சாட்சிக்காரனின் சொத்து மதிப்பு





அடிக்கடி நீதி மன்றத்திற்கு வந்து பொய்ச்சாட்சி சொல்லிக்கொண்டே காலங் கழித்து வந்த ஒருவரை வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார்.
வக்கீல் : உமக்கு என்ன வேலை?
சாட்சி : பொதுமக்களுக்குத் தொண்டு செய்வது.
வக்கீல் : உமக்கு சொத்து ஏதேனும் உண்டா?
சாட்சி : ஆம். இருக்கிறது.
வக்கீல் : எல்லாம் ரொக்கமாகவா? நிலமாகவா ? கட்டிடமாகவா ?
சாட்சி : கட்டிடமாக.
விக்கீல் : அதன் மதிப்பு எவ்வளவு
சாட்சி : ஒரு லட்ச ரூபாய் பெறும்.
வக்கீல் : ஊர்க்கடைசியில் கோவில் மதிற்சுவரை ஒட்டிப் போட்டிருக்கும் கூரைத் தாழ்வாரம் தானே உன் வீடு.
சாட்சி : ஆமாம்.
வக்கீல் : அதுவா ஒரு லட்சம் பெறும்?
சாட்சி : கட்டாயம் பெறும். அதற்கு மேலும் பெறும். ஒருவர் 95 ஆயிரம்வரை கேட்டார்; மறுத்து விட்டேன். 99 ஆயிரத்திற்குக் கேட்டாலும் தரமாட்டேன்.
வழக்கறிஞர் அயர்ந்து போனார். நீதிபதி சிரித்து மகிழ்ந்தார். என்ன செய்வது? இப்படியும் சில சாட்சிகளை நீதிமன்றங்கள் சந்திக்கின்றன.
– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை
கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும்…மேலும் படிக்க... |