எங்கே என் செவ்வந்தி?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 22, 2025
பார்வையிட்டோர்: 3,476 
 
 

வண்கம் சார். என் பேரு கலியமூர்த்தி. மெட்ராஸ்லயே பெரீய கல்யாண மண்டபத்தில செக்கிரிட்டியா வேல செய்யறன் சார்.

இங்க ஆறு செக்கிரிட்டீங்கள்ல நானும் ஒர்த்தன். நான்தான் இருக்கவ்ஞல்லியே வயிசானவன்.

அய்யா, அம்மா, தொரை‌மாருங்களே, இத படிச்சுனு இருக்கிற புண்ணியவானுங்களே, 

தயவுசேஞ்சு இவன் கதல்லாம் இன்னாத்துக்குன்னு பூடாதீங்க. 

ஒரே ஒரு தபா எனக்கோசரம் கேட்டுட்டு போங்க சார்.

இன்னடா அறுவது வயசுகாரன் சார்ன்னு சொல்றானேன்னு பாக்காதிங்க. நான் எல்லார்க்கும் ரெஸ்பெக்ட் குடுப்பேன்.

என்னோட மெயின் வேல, கலியாணம் நடக்குற அன்னிக்கி, மண்டபத்துல வண்டி வந்து நின்னா, ஆளுங்க இறங்கெனதும் வண்டிங்கள பார்க்கிங்கு அனுப்பறது. மத்த நாள்ல கேட்டான்ட இருப்பன், இல்லன்ன பில்டிங்க சுத்தி சுத்தி வருவேன்.

சரி சார் மேட்டருக்கு வரேன்.

நம்பவே முடில சார். நான் செவந்தியப் பார்ப்பேன்னு.

பெர்சா வெள்ள கலரு காரு ஒன்னு வந்துது. இன்னா பேருன்னு தெரில. இப்பதான் புச்சு புச்சா வருதே. 

டிரைவராண்ட, ‘பார்க்கிங் பின்னால இருக்கு’ன்னு சொல்லிகினு இருக்கஸோலவே கார்லருந்து இறங்கன ஆளு யார்னு பாத்தா,

செவ்வந்தி.

அட நம்ப செவ்வந்தின்னு சுதார்ச்சிக்குன்னு கிட்ட போற்துக்குள்ள குடுகுடுன்னு உள்ள பூட்டா.

வயசு அம்பதுக்கு மேல இருக்கும். கிண்ணுனு இருந்தா. இந்த வயசுல அல்லாரும் அர கிழவியாட்டும் இருக்கசோல, இவ மட்டும் அப்படியே இருக்கா சார். மூஞ்சில சுர்க்கம் இல்ல. உடம்புல தொளதொளன்னு சதை கீத இல்லாம செதுக்கன செலை கணக்கா இருந்தா.

காருங்க ஒன்னு பின்னால ஒன்னா வந்துகின்னு இருந்தது. அதனால வேலய உட்டுட்டு போவ முடில. அதுவும் பங்ஷன் நடக்கசோல, உள்ளே ஸ்டிரிட்டா போ கூடாது சார். ரூல்ஸ் அப்படி.

மண்டபத்துள்ள செவ்வந்தி. என் செவ்வந்தி. எனுக்கு ஒரே பேஜாரா இருக்கு சார்.

டூட்டி பாக்க முடியல.

ரகு போறத பார்த்தேன். 

‘யேய் ரெகு’

‘இன்னா பெரிசு?’

கொஞ்சம் பாத்துக்க. டீ குஸ்ட்டு வந்துறன். தல கொடையுது.

‘செரி தல. போய்ட்டுவா’

‘சாப்ட்டியா?’

‘எங்க சாப்றது. கூட்டம் அல மோதுது. ஒன்னும் தேறாது போல. முவாயிரம் சாப்பாடாம். ஆனா நாலாயிரம் இலைக்கு மேல ஓடுதாம்’.

‘பெரிய மனுஷங்க வூட்டு கல்யாணம்னா அப்படித்தான்டா’.

‘பெரிய மனுஷனுங்களா! இவனுங்ளா?

ஒருத்தன் சாப்ட்டு எயுந்துக்கறதுக்குள்ள, குண்டிய உரசிகின்னு நிக்கிறானுங்க. சோத்துக் கூட்டம்’. 

‘சீ வாய மூட்றா பேமானி. உனுக்கு இன்னாத்துக்கு இதெல்லாம். தோ பாத்துக்க, வந்துறன்’.

எங்க பாத்தாலும் ஜனங்க. உள்ளர்நது பாட்டு கச்சேரி சத்தம். வெளிய செண்டை அடிக்கறானுங்க. இதுல பாப் கார்னு, பஞ்சு முட்டாய் மிஷினுங்க சத்தம். காது ஜவ்வு கியிஞ்சிடும் சார். ஷோக்கா சிங்காரிச்ச பெர்ரிய யான. குரோட்டன்ஸ், ரோஜா, மல்லி, நந்தியாவட்டைன்னு தாண்டி மாமரத்தாண்ட ஒதுங்கனன்.

கட்டுலருந்து பீடிய எடுத்து வாயில வச்சி, கொஞ்சமா சப்பி, வத்திகுச்சிய கொளுத்தி மொனைல காட்ட, பசக்ன்னு புடிச்சிக்கிச்சு. நல்லா வலிக்க, புக நெஞ்சுகுள்ள பதமா இறங்குச்சி. 

படபடப்பு கொறஞ்சா மாறி இருந்துது.

கோச்சுக்காத சார். கதைய கேளு.

நான் பொறந்தது வளர்ந்ததெல்லாம் விரியம்பாக்கம். அதான் சார் வடபயனி தாண்டி போரூர் போஸல வருமே. எங்க அப்பா துணிகட்ல கணக்குபுள்ள. அம்மா ஊட்டோட. நானு இதுதான்னு இல்லாம எல்லா வேலயும் செஞ்சேன். 

படிச்சது ஒம்பதாம் கிளாசுதான். ஆவிச்சி ஸ்கோலு. அதுக்கு மேல படிப்பு ஏறல. ஆனா லவ்வு வந்துது. 

அப்ப எனக்கு வயசு இருவத்தஞ்சி.

தெனம் காலீல கீரை வித்துகினு வருவா செவ்வந்தி. பாவட கட்டி மேல ஆம்பளைங்க கணக்கா சொக்கா போட்டிருப்பா. தொளதொளன்னு முட்டி வரிக்கும் தொங்கும். சொக்காகுள்ள பனியன் மாதிரி செவப்பு கலர்ல பளிச்சுன்னு தெரியும். கயித்தில கருப்பு கலர்ல மணி போட்ருப்பா. காதுல, மூக்குல ஈர்குச்சி. அவளும் ஈர் குச்சி மாதிரி வெடவெடன்னு ஒசரமா, வெளுப்பா இருப்பா. கைல கால்ல ஒரு கருப்பு கயிறு கட்டியிருப்பா. எத வச்சு அவள எனக்கு புட்ச்சுதுன்னு தெரியல சார். கூடயைத் தலையில வச்சுக்கினு, ஒரு கையால தாங்கிக்கினு, இன்னொரு கைய விசுக் விசுக்குனு வீசிக்கினு ஒய்யாரமா நடக்கறதயா, இல்ல ஒத்தரு உதவி இல்லாம தானே கூடய எறக்கி, இன்னா கீரை வேணும்னு தலயை ஒரு பக்கம் ஒடிச்சுகினு பளீர் சிரிப்புல ஸ்டைலா கேட்குமே அதுவா. எதுன்னு தெரில. ஆனா தெனம் அது தெருவுல வரும்போது வாசலாண்ட வந்துடுவேன். அம்மாதான் வாங்குவா. நா சைக்கிள தொட்ச்சிக்கினே, ஏதாவது தேடற மாரி அவள லுக் உடுவேன். என்னிக்காவாது அவ வரலைன்னா, மன்சு டீலாய்டும் சார். சிலவாட்டி அம்மா கீர வேணாண்டும். எனக்கு மெர்சல் ஆய்டும்.

சார் எனுக்கு அது மேல லவ்வு செட்டாயிடுச்சி. 

ஒருவாட்டி அம்மா வூட்ல இல்ல. அன்னிக்கு வந்தா. கொஞ்ச நேரம் நின்னு பேசனா. இன்னா பன்றேன்னு கேட்டா. நானும் பேசனேன்.

மொத மொதல்ல அவள அவ்ளோ கிட்டருந்து பார்த்தேன். அவ மேல மொலகீர வாசன சார். செமையா இருந்தா. அதுவும் கண்ண சிமிட்டாம பார்த்தா.

