கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 11, 2025
பார்வையிட்டோர்: 280 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அண்ணர்!” 

“என்ன தம்பி வடிவேலு?” 

“வந்து கொண்டிருக்கு” 

“என்ன வந்துகொண்டிருக்கு”

“சனம் வந்து கொண்டிருக்கு” 

நிலம் வெளித்துக் கொண்டிருக்கிறது. விடிந்தும் விடியாமலுமிருக்கின்றது. அப்போது சுப்பர்சொனிக்கின் இடிமுழக்கம் போன்ற பயங்கர உறுமல். தூரத்தில் தொடர்ந்து பயங்கர குண்டுச்சத்தம். இரவிரவாக சகடை பீப்பா, பொம்மர், தும்பி எல்லாம் மாறி மாறி மூர்க்கத்தனமான குண்டுமாரி. வெறித்தனமான ஷெல் அடி. 

மூன்று நாட்களின் முன்னரே சீபிளேன் அப்பிரதேசத்தில் தாழப்பறந்து நோட்ட மிட்டுச் சென்றது. 

‘என்ன நடக்கப் போகின்றதோ’ என்று அப்பிரதேச மககள் கடந்த மூன்று நாட்களாக, இராப்பகலாகப் பயபீதியுடன அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர். 

தார்மீக அரசின் அதி உத்தம தர்மிஷ்டரின் ஆசியுடன் நேற்று மாலையே வலிகாமம் மேற்கில் இராணுவ நடவடிக்கை தொடங்கிவிட்டது. 

வானமும் பூமியும் புகை மண்டலம். போராளிகள் வீராவேசமாக எதிர்த்துச் சமராடிக் கொண்டிருக்கின்றனர். மக்கள் இரவிரவாக இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். 

“புன்னாலைக்கட்டுவன், ஊரெழு, கோப்பாய் றோட்டு க்களால் மக்கள் திரள்திரளாக வந்து கொண்டிருக்கின்றனர். இப்பென்ன செய்யிறது சிவா அண்ணை?” 

“அதுக்கேன் பதட்டப்படுகிறாய் மோனை?’ 

“சனம் எக்கச்சக்கமாய் வந்து கொண்டிருக்கு. நாங்கள் என்னண்டு சமாளிக்கப்போறமோ?’ 

“தம்பி வடிவேல். இது எங்களுக்கு முதல் முறையே? இதுக்கு முந்தி எங்கடை ஊருக்கு எத்தினை தடவை சனம் சனமாய் வந்து குவிஞ்சுது. நாங்கள் அவையளை ஆதரிச்சு அனுப்பேல்லையே?’ 

“ஆனா இந்த முறை…..” 

“ஒப்பறேசன் லிபறேசன் நடக்கேக்கை வடமராட்சி யிலையிருந்தும், அச்சுவேலி, ஆவரங்காலிலிருந்தும் எவ்வளவு மக்கள் இடம்பெயர்ந்து வந்து ஒரு மாதத்துக்கு மேலை எங்கடை ஊரிலையுள்ள நாலு பள்ளிக்கூடங் களிலையும், வீடுகளிலையும் இருந்தினை. நாங்கள் அவையளை ஆதரிச்சனுப்பேல்லையே?’ 

“ஆதரிச்சனாங்கள்தான். அவையளுக்கு எதுவித குறை பாடுகளுமில்லாமல் ஆதரிச்சனுப்பி வைச்சம்” 

“பலாலி இராணுவ முகாமை ஐஞ்சு இயக்கங்களும் அடிக்கேக்கை பலாலி, வசாவிளான், குப்பிளான்,குரும்பசிட்டி, ஏழாலை, புன்னாலைக்கட்டுவன் பகுதியளிலிருந்து எங்கடை ஊருக்குத்தானே மக்கள் வந்தினை. அவைக்கு நாங்கள் ஒரு குறையும் விட்டு வைக்கேல்லையே.” 

“நீ சொல்லிறது மெய்தான் சிவா அண்ணை.” 

“ஏன், இந்தியன் ஆமிப் பிரச்சினை துவங்கின பொழுது யாழ்ப்பாணம், நல்லூர், வண்ணார்பண்ணை, கந்தர்மடம், தின்னவேலிப் பகுதியளிலையிருந்து எவ்வளவு சனம் இடம் பெயர்ந்து வந்து எங்கடை பள்ளிக்கூடங்களிலும் வீடுகளிலும் இருந்தினை. நாங்கள் அவையளை கைவிட்டமே? எங்களால செய்யக்கூடிய எல்லாத்தையும் செய்தனாங்கள்தானே. இப்பேன் யோசிப்பான்?” 

“அதில்லை அண்ணை. இப்ப உள்ள நிலைமையிலை…..” 

“இப்பென்ன? இப்ப வலி மேற்கிலையிருந்து மக்கள் இடம்பெயர்ந்து கொண்டு வருகினை. நாங்கள் தயாராய்த் தானிருக்கிறம். சரி, வா இப்ப பள்ளிக்குடத்தடிக்குப் போவாம்.” 

பைசிக்கிளை எடுக்கின்றான் சிவதாசன். 

“ராஜன், தம்பி ராஜன்.” 

“என்ன அண்ணை?” 

அயல்வீட்டு ராஜன் கேட்டுக் கொண்டே படலையடிக்கு வருகின்றான். 

“தம்பி ராஜன், நேற்று நடந்த எங்கடை கூட்டத்திலை நாங்கள் எதிர்பார்த்தபடி இப்ப வலி மேற்கிலையிருந்து மக்கள் இடம்பெயர்ந்து இரவிரவாய் வேறை ஊருகளுக்கு ஓடிக் கொண்டிருக்கினை. அவையிலை கணிசமான ஆக்கள் எங்கடை ஊருக்கும் வந்து கொண்டிருக்கினை.” 

“இப்ப நாங்கள் என்ன செய்ய வேணும் சிவா அண்ணை?” “ராஜன், முதலிலை நீ கொலனிக்குப் போ. அங்கை உள்ள விமலாவையும் நாலு பெண்பிள்ளையளையும் உடனடி யாய் தெருவடிப் பள்ளிக்குடத்துக்கு வரச் சொல்லு.” 

“ஏன் விமலாவாக்களை தெருவடிப் பள்ளிக்குடத்துக்கு வரச் சொல்லுறியள்?” 

“வாற ஆக்களை முதலிலை தெருவடிப் பெரிய பள்ளிக் கூடத்திலை இருத்த வேணும். விமலாவாக்கள் வந்தால் தான், ஆக்களைப் பதிவு செய்து சரியாய் கணக்கெடுத்தால் தான் வந்த ஆக்களுக்கு சமையல் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்ய முடியும்.” 

“சரி சிவா அண்ணை இப்பவே நான் கொலனிக்குப் போறன்.” 

ராஜன் கொலனிக்குப் புறப்படுகின்றான். 

“பொறு மோனை ராஜன். விமலாவாக்களை பள்ளிக் கூடத்தடிக்கு அனுப்பிப் போட்டு, நீ கையோடை மூண்டு பேக்கறிகளுக்கும் போ. ஒவ்வொரு பேக்கறிக்காரரிடமும் பாண் நூறு இறாத்தல் வீதம் காலை எட்டு மணிக்கு முந்தி தெருப் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு வரச் சொல்லு. நேற்று கூட்டம் முடிஞ்ச உடனை பேக்கறிக்காறரிட்டை இது பற்றி நாங்கள் சொல்லியிருக்கிறம். அத்தோடை ஒவ்வொரு பேக்கறியிலையிருந்தும் நூறு நூறு கல்பணிஸ்களை கையோடை எடுத்துவா.” 

“ஏன் அண்ணை கல்பணிஸ்?” 

“ஆக்கள் இரவிரவாய் நித்திரை முளிச்சு, கனதூரம் நடந்து களைச்சுப் போய் வந்திருக்கினை. முதலிலை அவைக்கு தேத்தண்ணியும் கல்பணிசும் குடுப்பம். பிறகு ஒன்பது மணியளவிலை பாணையும் பருப்புக்கறியையும் குடுப்பம்.” 

“சரி அண்ணை நான் முதல் கொலனிக்குப் போறன்.” 

ராஜன் கொலனியை நோக்கி விரைகின்றான். 

ஆரவாரம் கேட்டு கனகலிங்கம் வருகின்றான். 

“என்ன சங்கதி சிவா அண்ணை? பரபரப்பாய் நிக்கிறியள்?” 

“தம்பி கனகு, இடம்பெயர்ந்து மக்கள் வந்து கொண்டிரு க்கினை. நீ போய் செட்டியாற்ரை லான்ட்மாஸ்டரைப் பிடிச்சுக் கொண்டு, எம்.பி.சி.எஸ். மனேச்சர் மகாதேவனைக் கூட்டிக் கொண்டு போய், அங்கையிருந்து அரிசி, பருப்பு, தேயிலை, சீனி எல்லாத்தையும் எடுத்துக் கொண்டா, கணக்கை பிரதேச சபைச் செயலாளர் தீர்க்கிறன் எண்டு சொல்லியிருக்கிறார். அதோடை றெட்பானா கிளையிலை பெரிய அண்டாக்களையும் சாப்பிடுகிற கோப்பைகளையும், தண்ணி குடிக்கிற பிளாஸ்டிக் கப்களையும் எடுத்துக் கொண்டுவா.” 

கனகலிங்கம் செட்டியார் வீட்டுக்கு விரைகின்றான். 

சிவாவும் வடிவேலும் தெருவடிப் பள்ளிக்கூடத்தடிக்குச் செல்கின்றனர். 

பள்ளிக்கூட வாசலில் றோட்டின் இரு பக்கங்களிலும் நூற்றுக்கணக்கான மக்கள் மூட்டை முடிச்சுக்களுடன் களைச்சுச் சோர்ந்து போயிருக்கின்றனர். அவர்களுடைய முகங்களில் பயபீதி. அவர்கள் அனைவரும் பேரதிர்ச்சியுடன் இருக்கின்றார்கள். 

பள்ளிக்கூட ‘கேற்’ பூட்டிக்கிடக்கின்றது. 

கேற்றிக்குப் பின்னால் காவலாளி சண்முகம் தூங்கி விழுந்து கொண்டிருக்கின்றான். 

“சண்முகம், இவை ஏன் றோட்டிலை இருக்கினை? நீ ஏன் கேற் திறக்கேல்லை?” 

சிவா கடுகடுப்பாகக் கேட்கின்றான். 

காவலாளி சண்முகம் திருதிருவென்று முழித்தபடியே நிற்கின்றான். 

“ஏன் பேசாமல் நிக்கிறாய்? கேற் ஏன் திறக்கேல்லை?”

அதட்டுகின்றான் சிவா. 

“ஆக்கள் வந்தால், கேற்றைத் திறந்து அவையளை பள்ளிகூடத்துக்கை விடச்சொல்லி நான் நிக்கேக்கை நேற்று பள்ளி அதிபர் உனக்கு சொன்னவர் தானே. நீ ஏன் கேற் திறக்கேல்லை?” 

கர்ணகடூரமாகக் கத்துகின்றான் சிவா. 

“நான் என்ன செய்யிறது சிவா அண்ணை? நேற்று இரவு இரண்டு பேர் வந்தினை. அவையின்ரை தோளிலை துவக்குகள். தாங்கள் சொல்லும் மட்டும் கேற் திறக்க வேண்டாம் எண்டு சொல்லிப் போட்டு போச்சின. அப்ப நான் என்னண்டு கேற்றை திறக்கிறது?” சண்முகம் அச்சபாவ த்துடன் கூறினான். 

“அது போகட்டும்.சரி இப்ப நாங்கள் சொல்லிறம். கேற்றைத் திற.” 

உறுதியுடன் சிவா கூறுகின்றான். 

“சரி அண்ணை நான் திறக்கிறன். பிறகு வாற பிரச்சி னைக்கு நீ தான் பொறுப்பு.” 

“ஒ. அதை நான் பாத்துக் கொள்ளிறன். இப்ப கேற் றைத் திற.” 

கேற்றைத் திறக்கின்றான் சண்முகம். மக்கள் பள்ளிக் கூடத்துக்குள் செல்கின்றனர். 

“இப்ப நீங்கள் எல்லாரும் வடக்குப் பக்கத்திலையுள்ள அந்த பெரிய மண்டபத்துக்கை போங்கோ. அங்கை உங்க ளுக்கு வசதியான இடத்தைப் பிடித்துக் கொண்டு களைப் பாருங்கோ. உங்களுக்கு வேண்டியதெல்லாத்தையும் நாங்கள் செய்து தாறம். நீங்கள் ஒண்டுக்கும் யோசியாதை யுங்கோ.” சிவாவும் வடிவேலும் அவர்களுக்கு ஆறுதல் கூறித் தென்பூட்டுகின்றனர். 

மக்கள் வசதியான இடம் பிடிப்பதற்கு முண்டியடித்துக் கொண்டு மண்டபத்திற்குள் செல்கின்றனர். விமலாவும் ஏனைய தொண்டர்களும் அந்த முகாமிலுள்ளவர்களைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். 

இப்பள்ளிக்கூடத்தின் கணக்கெடுப்பு முடிந்த பின் ஊரிலுள்ள மற்றைய மூன்று பள்ளிக்கூடங்களிலும் உள்ள இடம்பெயர்ந்தவர்களைக் கணக்கெடுக்க இத்தொண்டர்கள் செல்ல வேண்டும். 

இந்த முகாமிலுள்ள மக்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு கல் பணிஸ்களும் தேனீரும் வழங்கப்பட்டு விட்டது. இனி அவர்களுக்கு ஒன்பது மணியளவில் பாணும் பருப்புக் கறியும் வழங்கப்படவிருக்கின்றது. 

மக்கள் தங்களை ஆசுவசப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். 

குண்டு வீச்சாலும், ஷெல் அடியாலும் அவர்களுக்கு ஏற்பட்ட அச்சமும் அதிர்ச்சியும் அவர்களிடமிருந்து இன்னும் அகலவில்லை. தங்களுடைய வீடு வாசல்களையும் பொருள் பண்டங்களையும் இழந்து நிற்கதிக்குள்ளாகி விட்டோமே என்ற துயரம் அவர்களது இதயத்தை வதைத்துக் கொண்டே யிருக்கின்றது. 

சுன்னாகச் சந்தை கூடவில்லை. 

நீர்வேலிப் பிள்ளையார் கோவிலடியில் சந்தை கூடியிருக்கின்றது. 

மார்க்கண்டு ஆட்கள் முகாமிலுள்ள இடம்பெயர்ந்தவர் களுக்கு உ ணவு சமைப்பதற்குத் தேவையான காய்கறிகளைச் சந்தையில் சேகரித்துக் கொண்டிருக்கின்றனர். 

சாப்பாடு சமைப்பதற்கும், சுகாதாரத்தைப் பேணுவதற்கும் முகாமிலுள்ளவர்களிடையே ஏற்படுகின்ற பிணக்குகளைத் தீர்த்து வைப்பதற்கும், முகாமிலுள்ள தகுதிவாய்ந்த ஆண்களையும் பெண்களையும் சில தொண்டர்களையும் உள்ளடக்கிய குழுக்கள் முகாமிலுள்ளவர்களின் கூட்டத்தில் அமைக்கப்பட்டு விட்டன. 

முகாமிற்கு பெரிசுகள் வருகின்றனர். 

“சிவா அண்ணை நல்ல வேலை செய்யிறியள். நாங்கள் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் செய்யிறியள். இதாலை எங்களுக்கு பெரும் ஆறுதல். உங்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுகள். நாங்கள் களத்துக்குப் போறம்.உங்களுக்கு ஏதாவது தேவையெண்டால் எங்கடை முகாமுக்குச் சொல்லி அனுப்புங்கோ. சரி நாங்கள் போய் வாறம்.” 

பெரிசுகள் செல்கின்றனர். 

சிறிசுகள் வருகின்றனர். 

“தோழர் ஏதாவது உதவி தேவையா? நாங்கள் எப்பவும் உதவத்தயார். உங்களுக்கு என்ன தேவை சொல்லுங்கோ தோழர்.” 

“இப்ப எல்லாம் இருக்கு. தேவையெண்டால் சொல்லி யனுப்புறம்.” 

“சிவா, நாங்கள் போட்டு வாறம்.” 

சிறுசுகள் செல்கின்றனர். 

கறுப்பு உடையுடன் சிலர் வருகின்றனர். 

இந்த முகாமிலுள்ளவர்களின் விபரங்களடங்கிய ஒரு பட்டியல் எங்களுக்குத் தேவை. அதைத் தயாரித்துத் தாரு ங்கோ. தேவையெண்டால் வேண்டிய அரிசி, மா, சீனி போன்ற சமான்களைத் தாறம்.” 

“இங்கு இப்பெல்லாம் இருக்கு. தேவையெண்டால் கேக்கிறம்”. வடிவேலின் பதில். 

“பட்டியலை எங்கடை முகாமுக்கு அனுப்பி வைக்க வேணும். சரி நாங்கள் வாறம்.” 

கறுப்பு சேட்டுகள் செல்கின்றனர். 

துப்பாக்கிகளுடன் இருவர் வருகின்றனர். 

“இந்த முகாமுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் படி எங்கடை ஹை கொமாண்டிலிருந்து ஓடர்’ வந்திருக்கு. நாங்கள் இரண்டு பேரை ஆயுதங்களுடன் அனுப்பி வைக்கிறம். அவை இந்த முகாமிலை தங்கியிருந்து பாதுகாப்பு வழங்குவினை.” 

“இப்ப இஞ்சை ஒண்டும் தேவையில்லை. பாதுகாப்பு தேவையெண்டால் உங்களிடம் கேக்கிறம்.” 

வடிவேல் கூறுகின்றான். 

துப்பாக்கிகள் செல்கின்றன. 

சமையல் ஆரம்பமாகிவிட்டது. மும்முரமாகச் சமையல் நடந்து கொண்டிருக்கின்றது. 

“ஐயய்யோ! இதென்ன கொடுமை! இதைப் பாக்கக் கேட்க ஆளில்லையோ?” 

உரத்த குரல்கள். 

சத்தம் வந்து கொண்டிருக்கும் பக்கம் எல்லா விழிகளும் திரும்புகின்றன. 

பதைபதைப்புடன் கத்திக்கொண்டு ஐவர் ஓடி வந்து கொண்டிருக்கின்றனர். 

ஐவருக்கும் வாட்டசாட்டமான மிடுக்கான உடற்கட்டு, ஒரே மாதிரி ஊதாநிற நீள் காற்சட்டை வெண் நீல சேட் ஒரே மாதிரி முடிவெட்டு. 

அங்கு கூடியிருந்த மக்களுக்கு ஆச்சரியம். 

“ஆர் இஞ்சை பொறுப்பாளர்?” 

ஆவேசக்குரல். 

“ஏன்? நான்தான் என்ன சங்கதி?” 

சிவா நிதானமாகக் கேட்கின்றான். 

“உங்களுக்கு எள்ளளவும் ஈவிரக்கமில்லையே?” 

“ஏன் கேக்கிறியள்?’ 

“எங்கடை இந்த மக்கள் அகோர விமானத் தாக்கு தலாலையும், கொடூர ஷெல் அடியாலையும் தங்கடை வீடு வாசல்களை விட்டு இடம் பெயர்ந்தார்கள். அவை இரவிரவாய் நித்திரையில்லாமல், பயத்தோடை இவ்வளவு தூரம் நடந்து களைச்சுப் போய் வந்திருக்கினை.” 

“அது எங்களுக்கும் நல்லாய்த் தெரியும்.” வடிவேலு அழுத்திக் கூறுகின்றான். 

“அப்பிடிப்பட்ட எங்கடை மக்களைச் சமைக்க விட்டிட்டு, உங்கடை ஆக்களெல்லாம் அரட்டை அடிச்சுக் கொண்டிருக்கினை. இது தானே உங்கடை சேவையின் லட்சணம்?” 

“இஞ்சை எங்கடை ஆக்கள் ஒருதரும் அரட்டை அடிச்சுக் கொண்டிருக்கேல்லை. அவையவைக்குக் குடுத்த அந்தந்த வேலையளை அவை செய்து கொண்டுதானிருக்கினை.” 

“அப்ப இஞ்சை சமைச்சுக் கொண்டிருக்கிறது ஆர்?” 

“எங்கடை சில தொண்டர்மாரும் முகாமிலை உள்ள சிலரும் சேர்ந்துதான் சமையல் செய்து கொண்டிருக்கினம். முன்பும் எத்தினையோ தடவை இப்பிடித்தான் செய்தனாங்கள். இதுதான் வழக்கம்.” 

“நீங்கள் எல்லாரும் விடுங்கோ. நாங்கள் செய்யிறம்.” 

சமையல் செய்து கொண்டிருப்பவர்களை அப்புறப் படுத்திவிட்டு, வந்த ஐவரும் வேலை செய்யத் தொடங்குகின்றனர். 

வந்தவர்களில் ஒருவர் தேங்காய் திருவுகின்றார். இன்னொருவர் காய்கறி வெட்டுகின்றார். மற்றொருவர் அரிசியைக் கழுவிக் கொண்டிருக்கின்றார். இன்னொருவர் விறகுகளை அடுப்பிற்குள் செருகிக் கொண்டிருக்கின்றார். ஒருவர் தேங்காய்ப்பால் பிழிந்து கொண்டிருக்கின்றார். 

ஐவரும் கனகச்சிதமாக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். 

அங்கு கூடியிருந்த மக்களுக்கு வியப்பு. பேராச்சரியம். இவ்விளைஞர் களின் செயலைப் பார்த்து மக்கள் புளகாங்கித மடைகின்றனர். சிலரது கண்கள் பனிக்கின்றன. 

“அங்கை எங்கடை பொடியள் எங்களைப் பாதுகாக்கிறதுக்கு தங்கடை உயிர்களைப் பணயம் வைச்சு ஆமி யோடை வீரதீரமாய் சண்டை பிடிச்சுக் கொண்டிருக்கினை.” 

ஒருவர் பெருமையுடன் கூறுகின்றார். 

“இது இண்டைக்கு நேற்றல்ல. வரியக்கணக்காய் இவை போராடிக்கொண்டிருக்கினை.” 

மற்றவர்- 

“இந்தச் சண்டையிலை நாங்கள் எங்கடை வீரர்கள் எவ்வளவு பேரை இழந்திட்டம். ஆயிரக்கணக்கிலை பறிகொடு த்திட்டம்.” 

மனம் குமைந்து வேதனையுடன் கூறுகின்றார் ஒருவர். “எங்கடை பொடியள் எங்களைப் பாதுகாக்கிறதுக்கு ஆமியோடை சண்டை பிடிக்கிறது மாத்திரமில்லை. அவை எங்கடை சுவம் நயத்திலையும் எவ்வளவு அக்கறையாயிரு க்கினை. எங்கடை சாப்பாட்டு விசயத்திலை கூட எவ்வளவு கரிசனையாயிருக்கினை பாருங்கோ.” 

மனம் நெகிழ்ந்து இன்னொருவர் கூறுகின்றார்.

“இப்பிடிப்பட்ட பிள்ளையளைப் பெற்றதுக்கு நாங்கள் எவ்வளவு குடுத்து வைச்சம்?” 

அங்கு கூடியிருந்தவர்கள் ஆத்மாத்தமாக வாழ்த்து கின்றனர். 

ஐந்து இளைஞர்களும் சமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். 

திடீரென ஒரு ‘வீடியோக் கமறா’ நுளைகின்றது.

அந்த ஐவரையும் சுற்றி பலகோணங்களில் கமறா இயங்குகின்றது. 

வந்த மாதிரியே வீடியோக் கமறா வெளியேறுகின்றது. அந்த ஐவரும் கமறாவைப் பின்தொடர்ந்து செல்கின்றனர். 

அங்கு கூடியிருந்த மக்களுக்குப் பேரதிர்ச்சி! 

தேங்காய் துருவிய குறையில் கிடக்கின்றது. மரக்கறி வகைகள் வெட்டியபடியே குறையில் கிடக்கின்றன. 

உலைத் தண்ணீர் கொதித்தபடியே இருக்கின்றது. 

‘இவங்கள் எங்கடை பெடியள்தானா?’ 

மக்கள் மனதில் சந்தேகக் கேள்வி. 

– 2005

– ஜென்மம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜூலை 2005, மீரா பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *