சரோஜா ராமமூர்த்தி

சரோஜா ராமமூர்த்தி
 

சரோஜா ராமமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 27, 1921-ல் ராமச்சந்திரன், கிரிஜா இணையருக்குப் பிறந்தார். தந்தை திருக்கழுக்குன்றத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். பதினொரு வயதில் தாயை இழந்தார். தந்தையுடன் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக 1940-ல் அத்தை, மாமாவுடன் பம்பாயில் குடியேறினார்.

எழுத்தாளர் து. ராமமூர்த்தியை ஜனவரி 28, 1943-ல் பம்பாயில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். மூன்று மகள்கள். நான்கு மகன்கள். மகள்கள் சரஸ்வதி, பாரதி, கிரிஜா. மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி, கணேசகுமார், குமரன்.

மகள் பாரதி எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜுவைத் திருமணம் செய்து கொண்டார். மகன்கள் ரவீந்திரனும், ஜெயபாரதியும் எழுத்தாளர்கள். ஜெயபாரதி தந்தையின் ‘குடிசை’ கதையை அதே பெயரில் திரைப்படமாக இயக்கினார்.

சரோஜா ராமமூர்த்தி இளமையில் “பாரதி” என்ற பெயரில் கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினார். சரோஜா ராமமூர்த்தியின் முதல் சிறுகதை ‘புதுவெள்ளம்’ 1938-ல் ஆனந்தவிகடனில் வெளியானது. இவரது முதல் நாவல் ‘மனைவி’ அக்டோபர், 1946-ல் கலைமகள் இதழில் தொடராக வெளியாகிப் பின் 1947-ல் நூலாக வெளியானது. ‘பனித்துளி’ நாவல் ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் 1957-ல் தொடராக வெளிவந்தது. இந்நாவல் அவரை பிரபலமாக்கியது. 600 சிறுகதைகள், எட்டு நாவல்கள், இரண்டு குறு நாவல்கள் எழுதினார். ‘முத்துச்சிப்பி’, ‘இருளும் ஒளியும்’ போன்றவை இவரது பிற நாவல்கள்.

சுதேசமித்திரன், ஆனந்தவிகடன், கல்கி, மங்கை, சக்தி, கலைமகள், நவசக்தி, காதல், அமுதசுரபி, தினமணி சுடர், போன்ற இதழ்களில் குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளை எழுதினார்.1943-ல் சக்தி இதழில் ‘செளந்திரம்’ சிறுகதை வெளியானது. ’பிருந்தையின் அருள்’ சிறுகதை மங்கை இதழில் 1947-ல் வெளியானது. ‘குடும்பக்காட்சி’, ‘ஆகி வந்த படம்’, ‘பிள்ளை வளர்ப்பு’, ‘பார்வதி’, ‘யாருடைய சித்தம்’, ‘ரங்கத்தின் ஆவி’ போன்றவை இவரது முக்கியமான சிறுகதைகள். இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, ‘நவராத்திரிப் பரிசு’, ‘குழலோசை முதலிய கதைகள்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளன. ‘அன்னை’, ‘மாளவிகா’, ‘இரு கதைகள்’, ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ போன்றவை இவரது பிற படைப்புகள். ‘கல்கி’ இதழில் சிறுகதைகள் பல எழுதினார். 2023-ல் காலச்சுவடு பதிப்பகம் வெளியீடாக சரோஜா ராமமூர்த்தியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் ”சரோஜா திறக்கும் உலகம்” என்ற பெயரில் அம்பையை தொகுப்பாளராகக் கொண்டு வெளிவந்தது.

காஞ்சி பரமாச்சார்யரிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்த சரோஜா ராமமூர்த்தி தன் இறுதிக் காலத்தில் எழுதாமலானார். முழுவதுமாக ஆன்மிகத்தில் ஈடுபட்டார்.

600 சிறுகதைகள், 10 நாவல்கள் வரை எழுதியுள்ளார். இவரின் குடும்பமே எழுத்துத்துறையில் இருப்பது ஆச்சரியமே. கணவர் து.ராமமூர்த்தி, மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி என நான்கு எழுத்தாளர்களைக் கொண்ட குடும்பம்.

சரோஜா ராமமூர்த்தி ஆகஸ்ட் 8, 1991-ல் தன் எழுபதாவது வயதில் காலமானார்.

நாவல்

மனைவி
முத்துச்சிப்பி
பனித்துளி
இருளும் ஒளியும்
அவள் விழித்திருந்தாள்
மலையில் ஒரு மாளிகை
இன்பம் எங்கே?

சிறுகதைத் தொகுப்பு

வெறும் கூடு
குழலோசை முதலிய கதைகள்
நவராத்திரிப் பரிசு (1947)
சரோஜா திறக்கும் உலகம் (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *