காற்றுமரங்கள்





(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
எப்போதாவது இப்படியொரு தன்மை ஏற்படுகிறது. எதிர்க் காற்றில் கலைந்து பறக்கும் தலை, நிழல் சரியும் வீடுகள், நீண்ட தெருக்கள் என. மணி பத்தைத் தாண்டியிருக்கும். பஸ் வந்து திரும்பும்போது மணிக்கூண்டைப் பார்க்கவில்லை இன்று. மற்ற நாள்களில் காலையில் ஒரு தரமும் மாலையில் பஸ் கடந்து வரும்போது ஒரு தரமும் மணிக்கூண்டைப் பார்ப்பாள்.
அவள் பார்க்கும் நாளிலிருந்தே இந்த நகரம் கூடப் பெரிதாக மாறிவிடவில்லை. புதிய கட்டடங்களும் கடைகளும் வந்தாலும் பழைய சுபாவம் அப்படியே இருக்கிறது. அன்றைக்கு சாலை பழுதடைந்துள்ளது என்று பஸ்ஸைக் குறுக்குப் பாதை வழியாகச் செலுத்தும்போது பார்த்தாள்.
சிவப்பு வீடுகள், தட்டியடித்த மரக்கதவுகள். மரங்கள் அடர்ந்த தெரு.குழந்தைகள் விளையாடும் தெரு. பஸ்ஸைக் கண்டதும் பையன்கள் பின்னாலே கத்திக்கொண்டு ஓடி வருவார்கள். அன்று கூட அவள் வெளியே கைகளை ஆட்டினாள். நெருக்க நெருக்க மான வீடுகளும், குறுகிய இருள்படர்ந்த சந்துகளும்கூடத் தெரிந்தன.
இங்கெல்லாம்கூட நடக்க வேண்டும் எனத் தோன்றியது. அவள் வீட்டிலிருந்து கிளம்பும் பாதையிலிருந்து மாறி ஒரு நாளும் போன தில்லை. ஸ்கூலில் படிக்கும் நாளில் சாரதி அண்ணனோடுதான் நடை. அவன் தெருவில் எங்காவது நுழைந்து எதிலிருந்தாவது வெளிப்படுவான். அவனுடைய புத்தகங்களைக்கூட அவளே சுமந்து வருவாள். வீடுகள் போன்ற மூடிக்கொள்ளும் அமைப்புக் கூடச் சில தெருக்களுக்கு உண்டு. ஸ்கூலை ஒட்டி இருக்கும் தெருமுனையில் பெரிய சுவர் இருக்கும். மறைந்துகொள்ளலாம்.
சாரதி ஒரு நாளில் மறைந்துகொண்டு கூப்பிட்டான். அவள் போய்ப் பார்த்தபோது அவனில்லை. சின்ன சந்து இருந்தது. இல்லையென்று திரும்பும்போது கட்டைச் சுவரையொட்டிக் குதித்தான்.
“மது…ஏய்…”
அலறினாள். எதிரே வந்து நின்றான். தெருவில் யாருமில்லை. முசுமுசுவென்று சத்தம் வந்தது அவளிடமிருந்து.
“அழுகுணி… என்கூட ஏண்டி வரே… நான் போறேன்.”
தெரு அதிர ஓடினான். அவனை அப்படியே அமுக்கி, அடிக்க வேண்டும் எனத் தோன்றியது. வீட்டுக்குப் போனபோது கூட அம்மா அவளைத்தான் திட்டினாள்.
“அவன்கூட எதுக்குடி போறே… தனியா போக வேண்டியது தானே?”
“பயமாயிருக்கும்.”
“என்ன பயம்… பேயா தூக்கிட்டுப் போயிரும். ” அவள் எதுவும் சொல்ல மாட்டாள். சுவரை ஒட்டினாற்போல் படுத்துக்கொள் வாள். அம்மாவின் கிட்டத்தில் அவன் படுத்துக்கொள்வான். அவன் இல்லாவிட்டால் சின்னவன், காலை அம்மாவின் மேல் போட்டுக்கொண்டு விரல்களைப் பிடித்தபடியே…
அவளுக்கு ஆசையாயிருக்கும். அவன் இல்லாதவேளையில் மதியம் அம்மா உறங்கும்போது பக்கத்தில் படுத்துக்கொண்டு விரல்களைப் பிடித்துக் கொள்வாள். விரல்கள் மெத்து மெத்தென இருக்கும். அவள் விரல்களைக் கோத்துக்கொள்வாள். அல்லது அம்மா போட்டிருக்கும் நூல் சுற்றிய மோதிரத்தைப் பிடித்துக் கழற்றுவாள். அம்மா தூங்கியபடியே கேட்பாள்.
“என்னடி வேணும்?”
“விரல்…”
“ஏண்டி.. தூங்கவிடாம… போ… விளையாடு…”
சாரதியைப் போலவே அம்மாவின் மேல் காலைத் தூக்கிப் போடுவாள். அம்மா உறக்கத்தோட அவளை விலக்கித் தள்ளுவாள். திரும்பவும் விரல்களைப் பிடிக்கும்போது கோபம் வரும் அம்மாவுக்கு.
“இம்சைப்படுத்தாம எழுந்து போ.”
சிணுங்குவாள். அம்மா, அவள் தலையைப் பிடித்துத் தள்ளி முதுகில் அடி கொடுப்பாள்.
எங்கிருந்தாவது வரும் சாரதி ஓடிவந்து அம்மாவின் மேல் விழுவான். அம்மா அவனை அணைத்துக்கொள்வாள். அவள் விரல்கள் அவனிடமிருக்கும்.
அவனைப் பிடிக்காமலே போனது அவளுக்கு. பல தடவை அவன் புத்தகங்களை யாருமறியாமல் கிழித்திருக்கிறாள். மையை ஊற்றி நோட்டைக் கெடுத்திருக்கிறாள். அவள் ஸ்கூலில் விளையாடும்போது விழுந்த அன்றுகூட அம்மா அவள் தலையைத் தடவிவிட்டுப் பின்பு அதட்டினாள்.
“பையன்களோடு என்ன விளையாட்டு…”
இப்போதும் அம்மாவுக்கும் அவளுக்கும் ஆகாமலே இருந்தது. இன்று அவன் வந்தபோது இதையெல்லாம் அவனிடம் சொன்னாள். அவள்தான் அவனை வரச் சொல்லியிருந்தாள். முதல் நாள் பஸ்ஸில் வரும்போதே சொன்னாள்.
“நாளைக்கு ஆபீஸ் முடியற நேரம் வாங்களேன்…”
“எங்கே?”
“ஆபீஸுக்கே … மரத்தடியில் நில்லுங்க, வர்றேன்.”
சொன்னது போலவே வந்திருந்தான். கையில் சின்னதாகப் பை. தலை கலைந்துபோயிருந்தது அவனுக்கு.
அவள் அவனெதிரே வந்து நின்றபடியே கேட்டாள்.
“எப்போ வந்தீங்க?”
“இப்போதான்…”
அவள் எதுவும் சொல்லவில்லை. நடந்து பஸ் ஸ்டாப்பை நோக்கிப் போனார்கள். எதிர்த் திசையில் ஏதோ ஒரு கிராமத்தின் பெயரில் பஸ் வந்தது.
“எங்கே போகிறோம்?” என்றான்.
“பாதி வழி போய்ட்டுத் திரும்பி வந்துருவோம்.” இறங்கிய இடம் மலையை ஒட்டிய சரிவாக இருந்தது. கொஞ்சம் மரங்களும் கோயிலும் இருந்தன. அதிகக் கூட்டமில்லை. அவள், அவன் விரல்களைப் பிடித்துக்கொண்டாள். அவனுக்குப் பெரிய விரல்கள்.
”முன்னெல்லாம் எனக்குப் பயமா இருக்கும்.”
“எதுக்கு?”
“எல்லாத்துக்குமே யாராவது கையைப் பிடிச்சுக்கிடணும் போல் தோணும்… அம்மா விரட்டுவா…”
அவன் பதில் பேசவில்லை. அவள் நிறையப் பேசிக்கொண்டே வந்தாள். இடையில் அவனிடம் கேட்டாள்:
“கிறுக்குத்தனமாயிருக்கா பேசறது… எனக்கும் பேச யாருமே கிடையாது. சுவரோடதான் பேசுவேன்.”
“உங்க வீட்டிலதான் ஆள் இருக்காங்கல்லே?”
“படுத்துக்கிடக்க இடத்துல உள்ள சுவர்தான் என் ஃப்ரெண்டு அதுக்கெல்லாம் தெரியும். அது மேல என் கை விரல்களைக் கூட வரைஞ்சு வெச்சிருக்கேன். வெள்ளையடிச்சப்ப மறைஞ்சு போச்சு. லேசா சுவடு தெரியும் இப்பவும்…”
பேச்சை நிறுத்திவிட்டு அவன் மேல் சாய்ந்துகொண்டாள். காரணமில்லாமல் அழுதாள். அவன் ரொம்ப நேரத்துக்குப் பிறகு எழுந்து கொண்டான். இருட்டியிருந்தது எங்கும். ரோட்டுக்கு வரும்போது அடர்ந்த இருள்.
பஸ்ஸில் வரும்போது வீடுகள் தெரியவில்லை. அவன் தெப்பக் குளம் ஸ்டாப்பில் இறங்கிக்கொள்வதாகச் சொன்னான். அவளும் முந்திய ஸ்டாப்பில் இறங்கிக் குறுக்கு வழிகளில் நடந்தாள்.
ஏதோ இன்று அபூர்வமாயிருந்தது போல் தோன்றியது அவளுக்கு. அவளுக்கான ஒரு நபர்கூட இருக்க முடியும் எனும் நினைப்பு அழுத்தியது. இரவில் எல்லாத் தெருக்களுக்கும் ஒரே சுபாவம் வந்து விடுகிறது என்றே தோன்றியது.
வீட்டை நெருங்கியபோது கதவு திறந்து கிடந்தது. யாரையும் வெளியே காணோம். அம்மா உள் அறையில் படுத்து உறங்கி யிருக்கக் கூடும். உள்ளே போனாள். அம்மா உறங்கிப் போயிருந்தாள்.
பின்கட்டுக்கு லைட்டைப் போட்டு சேலை மாற்றினாள். குளிக்கலாம் என்று தோன்றியது. அவள் பாத்ரூம் கதவுகளை மூடும்போது அம்மாவின் குரல் கேட்டது.
“மணி என்னாகுது தெரியுமில்லே…”
“எல்லாம் தெரியுது…”
அம்மா முனகுவது கேட்டது. குளித்து ஈரத்தலையோடு பின் கதவைத் திறந்து வைத்து உட்கார்ந்துகொண்டாள். எங்கும் காற்ற டித்தது. மலையடிவாரமும், விரல்களும், உடனிருந்தவனும் ஞாபகம் வந்தன அவளுக்கு. இந்த இருள் பழகிப் போயிருந்தது. பயமற்றுப் போய்விட்டது. கூந்தலைத் தொய்வாக முடிந்து விட்டுப் பின் கதவைச் சாத்திவிட்டுப் படுக்கும் இடத்துக்குப் போனாள். நேற்றுப் படித்த புத்தகத்தின் மீதி மடித்துக் கிடந்தது.
அம்மா தனியாக உறங்கிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் யாருமில்லை. பையன்கள் அவளைவிட்டுப் போய்விட்டார்கள். எதன் பொருட்டோ அம்மாவின் மேல் வருத்தமாக வந்தது. நேற்று யாரிடமோ அம்மா சொன்னது கேட்டது.
“விரலைப் பிடிச்சுக்கிட்டே திரிவாங்க. இப்போ பையன்கள் ஒருத்தரும் உதவிக்கு இல்லே. அவளா வேலைக்குப் போயி… ஆம்பளையில்லாத குடும்பமாப் போச்சு…”
லைட்டை அணைத்துவிட்டு உறங்கப் போகும்போது பார்த்தாள். சுவரில் இருந்த விரல் தடம் லேசாகத் தெரிந்தது. சின்ன விரல்களாக இருந்தது அப்போது. அவள் உறங்கப் போகும் போது திரும்பவும் அந்த நினைவு வந்தது.
தெருமுனையில் இருந்து குதிக்கும் சாரதி அண்ணன். அவன் குரல். மது… யேய்..!
அவள் பயப்படவில்லை.
– எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2014, உயிர்மை பதிப்பகம், சென்னை.