சிதிலம் தாங்காத சிற்பிகள்…





(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12
அத்தியாயம்-11
‘ஏ.வி.எம்மில் இயக்குநர் பரத் புதுப்படத்திற்குப் பூசை. முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்பு!’ – செய்தி சிவாவிற்கு அதிர்ச்சியாய் இருந்தது.

‘நம் சொல்லை மீறி எவன் இவனுக்குக் கால் கொடுத்தான்? படம் இயக்க வாய்ப்புக் கொடுத்தான்?’ மூளையைக் கசக்கினான். வீட்டில் குட்டி போட்ட பூனை போல முன்னே பின்னே நடந்தான்.
‘நண்பா!” அருகில் சோபாவில் அமர்ந்திருந்த செல்லதுரையை அழைத்தான்.
“என்ன சிவா?“ அவன் இவனை ஏறிட்டான்.
“பத்திரிக்கை செய்தி படிச்சியா?”
“ம்ம்…”
“யார் தயாரிப்பாளர்?“
“சொந்தத் தயாரிப்பு?”
“என்ன! சொந்த தயாரிப்பா?!” சிவாவுக்கு அதிர்ச்சி. அது குரலில் வெளிப்பட்டு விழிகள் விரிந்தது.
“ஆமாம். நாம போட்ட போடுல எவனும் அவனுக்குப் பட வாய்ப்பு கொடுக்கலை. அதனால தன் வீடு சொத்தை அடமானம் வைச்சு தயாரிப்புல இறங்கிட்டான். மீசை வைச்சவன்!” செல்லதுரை குரலில் ஏளனம் இருந்தது.
‘ஆள் தனக்கு சரியான எதிரி!’ நினைத்த சிவா “யார்கிட்ட அடமானம்?” திகைப்படக்கிக் கேட்டான்.
“அவன்தான் அநியாய வட்டி ராம்சிங் சேட்!”
“அவன்கிட்ட போனவன் எவனும் சொத்தை மீட்டதாய் சரித்திரம் கெடையாதே!”
“அதோட இன்னொரு சந்தோசமான சமாச்சாரம். கதை திரைக்கதை இயக்கம் நடிப்பு எல்லாம் அவனே!”
“அப்படியா?! மத்த நடிகை நடிகர்கள்?”
“புது முகங்கள்!” என்ற செல்லதுரை தொடர்ந்து, “பரத் நம்மை எதிர்த்து தன்னைத்தானே அழிச்சிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டான். கதை திரைக்கதை இயக்கம் ஓ.கே. அவனுக்குக் கை வந்த கலை. ஆனால் நடிப்பு?…இவனுக்கு ஒத்துவராது. அதிலும் இவன்தான் கதாநாயகனாம். ஆளை எதிர்ல பார்க்கவே சகிக்காது. ஒரு பயல் பார்க்க வரமாட்டான். படம் படுத்துடும். புது நடிகர்கள் நிறைய டேக் வாங்கி பணம், நேரம் காலத்தை வீணாக்குவாங்க. மொத்தத்துல ஊத்திக்குவான்!” என்றான்.
“இல்லே கணேசு. நீ நினைக்கிற தப்பு. ஆள் கில்லாடி. சினிமாவுல நுழையனும்ன்னு நடிப்பு ஆர்வத்துல வருகிறவர்களுக்குச் சம்பளம் தேவை இல்லை. சாப்பாட்டு செலவே போதும். அடுத்து ….படத்துல அறிமுகப்படுத்தப் படுகிறவர்களிடம் லட்சக்கணக்கில் பேரம் பேசி வாங்கலாம். தயாரிப்பு செலவு குறையும். அடுத்து பரத்தால மண்ணையும் பொன்னாக்க முடியும். களிமண்ணைக்கூட சரியாய்ப் பிசைஞ்சு கண்ணுக்குப் பளிச்சிடுறாப்போல கலைப் பொருளாய் ஆக்கிடுவான்.”
“இருக்கட்டுமே! மத்த செலவெல்லாம் ஒன்னுதானே!”
“கெடையாது. அவன் நேரம் மத்த எல்லாருக்கும் இவ்வளவு சம்பளம்ன்னு சங்கங்கள் முடிவு அவனுக்குச் சாதகமாய் இருக்கு. தயாரிப்பு செலவு ரொம்ப குறையும்”
“இருக்கட்டுமே.!.. ஆத்துல முழுகனும்ன்னு முடிவு பண்ணினவன் அதிகமா போற தண்ணியில முழ்கினா என்ன குறைவா போற தண்ணியில மூழ்கினா என்ன!”
“நாமும் அவனுக்கு எதிரா படம் தயாரிக்கனும். தயாரிக்கலைன்னா இயக்குநர்கள் நிழல்ல நடிகர்கள் இருக்கிறதாப் படும்.”
“ஏற்கனவே நமக்கு பரத்தால பல கோடி ரூபா நஷ்டம். இப்பவும் நாம அவனுக்கு எதிரியா படம் எடுத்தோம்ன்னா…”
“நஷ்டமாக மாட்டோம். விநியோகஸ்தர்கள் என் படத்தை வாங்க போட்டிப் போடுவாங்க. அவன் படத்தை வாங்க ஆள் இருக்காது, அதிலேயே என் பலம் என்னன்னு அவனுக்குப் புரியும்.”
“இது தப்புக் கணக்கு. அவன் நட்சத்திர இயக்குநர். அவன் படத்தையும் கண்டிப்பாய் வாங்குவாங்க. சரி எடுப்போம். கதை திரைக்கதை இயக்கம்?”
“கண்டிப்பாய் படைப்பாளிகள் சங்கம் நமக்கு எதிரி. நடிகர் நடிகைகளைத் தவிர வேற எந்த இயக்குநர் கதாசிரியர்களையும் நாம எதிர்பார்க்க முடியாது, கூடாது. எல்லாம் நாமே என்பதுதான் சரிபடும்!”
“சிவா…ஆ..” செல்லதுரை திடுக்கிட்டு பார்த்தான்.
“என்ன பார்க்கிறே ? தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிச்ச படம் ஆந்திராவுல சக்கைப் போடு போடுது, அந்த படத்தை வாங்கி தமிழ் நாட்டு மக்கள் ரசனைக்கேற்ப அதை அப்படியே கொஞ்சம் மாத்தி வெளியிட்டோம்ன்னா கல்லா நிறையும்.”
“அந்தப் படமே தமிழ்லேர்ந்து தெலுங்குக்குப் போனதுதானே?”
“போனா என்ன, திருப்பிக் கொண்டு வர்றதுல தப்பே இல்லே. அப்படிக் கொண்டு வந்த படங்கள் இங்கே வெற்றி அடைஞ்சிருக்கு.”
“மலையாளத்துல சுட்டுக்கலாம்.”
“வேணாம். அங்கே கதை இருக்கும். ஆனா எனக்குத் தகுந்தபடி பிரமாண்டமா எடுக்க முடியாது.”
“சரி. மத்த தொழில் நுட்பக் கலைஞர்கள். கேமராமேன்?“
“எல்லாம் ஆந்திராப் பக்கம். நாம ரெண்டு பேர் மட்டும் அங்கே போறோம். அங்கே உள்ள ஆட்களை வைச்சு அங்கேயே படத்தைச் சுடுறோம். வெளியிடுறோம். நம்மை எதிர்த்தவங்க அத்தனைப் பேருக்கும் மொத்தமாய் சாட்டையடி.”
“நல்ல யோசனைதான். ஆனா… நாம மொத்தமா தமிழ்நாட்டு கலைஞர்களை ஊதாசினப்படுத்தின குற்றதிற்கு ஆளாவோம். அது என்ன அங்கே படம் எடுத்து இங்கே வெளியிடுறது? அதையும் அங்கேயே வெளியிட்டு காசு பார்க்க வேண்டியதுதானேன்னு நம்ம ரசிகர்களே கொதிப்படைவாங்க. தெரியாதவங்களுக்கு பரத்தே சொல்லிக் கொடுத்து பெரிசாக்குவான்.”
சிவாவிற்கு அந்த சிக்கல் புரிந்தது, அப்படி.. தமிழ் நாட்டு ரசிகர்கள் மொத்தமாய்த் தன்னை ஒதுக்கிவிடுவார்கள்! தெரிந்தது.
“நாம் நம்ம கலைஞர்கள் வேணாம்ன்னு ஒதுக்கலை. அவர்களாகத்தான் என் படத்துல வேலை செய்யக் கூடாதுன்னு போர்க்கொடி துாக்கி இருக்காங்க. அடுத்து, கலைக்கு மொழி தேவை இல்லே. இதையெல்லாம் நாம விளம்பரத்திலேயே ரெண்டு வரி போட்டு விளக்கிட்டோம்ன்னா பாதிப்பில்லைங்குறது என் அபிப்பிராயம்.” என்றான் செல்லதுரை.
“நல்ல யோசனை!” குழம்பி இருந்த மனம் சிவாவிற்குக் கொஞ்சம் தெளிவு வந்தது.
இருந்தாலும்…
“எனக்கும் பரத்துக்கும் தகராறு. அதுல உங்களுக்குச் சம்பந்தமில்லே. படைப்பாளிகள் சங்க நடவடிக்கைகளை மதிக்கிறேன். அவுங்க நிர்ணயிச்ச சம்பளம் தர்றேன். வேலை செய்ய சம்மதமான்னு மத்த எல்லார்கிட்டேயும் பேசிப் பார்க்கலாமா?” கேட்டு யோசனையுடன் செல்லதுரையைப் பார்த்தான் சிவா.
“வேணாம். அது நாமே நம்ம தோல்வியை ஒப்புத்துக்கிறாப்போல அவர்களுக்கு வெற்றி. நம்மை எதிர்த்தவங்களுக்குச் சரியான சவுக்கடி கொடுக்கனும்ன்னா படம் ரிஜிஸ்ட்ரேசன்லேர்ந்து அங்கே வைச்சு மொத்தப்படத்தையும் முடிச்சு இங்கே திரையிடுறதுதான் சரி.” செல்லதுரை திட்டவட்டமாக சொன்னான்.
சிவாவிற்குப் பாதி கஷ்டமும் முடிந்தது. துணிந்து தன் கைபேசி எடுத்தான்.
எண்களை அழுத்தி காதில் வைத்து….
“ஹலோ! தினத்தந்தி நிருபரா? நான் சிவா பேசறேன். பிரஸ் மீட் ஒன்னு வைச்சிருக்கேன். சரியா அஞ்சு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுங்க.” சொல்லி அணைத்து இப்படி எல்லா நிருபர்களையும் அழைத்து வைத்தான்.
“எதுக்கு இப்போ திடீர்ன்னு பிரஸ் மீட்?” செல்லதுரை அதிர்ச்சியாய் சிவாவிடம் கேட்டான்.
“புதுப்படம் அறிவிப்புக்கு !”
“அப்படின்னா….படம் எடுக்கனும்ன்னு முடிவே பண்ணிட்டீயா?!”
“பண்ணியாச்சு. எடுக்கலைன்னா இத்தனை நாள் சிவா பயந்த கோழைங்ககிட்ட வீரன்னு பூச்சாண்டி காட்டிக்கிட்டிருந்தான். இன்னைக்கு சரியான ஆள் எதிர்த்ததும் அடங்கிட்டான்னு எல்லாரும் பேசுவான். அவமானம். அடுத்து அடுத்து நம்ம துணை நம்ம துணை இல்லாம இவனால வனால வாழவே முடியாதுன்னு எல்லாருமே நினைப்பான். விளைவு….. நாளைக்கு நம்ம இஷ்டத்துக்குப் போய் ஒருத்தன் முன்னாடி நிக்க முடியாது. எனக்காக கதையை இப்படி மாத்து அப்படி மாத்துன்னு சொல்ல முடியாது, அடங்கிப் போகனும். இந்த புதுப்பட அறிவிப்பு எவன் தயவும் இல்லாம என்னைக்கும் வெற்றி வீரன்னு எதிரிங்களை மிரட்டும்.”
செல்லதுரைக்கு மனசு சரி இல்லை. பரிதாபமாக நண்பனைப் பார்த்தான்.
அவன் பார்வையைப் புரிந்து கொண்ட சிவா “இதனால என்ன நஷ்டம் வந்தாலும் பரவாயில்லே. நான் தாழ்ந்து போகமாட்டேன். எனக்குன்னு ஒரு தனித் திறமை சக்தி இருக்கு என்பதை தெரியாதவர்களுக்குத் தெரியப்படுத்தனும். ஏன் அப்படியொரு திறமை இருக்கான்னு எனக்கும் தெரியனும். அதுக்குத்தான் இந்த சோதனை முயற்சி.” முகத்தை இறுக்கிக் கொண்டு கடுமையாக சொன்னான்.
செல்லதுரைக்கு நண்பனின் நண்பனின் பிடிவாதம் வெறியாக மாறி விட்டது தெரிந்தது. இனி அவன் கொண்ட கொள்கைதான். பிடித்த பிடிதான்! உணர்ந்தான். அடுத்து ஏதும் பேசாமல் மௌனமானான்.
அடுத்த நாள் தினசரிகளில் கொட்டை எழுத்துக்களில்…
“நடிகர் சிவா புதுப்பட ஆயத்தம்!” – சேதி வெளியானது.
படித்த வினியோகஸ்தர்களும் விபரம் புரிந்தவர்களும் “சபாஷ்! சரியான போட்டி!” வாய் விட்டுச் சொன்னார்கள்.
அத்தியாயம்-12
சென்னை விநியோகஸ்தர் பரமசாமி ரொம்ப ரொம்ப விபரமானவர். ரொம்ப சீக்கிரம் முன்னேறி விரைவில் தயாரிப்பாளராகி கோடி கோடியாய் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை.
“மொதல்ல சிவா படத்துக்கு முன்பணம் கொடுக்கலாம்!” என்று மறுநாள் நடந்த விநியோகஸ்தர்கள் மாதாந்திரக் கூட்டத்தில் சொன்னார்.
“அவசரப்படக்கூடாது. ரெண்டு பேரும் திறமைசாலி, விபரமானவங்க. தான் ஜெயிக்கனும் என்பதற்காகப் போட்டிப் போட்டு பணத்தைச் செலவழிச்சு எல்லா செலவையும் நம்ம தலை மேல வைச்சு லாபம் சம்பாதிக்கனும்ன்னு படம் அதிக விலை சொல்லுவாங்க. அதீத தன்னம்பிக்கை அவசரத்துல அள்ளித் தெளிச்சு சொதப்பி வைச்சாலும் வைச்சிருந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லே. நஷ்டம் நம்ம தலையில விழும். முன் பணம் இப்போ நீட்ட வேணாம். அடுத்து நமக்கு இது ஒரு சோதனைக் காலம். நம்ம வகுத்த சட்டதிட்டப்படி சிவா படம் டாப் ஒன் ரேட். முந்தையப் படங்களை விட தொகை குறைவு. இந்த விலைக்கு சிவா படிவார்ன்னு தோணலை. தமிழ்நாட்டு எல்லா தியேட்டர்களும் நம்ம கை வசம் இருக்கிறதுனால அவர் தானாய் வெளியிடுறதுக்கும் சாத்தியமில்லே. நாம பொறுமை காக்கனும்!” மதுரை ஏரியாக்காரர் நிலைமையைச் சொன்னார்.
“ரெண்டு பேரும் திறமைசாலிங்க. சிவா படம் எப்படியும் நுாறு நாட்கள் ஓடும். அவன் படம் என்னைக்கும் நம்ம கையைக் கடிச்சதில்லே.” என்றான் பரமசாமி.
“அப்படியெல்லாம் சொல்லமுடியாது. சூப்பர் ஸ்டார் படமே ஒன்னு படுத்துக்கிடுச்சு. அவர் நல்ல மனுசன். நாம பாதிக்கக்கூடாதுன்னு கொஞ்சம் பணத்தைத் திருப்பிக் கொடுத்து நம்மைக் காபந்து பண்ணினாார். சிவாகிட்ட அந்த மனிதாபிமானத்தையெல்லாம் எதிர் பார்க்க முடியாது. லாபம் நஷ்டம் நம்ம தலையில விடியும்!” என்றார் இன்னொரு தயாரிப்பாளர்.
இரண்டு பேர் வாதத்தையும் பொறுமையாய்க் கேட்ட திருச்சி தில்லையம்பலம் “ரெண்டு பேரும் பேச்சை நிறுத்துங்கப்பா. தலைவர் என்ன சொல்றார்ன்னு பார்ப்போம்.” என்றார்.
எல்லாரும் சிவசாமியைப் பார்த்தார்கள். அவர் எப்போதும் நிதானம்.
“நாம இன்னார் படத்துக்கு இவ்வளவுதான்னு விலை நிர்ணயம் செய்திருக்கோம். அந்த விலைக்கு பரத் நம்ம கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு படம் எடுக்கிறவர் ஒத்துப்பார். சிவா ஒத்துக்குவாரான்னு தெரியலை. எதுக்கும் ஆள் படத்தை முடிச்சு நம்மகிட்ட போட்டுக் காட்டினார்ன்னா நாம நிர்ணயிச்ச விலைக்கு வந்தால் எடுத்துப்போம்.” என்றார்.
“வழக்கம் போல் படம் ஆரம்பத்திலேயே முன் பணம் கொடுத்தால் பின்னால பேரம் பேசி குறைக்க வாய்ப்பிருக்கு. இந்த நேரம் கொடுத்து உதவலைன்னா… பின்னால அவுங்க சொன்ன விலைதான்.” பரமசாமிக்கு எப்படியும் வாங்கி விடவேண்டுமென்ற துடிப்பு பழைய நினைப்பிலேயே சொன்னார்.
“பேரத்துக்கே வேலை இல்லே நிர்ணயவிலை.”
“ஆக முடிவு என்ன?“
“இப்போ அவுங்க எடுக்கிற படம் இரண்டும் ஒருத்தருக்கொருத்தர் ஒத்துழைப்பு இல்லாம இருக்கு. பரத்கிட்ட டெக்னீஷியனெல்லாம் இருக்காங்க. திறமையான பேர் பெத்த நடிகர் நடிகை இல்லே. சிவா பக்கம் நடிகர் நடிகைகள் இருக்காங்க, ஆனா சரியான டெக்னீஷியன்ஸ் இல்லே. ஆந்தரா பக்கம் போயிருக்கார். ஆகையினால ரெண்டு பேரோட படத் தரமும் சரியாய் இருக்காது. மேலும் சரியான ஆட்கள் இல்லேங்கிறதுனால படம் வெளிவரத் தாமதம் ஆனாலும் ஆகலாம். நாம பணத்தைத் துாக்கி இதுல போட்டோம்ன்னா.. அடுத்த படமெல்லாம் வாங்கி பொழைப்பு நடத்த முடியாது, ஆகையினால படம் முடிஞ்சு விலைக்கு வரும்போது பணம் கொடுக்கிறதுதான் நல்லது.” நிறுத்தினார்.
“ஆமாம் தலைவர் சொல்றதுதான் நல்ல யோசனையாய் இருக்கு. அவர் சொல்படியே அவுங்க படம் முடிச்சு வரும்போது கிட்டே போவோம்“ என்றார் மூத்த விநியோகஸ்தர் ஒருத்தர்.
அனைவரும் அவர் சொல்லுக்கு மதிப்புக் கொடுத்து கப்சிப் ஆனார்கள்.
விபரம் புரியாத சிவா, பரத்திற்கு விநியோகஸ்தர்கள் தங்களை வந்து மொய்க்காதது, ஆச்சரியமாக இருந்தது. அவர்களை விட சிவா ரசிகர்கள் மன்றத் தலைவர் செல்லதுரைக்கு ரொம்ப ஆச்சரியம். சிவா புதுப்படம் என்று வாயைத் திறந்து விட்டாலே போதும். விநியோகஸ்தர்கள் பணப் பெட்டியுடன் வந்து மொய்ப்பார்கள். பூசைப் போட்டு விட்டால் போட்டிப் போட்டுக் கொண்டு வந்து கொட்டுவார்கள். வரவில்லையென்றால் ?…படம் சரியாக இருக்காது என்று தன் பக்கம் இருக்கும் விநியோகஸ்தர்களிடம் எதையாவது சொல்லி வரவிடாமல் செய்திருப்பானோ பரத்?! சந்தேகம் வந்தது.
அதை நண்பனிடம் சொன்னான். சிவாவிற்கும் அது துளிர்த்தது. தன்னை அழிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டி இருக்கும் போது இப்படி ஏன் செய்திருக்கக்கூடாது தோன்றியது. ‘விசாரி!’ சொல்லிவிட்டு கதை சம்பந்தமாக யோசித்தான்.
செல்லதுரை கைபேசி எடுத்தான். எண்களை அழுத்தி காதில் வைத்து “பஞ்சநாதன்!” என்றான்.
“சொல்லுங்க சார்?“
“அண்ணன் அடுத்த படத்துக்குத் தயாராகிட்டார். தெரியுமா?”
“தெரியும் சார். தினசரியில படிச்சு சேதி தெரிஞ்சுகிட்டோம்.”
“ரொம்ப விளம்பரம் செய்து ஆடம்பரமா பூசை போடலை. அதனால உங்க யாருக்கும் தெரியப்படுத்தலை.”
”பரவாயில்லே சார்.”
“ரொம்ப நல்ல கதை. காமெடிக்கு விவேக் வடிவேலுவெல்லாம் இருந்து கலக்குறாங்க.”
“சந்தோசம்.”
‘இதற்கு மேல் பெட்டியோடு வா என்று எப்படி சுய மரியாதையை விட்டு அழைக்க?’ வைத்தான்
மறுநாள் காலை 9.00 மணிக்கெல்லாம் சிவா, செல்லதுரை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் போய் இறங்கினார்கள். பெரிய ஸ்டார் ஓட்டலில் தங்கி பழைய படங்கள் சிலவற்றை வாங்கி போட்டுப் பார்த்தார்கள். அடுத்து என்னென்ன படங்கள் அங்கு நன்றாக ஓடுகிறது ரசிகர்கள் அமோக ஆதரவைப் பெற்ற படங்கள் எவை எவை? அலசினார்கள். இறுதியில் சிவாவிற்கு ஏற்ற கதையைத் தேர்ந்தெடுத்து, தயாரிப்பாளரைத் தேடி கண்டுபிடித்து கணிசமான தொகை கொடுத்து வாங்கி அறைக்கு வந்தார்கள். தமிழ் நாட்டிற்குத் தகுந்தாற் போல் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்று விவாதித்தார்கள். சேர்க்க வேண்டியது சேர்த்து எடுக்க வேண்டியது எடுத்து ஒருவாறு கதையை முழு வடிவம் கொண்டு வந்தார்கள். அடுத்து நல்ல இடமாக தேர்ந்தெடுத்து அங்கேயே படப்பிடிப்பைத் தொடங்கினார்கள். ஒரே மாதத்தில் மொத்தப்படத்தையும் சுருட்டினார்கள். படம் நன்றாக வந்திருந்தது.
இதற்குள் பரத்தும் தன் படத்தை எடுத்து முடித்திருந்தான். அவன் படமும் திருப்தியாக வந்திருந்தது, ஒரே நேரத்தில் இரண்டு படங்களுமே அடுத்தடுத்த நாட்கள் சென்சாருக்குச் சென்றது. எந்த படத்திலும் அதிக வெட்டில்லை. ஆனால் விநியோகஸ்தர்கள்தான் எதற்கு வம்பென்று இரண்டு படங்களின் பக்கமே தலை வைத்துப் படுக்க வில்லை. சிவா அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. தன் செலவிலேயே படத்தை வெளியிட முடிவு செய்தான்.
கடன் வாங்கி படத்தை முடித்த பரத் தன் சொந்த செலவில் படம் வெளியிட பணமில்லாமல் திணறினான். கணேசும் தனக்குத் தெரிந்த இடங்கள் எங்கெங்கோ சென்று பணத்தைப் புரட்ட ஏற்பாடு செய்தான். எங்கும் தகையாமல் கையைப் பிசைந்தான். இறுதியில் பரத் தன் வீட்டை அடமானம் வைத்து வெளியிடத் துணிந்தான்.
நண்பனுக்கு இதில் துளியும் சம்மதமில்லை. “வேணாம்ன்டா. படம் ஊத்திக்கிடுச்சுன்னா நம்ம குடும்பம் மொத்தமுமே நடுத்தெருவுல நிக்கும்!” தடுத்தான்.
பரத் அதை காதில் வாங்கவே இல்லை.
“நான் சினிமா ஆசையில என் வீட்டை விட்டு வெளியே வரும்போது வெறும் கனவோட வந்தேன். எதையும் எடுத்து வரலை. இந்த கார் பங்களா பணம் பேர் புகழெல்லாம் இந்த சினிமா கொடுத்துது. தோத்துட்டா அதை அப்பயே கொடுத்துட்டு எப்படி வந்தேனே அப்படியே போறேன். நான் சிவாவோட சண்டை போட்டதுக்குக் காரணம் இந்த தொழில்ல யாரும் நிரந்தரம் கெடையாது. எல்லாரும் கெட்டு இந்தத் தொழிலைக் கெடவைக்கக்கூடாது. பின்னால வர்றவங்க மரியாதையாய் வரனும்ங்குறதுக்காகத்தான். நான் தோத்துப் போறதைப் பத்திக் கவலை கெடையாது,” சொன்ன பரத் வீட்டை அடமானம் வைக்கும் முயற்சியில் முழு மூச்சாக இறங்கினான்.
பண உதவி செய்த பழைய சேட்டிடமே சென்றான்.
அவர் “தம்பி! நான் பார்க்கிறதுக்குப் பசு பாய்ஞ்சா புலி. நான் உங்ககிட்ட நல்ல விதமாத்தான் பழகுவேன் பழகுறேன். ஆனா காசு பணம் விசயத்துல மட்டும் நான் கறாரா இருப்பேன். தாய் புள்ள பார்க்க மாட்டேன். நீங்க படம் தோத்து மொதலை இழந்துட்டீங்கன்னா..நீங்க எழுதிக் கொடுத்து சொத்து பத்து உங்க வீடு முதல் கொண்டு எல்லாம் என் கைக்கு வந்துடும். நீங்க கெஞ்சிக் கேட்டாலும் திருப்ப மாட்டேன். யோசிச்சு செய்யுங்க. கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கீங்க. மத்ததெல்லாம் போகட்டும் குடியிருக்க வீடாவது மிச்சப்படட்டும். நல்லா ஒரு தடவைக்குப் பத்துத் தடவை யோசிச்சு நல்லா முடிவெடுங்க.” சொன்னார்.
அவர் பேச்சு பரத்துக்கே கொஞ்சம் பயமாக இருந்தது, இருந்தாலும் நம்பிக்கை பலமாக இருந்தது, “சேட்! நான் நல்லா முடிவு பண்ணிட்டேன். வெற்றி தோல்வி எல்லாருக்கும் சகஜம். எதையும் நான் மனப்பூர்வமா ஏத்துக்க தயாராகிட்டேன். படம் முழுதுக்கும் உதவி செய்த நீங்க வெளியிடறதுக்கும் உதவி செய்தாதான் இதுவரை இந்த படத்துக்குச் செலவு செய்த தொகைக்கு அர்த்தம். தயவு செய்து என்னைத் தடுக்காதீங்க குழப்பாதீங்க.” என்றான்.
“யார் விதியை யார் மாற்ற முடியும்!” என்று முணுமுணுத்துக் கொண்டே வீடு அடமானத்திற்கு உள்ள மொத்தத் தொகையையும் கொடுத்தார்.
நடுக்கத்துடன் பெற்றுக்கொண்ட பரத் பிரிண்ட்கள் போட்டு படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்தான்.
ஒரு சுபயோக சுப தினத்தில் இரண்டு படங்களுமே வெளியானது. சிவா ரசிகர்கள் கொடி தோரணங்களால் தியேட்டர் வாசல்களை அலங்கரித்து அலங்கரித்து வானளாவிய வானளாவிய கட்டவுட் வைத்து அதற்கு பாலாலும் தேனாலும் அபிஷேங்கள் செய்து வருகிறவர்களுக்கெல்லாம் இனிப்புகள் கொடுத்து அமர்க்களப்படுத்தினார்கள்.
அதே சமயம் பரத் படம் வெளியிடப்பட்ட தியேட்டர்களில் எந்த வித ஆர்ப்பாட்டமுமில்லை. இதுவே பரத் கணேசுக்குள் திகிலை ஏற்படுத்தியது. இந்த ஆர்ப்பாட்டம் ஆரவாரங்களைப் பற்றி யோசிக்காமல் விட்டு விட்டோமே! நொந்தார்கள்.
“இது பெரிய காரியமில்லே. நம்ம ஆட்களை விட்டு தோரணம் கட்டி உனக்கு கட்டவுட் வைச்சு அபிசேகம் ஆராதனை வைச்சு அமர்க்களப்படுத்திடலாமா?” கணேசு கேட்டான்.
“செய்யலாம். காலம் கடந்து போச்சு. முதல் காட்சி பார்க்க வர்றவங்களுக்கு இடைஞ்சல். அது மட்டுமில்லே. என்னைப் பார்த்து காப்பி அடிக்கிறேன்னு சிவாவே சொல்வான். தேவை இல்லே விடு. படம் நல்லா இருந்தா ஜெயிக்கும்.” என்றான்
காலை 9.00 மணி காட்சிக்கு 6.00 மணியிலிருந்தே சிவா படம் வெளியிடப்படும் தியேட்டர் ஆரவாரமாக இருக்க 8.00 மணிக்கெல்லாம் பரத் படம் வெளியிடப்பட்ட தியேட்டருக்குள் பத்துப் பதினைந்து பேர்கள் உருட்டுக்கட்டை செயின் முதலிய ஆயுதங்களுடன் வந்தார்கள்.
தியேட்டர்களில் உள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கி படப் போஸ்டர்களைக் கிழித்து துவசம் செய்தார்கள். படத்தை பார்க்க வந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். “சிவா வாழ்க! பரத் ஒழிக!” கோஷமிட்டுச் சென்றார்கள்.
தியேட்டர் உரிமையாளர்கள், பரத் கணேசு இந்த அசம்பாவிதத்தைக் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. அதிர்ச்சி!
“நண்பா! இதெல்லாம் சிவா தன் ரசிகர்களுக்குச் சொல்லிக் கொடுத்து செய்த வேலை. நாமும் நம்ம ஆட்களை வைச்சு அவன் படம் ஓடுற தியேட்டர்களை அடிச்சு நொறுக்குவோம்.” கணேசுக்கு ஆத்திரம்.
பரத்திற்குத் தன்னைக் காத்துக் கொள்ளும் அளவுற்கு ஆட்கள் இருந்தாலும் இப்படி ரசிகர்களை எதிர்க்கும் அளவிற்குப் படைகள் இல்லை. மேலும் இப்படி நடக்குமென்று இவன் எதிர்பார்க்கவுமில்லை. இருக்கும் ஆட்களை வைத்து நண்பன் சொல்படி செய்தாலும் வீண் கலாட்டா அடிதடி போலீஸ் ஜாமீன் வழக்கென்றெல்லாம் போகும்! யோசித்தான்.
“நீங்க இதுக்காக ஒன்னும் கவலைப்படாதீங்க தலைவா! எது வந்தாலும் நாங்க பார்த்துக்கிறோாம். சரின்னு ஒரு வார்த்தை சொல்லுங்க. சிவா படம் திரையிட்டிருக்கிற தியேட்டரைக் காலி பண்றதென்ன படக் பெட்டிகளையேக் காணாம் அடிச்சுடுறோம்!” பரத் விசுவாசிகள் ஆளாளுக்குச் சொன்னார்கள். விட்டால் சிவா தலையையேக் கொண்டு வந்துவிடும் ஆவேசத்திலிருந்தார்கள்.
பதிலுக்குப் பதில் செய்யலாம். தொலைக்காட்சி திருட்டு விசிடி போன்ற பாதிப்புகளினால் தியேட்டர்களெல்லாம் திருமண மண்டபம் கடைகளாக மாறி வரும் சூழ்நிலையில் இருக்கும் தியேட்டர்களையும் அடித்து நொறுக்கி பாதிப்பு உண்டாக்கினால் அவர்களும் நமக்கு எதற்கு வம்பென்று மொத்த தியேட்டர்களையும் மூடி விட்டு வேறு தொழிலுக்குச் சென்று விடுவார்கள். மேலும் தனக்கும் சிவாவிற்கும் போட்டி சண்டை. இதில் சம்பந்தப்படாத தியேட்டர் உரிமையாளர்கள் நஷ்டபப்படுவது பாதிப்படைவது எப்படி சரி? பரத்திற்குள் யோசனை ஓடியது.
“வேணாம். நம்மால மத்தவங்க கஷ்டப்படுறது நஷ்டப்படுறது சரியில்லே.” என்றான்.
மற்றவர்கள் முகம் தொங்கினார்கள். ஆனால் கணேசு இதை விடுவதாய் இல்லை. “அப்படின்னா இதுக்குச் சவுக்கடி?” தன் கொதிப்பை அடக்கிக் கொண்டு நண்பனைப் பார்த்தான்.
“ஆண்டவன் கொடுப்பான்!”
நண்பனின் இந்த அமைதியான பதில் கணேசுக்குள் இருக்கும் கோபத்தை இன்னும் கிளறி விட்டது. “ஆண்டவன் கொடுக்க மாட்டான். நாமதான் கொடுக்கனும்!” என்றவன் கைபேசியை எடுத்து சிவா எண்களை அழுத்தினான். அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. தொலைபேசியை எடுத்து எண்களை அழுத்தினான் அதில் யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
சம்பவத்தைக் கேள்விப் பட்ட செல்லதுரைக்குச் சந்தோசம் தாங்க முடியவில்லை. மகிழ்ச்சி திக்குமுக்காடியது, காரை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி விட்டான். போர்டிகோவில் விட்டுவிட்டு அவசர அவசரமாகப் படியேறினான்.
முதல் காட்சிக்கு படம் எப்படி இருக்கு? மக்கள் என்ன சொல்கிறார்கள் படம் தோல்வியா வெற்றியா என்பதைப் பார்க்கப் போனவன் காட்சிகள் துவக்கும் முன் எதற்கு வந்தான்? எதிரில் வந்தவனை ஏறிட்டான். செல்லதுரை முகம் பிரகாசமாய் இருப்பதைப் பார்த்து,
“என்ன நம்ம படம் வெற்றியா?” சிவா ஆவலாய்க் கேட்டான்.
“வெற்றியா ? அதுக்கு முன்னால நான் சொல்ற சந்தோச சேதியைக் கேளு. பரத் படமே ஓடாது, நம்ம ரசிகர்கள் அந்த தியேட்டரை அடிச்சி காலி பண்ணிட்டாங்க.” தான் பார்த்ததைச் சொன்னான்.
சிவா இதை எதிர் பார்க்கவில்லை. அதிர்ச்சியடைந்தான்.
“ரசிகர்களை நீ ஏவி விட்டியா ? இப்படிச் செய்யச் சொன்னீயா?“ நண்பனை உக்கரமாகப் பார்த்தான்.
“ஐயோ ! நான் செய்யச் சொல்லலை?” செல்லதுரை பதறினான்.
“அப்போ யார் செய்யச் சொன்னா?”
“பத்திரிக்கை வாயிலா சண்டை ரசிகர்களுக்குத் தெரியும். பரத் மேல கோபம். அவுங்களாச் செய்யுறாங்க”
“முதல்ல அவுங்களை நிறுத்தச் சொல்லு. நம்ம சொல்லை மீறி கலாட்டா செய்யுறவங்க என் ரசிகர்கள் இல்லேன்னு அறிக்கை விடு.” என்ற சிவா தொலை பேசி எடுத்து “இதை சிறப்புச் செய்தியாய் ஒலிபரப்புங்க…” என்று சன், ராஜ், விஜய் தெலைக்காட்சி நிலையங்களுக்குச் சேதி சொன்னான்.
அடுத்த சில விநாடி சன் ராஜ் விஜய் நிகழ்ச்சிகளின் கீழ் சிறப்புச் செய்தி..
நடிகர் சிவா தன் ரசிகர்களுக்குக் கண்டிப்பு, எச்சரிக்கை. எந்த திரையரங்களிலும் உடைப்பு வன்முறை கூடாது. மீறுவபர்கள் தன் ரசிகர்கள் இல்லை. காவல் துறை நடவடிக்கை எடுக்கும். – ஓடியது.
படித்த ரசிகர்கள் ஸ்தம்பித்தார்கள். கப்சிப் ஆனார்கள். இதையும் மீறி கலவரம் வந்தால் சமாளிக்க… தியேட்டர்காரர்களும் போலீஸ் உதவியுடன் பரத் படத்தை ஓட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்தார்கள். மறு நாளிலிருந்து படம் ஓடியது.
ஆனாலும் காட்சிகளுக்கு அவ்வளவு கூட்டமில்லை. மக்கள் கலாட்டாவிற்குப் பயந்து இருந்தார்கள்.
அடுத்தடுத்த காட்சிகளுக்கு சிவா படத்திற்கு கூட்டம் அலை மோதியது. எந்த ரசிகர்கள் முகத்திலும் திருப்தி இல்லை.
ஒரு வாரத்திற்குப் பிறகு சிவா படத்திற்குக் கூட்டம் குறைய… பரத் படம் சூடு பிடித்தது. படம் 25 நாட்களைத் தாண்டி ஓட…பரத் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
சிவா படம் திரையிட்ட அத்தனைத் தியேட்டர்களிலும் அதைத் தாண்ட வில்லை. ஈயடித்தது. சிவா ஐம்பது நாட்களையாவது தாண்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்தியும் பார்வையாளர்கள் இல்லாமல் படத்தை ஓட்ட முடியவில்லை.
பல கோடி ரூபாய் நஷ்டம் மட்டுமில்லாமல் படம் தோல்வி. வெறும் ரசிகர்களால் மட்டும் தன் படத்தைத் துாக்கி நிறுத்த முடியாது என்புது புரிய…துவண்டான்.
பரத்திற்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. காரை எடுத்துக் கொண்டு நேராக விட்டான். சிவா வீட்டு வாசலில் நிறுத்தினான். இவன் வருவதைக் கவனித்த செல்லதுரை சிவாவிடம் “என்னை மிஞ்ச உன்னால முடியாதுன்னு சொல்லவரான் ஜாக்கிரதை!” என்று எச்சரித்தான்.
அழையாத விருந்தாளியாய் அறைக்குள் நுழைந்த பரத் தன் இரு கரங்களையும் ஒன்றாக சேர்த்து கூப்பி சடாரென்று சிவா காலில் விழுந்தான்.
சிவா இதை எதிர்பார்க்கவே இல்லை.
“என்னப்பா இது! எழுந்திரு.” பதறி அவனைத் துாக்கி நிறுத்தினான்.
நுாறாவது நாள் விழாவில்…
மேடையில் ருந்த சுபலெட்சமி பிலிம்ஸ் சுந்தரம் போன்ற பெரிய பெரிய ஜாம்பவான்கள், சிவா எல்லாம் பரத் திறமை, திரைப்படத்தைப் பற்றி புகழ்ந்தார்கள்.
கடைசியாக ஏறி மைக்கைப் பிடித்த பரத்…
“என்னைப் பற்றி பேசிய அத்தனை திறமைசாலிகளுக்கும் என் வணக்கம். நான் சிவா சாரோட சண்டை போட்டதுக்குக் காரணமே நமக்குப் பின்னால் வரும் தலைமுறைகள் மரியாதையாய், சரியாய் வரனும் என்பதற்காகத்தான். திரைத் துறையில இருக்கிற யாரும் புதிதாய் வர்றவங்கிட்ட தான் பழகி வந்த கெட்டப் பாதைகளை ஒதுக்கி நல்ல பாதையில் அழைத்து வந்தால் வர்றவங்க திறமைகள் நிறைய மின்னும். அவர்கள் ஆரோக்கிய மனத்தோட புகுந்தால்தான் ஜெயிக்கனும் என்கிற வெறியில ஒன்னு ரெண்டு படங்களைக் கொடுத்து மறைஞ்சு போறதை விட்டுட்டு நாட்டுக்குப் பயன்படுகிறாப் போல மிக நல்ல படங்களைக் கொடுத்து திரையில நீண்ட காலம் இருப்பாங்கங்குறது நிசம்.”
“மக்கள் நல்லப்படங்களை ரசிக்கவும் வரவேற்கவும் தயாராய் நல்ல தெளிவோட இருக்காங்க. திரையுலகம் தான் அதைச் சரியாய்ப் புரிஞ்சுக்காம மக்கள் இதைத்தான் விரும்புறாங்கன்னு சொல்லி கெட்டப்படங்களைத் திணிக்கிறாங்க.”
“நல்ல கதையம்ச படங்கள் யார் கொடுத்தாலும் எடுத்தாலும் ஓடும். திறமையான நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் அதுல இருந்து மெருகூட்டுறார்களேத் தவிர அவர்கள் வேற எதுவும் இல்லே. நல்ல கதை இல்லாம எந்த ஒரு திறமைசாலியாலும் எந்த படத்தையும் தூக்கி நிறுத்த முடியாது. இந்த கதை கவனமில்லாத காரணத்தினால்தான் அதிக ரசிகர்களைக் கொண்ட பெரிய நடிகர் நடிகைகள், திறமையான இயக்குநர்கள், இன்னும் பெரிய ஜாம்பவான்களெல்லாம் தோல்விப் படங்கள் கொடுத்திருக்காங்க.”
“நல்ல கதை உருவாக்கத்திற்கு மனசுல ஆரோக்கியம் இருக்கனும். அழுக்கு இருக்கக் கூடாது. வருகிறவர்களை நாம ஒழுங்கா வரவேற்றால் ஒழுங்காய் இருப்பாங்க. அடுத்து அழைத்து வருபவர்களையும் ஒழுங்கா அழைத்து வருவாங்க. இதை நான் ஏன் இவ்வளவு அழுத்தம் திருத்தமா சொல்றேன்னா…நான் ஆரம்பகாலத்துல ஒரு இயக்குநர்கிட்ட பேசிக்கிட்டிருக்கும்போது பழைய ஆளுங்களெல்லாம் தன்கிட்ட புதுசா வர்றவங்களை ‘அவளை அழைச்சு வா’, ‘இவளை அழைச்சு வா’, ‘காவலுக்கிரு’ அப்படி இப்படியெல்லாம் அசிங்கமாய் வேலை வாங்குறாங்களே இது நியாயமான்னு கேட்டேன். அதுக்கு அவரோட பதில், ‘இருக்கிறவன் தான் பட்ட அவமானம் அழுக்கையெல்லாம் புதுசாய் வர்றவன்கிட்ட ஏவி தன்னை சாந்தப்படுத்திக்கிறான்’ என்பது. சுருக்கமாய்ச் சொன்னால் தான் பட்ட கஷ்டம் பிறரை அனுபவிக்க வைச்சு ரசிப்பது.! என்ன ஒரு அதிர்ச்சியான மனோதத்துவமிது? இது வேண்டாம் என்பதுதான் என் அபிப்பிராயம், ஆசை.”
“நான் செய்த கலாட்டாவினால நடிகர் நடிகைகள் சம்பளம் ஒழுங்குப் பட்டிருக்கு. விநியோகஸ்தர்கள் நெறி பட்டிருக்காங்க. தயாரிப்பு செலவு குறைந்திருக்கு. சினிமா உலகமும் ஒரு அலுவலகம் போல இப்படித்தான் இருக்கனும். இந்த ‘மீ-டூஇன்னும் சினிமாவில் உள்ள கெட்ட நடிவடிக்கைகளெல்லாம் ஒழியனும். அப்போதான் நம்ம தமிழ் நாட்டுப் பொண்ணுங்களும் பிற மாநிலத்துப் பொண்ணுங்களைப் போல நடிக்க வருவாங்க.”
“ஒரு படத்துக்கு எல்லாரும் முக்கியம். எல்லாருக்கும் சம்பளம் அவசியம். இது நெறிப்பட்டிருக்கு. எல்லாருக்குமே திறமை இருக்கு. அதை நாம மதிக்கனும். அதனாலதான் நான் சிவா சார் கால்ல விழுந்தேன். என் திறமையில நம்பிக்கை வைச்சு மலையோட மோதினாத்தான் மத்தவங்களெல்லாம் சரி படுவாங்கன்னு நெனைச்சேன். அது நடிந்துடுச்சு. இதை சிவா சார்கிட்டே சொல்லி மன்னிப்புக் கேட்டேன். அவரும் மன்னிச்சுட்டார். அந்த பெரிய மனசுக்கு என் நன்றி.” சொல்லி அமர்ந்தான். அரங்கம் கைத் தட்ட எல்லார் முகத்திலும் புன்னகை.
(முற்றும்)