கண்ணாலே பேசிப்பேசி
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முஸ்தஃபாவில் வாங்க வேண்டியிருந்த சில சாமான்களை வாங்கிக் கொண்டு வெளி யேறினேன். மழை வரும் செய்தி தாங்கிய காற்று சிலுசிலுவென்று வீசி என்னில் ஏற்பட்டிருந்த களைப்பை விரட்டியது. சூல் கொண்ட மேகங்கள் இன்னமும் கனத்திருக்கவில்லை. கடை வாசலில் வரிசையாகக் காத்திருந்த டாக்ஸிகளில் ஒன்றில் ஏறலாமா வென்று ஒரு கணம் யோசித்தேன். மறு கணமே இனிமையான மாலையை அனுபவிப்போமே என்று முடிவெடுத்து, சிரெங்கூன் சாலையின் பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். முதலில் கோவிலுக்கு உள்ளே சென்று பெருமாளுக்கு ஒரு சின்ன ஹலோ சொல்லி விடத் தான் நினைத்திருந்தேன். ஆனால், நிறுத்தத்தை நான் அடையவும், யீஷீன் போகும் விரைவுப் பேருந்து 857 வரவும் மிகச்சரியாக இருந்தது. வந்து நின்ற பஸ்ஸை விட மனமில்லாமல் பெருமாளை மனதிற்குள்ளேயே சேவித்த படி சட்டென்று ஏறி விட்டேன்.
சனிக்கிழமை என்றால் பேருந்தில் தான் என்ன கூட்டம்! சீன ஓட்டுநர் சிநேகமாகச் சிரித்தார். பதிலுக்குப் புன்னகைத்து விட்டு ‘ஈஸி லிங்க்’கைப் தடவிக் கொண்டே ஏறும் போது தான், வசதியாக நிற்கக் கூட இடமிருக்காதோ என்ற சந்தேகம் தட்டியது. பெருமாளையாவது பார்த்திருக்கலாம். ஆனால், அடுத்துவரும் பஸ்ஸும் இப்படித் தானிருக்கப் போகிறது. ஏறியவர்கள் நகராமல் நின்றார்கள். முதுகுகளோடு முதுகுகள் பார்த்துக் கொண்ட இரண்டு வரிசைகள். நின்றவர்கள் விட்ட வழியில் புகுந்து பின்னால் நகர்ந்தேன். வலப்புறம் இரண்டாவது வரிசை இருக்கைகளின் பின்னால் பயணிகள் நிற்கவென்று இருக்கும் இடத்தில், இறங்கும் வாசலுக்கு முன்பு, ஜன்னலையொட்டி நிற்க எனக்கு இடம் கிடைத்தது. அங்கிருந்து பஸ் நகரும் போது பெருமாள் விருட்டென்று தெரிந்து மறைந்தார். அதன் பிறகு, அடுத்ததிலிருந்து கிளம்பும் போது காளியம்மனும் ராமரும் தரிசனம் தந்தனர். பிறகு, சாலையை மறந்து பேருந்தின் உட்புறம் பார்த்த படி நின்று கொண்டேன். நின்றவர்களின் எண்ணிக்கை இன்னும் கூடி விட்டிருந்தது.
உள்ளேயிருந்த செயற்கைத் தண்மையை மறுத்து, வெளியே நிலவிய அற்புதமான இயற்கைத் தண்மைக்கு ஏங்கியது மனமும் உடலும். யாரோ மெக்டோனாட்டிலிருந்து அவசரமாக வாங்கிக் கொண்டு பேருந்தில் ஏறியிருக்க வேண்டும். ‘ஆப்பிள் பைய்யின் மணம் பேருந்தின் பின் புறத்திலிருந்து மிதந்து நிறைத்தது. அருகில் இருந்தவர்களில் யாரோ முந்தைய தினம் ஏராளமாக பூண்டு சமாசாரங்கள் சாப்பிட்டிருப்பார்கள் போல, உலர்ந்து விட்டிருந்த வியர்வை பூண்டு மணத்தைப் பரப்பியது.
உட்கார்ந்திருந்தவர்களில் முக்கால் வாசி பேர் சௌகரியமாக உறங்கிக் கொண்டிருந்தனர். நின்றவர்களில் சுற்று முற்றும் வேடிக்கை பார்த்த படியிருந்தது நான் மட்டும் தான். வரிசையின் கடைசியில் நின்று கொண்டே தூங்கிக் கொண்டிருந்த முதியவர் ஒருவரை அங்கிருந்தே பார்க்க முடிந்தது. அதிக நிறுத்தங்கள் இல்லாமல் விரைவுச் சாலையில் நேராகவும் சீராகவும், குலுக்கல் இல்லாமல் வழுக்கிக் கொண்டு பேருந்து விரைந்து செல்லும் போது, உறங்குபவர்களுக்கு சீரான உறக்கமும் விழித்திருப்பவர்களுக்கு கொட்டாவியும் வரத்தானே செய்யும். அதிக ஏற்றமோ இறக்கமோ இல்லாத ‘ம் என்ற பேருந்தின் ஓட்ட ஓசை வேறு தாலாட்டாய் இருந்தது.
என் முன் இருந்த இருக்கைகளில் ஜன்னலையடுத்திருந்த இருக்கையில் வீட்டில் உறங்குவதைப் போலவே ஒரு மலாய் மாது ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். பக்கத்தில் உட்கார்ந்திருந்த சீனப் பெண் தன் தலையை விட்டத்தை நோக்கித் திருப்பி தன் பின்னால், அதாவது என்னருகே நின்றிருந்தவனையே கண்ணோடு கண் பொருத்த முயன்ற படியிருந்தாள். இடது கை விரல்கள் விரித்த நிலையில் மேல் மார்பின் மீது. முகத்தில் ஏதோ தவிப்பு. இவள் என்ன செய்கிறாள். அவன் கணவனோ, இல்லை காதலனோவாகத் தான் இருக்கவேண்டும் என்று முதலில் நினைத்துக் கொண்டேன்.
ஆனால், அப்படியும் தெரியவில்லையே, அவன் ஏதோ நினைவில் ஜன்னலுக்கு வெளியில் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அவளுக்குத் தெரிந்தவனைப் போலவே இல்லை. திடீரென்று இறுக்கையின் நுனிக்குப் போனாள். தனக்கு வலப்பக்கம் நின்றிருந்தவனின் முகத்தை நோக்கி, அதே போல இவனின் கண்களைச் சந்திக்க முயன்றாள். கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த அவனும் கண் மூடி காதில் பொருத்தியிருந்த வாக்மேன் இசையில் லயித்திருந்தான்.
மீண்டும் இறுக்கையில் சாய்ந்தாள். நடுவில் நின்றிருந்தவர்களிடையே ஊடுறுவி மறு புறம் பார்த்தாள். சில வரிசைகள் தள்ளி பின் பக்கம் அவளோடு வந்த ‘அக்கா’ இருந்தார் போல. ஆனால், இவள் கூப்பிட்டது ‘அக்காவின் காதில் விழாததாலோ இல்லை, ‘அக்கா’ உறங்கிக் கொண்டிருந்ததாலோ அங்கிருந்து பதிலேயில்லை. எதற்காக இந்தத் தவிப்பு இவளுக்கு?
அத்தனை கூட்டத்திலும் என் கவனத்தை ஈர்த்த ஒரே ஆள் அவள்தான். அந்த அளவிற்கு பதட்டமாகக் காணப் பட்டாள். என்ன, ஒரு பதினேழிலிருந்து இருபது வரையில் ஏதோ ஒரு வயதிருக்கும். கால்மேல் கால் போட்டிருந்தவளின் மடியில் ஒரு விஸிடிங்க் கார்ட் அளவில் ஒரு குட்டி பர்ஸ்.
காலில் வெளீர் நீலத்தில் ரீபோக். முக்கால் ஜீன்ஸ் அணிந்து இடுப்பில் பிரிட்னி ஸ்பெஷல் பெல்ட் போட்டிருந்தாள். தொப்புள் தெரியக் கூடிய அளவிற்கு மூன்று அல்லது நான்கு விரல் கடை இடைவெளி விட்டு தான் மேல் சட்டை முடிந்திருந்தது. கழுத்து எலும்பிலிருந்து கிட்டத்தட்ட அரை ஜாண் இடம் விட்டு பல வண்ணங்களில் மெல்லிய குறுக்குக் கோடுகள் போட்ட மேல் சட்டை ஆரம்பித்தது. தோளிலிருந்து வழிந்த இரண்டு ‘ஸ்பகெட்டி’ ஸ்ட்ராப்புகளின் உதவியோடு தான் அது தன் இடத்தில் இருந்தது. மார்ப்புப் பிளவு தெரியவென்றே உடுத்தும் மேல்சட்டை தான். அதில் யாதொரு சந்தேகமும் இல்லை. தோளில் இருந்த இரண்டு வார்களுடன் உள்ளாடைகளின் ‘ட்ரான்ஸ்பேரண்ட் ஸ்ட்ராப்புகள் இரண்டும் அவளின் அருகில் நின்றால் தெரியும்.
பார்த்துப் பார்த்துப் பழகிய உள்ளூர் உடை கலாசாரம் தானே, அதுவும் பத்து வருடங்களுக்கு மேலாக. இதெல்லாம் என்ன பெரிய விஷயமா என்றால் இல்லை. நிச்சயமாக இல்லை. ஆனால் அவளின் தவிப்பு? அது தானே புத்தம் புதிது.
கிள்ளியெடுக்கச் சதையில்லாமல் தானிருந்தாள். சொல்லப் போனால், முன் புறமும் பின் புறமும் கூட அதிக மேடுகளோ வளைவுகளோ இல்லாமல் சராசரியாகத் தான் தெரிந்தாள். கண்ணைக் கவர்ந்தது என்று பார்த்தால் தந்தத்தைப் பழிக்கும் நிறத்தை வேண்டுமானால் சொல்லலாம். எலும்பின் மேல் நேரடியாகப் போர்த்தியிருந்த வழவழப்பான பாலேடு போன்ற தோல். மற்றபடி பெரிதாக ஒன்றுமில்லை. நூறோடு நூற்றியொன்று ரகமாகத் தான் தோன்றும் உள்ளூரிலேயே வாழ்ந்து பழக்கப் பட்ட யாருக்கும். அவளின் உடல் மொழியல்லவோ என் கவனத்தை ஈர்த்தது. ஆனால், ஏன் மற்றவருக்கு மேற்படாத அசௌகரியம் அதனால் எனக்கு மட்டும்?
பின் இருக்கையில் கேட்ட ‘மாண்டரின் உரையாடலுக்குத் தாவியது காது. இரண்டு அந்நியர்கள் தான் என்பது ஆரம்ப உரையாடலில் தெரிந்து விட்டது. நடுத்தர வயதுப் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும். ஆண் உட்கார்ந்திருந்தார். நின்று கொண்டே பயணித்த பெண்னோ உட்கார அனுமதிக்குமாறு தன் ‘வாரிகோஸ் வெயின்ஸ்’ பிரச்சனையைக் காட்டிக் கேட்கவே, ஆண் முதலில் தனக்கும் அதே பிரச்சனையுண்டு என்று சொல்லி மறுத்தார்.
பெண் நம்பவில்லை. பெண்களுக்குத் தான் அது வரும் என்று சிரித்தபடி சர்ச்சையை ஆரம்பிக்க, ஆண் அவரது கால் சட்டையைத் தூக்கி காண்பித்து, பிறகு இருவரும் விவாதத்தை விட்டு விட்டு சகஜமாய்ப் பேச ஆரம்பித்து விட்டனர். பெண் உட்கார்ந்து கொண்டு நின்ற ஆணுக்கு, ‘ஸ்யேஸே நீ’ கூறி நன்றி பாராட்டினார். சளசளவென்று அவரவர் மருத்துவ அறிவைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கி விட்டனர். பேருந்தினுள் நிலவிய அமைதி குலைய ஆரம்பித்தது.
சமீப காலம் வரை வாய்பார்க்கும் பழக்கமாக மட்டுமே இருந்தவள், அம் மொழியைக் கற்றுக் கொள்ளலாமென்று ஆரம்பித்திருந்ததன் விளைவு, உள்ளூர் வாசிகள் ஒரு செம்மொழியை எப்படியெல்லாம் சிதைக்கிறார்கள் என்று ஆராய ஆரம்பித்திருந்தேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெய்ஜிங்க் ஆட்கள் பேசும் பாணியில் நாக்கைச் சுழற்றிச் சுழற்றிப் பேசி இவர்கள் கேலி செய்யத் தவறுவதேயில்லை என்பது தான் அந்த வேடிக்கையிலும் வேடிக்கை.
மீண்டும் சீன இளைஞி தன் அக்காவைக் கூப்பிடுவது கேட்டது. அவளை முதல் முறை திரும்பிப் பார்க்க வைத்ததும், மீண்டும் மீண்டும் பார்க்க வைத்ததும் அவளின் பதட்டமும் தவிப்பும். அவை மற்றவர்களையும் திரும்பிப் பார்க்க வைத்ததா வென்று சுற்று முற்றும் கவனித்தேன். அவரவர் அவரவர் உலகில். உறக்கம், மொபைல் உரையாடல், வாக்மேனில் பிரிட்னி, ஆவ்ரல் லவின் இல்லை எமினெம் என்று ஏதோ ஒன்று.
உட்கார்ந்த வாக்கில் அப்படியே தன் மடியிலேயே முன்புறம் சாய்ந்து தன் மடியிலேயே படுத்துப் பார்த்தாள். கீழே குனிந்து எதையோ தேடுகிறாளோ என்று தான் நினைக்கத் தோன்றும். அதிக நேரம் அவளால் அந்த நிலையில் நீடிக்க முடியவில்லை போலும். சில நிமிடங்களிலேயே இருக்கையில் சாய்ந்து உட்காந்து கொண்டாள். அதே நிலையில் தலையை மட்டும் உயர்த்தி சில நொடிகள் இருக்கைக்குப் பின்னால் நின்றிருந்தவனின் முகத்தையே உற்றுப் பார்த்தாள். பிறகு, வலது கை கழுத்துக்குக் கீழே மார்பிலும் இடது கை பின்னால் சட்டையை இழுத்து விட்டுக் கொண்டும் இருக்கையின் நுனிக்கு வந்து தலையை மேலே தூக்கி வலப் புறத்தில் நின்றிருந்தவனின் முகத்தை உற்று உற்றுப் பார்க்க ஆரம்பித்தாள். தலையைத் திருகி நிமிர்ந்து, பார்த்துப் பார்த்து கழுத்து வலி தான் வரப் போகிறது என்று நினைத்துக் கொண்டேன்.
சட்டென்று எதிர் பாராமல் இருக்கும் போது பிடித்து விடும் நோக்கில் கழுத்தைத் தூக்கி இருவரையும் ஐந்து நிமிட இடைவெளி விட்டுப் பார்த்தாள். ஓஹோ, என் சந்தேகம் சரி தான். நிற்பவர்கள் ‘பார்க்கிறார்களா என்று கண்டு பிடிக்கிறாளாம் லேடி ‘ஷெர்லக் ஹோம்ஸ்’.
உடுத்தும் போது தோன்றவில்லையோ, தான் உட்கார்ந்து கொண்டு இருந்தால் நின்றிருப்பவரின் கண்ணில் ஆழங்கள் படலாமென்று. இல்லை, எதிர்பார்க்கத் தான் இல்லையோ அத்தகைய நிலை ஏற்படுமென்று. அவள் படும் பாட்டைப் பார்த்தால் யாருக்கும் கிருஷ்ணனாய் அவதாரமெடுக்கலாமா என்று தோன்றும். ஆனால், கட்டியிருந்த புடைவையில் பாதியையா கொடுக்க முடியும். சரி, அப்படியேயானாலும் கூட நான் தாவணியில் வீட்டுக்குத் திரும்பிப் போவதை நினைத்ததுமே குபீரென்று கிளம்பிய சிரிப்பை அடக்கிக் கொண்டேன். தாவணி யணியவும் வயதொன்று வேண்டாமா. வழக்கமாய் அணியும் சல்வார் கமீஸ் அணிந்திருந்தாலும் துப்பட்டாவையாவது கொடுத்து உதவியிருக்கலாம். கொடுத்தால் வாங்கிக் கொள்வாளா? இல்லை, என் விஷயத்தில் மூக்கை நுழைக்காதே, என்று பார்வையிலேயே எச்சரிப்பாளோ.
அவளருகில் நின்றிருந்தவர்களைப் பார்த்தேன். வெளி நாட்டு ஊழியர்கள் இருவருமே இந்தியர்கள் என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால், அந்தப் பெண்ணின் இருக்கைக்குப் பின் புறமிருந்தவனின் கையடக்கத் தொலைபேசி சிணுங்கியதும் வங்காளத்தில் பேசினான். ‘தாக்கா வாசிகளின் வங்க மொழிப் ப்ரயோகத்தில் இருந்த சில்லறை வித்தியாசங்களைக் கண்டு கொள்ள முரட்டுப் பிள்ளையின் பிடிவாதத்துடன் முயன்ற என் காதுகள் பழைய நினைவேடுகளிலிருந்த ‘ஷோணார் போங்க்ளா வில் முழுமையாக லயிக்க மறுத்தன. பேசிக் கொண்டேயிருந்தவன் டக்கென்று போனை அணைத்து விட்டு அடுத்து வந்த ‘பெண்டமியர்’ நிறுத்தத்தில் இறங்கி விறுவிறுவென்று சென்று விட்டான்.
அங்கு இறங்கியவர்களை விட ஏறியவர்கள் அதிகம். ஏறவிருந்த இன்னும் சிலரை ஏற வேண்டாமென்று பணிவாகச் சொல்லி, கதவையும் இதமாக அடைத்தார் ஓட்டுநர். இப்போது வங்காளி நின்ற அதே இடத்தில் ஒரு சீன இளைஞன். குளித்து உடுத்தி பளிச்சென்ற புத்துணர்ச்சியோடு வந்தவன். ஜன்னல் வழியே வீதிக்குத் தன் நிலைத்த பார்வையைத் தந்து விட்டு ‘பரப்ரம்மமே என்று நின்றான்.
நீரிலிருந்து தூக்கி நிலத்தில் போட்ட மீனாய்த் தவித்த அந்தச் சீனப் பெண், சீனனைப் பார்த்ததும் கொஞ்சம் சௌகரியமாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு வலது புறத்தில் நின்றவனின் மேல் தன் முழுக் கவனத்தைச் செலுத்தினாள். ஏறிவந்தவர்கள் தன்னைக் கடந்து செல்ல வழி விட்டு விட்டு அங்கேயே நின்ற அவனுக்கு அந்த இடம் தான் சௌகரியமாக இருந்ததோ. அங்கேயே தொடர்ந்து நின்றான். நான் ஏறும் போது கூட கடந்து செல்ல வழிவிட்டு அங்கேயே நின்றது நினைவு வந்தது. அவனின் ‘வாக் மேன்’ அவன் காதுகளுக்குக் கொடுத்தது போக மீதிக் கொஞ்சம் எஸ் பீ பாலசுப்ரமணியனின் ‘ஆயிரம் நிலவே வா’ வை என் காதுகளுக்கும் கொடுத்திருந்தது.
பின்னால் இருந்த அவளின் கவனம் முழுவதுமாய் விடை பெற்றிருந்தது. சீனன் மிகவும் யோக்கியன் என்ற நினைப்போ. ஒருவேளை சீனன் பார்த்தால் பரவாயில்லை என்ற எண்ணமோ. அதுவரை வராத எரிச்சலும் கோபம் அவள் மேல் எனக்கு ஏற்பட்டது. பேசாமல் இருக்கையை வேறு யாருக்காவது விட்டுக் கொடுத்து விட்டு எழுந்து நின்றால் தான் என்ன? அதற்கும் அவளுக்கு மனமில்லை.
அவளின் தவிப்பு கூடவா மற்றவரைக் கவரவில்லை. பயணிகள் பயணிகள் அவளின் இருப்பைக் கூட அறியாதிருந்தனர். அவளைச் சுற்றி நின்றிருந்த பயணிகளுக்கு தத்தம் கவலைகளும், இலக்குகள் பற்றிய சிந்தனைகளும், பாட்டு கேட்கும் ஆர்வமும் தான் இருந்தது. இவளோ இதையெல்லாம் உணராமல் வெளி நாட்டு ஊழியர்களையே உற்று உற்று நோக்கிக் கொண்டிருந்தது முற்றிலும் விநோதம். பொத்தாம் பொதுவாய் தோற்றம் மற்றும் அந்தஸ்து ஆகியவற்றை வைத்து, எல்லோரையுமே ஒரே மாதிரி நினைப்பதில் வரும் பிரச்சனையல்லாமல் வேறு என்ன?
அவளின் பதட்டம் என்னைத் தொந்தரவு செய்ததில் நான் செய்யத் திட்டமிட்டருந்த ‘குருட்டு யோசைனை’ யைக் கூடச் செய்யவில்லை. என்னையறியாமல் அவளையே கவனித்திருந்தேன். ‘அக்கா’, என்ற அழைப்பைத் தவிர வேறு சொல்லின்றி, அன்று அவளின் பார்வையும் கைகளும் மட்டும் பேசிய வார்த்தைகள் தான் எத்தனை எத்தனை. உடல் மொழி இத்தனை விரிவாகவும் கூடப் பேசுமோ என்று முதல் முதலாய் அன்று நான் வியந்தேன். நல்ல வேளை நான் ஆணாகயிருக்கவில்லை. பெண்ணாய் இருந்தது வசதியாய்ப் போயிற்று. சொல்லப் போனால், அதனால் தான் அவளுடைய தவிப்பின் பின்னணியே எனக்குப் புரிந்ததோ. ஆணாய் இருந்திருந்தால் புரியாது போயிருக்கலாம் என்பது ஒரு புறமிருக்க நான் ஆணாய் மட்டும் இருந்திருந்தால் பேருந்தை நிறுத்தி, போலீஸையே கூப்பிட்டிருப்பாளோ. நான் ‘பார்த்தேன்’ என்று புகார் கொடுத்தும் விட்டிருப்பாள்.
அடுத்து வந்த நிறுத்தங்களில் இறங்கியவர்கள் போக நின்றவர்கள் வசதியாய் நின்று கொள்ள முடிந்தது. உட்கார்ந்திருந்தவர்கள் யாரும் இறங்கவேயில்லை. மறுபடியும், மறுபுறம் நோக்கி சற்று உரத்த குரலில் அக்காவின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாள். இம்முறையும் அங்கிருந்து பதிலே இல்லை. மார்பின் மேல் பகுதியிலிருந்து கையை மட்டும் எடுக்கவேயில்லை. வலது கை மாற்றி இடது கை, மீண்டும் இடது கை மாற்றி வலது கை என்று மாற்றி மாற்றி அவளின் கழுத்துக்குக் கீழே விரித்த படி வைத்துக் கொண்டிருந்தாள்.
என் பக்கம் பார்வையைச் செலுத்தியவளிடம்,” வாண்ட் மை ஹெல்ப்? ஹூ இஸ் யூர் சிஸ்டர்?”, என்று கேட்டேன். உதவி கிடைத்த நிம்மதி லேசாக முகத்தில் படர்ந்த மாதிரி இருந்தது. கருப்பு ஜீன்ஸ் வெள்ளைச் சட்டையணிந்தவள் என்றதும், யூ சூ காங்கின் ‘மொடரோலா நிறுத்தத்தில் மீண்டும் சிலர் இறங்கி, பலர் ஏறிய இடைவெளியில் புகுந்து மறுபுறம் சென்று தூங்கிக் கொண்டிருந்த அவளின் அக்காவைக் காண்பித்து, ‘இவளா?’, என்று ஜாடையாக தலைத் திருப்பிக் கேட்டேன். ஆமென்றாள் தலையசைத்து. அக்காளைத் தோளைத் தொட்டு எழுப்பினேன். சிவந்த கண்களோடு மலங்க மலங்க விழித்தவளிடம், அவளின் சகோதரி கூப்பிடுவதாகச் சொல்லி விட்டு மீண்டும் அதே இடத்திற்கு வந்து நின்று கொண்டேன்.
அக்கா அங்கிருந்து என்னவென்று கேட்க, எதையோ தரச்சொல்லி தங்கை இங்கிருந்தே கையை நீட்டிக் கேட்டாள். இடம் போய் விடாமல் அங்கே உட்கார்ந்து கொண்டு, நின்றவர்களின் வரிசையின் இடைவெளியில் கையை மட்டும் நுழைத்து ‘அக்கா ‘அக்கா’ கொடுத்ததை வாங்கி தங்கையிடம் கொடுத்தேன் நான். விலைப் பட்டையோடு கூடிய புத்தம் புதிய டீசட்டை தான் அது என்று அவள் குளிருக்குப் போர்த்திக் கொள்வதைப் போல மார்பில் தாடை தாடை வரை போர்த்திக் கொண்டு சாய்ந்த போது தான் தெரிந்தது. பதட்டம் விலகிய மறு நிமிடமே தளர்ந்து உறங்கி விட்டாள்.
அவள் பட்ட பாட்டைப் பார்த்த படியிருந்த எனக்கே ‘அப்பாடி’, என்று நிம்மதிப் பெருமூச்சு எழுந்தது. இன்னும் இரண்டு மூன்று நிறுத்தங்களுக்குள் யீஷுன் ‘இண்டர்சேஞ்ச்’ என்றழைக்கப் படும் கடைசி நிறுத்தமே வரவிருந்தது. ஏன் அரை குறையாய் உடுத்த வேண்டும்? பின் இந்தத் தவிப்பு தவிக்க வேண்டும்? முட்டாள் பெண், குறைந்த பட்சம் ஷாப்பிங்க் பையை அக்காவிடம் கொடுக்காமல் தானே கையில் வைத்துக் கொண்டிருந்திருக்கலாம்.
– சிஃபி தீபாவளி மலர் 2005.
– பின் சீட் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, நிலா புக்ஸ்.