கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 2,220 
 
 

தன் ஒரே மகன் திடீரென்று இறந்துவிடவே. துயரம் தாங்காமல் வருந்திய ஒரு தந்தை, புத்த பகவானை அணுகி, எப்படியாவது தன்னுடைய மகனை உயிரோடு எழுப்பிக் கொடுக்கும்படி வேண்டி அழுதான்.

புத்தர் என்ன செய்வார்? அவரால் எழுப்பிக் கொடுக்க முடியும். இருந்தாலும் பிணத்தைத் தூக்கிக் கொண்டு எல்லோரும் இதே வேலையாக வர ஆரம்பித்து விட்டால் பிணங்களை எழுப்புவதைத்தவிர புத்தர் பெருமானுக்கு வேறு என்ன வேலை இருககமுடியும்? அது மட்டுமல்லாமல், சிலரை எழுப்ப மறுத்தால் பொல்லாப்பும் பகையும் ஏற்பட்டுவிடும என்பதெல்லாம் நமக்கு நன்கு விளங்குகிறது.

ஆனால் புத்தர் என்ன செய்தார் தெரியுமா? மிக அன்புடன், அவனிடம் “இந்த ஊரில் சாவு நேராத வீட்டிலிருந்து கொஞ்சம் கடுகு வாங்கி வா! உன் மகனை நான் எழுப்பித் தருகிறேன்” என்றார்.

அவன் வெகு மகிழ்ச்சியாக ஓடினான். ஒவ்வொரு வீடாகப் போய்ச் சாவு நேராத வீட்டைத் தேடினான், கடுகு வாங்குவதற்காக . ஆனால். அவனுக்குக் கிடைத்த பதில் எல்லாம் “என் தாய் இறந்துவிட்டாள்; தந்தை இறந்திருக்கிறார்: தங்கை , தமக்கை, பிள்ளை, பேரப்பிள்ளை என்று ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் அல்லது பலபேர் இறந்திருக்கிறார்கள்” என்பது தான்.

இப்படி ஊர் முழுவதும் அலைந்து திரிந்த பிறகுதான், ‘சாவை யாராலும் தடுக்க முடியாது; எல்லோருக்கும் ஏற்படும் துன்பம்தான் நமக்கும் ஏற்பட்டுள்ளது’ என்ற உண்மையை உணர்ந்தான். திரும்பவும் புத்தரிடம் போகும் எண்ணத்தையே கைவிட்டுவிட்டான்.

புத்தர் பெருமான் அவர்களது இனிய போதனை அவனுக்கு உண்மையை உணர்த்திவிட்டது.

இதைப் படிக்கும் நாமும், நம்மால் முடியாத காரியத்தைச் செய்யும்படி நம்மை யாரேனும் வேண்டினால், கடுஞ்சொற்களைச் சொல்லி அவர்கள் மனத்தைப் புண்படுத்தாமல், இனிய சொற்களால் அவர்களே உண்மையை உணரும்படி செய்வது நல்லது.

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *