கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 6, 2025
பார்வையிட்டோர்: 8,034 
 
 

(1966ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

1. பணத்தை அறுவடை செய்யும் செய்தி!

தெருக் கதவைத் தள்ளிக் கொண்டு வேகமாக ராஜா வெளியே வந்தான். அப்போது “ஹலோ…..நீங்கள் தானே ராஜா?” என்று ஒரு ஆண் பிள்ளையின் குரல் தடுத்தது. 

ராஜா நிமிர்ந்து பார்த்தான். முன்பின் அறிமுகம் இல்லாத ஆனால் பழகிய முகம் போல் தோன்றும் ஒரு வாலிபன் தான் அவனைக் கூப்பிட்டபடி வந்து நின்றான். 

“ஆமாம். நான் ராஜா தான்! ஆனால் ஆள்வதற்கு ராஜ்யமோ அனுபவிப்பதற்குப் பட்டத்து ராணியோ இல்லாத வெறும் ராஜா தான்” என்று ராஜா சிரித்தான். 

“நீங்கள் மர்மக்கதை ராஜா மட்டுமல்ல; நகைச்சுவை ராஜாவும் கூடத்தான்!” என்று அந்த வாலிபன் சிரிக்க முயன்றான். ஆனால் சிரிப்பு வரவில்லை! அளவுக்கு மீறிய துயரத்தில் மூழ்கி இருக்கிறான் என்பதைச் சோர்ந்து போன அவனுடைய முகம் ‘பளிச்’சென்று காண்பித்தது. 

அன்று காலையில் அந்த வாலிபன் குளித்திருக்க முடியாது. ஏனென்றால் அவன் அணிந்திருந்த பாண்டும், டெரிலின் ஷர்ட்டும் கசங்கிப் போய் தலை மயிரும், குலைந்து கிடந்தது. காலையிலோ மத்தியானத்திலோ அவன் சாப்பிட்டு இருக்கவும் முடியாது. 

அவனுடைய தோற்றத்தை உன்னிப்பாக ஆராய்ந்த ராஜா. “என்னுடைய பெயர் ராஜா தான் என்பதை எப்படி தெரிந்து கொண்டீர்கள்?” என்று கேட்டான். 

“உங்கள் பெயரை மட்டுமல்ல: உங்களைப் பற்றிய முழு விவரங்களுமே எனக்குத் தெரியும்” என்றான் அந்த வாலிபன், மெதுவான குரலில், 

அவன் பேசிய தோரணை வியப்பைத் தந்த போதிலும் ராஜா சுதாரித்துக் கொண்டு, “என்னைப் பற்றித் தெரிந்து வைத்து இருக்கும் நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?” என்று பவ்யமாகக் கேட்டான். 

“கண்டிப்பாக இரண்டு வருடங்களுக்கு முன்னால் நாம் சந்தித்து இருக்கிறோம். என்னையும் உங்களையும் அறிமுகம் செய்து வைத்தது யார் என்று இப்பொழுது நினைவு வரலாம்,” என்றான் அந்த வாலிபன். 

ராஜாவுக்கு நினைவு வந்துவிட்டது. அறிமுகம் செய்து வைத்தவன் நாதமுனி என்ற நண்பன். 

“நாதமுனி தான் நம் இரண்டு பேர்களையும் அறிமுகம் செய்து வைத்தான். ‘தமிழ் நேசன்’ என்ற பத்திரிகையில் நீங்கள் இரண்டு பேர்களுமே உதவி ஆசிரியர்களாக வேலை செய்கிறீர்கள் அல்லவா?” என்று ராஜா முகம் மலர்ந்தபடி கேட்டான். 

“நீங்கள் சொல்லுவது சரிதான். ஆனால் நான் இப்பொழுது தமிழ்நேசனில் வேலை பார்க்கவில்லை ‘கலைத்தூதன்’ என்பது தான் நான் இப்போது வேலை செய்யும் பத்திரிகையின் பெயர்” என்று சொன்ன அந்த வாலிபன் தன்னுடைய பெயர் சேதுபதி என்று அறிமுகம் செய்து கொண்டான். 

“அதிருக்கட்டும், நீங்கள் எதற்காக என்னைத் தேடி வந்து இருக்கிறீர்கள்? அதைச் சொல்லுங்கள்” என்றான் ராஜா பரபரப்போடு. 

சேதுபதி அவனுடைய சம்மதம் இல்லாமலேயே வீட்டினுள் சென்று முன் ஹாலினுள் கிடந்த சோபா ஒன்றின் மீது உட்கார்ந்தான். அவனால் நின்று கொண்டு இருப்பதற்குச் சிரமமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட ராஜா உள்ளே வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்து, “விஷயத்தைச் சொல்லுங்கள். நான் அவசரமாகப் போக வேண்டும்,” என்று துரிதப்படுத்தினான். 

வீட்டினுள் வேறு யாராவது இருக்கிறார்களா என்பதை மோப்பம் பிடிப்பதைப் போல் சேதுபதி நாலாப் பக்கமும் குறு குறுவெனப் பார்த்துவிட்டு, “நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும். அதாவது என்னுடன் மனப்பூர்வமாக ஒத்துழைக்க வேண்டும்.” என்றான். 

“ஒத்துழைப்பது என்றால்…?” 

“நான் ஒரு பெரிய மனிதனைப் பற்றிய அந்தரங்க செய்திகளை ஆதாரங்களோடு இரகசியமான முறையில் சேகரித்து வைத்து இருக்கிறேன். அதை உங்கள் நண்பராகிய நாதமுனியின் தமிழ் நேசன் பத்திரிகையில் பிரசுரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் பிரசுரிக்க வேண்டியதில்லை. பிரசுரிக்கப் போவதாக வதந்தியைக் கிளப்பி விட்டாலேயே போதும். பயத்தினால் பெரிய மனிதன் அந்த இரகசியத்தைப் பிரசுரிக்காதபடி அமுக்கி விடுவதற்காக பணத்தை வாரி வாரி இறைத்து விடுவான். அந்தச் செய்தி எக்காரணத்தைக் கொண்டும் பத்திரிகையில் வர அவன் விரும்பவேமாட்டான். வாசகர்களுக்கு இது சுவையான செய்தியாக இருக்கும். அதைப் போல் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்குப் பணத்தையும் எதிர்பார்க்கலாம். அதாவது அந்தப் பெரிய மனிதனிடம் இருந்து! அப்படிக் கிடைக்கும் பணத்தை நானும் நீங்களும், நாதமுனியும் சமமாக பங்கு போட்டுக் கொள்ளலாம்” என்றான் சேதுபதி வெகு அமைதியாக. 

அவன் மிகமிகப் பயங்கரமானதொரு விஷயத்தை இப்படி சர்வ சாதாரணமாகச் சொன்னதும் ராஜா திடுக்கிட்டான். எவ்வளவுதான் பஞ்சமா பாதகனாக இருந்தாலும் ஒருவனை மிரட்டிப் பணத்தைப் பறிக்க நினைப்பது எவ்வளவு பெரிய தவறு…! 

ராஜா மனத்திற்குள்ளாகவே குமுறிய போதிலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், “அந்த இரகசியச் செய்தி என்ன” என்று அவனும் அமைதியாகவே கேட்டான். 

“இப்பொழுது அதைப் பகிரங்கமாகச் சொல்ல முடியாமல் இருக்கிறேன் நாதமுனியை உடனே இங்கே வரவழையுங்கள். நாம் மூன்று பேர்களும் கலந்து பேசி ஒரு உடன்பாட்டுக்கு வரலாம்.” 

“ஏன், இந்த அற்புதமான செய்தியை, உங்கள் கலைத்தூதன் பத்திரிகையிலேயே போடப் போவதாக நீங்களே வதந்திகளைக் கிளப்பி விடலாமே! பெரிய மனிதனிடம் இருந்து கிடைக்கும் பணத்தை மற்றவர்களுக்குப் பங்கு கொடுக்க வேண்டிய அவசியமும் உங்களுக்கு ஏற்படாது!” என்று ராஜா சிரித்தபடியே சேதுபதியின் உள்ளத்தைத் தொட்டுப் பார்த்தான். 

“நீங்கள் சொல்லுவது சரிதான்” ஆனால் எங்கள் பத்திரிகையில் இதைப்போன்ற மிரட்டல் செய்திகளைப் போடுவதில்லை. எங்கள் பத்திரிக்கை ஆசிரியர் மாதவன் அதற்கு இடம் கொடுக்கமாட்டார்! மேலும் அந்தப் பெரிய மனிதனின் பெயரைச் சொன்னாலே போதும். அவனைப் பற்றிய இரகசியத்தை நாட்டு நலனை உத்தேசித்துக் கூட எங்கள் பத்திரிக்கையில் பிரசுரிக்கத் தயங்குவார். இது அந்தப் பெரிய மனிதனுக்கும் தெரியுமாதலால் அவன் பயப்படமாட்டான். ஆனால் நாதமுனியின் தமிழ்நேசன் பத்திரிக்கை அப்படிப்பட்டதல்ல! நான் குறிப்பிடும் பெரிய மனிதனைப் பற்றி நான் சேகரித்து வைத்திருக்கும் ஆதார தஸ்தாவேஜிகளை எல்லாம் நாதமுனியிடம் நான் கொடுக்கப் போவதாகவும் அவற்றை நாதமுனி தன் பத்திரிகையில் பிரசுரிக்கப் போவதாகவும் மிரட்டினாலே போதும். அந்தப் பெரிய மனிதன் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுப்பான்!” என்றான் சேதுபதி. 

“அப்படியா?” என்று ராஜா சிரித்துவிட்டுத் தன் நெஞ்சுப் பட்டியில் தொங்கவிட்டு இருந்த குளுமையான நீல நிறக் கண்ணாடியை எடுத்துப் கண்களில், ‘ஜம்மென்று’ மாட்டிக் கொண்டு “எழுத்தாளன் என்ற நல்ல முத்திரையைப் பெற்றிருக்கும் நீங்கள் எதனால் பிறரை மிரட்டி குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கிறீர்கள்?” என்று அவனுடைய முகத்தில் அறைவதைப் போல் கேட்டான். 

ஏற்கனவே சோர்ந்து போயிருந்த சேதுபதியின் முகம் ஒரேயடியாகச் சுருங்கி விட்டது. 

“குறுக்கு வழியாக இருந்தாலும் சரி; நேர்மையான வழியாக இருந்தாலும் சரி, ஏதோ ஒரு வழியில் எனக்குப் பணம் வேண்டும். மிகவும் பெரிய அளவில் பணம் எனக்குத் தேவைப்படுகிறது. அதுவும் உடனடியாக எனக்குப் பணம் வேண்டும்!” என்று சேதுபதி தலையை ஏதோ ஒரு பளு அழுத்துவதைப் போல் திணறினான். 

“பணம் ஏன் அதிகமாகத் தேவைப்படுகிறது? யாரையாவது கொலை செய்துவிட்டு, அந்தக் கொலையை மறைப்பதற்காகப் பணத்தின் உதவியை நாடுகிறீர்களா?” 

“இல்லை! நானே கொலை செய்யப்படுவேனோ என்ற அபாயகரமான நிலையில் தான் இந்தக் காரியத்தை செய்யவும் துணிகிறேன். இதற்குமேல் நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. இப்போது எனக்கு பெரும் பணம் தேவை, அதற்காகவே உங்கள் உதவியை நாடி வந்து இருக்கின்றேன்.” 

“என்னுடைய உதவி தேவை என்றால், பணத்தைச் சம்பாதிக்க இந்தக் குறுக்கு வழியை ஏன் கையாளுகிறீர்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.” 

சேதுபதி தயங்கிய போதிலும் வேறு வழியில்லை. என்பதை உணர்ந்து, “இரண்டு வருடங்களுக்கு முன்னால் என்னுடைய திருமணத்துக்கு நீங்கள் வந்திருந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம். மணமேடையில் நாகரிக மோஸ்தரில் ரவிக்கை அணிந்து மேலுடம்பைக் காற்றோட்டமாகத் திறந்துவிட்டு இருந்த என் மனைவி நித்திய கலாவையும் அப்போது பார்த்து இருப்பீர்கள். மணமேடையில் மணப்பெண்ணாக உட்கார்ந்து இருக்கும் போதே அவள் என்னுடைய மாதச் சம்பளம் எவ்வளவு என்பதை விசாரித்தாள். அதையும் நீங்கள் கவனித்து இருப்பீர்கள். அவள் இப்போது ஆடம்பரமான முறையில் வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்கிறாள். அவளை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஏதாவது புத்தி சொல்ல முயன்றால். மனைவியைத் திருப்திப்படுத்த முடியாத நீயும் ஒரு ஆண் பிள்ளையா என்று சீறுகிறாள். கலைத்தூதன் பத்திரிகையில் எனக்கு கிடைக்கும் மாதச் சம்பளமோ சொற்பம்! அதற்குள் வாழ்க்கை நடத்தி எனக்கும் அலுத்துப் போய்விட்டது! என் மனைவிக்கும் அலுத்துப் போய்விட்டது! அதோடு இப்போது பெரும் பணம் அவசரமாகத் தேவைப்படுகிறது! எனக்கும் நித்திய கலாவுக்கும் இடையே உள்ள கணவன் மனைவி என்ற உறவும் முறிந்து விடாமல் இருக்கவே எப்படியாவது பணத்தைக் கைப்பற்ற முயற்சி செய்கிறேன்!” என்று கவலையோடு பதறினான். 

அவன் சொல்லுவது உண்மைதானா…? நித்திய கலா என்ற அவனுடைய மனைவி தன் கணவனின் வருமானத்தை அனுசரிக்காமல் கண்டபடி செலவு செய்கிறாளா? ஊதாரித்தனமாக வாழும் ஒரு மனைவியின் சுகத்துக்காக கணவன் ஏன் கண்டபடி பணத்திற்காக அலைய வேண்டும்…அதுவும் ஒரு பெரிய மனிதனை மிரட்டிப் பணம் பறிக்கும் பயங்கரமான பாதையில் இறங்க வேண்டும்…? 

அவ்விதம் விசித்திரமாக வாழ்க்கை நடத்தும் கணவனையும் மனைவியையும் நினைத்து ராஜா குழம்பினான். ஆனாலும் அவர்களைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு ஏற்பட்டது. 

“நித்தியகலா உங்களிடம் அன்பாகத்தானே நடந்து கொள்கிறாள்?” 

“அன்பு இருக்கலாம், ஆனால் அந்த அன்பு படுக்கையறைக்கு அப்பாலும் பரிமளிக்க வேண்டும்! அதோடு அந்த அன்பு நிரந்தரமாக நீடிக்கவும் வேண்டும் என்றால் பணத்தின் உதவி கண்டிப்பாகத் தேவை. ஆகவே தான் பணத்துக்காகப் போராடுகிறேன்” என்றான் சேதுபதி ஒரு மகாவீரனைப்போல. 

“பணத்துக்காக ஏற்படக்கூடிய, அன்பு ஒருபோதுமே நிலைக்காது. ஆகவே உங்கள் மனைவியை வேறு விதத்தில் திருப்தி செய்ய முயற்சியுங்கள், இதைப்போன்ற பித்தலாட்ட வேலைகளுக்கு நான் ஒருபோதுமே உடந்தையாக இருக்க மாட்டேன்.” 

ராஜா கண்டிப்பாகச் சொல்லி விட்டதால் அவனுடைய இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டான் சேதுபதி. 

“உடந்தையாக இருப்பதால் உங்களுக்கு எந்த விதமான நஷ்டமும் ஏற்படாது. எனக்குக் கிடைக்கும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கு உங்களுக்குத் தருகிறேன்.” 

“இந்த பித்தலாட்ட வேலையில் என்னை ஏன் இழுத்து விடுகிறீர்கள்? உங்களுக்குத் தேவையான நாதமுனியை நீங்களே நேரில் சந்தித்து உங்களுக்குள்ளேயே ஒரு உடன்பாடு செய்து கொண்டு இருக்கலாமே! மூன்றில் ஒரு பங்கு உங்களுக்கு மிச்சப்படுமே?” 

“நீங்கள் சொல்லுவது சரியான கணக்காகவே இருந்தாலும், நாதமுனியுடன் இப்போது நான் தன்னிச்சையாகத் தொடர்பு கொள்வது சுலபத்தில் நடக்கக்கூடிய காரியம் அல்ல. ஏனென்றால் நானும் அவனும் ஒருவரோடு ஒருவர் சுமுகமாகப் பேசிக் கொள்வது இல்லை. எங்களுக்குள் சில காலமாக ஒரு தகராறு உண்டு! அதனால் தான் நாதமுனியின் பிராண சினேகிதரான உங்களுடைய உதவியை நாடுகிறேன். நாதமுனியை இங்கு வரவழைத்து எங்களுக்குள் ஒரு நல்ல ஏற்பாடு செய்தாலே போதும்” என்று சேதுபதி கெஞ்சினான். 

ராஜா, இம்மாதிரியான விவகாரங்களில் தலையிட முடியாது என்று கண்டிப்பாகச் சொன்னான். ஆனாலும் அவனை சேதுபதி எளிதில் விடவில்லை! 

“ராஜா! நீங்கள் எனக்கு உதவி செய்யாவிட்டால் உங்கள் எதிரிலேயே என் உடம்பில் பெட்ரோலை ஊற்றி எரித்து தற்கொலை செய்து கொள்வேன்” என்று சேதுபதி சொல்லிவிட்டு அதிவேகமாக பாண்டு பையினுள் கையை நுழைத்து சிறிய பெட்ரோல் பாட்டிலையும், நெருப்புப் பெட்டியையும் எடுத்தான். 

ராஜா திடுக்கிட்டான். அசம்பாவிதமான நிகழ்ச்சிகள் எதுவுமே தன்னுடைய வீட்டில் நடந்து விடக் கூடாது என்று ராஜா பதறியபடி சட்டென்று பாய்ந்து பெட்ரோல் பாட்டிலையும், தீப்பெட்டியையும் பிடுங்கினான். 

“நான் உயிர் வாழவேண்டும் என்றால் தயவு செய்து நாதமுனியை வரவழையுங்கள். எப்படியும் நல்லதொரு முடிவைச் செய்தே ஆகவேண்டும்” என்றான் சேதுபதி. 

அவன் விடாக்கண்டனாக இருக்கவே, எப்படியாவது தன்னை விட்டுத் தொலைந்தால் போதும் என்ற எண்ணத்துடன் ராஜா எழுந்து சென்று மேஜையின் மீதிருந்த டெலிபோன் ரிசீவரை எடுத்து அவன் சொன்ன சில எண்களை அனாயசமாகச் சுழற்றி விட்டு, ஹலோ….” என்றான். 

டெலிபோன் மறு முனையில் இருந்து இனிமையான குரல் வாய்ந்த ஒரு பெண்மணி பேசும் குரல் கேட்டது. 

“உதவி ஆசிரியர் நாதமுனியைப் பேசச் சொல்லுங்கள்!” என்றான் ராஜா. 

அந்தப் பெண்மணி ஒரு டெலிபோன் நம்பரைச் சொல்லி அங்கே டெலிபோன் செய்து விசாரிக்கும்படி யோசனை வழங்கினாள். 

ராஜா அவள் சொன்னதைப்போல் செய்ததும் உடனே டெலிபோனில் நாதமுனியுடன் பேசும் தொடர்பு கிடைத்தது. 

“ஹலோ நாதமுனி நான் தாண்டா ராஜா பேசுகிறேன்” என்று ராஜா அறிமுகப் படுத்தியதும், “என்னடா ராஜா?” என்று நாதமுனி திருப்பிக் கேட்டான். 

டெலிபோனில் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கிரகித்துத் தெரிந்து கொள்ளும் பொருட்டு சேதுபதி பக்கத்தில் வந்து கொக்கு போல் நின்று கொண்டான். 

ராஜா அவனைக் கவனித்த போதிலும் அதை ஒரு பொருட்டாக எண்ணாதவனைப் போல், “ஏய், நாதமுனி! உன்னை எதிர்பார்த்து சேதுபதி என்ற உன்னுடைய மாஜி நண்பர் இங்கே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்!” என்று சொன்னான். 

“சேதுபதியா…? என்ன விஷயமாய்?” என்று கேட்டான் நாதமுனி, டெலிபோனின் மறுமுனையில் இருந்து. 

“அவர் நம் இரண்டு பேர்களையும் ஈடுபடுத்தி ‘பிளாக் மெயில்’ பண்ணி பணம் சம்பாதிக்க நினைக்கிறார். ஒரு பெரிய மனிதரை மிரட்டி அதனால் கிடைக்கும் பண ணத்தில் நம் இரண்டு பேர்களுக்கும் சரி பங்கு பணம் கொடுப்பாராம்” என்று ராஜா சிரித்தான். 

டெலிபோனில் இந்த ரகசியமான விஷயத்தை ராஜா சொன்னதும், சேதுபதி மோசம் நடந்து விட்டதைப் போல் உதடுகளைக் கடித்துக் கொண்டான். 

“அப்படியா?” 

“ஆமாடா நாதமுனி! இன்னார் என்று புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்ட சேதுபதியின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள நினைத்தேன். ஆனாலும் அதற்குப் பின்னால் உன்னிடமும் ஒரு வார்த்தை கேட்டுவிட வேண்டும் என்பதற்காக நான் எதுவும் செய்யவில்லை” என்றான் டெலிபோனில் ராஜா. 

“அவன் எவ்வளவு தப்பு செய்தாலும் கழுத்தைப் பிடித்து மட்டும் வெளியே தள்ளிவிடாதே!” 

“ஏன்…? மற்றவர்களை மிரட்டி பணம் பறிப்பவர்களிடம் எல்லாம் என்னையும் தொடர்பு வைத்துக் கொள்ளச் சொல்லுகிறாயா?” 

“சேதுபதி! இப்பொழுது நான் என்ன சொல்லி விட்டேன் என்று இப்படி ஆத்திரப்படுகிறீர்கள்?” 

“ஆத்திரப்படுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. நான் சொன்ன விஷயத்தை வேறு யாரிடமாவது நீங்கள் விளையாட்டாகக் கூடச் சொன்னால்…?” என்று சேதுபதி தன் பற்களைக் கடித்துக் கொண்டதின் மூலம் பொங்கி எழுந்த ஆவேசத்தைத் தணித்துக் கொண்டான். 

“சொன்னால் என்னைக் கொன்று விடுவீர்கள். அவ்வளவு தானே…! நான் எதற்குமே தயாராக இருப்பவன் என்பது உங்களுக்குத் தெரியாது போலிருக்கிறது” என்று சிரித்த ராஜா, “முதலில் இங்கிருந்து வெளியேறுங்கள்” என்று சீறினான். 

சேதுபதி தன் திட்டங்கள் எல்லாம் நொறுங்கி விட்டதைப் போன்ற அதிர்ச்சியுடன் கவலை அடைந்தான். தன் மனதில் எழுந்த உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொண்டது தவறுபோல் அவனுக்குத் தோன்றியது. 

”ராஜா! நான் சொன்னவற்றை எல்லாம் பகிரங்கப் படுத்தி என்னைக் காட்டிக் கொடுத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் இல்லையா?” 

“இனி நாம் எதையுமே பேசிக்கொண்டு இருக்க வேண்டாம் சேதுபதி! முதலில் வெளியே போங்கள்! பணப் பசியுள்ள ஒரு மனைவிக்காக நீங்கள் குறுக்கு வழியில் சட்ட விரோதமாக பிளாக் மெயில் பண்ணி பணம் பிடுங்க முயன்றால் அதற்கு நான் உடந்தையாக முடியாது?” என்று ராஜா ஆத்திரத்தோடு கூவினான். 

‘மதியாத வாசலில் மிதிக்கக்கூடாது’ என்ற வாசகம் தான் அப்பொழுது சேதுபதியின் நெஞ்சில் மோதி நின்றது. உடனே அவன் ராஜாவை முறைத்துப் பார்த்துக் கொண்டே வெளியே போனான். அவன் ஏற்கனவே குடித்துவிட்டு வந்திருந்தான் ஆகையால் குடி போதையோடு இப்போது ஏமாற்றமும் பேராசை வெறியும் சேர்ந்து கொள்ளவே சேதுபதி இன்னும் அதிகமாகத் தள்ளாடி தள்ளாடி நடந்தபடியே சென்றான். அவன் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு குழப்பத்துடனே செல்கிறான் என்று தோன்றியது. அப்போது பொழுதும் இருட்டத் தொடங்கியது. 

அவன் போன பிறகு ராஜா யோசித்தான், ஒரு பெரிய மனிதனைப் பத்திரிகையின் மூலமாகவே மிரட்டிப் பணம் பறிக்க விரும்புவதாக சேதுபதி சொன்ன செய்தியைப் பற்றியே சிந்தித்தான். அந்தச் செய்தி எதைப் பற்றியதாக இருக்கும் என்ற ஆராய்ச்சி அவனுடைய மூளைப் பிரதேசத்தில் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது! 

சிறிது நேரம் கழித்து அவனுடைய சிந்தனையைக் கலைப்பது போல் டெலிபோன் மணி வீறிட்டு அலறியது. ராஜா ரிசீவரை எடுத்துப் பேசியதும், டெலிபோனின் மறுபுறத்தில் பேசுவது தன் நண்பன் நாதமுனி தான் என்பதைத் தெரிந்து கொண்டான். 

‘ராஜா! சிறிது நேரத்திற்கு முன்னால் உன்னுடைய ஆபீசுக்கு டெலிபோன் செய்தேன். யாருமே அங்கே இல்லை போல் இருக்கிறதே!’ என்றான் நாதமுனி. 

“ஆமாம், பானுகூட இன்றைக்கு சீக்கிரமாகவே வீட்டுக்குப் போய் விட்டாள். சினிமா பார்க்க வேண்டும் என்று சொன்னாள்.”

பானு எனப்படும் பானுமதி ராஜாவின் அந்தரங்க காரியதரிசினி மட்டுமல்ல; ஆசைக் காதலியும் கூட. அந்தக் காதல் எல்லாம் வெறும் வாயளவில் தான்! எவ்வளவு தான் பானு நெருங்கிப் பழகிய போதிலும் படுக்கையறைத் தோழியாகமாட்டாள்! நெருப்பின் அருகில் இருக்கும் மெழுகாக இருந்த போதிலும் எந்த நிலைமை ஏற்பட்டாலும் பானு உருகவே மாட்டாள்! 

“உன் பானுவைத் தனியாக அனுப்பிவிட்டு நீ வீட்டிலேயே முகாம் போட்டுவிட்டாய் போல் இருக்கிறது” என்று சிரித்த நாதமுனி, “ம்! அந்தப் பேராசைக்காரன் சேதுபதி இன்னும் அங்கே தான் இருக்கிறானா?” என்று கேட்டான். 

“இல்லை; சிறிது நேரத்திற்கு முன்னால் அழாக்குறையாவும் மேலே விழுந்து கடிக்காத குறையாகவும் சேதுபதி போய் விட்டான். அவனால் நமக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் போல் இருக்கிறது. சில ரௌடிகள் அவர்களுடைய சொற்படி நடக்காவிட்டால் என்ன வேண்டுமானாலும் செய்து விடுவார்கள்” என்றான் ராஜா. 

அவன் சொன்னதைக் கேட்டு நாதமுனி வேடிக்கையாகச் சிரித்து விட்டு, “யார் எப்படி நடந்தால் நமக்கு என்னடா? தன்னம்பிக்கை இல்லாதவர்கள் அல்லவா ரௌடிகளைப் பற்றிப் பயப்பட வேண்டும்?” என்று சொன்னவன், “இப்போது அவன் என்னைப் பார்ப்பதற்காகத்தான் புறப்பட்டு வந்து கொண்டு இருக்கிறானா?” என்று ஒரு விதத் திகிலோடு கேட்டான். 

“என்னால் அவனுக்கு உதவி கிடைக்காது என்பது ஓரளவு அவனுக்குப் புரிந்து விட்டது. ஆகவே உன்னைத் தேடிக்கொண்டு சேதுபதி அங்கே வந்திருக்கலாம்.” 

“அவன் என்னைத் தேடிக் கொண்டு வந்திருந்தால் பரவாயில்லை. ஆனால் அவன் வேறு எங்குமே போய் விடக் கூடாது. இப்போது தான் உண்மையான ஆபத்தை உணர்கிறேன். அவன் சேகரித்து வைத்திருக்கும் பயங்கரமான செய்தி யாரைப் பற்றியது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, அந்தச் செய்தி அம்பலமாகி விடாமல் தடுக்கவும் வேண்டும்! அதோடு சேதுபதியையும் சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும்!” என்றான் நாதமுனி. 

ராஜா அதைக் கேட்டதும் கலவரம் அடைந்தான். தன்னுடைய உதவியை நாடி வந்த சேதுபதியை வெளியே அபாயகரமான நிலையில் அனுப்பிவிட்டது தவறு போலவும் அவனுக்குத் தோன்றியது. 

ஆனாலும் இனி அவனால் என்ன செய்ய முடியும்? சேதுபதி தான் வெளியே போய்விட்டானே! 

“நானும் முட்டாள்தனமாக அவசரப்பட்டு விட்டேன் என்பதை இப்பொழுது தான் என்னால் உணர முடிகிறது! இப்பொழுதே சேதுபதியைத் தேடுவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறேன்!” என்று சொல்லிவிட்டு டெலிபோன் ரிசீவரை அதற்குரிய இடத்தில் வைத்ததும், உள்ளே வரலாமா?” என்று ஒரு ஆண் பிள்ளையின் குரல் கேட்டது. 

சேதுபதி தான் திரும்பவும் வந்து விட்டானா…? ஆனால் அது அவனுடைய குரலைப்போல் இல்லையே…? 

“ம்! தாராளமாக வரலாம்!” என்றான் ராஜா. 

சற்று வளர்த்தியான ஒரு வாலிபன் காப்பி பொடி வர்ணக் கோட்டும் முழுக்கால் சட்டையும் அணிந்து கொண்டு உள்ளே வந்தான். அரும்பு மீசை அவனுக்குத் தனி அழகைத் தந்தது. 

அவனை உன்னிப்பாக ஆராய்ந்த ராஜா, “நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டான். 

“ஓ எஸ்! தாராளமாகத் தெரிந்து கொள்ளலாம். என் பெயர் வீரமணி! தமிழ் நேசன் நாதமுனியின் தலை சிறந்த நண்பன்! அதோடு சேதுபதி வேலை செய்யும் ‘கலைத் தூதன்’. பத்திரிகையில் நானும் ஒரு துணை ஆசிரியர்!” என்றான் வீரமணி. 

கலைத் தூதன் பத்திரிகையோடு சம்பந்தப்பட்ட ஒருவன் வந்திருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டதும், எச்சரிக்கையுடன் பழக வேண்டும் என்ற எண்ணம் ராஜாவுக்கு ஏற்பட்து. 

“என்னை பேட்டி காண வந்திருக்கிறீர்கள் போல் இக்கிறது. ஆனால் உங்கள் பத்திரிகைப் பேட்டி கொடுப்பதற்கு நான் பெரிய மனிதனும் இல்லை; சினிமா நடிகனும் இல்லை!” என்று ராஜா சிரித்தான். 

“பத்திரிகைக்காகப் பேட்டி என்றால் நாங்கள் நிரூபர்களைத் தான் அனுப்புவோம். நான் தனிப்பட்ட முறையில் என் சொந்த விஷயம் சம்பந்தமாக உங்களிடம் பேசத்தான் வந்திருக்கிறேன். ஒரு நிமிஷ நேரம் நீங்கள் செலவழித்தாலே போதுமானது” என்றான் வீரமணி. 

அவன் எதற்காக இங்கே வந்து இருக்கிறானோ…? என்ன விஷயத்தைச் சொல்லி புதுக் குழப்பத்தை உண்டு பண்ணப் போகிறானோ…? 

“என்ன விஷயம்? பேசுவது எதுவாக இருந்தாலும் சீக்கிரமாகச் சொல்லிவிட்டுப் போய் விடுவது நல்லது. ஏனென்றால் இந்தக் காலத்தில் நேரச்சிக்கனம் தான் பெரிய பொருளாதாரம்” என்றான் ராஜா. 

“உங்களிடம் சேதுபதி பேசிவிட்டு வெளியே போனதை நான் தூரத்தில் ஒளிந்து நின்று கவனித்துக் கொண்டு இருந்தேன். நான் இங்கே வரப்போகும் விஷயத்தை அவன் முன்கூட்டியே அறிந்து இருந்தால் இடிந்து போயிருப்பான்! என்ன செய்வது-என்று அறியாமல் தவித்துப் போயிருப்பான்” 

“ஏன்..?” 

“அவன் உங்களிடம் ஒரு விஷயத்தைச் சொல்ல வந்தான் அல்லவா? அந்த விஷயத்தில் எனக்கும் பங்கு இருக்கிறது. ஒரு பெரிய மனிதரைப் பற்றிய அந்தரங்க செய்திகளைச் சேகரித்து வைத்து இருப்பதாக அவன் உங்களிடம் சொல்லி இருப்பான். அந்தச் செய்தி உண்மையானது தான். ஆனால் அந்தச் செய்திக்கும் அவனுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. நான் தான் அந்தச் செய்தியைச் சேகரித்துக் கொடுத்தேன். நான் தான் அந்தச் செய்திக்குச் சொந்தக்காரன்?” என்றான் வீரமணி. 

“என்ன? நீங்களா அந்தச் செய்தியின் சொந்தக்காரன்?” என்று ராஜா வியப்போடு கேட்டான். 

“ஆமாம்! ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அந்த ரகசியச் செய்தியைப் பற்றிய ஆதாரக் காகிதங்கள் எல்லாம் இப்போது சேதுபதியின் கையில் தான் சிக்கிக் கொண்டு இருக்கின்றன! அவற்றை சேதுபதி வைத்துக் கொண்டு நாட்டின் நன்மையை உத்தேசித்து எங்கள் கலைத் தூதன் பத்திரிகையில் பிரசுரிக்கவும் முயலவில்லை! எங்கள் ஆசிரியர் மாதவனிடம் அதைப்பற்றி அவன் சொல்லவும் இல்லை! ஆகவே அந்தச் செய்தியை துஷ்பிரயோகப்படுத்தி ஏதோ குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க சேதுபதி திட்டமிடுகிறான் என்று நான் சந்தேகித்தேன்!” என்றான் வீரமணி. 

ராஜா வியப்படைந்த நிலையில் அவனுடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். பெரிய மனிதரைப் பற்றிய அந்தச் செய்தி எதைப் பற்றியதாக இருக்கும்…..? 

அந்தப் பெரிய மனிதர் கள்ள நோட்டு அடிக்கிறாரா? கடத்தல் வேலை செய்து வருகிறாரா? சாதாரண செய்தியாக இருந்தால் எப்படிப்பட்ட மிரட்டலாக இருந்தாலும் பணம் பறித்து விட முடியாதே! 

“அந்தச் செய்தி யாரைப் பற்றியது என்றும், எப்படிப்பட்டது என்றும் என்னிடம் சொன்னால் என்னால் முடிந்த உதவிகளை எல்லாம் செய்வதற்குத் தயாராக இருக்கிறேன்” என்றான் ராஜா. 

“நான் அந்தச் செய்தியைச் சொல்லத்தான் நினைத்தேன். ஆனால் அதைச் சொல்லக் கூடாது என்று என் மனசாட்சி கட்டளை இடுகிறது! சேதுபதி மிகவும் ஆபத்தான நிலைமையில் சிக்கிக் கொண்டு இருக்கிறான். அவனுடைய மனைவி நித்திய கலாவை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது! தன் கணவன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று நித்தியகலா அழுது கொண்டே இருக்கிறாள். அவளுடைய கண்ணீரைக் கண்டு இரக்கப்பட்டே இங்கே நான் ஓடி வந்தேன்.’ 

மனைவி நித்தியகலா மகாமோசமான செலவாளி என்றும், நாகரீக ஊதாரி என்றும், கட்டுக்கு அடங்காத பஞ்ச கல்யாணிக் குதிரை போன்றவள் என்றும் சேதுபதி சொன்னான். ஆனால் அவனுடன் வேலை பார்க்கும் இன்னொரு உதவி ஆசிரியரான வீரமணி பேசும் தோரணையோ வேறு மாதிரியானதாக இருக்கிறதே என்று நினைத்து ராஜா விழித்தான். 

“அவனுடைய மனைவி அழுகிறாளா? ஏன்?” என்று ராஜா மெல்லக் கேட்டான். 

“கணவன் தவறான வழியில் நடந்தால் யாருக்குத்தான் அழுகை வராது?” 

“அப்படியானால் சேதுபதியின் மனைவி, கணவன் மீது அதிகப்படியான அக்கறை உள்ளவள் என்று சொல்லுங்கள்.” 

“ஆமாம்! அக்கறை மட்டுமல்ல! கணவனுக்கு அடங்கி நடக்கும் நல்ல மனைவியும் கூட. பண்பே உருவான ஒரு உயர்ந்த பெண்மணியைத் தான் சேதுபதி திருமணம் செய்து கொண்டு இருக்கிறான். மனைவியால் அவனுக்கு மிகவும் பிரமாதமான எதிர்காலம் இருக்கிறது. சொந்தப் பத்திரிக்கை நடத்தி அமோகமான முறையில் பணம் சம்பாதிக்கும் அளவுக்கு முன்னேறி விடுவான்” 

வீரமணி சொன்ன தகவல்கள் ராஜாவைத் திகைக்க வைத்தன. இவ்வளவு நல்லவளான மனைவியைப் பற்றிச் சொந்தக் கணவன் சேதுபதி அவ்வளவு மோசமாக ஏன் சொன்னான்…. 

ராஜாவுக்கு ஒரே குழப்பமாக இருக்கவே, “சேதுபதியின் மனைவியை உங்களுக்கு நன்றாகத் தெரியுமா?” என்று கேட்டான். 

“அவர்களுக்கு கல்யாணம் நடந்த நாள் முதல் இன்று வரையில் நன்றாகவே தெரியும். அவன் மனைவி நித்தியகலா பெயரைப் போலவே கலா அம்சம் பொருந்தியவள். ஒரு நல்ல மனைவி எப்படி குடும்பம் நடத்துவாளோ, அந்த வழிமுறைகள் எல்லாம் அவளுக்கும் தெரியும்!” என்றான் வீரமணி. 

“அதாவது அவள் கணவனுக்கு அடங்கி நடக்கும் ஒழுக்கத்தின் குன்று என்று சொல்லுகிறீர்கள். அப்படித் தானே” 

“ஆமாம்! அதே நேரத்தில் அவள் தன் கணவனுக்கு எந்த விதமான ஆபத்தும் வந்து விடக்கூடாது என்று சதாவும் கடவுளையே வேண்டிக் கொண்டு இருக்கிறாள். கணவனுக்கு ஏதாவது நிகழ்ந்துவிட்டால் அந்த இடத்திலேயே நித்தியகலாவின் உயிர் பிரிந்துவிடும்” என்று சொன்ன வீரமணி, “ம் தன் மனைவியைப் பற்றி சேதுபதி ஏதாவது உங்களிடம் சொன்னானா?” என்று கேட்டான். 

“ஒருவன் தன்னுடைய மனைவியைப் பற்றி புதிதாக அறிமுகம் ஆன நண்பர்களிடத்தில் விரிவாக எதுவும் சொல்லமாட்டான். அதைப்பற்றி துளைத்துத் துளைத்துக் கேட்பது முறையும் அல்ல.” 

“சேதுபதிக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் அவனுடைய மனைவி நித்திய கலாவுக்காகத்தான் நான் அனுதாபப்படுவேன்! அதனாலேயே உங்களிடம் கேட்டேன்!” என்றான் வீரமணி. 

“அந்த அர்த்தத்தில் என்னிடம் சேதுபதி எதுவும் பேசவில்லை!” என்றான் ராஜா. 

“அப்படியானால்.. அப்படியானால்.. ராஜாத்தி என்ற ஒரு பெண்ணைப் பற்றி சேதுபதி உங்களிடம் ஏதாவது பேசினானா? ராஜாத்தியைப் பற்றி அவன் என்னென்ன சொன்னான்!” என்று வீரமணி பரபரப்போடு முகம் வெளிறக் கேட்டான். 

உண்மையில் ராஜாத்தி என்ற பெயரை அப்போது தான் முதன் முதலில் ராஜா கேள்விப்பட்டான் என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ‘அதையெல்லாம் என்னிடம் விசாரிப்பது நாகரிகமல்ல வீரமணி!’ என்றான் நளினமாக. 

“பரவாயில்லை. சேதுபதி உங்களிடம் உதவியை எதிர் பார்த்து வந்திருந்தான் அல்லவா? அவனுக்கு உதவி செய்வதாக வாக்களித்து விட்டீர்களா?’ என்று வீரமணி பரபரப்போடு கேட்டான். 

“மற்றவர்களுடைய சொந்த விவகாரம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நம் இரண்டு பேர்களைப்பற்றி வேண்டுமானால் ஓரளவு பேசிக் கொண்டு இருக்கலாம்.” 

“ராஜா! தயவு செய்து இந்த ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் பேசுவோம். பேச்சின் போது என்னைப்பற்றி சேதுபதி ஏதாவது சொன்னானா?” 

“இல்லை” 

“நீங்களும் அவனோடு ஒத்துழைத்து பயங்கரமான ஆபத்தில் சிக்கிக் கொள்ளப் போகிறீர்களா?” 

“ஏன்?” 

“செய்தியை அம்பலமாக்குவதாக மிரட்டுவதற்கு நீங்கள் உதவி செய்தால் அந்தப் பெரிய மனிதன் முதலில் உங்களைத்தான் தீர்த்துக் கட்டுவான். அதன் பிறகு சேதுபதியின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்!” 

“அதைப் பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அந்தப் பெரிய மனிதன் யார் என்பதை மட்டும் சொல்லுங்கள்.” 

“அந்தப் பெயரை பகிரங்கமாகச் சொல்லுவதற்கு நானும் துணியவில்லை. ஏனென்றால் இன்னும் சில வருடங்கள் வரையிலாவது உயிர் வாழ்ந்துவிட வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது.”

வீரமணி பிடிவாதமாகப் பேசவே, “அப்படியானால் இனி நீங்கள் போகலாம். உங்களிடம் எதையுமே பேச விரும்பவில்லை” என்றான் ராஜா. 

வீரமணி பேச வந்த வார்த்தையைத் தொண்டையோடு நிறுத்திவிட்டு, “நான் வருகிறேன். நித்தியகலாவின் மாங்கல்யம் நிலைத்து இருக்க வேண்டும் என்பதற்காவது சேதுபதியோடு ஒத்துழைக்காதீர்கள்” என்று கேட்டுக் கொண்டு வெளியே போனான். 

ராஜாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. சேதுபதி சேகரித்து வைத்திருக்கும் செய்தி எதைப்பற்றியது என்பதையும், எந்தப், பெரிய மனிதரோடு சம்பந்தப்பட்டது என்பதையும் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் விசித்திரத் தம்பதிகளான சேதுபதிக்கும் நித்திய கலாவுக்கும் இடையே ஏதோ ஒரு மர்மம் உறைந்து கிடப்பதாக உறுத்தியதோடு இப்போது ராஜாத்தி என்ற ஒரு புதுப்பெயரும் முளைத்து அந்த ராஜாத்தி என்பவள் யார் என்று அறிய வேண்டும் என்கிற ஆவலையும் தூண்டியது! ஆனால் ராஜாவோ மர்மக் கதைகள் எழுதிப் பிழைப்பு நடத்தும் சிறந்த எழுத்தாளன். இந்த மாதிரியான விவகாரங்களில் ஈடுபடுவதால் தன்னுடைய சிந்தனை ஓட்டம் தடைப்பட்டு விடுமோ என்று தயங்கினான். வீணாக அவன் மனத்தைப் போட்டுக் குழப்பிக் கொண்டு இருக்கத் தயாராகவும் இல்லை. 

வீரமணி வெளியே போன சிறிது நேரத்திற்கு எல்லாம் யாரோ நடந்து வரும் மென்மையான காலடி ஓசை கேட்டது. சுழல் நாற்காலியில் சாய்ந்து கிடந்த ராஜா சட்டென்று நிமிர்ந்து பார்த்தான். 

அவன் எதிரில் வந்து நின்ற மோகன உருவம் அழகை எல்லாம் ஒன்றாகத் திரட்டிக் கொண்டு வந்திருக்கும் ஓர் இளம் பெண்! 

2. பெயர் தெரியாத காதலி! 

சில நிமிடங்கள் ஆகிய பிறகும் இன்னும் அந்தப் பெண், திறந்த வாயை மூடவில்லை. உதடுகளில் சிரிப்பு முத்திரைகள் நெளிந்து கொண்டே இருந்தன. ஆனாலும் அந்தச் சிரிப்பில் ஒரு வகையான சோகம் இழைந்து இருந்தது. 

அவள் தன் இரண்டு கைகளையும் தூக்கி ராஜாவைப் பார்த்துக் கும்பிட்டுவிட்டு, “வணக்கம் எழுத்தாளர் சார்! நான் உங்கள் கதா ரஸிகை! உங்கள் கதைகளைப் படித்து மெய் மறந்து கிடந்த எனக்கு இன்றைக்குத் தான் உங்களைப் பார்த்து ரசிக்கும் அதிர்ஷ்டம் கிடைத்து இருக்கிறது!” என்று புகழுரை பொழிந்தாள். 

பதிலுக்கு சிரிப்பின் மூலம் வணக்கம் தெரிவித்த ராஜா, “அதிர்ஷ்டத்தை இலவசமாகப் பெற்றுக் கொண்டு இருக்கும் நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டான். 

“நித்தியகலா என்பது என் பெயர்! கலைத்தூதன் பத்திரிகை உதவி ஆசிரியரான சேதுபதியின் மனைவி தான் நான்! இப்போது பரோபகாரியான உங்கள் தலையில் பெரும் சுமையை இறக்கி வைப்பதற்காக வந்திருக்கிறேன்” என்று நித்தியகலா நாடகபாணியில் அறிமுகம் கூறினாள். 

இதுவரையிலும் இரண்டு ஆண்களால் மட்டுமே தொல்லை வந்தது. ஆனால் இப்பொழுதோ…? தொல்லையைக் கொண்டு வந்திருப்பது இன்பத் தொல்லைக்கு இலக்கணமான ஒரு கட்டிளம் பெண்மணி! 

அந்தப் பெண்மணியான நித்தியகலா ஒயிலாக நுழைந்து தன்னை ராஜா உட்காரும்படி சொல்லுவதற்கு முன்னாலேயே சோபாவில் ஜம்மென்று அமர்ந்து கொண்டாள். அவளுடைய கணவன் சேதுபதி உட்கார்ந்திருந்த அதே இடம் தான் அது! 

அவளுடைய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கக் கூடும் என்று ராஜா; எண்ணம் இட்டவனாக எதிரில் கிடந்த சோபாவின் மீது உட்கார்ந்து கொண்டு, “எனக்கு பரோபகாரி என்ற பட்டம் தந்ததற்கு நன்றி! ஆனால் என் தலைமீது நீங்கள் இறக்கி வைக்கப்போகும் பாரம் எடை குறைவானதாக இருக்கட்டும். ஏனென்றால் என்னால் அதிகம் சுமக்க முடியாது!” என்று சொல்லி விட்டுச் சிரித்தான். 

”ராஜா சார்! நான் மிகுந்த கவலைக்குள்ளாகி இருக்கிறேன். எனக்கு ஒரே பயமாக இருக்கிறது. என்ன நடக்கப் போகிறதோ என்ற திகிலால் நடு நடுங்கிப் போய் இருக்கிறேன்” என்று நித்திய கலா சொன்னபோது அவளுடைய குரலில் நடுக்கமும் முகத்தில் பயத்தின் சாயல்களும் படர்ந்தன. 

“நான் பக்கத்தில் இருப்பது வரையில் நீங்கள் எதைக் கண்டுமே பயப்பட வேண்டியது இல்லை. விஷயத்தைச் சொல்லுங்கள்,’ என்றான் ராஜா. 

அடுத்தவன் மனைவி என்ற ஸ்தானத்தை நித்தியகலா பெற்றிருந்ததால் மரியாதை தானாகவே வந்தது. 

“என் கணவர் இங்கே வந்து உங்களிடம் என்ன சொன்னார்? இப்போது அவர் எங்கே போயிருக்கிறார்? அவர் ஒரு பாட்டிலில் பெட்ரோல் எடுத்துக் கொண்டு போனதை வேலைக்காரன் பார்த்து விட்டு என்னிடம் வந்து சொன்னான்! அந்தப் பெட்ரோல் சிகரெட் பற்ற வைப்பதற்காக இராது என்று நான் நினைத்தேன்!” 

“பெட்ரோலைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவை இல்லை. கலா! உங்கள் கணவர் தற்கொலை செய்து கொள்ளமாட்டார் என்று என்னால் சத்தியம் செய்ய முடியும்” என்று ராஜா, சொல்லிவிட்டு நித்திய கலாவைத் தன் கண்களாலேயே ஊடுருவி ஆராய்ந்தான். 

அவளுடைய கணவன் சேதுபதி சொன்னது போல் அவள் நாகரிகமாக உடை அணிந்து இருக்கவில்லை. கவர்ச்சியாக அவள் தோற்றமளித்த போதிலும் எளிய நூல் புடவையே உடுத்தி இருந்தாள். அங்கங்கள் நாகரிகத்தின் பேரால் அதிகம் திறந்திருக்கவும் இல்லை. “என்னவோ சார், எனக்கு ஒரே பயமாக இருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ என் கணவர் உயிரை மாய்த்துக் கொண்டால் என்ன செய்வது என்று தான் புரியவில்லை. கௌரவமான முறையில் தொழில் நடத்தும் ஒரு பத்தரிகையின் உதவி ஆசிரியர் ஏன் தான் இதைப் போன்ற சிக்கல்களில் சிக்கி இருக்கிறாரோ என்று தெரியவில்லை,” என்று நித்தியகலா சொன்ன போது கவலையின் அழுத்தம் காரணமாக கண்களில் இருந்து கண்ணீர் பொங்கியது. 

“உங்கள் கணவர் இங்கே வந்து என்னிடம் பேசிவிட்டுப் போனார் என்ற விஷயம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” 

“உங்கள் நண்பர் நாதமுனி தான் எனக்கு டெலிபோன் செய்தார். இங்கே என் கணவர் வந்திருக்கும் விஷயத்தைச் சொன்னவரும் அவர் தான். இப்பொழுது என் கணவர் எங்கே இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?” 

“தெரியாது! என்னிடம் சேதுபதி வந்து எதை எதையோ உளறியதும் மனநிலை சரியில்லாமல் போய் விட்டது. அதனால் உடனே அவரை வெளியே அனுப்பி விட்டேன்!” 

“நீங்கள் அவரை அனுப்பி இருக்கவே கூடாது. ஒரு டெலிபோன் எனக்குச் செய்திருந்தால் உடனே கதறிக் கொண்டு ஓடி வந்திருக்க மாட்டேனா…?” என்று நித்தியகலா விம்மினாள். 

அவள் கணவன் மீது உயிரையே வைத்திருக்கும் நல்ல மனைவியைப்போல் பாசாங்கு செய்ததும் ராஜாவுக்குக் கோபம் பொங்கியது. நல்லவனாக இருக்கும் அவளுடைய கணவன் குறுக்கு வழியில் பணம் தேட முயலும் குற்றவாளியாக மாறியதே அவளால் தான்! அப்படி இருக்கும்போது அவள் ஒன்றுமே தெரியாதவளைப் போல் நாடகம் ஆடுவது என்றால்…? 

“மிஸஸ் நித்தியகலா! நீங்கள் ஓடி வந்திருப்பதாக இப்பொழுது சொல்லலாம் ஆனால் கணவரை இந்தக் கதிக்கு ஏன் ஆளாக்கினீர்கள் என்பது தான் என்னுடைய கேள்வி. அவர் குறைந்த வருமானமுள்ள எழுத்தாளர் என்பது உங்களுக்குத் தெரியும். எல்லாம் தெரிந்தும் பணம் பணமென்று அவரை நீங்கள் வாட்டி வதைக்கலாமா? கிடைத்த பணத்தை வைத்துக் கொண்டு ஒழுங்காகக் குடும்பம் நடத்துவது தானே நல்ல தமிழ்ப் பெண்ணின் கடமை?” என்றான் ராஜு. 

அவன் நாசூக்காக இப்படி கண்டித்ததும் நித்தியகலா இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டு அழுதே விட்டாள்! 

“என் முகத்தைப் பார்த்தா சார் இப்படிக் கேட்கிறீர்கள்? நான் கணவனை வாட்டி வதைக்கும் ராட்சசி என்றா நினைக்கிறீர்கள்? கணவன் சுகத்தைத் தவிர வேறு எதைப் பற்றியுமே நினைக்காத வெகுளி சார் நான்!” 

ராஜா அவளை வியப்புடன் பார்த்து விட்டு, “அப்படியானால் உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் இடையே நல்ல பிடிப்பு இல்லை என்று சொல்லுங்கள்;” என்று கேட்டான். 

“ஏன் இல்லை? நல்ல மகிழ்ச்சியான தம்பதிகளுக்கு யாரையாவது உதாரணம் காட்ட வேண்டும் என்றால் எங்களைத் தான் காட்ட வேண்டும்” என்று சொன்ன நித்தியகலா தோள் பட்டையில் இருந்து நழுவி விழுந்த முந்தானையை எடுத்துச் சரிசெய்து கொண்டு, “நீங்கள் எதை ஆதாரமாக வைத்துக் கொண்டு இப்படிப் பேசுகிறீர்கள்?” என்று கேட்டாள். 

“நீங்கள் அளவுக்கு மீறி ஆடம்பரமாகச் செலவு செய்வதாகவும், உங்கள் செலவைச் சமாளிக்க முடியாமல் உங்கள் கணவர் சேதுபதி திண்டாடுவதாகவும் அதனால் மனத்தால் கூட நினைத்துப் பார்க்க முடியாத பயங்கர வேலைகளைச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாகவும் உங்கள் கணவரே சொன்னார்.” 

“என் கணவரா அப்படிச் சொன்னார்? ஓ மை காட்! என் எளிய உடைகளைப் பார்த்த பிறகுமா உங்களுக்கு இந்தச் சந்தேகம்?” 

“அப்படியானால் நான் பொய் சொல்லுகிறேனா?” 

“இல்லை…இல்லை…நீங்கள் பொய் சொல்ல மாட்டீர்கள் என்று திட்ட வட்டமாக நம்புகிறேன். என் கணவர் தான் உங்களிடம் ஏதேதோ சொல்லி ஏமாற்றி இருக்கிறார்.”

“ஏன் என்னை ஏமாற்ற வேண்டும்?” 

நித்தியகலா நெஞ்சு விம்மி விம்மி வெடித்து விடுவதைப் போல் நெடுமூச்செறிந்துவிட்டு, அவர் நல்லவராகவும், என்னிடம் அன்பு செலுத்தக் கூடியவராகவும் தான் இருந்தார். அவருடைய கற்பனைக்கு என்னையே கருப்பொருளாக உபயோகித்துக் கொள்வார் என்று சொல்லிக் கொள்ளவும் நான் வெட்கப்படவில்லை. என் மீது உயிரையே வைத்துக் கொண்டு இருந்த அவர் சில மாதங்களாக மாறிவிட்டார். பெண்ணைப் போல் வந்த பேயொருத்தி அவரைக் கைக்குள் போட்டுக் கொண்டாள்” என்று சொன்னாள் மெதுவாக. 

அவள் சொன்ன தகவல்களைக் கேட்டதும் ராஜா நிமிர்ந்து உட்கார்ந்தான். 

எழுத்தாளர்கள் பெண் மோகம் கொண்டவர்களாக இருப்பார்களா…? ‘கலைத் தூதனின்’ உதவி ஆசிரியனான சேதுபதி பெண் பித்தனாக இருப்பானா…? 

“உங்கள் சக்காளத்தியாக வந்த வாலைக் குமரியின் பெயர் என்ன என்பதை நானும் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?” 

“அவளுடைய பெயர் என்ன என்பது எனக்குத் தெரியாது. நானும் என்னுடைய கணவரும் சந்தோஷமாக வாழுவது கொஞ்சம் கூட அவளுக்குப் பிடிக்கவில்லை. அவள் ஒரு பொறாமைக்காரி அதோடு பணப்பசி பிடித்த பேராசைக்காரி.” 

“இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?” 

“என் கணவரின் நண்பர் நாதமுனி உங்களைப்பற்றி என்னிடம் ஏராளம் சொல்லி இருக்கிறார். நீங்கள் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவராம். குடும்பத்தில் எவ்வளவு தான் சிக்கல் ஏற்பட்டாலும் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத முறையில் அமைதியான முறையில் தீர்த்து வைப்பீர்களாம்” என்றாள் நித்தியகலா. 

ராஜா மௌனமாக இருந்தான். பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்பது அவனுடைய இரத்தத்தில் ஊறிப்போன தனிப்பண்பு தான்! ஆனால்…? 

“நீங்கள் தான் எங்கள் வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். என் கணவர் அந்த-மேனி மினுக்கியை மகிழ வைக்க வேண்டும் என்பதற்காகக் குறுக்கு வழியில் பணம் தேடத் திட்டமிட்டு பயங்கரமான சூழ்நிலையில் சிக்கி இருக்கிறார். அந்தக் கள்ளக் காதலிக்காக என் கணவர் மிகவும் ஆபத்தான பாதையிலும் போய்க் கொண்டு இருக்கிறார்.” 

“அதனால் அந்தப் பெண்ணை நான் கண்டுபிடித்து புத்தி சொல்லித் திருத்த வேண்டுமென்று எதிர் பார்க்கிறீர்களா?” 

“அவளைத் திருத்துவது மட்டுமல்ல! என் கணவரையும் சந்தித்து நேர்மையான வழியில் நடக்கும்படி எச்சரிக்கை செய்ய வேண்டும்:” 

“பெயர் தெரியாத அந்தப் பெண் எங்கே இருக்கிறாள் என்பதை எப்படி நான் தெரிந்து கொள்வது?” 

நித்தியகலா ஒரு விலாசத்தை அவனிடம் சொல்லிவிட்டு “நாதமுனியைக் கேட்டால் இந்த விலாசப்படியுள்ள வீடு எங்கே இருக்கிறது என்பதைத் தெளிவாகச் சொல்லுவார். நாதமுனி உங்களுடைய நண்பராயிற்றே!” என்றாள். 

“நித்தியகலா! எனக்கு இப்பொழுது முக்கியமான வேறு வேலை இருக்கிறது. அதனால் உங்கள் வேண்டுகோளை ஏற்று எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்” என்று ராஜா தன் கைகளை விரிப்பதைப் போல் சொன்னான். 

“நீங்கள் உடனடியாக இதில் தலையிடாவிட்டால் விபரீதம் நடந்து விடும்” என்று நித்தியகலா நடுங்கினாள். 

“உங்கள் கணவர் சேதுபதியின் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடும் எனப் பயப்படுகிறீர்களா? ஒரு பெரிய மனிதரைப் பற்றிய ரகசியங்களை உங்கள் கணவர் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றைப் பிரசுரிக்கப் போவதாகப் பயமுறுத்தி அந்தப் பெரிய மனிதரிடமே பெரும் பணம் பறிக்கத் திட்டமிடுகிறார்! அதனாலேயே அவருடைய உயிருக்கு ஆபத்து நேரிடுமெனப் பயப்படுகிறீர்களா?” என்று ராஜா கேட்டான். 

“ஆமாம்! அந்தப் பெரிய மனிதர் யாரென்பது எனக்குத் தெரியாது! ஆனால் அதிபர் யாராக இருந்தாலும் அவரைப் பயமுறுத்த முயல்வது மரணத்தோடு மோதிக் கொள்வதற்குச் சமம் என்று நாதமுனி என்னிடம் சொன்னார். மேலும் என் கணவர் பயமுறுத்திப் பணம் பறிக்கும் திட்டத்திற்கு உங்கள் மூலமாக நாதமுனியின் உதவியை நாடுவதற்கே உங்களிடம் வந்ததாகவும் நாதமுனி சொன்னார். அதிலிருந்து எனக்குத் திகில் பிடித்து விட்டது!” என்றாள் நித்தியகலா. 

“உங்களுக்கும் நாதமுனிக்கும் என்ன சம்பந்தம்?” என்று ராஜா மெல்லக் கேட்டான். 

“எங்கள் பழைய குடும்ப நண்பர் தான் நாதமுனி. அவருக்கு என் மீது அளவிலாது அன்பும் என் நலன்களில் அக்கறையும் உண்டு” என்றாள் நித்தியகலா, தன் கண்களில் ஒருவிதக் காதலின் பிரகாசம் பொங்க! 

“உங்கள் கணவருக்கும் நாதமுனிக்கும் ஏதாவது மனஸ்தாபமும் உண்டா?” 

“ஆமாம்! ஆனால் அதற்கு நான் மட்டும் காரணமல்ல! முன்பு நாதமுனியின் தமிழ் நேசன் பத்திரிகையில் என் கணவர் வேலை பார்த்த போது தொழில் ரீதியாக ஏதோ மனஸ்தாபமும் முற்றியது! அன்றில் இருந்து ஒருவரை ஒருவர் கண்டால் கொலை வெறி கொள்ளும் அளவிற்கு குரோதத்தை வளர்த்துக் கொண்டு விட்டார்கள்! நீங்கள் உதவ முடியாது என்று உதறித் தள்ளிய பிறகு என் கணவர் இன்றிரவே நேரே அந்தப் பெரிய மனிதனைச் சந்திக்கப்போய் மரண ஆபத்திற்கு ஆளாவாரோ என்று பயந்தேன்! ஆனால் என் கணவரைக் கண்டுபிடித்துத் தடுப்பதற்காக நாதமுனி புறப்பட்டுப் போயிருக்கிறார்” 

“நித்தியகலா! என் நண்பர் நாதமுனியும் உங்கள் கணவரும் நடுவழியில் சந்தித்தால் தாக்கிக் கொள்வார்கள் எனப் பயப்படுகிறீர்களா?” 

“என்ன நடக்கும் என்று என்னால் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை” என்று நித்தியகலா நடுங்கினாள். 

“உங்கள் கணவர் ஏதோ ஒரு பயங்கரமான செய்தியைச் சேகரித்து வைத்து இருக்கிறார் அல்லவா?… அதைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?” 

“எனக்கு எதுவுமே தெரியாது! என் ஆசைக் கணவர் எதையுமே என்னிடம் சொல்லவில்லை!” என்று தன்னுடைய பெரிய கண்களைச் சுழற்றிய நித்தியகலா சோபாவைவிட்டு எழுந்து சென்று அவனுடைய இரண்டு கைகளையும் பற்றிக்கொண்டு, “எங்கள் குடும்பத்தில் மறுபடியும் அமைதியை நிலவச் செய்யமாட்டீர்களா?” என்று கெஞ்சுவதைப் போல் கேட்டாள். 

ராஜா சட்டென்று எழுந்து நின்றான். 

தன்னுடைய கைகளை நித்தியகலா பிடித்ததும் ராஜாவுக்கு என்னவோ போல் இருந்தது. ஆனால் அது பனிக்கட்டியைத் தொட்டு விட்டதைப் போன்ற குளிர்ச்சியான உணர்ச்சியல்ல! 

ராஜா ஒரு விதக் கூச்சம் அடைந்தவனாய், கையை விடுங்கள்” என்று தவித்தான். 

“முடியாது! என் கணவரை இன்றிரவே கண்டுபிடித்து அவருடைய உயிரைக் காப்பாற்றுவதாகவும் அவருடைய கள்ளக் காதலியைக் கண்டுபிடித்து அவளுடைய மோகவலையில் இருந்து என் கணவரை மீட்பதாகவும் தயவு செய்து சொல்லுங்கள். அப்போது தான் நான் கைகளை விடுவேன்” என்று நித்தியகலா தன் கண்களை உயர்த்தி ஏங்குவதைப்போல் அவன் முகத்தைப் பார்த்தாள். கைகளைப் பிடித்திருந்த பிடியையும் தளர்த்தவில்லை:ச் 

அதே சமயத்தில் வாசற்கதவு ‘பளிச்’சென்று திறந்து கொண்டது. ஆனால் கதவைத் திறந்ததோ…? ராஜாவின் அந்தரங்க காரியதரிசினியும் ஆசைக் காதலியுமான பானுவே தான்! 

இரண்டு பேர்களும் அவளைப் பார்த்ததும் குற்றம் செய்து விட்டவர்களைப் போல் திருதிருவென விழித்தார்கள். நித்தியகலா உடனே தன்னுடைய கைகளை எடுத்துக் கொண்டாள். 

பானு கோபத்தினால் முகம் சிவக்கக் கீழுதட்டை மடித்துக் கடித்து விட்டு “சமய சந்தர்ப்பம் தெரியாமல் உள்ளே வந்து விட்டேன் போலிருக்கிறது. சிறிது நேரம் வெளியே போய் காத்துக் கொண்டு இருக்கட்டுமா?” என்று ஏளனத்துடன் கேலியாகக் கேட்டாள். 

அவள் தன்னைத் தப்பாகப் புரிந்து கொண்டாள் என்று எண்ணிய ராஜா, “என்னை வித்தியாசமாக நினைக்காதே பானு! இந்த அம்மையார் நம் நாதமுனிக்கு மிகவும் வேண்டிய சினேகிதி. அதோடு சேதுபதியின் மனைவி! நம்முடைய உதவியையும் ஒத்துழைப்பையும் நம்பியே இங்கே வந்திருக்கிறாள்!…” என்றான். 

நித்தியகலா என்ன செய்வது என்று தோன்றாதவளைப் போல் விழித்து விட்டு, “நான் சொன்னதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு எனக்கு உதவி செய்யுங்கள். இப்போது வந்த நேரம் சரி இல்லாததால் மறுபடியும் உங்களை வந்து சந்திக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு பானுவை முறைத்துப் பார்த்துக் கொண்டே வேகமாக வெளியேறினாள். 

அவள் போன பிறகும் பானுவின் கோபமும், சந்தேகமும் தணிந்த பாடில்லை. கன்னத்தில் இரண்டு முத்தம் கொடுத்து கையில் அடித்து சத்தியமும் செய்து கொடுத்த பிறகு தான் ராஜாவை அவள் நம்பினாள்! 

3. பாதி இரவில் ஒரு பயங்கரம்! 

பானு சிறிது நேரம் வரையில் கொஞ்சி பேசி ராஜாவின் உடம்பில் புதுத் தெம்பு ஏற்றி விட்டு தன் வீட்டுக்குப் போனாள் காரியதரிசினிக்கு காரிய தரிசினியாகவும், காதலிக்கு காதலியாகவும் இருந்ததால் அவளுக்குச் சகல உரிமைகளும் இருந்தன! 

ராஜா அறிவில் சிறந்த மேதை தான். துப்பறியும் கதைகள் எழுதுவதிலும் வல்லவன் தான். அவனுக்கு சகல துறைகளிலும் தனித்திறமை உண்டு. இருப்பினும் பானு கிழித்தக் கோட்டைத் தாண்டாதவனாகவே நடந்து கொள்வான். புத்திக்கூர்மையும், சாதுரியமான போக்கும் கொண்ட பானுமதியின் மீது அவனுக்கு அபாரமான நம்பிக்கை உண்டு. 

பானு மிகவும் கவர்ச்சியாகச் சிரிப்பாள். கடைக்கண் பார்வை போதை வெறியைக் கிளப்பும். இளமைச்செறிவு சொல்லாத புதுக்கதைகளை எல்லாம் சொல்லும் அளவோடு அமைந்த அவளது உடற்கட்டு ஆனந்தபுரிக்கு ‘வா வா’ என்று அழைக்கும். 

இத்தகைய அழகின் பிம்பமான பானு-இன்பரசப் பெட்டகமான அவள்-கற்கண்டு சுவையினை பேச்சிலேயே வடித்துத் தரும் எழில் ராணி சிறிது நேரத்திற்கு எல்லாம் அவனிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போய் விட்டாள்! 

அவள் போன பின்பு அந்த வீடு சூனியப்பகுதி போலாகி விட்டதை ராஜா உணர்ந்தான். 

பெண்-பெண் தான்! அவள் இல்லாமல் இந்த உலகத்தில் களிப்பு ஏது? ஆனந்தம் ஏது? 

இனி மறு நாள் காலையில் தானே பானுவைப் பார்க்க முடியும் என்று நினைத்து தன்னைத் தானே தேற்றிக் கொண்ட ராஜா, ஹோட்டலுக்குச் சென்று பாதி வயிற்றை நிரப்பிக்கொண்டு படுக்கையில் வந்து விழுந்தான். தூக்கம் வந்து கண்களை மூடும் வரையில் காதல் ரசம் சொட்டும் ஒரு ஆங்கில நாவலை அவன் படிக்க வேண்டியதாக இருந்தது! 

ராஜா சிறிது நேரத்திற்கெல்லாம் கண்ணயர்ந்து விட்டான். 

பாதி இரவு! 

தொடர்ச்சியாக டெலிபோன் மணி அலறிக் கொண்டே இருப்பது ராஜாவின் காதுகளில் விழுந்த வண்ணம் இருந்தன. 

யார் இந்த அகால வேளையில் டெலிபோன் செய்வது? கொஞ்சமாவது இங்கிதம் தெரிய வேண்டாமா! அயர்ந்து தூங்கிக் கொண்டு இருப்பவர்களின் தூக்கத்தைக் கலைக்கக் கூடாது என்ற நல்ல புத்தியாவது இருக்கக் கூடாதா? 

இன்னும் சிறிது நேரம் வரையில் டெலிபோன் மணியை அலறவிட்ட ராஜா, வெறுப்புடன் படுக்கையை விட்டு எழுந்து விளக்கைப் போட்டான். 

சுவரின் மீதிருந்த வட்டவடிவமான ‘பென்டெக்ஸ்’ கடிகாரம் மணி இரண்டடித்து ஏழு நிமிடங்கள் ஆகின்றன என்று காண்பித்தது. 

இந்த நடுநிசியில் டெலிபோன் செய்திருப்பதால் முக்கியமான விஷயமாக இருக்கலாம் என்று எண்ணிய ராஜா, டெலிபோன் ரிசீவரை எடுத்து காதோரமாக வைத்துக் கொண்டு, “ஹலோ, ராஜா பேசுகிறேன்” என்று முணுகினான். 

கொட்டாவி ஒன்று பறந்தது! 

டெலிபோனின் மறுமுனையில் இருந்து பேசப்போவது யாரோ என்று அவன் நினைத்துக் கொண்டு இருந்த போதே, “எவ்வளவு நேரமாக கும்பகர்ணனைப் போல் தூங்குகிறீர்கள். நான் தான் இன்ஸ்பெக்டர் அருளானந்தம் பேசுகிறேன்” என்ற கனமான குரல் கேட்டது. 

போலீஸ் இன்ஸ்பெக்டர் அகால வேளையில் டெலிபோன் செய்வது என்றால் அது அபாயகரமான செய்தியாகத் தான் இருக்க முடியும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை. 

இவ்விதம் எண்ணிய ராஜா பதட்டமடைந்து, “குட் நைட் ஸார்! என்ன விஷயம்?” என்று கேட்டான். 

“எவ்வளவு சீக்கிரம் உங்கள் ஆபீஸுக்கு வரமுடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக வாருங்கள். ரொம்பவும் அவசரம்!” 

போலீஸ் அதிகாரியின் அழைப்பில் அளவுக்கு மீறிய பதட்டம் குடி கொண்டு இருந்தது. 

“சீக்கிரமாகப் புறப்பட்டு வருகிறீர்களா? இரண்டொரு நிமிடங்களில் வந்து விட்டால் ரொம்பவும் நல்லது.” 

காரணம் கேட்க ராஜா நினைத்த போதிலும், நேரில் போய் விட்டு வருவது தான் நல்லது என்ற எண்ணத்துடன், “இப்பொழுதே வருகிறேன் சார்” என்று சொல்லி விட்டு ரிசீவரை அதற்குரிய இடத்தில் வைத்தான். 

ராஜாவின் புத்தக ஆபீஸுக்கு வெளியே ஒரு போலீஸ் லாரியும், ஸ்டூடி பேக்கர் நீல நிற வேனும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இரண்டு போலீஸ்காரர்கள் அங்கே காவலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தார்கள். 

வாடகைக் காரிலிருந்து இறங்கும் போதே இவற்றை எல்லாம் கவனித்த ராஜா, தன்னுடைய ஆபீஸில் ஏதோ ஒரு பயங்கரம் நடைபெற்று இருக்கிறது என்ற எண்ணத்துடன் ஆபீஸை நோக்கி வேகமாக நடந்தான். 

ஆபீஸ் திண்ணையில் நாலைந்து போலீஸ்காரர்கள் கூடி நின்றார்கள். பெட்ரோமாக்ஸ் விளக்கு ஒன்று ஒரு போலீஸ்காரரின் கையில் இருந்தது. 

குழம்பிய நிலையிலும் வேகமாக நடந்த ராஜா, போலீஸ்காரர்களின் பக்கமாகப் போய் நின்று நடுவே என்னவென்று கவனித்தான். 

என்ன பயங்கரமான காட்சி அது! 

காவற்காரக் கிழவனான ஜம்புலிங்கம் மண்டை சிதறிய நிலையில் அகோரமாய்ச் செத்துக் கிடந்தான்! தலையில் இருந்து பீறிட்டுக் கொண்டு பாய்ந்த இரத்தம் உடம்பு முழுவதையும் நனைத்து இருந்தது! 

“மிகவும் பரிதாபத்திற்குரிய பயங்கரமான சாவு தான் இது” என்று சொல்லிக் கொண்டே வாட்ட சாட்டமாக வளர்ந்திருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அருளானந்தம் வந்தார். அவருடைய கடுமையான பார்வை மிகவும் குரூரம் வாய்ந்ததாக இருந்தது. 

சட்டென்று பின்னால் திரும்பிப் பார்த்த ராஜா, “ஜம்புலிங்கம் இறந்துவிட்டார் என்பதை இன்னும் நம்பவே முடியவில்லை. மிகவும் நம்பிக்கையுள்ள ஊழியர். நல்லதைத் தவிர வேறு எதையுமே நினைத்துப் பார்க்காதவர்” என்று தொண்டை கரகரக்க விம்மினான். 

ஜம்புலிங்கத்தைப் பொறுத்த வரையில் அவர் ஓர் அனாதை, ராஜாவையும் பானுவையும் தவிர வேறு யாருமே அவருக்கென்று கிடையாது. 

“நல்லவர்களுக்குத் தானே சீக்கிரத்தில் அழிவு ஏற்பட்டு விடுகிறது!” என்று இன்ஸ்பெக்டர் அருளானந்தம் ராஜாவை அழைத்துக் கொண்டு ஆபீஸ் அறையினுள் நுழைந்தார். 

அறைக்கதவு திறந்தபடியே கிடந்ததும் அல்லாமல், பீரோவில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த எல்லா புத்தகங்களும் குலைந்து கிடந்தன. 

மேஜை டிராயர்கள் இரண்டும் வெளியே இருக்கப்பட்டு அவற்றினுள்ளே வைக்கப்பட்டு இருந்த காகிதங்கள் எல்லாம் வெளியே எறியப்பட்டு இருந்தன. 

அவற்றைப் பார்த்ததும் ராஜா ஒன்றும் புரியாமல் திணறினான். 

காவல்கார ஜம்புலிங்கம் கைத்துப்பாக்கியினால் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார். உள்ளே வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் எல்லாம் சோதனை இடப்பட்டு இருக்கின்றன…? 

“மிஸ்டர் எழுத்தாளர்! ஏன் அப்படிக் குழம்பிப் போய் இருக்கிறீர்கள்! கதை எழுதுவதற்கு அருமையான ‘பிளாட்’ கிடைத்து விட்டதே என்ற எண்ணமா?” 

வேதனையான அந்த நேரத்திலும் வேடிக்கையாகப் பேசினார். இன்ஸ்பெக்டர் அருளானந்தம். 

“ஒன்றுமில்லை சார்! நடக்கவே கூடாத ஒரு பயங்கர நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறதே என்று தான் யோசிக்கிறேன்!’ என்று கலங்கினான் ராஜா. 

“அதிருக்கட்டும். நீங்கள் எத்தனை மணிக்கு உங்கள் ஆபீஸை விட்டுப் போனீர்கள்! உங்கள் காரியதரிசினி பானுவையும் சேர்த்துத் தான் கேட்கிறேன்.” 

“சாயங்காலம் நாலரைமணி இருக்கலாம். நானும் பானுவும் சீக்கிரமாகவே வேலையை முடித்து விட்டுக் கிளம்பிவிட்டோம். பானு வீட்டில் அவசரமான வேலை இருப்பதாக சொன்னாள். அதனால் நாலரை மணிக்கே நாங்கள் புறப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.” 

“நீங்கள் நிச்சயமாக நாலரை மணிக்குத் தானே இங்கேயிருந்து கிளம்பினீர்கள்?” 

“இதற்குக்கூட உங்களுக்கு சாட்சி வேண்டுமா? நாங்கள் நாலரை மணிக்குத் தான் புறப்பட்டோம்.” 

“பரவாயில்லை நீங்கள் எழுத்தாளர் என்பதால் உங்கள் பேச்சை நம்புகிறேன்’ என்றார் இன்ஸ்பெக்டர் அருளானந்தம். 

ராஜா ஏதோ ஒரு யோசனையுடன், “இங்கே என் ஆபீஸில் இப்படியொரு விபரீதம் நடந்திருக்கிறதென்று உங்களுக்கு யார் தகவல் கொடுத்தது?” என்று கேட்டான். 

“போலீஸாருக்கு யாரோ ஒருவன் டெலிபோன் செய்து உங்கள் ஆபீஸில் கொள்ளை நடப்பதாக சொல்லிவிட்டு பட்டென்று டெலிபோனை வைத்து விட்டான். போலீஸ் விவகாரங்களில் வீணாக மாட்டிக் கொள்ளக்கூடாது என்று நினைக்கும் யாராவது ஒரு சாதாரண ஆளாகவும் அவன் இருக்கலாம்! ஆனால் நாங்கள் இங்கே வந்து பார்த்தபோது கொள்ளையோடு ஒரு கொலையும் நடந்து ஒரு பிணமும் எங்களுக்கு கிடைத்தது” என்று கூறிய இன்ஸ்பெக்டர் அருளானந்தம், “அதிருக்கட்டும் ராஜா, நீங்கள் இப்போது எழுதும் வேலையை மட்டும் தான் கவனிக்கிறீர்களா? அல்லது வருமானம் போதவில்லை என்று வேறு ஏதாவது துணைத் தொழிலும் செய்து வருகிறீர்களா?” என்று கேட்டார். 

“நான் ஒரே ஒரு தொழில் தான் செய்து வருகிறேன். அது எழுதும் தொழில்!” 

“நீங்கள் வெறும் எழுத்தாளராக மட்டும் இருந்தால் இந்த அசம்பாவிதங்கள் நடைபெற வேண்டிய அவசியம் இருக்காது. உங்கள் காவற்காரக் கிழவனும் கொலை செய்யப்பட்டு இருக்கமாட்டான். உங்கள் ஆபீஸும் சோதனை இடப்பட்டு இருக்காது.” 

ராஜா பதில் பேசாமல் மேஜையின் விளம்பைப் பிடித்து தலையைத் தாழ்த்தியபடியே நின்று கொண்டு இருந்தான். 

“இங்கேயிருக்கும் பொருட்களில் ஏதாவது காணாமல் போயிருக்கிறதா என்று பார்த்துச் சொல்லுங்கள்.” 

“ஆபீஸில் என்னென்ன பொருட்கள் உண்டு என்பது பானுவுக்கு மட்டும் தான் தெரியும். அதனால் அவளிடம் தான் கேட்க வேண்டும்.” 

“நன்றாக யோசனை செய்து பாருங்கள். ஒரு பொருள் இங்கே இருந்திருக்க வேண்டும் அந்தப் பொருள் கொலைகாரனால் எடுத்துச் செல்லப்பட்டு இருக்கலாம்.” 

ராஜா நினைத்துப் பார்த்தான். அப்படிப்பட்ட விலை மதிப்புள்ள பொருள் இருந்ததாக அவனுடைய நினைவுக்கு வரவில்லை. 

“இங்கே கதையளக்கும் காகிதங்களைத் தவிர வேறு எதுவுமே கிடையாது” என்றான் ராஜா. 

“பரவாயில்லை. உங்களைத் தேடிக்கொண்டு யாராவது வந்தார்களா?” 

“யாருமே வரவில்லையே!” 

“நன்றாக யோசனை செய்து மூளைக்குச் சிறிதளவு வேலை கொடுத்து விட்டு அதன் பிறகு பேசுங்கள்.” 

அப்பொழுது ‘தமிழ்நேசன்’ பத்திரிகையில் பணியாற்றும் நாதமுனி “என்ன இது? ஒரே போலீஸ் கூட்டமாக இருக்கிறது?” என்று பரபரப்போடு கேட்டுக் கொண்டே வந்தான். 

போலீஸ் இன்ஸ்பெக்டர் அருளானந்தம் உட்பட எல்லோரும் அவனை உன்னிப்பாகப் பார்த்தார்கள். 

“நான் தான் ‘தமிழ் நேசன்’ பத்திரிகையின் துணை ஆசிரியர்! நாதமுனி, என்ற பெயரைச் சொன்னால் தமிழ் படிக்கத் தெரிந்த எல்லோருமே அறிவார்கள்!” என்று பெருமையோடு சொன்ன நாதமுனி, “வாட்ச்மேன் ஜம்புலிங்கத்தைக்’ கொலை செய்தது யார்?” என்று கேட்டான். 

“நீங்கள் கூட இருக்கலாமே,” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் இன்ஸ்பெக்டர் அருளானந்தம். 

“நானா…..ஓ…… நோ! எனக்கு இரத்தத்தைக் கண்டாலேயே மயக்கம் வந்துவிடும்.” என்றான் நாதமுனி. 

“அது சரி, இப்பொழுது நீ எங்கேயிருந்து வருகிறாய்” என்று கேட்டான் ராஜா. 

“சினிமாவுக்குப் போய் விட்டு இந்த வழியாக வந்தேன். போலீஸ்காரர்களின் சிவப்புத் தொப்பிகள் தெரியவே உனக்குத் தான் ஆபத்து நேர்ந்து விட்டதோ என்று நினைத்து பயந்து போய் வந்தேன்.” என்றான் நாதமுனி. 

“அதிருக்கட்டும்! உங்கள் ஆபீஸில் நுழைந்து, சோதனை போட்டிருப்பதும், காவற்காரக் கிழவனைக் கொலை செய்ததும் யாராக இருக்கக்கூடும் என்பதைப் பற்றிச் சிந்திப்போம். இந்த இரவிலேயே ஒரு முடிவுக்கு வந்து விடுவது நல்லது.” 

இன்ஸ்பெக்டர் அருளானந்தம் கண்டிப்புடன் சொன்னதும், நாதமுனி திடீரென்று, “ராஜா! இந்தத் திருவிளையாடல்களை நடத்தி விட்டுப்போன நபர் சேதுபதி சம்பந்தப்பட்டவனாக இருக்குமோ?” என்று கேட்டான். 

அவன் கேட்டது நெஞ்சில் ஓங்கி அறைந்தது போலிருந்தது ராஜாவுக்கு! 

போலீஸார் மத்தியில் வைத்து ஒரு வீண் வதந்தியைக் கூட கிளப்பி விட்டால் அதைப்பற்றி ஆராயத் தொடங்கி விடுவார்கள். அப்படி இருக்கும் போது ஏற்கனவே தொந்தரவில் சிக்கியிருக்கும் சேதுபதியையும் ஆபத்தில் மாட்டி விடுவது என்றால்…? 

நாதமுனி சொன்னதைக் கேட்டு துப்பு கிடைத்து விட்டதைப் போல் மகிழ்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் அருளானந்தம், “யார் அந்த சேதுபதி!’ என்று கேட்டார். 

இனி மறைப்பதால் ஆபத்து தான் ஏற்படும் என்பதை உணர்ந்த ராஜா, “அவனும் ஒரு பத்திரிகையில் வேலை பார்க்கும் துணை ஆசிரயர் தான் என்னுடைய உதவியை எதிர்பார்த்து இன்றைக்கு வீட்டுக்கு என்று சொன்னான். 

“என்ன உதவி அது?” 

“அது எங்களுக்கிடையே உள்ள தனிப்பட்ட விஷயம், அதை பகிரங்கமாகச் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்.” 

அவன் இப்படிச் சொன்னதும் இன்ஸ்பெக்டர் அருளானந்தத்துக்குக் கடுமையான கோபம் வந்து விட்டது. 

“எழுத்தாளர் சார்! விளையாடுகிறீர்களா? நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஒழுங்கான முறையில் பதில் சொல்லாவிட்டால் நீங்கள் கம்பி எண்ணுவீர்கள், ஜாக்கிரதை!” 

“என்னிடம் சேதுபதி பேசியதற்கும், இங்கே நடைபெற்று இருக்கும் நிகழ்ச்சிகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. என்னுடைய ஊழியனைக் கொலை செய்தது யார் என்பதைக் கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுக்கும் ஆர்வம் உங்களைப் போல் எனக்கும் இருக்கும். அதனால் இவற்றைப்பற்றி பயனுள்ள விஷயங்கள் எதையாவது தெரிந்து கொண்டால் உடனே உங்களுக்கு தகவல் கொடுக்கிறேன். “

இன்ஸ்பெக்டர் அருளானந்தம் குறுக்கும் நெடுக்குமாக நடந்து விட்டு, “சேதுபதியை நீங்கள் சந்தித்து நாளை காலையில் அவன் என்னை வந்து பார்க்கும்படிச் செய்யுங்கள்” என்று சொன்னார். 

ராஜா தலையை அசைத்தான். பெரிய மனிதனைப் பற்றிய ரகசிய செய்தி தான் இத்தனைக்கும் காரணமா என்று அவன் நினைக்காமலும் இல்லை. 

போலீஸ் சோதனைக்குப் பின், ஆபீஸை மூடி விட்டு ராஜாவும், நாதமுனியும் ஜோடியாக வெளியே வந்தார்கள். காவற்காரக் கிழவன் ஜம்புலிங்கத்தின் பிணத்தைப் பார்ப்பதற்கு அவர்களுக்கு என்னவோ போல் இருந்தது! 

– தொடரும்…

– சொட்டு ரத்தம் (மர்ம நாவல்), முதற் பதிப்பு: 1966, பிரேமா பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *