கையூட்டு




நேரம் வேற இப்படி போய்க்கிட்டே இருக்கு…

எவ்வளவு சீக்கிரமா எந்திரிச்சாலும் எப்படியோ வேலை எல்லாம் முடியிற மாதிரி தெரியல… வீட்டுல ஒரு பொருளும் உருப்படியா இல்ல..
அந்த மிக்ஸி என்னடான்னா அரைக்கவே மாட்டேங்குது …கிரைண்டர் என்னவோ சரி பண்ணினாலும் ஓட ஓட உருகி போயிடுச்சு… ரேடியோ ஒன்னு தான் உருப்படியா பாடிட்டு இருந்துச்சு ….இப்ப பத்து நாளா அதுவும் ஏதோ சார்ஜர் பின் போடும் இடம் உடைந்து போய் கிடக்கு. எந்த செலவு தான் கம்மி பண்ணி நான் இதை எல்லாம் சரி செய்ய போறேன்னு தெரியல …எப்ப பார்த்தாலும் செலவு மேல செலவுதான் வந்துகிட்டே இருக்கு .
மாத வருமானம் என்று தனக்கு வரும் 25 ஆயிரம் பணத்துல பாப்பாவுக்கு டியூஷன் பீஸ், சாப்பாட்டுச் செலவு ,மளிகை, சீட்டு பெட்ரோல் என ஒரு பைசாவும் நிக்கிறது இல்லை. காசு வர்றதும் தெரியல.. போறதும் தெரியவில்லை. என்ன வாழ்க்கை இது.. இச்சே..என் வாழ்க்கை இப்படியே புலம்பல்லேயே போயிருமா தெரியலையே.. இந்த ஹவுஸ் ஓனர் வேற இன்னும் மூணு மாசத்துல வீட்டு வாடகை அதிகமாக கேட்பார். என்ன செய்ய இப்ப என்று ஆழமாக பெருமூச்சு விட்டு யோசித்தாள்.
இப்போ எல்லாம் இந்த பைக் வேர அடிக்கடி ரிப்பேர் ஆகிட்டே இருக்கு. அதுக்கு பேட்டரி வேற மாத்தணும். என்ன செய்யறதுன்னு ஒன்னும் புரியல என்று மனதிற்குள் புலம்பியபடி ..மணி ஏழாகியும் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் தன் மகளை எழுப்ப எத்தனித்தாள் .இதோ எந்திரிக்கிற அம்மா என்று சொல்லி எழுந்து பிரியா குளிக்கச் சென்றாள். ஒற்றைப் பெற்றோராக தன் மகள் பிரியாவை தன்னுடைய சம்பளப் பணத்தை மட்டும் துணையாகக்கொண்டு வளர்த்து வரும் அமுதா புலம்பியப்படியே அலுவலகம் செல்லத் தயாராக இருந்தாள்.
அவசர அவசரமாகத் தன் மகளைப் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு தன் அலுவலகம் நோக்கிப் பறந்தாள், வழக்கமாக ஏதேனும் மின்னஞ்சல்கள் வந்துள்ளதா என்று கணிப்பொறியில் சரிபர்த்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திய பின் தன் இருப்பிடம் அமர்ந்து வழக்கமான தன்னுடைய பணிகளைச்செய்து கொண்டு இருந்தாள். பள்ளிக்கூடத்தில் இருந்து பிரியாவின் ஆசிரியர் குறுஞ்செய்தி ஒன்றனை அனுப்பியிருந்தார் ஒற்றைப் பெண் குழந்தை மட்டும் உள்ளது என்ற சிறப்புப் பிரிவில் மத்திய அரசு பள்ளியில் தன் மகளுக்கு அட்மிஷன் வாங்கி இருந்தாள்அமுதா. அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் பிரியா மட்டுமே தனக்கு ஒரே ஒரு பெண் குழந்தை என்று தாசில்தார் அலுவலகத்தில் சான்றிதழ் வாங்கித் தர வேண்டும். கடைசி ஆண்டு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கடுமையாகத் திட்டு வாங்கிக் கொண்டு கடைசி நேரத்தில் அந்த விண்ணப்பத்தைக் கொடுத்தது இன்றும் நினைவில் விட்டு நீங்காமல் இருக்கிறது அவளுக்கு,
இந்த ஆண்டு மீண்டும் சான்றிதழை ஒப்படைக்க வேண்டும் அதுவும் மூன்று நாட்களுக்குள் என்ற தகவல் வந்ததும் பரிதவித்துப் போனாள். எங்கு எங்கெல்லாம் சென்று அலைய வேண்டி வருமோ என்று நினைத்துக் கொண்டு பள்ளியின் எதிரில் சான்றிதழ் பெற்று தரும் அலுவலகம் ஒன்று இருந்தது. அங்கு சென்று மாலையில் விசாரித்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்து அலுவலகம் முடிந்ததும் நேராக அங்கு போய் விசாரித்துப் பார்த்தாள். அந்த சான்றிதழை அங்க வாங்க முடியாது எனவும் தாசில்தார் அலுவலகத்திற்குத்தான் செல்ல வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள், எனவே அவள் மிகவும் குழப்பத்துடன் வீடு வந்து சேர்ந்தாள். அவள் நண்பனுக்குத் தகவல் கொடுத்துவிட்டு இருவரும் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள வக்கீல் ஆபீஸ் சென்று இது குறித்து விசாரித்து வரலாம் என்று இருவரும் கிளம்பி கொண்டு இருந்தார்கள்.
ஒருவழியாக கோர்ட்டு வளாகம் அருகில் இருந்த ஒரு நோட்டரி வக்கீல் அலுவலகத்தை அமுதாவும் அவன் நண்பன் சுந்தரம் சென்று அடைந்தார்கள், வாங்க.. என்ன வேணும்.. என்று ஒருவர் வந்து கேட்க. அபிடவிட் ஃபார்ம் வேண்டும் சார் என்று நாங்கள் சொல்ல .. அவர் சென்ற ஆண்டு
பள்ளிக்கூடத்தில் கொடுத்த அஃபிடபிட் பார்ஃம் கொடுங்க என்று கேட்டு அதன் நகலை வாங்கிக் கொண்டு முத்திரைத்தாளில் அதனைத் தட்டச்சு செய்து கொடுத்தார்.
நூறு ரூபாய் முத்திரைத்தாளுக்கு 150 முதலிலேயே பேரம் பேசி தட்டச்சு செய்து விட்டோம். தாசில்தாரிடம் நாங்களே கையொப்பம் வாங்கித் தருகிறோம். பாப்பாவின் பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு இவற்றையெல்லாம் கொடுங்க என்று சொல்லி வாங்கிக்கொண்டார். அப்படியே ஆயிரம் ரூபாயும் கொடுங்க என்று வாங்கினார். கொண்டு போனதே 500 ரூபாய் தான் சுந்தர் 500 ரூபாய் அவருடைய ஜிபே எண்னுக்கு அனுப்பினான். மூன்று நாள் கழிச்சு போன் செய்கிறோம் என்று சொல்லி எங்களை அனுப்பிட்டார். என்னடா ஜான் ஏறினாதான சறுக்கும் ஆனா எனக்கு என்னடானா ஜான் ஏறனும்னு நினைச்சாலே சருக்கும் என்ன வாழ்க்கையோ எப்பப் பார்த்தாலும் எனக்குன்னு தான் எங்கிருந்து தான் பிரச்சனைகள் வந்து எப்படியோ விக்ரமாதித்தன் முதுகில் உள்ள வேதாளம் போல என்னை வந்து ஒட்டிக்கொள்கிறது எப்பதான் எனக்குன்னு நான் வாழ போறேன்னு தெரியல.. என்று தன் நண்பனிடம் புலம்பியப்படியே இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள்.
மூன்று நாள் கழித்து வக்கீல் போன் செய்தார். ஒருவேளை அவர் அபிடவிட் தாசில்தாரிடம் இருந்து வாங்கி விட்டாரோ என்று ஆர்வமாக தொலைப்பேசியை எடுத்துப் பேசினாள் அமுதா. ஆனால் வக்கீல் சொன்ன தகவலைக் கேட்ட பொழுது தலையே சுற்றிக்கொண்டு வந்தது அமுதாவிற்கு. அபிடவிட் வாங்க 7000 ரூபாய் வேண்டும் என வக்கீல் கேட்கிறார். 7000 ரூபாயா… என்னய்யா சொல்றீங்க… என்று அவரிடம் அதிர்ச்சியில் வினாவை எழுப்ப .. என்னம்மா செய்யறது விஏ அலுவலகம், ஆர்.ஐ அலுவலகம், தாலுக்கா அலுவலகம் என எல்லா இடத்திலும் பணம் தரணும் எங்க ஸ்டாபுக்கு பணம் தந்து பெட்ரோலுக்கு காசு கொடுத்து அனுப்பனும் நாம போற நேரத்துக்கு அவங்க இருக்கிறாங்களான்னு தெரியல அதனால கொஞ்சம் காசு தரணுமா என்று சொன்னார். காச பார்த்தா உனக்கு வேலை ஆகாதும்மா,,இப்போ எல்லாம் காசு இல்லாம ஒன்னும் நடக்காது தெரீஞ்ச்சுக்கோ என்றார். இதைக் கேட்டதும் தலை சுற்றியது அமுதாவிற்கு,
எந்தச் செலவினைக் குறைத்துக் கொண்டு இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க.. ஆத்திர அவசரத்திற்கு என்று கையிலே ஒரு பத்தாயிரம் தான் இருக்கு என்ன செய்ய.. நண்பனிடம் இது குறித்து பேசியதும் சரி நேரில் போய் பேசிப் பார்ப்போம் என்று சொன்னான் கையில் உள்ள 2000 ரூபாய் பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு சென்றோம். அலுவலகத்தில் அவர் இல்லை. அங்கு போனதும் வக்கீல் அங்கே அலுவலகத்தில் இல்லை. அவரின் உதவியாளர் மட்டுமே இருந்தார். நீங்க வருவீங்க 2000 ரூபாய் தருவீங்க அதை வாங்கி வைக்கச் சொன்னாருங்க வக்கீல், எனக்கு வேற ஒன்னும் தெரியாதுங்க என்றார்.
சரி சார்.. ஏதோ நாங்க ஏழைங்க.. ஒன்னும் இல்லாத காரணத்தினால் தான் என் பொண்ண அரசாங்க சலுகை பெற்றுப் படிக்க வச்சுக்கிட்டு இருக்கேன். எப்படி சார் நான் ஏழாயிரம் ரூபாய் தருவேன். ஏதோ கொஞ்சம் பார்த்து உதவி செய்யுங்க என்று சொல்லிவிட்டு வீடு வந்து சேர்ந்தார்கள் இருவரும். மேலும் நான்கு நாட்கள் சென்ற பின்பு வக்கீல் போன் செய்தார். அம்மா உங்க அபிடவிட் ரெடியாயிடுச்சு அத ஆபீஸ்ல வந்து வாங்கிக்கோங்க.. என்று சொன்னார். அப்பாடா என்று இதைக் கேட்டதும் அவளுக்கு மகிழ்சியாக இருந்தது அவளுக்கு. காலையில் தான் அவள் வகுப்பு ஆசிரியர் ஒட்றைப்பெண் குழந்தைசான்றிதழ் இன்னும் வரவில்லை நாளை பள்ளிக்கூடம் வரும் பொழுது சான்றிதழ் ஒப்படைக்கவில்லை என்றால் அடுத்த மாதம் முதல்முழுமையான கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று சொன்னார். ஒரு வழியாக சான்றிதழ் வாங்கி விட்டதாக வக்கீல் சொல்ல நண்பனை அழைத்துக்கொண்டு வக்கில் அலுவலகம் செல்ல காத்திருந்தார்கள். வாங்க அம்மா.. உட்காருங்க என்று சொல்லியபடியே சான்றிதழை எடுத்து வர அலுவலகப் பணியாளர் ஒருவரை அனுப்பினார் இன்னும் 1800 ரூபாய் தரணுமா நீங்க என்று சொன்னார். அலுவலகம் செல்லும் முன்பாக இறுதியாக தான் வைத்திருந்த 1500 ரூபாயிலிருந்து ஆயிரம் மட்டும் தனது பர்சில் வைத்துக்கொண்டு 500 ரூபாயை நண்பனிடம் எதற்கும் நீ வைத்துக் கொள். கேட்டா கொடுப்போம் என்று சொல்லி அவன் கையில் திணித்திருந்தாள். எப்படித்தான் வக்கீலுக்கு இது தெரிந்ததோ.. கழுகுக்கு மூக்கில் வேர்ப்பதைப் போல தன்னிடம் காசு உள்ளதை சரியாகப்புரிந்து கொண்டாரே என்று புலம்பியபடி அவர் கேட்ட தொகையைக் கொடுத்து சான்றிதழை பெற்றுக்கொண்டோம்,
இவ்வளவு தொகையை லஞ்சமாகப் பெற்றுக் கொண்ட பொழுதும் அலுவலகப் பணியாளர் அந்த வக்கீலை எங்களின் முன்பாகவே கல்வி சேவையில் மகத்தான பணியாற்றும் நபர் என்றும் கல்விப் பணிக்காக எதுவும் செய்வார் என்றும் புகழாரம் சூட்டினார். என்னமோ சும்மா வாங்கிக் கொடுத்ததைப் போல மனதிற்குள் புன்னகைத்தபடியே இருவரும் நன்றி சொல்லி வீடு வந்து சேர்ந்தோம். வீட்டிற்கு வந்து கடந்த ஆண்டு வாங்கிய சான்றுகளுடன் ஒப்பிட்டு பார்த்தோம். அதில் முதல் பக்கத்தில் அலுவலக முத்திரை இல்லாமல் இருந்தது. இறுதிப் பக்கம் மட்டும் தாசில்தார் அலுவலகத்தில் முத்திரையைப் பெற்று இருந்தனர் .என்னடா இது இவ்வளவு செலவு செய்தும் இப்படி நமக்கு ஒரு நிலைமை என்று வருந்திக்கொண்டு. என்னவோ நடப்பது நடக்கட்டும். நாளை முதலில் இதைப் பள்ளியில் கொடுப்போம். பிரச்சனை வந்தால் பின்பு பார்த்துக் கொள்வோம் என்று சொல்லி இப்படி நீங்கள் முத்திரையை முதல் பக்கத்தில் வைக்கவில்லை நாளை இந்தச் சான்றிதழில் ஏதேனும் பிரச்சனை என்று பள்ளிக்கூடத்தில் சொன்னால் தருகிறேன் நீங்கள் முதல் பக்கத்தில் மட்டும் சான்றிதழை வாங்கிக்கொண்டு முத்திரையைப் பெற்று தர வேண்டும் என்று வக்கீல் இடமும் தகவல் சொல்லிவிட்டு. அடுத்த நாள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதற்காகப் பள்ளி சென்றோம்
ஏகப்பட்ட கூட்டம் மணி வேறு ஒன்பதை நெருங்கிக் கொண்டு இருந்தது. 9.20 மணித்துளிக்கு அலுவலகம் வேறு சென்றாக வேண்டும். ஒரு வழியாக சான்றிதழ் கொடுத்து தேர்வு முடிவு பெற்றுக்கொண்டு அவளை நன்கு படிக்கச் சொல்லியும் படிக்காவிடில் கண்டிக்கும் படியும் வகுப்பு ஆசிரியரிடம் சொல்லிவிட்டு அலுவலகம் வந்து சேர்ந்தாள்.
அன்றைய தினம் உறங்கும் பொழுது ஒரு வழியாக இந்தப் பிரச்சனை ஓய்ந்தது. இன்னும் எனக்கு அடுத்த பிரச்சனை எப்பொழுது வருமோ அதை எதிர்கொள்ளத் துணிவையும் நம்பிக்கையும் கொடு என்று வேண்டிக் கொண்டு கண் உறங்கிப் போனாள். எப்படி அவள் அறிவாள் காலம் அவளுக்குப் பல மனிதர்களின் மூலம் இன்னும் பல அனுபவங்களைக் கற்றுத்தரக் காத்துக்கொண்டு இருக்கிறது என….