உறுத்தல் வருடப்படுகிறது




(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தனது கம்பீரம் கலையாத மிடுக்குடன் அதிபர் என்னைக் கூப்பிட்டு, “இங்கிலிஸ் ரீச்சர் இன்றைக்கு வரேல்லை, ஆனால் பரீட்சை நேர அட்டவணையிலை இன்றைக்கு ஒன்பதாம் வகுப்பு இங்கிலிஸ் இருக்கு. நீங்கதான் அதை டெஸ்ற் பண்ணி மாக்ஸ் எடுத்துத் தரவேணும்” என்று சொன்னபடியால் ஏதோ பட படவென்று சில வினாக்களைத் தயார் செய்துகொண்டு அந்த வகுப்பினுள் நுழைகிறேன்.
முதலாம் கேள்வி ‘ஸ்பெலிங்’. நான் கூறிய ஐந்து சொற்களையும் மிக உன்னிப்பாகக் கவனித்து மாணவர்கள் எல்லாம் பதில் எழுதிவிட்டனர். இரண்டாம் கேள்வி ஆரம்பத்தில் “அறெஞ் த வேட்ஸ் இன் த கரெக்ட் ஓடர்” என்று நான் சொன்னதைக் கிரகித்துக்கொள்ள முடியாத ஒரு மாணவன் கேட்டான்,
“தமிழிலை சொல்லுங்கோ ரீச்சர். என்ன செய்யிறது எண்டு விளங்கேல்லை.”
“ஒரு வசனத்தின் சொற்களை நான் குழப்பி எழுதிறன், நீங்கள் சரியாக்கி எழுதுங்கோ” நான் சொல்லி வாய் மூடவில்லை,
“ரீச்சர் உது கஷ்டமான வேலை. நீங்கள் சரியாக்கி எழுதுங்கோ. நாங்கள் குழப்பி எழுதிறம்…” முதலாம் வாங்கின் வடக்குப்புற மூலையில் உட்கார்ந்திருந்த பிரேம்குமார் மிக லாவகமாய் நான் சொன்ன அதே தொனியில் சொல்லிவிட்டுப் பூனைபோல் உட்கார்ந்திருக்க வகுப்பு முழுவதும் குபீரெனச் சிரித்தது. எனக்கு அவன்மீது கோபிக்க முடியாமல் போனது மட்டுமல்ல, முகத்தில் தோன்றிய முறுவலையும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. பிரேம்குமார்… அவன் இப்படித்தான் ஒரு தனிப்பிறவி. ஒரு ‘யுனிக் ஸ்ருடன்ற’ வகுப்பை எப்போதும் ‘உம்’ என்று இல்லாமல் கலகலப்பாக வைத்துக்கொள்வான். இறுதியில், பாடங்களில் வகுப்பின் அதிகூடிய புள்ளி எதுவோ அதையும் அவனே தட்டிக்கொண்டு வகுப்பில் முதல் மாணவனாக வந்துவிடுவான்.
சோதனைகள் யாவும் முடிந்தபோது அந்த வகுப்பின் வகுப்பாசிரியர் என்பதால் பருவத் தேர்ச்சி அட்டவணை நானே தயாரிக்கவேண்டி இருந்தது. நான் குழப்பி எழுதிய சொற்களையெல்லாம் சரியான முறையில் ஒழுங்கு படுத்தி, ஏனைய கேள்விகளிலும் தன் திறமையைக் காட்டிப் பிரேம்குமார்தான் ஆங்கிலத்தில் அதிகூடிய புள்ளியைப் பெற்றிருந்தான். ஆங்கிலத்தில் மட்டுமல்ல எனது பாடமான கணிதத்திலும் வழக்கம்போல அவனே மிக அதிகமான புள்ளிகளைப் பெற்றிருந்தான். அடுத்ததாக விஞ்ஞானப் புள்ளி பதிந்தபோது, இவன் நாற்பது புள்ளி மட்டுமே பெற்றிருக்க ரவி எண்பத்து மூன்று புள்ளி பெற்றிருப்பதை எதேச்சையாகக் கண்டு நானே விக்கித்துப்போனேன். ரவியும் கெட்டிக்காரன்தான் என்றாலும் ரவியைவிடப் பிரேம்குமாரின் நுண்மதி திறமையாகத் தொழிற்படக்கூடியது என்பது எல்லா ஆசிரியர்களுக்கும் துல்லியமாகத் தெரிந்த ஒரு விடயம்.
ஒரு பாடத்தில் ரவி அதிகமாய்ப் பெற்றுவிட்ட நாற்பத்துமூன்று புள்ளிகள் வகுப்பு நிலையிலும் பிரேமை இரண்டாமிடத்திற்குத் தள்ளிவிட இம் மாற்றத்திற்குக் காரணம் புரியாத ஒரு மன உறுத்தலோடு நான் அடுத்தநாள் வகுப்பினுள் நுழைந்தேன். சௌமியமான அந்தக் காலைப் பொழுதில் வகுப்பும் மிகக் கலகலப்பாக இருந்தது. நான் போய் அமர்ந்த உடனேயே ரவி ‘பிஸ்கற்’ தட்டு ஒன்றைக் கொண்டுவந்து நீட்டினான்.
“என்ன ரவி விசேஷம்?” என்று கேட்டேன். “விஞ்ஞானத்திலை கூடமாக்ஸ் எடுத்ததற்கும் வகுப்பிலை முதலாம் பிள்ளையாய் வந்ததுக்கும்…” என்று நெளிந்தான். இப்படித்தான் ரவி ஒரு சிறு விடயம் என்றாலும் பெரிதாகக் கொண்டாடுவான். வீட்டிலே பணம் தேவைக்கு மிகுதியாய் இருந்தால் அவனும் வேறு என்னதான் செய்வது!
பிரேம்குமாரை என் கண்கள் தேடியபோது அவன் கடைசி வாங்கில் ஒரு மூலையில் தலை கவிழ்த்துப் படுத்திருப்பதைக் கண்டு அருகில் போய் என் கையில் இருந்த தடியால் அவன் முதுகில் மெதுவாகத் தட்டிப் பார்த்தேன். தலையை நிமிர்த்திப் பார்த்தவன் என்னுடைய தட்டுதலை உதாசீனம் செய்தது போல் மீண்டும் படுத்துக்கொண்டான். அவன் தலை நிமிர்த்தி என்னைப் பார்த்தபோது கண்களில் நீர் திரையிட்டு நின்றதை நான் கவனிக்கத் தவறவில்லை.
அவனது உள்ளத்தில் ஏதோ கீறல் விழுந்திருக்கிறது என்று எனக்குப் புரிந்தது. இல்லாவிட்டால் என் சுரண்டலை இப்படி உதாசீனம் செய்யமாட்டான்.
“ரீச்சர், தேவையில்லாமல் எனக்கு அடிக்க வாறீங்கள்… நான் கட்டாயம் கோவம் போடுவன்… இனிமேல் யாரைக் கொண்டு சோக்’ எடுப்பிப்ப எண்டு பாப்பம். யாரைக் கொண்டு ‘பிளாக் போட்’ அழிப்பிப்ப பாப்பம்… நான் கடைசி வரையும் கதைக்க மாட்டன். பின்னை ஏன் எனக்குத் தேவையில்லாமல் அடிக்க வாறா…” என்று பொரிந்து தள்ளிவிடுவான். அவன் இவ்வாறு பொரிவதைக் கேட்டு உள்ளுக்குள் ரசிப்பதற்காகவே நான் அவனை வலுச் சண்டைக்கு இழுத்துச் சுரண்டுவது உண்டு. இன்று…! என் சுரண்டலுக்கு அவன் எடுபடவில்லை என்பதிலிருந்து அவன் உள்ளம் கறைபட்டிருப்பது எனக்குப் புரிந்தது. அவன் ஒன்றும் பேசாமல் இருந்ததே என் உள்ளத்தை வெதும்பச் செய்தது.
அடுத்த பாட நேரம்… நான் அடுத்த வகுப்பில் தனியே போய் இருந்துகொண்டே அவனைத் தனியாகக் கூப்பிட்டனுப்பினேன். வந்தான்.
“என்னடா பிரேம்… ஏன் அழுகிறாய்?” சுற்றி வளைக்காமல் நான் நேரே விடயத்திற்கு வருகிறேன்.
“ஒண்டுமில்லை ரீச்சர்” என்று சிணுங்கியவன் உண்மையில் அழுதே விட்டான். நிஷ்கபடமான அந்த முகத்தை உற்றுப் பார்த்தபடியே அவனை அருகில் அழைத்து,
“பிரேம்குமார் சொல்லு… உனக்கு என்ன நடந்தது? ஏன் இப்படி இருக்கிறாய்?” என்று கேட்டேன். உள்ளக் குமுறலில் சிறிது நேரம் தயங்கியவன் ஒருவித விறைப்புடன் சொன்னான்,
“சயன்சிலை ரவி என்னைவிட இரண்டு பங்கு மாக்ஸ் எடுத்துப்போட்டான்.” எனக்கு அவனது ஆதங்கம் புரிந்தது. பணத்தாலும், அந்தஸ்தாலும், வீட்டுச் சூழ்நிலையாலும் ரவி உயர்ந்தவன் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாக இருந்தாலும், படிப்பில், திறமையில், ஆசிரியர்களின் நன்மதிப்பில், தானே ரவியைவிட உயரம் என்று நம்பியிருந்த பிரேமை… இந்தத் தோல்வி தகர்த்தெறிந்துவிட்டது. அவனது மனோ ராஜ்யக் கற்பனைகள் யாவும் சிதைந்துவிட்டன. எனக்கு அதுவும் புரிந்தது. ஆனால் இவனுக்குப் புள்ளி ஏன் குறைந்தது என்பது மட்டும் புரியவில்லை.
“ஏன் நீர் படிக்காமல் இருந்தனீர்? கவனமாய்ப் படிச்சிருந்தால் ரவியிலும்கூட எடுத்திருக்கலாமே?” என்று நான் கேட்டதில் அடம்பிடித்த அவன் நினைவுகள் எல்லாம் கோபமாக மாறிவிட்டன போலும்… பதட்டத்துடன் சொன்னான்,
“நான் வகுப்பிலை படிப்பிச்சதெல்லாம் படிச்சனான்தானே! படிப்பியாததெல்லாம் கேள்வியிலே வந்திருக்கு. அப்ப நான் என்னண்டு படிக்கிறது? உங்களுக்கு ஒண்டும் தெரியாது…” கண்களில் கரைகட்டி நின்ற நீரெல்லாம் வழிந்தோடியது.
“சரியடா, அப்ப ரவி எப்பிடிப் படிச்சவன்?’ அவனது கூர்வுணர்ச்சி இப்போது எல்லை மீறி படபடவென்று பொரிந்து தள்ளினான்.
“உங்களுக்கு ஒண்டும் தெரியாது… அவனுக்கு டியூசன் மாஸ்டர் வீட்டை வந்து சொல்லிக் குடுக்கிறவர். மாதம் இருநூறு ரூபா டியூசனுக்குச் செலவு. சயன்ஸ், மத்ஸ்க்கு ஒரு மாஸ்டர். இங்கிலிஸ் சமூகக் கல்விக்கு ஒரு ரீச்சர். தமிழ் சமயத்திற்கு ஒரு மாஸ்டர். அப்பிடிப் படிச்சால் நூறு மாக்ஸ்சும் எடுக்கலாம்தானே. எங்கடை சயன்ஸ் ரீச்சர் ஒரு மாதம் பள்ளிக்கூடமே வரேல்லை… உங்களுக்கு ஒண்டும் தெரியாது…”
தனது கவலை, ஆதங்கம் எல்லாவற்றையும் கோபமாக மாற்றி என்மேல் கொட்டித் தீர்த்துக்கொள்கிறான் என்ற அடிப்படையில் உளவியல் எனக்குப் புரிந்தது.
“அப்ப… உனக்கும் டியூசன் எடுக்க விருப்பமோ?”
“உங்களுக்கு விசர்தான் டீச்சர்… நான் என்னெண்டு ரியூசன் எடுக்கிறது? காசு தாறது நீங்களே…?” தனது கவலைக்கிடையிலும் சிரித்துக்கொண்டு குத்தலாகக் கேட்டான். நானோ எந்தவித போலித் தன்மையும் இன்றி குரலில் ஒரு பிரத்தியேக ஆரோக்கியத்துடன்,
“என்னாலை காசு தர முடியாதடா, ஆனால் உன்னிடம் காசு வாங்காமல் டியூசன் சொல்லித்தர முடியும். சயன்ஸ், மற்ஸ், இங்கிலிஸ் எல்லாம் சொல்லித் தாறன். என்னடா வாறியா?” என்று நான் கேட்டபோது அவனால் நம்பமுடியவில்லை.
“சும்மா பகிடி விடாதேங்கோ…!” என்றவன் “இல்லையடா பிரேம், உண்மையாத்தான் சொல்லிறன்” என்று நான் மீண்டும் எனது வார்த்தைகளை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, அவன் கண்களில் ஆனந்த பாஷ்பம் பொழிவதை நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.
– பலாலி ஆசிரியர் கலாசாலை 1979 ‘எழில்’ சஞ்சிகையில் பிரசுரித்தது.
– மனித சொரூபங்கள் (பன்னிரு சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1982, சிவன் கல்வி நிலைய வெளியீடு, தெல்லிப்பழை.