உ. பி. அப்புசாமி (உணர்ச்சிப் பிழம்பு அப்புசாமி) 

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 2, 2025
பார்வையிட்டோர்: 6,991 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டு தினங்களுக்கு முன் அப்புசாமி ஓர் இங்கிலீஷ் ‘ஏ’ படம் பார்க்க நேர்ந்தது. 

ரசகுண்டு அவரை அப்போதே எச்சரித்தான். “தாத்தாவ், என் மாதிரி சிறுசுகள் பார்த்தால் பரவா யில்லை. கண்ட்ரோல் பண்ணிக்கத் தெம்பு இருக்கும். உங் மாதிரி தொளதொள ஆளுங்க பார்த்தால் தொந்தரவு படுவீங்க!” 

இலை மறைவு காய் மறைவே இல்லாமல் இரண்டு பேர் ஒரே நீச்சல் தொட்டியில் கும்மாளமிட்டது அப்புசாமியின் இளமையைத் தூண்டிவிட்டுவிட்டது. 

“சரியான கிரிகிரிடா! அசத்திடுச்சடா. புருஷன், மனைவின்னா அப்படி இருக்கணும். நம்மதும் இருக்குதே, பக்கத்துலே போனாலே பல்லை உடைக்குது, புது மாடு மாதிரி!” என்று குறைபட்டுக்கொண்டார். 

“அதுக்கெல்லாம் பக்குவமா அணுகணும். முதலிலே லெட்டர் கிட்டர் எழுதிக் காக்கா புடிக்கணும். ‘நீ என் பெண்டாட்டி, அதனால் நான் ஆசைப்பட்டபடி நீ ஆடணும்’னு ரூல் பேசினால் நடக்குமா?” என்றான் அவன். 

வெற்று நெருப்பிலே வாட்டின சுக்கா ரொட்டி மாதிரி விரக தாபத்தில் வேக நேரிட்ட அப்புசாமி, ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்து வைத்துக்கொண்டார். 

சீதாப்பாட்டி ஏதோ அவசரமாக வெல்லம் நசுக்கிக் கொண்டிருந்தாள். 

மனம் என்னவோ முழுக்க முழுக்க வேறிடத்தில் இருந்தது. பாரிஸில் நடக்கும் ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியா பண்ண வுக்கு பா. மு. கழகத்தை ரெப்ரசெண்ட் யாரையாவது அனுப்பினால் என்ன? கன்வீனர் மிஸஸ் திவாகர் கூடச் சென்னைக்கு வந்திருக்கிறாள். அந்த மேடத்தைப் பார்த்துப் பேசவேண்டும். வெல்லம் கொஞ்சம் அதிகமோ? மாவு ஓடறதே இப்படி- 

அவள் இடுப்பில் சுரீரென்று ஏதோ வந்து தாக்கியது. காகித அம்பு! 

அப்புசாமி, பரீட்சை முடிவைப் பார்க்கிற மாணவனின் படபடப்புடன், சமையலறை வாயிற்படிக்கு அந்தண்டையிருந்து லேசாக எட்டிப் பார்த்தார். 

சீதாப்பாட்டி காகிகத்தைப் பிரித்தாள். “சீய்தேக் குட்டி! நாமெல்லாம் சாதாரண மனுசங்க! காந்தி-கஸ்தூரி பாயி இல்லே, சந்தோசமா இருப்போம். தப்பேயில்லை. நைஸா உன் பின்னாடியே வந்து லபக்குனு உன்னைக் கட்டிக்கணும் போலத் துடிப்பா கீது. ஆனால், நீ என்னவோ மாவு விளக்கு போடறேன்னு ஆச்சாரமா யிருக்கிறதாலே தூரத்திலேயிருந்தே பார்த்துப் பார்த்துப் பெருமூச்சு விடறதாக இருக்கு… இன்னிக்கு உன்கிட்டே ராத்திரி நான் தனியாப் பேசியே தீரணும்….. 

“இன்னாடா, இந்தக் கசுமாலம் பச்சையா எழுதிட் டானேன்னு நினைச்சுக்காதே. ஐயாவோட நிலைமை அப்படி கீது. நெருக்கடி நிலைமைன்னு வெச்சுக்கோயேன். 

உன் அன்புக் காதல் கணவன்,
உ. பி. அப்புசாமி
(உணர்ச்சிப் பிழம்பு) 

பி. கு. : இராத்திரிக்குப் பேசறதுக்குச் சம்மதம்னா உன் தலையிலே வெச்சிருக்கிற பூவிலே ஒண்ணை எடுத்துக் கீழே போடு. நான் இங்கிருந்துக்கினே சாடைலே கண்டுக் கிறேன்.” 

படித்ததும், “ஸில்லி! என்னது இது கிறுக்குத்தனம் உடம்பிலே திமிர் ஏறிப் போயிட்டாப்பலே இருக்கு,” என்றாள் சீதாப்பட்டி நல்ல நாளும் கிழமையுமாகக் கணவனை மேலும் திட்ட வேண்டாம் என்று அத்துடன் நிறுத்திக்கொண்டாள். 

மாவிளக்குப் போட்டவுடன், “உங்களைத்தானே? வந்து நில்லுங்கள். உங்களுக்கு நமஸ்காரம் பண்ணணும்,” என்றாள். 

அப்புசாமி நின்றார். காலில் விழுந்து வணங்கிய சீதாப்பாட்டி, ‘இந்தாங்க, மாவு கொஞ்சமா சாப்பிடுங்க அப்புறம் ரெகுலர் மீல்ஸ் சாப்பிடணும்…. இன்னும் வடை தான் தட்டணும்…. கோசுமறி நெஸஸரியா? என்ன சொல்றீங்க….” அவள் இப்படிப் பேசிக்கொண்டிருக்க, அப்புசாமி பாட்டியையே பார்த்துக் கொண்டிருந்தவர், “சீதே! என்…. என்…. உடம்பைத் தொட்டுப் பாரேன்” என்றார். 

“ஆர் யு நாட் வெல்?” என்றவாறு, சீதாப்பாட்டி அவரது கையைத் தொட்டுப் பார்த்ததுதான் தாமதம், லபக்கென்று எதிர்பாராதவிதமாக அணைத்துக்கொண்டு விட்டார். “ஐயோ! என்ன வாசனை!” 

“ஸ்டுப்பிட்!” சீதாப்பாட்டி அவரை ஓர் உதறு உதறிவிட்டாள். 

சீதாப்பாட்டி அவரை உதறிச் சரியாக இருபத்தேழு நிமிடம் ஆகியும், அப்புசாமி அந்த உதறலையே – உதறலின் போது தற்செயலாக அவர்மீது எண்ணி பட்ட சீதாப்பாட்டியின் ஸ்பரிசங்களையே எண்ணி, ஜீராவில் விழுந்த ஈ போலத் தவித்தார். 

கோபத்திலும் என்ன அழகுக் கொள்ளை. அவள் உதறிய வேகத்தில் இடுப்பிலிருந்து தன் கை சற்று உயர்த்தி யிருக்கக்கூடுமோ, அதனால்தான் மனைவி மின்னலைப் போல ஒரு நெளி நெளிந்தாளோ? கமகமவென்று அவள்மீது அடித்த குளியல் பொடியின் வாசனை, அவர் மூக்கை அச்சாகக்கொண்டு குடை இராட்டினமாகச் சுழன்று சுழன்று வந்தது. 

அவர் தீர்மானித்துவிட்டார் என்ன ஆனாலும் சரி, இந்த இராத்திரியை முதல் இராத்திரியாகக் கொண்டாடி விடுவது என்று! 

இரவு வீடு திரும்பின சீதாப்பாட்டியின் மூக்கைச் சுள்ளென்று சாதி மல்லிகையின் மணம் தாக்கியது. 

கைப்பையைக் கீழே வைத்துவிட்டு டிரெஸ்ஸிங் டேபிள் பக்கம் போனவள், படுக்கையைப் பார்த்துத் திடுக்கிட்டாள். 

படுக்கை மேலெல்லாம் ரோஜா இதழ்கள்! கமகமவென்று ஊதுவத்தி புகை கிளப்பிக் கொண்டிருந்தது. ஒரு செம்பில் பால், அதில் நாலைந்து குங்குமப்பூ – ஓர் அட்டையில் ‘சந்திப்பு நேரம்: இரவு மணி 10’, என்று எழுதியிருந்தது. 

சீதாப்பாட்டிக்கு உடம்பு லேசாக நடுங்கியது. ‘சே! ஹி இஸ் ஸீரியஸ் எபௌட் இட் போலிருக்கிறது, கிராக்தனமாக ஏதாவது செய்தாலும் செய்துவிடும்! உடனடியாகத் தற்காப்பு நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று சீதாப்பாட்டிக்குத் தோன்றிவிட்டது. 

அவசர அவசரமாக அரைத் தூக்க மாத்திரையை எடுத்தாள். பொடி செய்தாள். பாலில் போட்டாள். பக்கத்தில் ஒரு கடிதம் எழுதி வைத்தாள். காரை எடுத்துக்கொண்டாள். பா.மு. கழகத்துக்குப் புறப்பட்டு விட்டாள். 

பாலில் சீதாப்பாட்டி அரை மாத்திரைதான் போட்டாள் முழுசாகப் போட்டால் ஏதாவது விபரீதமாகிவிடப் போகிறது என்ற பயத்தில். சொல்லப் போனால் அந்தப் பாதிமாத்திரை போட்டதுதான் இரண்டும் கெட்டானான விபரீதமாகிவிட்டது. 

பாலைக் குடித்த அப்புசாமியால் முழுத் தூக்கமும் தூங்க முடியாமல், விழிப்பாகவும் இருக்கமுடியாமல், ஏற்கனவே எரிந்துகொண்டிருந்த விரகதாபத்துக்கு விறகுவைத்த மாதிரி ஆகிவிட்டது. 

அப்புசாமி கைக்குக் கிடைத்த தலையணைக்கு முத்தம் கொடுத்தார். மனைவி எழுதி வைத்த கடிதத் துண்டுக்கு முத்தம் கொடுத்தார். இரண்டு டஜன் ரோஜாப் பூ இதழ்களைத் தின்றார். கையைச் சுற்றி மணிக்கட்டில் ஸ்டைலாகச் சுற்றிக்கொண்டிருந்த மல்லிகைப்பூச்சரத்தை தொண்ணூறாவது தடவையாக முகர்ந்து பார்த்தார். 

வாசனையுடன் கற்பனை விரிந்தது. 

ஷாஜஹான் மாதிரி அப்புசாமி பட்டுத்திண்டில் ஜிலுஜிலுவென்று சாய்ந்திருக்க, சீதாப்பாட்டி ஆடலழகியாகச் சிட்டுப்போல அவர் முன்னால் ஆடியவாறு வணங்கிச் சலாமலேகும் செய்கிறாள். பல்லிகிட்டே விளையாடும் டியூப்லைட் பூச்சி மாதிரி, பக்கத்தில் பக்கத்தில் வந்து ஆடிவிட்டுப் பிடிக்குச் சிக்காமல் போகிறாள். அப்புசாமி லபக்கென்று பிடித்து மடியில் போட்டுக்கொண்டு… 

கடிகாரத்தைப் பார்த்தார். சீதையை இன்னும் காணோம். 

‘எங்காவது வழியில் கார் நின்றுவிட்டதா? திருடர்கள் வழிமறித்துவிட்டார்களா? என்ற கவலையை விடப் பாட்டியை உடனே பார்க்கவேண்டும், அவளுடன் கொஞ்ச வேண்டும் என்ற வெறியே மேலோங்கி இருந்தது. 

“நீ எங்கே இருந்தாலும் இன்னைக்குத் தூங்கப் போறது கட்டிலிலேதான்! அடி தூத்!” அப்புசாமிக்குத் தான் ஏன் குழறுகிறோம் என்று தெரியவில்லை. 

சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கினார். எதிரே ஒரு சைக்கிள் ரிக்ஷா வந்துகொண்டிருந்தது. அதில் தளதள வென்று சீதாப்பாட்டி! 

அப்புசாமிக்கு மசமசத்தது. சமாளித்துக்கொண்டு, “ஏய்! நில்லு, நில்லு….” என்று சைக்கிள் ரிக்ஷா முன்னால் போய் மறித்தார். “வாடி, என் கப்பக் கிழங்கு! கட்டிலைப் போட்டுகிட்டு எத்தினி நேரம் காத்துக் கிடப்பேன்!” சீதாப்பாட்டியின் கையைத் தொட்டார். ரிக்ஷாக்காரனின் மீசை துடிக்கலாயிற்று. 

“யோவ்! கஸ்மாலம்! உடம்பு எப்படிக் கீது! அது என் பெண்டாட்டி! சினிமாவுக்கு இட்டுகினு போறேன். சீ நாயே, போஅந்தண்டை” 

அப்புசாமி சிரித்தார். “ஷீது! தெரிஞ்சதா? இதுக்குத்தான் இராத்திரியிலேயெல்லாம் தனியா போகக்கூடாது. அப்படியே போனாலும் குடிகார ரிக்ஷாவிலே ஏறக்கூடாது. உளர்ரான் பார்… மடையன்” 

வண்டி யிலிருந்த ‘சீதாப்பாட்டி’ யின் கையை அப்புசாமி ஆசையுடன் பற்ற, அவள் அலற, ரிக்ஷாக்காரனின் வலுவான கை அப்புசாமியின் பிடரியில் அறைந்து, அவரைத் தூக்கி வாலிபால், ஃபுட்பால், டென்னிஸ் என்று பலவகைப் பந்துகளாடி… 

அப்புசாமியின் மூட்டுகள் ‘விண் விண்’ என்றன. மூக்கில் ஒரு பிளாஸ்திரி. மண்டையில் ஒரு கட்டு. காலில் வலி, முதுகில் பல இடங்களில் முள்ளங்கிகளும் மரவள்ளிக் கிழங்குகளும் பயிராயிருந்தன. அந்த வீக்கங்கள் சோம்பேறித்தனமாகத் துப்பட்டியைப் போர்த்துத் தூங்கிக் கொண்டிருப்பது போலிருந்தன. 

சீதாப்பாட்டி அருகிலிருந்தவாறு அவரைத் தடவிக் கொடுத்தாள். 

எந்தக் கையின் ரோஜா ஸ்பரிசத்துக்காக ஏங்கினாரோ, அந்தக் கை முதுகை நீவிவிட்டபோது அவருக்கு இதமாக இல்லை. சாலையின் ஸ்பீடு பிரேக்கர்களில் வாகனங்கள் கிரீச்சிடுவதுபோல் சீதாப்பாட்டியின் கை, அவர் முதுகின் புடைத்த வலிப் பிரதேசங்களை ஸ்பரிசிக்கும்போது அவர் அலறினார். “ஆ! ஐயோ, அங்கே மட்டும் தொடாதே!” வலி தாளாமல் முட்டிக் கால்களைக் குன்றுபோல் வைத்துக் கொண்டிருந்தார். 

ரசகுண்டு! 

இழவு வீட்டில் துக்கம் கேட்க வந்தவன் மாதிரி, ஒரு துவைக்காத துண்டைப் போட்டுக் கொண்டு, அப்புசாமியின் கட்டிலருகே வந்து நின்றான். இரண்டு நிமிடங்களாகியும் பேசவில்லை. அப்புசாமி எரிச்சலுடன், “வாயைத் திறந்து பேசேண்டா? மௌனாஞ்சலி செலுத்த வந்துட்டியா, நான் செத்துப்போயிட்டேன்னு…..” என்றார். 

“ஐயோ! தாத்தாவ்! ‘ரசக்கண்ணா, என் ரசக் கண்ணா’ன்னு கொஞ்சுவீங்களே! உங்க மூக்குக்கு இந்தக் கதியா?” என்று புலம்பினான். பிறகு, கரகரத்த குரலில், “ஏன் பாட்டி, பொடி, கிடி போட ஒரு இரண்டு இடுக்கு வைச்சாவது பிளாஸ்திரி போட்டிருக்கக்கூடாது? இப்படியா வாழைக்காய் பழுக்க வைக்கிற மாதிரி ஒரே அடைச்சு பிளாஸ்திரி போட்டு வைக்கிறது” என்றான். 

சீதாப்பாட்டி, “ரசம்! கான் யு டூ மி எ ஃபேவர்? என்றாள், முகத்தில் பிரகாசம் தோன்ற. 

“சொல்லுங்க, பாட்டி, தாத்தாவுக்குக் குளிப்பாட் டணுமா? மருந்து வாங்கிட்டு வரணுமா? சஞ்சீவி மலைன்னாகூடப் பெயர்த்துட்டு வந்துடறேன்.” 

“அதெல்லாமில்லை, நீ கொஞ்சம் இவர் கால்மேலே ஏறி உட்காரணும். அப்போதுதான் கால் சரியா ப்ரெஸ் ஆகும்.” 

“என்ன பாட்டி! இதுக்குக்கூட இந்தச் சரீரம் உபயோகப்படலைன்னா வேறு எதுக்குத்தான் இருக்கு.” உற்சாகம் பீரிட்டவனாகக் கால்மீது போய் திம்மென உட்கார்ந்தான். 

“அடப்பாவி! ரசகுண்டா!” அப்புசாமி அலறினார். 

சீதாப்பாட்டி கஷ்டப்பட்டுச் சிரிப்பை அடக்கிக்கொண்டாள். “ஐயோ பாவம்டா, உங்க தாத்தா! உடம்பு சரியானதும் இன்னும் நாலு அந்த மாதிரியான இங்கிலீஷ் படத்துக்குக் கூட்டிப்போ, ஆசையாய்ப் பார்ப்பார்.” 

“ஐயையோ!” அப்புசாமி அலறினார். “தாயே கோடிக் கும்பிடு” 

– அப்புசாமியும் பாரதி நாற்காலியும், முதற் பதிப்பு: 1999, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *