கூண்டை விட்டு வெளியே வந்த பறவை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 26, 2025
பார்வையிட்டோர்: 4,762 
 
 

வசன கவிதை வடிவில் விரியும் சிறுகதை

மாமழை விடாமல் பொழிந்து கொண்டிருந்த
தருணம் சிறைச் சாலையின் தரை எங்கும் சாரலால்
ஈரம்
விடாது பெய்யும் அடைமழையே ஒரு வரமெனக்
கருதி சிறைப் பறவைகள் சில வெளியே பறந்தன ஓசையின்றி

இதுபோல் வாராது இன்னொரு வாய்ப்பு என்றே நினைத்த
கஜாவும் வெளியேறினான் சிறைச்சாலையை விட்டு

கொட்டும் மழையில் நனைந்த உடலுடன்
கும்மிருட்டில் வழித்தடம் தெரியாது நடை போட்டான் .
மீண்டும் கூண்டுக்குள் அடைபட்டு விடலாம் என
அவன் மனம் கூறிய போதும் பின் வாங்காமல் நடை போட்டன அவன் கால்கள்
சின்னஞ்சிறு அம்மன் கோயிலின் வாசலில்
ஒதுங்கி நின்றான் . அடாத மழையிலும் ஆடாமல்
எரிந்த அகல் விளக்கு அவனுக்கு வியப்பைத் தந்தது.

ஈரமான செருப்பை வெளியே ஓர் ஓரத்தில் விட்டு
அம்மனை வணங்கி ஆலயத்திற்குள் சென்று
நாளைய பொழுது கவலையை மறந்து கண் அயர்ந்தான் கஜா.

கதிரவன் வந்து விட விழித்தெழுந்தான். அடைக்கலம்
தந்த அன்னையை வணங்கி கும்பிட்டு வெளியே
வந்து உடைகளைப் பிழிந்தான்.
விடாத மழைத் தூறல்களுக்கு இடையே
நகரத்து மக்களின் கூக்குரல்கள் ஒலித்தன.

வெளியே அனைவருக்கும் தெரிய நடமாட்டம்
மீண்டும் தரும் சிறை வாசம் என்று அவன் மனதில்
எச்சரிக்கை எழுந்து நின்ற போதிலும் அவன்
ஊர் மக்களை நோக்கி ஓடினான் விரைந்து.
ஒவ்வொருவருக்கும் மாமழை இடரப்பாட்டில்
உதவிக் கரம் அளித்தான் கஜா. இளவட்ட காளைகளை ஒன்றிணைத்து கை கொடுக்கும்
கையாக மாறினான் அவன்.
அவனுடைய பேரிடர் மேலாண்மை செயல்களைக்
கண்ட மெத்தப் படித்தவர்களின் விழிகள் வியப்பில் விரிந்தன.

மாநகராட்சிப் பணியாளர்களுக்கும் தோள் கொடுத்தான்.
மீட்புப் பணிகளை துரித கதியில் நிறைவேற்ற உடன் நின்றான்.

ஆசுவாசமான மக்கள் , இடர்ப்பாடுகள் நீங்கியதும்
காலத்தினால் உதவி நல்கிய கஜாவை மறந்தனர்.

இவர்கள் இப்படித்தான் என்று இவன் அருகில்
வந்தார் அந்தப் பகுதியின் பெரியவர் மாணிக்கம்
அவரது கரங்களின் வருடல்களில் மகிழ்ச்சியுற்றான் கஜா.

தன்னந்தனியாய் இயற்கை மருத்துவத்தால்
மக்களுக்கு நோய்நொடி தீர்க்க உதவி புரிந்து
வந்த பெரியவர் மாணிக்கம் கஜாவைத் தன்னுடன்
இணைத்துக் கொண்டார்.
கஜா சொன்னான் – அடியேனுடைய முன்கதை
உரைத்தால் தாங்கள் என்னை ஏற்க மறுப்பீர்கள் ஐயா

பெரியவர் மாணிக்கம் மொழிந்தார் –
உன் முன் கதைச் சுருக்கம் எனக்கு எதற்கு?
தக்க தருணத்தில் ஊருக்கு நல்லது செய்த
உன்னைக் காப்பது என் பொறுப்பு …

அந்த நொடிப் பொழுதிலிருந்து மாணிக்கத்துடனும்
இயற்கை மருத்துவத்துடனும் ஐக்கியம் ஆகிப் போனான் கஜா.

மருத்துவம் கற்ற அவன் மனிதர்களைப் பற்றியும்
கற்றான்.

அன்றொரு நாள் …
சில நிமிட உணர்ச்சி வசம் அதனால்
விளைந்த சிறைவாசம் அவன் வாழ்வில்
கஜாவும் சோமுவும் இணை பிரியா நண்பர்கள்
சோமுவின் பொருளாதாரம் மேம்பட்டதால்
வாய்த்தாள் அவனுக்கு ஒரு தாரம்
சோமுவுக்கு மதுபானக் கடை நண்பனாய்
வந்து சேர்ந்தான் முத்து என்னும் கெடுமதியாளன்

ஒரு நாள் மாலையும் இரவும் சந்திக்கும் வேளையில்
சோமுவின் இல்லம் சென்ற கஜாவின் கண்கள்
கண்ட காட்சி தந்தது அதிர்ச்சி

சோமுவின் இல்லத்தரசியின் மீது பாலியல்
வன்முறையை நிகழ்த்த எத்தனித்தான் முத்து
சோமுவின் மனைவியை முத்துவின் கோரப்
பிடியிலிருந்து மீட்டெடுத்து அவளைப் பக்கத்து
அறையில் அமர வைத்து கதவை அடைத்தான்.
சன்னல் வழியாக கைகூப்பிய சோமுவின் மனைவிக்கு
உடுத்த மேல் உடை தந்த கஜாவைத் தாக்க வந்தான் முத்து

நல்லுரைகள் கேட்கும் நிலையில் இல்லாத முத்துவுக்கு
நல்லுரையாக சில சொற்கள் கூற முற்பட்டான் கஜா.
முத்து எதனையும் செவி மடுக்காமல் கஜாவைத் தாக்க,
தன்னைக் காக்க கஜாவும் எதிரத் தாக்குதல் நிகழ்த்த –

விதி கஜாவைப் பாரத்து புன்னகை பூத்தது.
தகாத செயல் செய்யத் துணிந்தவன் உயிர்
கூட்டை விட்டுப் பிரிந்தது.
இல்லம் வந்தான் சோமு. மூவரும் கண்ணீரில்
இரவு முழுவதும்
விடிந்த பொழுது கஜாவைச் சிறைச்சாலையில்
வைத்தது.
கஜாவின் தலைவிதியை மாற்றிட சோமுவும் மீனாவும்
இயன்ற வரை சட்டப் போராட்டம் நடத்திப்
பார்த்தனர்.
ஆயுளுக்கும் சிறைவாசம் என்றே தீர்ப்பு
உரைத்தது நீதிமன்றம்

வெளி உலகைக் காணும் ஆவலில் வெளியே
வந்த கஜா இப்பொழுது இயற்கை மருத்துவனாய்
மாறினான் பெரியவர் மாணிக்கத்தின் கருணையினால் .

வருபவர்கள் தரும் தொகைகளால் இவர்கள்
இருவரின் ஜீவிதம் நடந்து வந்தது
எங்கிருந்தோ வந்த ஒரு நாய் இவர்களுடன்
ஒட்டிக் கொண்டது அன்புடன்
பைரவன் என்று பெயர் சூட்டப்பட்ட அந்த
நாய் அவர்களைச் சுற்றி சுற்றி வந்தது வாலைச்
சுழற்றி
மதிய வேளை ஒன்று . பெரியவர் துதிப் பாடல்
வாசித்துக் கொண்டிருக்கும் போது
தடதடவென வந்து நின்றது ஒரு கூட்டம்
சிறிய கட்டிலில் கிடத்தப்பட்டார் வாட்டசாட்டமான
உருவம் கொண்ட உயர்ந்த மனிதர் ஒருவர்.