சுத்தி முத்தி தெருவுல பாத்தன். ஜிலோன்னு இருந்துது.

‘என்ன புட்சிருக்கா செவ்வந்தி?’ 

‘ம்’. அவ மூஞ்சி தக்காளி மாறி ஆயிட்ச்சி. 

எவ்ளோவுன்னு லூசு மாறி கேட்டேன்.

ரெண்டு கைய விரிச்சி ‘ரொம்ப’ ன்னா.

என்னோட சொக்கா ஒன்னு, பாத்தா புச்சு மாதிரி இருக்கும், ஒருவாட்டி தான் போட்டுருப்பேன், எடுத்தாந்து

கூடைல போட்டேன். முதல்ல மெரண்டுடுச்சி. அப்பால கம்முனு எட்துனு பூட்ச்சி.

அதுக்கு பொறவு தெனம் பாத்து சிரிச்சுக்குவோம்.

அதுக்கும் எம்மேல ரொம்ப பிரியம்னு ஒருவாட்டி நேஸ்னல் தியேட்டர்ல வச்சி தெரிஞ்சிக்கினேன் சார்.

மோகன் நட்ச படம் ‘பயணங்கள் முடிவதில்லை’ன்னு. கையில தம்ப்டி கெடையாது. ஆனா எப்படியாவது படம் பார்த்துடணும்னு ஆசை. பிரண்டு குமார் தான் அய்டியா குடுத்தான். ஊட்ல இருக்கற பழைய பேப்பருல்லாம் தூக்கினு போய் கடைல போட்டேன். ஒன்னாரூபா தேறுச்சி. 

நா கொஞ்சம் கூட எதிர் பார்க்கல சார். தேட்டர்ல செவ்வந்தி.

என்னால பட்த பாக்கவே முடியல சார். பொம்புளைங்க பக்கம் குந்தினிருந்த அவளையே பாத்துகினுருந்தேன்.

இன்னா ஆச்சரியம்னா சார், நான் குடுத்த ஷர்ட்ட போட்டுகினு இருந்தா. செம்ம டக்கரா இருந்தா.

எனக்கு உடம்பெல்லாம் ஒரு மாரி ஆயிட்சு. குமாருகூட கேட்டான் ‘இன்னடா ஒரு மாரியா இருக்கற’ன்னு. 

இன்னான்னு சொல்றது.

ஆனா மனசு குஜாலா இருந்துச்சி.

இன்டர்வர்ல்ல நாங்க ரெண்டு பேரும் ஒன் பாத்ரூம் போயிட்டு வந்தோம். டீக்கு துட்டுல்ல. அவ சீட்ட பார்த்தா ஆள காணோம்.‌ வெளக்கு அணச்சி படம் போடும் போது, பின்னாலருந்து வந்தவ டக்குனு குனிஞ்சி மடியில ஒரு பாப்கார்ன் பாக்கெட்ட வச்சிட்டு போய்ட்டா. குனியசோல அவளோட ஒடம்பு என் மேல பட்டுச்சி சார். செம பீலிங் சார்.

‘மச்சான் இன்னாடா நடக்குது. இது எத்தினி நாளா?’ குமாரு பேஜாராயிட்டான்.

அப்பால, நானும் செவ்வந்தியும் இரண்டு மூணு வாட்டி கிண்டி கொயந்தைங்க பார்க், பீச்சு, அமிஞ்சிகர லெட்சுமி தியேட்டர்ன்னு சுத்தனோம். ஆளுங்க யாருமே இல்லாதபோ கட்டி புடுச்சிக்குவோம். இங்க்லீஷ் சினிமா கணக்கா கிஸ் அடிச்சுக்குவோம்.

‘டேய் உன்கு வயசாவுது. பொண்ணு பாக்கட்டா’ன்னு அம்மா கச்சேரி ஆரம்பிச்சிட்டா.

‘எனக்கு செவ்வந்திய கட்டிக்க ஆசையா இருக்கு’ன்னு ஒரு தெகிரியத்தில சொல்டேன்.

‘யார்டா அது?’

சொன்னேன்.

‘அதான் துரை, தெனோம் காலங்கார்த்தால வாசல்ல தேவு காத்தினுருந்தாரா?’

‘இல்லம்மா’

‘அடி செருப்பால நாயே. அந்த கழுத உன் சட்டைய போட்டாந்த அன்னிக்கே செவுளு காட்டிருந்தேனா இவ்ளோ தூரத்துக்கு வந்திருக்காது. தூ அதுங்க யாரு. நம்ப யாரு. தராதாரம் வேணா’.

மறாநாள் வந்தா.

‘கீர விக்கற முண்ட, உனக்கு என் புள்ள சவகாசம் கேக்குதா?” 

பாய்ஞ்சி அடிக்க கை ஒங்கினா.

‘அய்யோ அம்மா அவள வுட்டுடு‌.’ கெஞ்சனேன்.

மெர்சலான செவ்வந்தி, கூடையை தூக்கினு ஓட்னா. கீழ கிடந்த செறுப்ப தூக்கி அட்சா அம்மா. படார்ன்னு அவ முதுவுல வுயுந்துது.

டக்குனு நின்னு திரும்பி மொறச்சா.

‘எரும இன்னாடி பாக்கற. வெட்கம் கெட்ட சிறுக்கி. அரிப்பெடுத்தா செவுத்துல போய் தேச்சுக்கறதானேடி. முளைச்சு மூணு இல வுடல. அதுக்குள்ள ஆம்பள கேக்குதாடி’ ன்னு கிட்ட போய் அவ மயிர கொத்தா புடிச்சி தனக்கா வலிச்சு பளீர்ன்னு அடிச்சா. நான் ஓடிப்போய் அம்மா கைய புட்ச்சன்,

‘அட சீ நாய’ன்னு புட்ச்சி தள்ளிட்டா.

அன்னிக்கு தான் சார் எங்க அம்மாவோட பெலத்தை பாத்தன். அப்புடியே நட்டுக்குன்னு வுயுந்தேன்.

இந்த கேப்ல செவந்தி எஸ்கேப் ஆயிட்டா.  

அப்பா எதுமே பேசமாட்டாரு. அவுரு ஊமையாவே பொறந்து இருக்கலாம். அம்மா எது சொன்னாவும், ரைட்டுன்னு இருந்துட்டாரு. 

அம்மாவாண்ட எவ்ளோவோ சொல்லி பாத்துட்டன்.

‘சட்டைக்கார்ச்சி வேணவே வேணாம்’.

சாப்பிடாம அடம் புட்ச்சேன். மசில.

‘வெசம் குட்ச்சி செத்துடுவேன்னேன்.

‘சேத்து வாங்கு. மொத்தமா குஷ்ட்டு ஒண்ணா பூட்லாம்’.

ஒரு நா அவள வடபயனி பஸ் ஸ்டாண்ட்ல பாத்தேன் சார். பஸ்ல குந்தினுருந்தா. ஜன்னலாண்ட.

கீழருந்து, ‘செவ்வந்தி’ன்னேன். 

மூஞ்சிய திருப்பிகினா.

‘செவ்வந்தி செவ்வந்தி’ன்னு உடாம கூப்டேன் .

‘இன்னா’ன்னு? ஒரு லுக் வுட்டா.

‘மன்ச்சுக்க செவ்வந்தி.’ 

மூஞ்ச திருப்பிகினா.

‘உன்ன உயிருக்கு உயிரா லவ் பண்றேன்’.

நக்கலா சிரிச்சா.

‘நம்ப மாட்டியா செவ்வு?’ 

‘அப்படின்னா என் கூட வரியா. எங்காவது போய் கல்யாணம் கட்டிக்கினு வாழலாம்’ 

‘அவசுரப்படாதே செவ்வந்தி. டெயம் குடு.‌ நான் எங்க வூட்ல பேசி கரெக்ட் பண்றன்’

வெடுக்குனு அண்ணான்ட திரும்பிகினா. அப்பால எவ்ளோ கூப்பிட்டும் திரும்பல. புடிவாதக்காரி சார்.

பஸ் பூட்ச்சு.

அதுக்கு அப்பால அவள பார்க்கவே முடில சார்.

ஊர வுட்டு போய்ட்டான்னு குமாரு சொன்னான்.

கொஞ்சநாளு பைத்தியம் புட்ச்சவன் மாரி சுத்தினிருந்தேன்.

அம்மாக்கு ஜோசித்தில நம்பிக்கை ஜாஸ்தி.

தம்பிக்கு கெரகம் சரி இல்ல. ஆறு மாசம் போனா எல்லாம் சரியாயிடும்னாரு ஜோசிரு.

