ஈவதில் என்ன எதிர்பார்ப்பு?





கோமதிக்கு பிறருக்கு கொடுப்பது என்றால் அது அல்வா திங்கறா மாதிரி, அதில் அலாதி பிரியம் அவளுக்கு.
‘ஏன் கோமு ஈரோடு போய் பர்சேஸ் பண்ணீட்டு வந்தயே துணிகள்?! அதை வேலைக்காரங்களுக்கெல்லாம் கொடுத்துட்டயா?’ என்றார் ஈஸ்வரமூர்த்தி. அவர் கலாய்க்கக் கேட்பது புரியாமல்,

‘இன்றைக்கு வெள்ளிக்கிழமையாச்சே?!’ என்றாள் கோமு எந்த எச்சரிக்கையுமில்லாமல்.
‘ஏன் வெள்ளிக்கிழமை கொடுப்பதில்லை என்று விரதம் வச்சிருக்கயா?’ இது ஈஸ்வர மூர்த்தி. அவர் ஆலாபனையை ஆரம்பிச்சுட்டார்.
‘வெள்ளிக்கிழமை கோடி துணி கூடாது என்பது சாஸ்திரமில்லயோ?’ இது கோமு. ‘சனிக்கிழமை கொடுக்கப்போறேன்’ என்றாள்.
‘ஏன் சனிக்கிழமை கோடிக்குப்பிரச்சனை இல்லையோ?’ என்றார் அவர்.
‘சனி பெருக்காச்சே?!’ என்றாள் கோமு அப்பாவியாக.
‘ஆமாம் தெரியாமத்தான் கேட்கிறேன், எதுக்கு துணி தானம் பண்றே?’ என்றார் ஈஸ்வரமூர்த்தி
‘பாவம் போகத்தான், வஸ்திர தானம் பண்றேன். அதுதான் பாவம் போக்கும் பிராயச்சித்தமாக்கும்’ என்றாள் அவள்.
‘ஓ! தானத்துல கோடி கொடுக்க வெள்ளிகூடாதுங்கறே…!? சனி பெருக்குங்கற யே!? என்ன பெருகும்மனு நெனைக்கறே?!’
‘புண்ணியம்தான்’.
‘புண்ணியத்துக்குப்பதில் பண்ணின பாவம்’ சனிப் பெருக்குல ‘ பெருகீட்டா என்ன பண்ணுவே???’ என்று ஈஸ்வர மூர்த்தி கேட்டதும், பயத்தில் படபடத்தாள் கோமு.
‘கொடுப்பதுக்கு தினம் என்னத்துக்கு? தானம் கொடுப்பதிலும் எதிர்பார்ப்பு என்னத்துக்கு?’ என்றார் அவர்.
அது கேட்ட கோமுவும் குழம்பினாள்.