சூரியனை எழுப்புவேன்!





(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தினமும் காலையில் கூவி சூரியனை எழுப்புவது தாத்தா சேவலின் வேலை! கருக்கலில் தாத்தா சேவல் விழித்துக் கொள்ளும். அது அந்தக் குடிசையின் மீது தாவி ஏறும்! ஒய்யாரமாய் சிறகுகளை அடித்துக் கொள்ளும். பின்னர் கிழக்குப் பக்கம் பார்த்து “கொக்கரக்கோ… கோ” என நாலைந்து முறை கூவும்! அது கூவி முடிப்பதற்கும், அடிவானில் சூரியன் வருவதற்கும் சரியாக இருக்கும்!
ஒவ்வொரு நாளும் தாத்தா சேவல் இப்படி சூரியனை எழுப்புவதைக் குட்டிச் சேவல் பார்த்துக் கொண்டிருக்கும். தானும் தாத்தா போன்று சூரியனை எழுப்ப வேண்டும் என்று அதற்கு ஆசை வந்தது. அதுவமல்லாமல் இப்போது தான் கொஞ்ச நாளாய் அது கூவவும் பழகியிருந்தது. அது தாத்தா சேவலிடம், “தாத்தா, தாத்தா, உங்களுக்கு பதிலா நான் கூவி சூரியனை எழுப்புறேனே…!” என்று கேட்டது. அதற்குத் தாத்தா சேவல், “நீ இன்னும் வளரணும்…, உனக்கு பொறுப்பு பத்தாது!” என்று பதில் சொன்னது.
குட்டிச் சேவல் அம்மாவிடம் ஓடிப்போய், “நாளையிலிருந்து நான் கூவி சூரியனை எழுப்புறேன்னு தாத்தா கிட்டே கேட்டேன்! அவரு மாட்டேன்னுட்டாரு! நீ கொஞ்சம் சொல்லும்மா!”என்று கேட்டது.
“இப்ப என்ன அவசரம்? கொஞ்சநாள் பொறேன்!”
“என்னம்மா நீயும் இப்படிச் சொல்றே? அது என்ன அவ்வளவு பெரிய வேலையா?”
“பின்னே? நாம கூவித்தான் சூரியனே வருது. அதைப் பார்த்துத்தான் பறவைகள் இரை தேடப் போகுது! பூக்கள் மலருது! மனிதர்கள் வேலைக்குப் போறாங்க! இப்படி அத்தனை செயல்களுக்கும் நாம கூவுறதுதான் தூண்டுகோலா அமையுது!”
”சரிம்மா, நான் நாள் தப்பாம கூவுறேனே! என்னை நம்புங்க!”
“சரி, ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறே! நாளையிலிருந்து கூவு!” என்றது அம்மாவும் தாத்தாவும்!
“நாளை முதல் நான்தான் கூவி சூரியனை எழுப்பப் போகிறேன்!”
குட்டிச் சேவல் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தது!
அதற்கு தூக்கமே வரவில்லை! எப்போதடா சாமப் பொழுது கழியும் என்று காத்திருந்தது. கருக்கலில் அது சரியாக எழுந்து கொண்டது! தாத்தாவைப் போன்றே மேற் கூரையில் தாவி ஏறியது! சிறகுகளை பலமாக அடித்துக் கொண்டது. அப்புறம் கிழக்குப் பக்கம் பார்த்து “கொக்கரக்கோ… கோ” என நாலைந்து முறை கூவியது. அது கூவி முடிப்பதற்கும் சூரியன் வருவதற்கும் சரியாக இருந்தது.
பறவைகள் இரை தேடச் சென்றன! பூக்கள் மலர்ந்தன! மனிதர்கள் வேலைக்குப் போனார்கள்!
“இனிமே இங்கே எல்லாமே நான்தான்…!” என்று ஒய்யாரமாகப் பார்த்தது!
எல்லோரும் குட்டிச்சேவலை விநோதமாகப் பார்த்தார்கள்! ஆர்வக் கோளாறில் பத்துப் பதினைந்து நாட்களுக்கு சரியாகக் கூவியது!
ஒரு நாள் விடியற்காலை, “இப்படி அதிகாலையில் வேலை மெனக்கெட்டு எதுக்காக கத்தணும்? இதுனால நமக்கு என்ன உபயோகம்?” என்று யோசித்தது!
சௌகரியமாகத் தூங்கி விட்டது! அம்மாக் கோழியும், தாத்தா சேவலும் முகத்தில் தண்ணீர் தெளிக்காத குறையாக எழுப்பிய பிறகே எழுந்தது!
அம்மாக் கோழி…., “ஏன் இன்னிக்குக் கூவல?”
“தூக்கம் வந்துவிட்டது… தூங்கிவிட்டேன்”
“கடமையைச் செய்யாம தூங்குறது தப்பில்லையா?”
திரு…,திரு வென்று விழித்துக்கொண்டு வாசலை எட்டிப் பார்த்தது குட்டிச் சேவல்!
சூரியன் மேலே வந்திருந்தது! பறவைகள் இரைதேடப் போயிருந்தன! மனிதர்கள் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார்கள்!
“நான் கூவாட்டி என்ன? வழக்கமா நடக்குறதெல்லாம் நடந்துகிட்டேதானே இருக்கு?”
“ஆமாமா.. ஆனா வழக்கமா கூவ வேண்டிய சேவல்தான் இன்னிக்குக் கூவல”
“இப்ப என்ன கெட்டுப் போச்சுன்னு ரெண்டு பேரும் என்னை எழுப்பி உட்கார வச்சு கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கீங்க?” என்று குட்டிச் சேவல் கோபப்பட் டது.
தாத்தா சேவல் குட்டிச் சேவலின் தலையை வருடியபடி, “நாம கூவறது மத்தவங்களுக்காக மட்டுமில்லை! நமக்காகவும் தான்! தினமும் காலையில் எழுந்ததும் நாம இரை தேடப் போகணும்! நண்பர்களைச் சந்திக்கணும்! இன்னும் நிறைய வேலைகள் இருக்கு! ஒரு நாளை உற்சாகமா ஆரம்பிக்கணும்! சும்மா வெறுமனே கூவணும்னா அது நமக்குப் பெரிசா தோணாது! ஆனா நாம நாம கூவித் தான் சூரியனே வருதுன்னு சொன்னா அதுல ஒரு பொறுப்புணர்ச்சி வரும்! நம் கடமைகளை நிறைவேற்ற ஓர் உந்துதலைக் கொடுக்கும்! நாம கூவாட்டி சூரியன் வராமப் போயிராது! பறவைகள் இரை தேடாமப் போயிராது! வழக்கப்படி எல்லாம் நடந்துகிட்டே தான் இருக்கும்! ஒரு வேலையை ஆரம்பிக்கும் போது இருக்கும் அதே சுறுசுறுப்பு கடைசி வரைக்கும் தொடரணும்! அதுக்கு சுவாரசியமான வழிமுறைகளில் ஒன்றுதான் இந்தக் கூவறது! புரியுதா உனக்கு?” என்று கூறியது தாத்தாக் கோழி!
“புரியுது தாத்தா! இனிமே நாள் தவறாம சூரியனை எழுப்புவேன்! ஒரு நாளை உற்சாகமாக ஆரம்பிப்பேன்!” என்றது குட்டிச் சேவல்!
– தினமணி சிறுவர்மணி 21-11-2015.