கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: April 18, 2025
பார்வையிட்டோர்: 8,065 
 
 

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-5அத்தியாயம்-6 | அத்தியாயம்-7

ஜோதியும் பாலாஜியும் அடுத்த அறைக்குப் போனார்கள். கட்டிலில் அனாயாசமாக அமர்ந்து குளுமையாகப் பார்த்த வண்ணம் இன்முகம் காட்டி அவர்களை தேவதேவி வரவேற்றாள். அன்று காலை பணிப்பெண்ணென்று தன்னை வர்ணித்துக்கொண்ட அதே முக்காடிட்ட பெண்மணி ஆடம்பரமான சூழ்நிலைமையில் கட்டிலில் அமர்ந்து வரவேற்பதைக் கண்டதும் ஜோதிவர்மனுக்கு சற்று திகைப்பாகப் போய்விட்டது. 

“இன்று காலையில் நான் பார்த்தது உங்களைத்தானே? ஆம், ந்தேகமேயில்லை! மகாராணியின் பணிப்பெண் ணென்று தங்களைச் சொல்லிக் கொண்டீர்கள்!” என்று ஒரு அசட்டுச் சிரிப்புடன் ஜோதிவர்மன் சொல்லியபொழுது “ஆம். காலையில் நீங்கள் பார்த்தது என்னையேதான். இந் நாட்டின் அரசி தேவதேவியும் நானேதான்!” என்று சொல்லிவிட்டு ஒரு இளமுறுவல் பூத்தாள் மலைக்கன்னி! 

“இந்நாட்டின் அரசி தேவதேவி நானேதான்” என்று மலைக்கன்னி சொல்லியபொழுது பாலாஜியின் பக்கம் திரும்பிய ஜோதிவர்மன், “மலைக்கன்னிதான் என்னை ஏமாற்றினாளென்றால் என்றால் நீங்கள் கூடவா உண்மையை என்னிடமிருந்து மறைக்கவேண்டும் பெரியப்பா?” என்றான். 

“எய்தவள் நானிருக்க அம்பை நொந்து கொள்ளுவானேன்? உங்கள் பெரியப்பா மீது தவறில்லை. நீங்கள் மிகவும் துர்லபமான நிலைமையிலிருக்கும்பொழுது நாம் யார் என்பதைச் சொல்லவேண்டாமென்று உங்கள் பெரியப்பாவிடம் நான்தான் கேட்டுக்கொண்டேன்” என்றாள் தேவி. இதை அவள் சொல்லிய முறை சிலமணி நேரத்துக்கு முன்னால் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த உங்களை நான்தான் காப்பாற்றினேன். கிட்டத்தட்டச் சுடுகாட்டுக்குக் கொண்டு போய் வைத்த பிணத்துக்கு உயிர் கொடுத்து திருப்பியழைத்து வந்தேன்! என்று சொல்லாமல் சொல்லிக் காட்டுவதைப்போலிருந்தது. 

“கன்னிமாதா! உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்!” என்று ஜோதிவர்மன் தன்னுடைய நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்ள ஆரம்பித்தபொழுது, “என் பெயர் தேவதேவி. சுருக்கமாகச் சொல்வதானால் ‘தேவி!'” என்றாள் மலைக்கன்னி. 

“தங்கள் பெயர் எனக்குத் தெரியும்!” என்று ஜோதிவர்மன் சொல்லுகையில், “பெயர் தெரிந்திருக்கும் பொழுது கன்னிமாதா எதற்கு? இந்நாட்டு மக்களுக்கு நான் அரசி. என் அரண்மனைக்கு வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு அரசியில்லை. சிநேகிதி!” என்றாள் மலைக்கன்னி. 

“நீங்கள் செய்த உதவிக்கு எவ்விதம் நன்றி தெரிவிப்பதென்றுதான் புலப்படாமல் தவிக்கிறேன் தேவதேவி!” என்றான் ஜோதி. 

“என் விருந்தாளிகளில் யாருக்கும் தவிக்கும் கஷ்டநிலைமையை வைக்க நான் விரும்புவதேயில்லை. நன்றி தெரிவிக்க வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்கு உண்மையாகவே இருந்தால் அதற்கு நானே ஒரு சுலபமான வழி சொல்லுகிறேன்” என்று கூறிவிட்டு ஒரு குறுநகை செய்தாள் தேவதேவி. 

“சொல்லுங்கள் தேவி! நான் எந்தவிதத்தில் நன்றி தெரிவிக்க முடியுமென்பதைச் சொல்லுங்கள்” என்றான் ஜோதிவர்மன். 

“பிரமாதமான காரியம் ஒன்றுமில்லை. நீங்கள் நோயுற்றிருந்ததை அடியோடு மறந்து இந்த அரண்மனையிலிருக்கும் வரையில் வேறு எவ்விதச் சிந்தனையுமில்லாமல் சந்தோஷமாயிருக்க வேண்டும்” என்றாள் தேவதேவி. 

“உங்கள் சித்தம் என் பாக்கியம்” என்றான் ஜோதிவர்மன். இந்த வார்த்தைகள் தேவதேவியை இன்பலோகத்துக்கு இட்டுச் செல்வதைப் போலிருக்க வேண்டுமென்று பாலாஜி தனக்குள் நினைத்துக் கொண்டான். 

“நீங்கள் என்ன சொன்னீர்கள்? இன்னொருதரம் சொல்லுங்கள்!” என்றாள் தேவி. 

“உங்கள் சித்தம் என் பாக்கியம் என்றேன்!” என்று திருப்பிச் சொன்னான் ஜோதி. 

“இல்லை! நீங்கள் பிழைத்து எழுந்தது உண்மையில் என் பாக்கியம். உங்களைப் போன்ற ஒரு அழகனும் அறிவாளியும் இந்நாட்டுக்கு விஜயம் செய்தது இந்நாட்டு மக்கள் செய்த பெரும் பாக்கியம்!” என்றாள் தேவி. 

“என்னை மன்னிக்க வேண்டும் தேவி! எனக்கு இன்னும் உடம்பு பூரணகுணமாகவில்லையென்றே தோன்றுகிறது. கடுமையாக அடித்த ஜுரம் என் செவிகளையும் மூளையையும் கூட பாதித்து விட்டதென்று நினைக்கிறேன்” என்றான் ஜோதி. மகாகொடிய அரக்கியென்று சந்திரிகா வர்ணித்த தேவதேவி இவ்வளவு சரளமாகவும் அன்பு ததும்பவும் பேசுவதை அவனால் நம்பவே முடியவில்லை. தேவதேவியை நேரில் பார்ப்பதுகூட துர்லபமென்றும் அரண்மனைக்குப் போன அந்நியர்களில் யாருமே உயிரோடு திரும்பிவந்த தில்லையென்றும் சித்ரா சொல்லிய விவரங்களும் ஜோதியின் ஞாபகத்துக்கு வந்தன. மனதினால் நினைத்தாலே பிரஞைகள் நடுநடுங்கும் அவ்வளவு பயங்கரத்தன்மை வாய்ந்த ஒரு ராணியா சரளமாகவும் சுமுகமாகவும் பேசுகிறாளென்பதை நினைத்த பொழுது ஜோதிவர்மனுக்கு அவனுடைய செவிகளையே அவனால் நம்பமுடியவில்லை. 

ஜோதி சொல்லியதைக் கேட்டதும் “உண்மைதான் ஜோதி! உனக்கு ஏற்பட்டிருந்த விஷ ஜுரம் நீங்கி ஒரு புதிய மாதிரியான நோய் இப்பொழுது உன்னைப் பற்றிக் கொள்ளப் பார்க்கிறது! விஷஜுரத்திலிருந்து நீ தப்பிவிட்டாய். தேவதேவியின் மூலமாகத் தொத்திக் கொள்ள விருக்கும் காதல் ஜுரத்திலிருந்து நீ எப்படித் தப்பப்போகிறாயோ ஆண்டவனுக்குத்தான் தெரியும்!” என்று சொல்லவேண்டும் போல் தோன்றியது பாலாஜிக்கு. ஆயினும் தேவதேவியின் பிரசன்னமும் ஜோதி சொல்லியதைக்கேட்டு அவள் கலகல வென்று சிரித்ததும் பாலாஜியை வாய்மூடி மௌனியாக்கி விட்டன. 

“ஏன்? உங்கள் செவிகளுக்கும் மூளைக்கும் என்ன வந்து விட்டது?” என்று கேட்டுவிட்டு மறுபடியும் சிரித்தாள் தேவி. 

“என்னை மன்னிக்கவேண்டும் தேவி! இந்நாட்டு மக்களைப் பார்த்தவுடன் அவர்களுடைய ராணியும் அவர்களைப் போலவே இருப்பாளென்று நினைத்தேன். நீங்கள் இவ்வளவு அன்பாக அந்நியர்களை நடத்துவது எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது!” என்றான் ஜோதி. 

“ராணியென்றால் கொம்பு முளைத்திருக்குமென்று நினைக்காமலிருந்தீர்களே, அந்த மட்டில் உங்களுக்கு நான் நன்றி செலுத்த வேண்டும்! நீங்கள் நினைப்பதைப் போல நான் இந்நாட்டுக்கு ராணியே தவிர அவர்களைப் போல இந்நாட்டில் பிறந்து வளர்ந்தவளில்லை. உண்மையைச் சொல்லப் போனால் அவர்களுடன் நெருங்கிப் பழகுகின்றவளு மில்லை. பண்பு மிக்க பாரத புண்ணிய பூமியில் பிறந்தவள் தான் நானும்!” என்றாள் தேவி. 

“இந்நாட்டு மக்களைப் பண்பில்லாதவர்களென்று நான் சொல்வதாக நினைத்துவிடக் கூடாது தேவி! இதுவரை இந் நாட்டில் சில காட்டு ஜனங்களை மட்டுமே நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர்களை வைத்துக் கொண்டு தேச மக்கள் அனைவரையும் நாங்கள் மதிப்பிடுவது மாபெரும் தவறு. தவிர காட்டு இனங்களுக்கிடையிலேயே மிகவும் நல்லவர்களும் அநேகர் இருக்கிறார்கள். அடடா, மறந்தே போனேனே! சித்ரா எங்கே தேவி!” என்று கேட்டான் ஜோதி! 

சித்ராவைப் பற்றி அவன் விசாரித்ததும் தேவியின் முகத்தில் ஒரு சிறு மாறுதல் ஏற்பட்டதை பாலாஜி மட்டும் கவனித்தார். 

”சித்ரா! யார் சித்ரா! உக்கிரசேனன் மகளையா கேட்கிறீர்கள்?” என்றாள் தேவி. 

“ஆமாம் தேவி! அந்தப் பெண் என்னிடம் மிகுந்த அன்பு செலுத்தி வந்தாள். ஒரு கணம் கூட என்னைவிட்டுப் பிரியாமலிருந்து பணிவிடை செய்தாள். அரண்மனைக்கு நாங்கள் புறப்பட்டு வருகையில் எங்களோடுகூட அவளும் வந்தாள்!” என்றான் ஜோதி. 

“அப்படியா? ஆனால், அவளை நான் பார்க்கவில்லையே!” என்று ஒரு பெரிய போடுபோட்டாள் தேவதேவி. 

“நீங்கள் பார்க்கவில்லையா? சித்ரா எங்கே என்று நான் கேட்டபொழுது அவள் வெளியே போயிருப்பதாயும் அவளுக்குப் பதிலாக நீங்கள் பணிவிடை செய்வதாயும் நீங்கள் தானே சொன்னீர்கள்! இதில் ஏதோ சூது இருக்கிறது. என் சித்ரா எங்கே? தயவுசெய்து என் சித்ரா எங்கேயென்று சொல்லுங்கள் தேவி?” என்று பதட்டத்துடன் கேட்டான் ஜோதிவர்மன். 

சித்ராவைப் பற்றி உணர்ச்சியோடு ஜோதிவர்மன் விசாரித்தபொழுது மலைக்கன்னி என்ன பதில் சொல்லுவ தென்று ஒரு கணம் தயங்கினாள், பிறகு அவள் சொன்னாள்: 

“சித்ரா என்னை வைத்து விட்டு வெளியேபோயிருப்பதாக நான் சொல்லியது உண்மைதான். ஆனால், சித்ரா யார் என்பது இப்பொழுது உண்மையில் எனக்குத் தெரியாது. பிறகுதான் உங்கள் பெரியப்பாவிடமிருந்து அந்தப் பெண் யார் என்பதையும் அவளைப் பற்றி ஆவலோடு நீங்கள் விசாரித்த காரணத்தையும் தெரிந்து கொண்டேன். உங்களுடன் அரண்மனைக்குப் புறப்பட்டு வந்தவள் பாதி வழியிலேயே திரும்பிப் போய் விட்டாளாம். இந்தக் காட்டுப் பெண்களே பெரும்பாலும் இப்படித்தான். அழகான ஒரு இளைஞனைக் கண்டால் அவனைச் சுற்றிக்கொண்டு அலைவார்கள். அவனுக்கு ஏதாவது கொஞ்சம் உடம்பு சுகமில்லை யென்றால் அழுகிய பழத்தை வீசியெறிவதைப் போல உதறித் தள்ளி விட்டுப் போய் விடுவார்கள். அதிலும் உங்களுக்கு வந்திருப்பது விஷுஜுரமென்று தெரிந்த பின் சித்ரா உங்கள் பக்கத்திலிருப்பதற்குக் கூடப் பயந்திருப்பாள். பாவம். விஷஜுரமென்றால் காட்டு ஜனங்களுக்கு அவ்வளவு பயம்” என்றாள் தேவி. பிறகு பாலாஜின் பக்கம் திரும்பி, “ஏன் அய்யா! பாதி வழியிலேயே சித்ரா திரும்பிப் போய் விட்டதை உங்கள் மகனுக்கு நீங்கள் சொல்லவில்லையா?” என்று அர்த்தபுஷ்டியுடன் ஒரு கேள்வி கேட்டாள். 

பாலாஜி: “சொல்லவில்லை! சித்ராவைப் பற்றி ஜோதி விசாரித்த பொழுது மகாராணியிடமே கேட்டுத் தெரிந்து கொள்!” என்றேன். 

தேவதேவி: சித்ரா பாதி வழியில் திரும்பிப் போய் விட்டது நீங்கள் சொல்லித்தானே எனக்கே தெரியும்? உங்கள் மகன் மனதைக் கவர்ந்த பேரழகியை நான் பெட்டிக்குள் வைத்து பூட்டியிருப்பதாக அவர் நினைக்கிறார் போலிருக்கிறது. 

“ஆமாம் ஜோதி! சித்ரா பாதி வழியிலேயே திரும்பிப் போய் விட்டாள்!” என்று வேறு வழியில்லாமல் நெஞ்சு அறிய பாலாஜி ஒரு பொய் சொல்ல வேண்டியதாயிற்று. 

“இதை ஏன் அப்பொழுதே என்னிடம் சொல்லவில்லை யென்பதுதான் எனக்குப் புரியவில்லை” என்று ஜோதிவர்மன் ஒரு சந்தேகப் பார்வையுடன் பாலாஜிடம் கேட்டபொழுது “உண்மையைச் சொல்லுகிறேன் ஜோதி! நீ சரியாக குணமடையும் வரையில் உன்னுடன் யாரும் அதிகமாகப் பேசக்கூடாதென்றும் அதிலும் உணர்ச்சி வசப்படுத்தக் கூடிய விஷயங்களைப் பற்றி பேசவே கூடாதென்றும் மகாராணி சொல்லியிருந்தாள். உனக்கு அதிர்ச்சியைக் கொடுத்து வியாதி திரும்பிவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் மகாராணியிடமே நீ எதையும் கேட்டுக் கொள்ளுவது நல்லதென்று நினைத்துக் கொண்டேன் ஜோதி. சித்ராவைப் பற்றியோ அல்லது வேறு யாரைப் பற்றியுமோ அதிகமாக நீ சிந்திக்கக்கூடாது. பயங்கரமான உன் வியாதி திரும்பிக் கொண்டால் பேராபத்தாகிவிடும்! சித்ரா எங்கே போய்விடுவாள்? உக்கிரசேனரின் குகையில் தானே இருப்பாள்? இங்கிருந்து திரும்பிப் போகும் பொழுது அவளைப் பார்த்துவிட்டுப் போனால் போகிறது!” என்று நிலைமையைச் சமாளிக்க சாதூர்யமாகப் பேசினான் பாலாஜி. 

தனக்கு சாதகமாகப் பாலாஜி இவ்விதம் சொல்கையில் அவரை நன்றி நிறைந்த பார்வையுடன் கவனித்துக் கொண்டிருந்த தேவதேவி, பாலாஜி பேசி முடிந்ததும் “நோய்வாய்ப் பட்டவரைத் திரஸ்கரித்து விட்டுப் போனவளை மறுபடியும் துரத்திக் கொண்டு போக வேண்டாமென்று உங்கள் பிள்ளைக்கு உபதேசம் செய்யுங்கள், எவர் எப்படிப் போனால் எனக்கு என்ன? யார் யாரைத் துரத்திக் கொண்டு போனால் தான் என்ன?” என்றாள். இப்படிச் சொல்லி வாய் மூடியவுடன் அவள் இரண்டு கைகளையும் பலமாகத் தட்டினாள். 

ஒரு பணிப் பெண் உள்ளே வரவும் “உக்கிரசேனனை உள்ளே வரச் சொல்!” என்று தேவதேவி உத்தரவு பிறப்பித்தாள். தேவதேவியின் அழைப்பை எதிர்பார்த்து வெளியே காத்திருந்தவரைப் போல் உக்கிரசேனர் உள்ளே நுழைந்து வழக்கம் போல தரையில் விழுந்து வணங்கவும் தேவதேவிக்கு திக்கு பாலகர்களும் அந்நாட்டு மக்களும் வணக்கம் தெரிவிக்கும் முறையை முதன் முதலாகப் பார்த்த ஜோதிவர்மன் உக்கிரசேனரையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். 

”எழுந்திரு! உன் மகள் சித்ரா எங்கே?” என்று கேட்டாள் தேவதேவி. இதுவரையில் சுமுகமாகப் பேசிக் கொண்டிருந்த தேவியின் குரலில் ஒரு அதிகாரமும் கடுமையும் தொனிப்பதைக் கவனித்த ஜோதிவர்மன் தேவதேவியின் கேள்வி முன்னேற்பாடான ஒரு நாடகமென்பதைக் கொஞ்சம் சந்தேகிக்க இடமில்லாமலிருந்தது. 

“என் மகள் குகையிலிருக்கிறாள் கன்னிமாதா!” என்றார் உக்கிரசேனர். 

“சித்ரா தங்களோடுகூட அமரகிரிக்கு வந்ததாக இவர்கள் கூறுகிறார்களே, அது உண்மைதானா?” என்று கேட்டாள் தேவதேவி. 

“ஆமாம் கன்னி மாதா! ஆனால், பாதி வழியில் அவள் திரும்பிப் போய் விட்டாள்” என்றார் உக்கிரசேனர். 

“ஏன் திரும்பிப் போனாள்?” என்று தேவதேவி மறுபடி கேட்டபொழுது உக்கிரசேனர் சற்றுத் தயங்கிவிட்டு, “எனக்குத் தெரியாது தேவி! போகும்போது என்னிடம் சொல்லிக் கொண்டு போக வில்லை” என்றார் உக்கிரசேனர். 

“நல்லது! நீ சற்று நேரம் வெளியே இரு! இந்த அரண்மனையின் சுற்றுப்புறங்களையெல்லாம் நமது விருந்தாளிகளுக்குக் காண்பிக்கப் போகிறேன். அப்பொழுது நீயும் எங்கள் கூட வரலாம்” என்று மலைக்கன்னி சொல்லவே உக்கிரசேனர் பயபக்தியுடன் மறுபடியும் விழுந்து வணங்கிவிட்டு புறமுதுகு காட்டாமல் பின்னாடியே நகர்ந்து சென்று அறையை விட்டு வெளியேறினார். 

உக்கிரசேனர் சென்ற பிறகு “சித்ராவின் தகப்பன் சொல்லியதைக் கேட்டீர்களல்லவா? போகும்பொழுது தகப்பனிடமே சொல்லிக்கொண்டு போகவில்லையாம் சித்ரா” என்று ஜோதியைப் பார்த்துச் சொன்னாள் தேவதேவி. 

“சித்ராவின் போக்கு ஆச்சர்யமாயிருக்கிறது. அவள் என்னுடன் பழகிய முறையைக் கவனிக்கையில் அவளா இவ்விதம் நடந்து கொண்டாளென்று சந்தேகமாயிருக்கிறது” என்று ஜோதிவர்மன் சொல்லுகையில், “அவள் மட்டுமல்ல; இந்தக் காட்டு ஜனங்களில் எல்லோருமே அப்படித்தான். இது கிடக்கட்டும், இந்த அமரகிரி அரண்மனை அதிசயங்களில் சிலவற்றை உங்கள் பெரியப்பா ஏற்கனவே பார்த்துவிட்டார். அவற்றையும் அவர் பார்க்காதவைகளையும் உங்களுக்குக் காட்டுகிறேன் வாருங்கள்” என்று சொல்லிவிட்டு திரிசூலத்தைக் கையிலெடுத்துக் கொண்டு கிளம்பினாள் தேவதேவி. 

“வானமண்டலத்திலிருந்து இறங்கிவந்த ஒரு தேவ கன்னிகை நிலத்தில் நடப்பதைப் போலல்லவா இருக்கிறது தேவதேவியின் கம்பீரமான சௌந்தர்யம். அதிலும் அவள் திரிசூலத்தை லாகவமாக எடுத்துச் செல்லும் தோற்றம் எவ்வளவு ரம்மியமாயிருக்கிறது!” என்று ஜோதிவர்மன் தேவதேவிக்குத் தான் சொல்வது தெரியக் கூடாதென்பதற்காக பாலாஜியிடம் வடமொழியில் சொல்லிக் கொண்டு புறப்பட்ட பொழுது பளிச்சென்று திரும்பிப் பார்த்த தேவதேவி ஒரு மோகனப் புன்முறுவலைப் படரவிட்டுக் கொண்டு ஜோதியைக் குளுமையாகப் பார்த்து “ம்! அப்படியா?” என்றாள். 

வடமொழியில் தான் சொல்லியதை தேவதேவி புரிந்து கொண்டு விட்டாளென்பதை உணர்ந்ததும் ஜோதிவர்மன் வெட்கிப் போனான். 

“என்னை மன்னிக்கவேண்டும் தேவி! மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிட்டேன்” என்று அவன் சொல்லவும் “இல்லை! உங்களை மன்னிக்க முடியாது! நீங்கள் செய்ததும் மன்னிக்கக் கூடிய சாதாரண குற்றமில்லை” என்று சொல்லிக்கொண்டே நடந்தாள் தேவதேவி. 

“உலகம் கண்டிராத ஒரு பேரழகியை அழகியென்று வர்ணிப்பது உங்கள் நாட்டில் குற்றமானால் உண்மையில் நான் குற்றவாளிதான் தேவி! இந்த நாட்டுப் பழக்கம் தெரியாமல் செய்துவிட்ட பிழையை மன்னிக்கவேண்டும்” என்றான் ஜோதிவர்மன். 

“அழகியை அழகியென்று வர்ணித்திருந்தால் அது குற்றமில்லை. ஒன்று நீங்கள் நினைப்பதைப் போல நான் தேவகன்னிகைகளுக்கு ஒத்த அழகில்லை. நீங்கள் சொல்வது எனக்குத் தெரியப்படாதென்பதற்காக, எனக்குத் தெரியாத பாஷையில் பேசுவதாக நினைத்துக் கொண்டு பேசியது இரண்டாவது பெரிய குற்றம்” என்றாள் தேவி. 

“ஜோதி! வடமொழியில் உன்னையும் என்னையும்விட அதிக பாண்டித்தியமுடையவள் தேவி. அது மட்டுமில்லை. பெரும்பாலான பண்டிதர்களிடமிருந்தும் பொறாமையும் அசூசையும் இன்றி பிறருடைய ஞானத்தை ரசிக்கும் மேலான பண்பும் உடையவள் இந்நாட்டு ராணி” என்றான் பாலாஜி. 

“இதைக் கேட்க உண்மையில் நான் சந்தோஷப்படுகிறேன்” என்று ஜோதிவர்மன் சொல்லுகையில் “உங்களை போன்ற அறிஞர்களைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்ததற்கு உங்களை விடப் பன்மடங்கு நான் பரமானந்தமடைகிறேன்” என்றாள் தேவி. 

இதற்குள் அவர்கள் அமரகிரியின் புராதன வரலாறுகளை சிலாசாசனங்களாக எழுதிவைத்திருக்கும் சித்திரக் கலாமண்டபத்துக்கு வந்துசேர்ந்தார்கள். அங்கு பிரம்மி லிபியில் எழுதியிருந்த பல ஆயிரம் வருடப் பழமையான வரலாறுகளை தேவதேவி ஜோதிவர்மனுக்கும் வாசித்துக் காட்டினாள். அவற்றை உலக சரித்திரத்துடன் ஒப்பிட்டு அரிய ஆராய்ச்சிக் கருத்துக்களை ஜோதிவர்மனும் தேவதேவிக்குச் சொல்லிக் கொண்டு வந்தான். 

பிரேதச் சாலைகள், சிற்பக்கூடம், சித்திரமண்டபம் முதலான பல இடங்களையும் தேவி காட்டிவிட்டுக் கடைசியில் மலை உச்சியிலே ஒரு பெரிய மைதானம் போன்றிருந்த விசாலமான திறந்த வெளிக்கு அவர்களை அழைத்துக் கொண்டு போய் “இங்குதான் இன்றிரவு ஒரு நடன விருந்து நடக்கப் போகிறது. உங்களைக் கௌரவிப்பதற்காக நடனவிருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்” என்றாள். 

மலை உச்சியிலிருந்து பார்த்த பொழுது அமரகிரியை அடுத்து அமரபுரி நகரத்தின் அழகான தோற்றம் ஜோதியின் கவனத்தைக் கவர்ந்தது. 

“இவ்வளவு அழகான பட்டினங்களும் செம்பளவத் தீவில் இருப்பதை இப்பொழுதுதான் நான் பார்க்கிறேன்” என்றான் அவன். 

“இதேபோல இன்னும் பல பட்டினங்களிருக்கின்றன. அவைகளை நானே சரியாகப் பார்த்ததில்லை” என்றாள் தேவி. 

“நீங்கள் சொல்லுவது ஆச்சர்யமாயிருக்கிறதே! நாட்டின் மகாராணி தன்னுடைய நகரங்களைப் பார்த்த தில்லையென்று சொல்லுவதை இப்பொழுதுதான் முதல் தடவையாக நான் கேட்கிறேன்” என்றான் ஜோதி. 

“ஆம்! ஆச்சர்யமானதுதான். என் வாழ்க்கையே யாரும் சுலபமாக நம்பமுடியாத அதிசயமான வாழ்க்கை. உலகத்தில் என்னைப் போன்ற ஒரு அதிசயமான பெண் பிறந்ததில்லை. அபாக்கியவதியான பெண்ணும் பிறந்ததில்லை” என்றாள் தேவி. 

“உங்களை அபாக்கியவதியென்று சொல்லிக் கொள்ளுவதாயிருந்தால் இந்த உலகத்தில் பாக்கியவதியென்று சொல்லிக் கொள்ள யாருமே இருக்க மாட்டார்கள்” என்றான் ஜோதி. 

“என் வரலாற்றைக் கேட்கும் வரையில் இப்படித் தான் சொல்லுவீர்கள் ஊம்… என் துயரம் என்னோடு இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு ஒரு நெடுமூச்செறிந்தாள் தேவி. 

“உங்கள் மனதை அப்படித் துன்பப்படுத்தும் விஷயம் என்ன?” என்றான் ஜோதி. 

“ஏன் அதைக் கேட்கிறீர்கள்?” என்றாள் தேவி. 

“அதைப் போக்க எங்களால் ஏதாவது செய்ய முடியுமானால் செய்யலாமென்பதற்குத் தான் கேட்கிறேன்” என்றான் ஜோதி. 

தேவி ஒரு கணம் மௌனமாக ஜோதியை ஏறத்தாழப் பார்த்தாள். பிறகு, “ஆம்! முடியும்! என் மனத்துயரைப் போக்க உங்களால் முடியும்” என்று அவள் அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள். 

“அப்படியானால் அதைச் சொல்லத் தயங்குவானேன்?” என்று கேட்டான் ஜோதி. 

“உங்களை நன்கு புரிந்து கொள்வதன் முன்னால் என் அந்தரங்கத்தை உங்களிடம் வெளியிட நான் விரும்பவில்லை. தேவைப்படும் பொழுது எனக்கு உதவி புரிவதாக வாக்களித்தீர்களானால் அதுவே போதும்” என்றாள் தேவி. 

“நிச்சயம் உங்கள் துயரத்தைத் தீர்க்க என்னால் முடிந்ததைச் செய்வேன். இதில் உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம்” என்று ஜோதி கூறிய பொழுது, “இது நிச்சயம் தானா?” என்று கேட்டாள் தேவி. 

“நான் கொடுத்த வாக்கை ஒரு போதும் புறக்கணித்த தில்லை. என் பெரியப்பாவைக் கேட்டுப் பாருங்கள்” என்றான் ஜோதி. 

“நல்லது! பிறகு ஒரு சமயம் என் வரலாற்றைச் சொல்கிறேன். இன்று வேண்டாம். சாப்பாட்டுக்கு நேரமாகிறது. போவோம் வாருங்கள்!” என்று சொல்லிவிட்டு ஜோதியையும் மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு கீழே இறங்கினாள் தேவி. 

ஜோதியையும் பாலாஜியையும் மாத்திரம் தேவியின் அறையில் விட்டு மற்றவர்கள் திரும்பினார்கள். 

மத்தியானச் சாப்பாடு முடிந்ததும் தேவியின் அறையிலிருந்த புராதன ஏட்டுச் சுவடிகளில் சிலவற்றை எடுத்துக் கொண்டு ஜோதி தன்னுடைய அறைக்குத் திரும்பினான். 

பக்கத்தில் ஒருவருமில்லை யென்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, “ஏன் பெரியப்பா! இந்த தேவதேவி உண்மை யாகவே சந்திரிகாவின் காலத்திலிருந்த தேவதேவிதானா? அல்லது சித்ரா சொல்லியதைப் போல தேவியின் அமரத்துவம் வெறும் பித்தலாட்டமா? தேவியின் முகத்தைப் பார்த்தால் கண் குருடாகிவிடும் என்று சொன்னீர்களே அதுவும் நிஜம்தானா? அல்லது தேவி அருகில் இருக்கிறா ளென்பதற்காக அவளுடைய முகதாட்சண்யத்துக்காக அப்படிச் சொன்னீர்களா? விவரமாகச் சொல்லுங்கள் பெரியப்பா! நாம் என்ன காரணதுக்காக இந்தத் தீவுக்கு வந்தோமோ அந்த இலட்சியத்தில் எவ்வளவு தூரம் நாம் வெற்றி பெற்றிருக்கிறோ மென்பது எனக்குத் தெரிய வேண்டாமா? நான் சுகவீனமாயிருக்கையில் என்னென்ன நடந்தது? யார் யாரைப் பார்த்தீர்கள்? என்னென்ன பேசினீர்கள்? ராணி தேவதேவியின் பெயரைக் கேட்டாலே இந்த நாட்டு மக்கள் நடு நடுங்க அவள் நம்மிடம் ஏன் இவ்வளவு சரளமாகப் பழகுகிறாள்? எல்லாவற்றையும் விவரமாகச் சொல்லுங்கள் பெரியப்பா! இந்த விவரங்களைக் கேட்க நான் எவ்வளவு ஆவலுடனிருக்கிறேன் தெரியுமா?” என்றான் ஜோதிவர்மன. 

ஜோதிவர்மன் சரமாரியாகக் கேள்விகளை அடுக்கிய பொழுது அவனுக்கு என்ன சொல்லி சமாதானப் படுத்துவதென்று பாலாஜிக்குப் புரியவில்லை. 

“ஜோதி! நம்முடைய அறைக்கும் தேவதேவியின் அறைக்குமிடையில் ஒரு கருங்கல் இருந்த பொழுதிலும் இப்பொழுது நாம் என்ன செய்கிறோமென்பதைத் தேவதேவி பார்த்துக்கொண்டுதானிருப்பாள். கல்லையும், மண்ணையும், மலையையும் துளைத்துக்கொண்டு பார்க்க உதவும் ஒரு அதிசயமான தூரதர்சனிக் கருவி இங்கு இருக்கிறது.. பேசுவதைக்கூட அவள் கேட்டுக்கொண்டிருக்கிறாளோ என்னவோ கடவுளுக்குத்தான் வெளிச்சம். மறுபடியும் ஏட்டுச் சுவடிகளையும் சந்திரிகாவையும் பற்றிப்பேசாதே. ஏட்டுச் சுவடிகளைப் பார்த்துவிட்டுத் தான் நாம் இங்கு வந்திருக்கிறோமென்பது தெரிந்தால் நம் உயிர் நிலைக்காது. நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நாம் எதிர்பார்த்து வந்த அதே தேவதேவிதான் இந்தத் தேவதேவி. அவள் அமரத்துவம் வாய்ந்தவளென்பதில் அணுவளவு சந்தேகமும் இல்லை!” என்றான் பாலாஜி. 

“இதை நீங்களா சொல்கிறீர்கள் பெரியப்பா?” என்றான் ஜோதி. 

“ஆம் ஜோதி! ஒரு பெண் சாவை ஏமாற்றிக்கொண்டிருப்பது கட்டுக் கதையென்று முன்பு நான் கேலி செய்தது உண்மைதான். ஆனால், இப்பொழுது சந்திரிகாவின் கதையை முற்றாக நான் நம்புகிறேன். சந்திரிகாவின் புருஷன் விஜயகேசரி கொலை செய்யப்பட்ட நிலா முற்றத்தை நான் நேரில் பார்த்தேன். அம்மட்டல்ல. இதைத் தேவியே ஒப்புக்கொண்டாள். தேவி மகத்தான சக்தி வாய்ந்தவள். அவளால் செய்ய முடியாத காரியம் ஏது மிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அவள் முகம் திரையிடப்பட்டிருந்ததால் தான் பெண்மையின் சோபையோடு பொலிவுடன் விளங்குகிறது. திரையை நீக்கினால் கண்கள் கருகிக் குருடாகிவிடும்படி ஓராயிரம் சூரியன்களின் தேஜஸ் பிரகாசிக்கிறது. அவள் கூற்றைப் பரீட்சிப்பதற்காக அரைக்கண நேரம் அந்த முகத்தைப் பார்த்துவிட்டு நான் பட்டபாடு எனக்குத் தான் தெரியும். இன்னொன்றும் சொல்கிறேன். தேவி ஏதோ நம்மிடம் சாந்தமாகப் பேசுகிறாளே என்று எண்ணி ஏமாந்துவிடாதே. அவள் கோபம் கொண்டாளோ இந்த மலைச்சிகரமே கிடு கிடுவென்றாடும். மாகாளியின் தமக்கையைப் போலாகி விடுவாள். அவள் கையில் வைத்திருக்கும் திரிசூலம் மேலே பட்டால் போதும். அந்த இடத்திலேயே நாம் கருகிப் பிடி சாம்பலாகி விடுவோம். ஆதலால் அவளிடம் நீ மிக மிக எச்சரிக்கையாகவும், மிதமாகவும் நடந்துகொள்ளவேண்டும்” என்றான் பாலாஜி. 

“இத்தனை பயங்கரமானவளா தேவி? பார்த்தால் மிகவும் சாதுவாக இருக்கிறாளே?” என்றான் ஜோதி. 

“தேவியிடம் நல்ல பண்புகளும் இல்லாமலில்லை. மகா மேதையான தேவிக்கு அறிவாளிகளிடம் ஒரு அலாதியான அன்பும், பரிவும் இருக்கிறது. நம்மை அவள் கௌரவிக்க மிக முக்கியமான காரணம் நாம் வடமொழியில் நல்ல பாண்டித்தியம் பெற்றிருப்பதுதான். சமஸ்கிருதம் மட்டும் நமக்குத் தெரியாமலிருந்தால் தேவியின் பேட்டி கூடக் கிடைக்காமல் பரலோகத்துக்குப் பார்சல் செய்து அனுப்பப் பட்டிருப்போம். இப்பொழுது மேற்கொண்டு ஒன்றும் கேட்காதே. சமயம் வரும்பொழுது நானே சொல்லுகிறேன். தேவி சற்று முன்கோபக்காரி யென்றாலும் உத்தமமான குணம் படைத்தவளென்பது என்அபிப்பிராயம்” என்றான் பாலாஜி. 

“இந்த தேவதேவி பழைய தேவதேவிதான் என்றால் இன்னொருவள் கணவனிடம் ஆசைப்பட்டு அந்த வெறியில் ஆளையே கொன்று வீழ்த்தியதுதான் உத்தமமான குணமா பெரியப்பா? உங்கள் வேதாந்தம் நன்றாயிருக்கிறதே!” என்றான் ஜோதி. 

“விஜயகேசரியை தேவி கொலைசெய்தது உண்மை தான். அது பாபமாயிருந்தால் அந்தப் பாபத்துக்கு அவள் எப்பொழுதோ பரிகாரம் தேடிக் கொண்டும் விட்டாள். அவளுடைய நிலைமையில் நீயோ அல்லது நானோ இருந்திருந்தால் விஜயகேசரியை மட்டுமல்ல சந்திரிகாவையும் சேர்த்துக் கொலை செய்திருப்போம்! தன் ஆசை நிராசையானதற்காகத் தன்னைப் போன்ற ஒரு பெண்ணையும் கொல்லக் கூடாதென்றெண்ணி சந்திரிகாவை விடுதலை செய்தாள் பார்! அதற்குத் தேவியைப் பாராட்டவேண்டும். தேவியின் காதல் தெய்வீகமானது. அதற்கு மாசு கற்பிப்பதைவிடப் பெரிய பாவம் வேறில்லை!” என்றான் பாலாஜி. 

ஒரு சமயம் தேவதேவி தங்களுடைய சம்பாஷணையை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தால் அவள் திருப்தியடையட்டு மென்றெண்ணியே இதைப் பாலாஜி அழுத்தம் திருத்தமாகச் சொன்னான். 

பொழுதுபோவதே தெரியாமல் இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில் இருட்டிவிட்டது. நடன விருந்துக்கு அவர்களை அழைத்துச் செல்ல ராஜரீக உடைகளுடன் ஜாஜ்வல்யமாக அங்கு வந்தாள் தேவதேவி. 

வைர வைடூரியங்கள் வைத்து இழைத்த கிரீடத்துடனும் திரிசூலத்துடனும் அவளைப் பார்த்த பொழுது சாதாரண மனிதப் பெண்ணென்று யாரும் அவளைத் துணிந்து சொல்ல முடியாது. ரம்பை, ஊர்வசி, திலோத்தமை முதலான தேவலோக மங்கையர்களில் ஒருவள் காற்றில் மிதந்து வருவதைப்போலிருந்தது அவளுடைய எழிலுருவம். 

வாசற்படியில் நின்றுகொண்டே “நடனத்துக்கு நேரமாகிவிட்டது! போவோம் வருகிறீர்களா?” என்று இனிமையாக ஜோதியைப் பார்த்துக் கேட்டாள் தேவி. அன்று சற்று முன்னால் பாலாஜி வர்ணித்த அதே தேவிதானா இப்பொழுது தேனினும் இனிமையாகப் பேசுகிறாளென்று ஜோதிவர்மன் திகைத்தான். அவன் திகைப்பை உணர்ந்த பாலாஜி, “ஏன் ஜோதி புறப்படுவோம் கிளம்பு!” என்று அவனை அவசரப்படுத்தினான். 

ஒரு புறம் பாலாஜியும் மற்றொருபுறம் ஜோதியும் நடுவில் தேவதேவியுமாக அவர்கள் நடன விருந்துக்காக மலையுச்சியை நோக்கி நடந்தார்கள். 

அன்று நடுப்பகல் மலையுச்சியில் பார்த்த மைதானம் போன்ற ஒரு விசாலமான இடத்தை அவர்கள் அடைந்த பொழுது, அதன் நடுவில் ஒரு மேடை அமைத்து அதன் மீது மூன்று சோபாக்களைப் போட்டிருந்தார்கள். மேடையின் அருகில் மாத்திரம் ஒரு பெரிய தீவட்டி நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்தத் தீவட்டியின் சுற் றுப் புறத்தைத் தவிர மைதானத்தின் இதர பகுதிகளில் ஒரே இருட்டாயிருந்தது. இருட்டில் எப்படி நடனக் கச்சேரி நடக்கப் போகிறதென்று ஜோதியும் பாலாஜியும் திகைத்துக் கொண்டிருக்கையில் தேவியின் மகா மந்திரி அங்கு வந்து சேர்ந்தார். 

மந்திரியைப் பார்த்தவுடன் “நடனம் ஆரம்பமாகலாம்!” என்று உத்தரவு பிறப்பித்தாள் தேவி. மந்திரி சற்று எட்டிச் சென்று மூன்று தடவை கையைத் தட்டினார். மூன்றாவது தட்டலின் சப்தம் ஓய்வதற்குள் புற்றீசல் போல தீவட்டிகள் சகிதம் ஏராளமான ஆடவர்கள் மைதானத்தின் பல திசைகளிலிருந்தும் பாய்ந்து வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய கைகளிலும் ஒரு ஆள் உயரத்துக்கு தீவட்டிகளிலிருந்தன. அவற்றிலிருந்து தீ சுடர் விட்டுக் கொண்டும் பட்டாசு வெடிப்பதைப்போல வெடித்துக் கொண்டும் எரிந்தது. தீவட்டிகளைக் கொண்டு வந்தவர்களில் ஒருவருடைய முகம் கூடச் சரியாகத் தெரிய வில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான மிருகங்களின் தலைகளைப் போல முகமூடிகள் அணிந்திருந்தார்கள். யானை, குதிரை, கழுதை, மான், சிங்கம், புலி, கரடி முதலான சகலவிதமான மிருகங்களின் முகமூடிகளும் அவர்களிடம் தென்பட்டன. தீவட்டி வெளிச்சத்தில் அந்த உருவங்கள் பார்ப்பதற்கு அதிபயங்கரமாயிருந்தன வென்று கூறவேண்டும். 

“முகமூடி மனிதர்கள் அதோ குதிக்கிறார்களே! அது தான் நடனமா?” என்று கேட்டான் ஜோதி. 

”இல்லை! நடனம் இன்னும் ஆரம்பமாகவில்லை. இறந்தவர்களின் ஆன்மாக்கள் முக்தியடைய அவர்கள் பிரார்த்தனைத் தாண்டவமாடுகிறார்கள்” என்று தேவதேவி சொல்லி வாய் மூடுவதற்குள் தூரத்தில் எங்கோ சதங்கை ஒலி கலீர், கலீர் என்று கேட்டது. ஜோதி அந்த சப்தம்வந்த திசையில் திரும்பிப் பார்த்தான். கண்களை மூடிக்கொண்டு ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்த பாலாஜியும் கண்களைத் திறந்து சதங்கை ஒலி பிறந்த திசையில் திரும்பிப் பார்த்தான். 

சதங்கை ஒலி கேட்ட சில வினாடிகளுக்கெல்லாம் அந்தத் திசையிலிருந்து முகமூடியணிந்த ஏராளமான பெண்கள் அணி அணியாக வந்தார்கள். ஆடவர்களைப் போலவே அவர்களும் மிருகங்களைக் குறிக்கும் முகமூடியணிந்திருந்தார்கள். ஒரே குரலில் அவர்கள் மிக மிக இனிமையாகப் பாடிக்கொண்டு வந்தார்கள். 

அரண்மனைக்குள் இருக்கும்பொழுது ஊமைகளைப் போல நடிக்கும் அந்தப் பெண்கள் இப்பொழுது இனிமையாகப் பாடிக்கொண்டு வந்தது ஜோதிவர்மனுக்கு ஆச்சரியமாயிருந்தது. தன்னுடைய சந்தேகத்தை அவன் தேவதேவியிடமே கேட்டான். 

“அவர்களில் யாரும் ஊமைகளில்லை. பேசக்கூடா தென்று உத்தரவிடப்படும் சந்தர்ப்பங்களில் அவர்களைச் சித்திரவதை செய்தாலும் பேசமாட்டார்கள்” என்றாள் தேவி. 

“பணிப் பெண்கள் ஜாடை செய்து பேச மறுத்த பொழுது நானும் இப்படித்தான் நினைத்தேன். இவ்வளவு அழகான பெண்கள் உண்மையில் ஊமைகளாய் இருந்தால் எவ்வளவு பரிதாபம்” என்று அங்கலாய்த்தான் ஜோதி. 

“உங்களுடைய அனுதாபத்தை வீணாகச் செலவிட்டு விடாதீர்கள்! பிறகு ஒரு சமயம் உங்கள் அனுதாபம் எவருக்கேனும் தேவைப்படலாம். அதோ அவர்கள் பாடுவதைக் கேளுங்கள்” என்றாள் தேவி. 

பாடிக்கொண்டே நடு மைதானத்துக்கு வந்த பெண்களை ஆடவர்கள் வட்ட வடிவமாகச் சுற்றி நின்று கொண்டு குதிக்க நடுவில் பெண்கள் பாடிக்கொண்டே ஆடினார்கள். சிறிது நேரத்திற்குப் பின்னர் ஆண்களும், பெண்களும் சேர்ந்து ஆடினார்கள். அவர்களுடைய நடனம் பரத நாட் டியமென்றோ, மணிபுரி, கதகளி நடனமென்றோ, மேல் நாட்டு ஜோடி நடனமென்றே எவ்விதமாகவும் வர்ணிக்க முடியாமல் அலாதியான ஒரு மாதிரி நடனமாயிருந்தது. அதேசமயம் பார்ப்பதற்கு ரம்மியமாகவும், அர்த்தபுஷ்டி நிறைந்ததாயுமிருந்தது. சில கட்டங்கள் பாலி, ஹவாய் நடனங்களை ஒத்திருந்தன. வேறு சில கட்டங்கள் பரதநாட்டியத்தைப் போலிருந்தன. பல மாதிரியான நடனங்களின் கதம்பம் போலிருந்தது அவர்களுடைய நாட்டியமும், மிருதங்கமும். 

நடனம் நடந்துகொண்டேயிருக்கையில் தேவதேவி மேடையிலிருந்திறங்கி மைதானத்தைச் சுற்றிவரப் புறப்பட்டாள். போகும்பொழுது “நீங்களும் தாராளமாகப் போய்ச் சுற்றிப் பாருங்கள்” என்று அவள் சொல்லிவிட்டுப் போனாள். 

ஜோதியும் பாலாஜியும் மைதானத்தைச் சுற்றிக் கொண்டு சற்று இருட்டாயிருந்த ஒரு இடத்தை நெருங்கிய பொழுது “ஜோதி ஜோதி” என்று யாரோ அழைப்பதைப் போல அவர்களுக்குக் கேட்டது. ஜோதிவர்மன் ஒரு கணம் அப்படியே ஸ்தம்பித்து நின்றான். 

“யாரோ அழைத்தமாதிரியில்லை ஜோதி!” என்றான் பாலாஜி. 

“ஆமாம்!” என்றான் ஜோதி. 

“பழக்கப்பட்ட குரல் மாதிரியுமிருந்தது!” 

”ஜோதி! நான்தான் சித்ரா! தயவுசெய்து இங்கே வாருங்கள்!” என்று மறுபடியும் அதே குரல் அழைத்தது. 

“சித்ரா அல்லவா அழைக்கிறாள்!” என்று சொல்லிக் கொண்டு அந்த சப்தம் பிறந்த திசையில் சென்றான் ஜோதி. 

“ஜோதி! ஜோதி! போகாதே! நில்லு! ஆபத்து! அங்கே போகாதே!” என்று பயத்துடனும் பீதியுடனும் எச்சரித்தான் பாலாஜி. 

பாலாஜியின் வார்த்தைகள் ஜோதியின் செவிகளில் விழவேயில்லை. சப்தம் பிறந்த இருட்டான இடத்தை நோக்கி அவன் வேகமாகச் சென்றான். ஒரு புதற்றின் அருகில் புலிவேஷம் தரித்த பெண்ணொருவள் நிற்பதைக் கண்டதும் “சித்ரா! என் சித்ராவா நீ?” என்று கேட்டான் ஜோதி. 

“ஆமாம் ஜோதி! உங்கள் சித்ராவேதான்” என்று துக்கம் தோய்ந்த குரலில் அவள் சொல்லியபொழுது ஜோதிவர்மன் அவளுடைய கரங்களை ஆவலோடு பற்றிக் கொண்டு, “சித்ரா! நீ என்னை விட்டுப் போய் விட்டாயென்றல்லவா தேவதேவி சொன்னாள்! நோயில் கஷ்டப்படும் என்னைப் பார்த்து அருவருப்புடன் நீ ஓடிவிட்டாயென்றல்லவா அவள் சொன்னாள்?” என்று வினவினான் ஜோதி. 

”பொய்! பொய்! அவ்வளவும் முழுப் பொய் ஜோதி! இரவு பகலாக என் கண்ணிமைகளைப் போல உங்களைக் கவனித்துக் கொண்டு வந்தேன் ஜோதி, நேற்று மாலை உங்களுக்குச் சுயநினைவு வருவதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு தான் அந்த ராட்சசி என்னைப் பயமுறுத்தி விரட்டிவிட்டாள் ஜோதி!” என்று சொல்லிவிட்டுத் தேம்பித் தேம்பி அழவாரம்பித்தாள் சித்ரா. 

”நிஜமாகவா? தேவியா உன்னை விரட்டினாள்? உன்னை விரட்டிவிட்டவளா என்னிடம் அருவருப்புக் கொண்டு நீ ஓடிவிட்டதாக உன் மீது ஒரு அபாண்டப் பழியையும் சுமத்தினாள்? இது நிஜம்தானா? சொல்லு சித்ரா?” என்று பதட்டத்தோடு கேட்டான் ஜோதி. 

“ஆமாம் ஜோதி! இதை உங்கள் பெரியப்பா சொல்ல வில்லை? தேவி என்னை மிரட்டி விரட்டியபொழுது அவரும் அவள் கூடத்தானே இருந்தார்?” என்று விக்கலும் அழுகையுமாகச் சொன்னாள் சித்ரா. 

“என் பெரியப்பா உன் பக்கத்திலிருந்தாரா? அப்படியானால் தேவதேவி சொல்லியது உண்மைதானென்று அவர் ஏன் என்னிடம் பொய் சொன்னார்? நீ அரண்மனைக்கு வரவேயில்லையென்றும், பாதி வழியிலேயே சொல்லிக் கொள்ளாமல் குகைக்குத் திரும்பிப் போய்விட்டாயென்று உன் அப்பா உக்கிரசேனரும் சொன்னாரே! அதுவும் பொய்யா? வளர்ப்புப் பிள்ளையாயிருந்தும் பெற்ற பிள்ளையைப் போல என்னை நடத்திய ஒரு தகப்பனும், அருமை பெருமையாக உன்னை வளர்த்த உன் தகப்பனும் தேவதேவிக்கு உடந்தையாயிருக்கவா அபாண்டமான பொய் சொன்னார்கள்? அது அக்கிரமம். தெய்வம் சகிக்காத அநியாயம்!” என்று ஆவேசத்தோடு சொல்லிய ஜோதிவர்மன் அதற்குள் அருகில் வந்து நின்ற பாலாஜியைப் பார்த்து, “சித்ரா சொல்லுவது நிஜம்தானா பெரியப்பா? அவளைத் தேவதேவி பயமுறுத்தி விரட்டியடித்தது உண்மைதானா பெரியப்பா? அந்த அநியாயத்துக்கு நீங்களும் உக்கிரசேனரும் உடந்தையாயிருந்து ஒரு பெண்ணின் மனதைப் புண்ணாக்கும் படுபாதகத்தைச் செய்தது உண்மைதானா பெரியப்பா?” என்று கேட்டான் ஜோதி. 

உணர்ச்சி வேகத்தில் ஆவேசத்தோடு ஜோதிவர்மன் கேள்விகளை அடுக்கியபொழுது பாலாஜி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிப் போனான். என்றைக்காவது ஒருநாள் திடீரென்று இப்படி சித்ராவும் ஜோதிவர்மனும் மறுபடியும் சந்திக்க நேரிடுமென்று அவர் எதிர்பார்க்கவேயில்லை. “என் சித்ராவை விரட்டியடிக்க நீங்களும் உடந்தையாக இருந்தீர்களா பெரியப்பா? ஒரு பெண்ணின் இளகிய இதயத்தைப் புண்ணாக்கும் படுபாதகத்துக்கு நீங்களுமா உடந்தையாயிருந்தீர்கள்?” என்று ஜோதிவர்மன் குத்திக்காட்டிக் கேட்டது பாலாஜியின் நெஞ்சை ஈட்டியினால் குத்திப் பிளப்பதைப் போலிருந்தது. குற்றம்சாட்டும் பிள்ளைக்கு என்ன மறுமொழி யளிப்பதென்று புரியாமல் பாலாஜி மௌனமாகத் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்றார். 

“ஏன் இந்தப் பயங்கர மெளனம் பெரியப்பா? உண்மையை இப்பொழுதாவது சொல்ல மாட்டீர்களா? உயிருக்கு உயிராக என்னை நேசித்து அன்பும் ஆதரவுமாகப் பணிவிடை செய்த சித்ரா உங்களுக்கும் தேவதேவிக்கும் என்ன அபராதம் செய்தாள்?” என்று கேட்டான் ஜோதிவர்மன், கண்ணீர் ததும்பத் தேம்பியழுது சித்ராவை ஆதரவாக அணைத்துக் கொண்டு. 

பாலாஜி தட்டுத் தடுமாறிப் பதில் சொல்ல ஆரம்பிப் பதற்குள் “அவரிடம் ஒன்றும் கேட்க வேண்டாம்! சர்வ வல்லமை பொருந்திய தேவதேவி என்னைக் கொலை செய்யாமல் விட்டதே உங்கள் பெரியப்பா தலையிட்டதனால் தான்! அவர் வேண்டிக் கொண்டதால் தான் என்னை உயிரோடு ஓடிவிடும்படி தேவதேவி விரட்டியடித்தாள். இல்லாவிட்டால் இந்நேரம் என் பிணத்தைக் கூட நீங்கள் பார்க்க முடியாமல் எரித்துச் சாம்பலாக்கியிருப்பாள். போனது போகட்டும் மேற் கொண்டு ஆகவேண்டியதைக் கவனிப்போம். எப்படியாவது அரண்மனையிலிருந்து நாம் தப்பிவிட வேண்டும். மறுபடியும் தேவியின் கண்ணில் நான் பட்டால் என்னை உயிரோடு விடமாட்டாள்!” என்று சித்ரா சொன்னாள். 

அவள் இப்படிச் சொல்லி வாய்மூடுவதற்குள் அருகில் யாரோ கலகலவென்று வாய்விட்டுச் சிரிப்பதைப் போல் இருந்தது. சிரிப்பது யார் என்று அவர்கள் திரும்பிப் பார்ப்பதற்குள் இரண்டு ஈட்டி வீரர்கள் சகிதம் தேவதேவி திரிசூலத்துடன் அவர்கள் முன்னிலையில் வந்து நின்றாள். 

தேவியைக் கண்ட மாத்திரத்தில் ஜோதிவர்மன் கரங்களில் கட்டுண்டிருந்த சித்ரா தன்னை விடுவித்துக் கொண்டு ஓடப் பார்த்தாள். 

“அவளைப் பிடித்து நிறுத்துங்கள்” என்று தேவதேவி உத்தரவிடவே இரண்டு ஈட்டி வீரர்கள் ஓடிச் சென்று கொண்டிருந்த சித்ராவைக் குண்டுக் கட்டாகத் தூக்கிக் கொண்டு வந்து தேவியின் முன்னிலையில் நிறுத்தினார்கள். தேவியின் அந்த எதிர்பாராத வருகை எவ்வளவு பெரிய விபரீதத்தில் முடியப்போகிறதோ என்று பயந்து நடுங்கிக் கொண்டு நின்றார் பாலாஜி. 

தேவதேவி சினமடைவதற்குப் பதிலாக மிக அமைதியாக சித்ராவை நெருங்கி அவள் முகத்திலிருந்த புலித்தோல் முகமூடியைக் கழற்றி விட்டுத் தலையைப் பார்த்தாள். தலையில் திரிசூலத்தினால் ஏற்படுத்திய வழுக்கை அடையாளங்களைக் கவனித்துவிட்டு “ஆம்! நீ சித்ராவே தான்! நேருக்கு நேராக நான் பிறப்பித்த ஆணையை மீறும் ஒரு பெண்ணை இப்பொழுதுதான் முதல் தடவையாக நான் பார்க்கிறேன். இருக்கட்டும்!” என்றாள். பிறகு ஜோதியின் பக்கமாகத் திரும்பி “நடனக் கச்சேரி முடிந்து விட்டது. காற்றும் சில்லென்று வீசுகிறது. திறந்த வெளியில் வெகுநேரம் நின்றால் உடம்புக்கு ஆகாது. அரண்மனைக்குத் திரும்புவோம் வாருங்கள்” என்றாள் தேவதேவி. 

“சித்ரா! சித்ராவை என்ன செய்யப் போகிறீர்கள்? சித்ராவைவிட்டு நான் வரமுடியாது. வரப் போவதுமில்லை!” என்று உறுதியாகச் சொன்னான் ஜோதி. 

“சித்ராவும் அரண்மனைக்குத்தான் வருகிறாள். என் நண்பருக்குப் பிரியமானவர்கள் எனக்கும் பிரியமானவர்கள் தான்! பாக்கியை அரண்மனைக்குப் போயிருந்து பேசுவோம் வாருங்கள்!” என்று சொல்லிய தேவதேவி தனது வீரர்களைப் பார்த்து, “அந்தப் பெண்ணையும் அரண்மனைக்கு அழைத்து வாருங்கள். சாப்பாட்டுக்குப் பிறகு என் முன்னிலையில் ஆஜர் செய்யுங்கள்!” என்று சொல்லி விட்டுப் போனாள். 

தேவதேவி சென்றவுடன் சித்ராவையும் ஈட்டி வீரர்கள் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள். அவர்கள் தூக்கிச் செல்லுகையில் அவள் “ஓ”வென்று அலறியடித்துக் கொண்டு போனது ஜோதிவர்மனுக்குப் பொறுக்க முடியாத மனவேதனையைக் கொடுத்தது. அவ்விரு வீரர்களையும் அடித்து வீழ்த்தி சித்ராவை விடுவித்துக் கொண்டு ஓடி விட வேண்டுமென்ற ஆவலும் ஆத்திரமும் அவன் நெஞ்சில் துடித்ததென்றாலும் அப்போதைய நிராதரவான நிலைமை அவனைக் கபோதியைப் போல நிலை குலைந்து செயலற்றுப் போகச் செய்திருந்தது. 

“நீங்கள் செய்த இந்தக் குற்றத்துக்கு மன்னிப்பே கிடையாது பெரியப்பா! இதற்குமேல் நான் என்ன சொல்ல!” என்று மனம் உடைந்து சொல்லிவிட்டுக் கண்ணீர் வடித்தான் ஜோதி. 

“ஜோதி! குழந்தை! நான் செய்தது மாபெரும் தவறுதான் அப்பா! ஆயினும் சித்ராவின் உயிரைக் காப்பாற்ற வேண்டும். உனக்கும் ஒரு தீமையும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தினால்தான் சித்ரா அரண்மனையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதை உன்னிடமிருந்து மறைத்தேன். உன் க்ஷேமத்தைத் தவிர வாழ்க்கையில் எனக்கு வேறு இலட்சியமே கிடையாது. உன் நன்மைக்குப் பாதகமாக நான் ஏதும் செய்தறியேன். என்னை நீ நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, என் மனச்சாட்சி நான் செய்தது சரியென்று எனக்குச் சொல்லுகிறது. நான் தவறு இழைத்திருந்தால் என்னை மன்னித்துவிடு!” என்று உருக்கமாகப் பாலாஜி சொல்லிய பொழுது ஜோதிவர்மன் பதிலே சொல்லாமல் அரண்மனையை நோக்கி நடந்தான். 

“எவ்வளவோ வாதாடி சித்ராவின் உயிரை நான் காப்பாற்றினேன். இப்பொழுது விட்டில் பூச்சி நெருப்பில் வந்து விழுந்ததைப் போல அவள் மறுபடி தேவதேவியிடம் சிக்கிக் கொண்டு விட்டாள். இம்முறை சித்ராவை யாராலும் காப்பாற்ற முடியாது! பாவம் பிரேமையின் துடிப்பு அவளை மரணத்தின் வாயில் கொண்டு வந்து தள்ளிவிட்டது!” என்று பாலாஜி அங்கலாய்த்தார். 

“அதைத்தான் நானும் பார்க்கிறேன். என் உயிர் போனாலும் சித்ரா மீதுள்ள ஒரு சிறு உரோமத்தை அகற்றவும் நான் அனுமதிக்க மாட்டேன். சித்ராவைக் கொல்லுவன் முன்னால் அந்த ராட்சஸி தேவதேவி என்னைக் கொலை செய்தாக வேண்டும். இப்படித்தான் அன்றொருநாள் விஜயகேசரியிடம் காம இச்சை கொண்டு அவனை அவள் மனைவியிடமிருந்து பிரிக்கச் சதி செய்தாள். இச்சதி பலிக்காமல் போகவே மனம் வரித்த காதலனையே கொடூரமாகக் கொலை செய்தாள். இப்பொழுது நடிக்கப் போவதும் அதே சோக நாடகம்தான் போலிருக்கிறது. சரித்திரம் திரும்புமென்ற பழமொழி உண்மையாகிறது. ஆகட்டும். நன்றாக அப்படியே நடக்கட்டும். ஆனால்…ஆனால் சித்ராவை உண்மையாகவே என் மனைவியாக்கிக் கொள்ளாமல் சற்று தூரத்தில் விலக்கி வைத்திருந்ததற்கு இப்பொழுது மனப்பூர்வமாக துக்கப்படுகிறேன். அவளை நிஜமாகவே என் மனைவியாக்கிக் கொண்டிருந்தது அவள் கருவுற்றிருந்தால் என் வம்சத்தின் நீண்ட சந்ததியில் என்றைக்காவது ஒரு நாள் ஒரு மகாவீரன் ஜனித்து இந்த மனித அரக்கியை அமரகிரி சிகரத்திலிருந்து உருட்டித் தள்ளிக் கொன்று பழி தீர்க்காமலிருக்க மாட்டான். விதிவசத்தினால் என்னுடைய 2500 வருடப் பழமை வாய்ந்த வம்சம் என்னோடு முடிந்து போகிறதே என்பதை நினைக்கும் பொழுதுதான் துக்கம் துக்கமாக வருகிறது…!” 

இப்படி வாய்க்கு வந்த வண்ணம் சப்தம் போட்டுக் கொண்டும் துக்கம் தெரிவித்துக் கொண்டும் நடந்தான் ஜோதிவர்மன். 

பாலாஜியும், ஜோதிவர்மனும் அவர்களுடைய அறைக்குத் திரும்பிய பொழுது அங்கு சாப்பாடு காத்திருந்தது. சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் பாலாஜி நயமாகப் பேசி ஜோதியைச் சாந்தப்படுத்த வெகுவாக முயற்சித்தார். 

தேவியின் பூர்வீக விருத்தாந்தங்களையும், விஜயகேசரியின் பிரேதத்தை வைத்துக் கொண்டு புதிய ஜன்மத்தில் விஜயகேசரி திரும்பி வருவானென்ற நம்பிக்கையுடன் தேவதேவி கடுமையான விரதம் அனுஷ்டித்து வருவதையும் உருக்கமாகச் சொன்னால் ஜோதியின் மனம் மாறக் கூடுமென்று பாலாஜிக்குத் தோன்றியது. ஆயினும் தேவியின் உத்தரவை மீறி அவளுடைய விருத்தாந்தங்களை வெளியிட பாலாஜிக்குத் தைரியமில்லை. அதே சமயம் தேவியிடம் ஜோதிவர்மன் முரட்டுத்தனமாக நடந்து விபரீதம் நடந்து விடாமலிருக்க வேண்டுமேயென்றும் அவர் உள்ளூரப் பயந்து கொண்டிருந்தார். 

இவ்விதம் இருதலைக் கொள்ளி எறும்பைப்போல் தவித்த பாலாஜிக்குச் சில நிமிட நேரமாவது மலைக்கன்னியைத் தனிமையில் சந்தித்துப் பேச வேண்டும் போலிருந்தது. ஜோதியுடன் வாதாடுவதைக் காட்டிலும் தேவதேவியிடம் பேசி முன் கோபத்தில் பகுத்தறிவைப் பறி கொடுத்து விபரீதம் செய்து விடாதேயென்று எச்சரித்தால் நன்மை ஏற்படுமென்று அவர் நினைத்தார். 

சாப்பாடு முடிந்ததும் தேவியைப் பேட்டிகாண முடியுமா? என்பதைப் பார்த்துக் கொண்டு வருவதாகச் சொல்லிக் கொண்டு புறப்பட்ட பாலாஜி மலைக்கன்னியின் அறையை அடைந்த பொழுது அவள் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். பாலாஜி வந்ததைக்கூட அவள் கவனிக்கவில்லை. 

“எந்தக் கோட்டையைப் பிடிக்கத் திட்டம் போடுகிறாய் தேவி!” என்று பாலாஜி கேட்ட பொழுதுதான் அவள் தலையை நிமிர்ந்து பார்த்தாள். 

“கோட்டையைப் பிடிப்பதற்கு இல்லை அய்யா! காத்திருந்து கிடைத்த கனி கை நழுவிப்போய் விடாமலிருக்க வேண்டுமேயென்றுதான் கவலைப்படுகிறேன். என் பிரபுவிற்காக இருபத்தைந்து நூற்றாண்டுகள் வரையில் நான் காத்திருந்தது போதாதா? நீங்களே சொல்லுங்கள் அய்யா!” என்று தழு தழுத்த குரலில் கேட்டாள் தேவதேவி. 

“இதைப் பற்றிப் பேசவே நானும் வந்தேன் தேவி! சித்ராவைத் திரஸ்கரிப்பதில்லையென்று ஜோதிவர்மன் ஒரே பிடிவாதமாயிருக்கிறான். உன்னுடைய பூர்வோத்திரமும் மன உறுதியும் கடும் விரதமும் தெரிந்தால் அவன் மனம் மாறிவிடுமென்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆகையால் ஆத்திரத்தில் அறிவைப் பறி கொடுத்து விடாமல் பொறுமையோடு காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டுமென்று சொல்லவே நான் வந்தேன். என்னால் இயன்றவரை உனக்கு உதவி புரிவேனென்பதை நீ உறுதியாக நம்பலாம். ஜோதியிடம் நீ வைத்திருக்கும் அன்பின் ஆழம் அவனுக்குத் தெரியா விட்டாலும் எனக்குத் தெரியும்” என்றார் பாலாஜி. 

“அப்படியானால் என் வரலாற்றை நீங்களே ஓரளவு விஜயகேசரிக்குச் சொல்லுங்கள். அதைக் கேட்ட பிறகாவது அவர் பிடிவாதம் தளருகிறதா என்று பார்க்கலாம். முதல் முறையாக அவரை நான் சந்தித்த காலத்தில் எனக்கு மனோவசியம் தெரியாது. இப்பொழுது விரும்பினால் மனோவசியத்தின் மூலம் விஜயகேசரியை நான் வசப்படுத்திக் கொள்ள முடியும். என் சக்திகளில் எதையும் உபயோகியாமல் இதயபூர்வமாகவும் நிர்ப்பந்தமில்லாமலும் அவர் என்னை அங்கீகரிக்க வேண்டுமென்பது தான் என் அவா. கட்டாயத்தின் பேரிலும் விலை கொடுத்து வாங்கும் இன்பம் நிலையான இன்பமாக மாட்டாது. ஒரு நாழிகை நேரம் கழித்து உங்களை மறுபடி அழைக்கிறேன். அதற்குள் விஜயகேசரியைச் சாந்தப்படுத்த முயற்சியுங்கள்”என்று மலைக்கன்னி பாலாஜிடம் சொல்லியனுப்பினாள். 

பாலாஜி திரும்பி வந்ததும் “சித்ரா எங்கே இருக்கிறாள் பெரியப்பா? அவளைப் பார்த்தீர்களா?” என்று விசாரித்தான் ஜோதி. 

“சித்ரா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள் போலிருக்கிறது. இன்னும் ஒரு நாழிகை நேரம் கழித்து அவள் தேவியின் முன்பு அழைத்து வரப்படும் பொழுது நம்மையும் அழைப்பதாக தேவி சொல்லியிருக்கிறாள்” என்றார் பாலாஜி. பிறகு “ஜோதி! இன்று காலை பிரேதச்சாலைகளை யெல்லாம் மலைக்கன்னி நமக்குக் காட்டினாளல்லவா?” என்றான். 

“ஆமாம்! அதற்கு என்ன?” என்றான் ஜோதி. 

“தன்னுடைய வாழ்க்கை ரகசியம் அடங்கியிருக்கும் ஒரே ஒரு இடத்தை மட்டும் நமக்கு அவள் காட்டவில்லை. தற்செயலாக அதை நான் திருட்டுத்தனமாய்ப் பார்க்க நேரிட்டது. சந்திரிகாவின் கணவன் விஜயகேசரியை மலைக்கன்னி கொலை செய்ததாக ஏட்டுச் சுவடிகளில் விஜயகேசரியின் பிரேதத்தை 2500 ஆண்டுகளாகத் தேவதேவி பாதுகாத்து வைத்து பூஜை செய்கிறாள். அம்மட்டல்ல, எவ்வளவோ ஆடம்பரமாக வாழ்க்கை நடத்த வசதிகள் இருந்தும் அவற்றைத் துறந்து இரவு தோறும் இந்தப் பிரேதத்தின் அருகில் ஒரு கருங்கல் மேடையின் மீது அவள் படுத்து உறங்குகிறாள். இதை நான் நேரிலேயே பார்த்தேன் ஜோதி!” என்றார் பாலாஜி. 

“இந்த தேவதேவி விஜயகேசரியைப் படுகொலை செய்த அதே ராட்சசி தானென்பதை உறுதியாக நம்புகிறீர்களா பெரியப்பா?” என்றான் ஜோதி. 

“நீ சொல்லியதில் ஒன்று உண்மை. இன்னொன்று தவறு. சந்திரிகா குறிப்பிட்ட தேவதேவிதான், இந்த தேவதேவி என்பதில் சந்தேகத்துக்கு இடமேயில்லை. இதை உறுதியாக நான் தெரிந்து கொண்டிருக்கிறேன். அவள் ராட்சசியென்றாயே அது மட்டும் சுத்தத் தவறு. தேவியை அவ்வளவு கொடூரமாக வர்ணிப்பது பாபமும்கூட, இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இறந்தவனிடம் கொண்ட பிரேமையில் கொஞ்சமும் தளராமல் மன உறுதியுடனும் கடும் விரதத்துடனும் இருக்கும் ஒரு பெண்ணைச் சரித்திரம் இதற்கு முன் சந்தித்ததேயில்லை. தேவியின் தன்மையை நீயே நேரில் அறியும் பொழுது ஆச்சரியப்பட்டுப் போவாய்!” என்றான் பாலாஜி. 

அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கையில், தேவதேவியின் அழைப்பு அவர்களுக்கு வந்தது. என்ன நடக்கப் போகிறதோ என்ற கவலையுடனும் பீதியுடனும் பாலாஜி செல்ல அவரைப் பின்தொடர்ந்து ஜோதியும் அவர் பின்னால் சென்றான். 

அவர்கள் தேவியின் அறையில் பிரவேசித்த பொழுது மலைக்கன்னி திரிசூலத்துடன் கட்டிலில் அமர்ந்திருந்தாள். 

கதவின் ஓரமாகக் கூர்மையான ஈட்டிகளுடன் இரண்டு முரட்டு வீரர்கள் சிலை போல நின்று கொண்டிருந்தார்கள். ஒரு மூலையில் சித்ரா அழுது அழுது வீங்கிய முகத்துடன் மண்டியிட்டு உட்கார்ந்திருந்தாள். 

ஜோதியைக் கண்டவுடன் மலைக்கன்னி ஈட்டி வீரர்களைப் பார்த்து “நீங்கள் வெளியிலிருங்கள். அழைக்கும் போது உள்ளே வரலாம்!” என்று உத்தரவிட்டாள். ஈட்டி வீரர்கள் போன பிறகு “சித்ரா எழுந்திருந்து இப்படி என் முன்னால் வா! உன் ராணியின் சுபாவம் உனக்குத் தெரியுமல்லவா? நான் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்ல வேண்டும். ஏய்க்கப் பார்த்தால் உயிர் பிழைக்க மாட்டாய்!” என்று எச்சரித்து விட்டு திரிசூலத்துடன் கட்டிலை விட்டு எழுந்து கம்பீரமாக நின்றாள் மலைக்கன்னி. 

சித்ரா பயபக்தியுடன் எழுந்து கரம் குவித்து நின்றவுடன் “அமரகிரியில் நீ தலைகாட்டக் கூடாதென்று நான் உத்தரவு பிறப்பித்திருந்தும் மறுபடி இங்கே வர உனக்கு எவ்வளவு துணிச்சல்? என் விருந்துக்கு உன்னை யார் அழைத்தது? எவருடைய அனுமதியின் மீது நீ இன்றிரவு நடனவிருந்துக்கு வந்தாய்?” என்று கேட்டாள் தேவதேவி. 

“தேவி! அந்தக் கேள்விக்கு சித்ரா பதில் சொல்ல வேண்டாம். அவளுக்குப் பதிலாக நான் பதில் சொல்லுகிறேன். சித்ரா என் மனைவி. உங்கள் நாட்டு சம்பிரதாயப்படி அவள் என்னை மணந்தவள். கற்பை மதிக்கும் பெண்களுக்குக் கணவன் இருக்குமிடமே சொர்க்கம். ஆகையால் நான் இருக்கும் இடத்தைத் தேடி அவள் வந்ததில் என்ன குற்றம்? என்னோடு அரண்மனைக்கு வந்த சித்ராவை நீங்கள் பயமுறுத்தி விரட்டியடித்திருக்கிறீர்கள் என்பது இப்பொழுதுதான் தெரிகிறது. நான் பிரக்ஞை தெளிந்து எழுந்தவுடன் சித்ரா எங்கேயென்று கேட்டதற்கு நீங்கள் தயக்கத்துடன் பதில் சொல்லியதன் அர்த்தம் இப்பொழுதுதான் எனக்குப் புரிகிறது. என்ன நோக்கத்துடன் சித்ராவை என்னிடமிருந்து நீங்கள் பிரிக்க முயற்சிக்கிறீர்களென்பது எனக்குத் தெரியாது. அதைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. ஆனால், ஒன்று மட்டும் சொல்லுகிறேன். சித்ரா என் மனைவி. நாங்கள் ஒருவரையொருவர் பரஸ்பரம் உள்ளன்போடு நேசிக்கிறோம். வாழ்விலும் சாவிலும் இனி எங்களை யாரும் பிரிக்க முடியாது. அவள் மீது யாராவது கை வைத்தால் லேசில் விடமாட்டேன். என் சித்ராவைக் காப்பாற்றும் முயற்சியில் என் உயிர் போனாலும் சரி கவலையில்லை. மனிதன் ஒரு தடவைதான் சாகிறான். வாழ்வில் ஒரே ஒரு முறை வரும் சாவு வீரச்சாவாகவும், தியாகச் சாவாகவும் இருந்தால் அதில் என் ஆத்மா சாந்தியடைந்து விடும். உங்களி டம் அமானுஷ்யமான சக்திகளிருப்பதைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் செய்த ஒரு அநியாயமான படுகொலை இன்று கிட்டத்தட்ட சரித்திர வரலாறு ஆகிவிட்டது. அன்று சந்திரிகாவின் கணவன் விஜயகேசரியை மட்டும் கொன்றீர்கள். இன்று அதே வம்சவழியில் வந்த என்னையும் என் மனைவி சித்ராவையும் கொன்று உங்களுடைய வெறியைத் தணித்துக் கொள்ளுங்கள். உலக சரித்திரத்தில் உங்களைப் போலொத்த இரத்தவெறி பிடித்த ராட்சஸி வேறு யாருமில்லை என்ற பெயர் நிலைத்துப் போக வேண்டுமென்று விரும்பினால் உங்கள் கையில் இருக்கும் திரிசூலம் எங்க இருவருடைய உயிர்களையும் ஏககாலத்தில் போக்கட்டும்!” என்றான் ஜோதிவர்மன். 

உணர்ச்சி வேகத்தில் ஜோதிவர்மன் இப்படி மளமள வென்று பேசிய பொழுது மலைக்கன்னி குறுக்கிடாமல் அவனையும் சித்ராவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நின்றாள். 

பிறகு மிக மிக அமைதியுடன் சித்ராவின் பக்கம் திரும்பி, “சித்ரா! ஜோதி சொல்லியதைக் கேட்டாயா? விஜயகேசரியின் வம்சத்தில் வந்த ஜோதி எனக்கு உரியவர். அவரை நீ நேற்றுக் காதலித்தாய்! நானே இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக அவர் நினைவாகவே காத்திருக்கிறேன். உன் காதல் பெரிதா? அல்லது காலத்தினால் கரையாத உறுதியான என் காதல் பெரிதா? அவரிடம் யாருக்கு உரிமை அதிகம்? நீயே சொல்? பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், உலக சரித்திரத்தை எழுத ஆரம்பித்த காலத்துக்கு முன்னால் கொண்ட காதலில் உறுதியுடனும் வைராக்கியத்துடனுமிருந்து, அந்தக் காதல் நிறைவேறக் கடுமையான விரதங்களை அனுஷ்டித்துக் கடைசியில் என் ஆசை பூர்த்தியடையவிருக்கும் தருணத்தில் அதை நிராசையாக்க நீ முயற்சிப்பது தர்மமா? சொல்லு சித்ரா! இந்நாட்டின் ராணியென்ற முறையில் உன்னிடம் நான் அதிகாரம் செய்து கேட்கவில்லை. உன்னைப் போன்ற ஒரு பெண் என்ற முறையிலேயே கேட்கிறேன். நேற்றுக் காதலித்த ஒருவரை விட்டுப் பிரிய உனக்கு மனமில்லை; அவரை அடைவதற்காக உயிரையும் பணயம் வைத்து என் உத்தரவையும் மீறும் துணிச்சல் உனக்கு ஏற்பட்டிருக்கிறது. அப்படியானால் 2500 ஆண்டுகளாகக் காத்திருக்கும் என் உணர்ச்சி வேகம் எப்படி இருக்க வேண்டும்?” என்றாள் தேவி. 

சித்ரா இதற்குப் பதில் சொல்லவில்லை. மனக்குழப்பத்துடன் அவள் மௌனமாக தலைகுனிந்து நிற்கையில், “கதை! கட்டுக்கதை! விஜயகேசரியைக் காதலித்து அந்தக் காமவெறியில் அவனைப் படுகொலை செய்த அதே தேவதேவிதான் நீங்களென்பது உலகத்தை ஏமாற்றும் மாபெரும் செப்படி வித்தை! பகுத்தறிவுக்குப் பொருத்த மில்லாத இந்தக் கட்டுக் கதையை நாங்கள் நம்பத் தயாராயில்லை!” என்று கத்தினான் ஜோதி. 

“அந்தக் கட்டுக் கதையை உண்மை வரலாற்றைப் போல எடுத்துக் காட்டியது நான் அல்லவே! நீங்கள் தானே அதை ஆரம்பித்தீர்கள்!” என்றாள் தேவதேவி. பிறகு மீண்டும் சித்ராவைப் பார்த்து “சித்ரா! விஜயகேசரி என் கணவர். கணக்கற்ற பிறவிகளெடுத்து காலத்தைக் கடந்து என்னிடம் திரும்பி வந்த என் கணவரை அநியாயமாக நீ பறித்துக் கொள்ளாதே. என் வரலாறு உனக்குத் தெரியாது. தெரிந்தால் உண்மையில் என்னிடம் நீ அனுதாபப்படுவாய். 2500 ஆண்டுகளுக்கு முன்னால் விஜயகேசரி இந்நாட்டுக்கு வந்து என் இதயத்தில் இடம் பெற்றார். அப்பொழுது உன்னைப் போலத்தான் ஒரு பிடிவாதக்காரி என் பதியை என்னிடம் ஒப்படைக்க மறுத்து எனக்கும் அவருக்கும் குறுக்கே நின்றாள். அவளிடம் கொண்ட கோபத்தில் பகுத்தறிவை இழந்து என் பதியை என் பாபக் கரங்களினாலேயே கொன்றுவிட்டேன். புனர்ஜென்மமெடுத்து அவர் என்னிடம் எப்படியும் திரும்பி வருவாரென்று முக்காலமும் உணர்ந்து ஒரு சித்தரின் வாக்குக்காக இவ்வளவு நூற்றாண்டுகளும் நான் காத்திருந்தேன். ஆனால், என் வினைப்பயன் மறுபடி உன் உருவத்தில் வந்து சதி செய்கிறது சித்ரா! என் விஜயகேசரிக்காக நான் எதையும் தியாகம் செய்யச் சித்தமாய் இருக்கிறேன். இந்த ராஜ்யத்தை நீயே எடுத்துக் கொள். எனக்குத் தெரிந்த சகல சக்திகளையும் உனக்குச் சொல்லிக் கொடுத்து விட்டு என் பதியுடன் இந்த நாட்டைவிட்டே நான் போய்விடுகிறேன். சகல போக பாக்கியங்களுடன் நீ இந்நாட்டின் மகாராணியாக வாழலாம். என்னைப் போல நீயும் சாகாவரம் பெற்ற அமர கன்னியாக வாழலாம். மறுபடி இந்த நாட்டின் பக்கம் நான் தலைகாட்டினால் என் தலையைச் சீவியெறிந்து விடு. உன்னைக் கேட்பதல்லாம் என் பதியை என்னிடம் திரும்ப ஒப்படைத்து விடு என்ற ஒரே கோரிக்கைதான், உன் நாட்டு மகாராணி உன்னிடம் யாசகம் கேட்கிறாள். அவளுக்கு உன் பதில் என்ன சித்ரா?” என்று மிக மிக நிதானமாகவும் உருக்கமாகவும் மன்றாடிக் கேட்டாள் தேவதேவி. 

அவள் இப்படிப்பேசி முடிந்தவுடன் சோவென்று மழை கொட்டிவிட்டு ஓய்ந்ததைப் போலிருந்தது.

– தொடரும்…

– ஜீவஜோதி, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1980, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *