இரும்பிலே ஓர் இருதயம்…!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தமிழ் முரசு
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: May 10, 2025
பார்வையிட்டோர்: 7,971 
 
 

(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

யாரோ தொட்டு உசுப்பினாற்போல இருந்தது. கண்களைத் திறக்க முடியாமல் பாறாங்கற்களைப் போட்டு அழுத்துவது போல உணர்ந்தேன். முந்தைய நாளின் வேலைப்பளு. மிகுந்த பிரயத்தனப்பட்டு இமைகளைப் பிரித்தேன். மலர்தான், ‘எழுந்திருங்கள், காலை வணக்கம், இன்றைய நாள் இனியநாளாகட்டும்’ என்று முத்துப்பல் தெரியச் சிரித்தாள். அவள் படைப்பை வியந்தேன்.

‘என் செட்யூல்..?’ என்றேன். இப்பொழுதெல்லாம் செட்யூல் இல்லாமல் இயங்க முடிவதில்லை. மூளை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ரிமைண்டர் ஆணைகளையே எதிர்பார்க்கிறது. காலைக்கடன், குளிப்பது, தூங்குவது என எல்லாவற்றையுமே செட்யூலில் சேர்த்து ரிமைண்டரில் போட்டுக்கொள்ள வேண்டி யிருக்கிறது.

‘இதோ…உங்கள் செட்யூல். ஆனால் அதற்குமுன் உங்களுக்காக ஓர் அவசரச் செய்தி! நான் மறுக்கப்பட்ட
அந்த அறையின் சிவப்பு விளக்கு பத்து மணித்துளிகளாகக் கண்சிமிட்டுகிறது. சென்று என்னவென்று பாருங்கள்.’ சொல்லும்போது அவள் முகம் மாறியிருந்தது.

சற்று யோசித்தேன். பின் ‘சரி, தகவலுக்கு நன்றி! நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்லும்போது சிரிப்பை வரவழைத்துக் கொண்டேன். கொண்டேன். அவளும் பதிலுக்குத் தன் முத்துப்பல்லைக் காட்டினாள்.

என் செட்யூலில் 2 முக்கிய நிகழ்வுகள் இன்று அரங் கேற இருக்கின்றன. அதற்கான வேலைகளில்தான் நேற்றிரவு மூழ்கியிருந்தேன். முதலாவது உலக விஞ்ஞானி கள் குழுமத்தின் பாராட்டுக் கூட்டம். உலக விஞ்ஞானிகள் அனைவரும் ஒன்றுகூடித் தங்களைத் தாங்களே பாராட்டிக்கொள்ளப் போகிறார்கள். ரோபோக்களுக்கு உணர்வுகளை உள்வைக்க முயன்று அதில் அவர்கள் பெற்ற ஓரளவு வெற்றியின் ஓராண்டு நிறைவுநாள் இன்று. நானும் ஒரு விஞ்ஞானி என்ற வகையில் எனக்கும் அந்தப் பெருமையில் பங்கு இருப்பதாக உணர்கிறேன்.

இரண்டாவது நிகழ்வும் அதை ஒட்டிய ஒன்றுதான். அதற்கு நான்தான் தலைவன் என்பதால் கூடுதல் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு வருடத்திற்கு முன்பு அந்த வெற்றிநாளில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. எந்திரங்களை மனிதர்களாக்கினால் பல பின் விளைவுகள் ஏற்படும் என்று சமூகத்தலைவர்கள் தடைக்கற்களைப் போட்டனர். மக்கள் ஆதரித்தும் எதிர்த்தும் இரு குழுக்களாகப் பிரிந்தனர். எதிர்க் குழுக்களால் எந்தத் தீங்கும் நேர்ந்துவிடக் கூடாது என நெஞ்சில் ஓரத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. அவர்களால் ஆர்ப்பாட்டங்கள் பல நாடுகளிலும் நடந்தன. இந்த ஆராய்ச்சியில் பல பில்லியன்களைக் கொட்டியிருந்த நாடுகள் கிடைத்த வெற்றியைக் கிடப்பில் போட விரும்பவில்லை. விளைவுகள் பற்றி ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரையின்படி கட்டம் கட்டமாக செயல்படுத்தலாம் என்ற முடிவினை எடுத்தது. அந்தக் குழுவின் தலைவன் ஆக நான் நியமிக்கப்பட்டேன்.

முதல்கட்டமாக நூறு ரோபோக்களுக்கு உணர்வு மாட்யூல்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு விடப் பட்டன. அந்த நூறு பேரின் அனுபவம் எல்லாவற்றையும் சேகரித்து அணுக்கமாக ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்கப் போகிறேன் இன்று மாலை. அதற்குள் அவசரச்செய்தி என்கிறாள் மலர். என்னவாக இருக்கும்? ஏதாவது நாசவேலை? அவளுக்கு அந்த அறைக்குள் அனுமதி இல்லை. அவளைப் பற்றிய கோப்புகள் உள்ளே இருக்கின்றன. மலரைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், இந்த ஒரு வருடத்தில் என் மனங்கவர்ந்து விட்டாள். அவளின் இதமான உபசரிப்பில் என் களைப்பை மறந்து களித்திருக்கிறேன். என்னிடம் அதிகம் எதிர்பார்க்கிறாள். பல நேரங்களில் தவிர்த்து விடுகிறேன். சில நேரங்களில் விட்டு விடுகிறேன். இப்போதும்தான், எனக்காக ஆவிபறக்க ஈரத்துணி கொண்டுவந்து ஒற்றி விடுகிறாள். என் குளியல் முடிகிறது. காலை உணவுக்கு இரண்டு மாத்திரைகளை நீட்டுகிறாள். விழுங்கிவிட்டு அவளைத் தவிர்த்து இரகசிய அறைக்குள் நுழைகிறேன்.

அவசரச் செய்தி என்னவாம்? நூறில் ஒன்று செயல் இழந்து விட்டதாம். கிழக்குப்பிராந்தியத்தில் இருந்து தகவல் தருகிறார் அதனை பயன்படுத்திவருகிற பேராசிரியர் ஃபெர்ணாண்டஸ். எனக்கு அவரிடம் பல கேள்விகள். பவர் மாட்யூல் சரியாக வேலை செய்ததா? சதிவேலையா? என்ன நடந்தது? லேசர் உருவமாகத் தோன்றி விவரங் களை அளித்தார் ஃபெர்ணாண்டஸ். கீழறுப்பு வேலை ஏதும் இல்லை என உறுதியளிக்கிறார். எல்லாச் செயல்பாடுகளுமே நின்றுவிட்டன என்கிறார். ஏதாவது ஹார்டுவேர் ப்ராப்ளம் இருக்கலாம் என்கிறார். உடனே லேபை அழைத்து ஆராயுமாறு பணிக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் வெற்றிவிழா! அதற்குள் இப்படி நடந்துவிட்டதே என்று இருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் கூட்டம் துவங்கி விடும், அங்கே சந்திக்கலாம் என்று கூறி விடை பெற்றுக் கொள்கிறேன்.

வெர்ச்சுவல் அரங்கில் நுழைகிறேன். உலகத்தலைவர் கள் விஞ்ஞானிகள், சமூகத்தலைவர்கள் என வெற்றிவிழா களைகட்டுகிறது. பாராட்டுமழை பொழிகிறார்கள். விஞ்ஞானிகள் குழுமத்தலைவர் தன் உரையில் ‘இது ஒரு மகத்தான வெற்றியின் ஓராண்டு நிறைவுநாள்! முதல்கட்டப் பயன்பாடு குறித்து இன்றுமாலைக் கூட்டத் தில் அறிக்கை வரும்’ என்கிறார். அது பாசிட்டிவாகவே இருக்கும் எனத் தான் நம்புவதாகவும் கூறி என்னைப் பார்க்கிறார்.

அவர் பேச்சைமுடித்து வந்தவுடன் அவரிடம் சொன்னேன். ‘நூறில் ஒன்று ஏதோ காரணத்தால் செயல் இழந்து விட்டது. அது பற்றி லேப் ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கிறேன்.’

’99 சதவீதம் வெற்றி என்று சொல்லுங்கள்’ என்கிறார் அவர். அவரின் நம்பிக்கை பொய்யாகிவிடக் கூடாது என்று நினைத்துக் கொள்கிறேன்.

மாலைக் கூட்டத்தில் சந்திக்கலாம் என்று விடை பெற்றுக்கொள்கிறேன். கூட்டம் முடிகிறது.

வெளியே வருகிறேன். ‘ஏன் கவலையாய் இருக்கிறீர் கள்?’ என்கிறாள் மலர். நான் ஒன்றும் பேசவில்லை. ‘ஏதாவது உதவி தேவையா?’ மீண்டும் கேட்கிறாள். என் யோசனையெல்லாம் லேப் ரிப்போர்ட் ரெடியாகி இருக்குமா? என்பதிலேயே இருக்கிறது. மலர் குறுக்கிடு கிறாள் ‘உங்கள் ஃப்ளட் பிரசர் அதிகரித்துள்ளது, சற்று ஓய்வு தேவை உங்களுக்கு!” ‘நீ கொஞ்சம் சும்மா இரு’ நான் எரிந்து விழுகிறேன். அவள் முகம் சுண்டிப்போகிறது. எனக்கு அவள் முகம் ஆச்சரியமாக இருக்கிறது.

இரகசிய அறையில் நுழைகிறேன். லேப் ரிப்போட் வந்துவிட்டது. எல்லாப் பார்ட்ஸ்களும் அதிக மின்னோட் டத்தால் பாதிக்கப்பட்டு அழிந்துபோய் விட்டன. ஆனால் பவர் மாட்யூலில் மின்னோட்டம் அதிகரிப்பதற்கான வாய்ப்பே இல்லை. கடைசி நிமிடம் வரையில் எல்லாம் சரியாகவே வேலை செய்திருக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனக்கு எல்லாம் மர்மமாக இருப்பதாகப் பட்டது. எனக்கு மலரின் முகங்கள் ஞாபகம் வருகிறது.

ஃபெர்ணாண்டஸை அழைக்கிறேன். ‘உங்கள் ரோபோ ஆணா? ஆணா? பெண்ணா? நீங்கள் எப்படிப் பாவித்தீர்கள்? வரையறை மீறினீர்களா? உங்கள் கடைசி கமேண்ட் என்ன? என விசாரித்தேன்.

அவர் யோசித்தார். அப்போதைய நிகழ்வுகளை மனத்தில் கொண்டுவர சற்று நேரம் எடுத்துக் கொண்டார். அவள் பெயர் ஜான்சி, என்னிடம் நன்றாகவே நடந்து கொண்டாள். அன்புத்தொல்லை அதிகம். நான் சற்று கடுமையாக நடந்து கொண்டிருக்கக் கூடும். ஏனென்றால் நான் அப்போது சற்று மயக்கத்தில் இருந்தேன். சரியாக நினைவில் இல்லை என்றார்.

எனக்குப் பொறி தட்டினாற்போல இருந்தது. என்னமாதிரியான பின்விளைவுகள் ஏற்படலாம் என்று முன்பொருமுறை விவாதித்தது நினைவில் வந்தது. அந்தக் கோப்பை எடுத்துப் புரட்டினேன். எல்லோரும் பேசினார்கள். ரோபோக்களுக்குக் காதல் உணர்வுகள் பெருகி விட்டால் என்ன செய்வது? கோபம் வந்து அடித்து விட்டால் என்ன செய்வது? மனித இனத்தையே அழித்து விட்டால் என்ன செய்வது? இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது என்றெல்லாம் பேசினார்கள். கோப்பின் அடியில் ‘ஏக்சன் ரெக்கொயர்டு: இந்த ரோபோக்களின் மனப் பதிவுகளைச் சேமித்து எதிர்வினைகளை ஆராய்வது. அவற்றின் நோக்கம் அறிந்து பயன்பாட்டு வரையறை தயார் செய்து பின்பற்றுவது. ரோபோ மனங்களின் மிர்ரர் இமேஜ்களைத் தனியே ஓரிடத்தில் பாதுகாத்து வைப்பது.’ என்று குறிப்பு இருந்தது.

மிர்ரர் பதிவுகளைப் பார்த்தால் ஏதேனும் துப்புக் கிடைக்கலாம் என்று தோன்றியது. நூறு ரோபோக்களின் மனப்பதிவுகளையும் புரட்டிப்பார்க்கப் புறப்பட்டேன். அவைகள் அரசாங்க லேபொரட்டரியில் பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்கப் பட்டிருந்தன.

அங்கு சென்று ஜான்சியின் மனப்பதிவுகளைப் புரட்டினேன்.- ‘ஃபெர்ணாண்டஸ் என் உணர்வுகளை மதிக்கவில்லை. தற்கொலை எண்ணம் தலை தூக்குகிறது. நான் என்னை மாய்த்துக்கொள்ள வேண்டும்’ என்ற பதிவு இருந்தது. அவசரமாக மலரின் பதிவுகளைப் பார்த்தேன். அதிர்ந்தேன். ‘மனிதர்கள் எந்திரங்களாக நடந்து கொள்கிறார்கள்’, என்று இருந்தது. மற்ற பதிவுகளையும் புரட்டிக் கொண்டிருக்கிறேன். ‘மனிதர்கள் மதிக்கவில்லை, மனிதர்கள் சிரிக்கவில்லை, மனிதர்கள் பேசவில்லை’ என்று எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. ஒன்றும் தேறவில்லை. இன்றோ, நாளையோ மற்றவையும் மடியக் கூடும்!

‘மனிதர்கள் 100 சதவீதம் தோற்றுவிட்டோம். உணர்வு மாட்யூல்களை நாம்தான் பொருத்திக் கொள்ளவேண்டும்’ என்பதை இன்றைய மாலைக் கூட்டத்தில் அறிவிக்கப் போகிறேன். ‘எந்திரத் தற்கொலை களுக்காக’ மனித இனம் அவமானப்படப் போகிறது!

– தமிழ் முரசு

– நகர மறுத்த மேசை (சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2013, இராம.வயிரவன் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *