ஜீவஜோதி






(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6
“ஜோதிவர்மன் எழுந்திருந்தவுடன் சித்ரா எங்கே என்றுதான் கேட்பான். ஆகையால் நீங்கள் சற்று மறைந் திருப்பது நல்லது தேவி!” என்று பாலாஜி தேவதேவியிடம் சொன்னான்.

அந்த யோசனை தேவிக்கும் நல்லதென்றே பட்டது. ஜோதியின் தலைமாட்டுப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு கட்டிலின் மீது ஒரு கையை ஊன்றியவண்ணம் இமைகொட் டாமல் அவனை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் நன்றாக அயர்ந்து தூங் கியவன் உடம்பை முறித்து சோம்பல் கழித்துக்கொண்டு கண் விழிப்பதைப்போல ஜோதிவர்மன் இரண்டு மூன்று தடவை கட்டிலில் புரண்டுவிட்டு பளிச்சென்று கண்களை விழித்துப் பார்த்தான். ஆடம்பரமான அறையில் மிருதுவான ஹம்ஸதுவிகா மஞ்சத்தில் ஆனந்தமாகப்படுத்திருப்பது கனவா அல்லது நனவா என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டிருக்கவேண்டும்.
படுக்கையை விட்டு எழுந்திருக்காமலே அவன் லேசாக சிறிது புரண்டபொழுது தூய வெண்ணிற யானைத் தந்தத்தில் கடைந்தெடுத்த ஒரு அழகுப் பதுமையின் கரத்தைப் போல தேவதேவியின் கை மட்டும் கட்டிலில் ஊன்றிக் கொண்டிருப்பது ஜோதிக்குத் தெரிந்தது. ஆவலோடு அந்தக் கரத்தைப் பற்றிக்கொண்டு “சித்ரா! நாம் எப்பொழுது இங்கே வந்தோம்? எப்படி மலையை ஏறி இந்த அரண்மனைக்கு வந்தோம்?” என்று கேட்டான் ஜோதி.
தேவதேவி பதிலே சொல்லவில்லை. மௌனமாக அவள் உட்கார்ந்திருந்தாள். பெரியப்பா பாலாஜி பக்கத்திலிருப் பதனால்தான் சித்ரா வெட்கத்துடன் பேசாமடந்தையாகி யிருக்க வேண்டுமென்று ஜோதிவர்மன் நினைத்தான் போலிருக்கிறது. கட்டிலில் அவன் எழுந்து உட்கார்ந்ததும் ஆனந்தக் கண்ணீர் பெருக்கிக்கொண்டிருந்த பாலாஜியை அவன் பார்த்தான். பாலாஜி கண்களில் கண்ணீர்ததும்பி நிற்பதன் காரணம் அவனுக்குப் புரியவில்லை.
“என்ன பெரியப்பா! ஏன் அழுகிறீர்கள்? என்ன நடந்தது? என் சித்ராவுக்கு ஒன்றுமில்லையே!” என்று கேட்டுக் கொண்டே சித்ரா எங்கேயென்று பார்க்க ஜோதிவர்மன் அறையைச் சுற்றி ஒரு கண்ணோட்டம் விட்டான். இதற்குள் கட்டிலில் உட்கார்ந்திருந்த தேவதேவி கட்டில் கால்களி லொன்றைப் பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தாள்.
“ஏன் இப்படி மெளனம் சாதிக்கிறீர்கள் பெரியப்பா? இப்பொழுது நாம் எங்கேயிருக்கிறோம்? உக்கிரசேனரும், சித்ராவும் எங்கே? முக்காடிட்டுக் கொண்டிருக்கும் அந்தப் பெண் யார்?” என்று கேள்விகளை அடுக்கினான் ஜோதிவர்மன்.
பாலாஜி பதில் சொல்ல வாயெடுப்பதற்குள் ”சித்ரா வெளியே போயிருக்கிறாள். அவளுக்குப் பதிலாக வந்திருக்கும் பணிப்பெண் நான்!” என்று சொன்னாள் மலைக்கன்னி. வெள்ளி மணியோசையைப்போல மிகமிக இனிமையாயிருந்த அந்தக் குரலைக் கேட்டுவிட்டு ஜோதிவர்மன் ஒரு கணம் அவளை ஏறத்தாழப் பார்த்தான். பிறகு ”ஓ! பணிப் பெண்ணின் அலங்காரம்தானா இந்த முக்காடு? பேயோ பிசாசோ என்று பயந்தே போனேன்!” என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு பாலாஜியின் பக்கம் அவன் திரும்பிய பொழுது “அந்தப் பெண்ணைப் பார்த்து அப்படி நையாண்டியாகப் பேசாதே ஜோதி. அவள்தான் உனக்கு உயிர்கொடுத்த தெய்வம்!” என்றான்.
“எனக்கு உயிர்கொடுத்த தெய்வமா? யார்? அந்தப் பணிப்பெண்ணா எனக்கு உயிர்கொடுத்த தெய்வம்? ஏன் பெரியப்பா அவள் உயிர் கொடுக்கும்படி எனக்கு அப்படி என்ன வந்துவிட்டது?” என்று கேட்டுக் கொண்டே ஜோதிவர்மன் கட்டிலை விட்டு எழுந்திருக்க முயற்சித்தான். எழுந்து நின்றவன் தள்ளாடிக்கொண்டு கீழே விழுந்த தருணத்தில் அவனை லாகவமாகப் பிடித்துக் கட்டிலில் திரும்ப உட்கார வைத்த தேவதேவி “இன்னும் நீங்கள் பூரண குணமடைய வில்லை. நாளைக் காலை வரையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கக் கூடாது” என்றாள்.
ஜோதிவர்மன் ஒரு விஷமச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே “ஏது, மகாராணி தேவதேவி மாதிரியல்லவா இவள் உத்தரவு பறக்கிறது?” என்றான். பிறகு பாலாஜியைப் பார்த்து “எனக்கு என்ன உடம்புக்கு பெரியப்பா? ஏன் முழங்கால் இரண்டும் விண்விண் என்று வலிக்கிறது?” என்று கேட்டான்.
“உனக்கு என்ன உடம்புக்கு என்று நான் எதைச் சொல்லுவது ஜோதி? குகையிலிருந்து நாம் புறப்பட்ட பொழுதே உனக்குக் காய்ச்சலாயிருந்தது. அன்றிரவு முதல் மூச்சு இல்லாமல் படுத்த படுக்கையாகி விட்டாய். இன்று காலை உன் நிலைமை மிகவும் மோசமடைந்து விட்டது. இனி பிழைக்க மாட்டாயென்று அரண்மனை வைத்தியரும் கை விட்டுவிட்டார்…!”
“எந்த அரண்மனை வைத்தியர்?” என்று ஜோதிவர்மன் இடைமறித்துக் கேட்டான்.
“எந்த அரண்மனை வைத்தியர்? தேவதேவியின் அரண்மனை வைத்தியர் தான். நேற்று மாலை நாம் அரண்மனைக்கு வந்து சேர்ந்தோம். மரணத்துடன் உக்கிரமாகப் போராடிக் கொண்டிருந்த உன்னை தேவதேவி கருணை வைத்துக் காப்பாற்றினாள். அவள் நேரடியாக வந்து ஒளஷதம் கொடுத்திரா விட்டால் இப்பொழுது என் எதிரில் இப்படி உட்கார்ந்திருக்க மாட்டாய் ஜோதி!”
பாலாஜி இப்படிச் சொல்லுகையில் அவன் கண்களிலே மறுபடியும் கண்ணீர் நிறைந்துவிட்டது.
“என் உடல் நிலைமை அவ்வளவு மோசமாகவா இருந்தது? எனக்கு ஒன்றுமே தெரியவில்லையே பெரியப்பா. நன்றாகத் தூங்கி எழுந்த மாதிரித் தானே இருக்கிறது!” என்று ஜோதிவர்மன் சொல்லவும், “அதுதான் தேவதேவி கொடுத்த ஆச்சரியமான ஒளஷதத்தின் விசேஷம். மரணத்தின் வாயிலிருந்து உன்னைத் தேவதேவி திருப்பியழைத்து வந்திருக்கிறாள். உடல் சில்லிட்டு நாடி விழுந்துபோன பிறகு தேவதேவியினால் கூட உன்னைக் காப்பாற்ற முடியுமென்று நான் நினைக்கவில்லை. அமானுஷ்யமான அவளுடைய சக்தியும் ஒளஷத்தின் அதிசயத் தன்மையும் சில மணி நேரத்துக்குள் சாகக் கிடந்தவனை எழுந்து உட்கார வைத்து விட்டது” என்றான் பாலாஜி.
”அப்படியா? இது கிடக்கட்டும் பெரியப்பா! சித்ரா எங்கே போனாள்? என்னை விட்டுவிட்டு ஏன் போனாள்? தனக்குப்பதில் இன்னொரு பெண்ணை வைத்துவிட்டு அவள் போக மாட்டாளே!” என்று குடைந்து குடைந்து விசாரித்தான் ஜோதி.
“தயவு செய்து உடம்பை அலட்டிக் கொள்ளாதீர்கள் அய்யா! உங்களுக்கு வந்த கொடிய விஷ ஜுரம் திரும்பிக் கொண்டால் மறுமுறை தேவதேவியினால் கூட உங்களைக் குணப்படுத்த முடியாது” என்று சொல்லிவிட்டு இரண்டு கைகளையும் சேர்த்து மூன்று தடவை ஏதோ சமிக்ஞை கொடுக்கும் பாவனையில் தேவதேவி தட்டினாள். அவள் கை தட்டுவதின் பொருள் விளங்காமல் அவளையும் அதிகாரத் தோரணையில் அவளைப் பேச அனுமதித்துவிட்டுச் சும்மாயிருக்கும் பாலாஜியையும் மாறிமாறிப் பார்த்தான் ஜோதிவர்மன்.
ஒரு பணிப்பெண் ஸ்வர்ணத்தட்டில் இரண்டு வெள்ளிக் கிண்ணங்களை வைத்துக் கொண்டு வந்தாள். கட்டிலின் பக்கத்திலிருந்த சிறு கருங்காலி மரமேஜையின் மீது அதைப் பணிப்பெண் வைத்து விட்டுப் போன பின் கஞ்சியிருந்த ஒரு கிண்ணத்தை யெடுத்து ஜோதியின் கையில் கொடுத்து “இதைக் குடியுங்கள். இரண்டு தினங்களாக அன்ன ஆகாரமில்லாமல் சோர்ந்து போயிருக்கிறீர்கள்!” என்றாள் தேவதேவி.
ஜோதிவர்மன் கஞ்சியைக் கையில் வாங்கிக்கொண்டு “தேவதேவிக்குத் திடீரென்று என்னிடம் இவ்வளவு கரிசனை எப்படிவந்தது பெரியப்பா? காட்டுமிராண்டி ஜனங்களின் ராணியும் பெரிய காட்டுமிராண்டியா யிருப்பாளென்று அல்லவா நினைத்தேன்! நம்மைப் போல அவளுக்கும் கொஞ்சம் நாகரிகம் தெரிந்திருக்கிறதே” என்று சொல்லிக் கொண்டே கஞ்சியைக் குடித்தான்.
தேவியின் முன்னிலையில் சொல்லவும் மெல்லவும் முடியாமல் பாலாஜி விழித்த விழி பெரிய கண்றாவி யாயிருந்த தென்றே கூறவேண்டும்.
“எங்கள் மகாராணி உங்களைப் போன்ற அளவுக்கு நாகரிகமில்லா விட்டாலும் அகதிகளை அலட்சியம் செய்யும் அளவிற்குப் பண்பு கெட்டவள் இல்லை அய்யா! மகாராணியை நீங்கள் நேரில் சந்திக்கும் பொழுது அவளுடைய இங்கிதமான சுபாவத்தை நீங்களே தெரிந்து கொள்ளுவீர்கள்!” என்றாள் தேவதேவி.
“பலேபலே! பணிப்பெண்ணென்றால் இப்படியல்லவா எஜமான் விசுவாசத்துடனிருக்க வேண்டும்! ஆமாம், நான் ஒன்று கேட்டால் சரியாகப் பதில் சொல்லுவாயா?” என்று வினாவினான் ஜோதிவர்மன்.
“கேளுங்கள் என்ன வேண்டுமானாலும் கேளுங்கள். தெரிந்தவரையில் சொல்லுகிறேன்” என்றாள் தேவதேவி.
“இப்பொழுது கஞ்சி கொண்டு வந்தாளே அந்தப் பெண் மாத்திரம் முகத்திரையிட்டுக் கொள்ளாமலிருக்கும் பொழுது நீ மட்டும் ஏன் அழகான தேகத்தைத் திரையிட்டு மூடிக்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான் ஜோதி.
“அதுவா…ஊம்… அதுவா அவள் வேறு ஜாதி. நான் வேறு ஜாதி! இது எங்கள் ஜாதி வழக்கம்!” என்று மழுப்பினாள் தேவதேவி. இதைச் சொல்லுகையில் அவள் பாலாஜியை அர்த்த புஷ்டியுடன் பார்த்துக் கொண்டே சொல்லவும் “ஆமாம் ஜோதி! இந்த அரண்மனை வழக்கமே அலாதி. இதை நாம் புரிந்துகொள்ள மாதக் கணக்கிலாகும்!” என்றான் பாலாஜி.
“ஓ! உங்கள் ஜாதி வேற்றுமைகளெல்லாம் உடையில் தான் தங்கியிருக்கிறதென்று சொல்லு!” என்று ஜோதிவர்மன் சொல்லிவிட்டு ஏளனமாகச் சிரித்தான். அவன் செய்யும் கிண்டலையும் கேலியையும் தேவதேவி மௌனமாகப் பொறுத்துக் கொண்டிருந்தது பாலாஜிக்கு ஆச்சரிய மாயிருந்தது.
பிறகு திராட்சைரசம் நிறைந்த இரண்டாவது கிண்ணத்தை தேவதேவி ஜோதியிடம் எடுத்துக்கொடுத்துக் குடிக்கச் சொல்லவே “இது பழரசம் மாதிரியல்லவா இருக்கிறது? படுகிடையாகக் கிடந்தவன் பழரசம் குடிக்கலாமா?” என்று அவன் கேட்டான்.
“தெரியாமல் மகாராணி கொடுத்தனுப்பமாட்டாள். தயவுசெய்து சாப்பிடுங்கள்” என்றாள் தேவதேவி.
”ராணி சொல்லிவிட்டால் அதற்கு மறுபேச்சு ஏது?” என்று சொல்லிக்கொண்டே பழரசத்தைக் குடித்துவிட்டு ஜோதிவர்மன் கட்டிலில் படுத்துக்கொண்டான். சிறிது நேரத்துக்கெல்லாம் அவன் மறுபடி தூங்கிவிட்டான்.
“உங்களிடம் கொஞ்சம் பேசவேண்டும் வாருங்கள்” என்று சொல்லி பாலாஜியை அழைத்துக் கொண்டு தேவதேவி தன்னுடைய அறைக்குத் திரும்பினாள். அறையை அடைந்ததும் “என்னைப் பற்றி உங்கள் நண்பர் எவ்வளவு மோசமான அபிப்பிராயம் வைத்திருக்கிறார் பார்த்தீர்களா? நான் பெரிய காட்டுமிராண்டியா யிருப்பேனென்று அவர் எதிர்பார்த்தாராமே!” என்று துக்கத்துடன் சொன்னாள் தேவதேவி.
“செம்பவளத்தீவுக்கு வந்ததும் நாங்கள் முதலில் பார்த்தது நாகரிக வாசனையை அறியாத காட்டுமிராண்டி ஜனங்களைத்தான் அம்மா! அவர்களை வைத்துக் கொண்டு அவர்களுடைய ராணியும் அப்படித்தானிருப்பா ளென்று ஜோதி தீர்மானித்துக் கொண்டிருக்கிறான். மகாராணி தேவதேவி எவ்வளவு பெரிய பண்டிதை என்பதையும் பேரழகி என்பதையும் அறியும் பொழுது அவன் மலைத்துப் போவான்” என்றான் பாலாஜி.
“ஐயா! உங்களை உண்மையாகத்தான் கேட்கிறேன். தயவு செய்து முகஸ்துதிக்காக ஒன்றும் சொல்லாதீர்கள். வயதில் நான் கிழவிதான். என்னை விட வயதான கிழவி இந்த உலகத்தில் எந்தக் காலத்திலுமே எவருமே இருந்திருக்க முடியாது. ஆயினும் என் வயதின் கோலம் முகத்தில் தெரிகிறதா? வயதில் கிழவியாயினும் தோற்றத்தில் குமரியாயில்லையா? சித்ராவைவிட நான் மோசமாகவா இருக்கிறேன்?” என்றாள் தேவதேவி அங்கலாய்ப்புடன்.
இப்படிக் கேட்டபொழுது அவள் குரலில் ஒரு கனிவும், ஏமாற்றமும், பரிதவிப்பும் ஏககாலத்தில் தொனிப்பதைப் போலிருந்தது. சித்ராவிடம் கொண்ட மயக்கத்தில் என்னை ஜோதிவர்மன் நிராகரித்து விடுவானா? சந்திரிகாவிடம் கொண்ட பிரேமையினால் விஜயகேசரி என்னை உதாசீனம் செய்ததைப் போல ஜோதிவர்மனும் உதாசீனம் செய்து விடுவானா? பழைய நாடகம் தான் திரும்ப நடிக்கப்படப் போகிறதா? அல்லது என் வாழ்வு மலரப்போகிறதா? என்று பரிதாபமான தொனியில் தேவதேவி கேட்காமல் கேட்பதைப் போலிருந்தது. தேவதேவியின் கேள்வியும், அந்தக் கேள்வியைக் கேட்ட மாதிரியும் அவளிடம் பாலாஜிக்கு இரக்கத்தையும், பட்சாதாபத்தையும் உண்டு பண்ணிய தென்றே கூறவேண்டும்.
“கிழவியா? யார் கிழவி? நீங்களா கிழவி? உங்களுக்கு யார் அப்படிச் சொல்வியது அம்மா? வயதில் கிழவியென்று சொல்லிவிட்டாய். அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. சாதாரணமாகவே பெண்களின் வயதை யாரும் மதிப்பிட்டுச் சொல்ல முடியாதென்பார்கள். உங்கள் யௌவன செளந்தர்யத்துக்கு இந்த வையகத்தில் ஈடு இணை ஏது?” என்றான் பாலாஜி தேவதேவிக்கு ஆறுதலாக.
“அப்படியிருந்தும் என்னைப் பார்த்தபிறகு கூட என் பிரபு ஏன் சித்ரா சித்ரா என்று ஜபிக்கிறார்?” என்றாள் தேவதேவி.
“அவன் இன்னும் சரியாக உங்களைத் தெரிந்து கொள்ளவில்லை தேவி. தவிர சித்ரா கூட இருந்து பணி விடை செய்தவளல்லவா? அவளிடம் ஜோதியின் மனம் ஓரளவு ஈடுபட்டிருப்பது இயற்கைதானே?”
பாலாஜி இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கையில் செம்பவளத்தீவின் சர்வவல்லமை பொருந்திய மகாராணி யான தேவதேவி பளிச்சென்று கீழே விழுந்து பாலாஜியின் இரு கால்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
“என் அதிகாரமும் அகந்தையும் அழித்து உங்கள் கால்களைப் பிடித்துக் கொண்டு கெஞ்சுகிறேன் அய்யா! எனக்கு நல்வாழ்வு கொடுப்பது உங்கள் கையில் தானிருக்கிறது. இருபத்தைந்து நூற்றாண்டுகளாக சுமக்க முடியாத துக்கத்தைச் சுமந்து கொண்டு ஏங்கி ஏங்கித் தவிக்கும் என் துன்பத்தைத் துடைக்கும் சக்தி உங்கள் ஒருவரிடம் தான் இருக்கிறது. அபயமளித்து ஆதரிக்க வேண்டுமென்று இந்நாட்டின் ராணி உங்கள் பாதங்களைப் பிடித்துக்கொண்டு மன்றாடுகிறாள். என்னைக் கைவிட்டு விடாதீர்கள் அய்யா!” என்று தேவதேவி துக்கம் தொண்டையை அடைக்க விக்கி விக்கி அழுது புலம்பினாள். அவளுடைய கண்ணீர் பாலாஜியின் பாதங்களில் உதிர்ந்தது.
முற்றிலும் எதிர்பாராதவிதமாக செம்பவளத்தீவின் மகாராணி தனது கால்களைப்பிடித்துக் கொண்டு கெஞ்சுவதைப் பார்த்து செயலற்று நின்றார் பாலாஜி.
“எழுந்திரு அம்மா! உங்கள் மனவேதனை எனக்குப் புரியாமலில்லை. நேற்று வந்த சித்ராவே ஜோதியை விட்டுப் போக உயிரைப் பணயம் வைத்து உங்களை எதிர்க்கத் தயாராயிருந்தால், பல ஆயிரம் ஆண்டுகளாக வைராக்கியத்துட னிருக்கும் நீங்கள் கைக்கு எட்டியது தவறிப் போய்விடுமோ என்று அஞ்சுவதில் ஆச்சரியமில்லை!” என்றார் பாலாஜி
“பேச்சளவில் நீங்கள் அனுதாபம் காட்டினால் மட்டும் போதாது அய்யா! என் பிரபுவை நான் அடைய மனதார உதவி புரிய வேண்டும். இந்தச் சிறு உதவியைச் செய்வேனென்று எனக்கு வாக்களித்தால் மட்டுமே நான் உங்கள் கால்களை விடுவேன்! இந்த ராஜ்யமும் ஐசுவரியங்களும் அதிகாரமும் ஒன்றுமே எனக்கு வேண்டாம். என் பிரபு விரும்பினால் அவ்வளவையும் சித்ராவுக்கு நஷ்ட ஈடாக நான் தியாகம் செய்து விடுகிறேன். அவர் கண்ணெதிரிலேயே சித்ராவை இந்நாட்டின் ராணியாகப் பட்டம் சூட்டி வைத்துவிடுகிறேன். எனக்குத் தெரிந்த ரகசிய சக்திகளையெல்லாம் அவளுக்கே தாரை வார்த்து விடுகிறேன். இவ்வளவுக்கும் ஈடாக என் பிரபு எனக்குக் கிடைத்தால் அது ஒன்றே போதும்! நீங்கள் மனது வைத்தால் எனக்கு நிச்சயம் உதவி புரியலாம். என் பிரபு தகப்பன் சொல்லை மீறி நடக்கும் பஞ்சாமியில்லை! அவர் மனதை மாற்றி என் வாழ்க்கை இலட்சியம் ஈடேற வகை செய்ய வேண்டும் அய்யா!” என்று மன்றாடினாள் தேவதேவி.
ஜோதியைக் கணவனாக அடைவதற்காக தேவதேவி செய்வதாகக் கூறிய தியாகம் பாலாஜியின் இதயத்தைத் தொட்டு கண்களிலே கண்ணீரைத் தருவித்தது. சொந்த மகளை ஆதரவுடன் தொட்டு அரவணைப்பதைப் போல தேவதேவியை அவர் இரண்டு கைகளினாலும் தூக்கி நிறுத்தி “தேவி! ஆச்சரியகரமான உன் வைராக்கியம் நிச்சயம் உனக்கு வெற்றியையளிக்கும். என் உதவி உனக்குப் பரிபூரணமாக இருக்குமென்பதை நீ உறுதியுடன் நம்பலாம். ஜோதியிடம் சித்ரா வைத்திருந்த பாசத்தைப் பார்த்த பொழுது அவளிடம் எனக்கு ஒரு பரிவு ஏற்பட்டிருந்தது உண்மைதான். ஆனால், உன்னுடைய வைராக்கியத்தையும், தியாகத்தையும் பார்க்கும்பொழுது இதற்கு உவமை கவிதைகளிலும், காவியங்களிலும் கூடக் கிடையாதம்மா! நீ எவ்வளவு சக்தி வாய்ந்தவ ளென்றாலும் எல்லோரையும் போல நீயும் ஒரு பெண்ணென்பதை உன்னையறியாமலே காட்டிக் கொள்கிறாய். உத்தமப் பெண்களிடம் இது மாதிரியான நெருக்கடியான தருணங்களிலே தங்களுடைய சக்தியும், செல்வாக்கும் மறைந்து பெண்மைக்குரிய பயமும், ஏக்கமும், கலவரமும் தோன்றுவது இயற்கைதான். காரியம் கைகூடிவரும் சமயத்தில் மனோதிடத்தையும், நம்பிக்கையையும் இழந்து விடாமல் உறுதியுடனிருந்தால் உன் ஜீவிய இலட்சியம் நிறைவேறாமல் போகாது. சமயம் வரும் பொழுது பக்குவமாக ஜோதியை நான் சரிப்படுத்துகிறேன்” என்றான் பாலாஜி.
முதன்முதலாக “நீங்கள் உங்கள்” என்ற மரியாதைப் பதங்களைவிட்டு ஒருமையில் தேவியைக் குறிப்பிட்டது அவருக்கு உள்ளூர நம்பிக்கையை அளித்தது போலிருந்தது. அவ்வளவே போதும்.
“உங்கள் அனுதாபம் என் பக்கத்திலிருக்குமானால் நான் வெற்றி பெறுவதில் எனக்குச் சந்தேகமே யில்லை. அவர் இன்றிரவு முழுவதும் நன்றாகத் தூங்குவார். காலையில்தான் கண் விழிப்பார். அப்பொழுது நான் வருகிறேன். தற்சமயத்துக்கு அவரிடம் என்னைப் பற்றியும், சித்ராவைப் பற்றியும் ஒன்றும் சொல்லாதீர்கள். என்ன கேட்டாலும் சரியான பதில் சொல்லாமல் ஒரு மாதிரி மழுப்பிவிடுங்கள். துக்கம் தோய்ந்த என் நீண்ட வரலாற்றைக் கேட்டால் நம்பாமலிருப்பதுடன் ஒரு சமயம் அவர் பயந்தும் போகலாம். சமயம் வரும்பொழுது நானே பக்குவமாகச் சொல்லுகிறேன்” என்று தேவதேவி சொல்லி பாலாஜியை அனுப்பிவைத்தாள்.
ஜோதிவர்மன் படுத்திருந்த அறைக்கு பாலாஜி வந்த பொழுது அறுசுவையுடன் அவருக்கு சாப்பாடு காத்திருந்தது. பாலாஜியைக் கண்டதும் மூலையில் ஒடுங்கி உட்கார்ந்திருந்த முனிசாமி எழுந்து வந்து “எசமான்! இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு ரொம்பப் பயமாயிருக்கிறது எசமான்! ராஜா வீட்டு அரண்மனை மாதிரியல்லவா இருக்கிறது இந்த இடம்?” என்றான் அகலவிழித்துக் கொண்டே.
“போடா முட்டாள்! அரண்மனை மாதிரியென்ன? இது அரண்மனையேதான்” என்ற பாலாஜி அறையில் இன்னொரு மூலையில் கட்டில்போட்டு மெத்தை விரித்திருப்பதைப் பார்த்துவிட்டு “அடேடே! இது எப்ப வந்தது?” என்றார்.
“நீங்கள் போனபிறகு இரண்டு பெண்கள் தூக்கிக் கொண்டு வந்து போட்டார்கள். அவர்கள் தான் சாப் பாடும் கொண்டு வந்து வைத்தார்கள். அடுத்த அறையில் எனக்குக்கூட கட்டில் மெத்தையெல்லாம் போட்டு வைத்து என்னை அழைத்துக் கொண்டு போய்க் காட்டினார்கள் எசமான்! ஆமாம் இவங்களெல்லாம் ஏன் ஒரு வார்த்தை கூடப் பேசமாட்டேனென்கிறார்கள்? இந்த அரண்மனையிலிருக்கும் பெண்களெல்லாம் ஊமைகளா எசமான்?” என்றான் முனிசாமி.
“யார் கண்டார்கள்? நிஜ ஊமையோ அல்லது காரிய ஊமையோ!” என்று சொல்லிவிட்டுச் சாப்பிட உட்கார்ந்தான் பாலாஜி. அடுத்த அறையில் தனக்குச் சாப்பாடு வைக்கப்பட்டிருப்பதாக முனிசாமி சொல்லிவிட்டுப் போனான்.
பாலாஜி சாப்பிட்டு விட்டுக் கட்டிலில் போய்ப் படுத்ததும் சுகமான வெல்வெட்டு மெத்தையும் சாளர வழியாக அடித்த குளுமையான மலைக்காற்றும் அவரை விரைவில் கண்ணயரச் செய்தன, என்றாலும் பாலாஜிக்கு நல்ல தூக்கமேயில்லை. பயங்கரமான கனவுகள் அவரை வெருட்டிக் கொண்டே இருந்தன. கண்ணீரும் கம்பலையுமாக சித்ரா அவரின் கனவில் தோன்றி உருக்கமாக வாதாடினாள். “பரிசுத்தமான என்னுடைய காதல் எங்கே, பில்லி சூனியக்காரியான தேவதேவியின் காதல் எங்கே? மலைக்கன்னி மந்திர தந்திரங்கள் தெரிந்த ஒரு பெரிய சூனியக் காரி! ஏதோ ஒரு காரணத்துக்காக அவள் ஜோதியை மயக்கப் பார்க்கிறாள். அவள் சொல்லுவது அவ்வளவும் பொய், பித்தலாட்டம், புனைசுருட்டு! அவளை நம்பவே நம்பாதீர்கள். ஜோதியிடம் நான் வைத்திருக்கும் அன்பு தெய்வீகமானது! என் கணவனை துர்க்கிரதமாக அபகரித்துக் கொள்ள முயற்சிக்கும் இந்த மலைப் பிசாசுக்கு நீங்கள் உடந்தையாயிருக்கப் போகிறீர்களா? வேண்டாம். என் பாபத்தைக் கொட்டிக் கொள்ளாதீர்கள்!” இப்படி உருக்கமாகவும் ஓவென்று அழுது கொண்டும் புலம்பி முறையிட்டாள் சித்ரா.
“என் காதல் எங்கே! நேற்று முளைத்த சித்ராவின் காதல் எங்கே? அவள் காதல் இன்று முளைத்தது. ஜோதி கட்டழகன் என்ற காரணத்தினால் பிறந்த மோகம், காதல் அல்ல அதன் பெயர்! என் காதல் அப்படியா? என்றோ எப்பொழுதோ நேசித்த ஒரு மனிதருக்காக எத்தனை ஆண்டுகளாக நான் தவமிருக்கிறேன்? செத்தவர் பிழைத்து வருவார். எவ்வளவு யுகாந்திரங்களானாலும் என்னைத் தேடிக் கொண்டு வருவார் என்று நம்பி பிணத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறேனே இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும். என் காதலின் தூய்மைக்கும் உறுதிக்கும் ஏன் அய்யா பாலாஜி! நான் தான் கேட்கிறேன். நீங்கள் சர்வ சாஸ்திர மகா பண்டிதனைப்போல தர்ம சாஸ்திரம் பேசுகிறீர்களே, ஒருவர் சொத்தை இன்னொருவர் அபகரிப்பது குற்றமில்லையா அய்யா! விஜயகேசரி என் சொத்து. இருபத்தையாயிரம் ஆண்டுகளாக என் இதயத்துக்குள் வைத்து நான் பூஜிக்கும் என் தெய்வம். அவரிடம் உரிமை பாராட்ட சித்ராவுக்கு ஏது பாத்தியதை? விஜயகேசரியை நான் மறுபடியும் இழந்தால் திரும்பவும் அவரை நான் சந்திக்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் இந்த உயிரைச் சுமந்து கொண்டிருக்க நேரிடுமோ தெரியுமா? மீண்டும் ஏமாற்றம் ஏற்பட்டால் அது என்னை அதி பயங்கரமான பயித்தியக்காரியாக்கிவிடும். அந்த வெறியில் என்ன செய்வேனென்பது எனக்கே தெரியாது. அதன் விளைவு இந்த உலகத்துக்கே சர்வ நாசமாக முடியலாம். சிம்மேந்திர பூபதி தயாரித்த சர்வநாச திராவகத்தைப் பற்றி நீர் கேள்விப்பட்டிருக்கிறீரா? அதைத் தயாரிக்க எனக்குத் தெரியும். அதைக் கொண்டு இந்த ஜகத்தையே நான் அழித்து நாசமாக்கி விடுவேன். அதற்கு முன்னால் உங்களை ஆம் என் வாழ்வைக் குலைப்பதற்கு நீங்கள் சதி செய்தால் உங்களை…குத்திப் பிளந்து பிய்த்து கடலில் வீசி விடுவேன்! தெரியுமா?” இப்படிச் சொல்லிக் கொண்டே தேவதேவி திரிசூலத்துடன் ஆவேசத்தோடு வருவதைப் போலிருந்தது.
“அய்யய்யோ! இல்லை தேவி! உனக்குச் சதி செய்யவில்லை தேவி!” என்று உளறியடித்துக் கொண்டு கட்டிலில் இருந்து கீழே விழுந்தார் பாலாஜி.
விழுந்தவருக்கு களுக்கென்று யாரோ பக்கத்தில் சிரிக்கும் சப்தம் கேட்டது. அவர் கண்களை விழித்துப் பார்த்த பொழுது அருகில் மயில் விசிறியுடன் தேவதேவி நிற்பது கனவல்ல காண்பது நனவுதான் என்று அறிவுறுத்தி எச்சரிப்பதைப் போலிருந்தது. சில மணி நேரத்துக்கு முன்னால் எந்த தேவதேவி அவன் காலைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டாளோ அவளுடைய கால்களை இறுகப் பற்றிக் கொண்டு “தேவி! என்னை ஒன்றும் செய்யாதே! உனக்கு நான் சதி செய்யவில்லை! தூய்மையான உன் காதலை நான் உணருகிறேன் கன்னி மாதா!” என்று கதறினான் பாலாஜி.
”உஸ்! இங்கே சப்தம் போட்டுப் பேசாதீர்கள்! என் பிரபு விழித்துக் கொண்டு விடுவார்! வெளியே வாருங்கள்!” என்று சொல்லிவிட்டு திரிசூலத்தை வழக்கமாக ஏந்தியிருக்கும் கையிலே மயில் விசிறியுடன் அவள் வெளியே சென்றாள். கதவின் அருகில் போய் நின்று திரும்பிப் பார்த்த தேவதேவி கலவரத்துடன் பாலாஜி தரையிலேயே கிடப்பதைக் கண்டதும் “உங்களைத் தான் கூப்பிடுகிறேன். எழுந்து வாருங்கள்! என் அறைக்கு வாருங்கள்” என்று சொல்லிவிட்டுப் போனாள்.
இதற்குள் கண்டது கனவுதான் என்பதை நிச்சயப் படுத்திக் கொண்டு தெளிவடைந்த பாலாஜி வெட்கத்துடன் தேவதேவியின் முன்னால் போய் நின்றான்.
“ஏன் இப்படி உளறியடித்துக் கொண்டு கட்டிலிலிருந்து விழுந்தீர்கள்? ஏதாவது பயங்கரமான கனவு கண்டீர்களா? சாப்பாடு பலம் போலிருக்கிறது. வயிற்றில் கடுமையான அஜீரணமிருந்தால் தான் மோசமான கனவுகள் வருமென்பார்கள்!” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் தேவதேவி. பாலாஜியின் உதவியினால் ஜோதிவர்மன் இனி தன்னுடையவன் தான் என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டிருந்த தேவியின் முகார விந்தத்தில் முன்பு எப்பொழுதும் பார்த்திராத ஒரு புதிய கவர்ச்சியும் சோபையும் சாந்தியும் தோன்றின.
பாலாஜி தன்னுடைய கனவை ஒளிக்காமல் மறைக்காமல் அப்படியே சொன்னான்!
“சித்ரா கனவில் கூடவா எனக்குச் சதிசெய்ய வரு கிறாள்? அவளை அப்பொழுதே தீர்த்துக் கட்டியிருக்க வேண்டும்! நச்சுப் பாம்பிடம் கருணை காட்டச் சொன்னீர்கள்! யார் கண்டார்கள்? அவள் என் பழைய வைரி சந்திரிகாவின் புனர்ஜென்மமோ என்னவோ!” என்றாள் தேவதேவி.
“ஜோதிவர்மனை விஜயகேசரியின் புனர் ஜன்மமென்று தெரிந்து கொண்ட உங்களின் ஞானக் கண்களுக்கு சித்ராவின் பூர்வோத்திரம் தெரியவில்லையா?” என்று கேட்டான் பாலாஜி.
“தெரிந்திருந்தால் சித்ராவை உயிரோடுவிட்டிருப் பேனென்று நினைக்கிறீர்களா? ஜோதியை பார்த்தவுடன் என் அந்தராத்மா எனக்குச் சொல்லிவிட்டது. எவர் ஒருவரை அகோரமாக நினைத்துக் கடும் விரதம் அனுஷ்டிக்கிறோமோ அவர் எப்பொழுது எந்த உருவத்தில் வந்த பொழுதிலும் அவரை அந்தராத்மா காட்டிக் கொடுத்து விடும். விஜயகேசரியிடம் கொண்ட அன்பை வளர்த்ததைப் போல சந்திரிகாவிடம் கொண்டிருந்த துவேஷத்தையும் நான் வளர்த்திருந்தால் இன்று சித்ராவையும் அடையாளம் கண்டு கொண்டிருப்பேன். விதியின் மீது பழியைப் போட்டு சந்திரிகாவை மறந்து விட்டது ஒரு விதத்தில் தவறாகி விட்டது!” என்று தேவதேவி சொன்னாள்.
“நிச்சயம் அது தவறில்லை தேவி! அன்பை வளர்த்த தால்தான் அதன் பலன் உங்களுக்கு நிச்சயப்படுகிறது. அந்த அன்போடு துவேஷமும் குரோதமும் கலந்திருந்தால் ஏமாற்றமே நீங்கள் காணும் பலனாயிருக்கும்” என்றார் பாலாஜி.
“உண்மை அய்யா! உங்களுக்கு மறுபடியும் இது மாதிரியான கெட்ட கனவுகள் ஏற்படாமலிருக்க ஒரு உறுதிமொழி அளிக்கிறேன். விதிப்பயனாக என் பிரபுவை நான் அடைய முடியாவிட்டாலும் அவர் வளர்ப்புத் தகப்பனான உங்களுக்கு என் மூலம் எவ்வித ஆபத்துமே ஏற்படாது. இது என் காதலின் மீது ஆணையாகச் சத்தியம். ஜோதி நன்றாகத் தூங்குகிறாரா என்று பார்ப்பதற்காகத் தற்செயலாக அந்த அறைக்கு வந்து சற்று நேரம் அவருக்கு விசிறிக் கொண்டிருந்தேன். திடீரென்று நீங்கள் அலறிக் கொண்டு விழுந்த கலவரத்தில் நல்ல வேளையாக அவர் எழுந்திருக்கவில்லை. இதோ பொழுது புலரும் நேரமாகி விட்டது. அவர் இனி எப்பொழுதும் விழித்துக் கொள்ளலாம். நீங்கள் போங்கள். பிறகு நான் வருகிறேன்!” என்று தேவதேவி சொல்லியனுப்பினாள்.
பாலாஜி திரும்பி வந்து கட்டிலில் படுத்து சோம்பல் முறித்துக் கொண்டிருக்கையில் ஜோதிவர்மன் “முனியா! டேய் முனியா!” என்று முனிசாமியைக் கூவியழைத்துக் கொண்டே ஒரு பெரிய கொட்டாவி விட்டுக் கொண்டு எழுந்தான். அவனுடைய குரலைக் கேட்டு முனியன் வருவதற்கும் பாலாஜி கட்டிலைவிட்டு எழுந்திருப்பதற்கும் முன்னதாக உதய சூரியனைப் போல விசேஷமான கவர்ச்சியுடன் தேவதேவி வாசற்படியில் தோன்றினாள்.
கண்களை விழித்தவுடன் எதிரே கதவினருகில் உதய சூரியனைப்போல மலர்ந்த முகத்துடன் தேவதேவி நிற்பதைக் கண்டு ஜோதிவர்மன் ஒரு கணம் திகைத்துப் போனான். ஏனெனில் ஜன்னல் வழியாக வந்த காலைக் கதிரவனின் மஞ்சள் வெயிலில் கடைந்தெடுத்த தந்தப் பதுமையைப்போல அவள் இன்முகம் காட்டி அனாயாசமாக நின்றநிலை அவ்வளவு கவர்ச்சிகரமாயிருந்தது.
முகத் திரையைக் கொண்டு முந்திய நாளிரவு பார்த்த அதே பணிப் பெண் தான் வந்திருக்க வேண்டுமென்று தீர்மானித்த ஜோதிவர்மன் “ஓ! நீதானா? யாரோ என்றல்லவா நினைத்து மலைத்துப் போனேன்!” என்று சொல்லிய வண்ணம் கட்டிலில் எழுந்து உட்கார்ந்தான்.
“ஏன்? யாரென்று நினைத்தீர்கள்? இந்தநாட்டு ராணியென்று நினைத்து ஏமாந்து போய்விட்டீர்கள் போல் இருக்கிறது?” என்று இளமுறுவலுடன் சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தாள் தேவி.
“மகாராணி வந்து பள்ளியெழுச்சிபாட நான் மகாராஜா இல்லையம்மா! நாங்களெல்லாம் சாதாரணப் பிரஜைகள்!” என்று சொல்லிவிட்டு பாலாஜியின் பக்கம் திரும்பிய ஜோதிவர்மன் “ஏன் பெரியப்பா! நீங்கள் ராணியைப் பார்த்தீர்களா? அவளும் இப்படித்தான் முகத்தை மூடிக்கொண்டிருப்பாளோ?” என்றான்.
”ஆமாம் ஜோதி! இவர்கள் முகத்தைத் திறந்து காட்டிக் கொண்டிருப்பதைவிட முகத்தை மூடிக் கொண்டிருந்தால் தான் உலகத்துக்கு க்ஷேமம்!” என்று பாலாஜி சொல்லிக் கொண்டிருக்கையில் தேவதேவிக்குத் தன்னுடைய முகத்தை ஒரே ஒரு கணம் பாலாஜி பார்த்துவிட்டுப் பட்டபாடு ஞாபகத்துக்கு வந்தது. தன்னையுமறியாமல் அவள் “களுக்” கென்று சிரித்துவிட்டாள்.
“ஏன் அம்மா சிரிக்கிறாய்?” என்று கேட்டான் ஜோதி.
“உங்கள் பெரியப்பாவையே கேளுங்கள்! பாவம்! தேவியின் முகத்தை அரைக்கண நேரம் பார்த்துவிட்டு அவர் பட்டபாடு எனக்கல்லவா தெரியும்!” என்றாள் தேவதேவி. இப்படிச் சொல்லுகையில் “பரவாயில்லை. பிள்ளை கேட்டதற்குப் பதில் சொல்லுங்கள்” என்று அனுமதிப்பதைப்போல அவள் பாலாஜிக்கு சமிக்ஞை கொடுத்தாள்.
“என்ன பெரியப்பா இவள் என்ன உளறுகிறாள்?” என்று கேட்டான் ஜோதிவர்மன்.
“உளறுகிறாளா? நான் பட்ட அவஸ்தை உண்மையில் எனக்குத்தான் தெரியும் ஜோதி! தன்னைப் பார்த்தால் கண் எரிந்துபோய் விடுமென்று தேவதேவி என்னை எச்சரித்தாள். அவள் கூற்று வெறும் பித்தலாட்டமென்று எண்ணினேன். கண்மூடிக் கண் திறக்கும் நேரம்தான் அவள் முகத்திரையை விலக்கிக் காட்டினாள். அந்த சொற்ப நேரம் பார்த்ததில் என் கண் பூத்துப்போய் அரைமணி நேரம் வரையில் ஒன்றுமே தெரியவில்லை. முட்டாள்தனமாகத் தேவியின் முகத்தைக் கொஞ்சம் கூர்மையாகப் பார்த்திருந்தால் உன் பெரியப்பா இப்பொழுது இரண்டு கண்களையும் இழந்த குருடனாகியிருப்பார்!” என்றான் பாலாஜி.
“ஆச்சரியமாயிருக்கிறதே! ஏன் அம்மா, உன் முகத்தைப் பார்த்தாலும் கண் குருடாகி விடுமோ!” என்று நையாண்டியாக தேவதேவியிடம் ஜோதிவர்மன் கேட்ட பொழுது பாலாஜி பரபரப்புடன் தேவியின் பக்கம் திரும்பி, “இந்த அசட்டுப்பிள்ளை ஏதோ சொல்லுகிறானேயென்று முகத்திரையை எடுத்துவிடாதே அம்மா! உனக்குப் புண்ணியமுண்டு!” என்றான்.
பாலாஜியின் பதட்டத்தைப் பார்த்து மறுபடியும் சிரித்த தேவதேவி “உங்கள் பிள்ளைக்குத் தகப்பன் பேச்சில் நம்பிக்கையில்லை யென்றால் பரீட்சித்துப் பார்க்கட்டும். எனக்கு ஆட்சேபனையில்லை. ஆனால், இந்த இளம் வயதில் அவர் கண்களை இழக்க வேண்டும் என்று நான் விரும்ப வில்லை!” என்றாள்.
“இதெல்லாம் வெறும் பித்தலாட்டம். உங்களைச் சரியாக தேவதேவி ஏமாற்றியிருக்கிறாள் பெரியப்பா! ஏய் பெண்ணே! என் கண்கள் போனால் பரவாயில்லை! ஆடு நனைகிறதேயென்று ஓநாய் ஒப்பாரி வைத்த மாதிரி நீ எனக்கு அனுதாபப்பட வேண்டாம்! உன் முகத்திரையை எடு பார்க்கலாம்!” என்று சொல்லிக் கொண்டு எழுந்தான் ஜோதி. அவன் எழுந்த வேகத்தில் தேவதேவியின் முகத்திரையை அவனே இழுத்து எறிந்து விடுவான் போல் இருந்தது.
“இளம்பிள்ளை பயமறியாது!'” என்று சொல்லிவிட்டு இரண்டடி பின்னால் நகர்ந்த தேவதேவி, “உங்கள் கண்களைப் பறிக்க எனக்கு அனுமதியில்லை. நீங்கள் மகாராணியின் விருந்தாளி, தேவதேவியின் விருந்தாளிகளில் ஒருவரை இம்சித்தவர்கள் என்ன கதியடைந்தார்கள் என்று உங்கள் பெரியப்பாவிடம் கேளுங்கள்!” என்றாள்.
”ஓ! வில்லியத்தைக் கொன்றவர்களையா சொல்லுகிறாள் பெரியப்பா! அவர்கள் என்ன ஆனார்கள்?” என்று விசாரித்தான் பாலாஜி.
“அந்த ஐவரையும் புலிக்குகைக்குள் தள்ளுமாறு தேவதேவி உத்தரவிட்டாள். இதற்குள் அவர்களைப் புலிகள் பிய்த்துத் தின்றிருக்கும்!” என்றான் பாலாஜி.
“அய்யோ, பாவம்!” என்று அவன் அங்கலாய்த்த பொழுது “அதே கதி எனக்கும் ஏற்பட வேண்டுமென்று ஆசைப்பட்டால் என் முகத்திரையை நீக்கச் சொல்லுங்கள்!” என்றாள் தேவதேவி.
“உங்கள் ராணி ஈவு இரக்கமில்லாத ராட்சஸியா?” என்று கேட்டான் ஜோதிவர்மன்.
“ராட்சஸியில்லை. ஆனால், நாட்டில் நல்லாட்சியும் ஒழுங்கும் கட்டுப்பாடும் நிலவுவதைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு உடையவள். இந்நாட்டுக்கு வந்த ஒரு அந்நியரை மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்தவர்களுக்கு அவள் சரியான தண்டனை கொடுத்தாள். அநியாயமாக ஐவரை அவள் கொன்று விட்டாளேயென்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அந்த ஐவர் கொல்லப்பட்டதின் மூலம் வருங்காலத்தில் இந்நாட்டுக்குப் பல காரணங்களை முன்னிட்டும் வரக்கூடிய எத்தனை பேர்களின் உயிர்களுக்குப் பாதுகாப்பு ஏற்படுமென்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள். நீதிபதிகள் சந்தோஷப்பட்டுக் கொண்டு மரண தண்டனை விதிப்பதில்லை. எவ்வளவோ மன வேதனையோடு தான் குற்றவாளிகளைத் தண்டிக்கிறார்கள், மனக் கசப்பான காரியமாயினும் நீதி நிர்வாகம் சரிவர நடக்காவிட்டால் ராஜ்யமேது, ராஜாங்கமேது? அராஜகம் தான் தலைவிரித்தாடும்!” என்றாள் தேவதேவி.
“சபாஷ்! ஒரு பணிப் பெண்ணே இப்படிச் சட்ட நுட்பங்களை அலசியெடுத்துப் பேசுவதென்றால் இவருடைய ராணி மகா கெட்டிக்காரியாக அல்லவா இருக்க வேண்டும்!” என்று ஜோதிவர்மன் சொல்லுகையில் “தேவதேவி மகா பெரிய பண்டிதை ஜோதி! வடமொழி இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவள். தர்க்கத்தில் நீ கூட அவளுடன் பேசி வெல்ல முடியாது!” என்றான் பாலாஜி. இதைக் கேட்டு தேவதேவி பெருமிதத்துடனும் நன்றியுடனும் ஒரு புன்முறுவல் செய்தாள்.
“அந்த மகா பண்டிதையை நான் பார்க்க வேண் டாமா? ஏனம்மா, உன் ராணியின் பேட்டி எனக்கு எப் பொழுது கிடைக்கும்?” என்றான் ஜோதி தேவதேவியைப் பார்த்து.
“நேற்றிரவு முழுவதும் மகாராணி உங்கள் அறையில் தானே இருந்தாள்” என்றாள் தேவதேவி.
“இந்த அறையிலா?” என்று ஜோதி கேட்கவும் “ஆமாம் ஜோதி! நீ மயக்கமாகத் தூங்கிக் கொண்டிருந்தாய்” என்றான் பாலாஜி.
“நான் மகாராணியிடம் போய்ச் சொல்லுகிறேன். நீங்கள் காலைச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு பேட்டிக்கு வரத் தயாராகுங்கள்” என்று சொல்லிவிட்டுத் தேவதேவி கிளம்புகையில், ”உன்னைத்தானே! இன்னும் ஒரே ஒரு விஷயம்! என்னுடன் ஒரு பெண் வந்தாளே அவள் எங்கே போனாள்?” என்று கேட்டான் ஜோதி.
“யார் சித்ராவா? மகாராணியைப் பார்க்கும்பொழுது அவளிடமே இதைக் கேளுங்கள்! நேற்றுக் காலை சித்ரா எங்கு போனாள் ஏன் போனாள் என்பது எனக்குத் தெரியாது. ஒரு சமயம் மகாராணிக்குத் தெரிந்திருக்கலாம்!” என்று சொல்லிவிட்டு அர்த்த புஷ்டியுடன் பாலாஜியைப் பார்த்து ஒரு விஷமச் சிரிப்புச் சிரித்துவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றாள் தேவதேவி.
“ஏன் பெரியப்பா! இந்த தேவதேவி சந்திரிகா குறிப்பிட்டிருக்கும் அதே ஆசாமிதானா? அல்லது சித்ரா சொல்லியதைப் போல அவளுடைய அமரத்துவம் பெரிய பித்தலாட்டமா?” என்று விசாரித்தான் ஜோதி.
”உஸ்! அதையெல்லாம் இப்பொழுது ஒன்றும் பேசாதே! தேவதேவி அடுத்த அறையில்தான் இருக்கிறாள். நாம் இங்கு பேசுவது கூட அவளுக்கு ஒரு சமயம் கேட்டாலும் கேட்கலாம். தேவதேவி மகாசக்தி வாய்ந்தவள் ஜோதி! மனித சிருஷ்டிக்கே அவள் ஒரு பெரிய புதிர் போலிருப்பவள். ஒன்று மட்டும் சொல்லி வைக்கிறேன் கேள். அவள் நினைத்தால் உன்னையும் என்னையும் இருந்த இடத்திலிருந்து கொண்டே எரித்துச் சாம்பலாக்கிவிடும் அதிசயமான சக்தி அவளிடமிருக்கிறது. அவள் வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். சில நிமிட நேரம் முகத்திரையை விலக்கிக் கொண்டு நின்றாலே நாம் பொசுங்கி விடுவோம்!” என்றான் பாலாஜி.
“அந்தத் தாதிப் பெண் சொல்லியது நிஜம்தானா? தேவியின் முகத்தைப் பார்த்து நீங்கள் புலம்பினீர்களென்று அவள் சொல்லியது உண்மையென்கிறீர்களா?” என்று கேட்டான் ஜோதி.
”உண்மை, உண்மை, உண்மை! போதுமா! இந்தப் பேச்சு இதோடு போதும் ஜோதி, சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது பிறகு விபரமாகச் சொல்லுகிறேன். ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும் எச்சரிக்கையாயிரு. தேவதேவி அமானுஷ்யமானவள். அவளிடம் ஏதாவது தாறுமாறாகப் பேசிவிடாதே. நாம் இங்கு எப்படி வந்தோம் ஏன் வந்தோ மென்பதைப் பற்றி வாய்விட்டுக்கூட ஒன்றும் சொல்லி விடாதே!” என்று பாலாஜி எச்சரித்தான்.
“சந்திரிகா எழுதி வைத்த வரலாறு உண்மையாயிருந்தாலும் இருக்கலாம் என்று நான் சொல்லியபொழுது என்னைக் கேலி செய்தீர்கள். இப்பொழுது என்னடாவென்றால் என்னைவிட அதிகமாக அந்தக் கதையை நீங்கள் நம்புகிறீர்கள்” என்று ஜோதி சொல்லியபொழுது பாலாஜி பலவந்தமாக அவன் வாயைப் பொத்தி “இந்தப் பேச்சு போதுமென்றால் நீ கேட்கமாட்டாய். நாம் நெருப்புடன் விளையாடுகிறோம்!” என்று மறுபடியும் எச்சரித்தார்.
ஜோதிவர்மன் ஸ்நானம் செய்துவிட்டு தேவதேவி அனுப்பிய பட்டு வஸ்திரங்களுக்குப் பதிலாகத் தான் கொண்டு வந்திருந்த ஐரோப்பிய உடைகளை அணிந்து கொண்டான். அவன் தலை சீவிப் பவுடர் போட்டுக் கொள்ளுவதற்குள் பாலாஜியும் ஸ்நானம் செய்து முடித்துக் கொண்டு வந்தார்.
அவர்கள் காலைச் சாப்பாட்டுக்குத் தயாராயிருக்கிறார் களென்பதைச் சரியாகத் தெரிந்து வைத்துக் கொண்ட மாதிரி அவர்கள் மேஜையில் உட்கார்ந்ததும் அந்த அறைக்கு அடிக்கடி வந்து போகும் அதே பணிப் பெண்கள் தங்கத் தட்டுகளில் பலகாரமும் இரண்டு வெள்ளிக் கோப்பைகளில் சுடச்சுட ஆவிவரும் கோப்பியும் கொண்டு வந்து வைத்தார்கள்.
கோப்பியைப் பார்த்தவுடன் ஜோதியும் பாலாஜியும் அடைந்த ஆச்சரியத்துக்கு அளவேயில்லை. காலையில் கோப்பி குடிக்காவிட்டால் தலைவலி வந்துவிடுமென்று பயந்து அவர்கள் செம்பவளத்தீவில் இறங்குகையில் ஒரு மாதத்துக்குத் தேவையான அளவு கோப்பிப் பவுடரும் டின்பாலும் கூடவே கொண்டு வந்திருந்தார்கள். உக்கிரசேனர் குகையிலிருந்து புறப்பட்டு அரண்மனைக்கு வருகையிலும் அதில் ஒரு பகுதியை அவர்கள் கையில் கொண்டு வந்திருந்தனர். முனிசாமியிடம் சொல்லி கோப்பி போடச் சொல்ல வேண்டுமென்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக் கையில் பணிப் பெண்கள் சூடான கோப்பியைக் கொண்டு வந்து வைத்தது ஜோதிக்கும் பாலாஜிக்கும் ஆச்சரியமாயிருந்தது. சாப்பிட்டு முடித்து முனிசாமி அடுத்த அறையிலிருந்து வந்தபொழுது தான் அவர்களுக்கு உண்மை புலப் பட்டது.
“உங்களுக்கு முன்னால்நான் எழுந்துவிட்டேன். எனக்குப் பால் கொண்டு வந்து கொடுத்தார்கள். எஜமானுக்கு கோப்பி வேண்டுமென்றேன். கோப்பியென்றால் பணிப் பெண்களுக்கு என்னவென்று புரியவில்லை. அவர்கள் மகாராணியிடம் போய் சொல்லியிருக்க வேண்டும் போலிருக்கிறது. ராணியே நேரில் வந்து என்னிடம் விசாரித்தாள். கோப்பிப் பொடியை எடுத்துக் கொடுத்து கோப்பிபோடும் முறையையும் சொன்னேன்!” என்றான் முனிசாமி.
“ராணி தேவிக்கு நம்மிடம் ஏன் இவ்வளவு அக்கறை? நமக்கு முன்னால் எழுந்து நம்முடைய சௌகரியத்தை இத்தனை சிரத்தையோடு அவள் கவனிப்பது ஆச்சரியமாயில்லை?” என்று கேட்டான் ஜோதிவர்மன்.
“இந்தக் கேள்வியை மகாராணியிடமே கேட்டுவிட்டால் போச்சு” என்று பாலாஜி சொல்லிக் கொண்டிருக்கையில் ஒரு பணிப்பெண் அங்கு வந்து தேவதேவி அழைப்பதாக ஜாடையாகச் சொன்னாள்!
– தொடரும்…
– ஜீவஜோதி, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1980, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.