நாலு மாசத்திலேயே நார்மலாயிட்டேன்.

அம்மா பொண்ணு தேட ஆரம்பிச்சா.  

சாதி மட்டுமில்லாம, அந்த பிரிவு இந்த பிரிவுன்னு தேட்னாங்க. ஒன்னும் குதிர்ல. எல்லாம் ஒத்து வந்தா, பொண்ணு நல்லா இல்ல, சொத்து இல்லைன்னு காரணங்காட்டி தட்டிக் கயிச்சா அம்மா. எங்களுக்கு எல்லாம் புட்சி வரும்போது, அவுங்க சைட்ல, பையனுக்கு வேல செரி இல்லன்னு வேணாண்டுவாங்க.

வருஷம் ஓடுச்சு. 

எதுமே சொட்டாவல சார். நம்மள மாதிரி இருக்கிற வேற ஜாதியா இருந்தா கூட பரவால்லேன்னு அப்பா சொல்ல, அதெல்லாம் முடியாது என் மவனுக்கு ராஜாத்தி எங்கேயோ பொறந்து இருக்கான்னு எங்கம்மா நம்புச்சி. ஜோசியகார்ரு அவர் பங்குக்கு நம்பிக்க குடுத்துனே இருந்தாரு. எல்லாமே பொருந்தி வந்தா, நான் எதிரில் குந்தினிருக்க சோலியவே, ‘மாப்பிள்ளை வரல்யா’ன்னு கேட்டாங்க. அப்படியே டீலாயிடுவேன் சார். வயசு நாப்பதுக்கு மேல ஆயிட்ச்சி.

செவ்வந்தி இன்னா ஆனான்னு தெரில. குமாரு தான் யாரோ சொன்னாங்கன்னு சொன்னான்.

ஏற்காட்ல வெள்ளைக்கார்ச்சி ஒருத்தரு வூட்டுக்கு வேலைக்கு போயிருக்காளாம். அந்தம்மாவோட பூர்வீகம் இந்தியாவாம். வயசான கால்தில இங்கதான் இருக்கனும்னு சீமைல சொத்தெல்லாம் வித்துட்டு வந்துருச்சாம்.

வீட்டோட தங்கி கூடமாட வேல செய்ய ஆளு வேணும்னு தேட்னப்ப, யாரோ சொல்லி செவ்வந்தி போய் செட்டிலாயிட்டாளாம்.

ஒருவாட்டி அவ நெனப்பு ஜாஸ்தி ஆன்தால ஏற்காடு கெளம்பி பூட்டேன். குமார்கிட்ட சொல்லல்ல. சின்ன ஊரு தானே கண்டுபுட்ச்சிடலாம்னு போனா, சுத்தமா ஆப்டல . மார்க்கட்டு, லேக், பார்க்குன்னு அலஞ்சி பார்த்தேன். ம், மாட்ல. 

அதுக்கு பொறவு ஒன்னுமே தெர்ல.

எங்கப்பா ஒர்நாளு மண்டைய போட்டாரு. அதுக்கப்பால அம்மாவாண்ட பயைய கெத்து கொறஞ்சிட்சி. ஆனா மன்ஸி புடிவாதத்தை வுடல சார். புள்ளிக்கு கலியாணம் எவ்ளோ முக்கிமோ அதேமேரி சாதி கௌரதையும் முக்கியம்னு இருந்துட்டா.

நானு நேஷனல் தியேட்டர்ல கொஞ்ச நாளு டிக்கிட் கியிச்சேன். உடுப்பி ஒட்டல்ல சர்வரா வேல செஞ்சேன். 

மெட்ராஸுல ஒரே சௌரியம் சார். ஏதாவது செஞ்சி வயித்த கயிவிக்கலாம்.

அப்பா செத்து பத்து வருஷம் ஆய்டுச்சி. 

இப்ப என் வயசு அம்பதுக்கு மேல. ரெண்டாம் தாரத்துக்குகூட லாயிக்கில்லாம போய்ட்டேன் சார். அம்மாவும் டீபில போய்ட்டா. இப்ப நான் ஒண்டிக்கட்ட.

எங்க ஏரியால நிறைய ஊடுங்க வந்துட்சி. காருங்க ஜாஸ்தி ஆய்ட்ச்சி. டிரைவரா போலாம்னு கார் கத்துக்கப் போனேன். எனக்கு வரல. அவன் வண்டிய ரண்டு வாட்டி இஸ்ட்டன்னா பாருங்க. 30 வருஷமா நடக்கற டிரைவிங் ஸ்கோலு, ஒருவாட்டி கூட ஆகஸ்டன்ட் ஆவல. நீ வந்துதா ஆச்சுன்னு அந்த ஓனர் திட்டனான். நீ கார் தொடைக்கதான் லாய்க்கின்னான்.

சரின்னு தொடைக்க ஆரம்பிச்சன். நம்ப மாட்டிங்க சார், நல்ல காசு. 

கொஞ்ச வருஷம் கழிச்சு குமாரு சொன்னான்.

அந்த வெள்ளக்கார்ச்சி செத்துப் பூட்ச்சாம். சொத்துல தர்ம காரியத்துக்கு கொஞ்சம் எயிதிட்டு மிச்சத்தை எல்லாம் செவ்வந்திக்கு எய்திட்டாளம். அவ மெட்ராஸ்லயே ஸெட்டில் ஆயிட்டாளாம். 

‘புள்ள குட்டிகளோடவா’ன்னு கேட்டேன்.

‘கண்ணாலமே கட்டிக்கிலியாம்’.

எனக்கு திக்குன்னு ஆய்ட்சு.

 ‘ஏண்டான்னு?’ கேட்டேன்.

முக்கால் கியவனானாலும் மனஸ்ள்ள எங்கயோ ஆச ஒட்டிக்கிணுருக்குது சார்.

 ‘தெரியல’ன்னான்.

‘ஒருவேள இன்னும் உன்ன நெனச்சிக்கினு இருக்காளோ என்னவோ’.

நான் அத முயுசா நம்பனே.

அவ அட்ரஸ கண்டே புடிக்க முடில சார்.

குமார் வேணும்னே செய்றானான்னு தெரில.

‘இவ்ளோ விஷயத்த சொல்ற. வூட்டு அட்ரஸு, போன் நம்பர் கேட்டா தெரிலன்ற. ஒன்னு நீ புளுவற. இல்லாட்டி மறைக்கிற’.

‘சத்திமா இல்லடா. நீ அவள இப்படி நெனச்சுக்கின்னு இருப்பேன்னு தெரிஞ்சிருந்தா டீடெய்ல்ஸ் வாங்கி இருப்பேன்’.

‘யாரு இதெல்லாம் உன்னான்ட சொன்னாங்க?’

‘எலக்ட்ரிஷன் செல்வம்.’

‘யாரு?’

‘லயன்மேன்டா’.

‘தெர்லடா. சரி அந்தாளு எங்க இருக்கான்? வா போய் பாக்கலாம்’.

‘அந்தாளு செத்து ரெண்டு வருஷத்துக்கு மேல ஆச்சு’.

‘அடேய் அப்ப செவ்வந்தி நியூஸ் பயஸாடா? தூ. இவ்ளோ நாளா ஏண்டா சொல்லல? துரோகி’.

‘கோச்சிக்காதடா. நான் எங்கடா ஊர்ல இருந்தன்?’

குமாரு லாரி டிரைவரு. நேஷனல் பெர்மிட் வெச்சிருக்கான்‌. பஞ்சாப், குஜராத்துன்னு சுத்துவான்’.

‘ஏண்டா எத்தினி வாட்டி அவள பத்தி சொல்லிருக்கன். நீ அவள இன்னும் நெனச்சிகின்னு இருக்கன்னு சொல்லி தொலைச்சிருக்கறதானே?’

‘சொல்லலடா. தப்புதான்.

இப்ப எப்படிடா மச்சான் அவள கண்டுபுடிக்கறது?’

‘மெட்ராஸ்லதான இருக்கா. பீச்சு பார்க்கு, சினிமா தேட்டரு, மாலுன்னு தேட்னா மாட்டாமையா போய்டுவா’.

தேட்னேன். பாதி நாளு வேலை. மிச்ச நேரம் தேடுவேன்.

பயினெட்டு பத்தொன்போது வயசுல பாத்தது. இப்போ எப்படி இருப்பான்னு தெரியல. உடம்பு எப்படி இருந்தா இன்னா மூஞ்சி மாறி இருக்காது இல்ல சார்.

வருஷம் தான் ஓடுச்சி. 

அப்பதான் இந்த அய்டியா தோணுச்சு. ஏதாவது கல்யாண மண்டபமா பாத்து வேலைக்கு சேர்ந்துறதுன்னு.

மெட்ராஸ்ல இருக்குற பெரிய கல்யாண சத்திரங்க நாலஞ்சுதான். எல்லாப் பணக்காரங்களும் எப்படியாவது கல்யாண சீஸன்ல ஒரு வாட்டியாவது வருவாங்க. செவ்விந்திய ஈஸியா புடுச்சிடலாம்னு இங்க வேலைக்கு வந்துட்டேன்.

அஞ்சு வருஷமா வேலை செஞ்சிக்கினு இருக்கன். கல்யாண நாளுங்கள்ல நல்லா ருசியா சோறு. அது போவ சம்பளம். செளரியமா செட்டில் ஆயிட்டேன்.

லீவு போடாம வேல பாப்பேன் சார். ரொம்ப சின்சீரு செக்கிரிட்டின்னு மொதலாளி பாராட்டி இருக்கார்ன்னா பாருங்க.

எங்கஷ்டம் எனிக்கு மட்டும் தான் சார் தெரியும். எத்தினி நாளு சோறு தண்ணி இல்லாம தேடிருக்கேன் தெரியுமா? வர ஒவ்வொரு காரு, ஆட்டோவ உத்து உத்து பாப்பேன். ஒர்ரு ஆளு என் கண்ணுலருந்து தப்ப முடியாது. 

‘செவ்வந்தி’. ‘செவ்வந்தி’. இததவுர எனக்கு வேற எந்த நெனப்பும் இல்ல சார்.

அவ எனுக்காக தான் சார் கண்ணாலம் கட்டிக்காம இருக்கா. எனுக்கு நல்லா தெரியும் சார் அவளப் பத்தி. வைராக்கியக்காரி.

இவ்ளோ நாளு கயிச்சி இன்னிக்கு தான் சார் கண்ல மாட்னா.

வெள்ல வரசோல அவ கிட்ட பேசனும்.

என்ன பேசறதுன்னு யோசிச்சி வச்சிட்டேன்.

இங்க பாருமா, நான் அன்னிக்கு பண்ணது தப்புதான். அதனாலவோ இன்னவோ தெர்ல, சாமி தண்டன குடுத்துடுச்சி. இன்னவரைக்கும் கண்ணாலமே ஆவல. நான் வேற பொம்பளைங்க கிட்டயும் போனதில்ல.

நீயும் கண்ணாலம் கட்டலன்னு சொன்னாங்க. அது ஏன் இன்னாத்துக்குன்னு கேட்க மாட்டேன்.

தெயவுசேஞ்சி மிச்சருக்கற நாளு, என் உசுரு போற வரைக்கும் உன்னான்ட இருக்கணும். என்ன கட்டிக்கன்னு கேக்க மாட்டன். உன் வூட்ல ஏதாச்சும் எனக்கு வேல போட்டுக் குடு. சம்பளங்கூட வேணாம். 

நெனைக்கும் போதே மனசு பேஜாரு ஆயிட்ச்சு. கண்ணுல தண்ணி கோத்துக்குச்சி.

மரத்தாண்ட எவ்ளோ நேரம் நின்னுகின்னு இருந்தேன்னு தெரியல.

அய்யோ சார் உன்னான்ட கத சொன்னதுல டயம் போனதே தெரில. 

செவ்வந்தி போய்ருப்பாளோ ?

‘திக்’குனு ஆய்ட்சு.

பாதி வல்ட்ச பீடிய போட்டுட்டு, போர்ட்டிக்கோ வான்ட ஓடியாந்தேன்.

வண்டிங்க வரது நின்னுடுச்சு. 

‘சீக்கிரம் சாப்பிட வா பெரிசு. பந்தி முடிய போவுது’.

‘எனக்கு வேணாண்டா ரெகு. நீ வேனா போய் சாப்டு. எனக்கு வேண்டிவ்ங்க உள்ள போயிருக்காங்க. அவங்கள கண்டுகினு வறன்’.

‘அட கம்முனு வா பெர்சு. தெனம் சாயந்திரம் ஆனா உன்னான்ட இதே பேஜாரா போச்சி’ன்னு தரதரன்னு என்னை வலிச்சுக்கினு போனான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *