ஒரு தலை காதல்
“டேய் ஹரி வாடா.. கண்ணாடிய நூறு தடவ பாத்தாலும் அதே மூஞ்சி தா இருக்க போது..! பஸ்ஸ விட்டேனா காலேஜ் போ முடியாது பாத்துக்க ஒழுங்கா வந்து சாப்புடு வா”

“கொஞ்ச பொறும்மா சீவிட்டு வாரேன்”
“அர மணி நேரமா தலைய கலச்சு போட்டு சீவிக்கிட்டு இருக்க, நேரம் ஆகுது பாரு..”
சாப்பிட்டு முடித்துவிட்டு, “எம்மோ நா போயிட்டு வரேன் இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆனாலும் ஆகும்” என்று தன் அம்மாவிடம் சொல்லிவிட்டு, பஸ் ஸ்டாப்பை நோக்கி நடக்கிறான் ஹரி. பஸ் வந்ததும் பஸ்ஸில் ஏறுகிறான். பஸ்ஸில் ஓடும் பாட்டை கேட்காமல், இயர்போனை காதில் சொருகி காதலெனும்…. தேர்வெழுதி காத்திருந்த மாணவன் தான்..பாடலை ரசித்தவாரே பல கற்பனைகளை மனதிற்குள் காண்கிறான். அப்போது குடிபோதையில் ஒருவர், “அடேய் கண்டக்டர்ரு இன்னைக்கு காதலர் தினம்..டா..! பஸ்ல வர லவ்வர்ஸ்க்கு பிரியா டிக்கெட்ட குடு அப்படி இல்லன்னா நீ ஒ பொண்டாட்டி கூட சந்தோஷமாவே இருக்க முடியாது சொல்லிபுட்டேன்..!” இதைக் கேட்ட கண்டக்டரும் பயணிகளும் அந்த குடிகார ஆசாமியை பஸ்சை விட்டு கீழே இறக்கி விடுகிறார்கள். காலேஜ் வந்ததும் பஸ்சை விட்டு கீழே இறங்கி, துள்ளல் நடையோடு பையை மாட்டிக் கொண்டு செல்கிறான். ஹரி பக்கத்தில் வந்த சிவா, “என்ன மாப்ள தீபிகாட்ட இன்னைக்காவது லவ்வ சொல்லிருவியா..?”
“ஃபுல் பிரிப்பரேஷன் ஓட வந்திருக்கேன். போறேன் டைரி மில்க்க குடுக்கிறேன் லவ்வ சொல்றேன்..! ஒரு கலக்கு கலக்குறே பாரு”
“டேய் ஹரி.. நீ எவ்வளவுதான் ட்ரை பண்ணாலும் இந்த காலேஜ் லைஃப் முடியுறதுக்கு இன்னும் ஒன்றரை மாசம் தான் இருக்கு அதுக்குள்ள நீ சொன்னாதா போச்சு இல்லன்னா கோவிந்தா.. ஹரி கோவிந்தா… தா”
ஹரி கோபத்துடன், “போடா புடுங்கி எனக்கு தெரியும் சாத்திட்டு போ”
ஹரி வகுப்பறைக்குள் வந்து பெஞ்சில் உட்கார்ந்து வாசலையே ஏக்கம் கலந்த ஆர்வத்தோடு பார்க்கிறான். ஒவ்வொருவராய் வகுப்பிற்குள் வருகிறார்கள். 10 நிமிடங்களுக்கு பின் தனது தோழிகளோடு தீபிகா வருகிறாள். இதை பார்த்து ஹரியின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக வாடத் தொடங்கின. “டேய் என்னடா ஆச்சு எதுக்கு இப்போ உம்முன்னு இருக்க..!” என்று நண்பர்கள் எவ்வளவு கேட்டும், ஹரி பதில் கூறவே இல்லை. ஒரு 11:30 மணியளவில், ஹரி வகுப்பாசிரியரிடம் சென்று, “மேம் எனக்கு ரொம்ப வயித்த வலிக்குது நா வீட்டுக்கு போறேன் எனக்கு கேட்பாஸ் குடுங்க” ஆசிரியரோ வீட்டிற்கு அனுப்புகிறார்.
வீட்டிற்கு வந்த பின், “ம்மா.. நா வந்துட்டேன்” கொல்லைப்புறத்திருந்து, “ஹரி டேய் தம்பி”என்ற அம்மா சத்தம் கேட்டதும், ஹரி பேக்கை கீழே போட்டுவிட்டு அம்மாவிடம் சென்று, “என்னம்மா மீன் நறுக்கிறியா..?”
“என்னடா சீக்கிரமே வந்துட்ட காலையில போம்போது லேட்டா வருவேன்னு சொன்னியே”
“எங்க ஹெச்சோடி மண்டய போட்டாரு..! அதாம்மா சீக்கிரம் வந்துட்டேன்”
“யாருடா ஒங்க வாத்தியாரா.!”
“அதெல்லா இல்லம்மா.. சீக்கிரம் மீன் கொழம்ப வை பசி உயிரு போகுது”
வீட்டிற்குள் வந்து, சட்டை பேண்ட்டை கழட்டி போட்டு விட்டு கைலியை உடுத்திக்கொண்டு, கீழே படுத்து போனில் தீபிகாவின் போட்டோவை பார்க்கிறான். கெஞ்சி கூத்தாடி யாருக்கும் தெரியாமல் தான் தீபிகாவின் தோழியான கிருத்திகாவிடம் போட்டோவை வாங்கினான். இது தீபிகாவிற்கு தெரியாது. கனவிலேயே தீபிகாவிடம் கடைசி காலம் வரை வாழ்ந்ததை நினைத்து கண்ணீர் வடிக்கிறான். மீனை நறுக்கி விட்டு வீட்டிற்குள் வந்து பார்த்த அம்மா, “ஹரி ஏன்டா அழுகுற..! என்னாச்சுடா..?”
“ஒன்னுல்லம்மா எங்க ஹெச்சோடி-ய நெனைச்சு தா..!” என்று மழுப்பி விடுகிறான். சிறிது நேரம் கழித்து அம்மாவுடன் சேர்ந்து சாப்பிடுகிறான். மாலை 6 மணி அளவில் போன் வருகிறது. ஹரி ஃபோனை எடுத்து, “சொல்றா சிவா… என்ன..?”
“டேய் ஹரி இன்னைக்கேதுக்கு பாதிலே போயிட்ட..! அப்புறம் தீபிகாவ பாத்ததுக்கப்புறம் ஒ மூஞ்சி ஏ சரியில்ல..! என்னடா ஆச்சு..?”
“சிவா… எனக்கொன்னும் ஆகலடா, இப்ப தல வேற வின்னு வின்னுனு தெறிக்குதுடா.. கொஞ்சம் போன வைக்கிறியா ப்ளீஸ்..!”
‘என்னடா இது? எப்பவுமே தீபிகாவ பத்தி பேசுனா ஒரு மணி நேரம் பேசுவானே..! இன்னைக்கு என்னாச்சு?’என்று சிவா குழம்பி போகிறான்.
ஹரி,போனை கட் பண்ணி விட்டு, கட்டிலில் உட்கார்ந்து துணி மடித்துக் கொண்டிருந்த அம்மாவிடம் சென்று, “ம்மா.. கொஞ்சம் கண்ண மூடு ஒனக்கு ஒரு சர்ப்ரைஸ்..!”
அம்மா கண்ணை திறக்கும் போது, டைரி மில்க்கை நீட்டுகிறான்.
“என்னடா இவ்வளோ பெரிய முட்டாயா இருக்கு வெல நூறு ரூவா போட்ருக்கு.. காசு ஏதுடா..?”
“ம்மா.. ஒனக்கு நா ஆசையா வாங்குனேன் பஸ் காச சேத்து வச்சு..! ஓம் புள்ள குடுத்தா சாப்புட மாட்டியா..?” பின் மிட்டாய்யை அம்மாவிற்கு ஊட்டி விடுகிறான்.
“டேய் முட்டாய சாப்புட்டு கவர்ர ஒங்க அப்பனுக்கு தெரியாம தூக்கி போட்ரு பாத்தா ஆயிரங் கேள்வி கேப்பான்..!”
“ம் சரி…மா” என்று சாக்லேட் பேப்பரை வெளியே தூக்கி போட செல்கிறான்.
அப்போது,வாசலில், “மஞ்சுளா” என்று கூறியவாரே செப்பலை கழட்டுகிறார் ஹரியின் அப்பா. ஹரி டக்குனு பேப்பரை மறைக்கிறான்
“என்னடா ஹரி… காலேஜ் போய்ட்டு வந்துட்டியா.. என்னது கையில..?”என்று அப்பா கேட்டதற்கு பயந்து கொண்டே, “போயிட்டு வந்துட்டேன்..ப்பா.. கைல்ல ஒன்னும்மில்லப்பா”
“என்னடா ஏதோ சாக்லேட் பேப்பர்ரு மாதிரி இருக்கு.. தெரிஞ்சு போச்சு இன்னைக்கு லவ்வர்ஸ் டேல அதான் ஏதோ ஒரு பொண்ணு குடுத்து இருக்கு..!”
ஹரி திருட்டு முழியோடு, “ப்பா.. எனக்கு யாரும் குடுக்கல.. நா எந்த பொண்ணையும் லவ் பண்ல.. அம்மாக்காக தா வாங்கிட்டு வந்தேன்..!”
“ஏ ஹரி நீ சொல்றத கை சப்புற கொழந்த கூட நம்பாதுடா..! அப்பாவ ஏமாத்திடலாம்னு மட்டும் நெனைக்காத.. காதல் பண்றதுக்கு வயசு இது இல்லடா.. காதல் கீதல் பண்றேன்னு ஏதாவது தெரிஞ்சது அடுத்த நிமிஷம்மே நீ உசுரோட இருக்க முடியாது பாத்துக்க..!”
இடையில், “ஏங்க நம்ம புள்ளைய பத்தி நமக்கு தெரியாதா..? நம்ம புள்ள அப்படி வழி தவறி போக மாட்டாங்க.. எனக்கு நம்பிக்க இருக்கு..!” என்று அம்மா.
“இப்படிப்பட்ட பிள்ளைங்கதாண்டி நாள பின்ன அப்பனையே எதுத்துக்கிட்டு வருவாங்க.! எத்தன சினிமாவுல பாத்துருப்போம்”
அப்பா திட்டுவதை கேட்டு பொறுக்க முடியாமல், ஹரி ரூமிற்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு அழுகிறான்.
ஹரி டைரியை எடுத்து அதில்,
‘உன்னை பார்த்த முதல் நாளில் தான் தொடங்கியது
எனது முதல் கனவு…..
ஒரு தலை காதலாக இருந்தாலும்
ஒவ்வொரு ராத்திரியும்
உன்னோடு தான் இருக்கிறேன்
என் கனவில்…..’
‘உன்னைச் சேரும் வரை நான் காதலிப்பேன்…
அந்த காதலை என் உயிர் போகும் வரை காத்திருப்பேன்…’
‘காற்றில் பறக்கும் காகிதமாய் நான்.. நீ எந்த பக்கம் வீசினாலும் உன்னை தொடர்வேன்…!’
‘ஒட்டாது தெரிந்தும் தண்டாவளங்கள் ஒன்றாக பயணிக்கின்றன, அதுபோல் எனது காதலும் ஆகிவிடுமோ..!
கண்டிப்பாக ஆகாது..!ஏனென்றால் நான் அவளின் மீது வைத்தது உண்மையான காதலே..!’
என்று தான் எழுதிய கவிதைகளை படித்து பார்த்து கண்ணீர் வடிக்கிறான்.
சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து காலேஜ் செல்கிறான். வகுப்பறையில் கிருத்திகாவிடம் சென்று, “எப்பா கிருத்திகா ஒங் கிட்ட கொஞ்சம் பேசணும்.. இண்டர்வெல்ல கேண்டீன் கிட்ட வந்துர்றியா..!”
“என்னடா என்ன விஷயம்..?”
“நீ வா நா சொல்றேன்”
அதேபோல் இடைவெளியில் இருவரும் சந்திக்கிறார்கள். முதலில் ஹரி, “அது ஒன்னும் இல்லப்பா.. லவ்வர்ஸ் டே அன்னைக்கு தீபிகா ஏ பிளாக் ட்ரஸ்ச போட்டு வந்தா..?”
இதற்கிடையில், இருவரையும் பார்த்தவாரே கேண்டினுள் நுழைகிறாள் தீபிகா.
கிருத்திகா புன் சிரிப்போடு, “டேய் ஹரி அத நீ தீபிகாட்ட தா கேக்கணும்.. நா வேணும்ன்னா கூப்பிடட்டுமா ஏ தீபிகா இங்க வா..!”
பதறியவாரே, “இல்ல கிருத்திகா நா போறேன்” என்று கிளம்பி விடுகிறான்.
கிருத்திகாவிற்கு ஒன்றும் புரியவில்லை. இந்த விஷயத்தை தீபிகாவிடம் சொல்கிறாள்.
அதற்கு தீபிகா, “சரி விடு..டி ஏதாவது ஒரு அக்கறையில கேட்ருப்பான்”
“இல்லடி.. தீபா எனக்கென்னம்மோ ஹரி ஒன்னைய லவ் பண்ற மாதிரி தெரியுது”
“அப்படில்லாம் ஒன்னும் இருக்காது. இது நாள் வரைக்கும் நானும் ஹரியும் பிரண்டா தா இருக்கோம் இனிமேலும் பிரண்டா மட்டும்தான் இருப்போம்..!” என்று கிருத்திகாவின் வாயை அடைக்கிறாள்.
அன்று காலேஜ் முடிந்து பஸ் ஸ்டாண்டில் கிருத்திகா ஹரியிடம் சென்று, “ஹரி…அன்னிக்கி துணி அலசாம கெடந்துச்சான் அதுனாலதா தீபிகா அவ அக்கா ட்ரஸ்ஸ அன்னிக்கி போட்டு வந்தாளாம்..! ஏண்டா திடீர்னு இப்படி கேட்ட..!”
“இல்ல இதுனால் வரைக்கும் தீபிகா காலேஜுக்கு பிளாக் கலர்லயே ட்ரஸ்சு போட்டு வந்ததில்லையே அதான் கேட்டேன்.. ஏதும் தப்பா இருந்தா சாரி..”
“ம் ஓகே..டா அப்பறம் ஹரி இத யார்கிட்டயும் சொல்லாத.. ஏன்னா பிப்ரவரி 14-தா தீபிகா அம்மாவோட நினைவு நாள்..!”
“என்ன சொல்ற கிருத்திகா உண்மையாவா? தீபிகாவுக்கு அம்மா இல்லையா..!”
“ஆமாண்டா அவ சின்ன பிள்ளையா இருக்கும் போதே இறந்துட்டாங்களாம்.! அதுக்கப்பறம் அவங்க அப்பாவும் வேற கல்யாணம் முடிச்சு தனியா போய்ட்டாங்களாம். இப்ப அவ தாத்தா பாட்டி வீட்ல தான் இருக்கா பாவம்..!
“அப்போ தீபிகா அக்கா என்ன பண்றாங்க”
“அதுவாடா மூணு மாசத்துக்கு முன்னாடி தா அவங்க அக்காவுக்கு கல்யாணம் ஆச்சுடா”
இதைக் கேட்டு சோகத்தோடு ஹரி வீட்டிற்கு வருகிறான். வந்ததும் நேராக ரோஜா செடி தொட்டி பக்கத்தில் போய் உட்காருகிறான்.
இதை பார்த்த அம்மா, “என்னடா ஹரி எதுக்கு ஒரு மாதிரி இருக்க..? இப்பெல்லாம் நீ ரோஜா செடிக்கு தண்ணி ஊத்துறதே கெடையாதே..! செடிய பாரு வாடிகிட்டே வருது..! என்னடா ஆச்சு?”
‘செடி மட்டுமா வாடுது ஏ மனசும் தான் வாடுது அது யாருக்கு தெரியப்போது’என்று நினைத்துக் கொண்டு வெளியே, “ஒன்னும் இல்லம்மா” என்கிறான்
“சரி உள்ள எந்திரிச்சு வாடா”
ஒரு மாதங்களுக்குப் பின்,அதாவது பல்கலைக்கழக தேர்வுக்கு முன், ஃபேர்வெல் பார்ட்டிக்காக காலேஜில் தாங்கள் படித்த வகுப்பறையில் எல்லோரும் கூடுகிறார்கள். ஆட்டம், பாட்டம், ஜூஸ், சாப்பாடு என்று சந்தோஷமாக கொண்டாடுகிறார்கள். இதற்கிடையில் நண்பர்களை விட்டு பிரிய போறோமே என்ற சோகத்தில் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்தும் கை கொடுத்தும் தங்களது உணர்வுகளை வெளிக்காட்டுகிறார்கள்.
இறுதியில் ஹரி தீபிகாவிடம் சென்று, “தீபிகா எம் எஸ் சி இந்த காலேஜ்ல போட போறியா..?”
“என்னன்னு தெரியல டா நீ போடப் போறியா..?”
“ ம்..ஆமா”
“என்னடா பதட்டமாவே இருக்கியே, எதுவும் சொல்லனுமா”
“இல்ல தீபா உங்களல்லாம் விட்டுட்டு போறத நெனச்சா தா கண்ணு கலங்குது..!”
“ஒனக்கு மட்டுமா எனக்கும் தான் டா.!”
பின் தீபிகாவிற்கு ஒரு கிப்ட்டை கொடுக்கிறான். பிரித்துப் பார்த்து,
வாவ் சூப்பரா இருக்கடா வளையல்..! தேங்க்ஸ் டா.. வளையல் ஒண்ணுதான் இருக்கு ஏ..?”
“அது வந்து.. அந்த கடையில இந்த வளையல் தா நல்லா இருந்துச்சு..! அதுவும் ஒன்னு தா இருந்துச்சு அதனால தான்..!” என்று சோகம் கலந்த மகிழ்ச்சியோடு சொல்கிறான்.
“சூப்பர் டா..!ஹரி.. நல்லா இருக்கு, இதுக்கப்பறம் ஒன்னோட ஒடம்பையும்.. ஒ லைஃபையும் நல்லா பாத்துக்கடா..!”
‘என்னோட லைஃபே நீ தானடி’ என்று மனதில் நினைத்தவாரே, “சரி தீபா நீயும் உடம்ப பாத்துக்கோ…இதுக்கப்புறமும் நீ படிக்கணும் நல்லா படிச்சு ஒரு நல்ல பொசிஷனுக்கு வரணும்..!”
சிரித்துக் கொண்டே, “சரிடா.! சரிடா..!”
“தீபிகா.. அப்புறம் ஒன்னோட நம்பர் கெடைக்கும்மா ப்ளீஸ்..!”
“அட ஏண்டா இத நீ மொதல்லே கேக்கலாம்ல்ல சரி நோட் பண்ணிக்கோ”
பின் ஒருவருக்கொருவர் பாய் சொல்லிவிட்டு பிரிந்து விடுகிறார்கள்.
பின் ஹரி சிவாவிடம் சென்று சிவாவை கட்டிப்பிடித்து அழுகிறான்.
சிவா ஆறுதலாக,“டேய் ஹரி அழாதடா..! தீபிகா நல்லா படிச்சா மட்டும் தான் நல்ல நெலமைக்கு முன்னுக்கு வர முடியும்-கிறத நெனச்சு தீபிகாகாட்ட லவ்வ சொல்லாம வந்த பாத்தியா அப்பவே நீ காதல்ல ஜெயிச்சுட்டடா..!”
பின் ஹரியும் சிவாவும் பேசிக்கொண்டே பஸ் ஸ்டாண்ட்டை நோக்கி நடக்கிறார்கள்.
ஹரி பஸ்சில் ஏறி வீட்டிற்கு செல்கிறான். அப்போது பஸ்ஸில் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் தான் என்ற பாடல் கேட்டவுடன் பழைய நினைவுகளுக்குள் செல்கிறான்.
பின் வீடு வந்ததும்,ஹரி மனதின் சோகத்தை மறைத்து சிரித்தவாரே வீட்டிற்குள் நுழைகிறான்.