பெரியவர் மாணிக்கம் கஜாவிடம் சொன்னார்:
‘சிறை அதிகாரி செல்வம் இனி உன் பொறுப்பு
அவர் இல்லம் சென்று உடன் இருந்து சிகிச்சை
செய்து தேற்று’
குருவின் கட்டளையை எப்படி மறுப்பது?
அரைகுறை மயக்க நிலையிலும் செல்வத்தின்
கண்கள் கஜாவின் முகத்தை ஆராய்ந்தன.

செல்வத்தின் பிள்ளைகள் மாடியறையில்
அப்பாவைத் தங்க வைத்தனர் . பத்திய உணவைப்
பாங்காய்ச் செய்ய வேண்டிய அனைத்தையும்
கஜாவிடம் ஒப்படைத்தனர் தங்கள் தந்தையையும் .

கணவனை மாடிப்படி ஏறி வந்து
காண அவருடைய மனைவியின்
உடல் ஒத்துழைக்கவில்லை.
மருமகள்களோ தாத்தாவைக் காண
விரும்பும் பேரப் பிள்ளைகளைத் தடுத்து
வைத்தனர்.
ஒட்டிக் கொள்ளாது வாருங்கள் என்று பலமுறை
குழந்தைகளை கஜா அழைத்தும் அவர்கள் வரவில்லை.

ஒரு சில நாட்களிலேயே,
பிணி போக்கும் மருந்துகளாலும் பத்திய
உணவுவகைகளாலும் பணிக்குத் திரும்பும்
நிலைக்கு செல்வத்தை ஆயத்தப்படுத்தினான் கஜா.

கட்டணத் தொகையைப் பெற்றுக் கொண்டு
விடை பெற்ற தருணத்திலும் செல்வத்தின்
விழிகள் கஜாவின் முகத்தை ஆராய்ந்தன.

பைரவன் ஓடி வந்து கஜாவிடம் அன்பைப்
பொழிய , பெரியவரும் அவனை அன்புடன்
வரவேற்றார்.
அன்றிரவு … மழைப் பொழுது..
இரவு உணவை உண்டு முடித்து மூன்று
ஜீவன்களும் உறக்கத்தைத் தழுவின .

விடியற் காலைப் பொழுதில் பைரவன்
ஓயாமல் குரைத்ததால் திடுமென உறக்கம்
கலைந்தனர் இருவரும்.
பெரியவர் மின்சார விளக்கின் வெளிச்சம் பரப்பினார்
எழுந்திருக்காதே அப்படியே இரு இதோ வருகிறேன் ஜாக்கிரதை என்று உரத்த குரலில்
கூறினார்

ஏன் என்னதான் ஆச்சு என்று நினைத்த கஜா
கட்டிலிலிருந்து எழுந்து நின்றான். நாகம் அவனுடைய
கால்களைத் தீண்டியது .

கஜாவின் நாடியைப் பெரியவரின் கரங்கள்
சோதித்துப் பார்த்தன.
நாடி பார்க்காத பைரவனின் விழிகளில் கண்ணீர்.
பெரியவருக்கு உறுதுணையாக அக்கம்பக்கத்தவர்
இருவர் வந்து நின்றனர்.

வாசலில் சிறை அதிகாரி செல்வம் வந்து நிற்க
அவர் அருகில் வந்தார் மாணிக்கம்.
செல்வம் , கஜாவை அழைத்துச் செல்ல உதவ
வேண்டும் என்றார் பெரியவரிடம்.
அழைத்துச் செல்லத்தான் ஆவண செய்கிறேன்
ஐயா …

அவரது குரல் தழுதழுக்க , செல்வம் உள்ளே
பார்த்தார்.
கஜாவும் பைரவனும் அருகருகே
நிலவுலகிலிருந்து விடை பெற்றதை
அறிந்த செல்வம் நிலைதடுமாறி அருகில்
உள்ள சிறிய நாற்காலி வசம் அடைக்கலம் ஆனார்.

குறிப்பு – இந்தக் கதையில் விவரிக்கப்படும் சூழல்கள், பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *