கிழக்கும் வெளிக்கவில்லை! மேற்கும் வெளிக்கவில்லை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 23, 2025
பார்வையிட்டோர்: 946 
 
 

நம் தீவு நாட்டில் தான் ‘தீ‘க் குளிப்புகள் நடக்கிறதென்றால் போற புலம் பெயர் நாடுகளிலுமா இடம் பெற வேண்டும்? இந்த பூமிப்பந்திற்கு என்ன தான் வந்து விட்டது, தாமாக ஈடுபட்டாலும் சரி, மற்றவர்கள் வலுவால் தூக்கி எறியப்பட்டாலும் சரி அது மனிதத்திற்கு அவமானமான செயல் தான், மனிதம் செத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு சமிக்ஞை, மிருக நிலையிலிருந்து தேவ நிலைக்கு வைக்கிற வைக்கப்படுற ( கால் ) அடிகள் சறுக்குண்டு பின்னோக்கி விழுவது போன்ற ஒரு விபத்து, மனிதம் தின்று வாழ்கிறவர்கள் அதிகமாகிப் போனதனால் அதில் ஒரு அங்கமாகி தலைவராகி, இவை நிகழ்வதற்கு தார்மீக ஆதரவையும், கூடுதலாக படையினரின் ஈனச் செயல்களையும் அனுமதித்து விடுகிறார்கள், பழையபடி அரசநாயகத்தில் நழுவி விழுந்து தலைவர்களாகத் ( அரசர்களாக ) தான் போட்டி நடை பெறுகின்றது, இன்று, நம்நாடு போர்க் குற்றங்கள் மலிந்த ஒரு ஈன நாடாக காட்சி அளிக்கின்றது, பெயர் கெடுக்கப்பட்டு விட்டிருக்கிறது, படைப்பிரிவுகளைக் கலைத்து மீள புதுதாக ஏற்படுத்த வேண்டிய தேவை கிடக்கிறது, குற்ற விசாரணைகளைச் செய்ய வேண்டிய பணியை சமூக நீதிமன்றங்களிடம் தள்ளி விட வேண்டும், அப்ப தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள், ஆளுக்காள் அபிப்பிராயம் சொல்லகிற அழுகிய நிலை வேண்டாம், அரசியல் அத்திவாரம் சரியில்லை, அதைச் சீர்ப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது, ஆனால், நம்நாடு, சீராகி மூச்சு விடுமா?, விடவே நூறு ஆண்டுகள் செல்லும் போல இருக்கிறது,

விமல், “டேய், நானும்,ரமணாவும் இங்கே தான் இருக்கிறோம், ரவி பையித்தியம் பிடித்தவன் போல இருக்கிறான், எப்படி தேற்றுறறென்று தெரியல்லை” என்கிறான், அவன் குரலும் உடைந்திருக்கிறது, அப்படி என்ன தான் நடந்து விட்டிருக்கிறது, ரமணனின் தங்கை சித்திராவை ரவி முடித்தவன், நாமெல்லாம் கிராமத்துப் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள், நம் நட்பும் உயிர்ப்புடன் திகழ்கிறது, “என்னடா, பதற்றபபடுறதைப் பார்த்தால் பயமாக இருக்கிறதடா” “இவன்ர அம்மா,இங்கே வந்தது தெரியும் தானே, கொலண்டிலே இருந்து விட்டு பவியைப் பார்க்க வந்து ஒரு கிழமையாய் தங்கி இருந்தவர், நாளை பிளேன் ஏற இருந்தவர்…” அவன் சொல்ல முடியாது திணறினான், ரமணன் அலைபேசியை பறித்து “டேய், வீடு எரிந்து அம்மா, தங்கச்சி, பவிக் குட்டி எல்லோரும் சாமிக்கிட்ட போயிட்டாங்கடா, பிறகு எடுக்கிறோம், ரவியை கவனிக்க வேண்டி இருக்கிறது” என்று தொடர்ப்பு அறுபடுகிறது, நாயகம் இரத்தம் உறைய அதிர்ந்து போய் நிற்கிறான், அவனுடைய செல்ல மகள் கீதாவின் சாவு …புரட்டிப் போட்டிருக்கிறது,குறு, குறுவெனப் பார்க்கும் அந்தப் பார்வை, வில்லு போல தெளிவாகத் தெரியும் புருவங்கள்,அவன் அலட்டுவதைக் கேட்டு, அப்பப்ப முகத்தில் பூக்கும் சந்தோசங்கள் …சிறிது குளிராக இருந்தாலும் சரிவர உடுப்புப் போட்டு சில்லு நாற்காலியில் அவளை பல்கணிக்கு கொண்டு வந்து காற்றை சுவாசித்து புத்துணர்ச்சி பெற நிற்பார்கள்,இன்று அவள் இல்லை, தனிய நின்று ஏதோதோ யோசித்துக் கொண்டிருக்கும் போது இந்த பேரிடி வருகிறது, பிறந்த நாட்டில் இருந்திருந்தால் இந்த அவலமெல்லாம் எமக்கு நிகழ்ந்திருக்காது, எமக்கு தான் “கடவுளே இவளை வேளைக்கு துன்பப்படுத்தாமல் எடுத்து விடு “என்ற பிராத்தனை இருந்தது என்றால்….பவி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டியவள் அல்லவா, அவளைப் போய் சிங்களக்காடையர் துன்புறுத்துவது போல எடுத்து விட்டாரே!

மாலை வேலையிலிருந்த ரவிக்கு வீட்டிலிருந்து சித்திராவின் தொலைபேசி அழைப்பு வந்தது,”வீட்டிலே நெருப்பப்பா… ” அறுபட்டு விட்டது, அவன் 911 க்கு உடனடியாக அறிவித்தான், அத்தனை விரைவாக …எரிந்து …ரவி தலையில் கையை வைத்துக் கொண்டு பிரமை பிடித்தவன் போலாகி விட்டான், கூட வந்த நண்பன் தான் ரமணனுக்கு அலைபேசியில் தெரிவிக்க விமலுடன் வந்திருக்கிறான், ரவி, யாரை நினைத்து அழுவான், பவிக்குட்டி அவன் கண்ணுக்குள் சிரிக்கிறாள், பொய்க் கோபம் காட்டுறாள், சித்திரா…அத்தை..,அவன் வாய் விட்டு அழுது கொண்டிருந்தான், தீயணைக்கும் அதிகாரி, அவனை தேற்ற முயன்று தோற்றுப் போய் விட்டிருந்தார், வாய் விட்டு அழுகிறது தான் நல்லம் என அவருக்கும் தோன்றியது, அவருள்ளும் கையாலாகத்தனம் குறித்து வெறுப்பு மண்டிப் போய் இருந்தது, இங்குள்ள கருவிகள் எரிகிறதைக் காட்டும் கருவிகள், காப்பாற்றும் கருவிகள் அல்ல, இனி அவர் அறிக்கை தயாரிக்க வேண்டும், வாகன நெரிசல்.. எத்தனை காவலர் வந்தும் என்ன விரைவாக குறித்த நேரத்திற்கு வர முடியாத நிலமை,

இங்கே வீடுகள் எரிவது ஒரு பொம் வெடிப்பது போன்றது, சிலவேலை அப்படியும் கூட கிடக்கலாம், இங்கே உள்ளேயும்,வெளியிலுள்ள மண்ணினுள்ளும் காஸ் காவிக்கொண்டுச் செல்லும் சிறு குழாய்கள் ஓடுகின்றன, தொடர்ந்து எரிவதற்கு ஊக்கியும் விடுகிறது, கனடாவில் கூட முந்தி வீட்டு சமையல் அடுப்புகளிற்கு காஸ் தான் பாவித்தார்கள், தற்போது மின்சாரத்திற்கு மாற்றி விட்டிருக்கிரார்கள், ஆனால், உணவகங்கள் வழியே தற்போதும் காஸ் தான் பாவிக்கப்படுகின்றன, ஐரோப்பிய நாடுகளில் இந்த மாற்றம் பெரிதாக நிகழவில்லை, விரைவாக எரிவதற்கு இதுவும் கூட காரணம் தான்,

“சே!,என்ன, கடவுள் இவர்?”. ரவிக்கு இந்த ஜென்மத்தில் ஆறுதல் கிடைக்கப் போவதில்லையே, நாயகத்திற்கு தன் மகளைப் போல அலைபேசியில் மழழையில் பேசும் பவிக்குட்டியையும் நிறைய‌ பிடிக்கும், “இதுவும் கடந்து போகும், துயரத்தை குளத்து வான் அணைக்கட்டில் நீர் வழிந்து செல்வது போல வழிய விட்டு விட வேண்டும்” என்று சொல்வதெல்லாம் சாமியாருக்கு தான் ஏற்ற வேதாந்தங்கள், சமானியரான எமக்கு சரிப்பட்டு வராது, அவனிடத்திலும் ரவிக்கு ஆறுதல் சொல்ல சொல்ல வார்த்தைகள் இல்லை,

கணனியை இயக்கி தமிழ்ச்செய்திகளைப் பார்த்தான், நடந்த அந்தச் செய்தி கிடக்கிறது, என்ன நாடு இது?, இயற்கைச் சீற்றத்தால் நிகழ்கிறது ஒரு புறம் கிடக்க‌, இலங்கையைப் போல இந்த நாடும் கூட சமாதானத்திற்கான போர் என இடைக்கிடைக் கூறி கூட்டணியோடு நியாயப்படுத்திக் கொண்டு எறும்புகளைக் கொல்றது போல, வலிமை குன்றிய நாடுகளின் தொகையான மக்களை கொன்று விட்டு தான் நிற்கிறது, இவர்கள் கொட்டுற வெடி பொருட்களால், நகரங்கள் அழிந்து எழுகிற புகைகளால், தூசிகளால் …இயற்கை சீற்றம் துப்பரவாக‌ அடைவதில்லையா?, இயற்கை ஆர்வலர்கள் அதைக் குறித்து அரசியல் பேசுவதில்லையாம், நல்ல விதி, மாசுப்படுத்திய இலங்கையரசு தப்பித்துக் கொண்டது, குருக்கள் செய்தால் குற்றமில்லை என்ற என்ற வேதம் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது, விஞ்ஞானத்தில் நிறையக் கண்டு பிடிக்கிறார்களோ இல்லையோ, நிறைய பொய்களைக் கூறுகிறார்கள், இவன் இதை எழுதுற போதும் கூட இங்கே …ஒரு வீடு எரிந்ததில் அதில் இருந்த ஒரிருவரும் சேர்ந்து எரிந்து இறந்து போய் தான் இருக்கிறார்கள், விஞ்ஞானிகள் எரியக் கூடியவை இல்லை எனக் கூறிய கட்டடப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்ட வீடுகள் தாம் இவை, இங்கே பச்சை மரமும் கூட எரியக் கூடிய எரிச்சத்துக் கொண்டவை,

பிரான்சில் காலூன்றி இரண்டு வேலைகள் செய்து ஒரு மாதிரி, ஒரு வருடத்திற்கு முதல் தான் ரவி வீடு வாங்கி இருந்தான், சித்திரா ரமணனுடன் ஒட்டு கூட !, கிராமத்து வீட்டிற்குப் போனால், ரவி,விமல்,நாயகம் மூவருக்கும் கூட தேனீரை கொண்டு வந்து கொடுப்பாள், அவர்கள் வீட்டில் திண்ணைப் பகுதியுடன் கூடிய முகப்பு அறை ரமணனுடையது, அவன்ர அம்மாவிற்கும் அவர்களும் பிள்ளைகள் தான், வீதியில், சந்தையில் காண்கிற போதும் கனிவுடன் கதைப்பார், அந்த வீட்டு விசேசங்களில் எல்லாம் அவர்களும் கூடமாட உதவிகள் செய்திருக்கிறார்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போன்றவர்கள், 83ம் ஆண்டுக் கலவரத்தில் கிராமே தெரியாத திரவியம் மாமாவின் கொழும்புக் குடும்பம் பாதிப்புற்று கிராமத்திற்கு வந்திருந்தது, அவசரத்தில் குடல் தெறிக்க ஓடிய போது ஓட்டோ ஓட்டியும் அவர்களை பாதுகாப்பாக அகதி முகாமில் கொண்டு போய் இறக்கி விட்டிருந்தான், அப்புகாமி அவர்களிடம் பணம் வாங்கவில்லை, அடிக்கடி பிழங்கியதால் நேசமாகி விட்ட சிங்களவரான ஓட்டி அப்புகாமியிற்கு எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்ற கொள்கை, தனிமரம் தோப்பாகாது போல பாதுகாப்பாகவும் ஆகாது தானே, ஆனால் விதி…! “இஞ்சாரப்பா உவளுக்கு வைத்திருந்த நகைப்பெட்டியை விட்டுட்டு வந்திட்டேனப்பா,என்ன செயிறது” மனைவி சொல்ல, திரவியத்திற்கு ஒன்றும் தோன்றவில்லை, “கொஞ்சம் அடங்கட்டும் போய் பார்திட்டுட்டு வாரேன்” என்றார், அடுத்த நாள் வீதியில் படையினர்,பொலிசாரின் நடமாட்டம் நிலவியது, பாதுகாக்கிறார்கள் என்று நம்பி விட்டார், “சரி, நான் போய் பார்த்திட்டு வாரேன்”என கிளம்பினார், கடைகள், வீடுகள் எரிந்து பயங்கரமாய் தோற்றம் அளித்தன, வீடு போய்ச் சேரும் வரையில் அவருக்கு ஒன்றும் நிகழவில்லை, மனம், எப்பவும் சுமூகமாய் தானே கற்பனை செய்யும், வீட்டின் ஒரு பகுதி தான் எரிந்து கொண்டிருந்தது, இவருக்கு எங்கே இருக்கிறது என்று தெரியும், எரியாத பகுதிக்குள்ளே மெதுவாக செல்ல முயன்றார், “உவன் தமிழன் “என்று பார்த்து விட்ட ஒருத்தன் கத்தினான், அப்ப தான் புரிந்தது, “படையினர் கொல்லி எடுத்துக் கொடுக்கிறவர்கள் என்று”. அவரை தூக்கி எரிகிற பகுதிக்குள் எறிந்து விட்டார்கள், கிராமத்திற்கு வந்திருந்த‌ அந்த குடும்பம் நண்பர்களை வெகுவாகப் பாதித்து விட்டது, நாயகம்,கலா, மோகன், ராஜன் நால்வரும் ஒருநாள் ஒன்றாய்ப் போய் இயக்கமொன்றில் சேர்ந்து விட்டார்கள், ஒருவகுப்பில் இப்படிச் சென்றது பள்ளிக்கூடத்தை குழப்பி விட்டது, ஆதரவாளர்களாக மாறி நண்பர்கள் வீட்டிற்கு அப்பப்ப செய்திகளை தெரிவித்துக் கொண்டிருந்தார்கள், இயக்கமோதல் எழ நாயகம் கொழும்புக்கு வந்து கனடா வந்து விட்டான், மற்ற இருவர் கொலண்டுக்குப் போக ரவி பிரான்சுக்கு வந்தான், சித்திராவிற்கு கல்யாணம் நடந்த பிறகே யோசிப்பேன் என ரமணன் பிடிவாதமாக இருந்தான், சித்திராவிற்கு ரவியிலே விருப்பம் இருந்திருக்கிறது, தாய்யிடம் சொல்ல, அவர் எழுத, ரவிக்கு ஆச்சரியமாக இருந்தது, பிரச்சனை எழவில்லை, சுமூகமாக பிரான்சுக்கு அழைத்து முடிய …., பவிக்குட்டியுடன் சொந்த வீட்டில் காலெடுத்து வைத்த போது …அவளின் அதிருஸ்டம் என்று எவ்வளவு மகிழ்ந்திருந்தார்கள், இப்ப எல்லோருமே குடும்பமாகி விட்டார்கள், ஏற்ற‌ இறக்கத்துடன் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கையில், ரவியின் கனவு வண்டி திடீரென‌ இப்படி குடை சாய்ந்து விட வேண்டுமா?, மூளை, சிந்திக்கும் சக்தியை இழந்து விட்டது, ராணியிடம் செய்தியைக் கூறினாள், அவளுக்கும் தாங்க முடியாதிருக்கிறது,

நாயகத்திற்கு ஊரில் கிடக்கிற வீடுகள் தான் ஞாபகத்தில் உடனே வந்தன, பனை சிலாகைகளைச் செதுக்கி ….,அரிந்து ராஜா, ராணிக் கூரையுடன் சீமேந்துக் கல்லையும் அரிந்து கட்டுற வீட்டில் தீ பிடித்தாலும் எரியவே எரியாது, தவிர இங்கே போலே அங்கே, வீட்டிற்குள்ளேயும், நிலக்கீழ் மண்ணிலும் காஸ் சிறு குழாய்கள் கண்டறிமாட்டுக்கு ஓடுவதில்லை, இங்கே, நிலத்தைக் கொத்தி தோட்டம் செய்வதென்றாலும் யோசிக்க வேண்டி இருக்கிறது, இங்குள்ள பச்சை மரங்களே எரியும் அபாயம் கொண்டதாக அடிக்கடி எரியும் வனத் ‘ தீ ‘ க்கள், இந்த மனிதர்களின் இரத்தமும் கூட எரியக் கூடியவை தானோ?, அங்கே, அரச யந்திரம் என்கிற பெரிய அரச அமைப்புகள் செய்கிற கொடூர நிகழ்வுகளை, இங்கேயும், தனி மனிதர்கள், சிறிய, சிறிய வட்டங்களில் நிகழ்த்திக் கொண்டே தான் இருக்கிறார்கள், சராசரி மனித மூளையிலும் கொடூரம் குடி கொண்டிருக்கிறதோ? என்ற சந்தேகமும் முளை விடுகிறது, கொடூரம் மனிதக் குணம் எனப் புரிகின்றது, ஆனால் சிலபேர்கள் அதற்கு சொந்தக்காரர்கள் போல ஏன் இருந்து தொலைக்கிறார்கள், சிங்களவர்கள் அனைவரையும் அந்த வரைபுக்குள் அடக்கக் கூடாது எனச் சொல்லப்படுகிறது, ஆனால், அவர்களும் ஏதோ ஒரு வகையில் …பங்குதாரிகள் தானே, பிடுங்கப்படுற நிலங்கள் அவர்களுக்குத் தான் பங்கிடப்படுகின்றன, வேலை வாய்ப்புகள், மற்றும் சலுகைகள் எல்லாம் அவர்களுக்குத் தானே வழங்கப்படுகின்றன, அவற்றை மறுத்து நின்று அவர்கள் காட்டி இருக்கிறார்களா? காட்டவில்லை தானே!, புரட்சிகர அமைப்பு என எழுந்த சிங்கள இளைஞர் அமைப்பும் கூட வெறும் இனவாத அமைப்பாகவே இயங்கியது, வடக்கு கிழக்கைப் பிரிக்கிறது, காணி,பொலிஸ் அதிகாரங்களை பிடுங்கிக் கொண்டு மாகாணவரசை செயலற்றதாக்க முனைப்பு காட்டுகிறது, ஜனநாயக உரிமைகள் அவர்களுக்கும் ….வேம்பாக கசக்கிற‌தில்லையா?,கிட்லர் நடத்திய போருக்காக உலகம், ஜேர்மன் மக்கள் அனைவரையும் கூட்டுக் குற்றவாளியாகப் பார்த்து, (பிறகு) அவர்கள் சாகிற போது இரக்கம் காட்டாது அமைதியாகத்தானே இருந்தது, கடலில், கப்பல்களில் பரிதவித்த போது, அவர்களை நேச நாடுகளின் படைகள் தாக்கி அழித்த போது ‘போர்க்குற்ற‌ம்‘ என மெதுவாகத் தானே கூறியது தவிர விசாரணையை முன்னெடுத்ததா? இல்லையே!, யூதர்களின் பழிவாங்கலை ஒரு எல்லையோடு நிறுத்திக் கொண்டதை விட என்ன செய்தது,

இங்குள்ள பனி வீடுகள் கழுத்துக்கு மவ்ளரைக் கட்டுவது போல கூரைத் தலைப்பகுதியில் காற்று புக முடியாத மாதிரி அடைத்து விடுகிறார்கள், குளிர் தடுப்பு என்றாலும் வீட்டிற்குள்ளேயும் காற்றோட்டம் அவசியமாகிக் கிடக்கிறது, பனிக்காலத்திலேயே இப்படி எரியிறது கூடுதலாக நிகழ்கிறது, யன்னல்,கதவுகள் சதா அடைப்பட்டுக் கிடப்பதால் காபனோ ஒட்சைட்டு வாயு வீட்டினுள் இயல்பாகவே சிறிய வீதத்தில் இருக்கவே செய்கின்றது, எரிகிற போது அதிகளவு வாயு வெளியேற வழியில்லாமல் தங்கி விடுகிறது, அந்த வாயு விரைவிலே மயக்கமுறவும் வைத்து விடுகின்றது, உடனடியாக ஈரத்துணியை எடுத்து முகத்தைச் சுற்றிக் கொண்டால் ஒருவேளை யோசிக்கவாவது நேரம் கிடைக்கலாம், திடகாத்திறமானவர்கள், தப்பக் கூடியவர்கள் கூட இப்படி இறந்து விடுகிறார்கள், பவி சிறுமி, சிறுவர்கள் இறப்பது தான் மிக மிக கொடூரமானது, சிங்கள சமுதாயம் எமக்கிழைக்கிற தீங்கு இங்கேயும் வந்து எமக்கு நிகழ வேண்டுமா?, சுனாமி நேரம் “நீச்சலைக் பழக்காமல் விட்டோமே, பழக்கி இருந்தால் இந்நேரம் எத்தனை தாய்மார்களும் பிள்ளைகளும் உயிருடன் இருந்திருப்பார்கள்” என்று பிலாக்கணம் இடுகிறோமே (ஊளையிடுகிறோமே), அது போல இதற்கும் நாம் தயார் படுத்தாதது தான் இறக்கிறதுக்குக் காரணம், தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முதலே எல்லாம் முடிந்து விடும். இங்கே நக்கலாக சொல்லப்படுகிறது, குற்றம் நடந்த பிறகு வருகிற படை தான் பொலிஸ் படை, இலங்கைப்படையைப் போல தான், நெருங்காது, அங்கே கொல்லியையும் எடுத்துக் கொடுக்கிறதைச் செய்கிறது, இங்கே வீதிகளில் நெரிசல் காரணம் கூறப்படுகிறது, தீயணைப்புப்படையினர் உயிரைக் கொடுத்து உயிரைக் காப்பாற்றுறவர்கள் என்கிறார்கள், அப்படி என்றால் மேய‌ரும் குற்றவாளி தானே, நாயகம் இப்படியும் யோசிப்பான், “கட்டடக்கலைஞர்களை மட்டுமே மேயர் தேர்த்தலில் நிற்க முடியும் என அடிப்படைச்சட்டம் இருக்க வேண்டும், அப்ப தான் மனித உயிர்களைக் காப்பாற்றுற செயற்பாடுகள் நடக்கும் “. மற்றைய ஜனநாயத் தேர்த்தல்களிலும் வக்கீல்கள் தானே அதிகமாக நிற்கிறார்கள், தகுதியானவர்கள் நிற்பதில்லையே, இலங்கையில் இனத்துவேசிகள் அதிகமாக நிற்கிறார்கள், நாடு எப்படி உருப்பெறும்?,

நடந்த பிறகு அழுது தான் என்ன பயன்? நம்மவர்கள் காச்சா மூச்சா என்றிருந்தாலும் கூட எல்லாவற்றிலும் நுழைந்து ஓல் ரவுண்டராக இருக்க முயல்பவர்கள், அது கொஞ்சமாவது செயல்பட வைக்கிறது, இங்கே ஒரு துறையில் இருப்பவர்களுக்கு அவர்களுடைய வேலை மட்டுமே தெரியும், மற்றவர் வேலை துப்பரவாகத் தெரிவதில்லை, எனவே அறிவுப் பரப்பு குறுக்கப்படுகிறது, ஓப்பீட்டளவில் எல்லாமே அக்கரைகள் பச்சை தான், சிறிலங்காவில் வடக்கு (+கிழக்கு ), தெற்கு (+மேற்கு) என பிரிபட்டிருப்பது போல‌ உலகமும் கிழக்கு, மேற்காகவே பிரிந்திருக்கிறது, ஒன்றின் அறிவு, ஒன்றுக்கில்லை,சேர்ந்து பயணிக்கிறதென்றது …எங்குமே கிடையாது, இல்லை, திணிக்கிறது அல்லது பறிக்கிறது தான் நடைபெறுகின்றன‌, அவர்கள் அப்படி செத்திருக்கக் கூடாது, காப்பாற்றி இருக்க வேண்டும்ஆனால் பரிதாபகரமாக இறந்து போய் விட்டார்கள், வெளியில் இருப்பவர்களுக்கு இது ஒரு கலவரச் செய்தி, கிட்ட இருப்பவர்களுக்கு சித்திரவதையானது, அந்த முள் சதா குத்தி, குத்தி உள்ளே நீள‌ வலிக்க வைத்துக் கொண்டே இருக்கப் போகிறது, சிறிலங்காவரசு, இதே போன்ற‌ காணாமல் போனோர் விவகாரத்தை கடத்தி விடப் பார்க்கிறது, சிங்களவர்களுக்கு அது தூரத்துச் செய்தி, ஆனால் அது, அப்படி கடத்தி விடக் கூடிய விவகாரமில்லை, ஒரு நாள் அதன் அம்புகள் அவர்கள் குரள்வளையை நோக்கி பாயவேச் செய்யும்,

சித்திராவிற்கு அடுத்தவன் பாசி, கடைசியும் கூட, அம்மாவும் அவனும் ஊரிலே தனித்து விடப்பட்டிருந்தார்கள், இலங்கையின் தலைவர் “இரண்டு நாடுகளுக்கான சண்டையில் வெற்றி பெற்று விட்டோம்” என்று நிலத்தை முத்தமிட்டு கொண்டாடினார், அலைந்து ஒய்ந்து பழையபடியே கிராமத்திற்கு வந்தடைய பிழைப்புக்கு ஏதாவது செய்ய வேண்டி இருந்தது, அம்மாவிற்கு அக்காவையும் பவியையும் பார்க்க வேண்டும் என்று ஆசை, ரமணன், நண்பர்களிடமும் கடன் வாங்கி, ரவியும் உதவிக்கரம் நீட்ட …பாசி, நெல்லு குத்தும் மில் ஒன்றை ஏற்படுத்தி தொழிலைத் தொடங்கி இருந்தான், பாசி, குட்டியனாக இருக்கிற போதே அவனுக்கு…முஸ்பாத்தியாக கதைக்க வரும்,பெரியவர்,சிறியவர் எல்லோரையுமே பேச்சில் …சிரிக்க வைத்து விடுவான், அவன் மேல் எல்லோருக்கும் வாஞ்ஞை அதிகம், அம்மா, அவனுக்கு பானுவையும் பார்த்து வைத்திருந்தாள், “முதலில் உவள், உன் கொக்காவைப் பார்க்கணும், வந்து நடத்தி வைக்கிறேன் “என்றிருந்தார், இரண்டு நாளில் வர இருந்தார், ரமணன் அண்ணை தொலைபேசியில் கூறிய போது, அவன் திகைத்துப் போனான், அம்மா வரவே மாட்டாரா?, காணாமல் போனோர் நிகழ்த்தி வரும் ஆர்ப்பாடங்களின் தாக்கம் என்ன என்பது அவனுக்கு முதல் முதலில் புரிந்தது, “அம்மா,. “பிள்ளையார்க் கோவிலுக்கு போய் ஏகாந்தமாக அழுதான், அப்படியே வழுக்கியாற்று அணைக்கட்டில் போய் அமர்ந்து தற்போதைய மழையால் ஓடும் நீரோட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்,

அவனுக்கு மில்லிற்குப் போகவே விருப்பமில்லாதிருந்தது, உதவிக்கு நிற்கும் பாலு கவனித்துக் கொள்வான், பானுவின் அப்பா குகமூர்த்தி அவனை தேடு,தேடு என தேடி கடைசியில் கண்டு பிடித்தார், “தம்பி, எழும்பி வா, முதலில் சாப்பிடு, பிறகு மற்றதைப் பேசிக் கொள்ளலாம் “. அவனை கட்டாயப்படுத்தி சைக்கிளில் ஏற்றி வீட்டிலே வந்து இறக்கினார், அம்மா அவலமாக சாகிறதென்றால் யார் தான் தாங்கிக் கொள்வார்கள்?, வையந்தியத்தை சாப்பிட வைத்தார், “தம்பி உனக்கு நாங்கள் எல்லோரும் இருக்கிறோம், கலவரத்திலே திரவியம் அண்ணைக்கு நடக்கவில்லையா? இந்த நாடு சாபம் பிடித்த ஒரு நாடு, யாருக்கு என்ன நடக்கும் எனச் சொல்ல முடியாது, போரிலே வீடு, பனை மரங்கள், வயல்கள்….என எல்லாவற்றையும் நாசம் பண்ணி வைக்கலையா, அம்மா, நீ,நாம் தப்பித்தது எல்லாம் அதிருஸ்டம் என்று நினைத்திருந்தோம், அது உண்மையில் அதிருஸ்டமில்லை, நீ மனதை திடப்படுத்திக் கொள் “என்றார், கலவர நட்டங்களை நினைவு படுத்தி தான் ஆறுதல் படுத்த வேண்டி இருந்தது, ‘ இருக்கிற நாம் பலமாக இருக்க வேண்டும் ‘ எனச் சொல்ல வருகிறார், கடவுள் நின்று பதில் அளிக்கிறவர், எப்படி அவர்கள் எம்மைக் கொன்றார்களோ அப்படியே அவர்கள் ஒவ்வொருவருக்கும் தண்டனை அளித்து வருவார்,

அவர்கள் வீட்டில் அம்மாவின் படம் வைக்கப்பட்டு அகல் விளக்கு எரிந்து கொண்டிருப்பதை சிலையாக நின்று பார்த்துக் கொண்டிருந்தான், பானு, ஓரமாக நின்று அவனை அனுதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள், அக்காவும் கார்த்திகை விளக்கு வைக்கப் போய் தான் …எங்கையோ தவறுதலாக எரியத் தொடங்கி… எரிந்து போய் இருப்பார்களோ?. அவனிடம் பட்சமாக இருக்கிற அக்காவுக்கு …?, நினைக்க நினைக்க குமுறல் தான் வருகிறது, பானுவின் அப்பா, “நீ இவளின் கழுத்தில் ஒரு மஞ்சள்க் கயிறை கட்டிக் கொண்டு இங்கேயே இரு, அல்லது உன்ர வீட்டிலே இரு,கல்யாணம் என இப்ப பெரிதாய் செய்ய முடியாது,உன்னையும் தனிய விட முடியாது “என்றார், சில உறவினர்,நண்பர், ஐயருடன் பிள்லையார் கோவிலில் கட்டுறது நிகழ இருக்கிறது, அழுகிறதுக்கு கூட இரண்டு, மூன்று நாள்கள் வேண்டும் என கேட்க முடியாதவனாய் பாசி நிற்கிறான்,

கிழக்கும் வெளுக்கவில்லை, மேற்கும் வெளுக்கவில்லை என்றால் …நாம் கடைசியில் எங்கே தான் செல்வோம்?

“இந்த கதையில் வார‌மாதிரியே, வெளி நாடு ஒன்றில் இருந்த எம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் இறந்திருக்கிறார்கள்?…இப்படி நிகழ்கிறது தவிர்க்கப்பட வேண்டும், தவிர்க்கக் கூடியதும் கூட‌ !, இப்படி நிகழ்கிற‌ பெருந்துயர் எம்மை நீண்ட காலத்திற்கு அழ வைத்து, வலது குறைந்த ….நிலையில் ஆழ்த்தி வைக்கப் போகின்றது, இலங்கையில் சாதாரண வீடு ஒன்று கட்டப்படும் போதே, முன்புறமும், பின்புறமும் குறிப்பிட்டளவு நிலப்பரப்பு விடப்பட வேண்டும் என்ற கட்டிட விதிகள் இருக்கின்றன, இங்கும் அதே அதே பில்டிங் கோட்’டே நிலவுறதாகச் சொல்கிறார்கள், ஆனால், இங்கு அவை ஏன் பேணப்படுறதில்லை, அரசர் காலங்களிலே நிலக்கீழ்ப்பாதைகள் பாதுகாப்பிற்காகவேக் கட்டப்பட்டிருந்திருக்கின்றன, நகரசபையும் இவ்விதிகளைப் பேணி, பொறியியலாளர்களிடம் நிலவழியை நிர்மாணிக்க கூறி இருந்திருந்தால்…உடனடியாகவே திறம்பட அமைத்து கொடுத்தும் இருப்பார்கள், இவர்களின் சேவையில் ‘இட நிரப்பு வெளிகள் ‘ கூடிக் கொண்டே போகின்றன‌, மனம் கிடந்து அடித்துக் கொண்டே இருக்கின்றது, இங்கும் “மனிதம்” குறித்த அலட்சியம் மேலோங்கி வ‌ருக்கின்றது போல பயம் கொள்ள வைக்கின்றது, கிழக்கும் வெளுக்கவில்லை, மேற்கும் வெளுக்கவில்லை என்றால் …..நாம் கடைசியில் எங்கே தான் செல்வோம்?

– டிசம்பர் 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *