் அனுதாபமும் இல்லாவிட்டால் இந்த மங்களகரமான நேரம் என் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கப் போவதில்லை. இருள் அடைந்துபோயிருந்த என் வாழ்வில் ஒளியை ஏற்றி வைத்தீர்கள்” என்று கூறிவிட்டு “இதற்கு எந்தவகையில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுவதென்பதுதான் எனக்குத் தெரியவில்லை!” என்று சொல்ல விரும்பியவள் அதைச் சொல்லாமல் உடல் நடுங்க உதடுகள் துடிக்க மிகுந்த பரபரப்புடன் ஜோதிவர்மனை லேசாகப் பிடித்துத் தள்ளி விட்டு நகர்ந்து கொண்டாள். மலைக்கன்னியின் இந்த விசித்திரமான திடீர் மாறுதலின் காரணம் தெரியாமல் பாலாஜியும் ஜோதிவர்மனும் திகைத்துப் போனார்கள்.
“என்ன முட்டாள்தனம் செய்துவிடப் பார்த்தேன்! எத்தனையோ நூற்றாண்டுகள் வரையில் பொறுமையுடன் காத்திருந்து பெற்ற பிரபுவை அறியாமையினால் நானே கொன்றுவிடப் பார்த்தேனே!” என்றாள் அவள். இதைச் சொல்லியபொழுது அவள் அடைந்திருந்த பரபரப்பில் அவளுடைய வாய்கூடக் குழறியது.
“நீ என்ன சொல்லுகிறாய் தேவி! என் ஜோதியை நீயா கொல்லப் பார்த்தாய்?” என்றான் பாலாஜி. ஜோதியோ பேசும் சக்தியையே கிட்டத்தட்ட இழந்து போயிருந்தபடியினால் மெளனமாக நின்று கொண்டிருந்தான்.
“ஆம், அய்யா! ஆசைவெட்கமறியாதது என்பார்கள். என் விஷயத்தில் அது ஆபத்தைக் கூட அறியாமல் இருந்து விட்டது. என் அரவணைப்பில் என் பிரபு இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தால் என் உஷ்ணம் தாளாமல் பொசுங்கிப் போயிருப்பார். என் பிரபுவை நான்அ டைந்து விட்ட மதிமயக்கத்தில் என் விசேஷத்தன்மையைக் கூட மறந்து என்னையுமறியாமல் அவரை ஆபத்துக்கு உட்படுத்தவிருந்தேன். எவ்வளவு பெரிய முட்டாள்தனம் செய்து விடப் பார்த்தேன் அய்யா! என் வாழ்வில் நீங்கள் ஒளியை ஏற்றி வைத்தீர்களென்று சொல்லிய பொழுது தான் என் சரீரத்தின் ஒளிமயமான தன்மையும் எனக்கு ஞாபகம் வந்தது. தக்க தருணத்தில் கடவுள்தான் என் பிரபுவைக் காப்பாற்றினார்!” என்றாள் மலைக்கன்னி.
பிறகு ஜோதியைப் பார்த்து “சுவாமி! தீண்டக் கூடாதவரும் தீண்ட முடியாதவருமான ஒரு பெண்ணை மனைவியாகப் பெறுவதா என்று யோசிக்கிறீர்களா? ஆம்! நான் இப்படி எப்பொழுதும் உங்களுக்குத் தீண்டத்தகாதவளாக இருந்தால் நீங்கள் என்னை மணப்பதில் அர்த்தமில்லை. ஏன் நமது காதலே அர்த்தமற்றதாகிவிடும். ஒன்று நீங்களும் என்னைப் போலாக வேண்டும். அல்லது நான் உங்களைப் போல ஒரு சர்வ சாதாரண மானிடப் பெண்ணாக மாறவேண்டும். துரதிர்ஷ்டவசமாக ஜீவஜோதியின் மகிமையினால் அமரத்துவம் பெற்ற எனக்கு ஒளிமயமான இந்தச் சரீரத்தை உதறித்தள்ளி ஒரு சாதாரணப் பெண்ணாகும் சக்தி இல்லை. ஜீவஜோதியும் காலத்தின் திருவிளையாடலும் என்னை அமரனாக வைத்திருப்பதுடன் அக்னிமயமாகவும் மாற்றியிருக்கின்றன. இந்த நிலைமைக்கு உங்களை மாற்றும் சக்தி எனக்கு இருக்கிறது. என்றும் இறவாமல் என் மனம் போலவே நித்திய இளமையுடன் சிரஞ்சீவியாயிருக்கும் தன்மையை உங்களுக்கு ஏற்படுத்த முடியும். நீங்கள் அந்த நிலைமையை அடைந்த பிறகுதான் என்னைத் தீண்டலாம். என் முகத்தையும் நேரடியாகப் பார்க்கலாம். அந்தச் சக்தியை உங்களுக்கு அதிவிரைவில் அளிக்கிறேன். நித்திய யுவன், யுவதியாக, நோய் நொடி மூப்புகள் நெருங்காத சரித்திர தம்பதிகளாக ஆயிரமாயிரம் ஆண்டுகள் வரை ஜீவஜோதியின் சக்திக்கு முடிவு ஏற்படும் வரை சிரஞ்சீவிகளாக நாம் வாழ்வோம். இந்தப் பேரின்பத்தை நமக்கு அளிக்க உதவியவர்கள் உங்கள் பெரியப்பாவும் என் தளபதி உக்கிரசேனனும்தான். அவர்களையும் அவர்களது மூப்பை உதறித் தள்ளிவிட்டு கட்டழகர்களாக்குகிறேன். நான் ஏதேதோ பிதற்றுகிறேனென்று நினைக்கிறீர்களா? நான் சாவை வென்ற சிரஞ்சீவியென்பது பித்தலாட்டமென்று எண்ணுகிறீர்களா? இல்லை! நீங்கள் அப்படி நினைக்கமாட்டீர்கள். சந்திரிகாவின் ஆணையை ஏற்று என் மீது வஞ்சம் தீர்க்க வந்ததாக சற்று முன்னால் நீங்கள் தானே சொன்னீர்கள்? சந்திரிகாவின் காலத்திலிருந்து நான் இன்னமும் சிரஞ்சீவியாக செம்பவளத் தீவில் இருப்பேன் என்ற நம்பிக்கை இல்லாவிட்டால் நீங்கள் இங்கு ஏன் வந்திருக்கப் போகிறீர்கள்? சித்தர் வாக்குப்படி வந்த நீங்கள் விதியின் தூண்டுதலினால் உண்மையை உணராமல் நீங்களாக இங்கு வந்திருப்பீர்களென்று தான் நான் இதுவரையில் எண்ணிக் கொண்டிருந்தேன். சந்திரிகாவின் சபதத்தை நிறைவேற்ற வலுவில் என்னைத் தேடிக் கொண்டு நீங்கள் வந்திருப்பதை இப்பொழுதுதான் நான் அறிகிறேன். இந்த ரகசியத்தை உங்கள் பெரியப்பாகூட என்னிடமிருந்து மறைத்துவிட்டார். ஆம்! அவர் விரலில் சர்ப்பச் சின்னம் பதித்த மோதிரத்தைக் கண்ட மாத்திரத்தில் நான் சந்தேகித்ததும் சரியான பதில் சொல்ல முடியாமல் அவர் சிறிது நேரம் தயங்கியதும் இப்பொழுதுதான் என் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த மோதிரத்துடன் கூடஒரு தங்கச் சங்கிலியையும் விஜயகேசரிக்குக் கொடுத்ததாக ஞாபகம். மோதிரத்தையும் சங்கிலியையும் அவர் சந்திரிகாவிற்குக் கொடுத்திருந்தார்.”
தேவதேவி இவ்விதம் சொல்லிக்கொண்டிருக்கையில் உண்மையை இனி மறைப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்த பாலாஜி சட்டைப் பையிலிருந்த அந்தச் சங்கிலியை எடுத்து “அந்தச் சங்கிலி இதோ இருக்கிறது. ஜோதியின் கழுத்தில் அதைப் பார்த்தால் கோபமடையப் போகிறாயேயென்று பயந்து அதை நான்தான் கழற்றி வைத்தேன். நிலைமை இவ்வளவு தூரத்திற்கு வந்த பிறகு உண்மையை உன்னிடமிருந்து இனியும் மறைக்க நான் விரும்பவில்லை. சந்திரிகா தனது வரலாறு முழுவதையும் ஒரு ஏட்டுச் சுவடியில் எழுதி வைத்திருந்தாள். அந்தச் சுவடி அவளுடைய சந்ததி வாரியாக ஜோதிவர்மன் வசம் வந்து சேர்ந்தது. விஜயகேசரியைக் கொலை செய்த மலைக்கன்னியைத் தனது சந்ததியில் தோன்றும் யாராவது ஒருவர் பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்று சந்திரிகா கேட்டுக் கொண்டிருந்தாள். ஜோதியின் தகப்பனார் விஜயவர்மன் செம்பவளத்தீவுக்கு வந்து உன்னைச் சந்திக்காமலே திரும்பிவிட்டார். சுவடியிலிருக்கும் வரலாறு உண்மை யாயிருந்தாலும் மலைக்கன்னி சாகாவரம் பெற்றவளென்பது கட்டுக் கதையென்றே நாங்கள் நம்பினோம். இயற்கையின் நியதிகளை மீறி ஒரு பெண் இறவாமலிருப்பது அசாத்தியமென்றே நாங்கள் நினைத்தோம். ஆயினும் சுவடியில் குறிப்பிட்டிருந்த செம்பவளத்தீவுக்குப் போய் மலைக்கன்னியின் வரலாற்றைத் தெரிந்து கொண்டு வரவேண்டு மென்ற ஆராய்ச்சி ஆவலுடனேயே நாங்கள் இங்கு வந்தோம். உண்மையில் உன்னைக் கொன்று வஞ்சம் தீர்க்க வேண்டுமென்ற எண்ணத்துடன் நாங்கள் இங்கு வரவில்லை. 2500 ஆண்டுகள் வரையில் நீ உயிரோடு இருப்பது சாத்தியமென்பதை நம்பினாலல்லவா உன் மீது வஞ்சம் தீர்க்கும் எண்ணம் எங்களுக்கு ஏற்பட முடியும்? உண்மையை ஆராய்ந்து அறியும் ஆவலே எங்களை இவ்வளவு தூரத்திற்குக் கொண்டுவந்தது” என்றான்.
“ஆமாம் தேவி! பெரியப்பா சொல்வதுதான் உண்மை. மலைக்கன்னி என்ற ஒருவள் மரணத்தை வென்று 2500 ஆண்டுகளாக உயிருடனிருக்க முடியுமானால் அந்த அமானுஷ்யமான பெண்ணை சர்வசாதாரண மனிதனாகிய என்னால் கொன்று பழி தீர்க்க முடியுமென்று நான் நினைக்க வில்லை. அந்த ஆச்சரியமான பெண்ணை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆவல்தான் எங்களிடம் மேலிட்டிருந்தது. சந்திரிகா எழுதிய வரலாற்றைப் படித்தவுடன் உங்களிடம் எனக்கு எவ்வளவு அருவருப்பும் துவேஷமும் தோன்றியதோ அதைவிட அதிகமான அனுதாபமும் பச்சாத்தாபமும் ஏற்படுகிறது உன் வாயிலிருந்து உன் வரலாற்றைக் கேட்டவுடன்!” என்றான் ஜோதி.
“என் பிரபுவின் உத்தமமான குணத்தையும் உயர்ந்த பண்புகளையும் எப்பொழுதுமே நான் சந்தேகித்ததில்லை. நீங்கள் சொல்லுவதை அப்படியே நான் நம்புகிறேன். நான் எப்படி இந்நாட்டுக்கு வந்தேன்? ஜீவஜோதியில் மூழ்கி எவ்விதம் அமரத்துவம் பெற்றேன்? என்ற வரலாறுகளைச் சொல்வதன் முன்னால் என் காதலின் தூய்மையையும் வைராக்கியத்தையும் உங்களுக்கு நிதர்சனமாக ருசுப்படுத்த வேண்டும். இதுவரை மனித சமுதாயத்தின் நீண்ட வரலாற்றில் நீங்கள் கண்டும் கேட்டுமிராத ஒரு அதிசயத்தைக் காட்டுகிறேன் வாருங்கள்!” என்று சொல்லி விட்டு தேவதேவி திரிசூலத்தைக் கையிலெடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
பல கூடங்களையும் தாழ்வாரங்களையும் தாண்டி தரை மட்டத்துக்கு அடியிலுள்ள ஒரு விசாலமான நில அறையை அவர்கள் அடைந்தார்கள். அங்கு ஒரு மூலையில் உளுத்துப் போன மரக் கதவு ஒன்று தொத்திக்கொண்டு நிற்பதைப் பார்த்த மாத்திரத்தில் முந்திய நாளிரவு சந்தடியின்றி தான் மறைந்து பார்த்த கல்லறைக்கே இப்பொழுது வந்திருக்கிறோ மென்பதை பாலாஜி உறுதியாகத் தெரிந்து கொண்டான்.
நாம் ஏற்கனவே வர்ணித்ததைப் போல அவ்வறையின் சுவர்களில் பதிப்பிக்கப்பட்டிருந்த சந்திரகாந்தக் கற்கள் அந்த இடத்தை ஒளிமயமாக்கிக் கொண்டிருந்தன. அறையின் நடு மத்தியில்தொங்கியபெரிய கொசுவலைக்குள் ஐந்தாறு அடி இடம் விட்டு இரண்டு நீண்ட கருங்கல் மேடை கள் இருந்தன. ஒரு மேடை காலியாகவும் மற்றொன்றின் மீது பாலாஜி முன்பு பார்த்த அதே பிரேதப் பெட்டியு மிருந்தன. தேவதேவி அருகில் சென்று கொசு வலையைச் சுற்றி மேலே போட்டதும் பிரேதப் பெட்டியின் அருகில் மலர்கள் தூவிக் கிடந்தது தெரிந்தது. பிரேதப் பெட்டியின் கால் பக்கத்தில் தேவதேவி திரிசூலத்தை வைத்துவிட்டு பெட்டியை மூன்று முறை வலம் வந்து வணங்கினாள். பிறகு வாய்க்குள் மந்திர உச்சாடனம் செய்வதைப்போல சிறிது நேரம்வரை முணு முணுத்தாள். மறுபடியும் ஒரு தடவை பிரேதப் பெட்டியை வணங்கிவிட்டு ஜோதிவர்மன் பக்கம் திரும்பி, “ஸ்வாமி! என் காதல் எவ்வளவு உறுதியான தென்பதையும் இரண்டாயிரத்து ஐந்நூறுஆண்டுகளாக உங் கள் வரவுக்கு ஆவலோடு நான் காத்திருப்பதை ருசுப்படுத் தவுமே இங்கு உங்களை அழைத்து வந்தேன். நான் சொல் லும் விசித்திரமான வரலாற்றைக் கேட்கவும், நான் காண் பிக்கும் அதிபயங்கரமான, அதேசமயம் அசைக்க முடியாத அத்தாட்சியைக் காணவும் மனதைத் திடப்படுத்திக்கொள் ளுங்கள்!” என்றாள்.
பிறகு காலியாகக் கிடந்த கருங்கல் மேடையைச் சுட் டிக் காட்டி “இதோ இந்தக் கருங்கல் மேடையைப் பாருங்கள் ஸ்வாமி! சென்ற 2500 ஆண்டுகளாக, கிட்டத் தட்ட பத்து இலட்சம் இரவுகளாக இந்நாட்டின் மகா ராணி படுத்துறங்கிய மஞ்சத்தைப் பாருங்கள் ஸ்வாமி! ஹம்ஸ்துளிகா மஞ்சமும் அண்டி சேவை புரிய அநேகம் பணிப் பெண்களும் நினைத்ததை அடையும் ஐசுவரியங்க ளும் போக பாக்கியங்களும் இருந்தும்கூட அந்த சுகவாழ்க் கையைத் துறந்து கருங்கல் மேடையின்மீது இலட்சக்கணக் கான இரவுகளை நான் கழித்தேன். ஏன் தெரியுமா? என்னு டைய கடுமையானவிர தமும் தன்னலமற்றதியாகமும் ஏன்? யாருக்காக என்று தெரியுமா? அதோ பேசாமடந்தையாக, கல்லோடு கல்லாக, உணர்ச்சியும் உயிருமற்ற சவமாகக் கிடக்கும் என் ஸ்வாமியை உத்தேசித்துத்தான்! கருங்கல் மேடையிலே பிரேதப் பெட்டியில் அவர் சவமாகக் கிடக்கும்பொழுது நான் மட்டும் பட்டு மெத்தையிலே படுத்துறங்குவது எப்படி நியாயமாகும்? சுந்தர புருஷனாக மீண்டும் என் பிரபுவைச் சந்திக்கும் வரையில் அவர் விட்டுச் சென்ற பூதவுடலுடனேயே இரவைக் கழிப்ப தென்ற வைராக்கியத்துடன் புனிதமான அவருடைய கல்லறையையே என்னுடைய சயனக் கிரகமாக்கிக் கொண் டேன். என் காதல் உறுதிக்கும் வாழ்க்கையின் வைராக்கி யத்துக்கும் இதைவிட இன்னும் வேறென்ன அத்தாட்சி வேண்டும்? அதோ உங்களுடைய பூதவுடலைப் பாருங்கள். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் என் பூஜைக்காக நீங்கள் விட்டுச் சென்ற புனித பூதவுடலைப் பாருங்கள்.”
இவ்விதம் சொல்லிய தேவதேவி பிரேதப்பெட்டியின் அருகில் சென்று அதன் மேல் மூடியை லாகவமாகத் திறந்து கீழே எடுத்து வைத்தாள். பெட்டிக்குள் தூய வெண்ணிறப் பட்டு மெத்தையின் மீது இளவரசனுக்குரிய உடுப்புக்களுடன் ஒரு பிரேதம் வைக்கப்பட்டிருந்தது. பிரேதம் என்று சொன்னாலொழிய பெட்டிக்குள் ஒரு சுதந்திர புருஷன் படுத்து அயர்ந்து தூங்குவதாகவே எவரும் நினைப்பர். கொஞ்சமும் கெடாமல், வாட்டம்கூடத் தெரியாமல் அவ்வளவு பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டிருந்த விஜயகேசரியின் சவம் அவன் இறந்த பொழுது எந்த நிலைமையில் அவன் இருந்திருப்பானோ அதே பசுமையுடனும், இளமையுடனு மிருந்தது. கண்ணிமைகளிலிருந்த கறு கறுத்த உரோமமும் புருவங்களும்கூட உயிருள்ள ஒரு மனிதன் அனாயாசமாகப் படுத்துத் தூங்குவதைப்போலத் தோன்றச் செய்வதாயிருந்தன. அது இரண்டாயிரத்து ஐந்நூறுஆண்டுகளுக்கு முற்பட்ட பிரேதமென்று சத்தியம் செய்து சொன்னால்கூட சுலபத்தில் நம்ப முடிவதாயில்லை.
ஜோதிவர்மன் கொஞ்சம் எட்டி நிற்க, பாலாஜி மாத்திரம் சவப்பெட்டியினருகில் சென்று விஜயகேசரியின் பிரேதத்தைப் பார்த்தான். பார்த்தவன் ஆச்சரியத்துடன் ஜோதியையும் பிரேதத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டேயிருந்தான். ஜோதிவர்மன் தூரத்தில் நின்று பார்ப்பதைக் கவனித்த தேவதேவி, “அருகில் சென்று உங்களைப் பாருங்கள் ஸ்வாமி! உங்களை நீங்களே பார்க்கத் தயக்கம் ஏன்? கண்ணாடியில் பார்க்கும் உங்கள் உருவத்தைப் போல கண்ணாடி ஏதுமில்லாமலே பெட்டிக்குள் நீங்கள் கிடப்பதை அருகில் போய்ப் பாருங்கள். இதுமாதிரியான சந்தர்ப்பம் உலகத்தில் வேறு யாருக்குக் கிடைத்திருக்கிறது? நீண்ட மனித வரலாற்றில் எவருக்கும் எந்த யுகத்திலும் கிடைத்திராத ஒரு புதுமையான அனுபவம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. உயிருடனிருப்பவர் இறந்த தன்னைத் தானே காணும் சந்தர்ப்பம் உலக சிருஷ்டி காலத்திலிருந்து இன்றுவரை உங்களைத் தவிர வேறு எவருக்கும் கிடைத்ததில்லை. 2500 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தப் பாவியின் கரங்களினால் உயிரைவிட்ட உத்தம புருஷனை சவமாகவும், ஜீவனுள்ள மனிதனாகவும் ஏககாலத்தில் பார்க்கும் இந்தப் புனித சந்தர்ப்பத்துக்காக எவ்வளவு அகோரமாக நான் தவம் செய்தேன்” என்றாள்.
ஜோதிவர்மன் பிரேதப் பெட்டியினருகில் சென்று உள்ளேயிருந்த விஜயகேசரியின் பிரேதத்தை உன்னிப்பாகக் கவனித்துப் பார்த்தான். பெட்டியிலிருக்கும் பிரேதத்தின் சாயல் கிட்டத்தட்ட தன்னைப் போலவே இருப்பதைக் கண்டு அவன் ஆச்சரியத்துடன் தேவதேவியைத் திரும்பிப் பார்த்தான்.
“பிரேதமாகக் கிடக்கும் நிலைமையில் உங்களை நீங்களே பார்க்கும் பொழுது ஆச்சரியப்படுகிறீர்களா ஸ்வாமி! என் பிரபுவின் பூதவுடல் மற்ற எல்லாப் பிரேதங்களையும் போலப் பாடம் செய்து வைக்கப்படவில்லை. அதன் நரம்புகளிலும், இரத்தக் குழாய்களிலும் ஒரு துளி ஒளஷத தைலமும் ஊற்றவில்லை. என் பிரபு இறந்தவுடன். ஒரு சமயம் ஜீவாக்னி அவரைப் பிழைப்பிக்குமோ என்ற ஆவலுடன் பிரேதத்தைத் தூக்கிச் சுமந்து கொண்டு காடு மலைகளை யெல்லாம் தாண்டி ஜீவாக்னி இருக்கு மிடத்துக்குப் போனேன். ஜீவாக்னியில் என் பிரபுவை ஸ்நானம் செய்வித்து இராப் பகலாக அவர் மீண்டும் வருவாரென்று அங்கேயே தன்னந் தனிமையாகக் காத்துக்கிடந்தேன். ஆனால், விதியை வெல்லும் வலிமை என்னிடமில்லை. சாவைத் தடுத்து ஒத்திவைக்கும் ஜீவாக்னிக்கு செத்தவரை உயிர்ப்பிக்கும் சக்தியில்லாமற் போய்விட்டது. ஆனால், ஜீவாக்னி எனக்கு ஒரு நன்மையைச் செய்தது. இறந்த என் பிரபுவை அப்பொழுது அவர் இருந்த நிலைமையிலேயே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பாதுகாத்துக் கொடுக்க உதவியது. என் ஸ்வாமி உயிருடனிருக்கையில் அவரை ஜீவாக்னிக்கு அழைத்துப்போய் சிரஞ்சீவித்தன்மையை அளிப்ப தாக எவ்வளவோ நயமாகச் சொல்லிப் பார்த்தேன் என் பேச்சை அவர் கேட்கவில்லை. அவருக்குப் பதில் அவருடைய பூதவுடலுக்குச் சிரஞ்சீவித் தன்மை கிடைத்தது சாவிலும் எவ்வளவு சௌந்தர்யமாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நன்றாக உற்றுப் பாருங்கள் ஸ்வாமி” என்றாள் தேவதேவி!
“நான் விஜயகேசரியின் வம்சத்தில் வந்தவனென்றாலும் நீங்கள் நினைப்பதைப் போல உண்மையில் விஜயகேசரியின் புனர்ஜன்மமாயிருந்தால் அவரைப் போலவே ஒரே அச்சில் வார்த்து எடுத்த மாதிரி நான் இருப்பது எனக்குப் பெரிய ஆச்சரியமாயிருக்கிறது. ஒருவர் ஒவ்வொரு ஜன்மத்திலும் ஒரே தோற்றமுடனிருப்பது சாத்தியமா? அப்படியானால் இன்று உலகில் இருப்பவர்கள் அவ்வளவு பேர்களும் பழைய முகங்களாக அல்லவா இருக்கவேண்டும்? என் தோற்றம் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த விஜயகேசரியின் தோற்றத்தைப் போல எப்படி யிருக்கிறது? என்னைப் பார்த்த மாத்திரத்தில் நான் விஜயகேசரியின் புனர்ஜென்மம் என்பதை நீங்கள் எப்படித் தெரிந்து கொள்ள முடிந்தது? இந்த ஒரு அம்சம்தான் எனக்கு விளங்காத புதிராயிருக்கிறது தேவி” என்றான் ஜோதிவர்மன்.
“உங்களுக்கு மட்டுமல்ல; இது எனக்கும் விளங்காத புதிராகத்தான் இருக்கிறது. உங்களைப் பார்த்த மாத்திரத்தில் நானே திடுக்கிட்டுத் திகைத்துப்போனேன். ஞான திருஷ்டியினால் முக்காலங்களையும் அறியும் தன்மை வாய்ந்த சித்தர் சொற்படி என் விஜயகேசரி எவ்வளவு ஆயிரம் ஜன்மங்கள் எடுத்த பொழுதிலும் என்னைத் தேடிக் கொண்டு நான் இருக்கும் இடத்துக்கு வருவாரென்ற திட நம்பிக்கை கொண்டிருந்தேன் என்றும் எப்பொழுதும் அல்லும் பகலும் அனவரதமும் எந்த முகார விந்தத்தை நினைத்து நினைத்து நான் பூஜித்துக் கொண்டிருந்தேனோ அதே தோற்றத்தில், அதே உருவ அமைப்பில் என் பிரபு திரும்பவும் என்னை வந்தடைவாரென்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. இயற்கையின் புலப்படாத எவ்வளவோ அதிசயங்களில் இதுவும் ஒன்று. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக, நீங்கள் அனைவரும் அறிந்த இயற்கையின் நியதிகளுக்கு மாறாக நான் ஜீவித்திருப்பதே ஒரு ஆச்சரியமல்லவா? ஒரு வம்ச வரலாறு 2500 ஆண்டுகளாக உங்களுடைய காலம்வரையில் தொடர்ந்து வந்திருப்பது ஆச்சரியமல்லவா? நீங்கள் யார்? எந்த ஊர்? என்பதை அறிவதன் முன்னதாகவே உங்கள் முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் நீங்கள்தானே என் பிரபு என்பதை என் அந்தராத்மா நொடிப்பொழுதில் காட்டிக் கொடுத்தது ஆச்சரியமல்லவா? உலகில் எவருக்கும் தெரியாத ஜீவஜோதியை நான் அறிந்திருப்பதும், அதில் மூழ்கி சிரஞ்சீவியாக வாழும் சந்தர்ப்பம் கிடைத்ததும் அது வேண்டாமென்று உதறித்தள்ளி என் பிரபு அன்று சாவைத் தழுவியதும் ஆச்சரியமல்லவா? இதில் எதைவிட எது அதிக ஆச்சரியமான தென்று நாம் சொல்ல முடியும்? விதியின் கைப்பாவை களாகிய நாம் அனைவரும் விதிவிட்ட வழியே அதன் சுழல் களிலும் சூழ்ச்சிகளிலும் சிக்கித்திக்கு முக்காடிக் கொண்டு வாழ்கிறோம். விதியின் வினோதங்களுடைய வரையறைகளையும் தன்மைகளையும் அறிந்து ஞானத்தின் எல்லையை எட்டிப் பிடித்த மனிதன் யார் ஸ்வாமி? விஜயகேசரியைப் போல சகல அங்க அடையாளங்களும் ஒற்றுமையாயிருப்பதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். என் பிரபு எந்த உருவத்தில் வந்த பொழுதிலும் என் அந்தராத்மா அவரை எனக்குக் காட்டிக் கொடுத்துவிடுமென்ற நம்பிக்கை மாத்திரம் எனக்கு எப்பொழுதுமே உண்டு. ஆனால், எந்த உருவத்தில் என் பிரபு என் உள்ளத்தைக் கவர்ந்தாரோ அதே உருவத்தில் மீண்டும் வந்து என்னை ஆட் கொள்ளுவாரென்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இது தான் என் பெரும் பாக்கியமும் கடுந் தவத்துக்குக் கை மேல் கிடைத்த பலனுமாகும். உலகமே நம்பிக்கையினால் தான் இயங்குகிறது. அந்த நம்பிக்கையே இவ்வளவு காலமும் என்னை வாழ வைத்தது. இப்பொழுது இருண்டிருந்த என் வாழ்வில் ஒளி ஏற்றிவைத்து மலரச் செய்வதும் அசைக்க முடியாத அதே நம்பிக்கைதான்!”
இவ்வாறு சொல்லிய தேவதேவி தன்னுடைய படுக் கையென்று சொல்லிய கருங்கல் மேடைக்கு அடியில் குனிந்து அங்கிருந்து ஒரு சிறு மண் கலத்தைக் கையிலெடுத்தாள். கலயத்துக்குள் இருந்த ஒரு திராவகத்தைப் பிரேதத்தின்மீது கவிழ்த்தாள். கலயத்தையும் பிரேதத்தின் மீது போட்டு விட்டு கீழே இருந்த மூடியைத் தூக்கி அவசர அவசரமாகப் பிரேதப் பெட்டியை அழுத்தி மூடினாள். அவள் சரியாக மூடுவதற்குள்ளாகவே பிரேதத்தின் மேலிருந்து வெண்மையான புகை லேசாகக் கிளம்பவாரம்பித்தது. பெட்டியை மூடியவுடன் புகை வெளியே வரவில்லையென்றாலும் பெட்டிக்குள் எலும்புக்கூடுகள் படார் படார் என்று வெடிக்கும் சப்தம் தெளிவாகக் கேட்டது.
“என் பிரபு உயிரோடு என்னிடம் வந்தபிறகு அவருடைய பழைய சின்னம் இனி எனக்குத் தேவையில்லை. 2500 ஆண்டுகளாகப் பாதுகாத்துவந்த பூதவுடலை இதோ அக்னி தேவனுக்கு அர்ப்பணித்துவிட்டேன். அக்னிதேவன் ஆண்டவனின் அம்சம். மனதுக்கு மிகவும் பிடித்தமானவைகளை ஆண்டவனுக்கு அர்ப்பணிப்பதைப் போல என் பிரபுவின் புனித பூதவுடலும் இதோ ஆண்டவனிடம் ஐக்கியமாகிறது. அரை வினாடியில் ஆயிரமாயிரமாண்டுகளாகப் பழைய சோபை குன்றாமலிருந்த என் பிரபுவின் பழைய சடலம் பஸ்பமாகிவிடுவதைப் பாருங்கள்!” என்றாள் தேவி.
இவ்விதம் சொல்லியவள் திரிசூலத்தின், ஒரு முனையினால் பிரேதப் பெட்டியின் மேல் மூடியை தூக்கிக் கீழே வீச, சுத்தத் தங்கத்தில் செய்திருந்த அந்த மூடி கணீரென்ற சப்தத்துடன் அப்பால் போய் விழுந்தது. பெட்டிக் குள்ளேயிருந்து வெண்மையான புகை குப்பென்று கிளம்பி அரை நொடியில் அந்த அறை முழுவதும் பரவி ஒருவர் முகம் மற்றொருவருக்குத் தெரியாதபடி செய்துவிட்டது.
“இந்தப் புகை நச்சுப் புகையில்லை. பயப்படாமல் அப்படியே நில்லுங்கள்!” என்றாள் தேவதேவி.
குகையின் சுவர்களிலே காற்று வருவதற்காக அமைந்திருந்த ஒரு விசேஷமான இடைவெளியின் வழியாக ஓரளவுக்குப் புகை வெளியேறியதும் தேவதேவி பிரேதப் பெட்டிக்குள் இரண்டு கைகளையும் விட்டுச் சாம்பலை அள்ளினாள். “மண்ணிலிருந்து தோன்றிய சடலம் திரும்பவும் மண்ணுக்கே போய்விட்டது. இவ்வுலகிலுள்ள சர்வமும் இப்படித்தான்!” என் று சொல்லிக் கொண்டே கையில் அள்ளிய அஸ்தியை இரண்டு கண்களிலும் ஒத்திக் கொண்டு திரும்பவும் அதைப் பெட்டிக்குள்ளேயே போட்டாள்.
“பிரேதப் பெட்டிக்குள் ஊற்றிய திராவகத்தின் தன்மை ஆச்சரியமாயிருக்கிறது தேவி. அரைக் கணத்தில் பிரேதத்தை அது பஸ்பமாக்கிவிட்டதே!” என்றான் ஜோதி.
“ஆம்! கல்லையும், உலோகத்தையும் தவிர இதர சகல பொருள்களையும் எரித்துச் சாம்பலாக்கும் விசேஷ சக்தி வாய்ந்தது இந்தத் திராவகம். செம்பவளத்தீவின் புராதன நாகரிகத்தை அடியோடு அழித்து நாசமாக்கிய சிம்மேந்திர பூபதியின் காலத்தில் தயாராகியதுதான் இந்தப் பயங்கரத் தன்மை வாய்ந்த திராவகமும். என் பிரபுவைத் திரும்ப அடைந்தவுடன் அவர் கண்ணெதிரில் அவருடைய பழைய உடலைத் தகனம் செய்ய வேண்டுமென்பதற்காக சென்ற 2500 ஆண்டுகளாக இந்தத் திராவகக் கலயம் இதே அறையில் இருந்து வந்தது!” என்றாள் தேவி. பிறகு கிட்டத்தட்ட நடுஜாமமாகி விட்டது. வெகு நேரம் வரையில் உங்களைக் கண் விழிக்க வைத்துச் சிரமப்படுத்திவிட் டேன். என் பிரபு என்றும் இளமையுடன் சிரஞ்சீவியா யிருக்க நாளை ஜீவஜோதியை நாடி நெடுந்தூரம் பிரயாணத்தை ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்!” என்று சொல்லிவிட்டு திரிசூலத்தைக் கையிலெடுத்துக்கொண்டு கிளம்பினாள் தேவதேவி. அவளைத் தொடர்ந்து பாலாஜியும் ஜோதியும் பின்னால் நடந்தார்கள்.
– தொடரும்…
– ஜீவஜோதி, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1980, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.