இதற்கு மருந்து உண்டா?

புவனேஷ் வாடிய முகத்துடன் எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தான். “ஏய், புவி, என்னடா ஆச்சு உனக்கு? எவ்வளவு நேரமா கேட்டிட்டு இருக்கேன்?காதுல விழுதா இல்லையா? உடம்பு சரியில்லையா??” சரஸ்வதி கத்திக் கொண்டிருந்தாள் தன் பையனைப் பார்த்து. தட்டில் வைத்திருந்த இட்லியை தொடக்கூட இல்லாமல், அவள் கேட்பதையும் பொருட்படுத்தாமல் ” ம்ம், ப்ச்,ப்ச், ஒண்ணும் இல்ல” என்று சொல்லி மீண்டும் தலையை பக்கவாட்டில் திருப்பி என்னவோ யோசனை செய்தான். “எதாயிருந்தாலும் அப்புறம் பாத்துக்கலாம் டா, சீக்கிரம் சாப்பிடு. காலேஜுக்கு கிளம்பலயா? ஏதோ லீவுன்னு சொன்னேல்ல” என்று மீண்டும் சத்தம் போட்டு விட்டு உள்ளே சென்றாள்.
அலுவலகத்திற்கு செல்லத்தயாராகி தன் அறையிலிருந்து வெளியே வந்த உலகநாதன் “சரசு, நான் இன்னிக்கு லஞ்ச் வீட்லதான்” என்று கூறியபடியே தன் தட்டில் சாப்பாட்டு மேசையில் வைத்திருந்த பாத்திரத்தில் இருந்த இட்லிகளை எடுத்து போட்டு பக்கத்தில் இருந்த சட்னி, பொடிகளை இட்டு சாப்பிடத் தொடங்கினான். “ஏங்க உங்க பிள்ளைய என்ன ஆச்சுன்னு கேளுங்க, அவன் பாட்டுக்கு காலைலேர்ந்து மோட்டுவளையப் பாத்துட்டு உட்கார்ந்து இருக்கான். எதுவும் பேச மாட்டேங்கறான். அட, இங்கே பாருங்க, தட்டுல வச்ச இட்லில ரெண்ட மீதி வச்சுட்டு போய்ட்டான்.ஏன் பித்து பிடிச்சவன் மாதிரி ஆகிட்டாங்க இவன்?” என்று உலகநாதன் பையில் காஃபி குடுவையை வைத்துக்கொண்டே கவலையுடன் கேட்டாள்.அவன் காஃபி பிரியன்.
“தூங்கிருக்க மாட்டான் சரியா. அதான் அவன் ஃப்ரெண்ட் பர்த் டே டின்னருக்கு போய்ட்டு நேத்து நைட்டு லேட்டா வந்திருப்பான் இல்லையா, முழிச்சிட்டிருந்திருப்பான். விட்டிடு, அவன் தூங்கி எழுந்தான்னா சரியாகிடுவான். இன்னிக்கு லீவு ன்னு சொன்னானே, இல்லையா? எனக்கு அவசரமா ஆஃபீஸ் வெளி வேலை இருக்கு. போய்ட்டு சீக்கிரமா வந்துடுவேன். அரை நாள் லீவ் சொல்லிருக்கேன் நாம இன்னைக்கு சேகர் வீட்டு ரிசப்ஷன் ஃபங்ஷனுக்கு போகணுமில்ல, நினைவிருக்கா?” என்றான்.
“ஞாபகம் இருக்குங்க. அஞ்சு மணிக்கு கிளம்பிடலாம். ட்ராஃபிக்ல கொஞ்சம் மாட்டாம இருப்போம். சீக்கிரமா வந்துடுங்க.எனக்கு இவன் இப்படி இருக்கானேன்னு புவியைப்பத்தி நினைச்சு கவலையா இருக்கு. நீங்க சொல்றதும் சரிதான். இவனுகதான் தூக்கத்தை கெடுத்துக்கிறானுகளே அடிக்கடி?” என்று சொல்லி விட்டு அவனை வழியனுப்பி விட்டு உள்ளே வந்தாள்.
உலகநாதன், தனியார் மோட்டார் வாகன அலுவலகத்தின் வணிகப் பிரிவில் உதவி மேலாளராக இருக்கிறான். இன்று அவன் நண்பன் வீட்டுக்கல்யாண வரவேற்புக்கு செல்வதற்காக அரை நாள் விடுமுறைக்கு அனுமதி வாங்கி உள்ளான்.
சரஸ்வதி தன்னுடைய காலை உணவை முடித்து, மற்ற அன்றைய தினத்தின் காலையில் அவள் செய்யும் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு, துணிகளைக் காய் வைத்து விட்டு சோஃபாவில் உட்கார்ந்த போது மணி கிட்டத்தட்ட பதினொன்று ஆகிவிட்டது.
‘ரெண்டு மணி நேரமா என்ன செய்றான் இவன்’ என்று நினைத்து புவனேஷ் அறையில் சென்றாள். திடுக்கிட்டாள். புவனேஷ் அங்கே இல்லை. ‘எங்க போய்ட்டான்’ என்று சொல்லிக்கொண்டே, மொட்டை மாடிக்கு போய் பார்த்தாள்.புவனேஷ் அதே போலவே வெறித்த பார்வையுடன் அங்கு மூலையில் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். “என்னடா, புவி, ஏதாவது உடம்பு படுத்துதா? தலைவலியா இருக்காதா? சரியா தூங்கலையா? ஏண்டா இப்படி இருக்கே, சரி, வா கீழே, அப்பா லஞ்ச் டயத்தில வந்துடுவாரு. டாக்டர் கிட்ட போகலாமா?” என்று அவன் தலையை கோதியவாறு கேட்டாள் சரஸ்வதி. புவனேஷ் மௌனமாகவே இருந்தான்.
“சரி, சரி வா கீழே, காபி போட்டு தரேன்.வேண்டாம்னா ஜூஸை குடிச்சிட்டு கொஞ்ச நேரம் படுத்து தூங்கு. ஃப்ரெஷ் ஆயிடுவே. சாயந்திரம் நாம எல்லாரும் ரிசப்ஷனுக்கு போகணும். வாடா, எழுந்திருடா” என்று சொல்லியபடியே அவன் கையைப்பிடித்து இழுத்து எழுந்து நிற்க வைத்தாள் சரஸ்வதி.
ஒருவழியாக முகத்தை ‘உம்’ என்று வைத்துக் கொண்டு அம்மாவுடன் புவனேஷ் கீழே இறங்கி வந்தான். வந்தவன் சரஸ்வதி ஏதும் பேசுவதற்கு முன்பே விருட்டென்று அவன் அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டான். சரஸ்வதிக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ‘சரி, போய் தூக்கம் போடப் போறான் போலிருக்கு. ஒரு மணி நேரம் சென்று பாக்கலாம் ‘ என்று தனக்குள் பேசியபடி சமையலறைக்குள் சென்றாள்.
அடுத்த ஒண்ணேகால் மணி நேரத்தில் எளிமையான ஒரு மதிய உணவை தயார் செய்து விட்டு வெளிக்கூடத்திற்கு வந்து உட்கார்ந்தாள். பத்து நிமிடங்கள் கழித்து ‘ இந்த புவி என்னதான் பண்றான் இவ்வளவு நேரம், போய் பாப்போம் ‘ என்று சொல்லிக்கொண்டே அவன் அறைக்கதவை தட்ட
முற்பட்ட போது, கதவு தாளிடாமல் இருக்கிறது என்று அறிந்து, திறந்து சென்றவள் அதிர்ச்சி அடைந்தாள். புவனேஷ் எதையோ தேடி எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு வைத்திருந்தான். மீண்டும் அதே போல் மன அழுத்தம் உள்ள நபர் போல் ஜன்னலையே பார்த்தபடி கீழே அவன் தள்ளிவிட்டிருந்த தலையணை மீது உட்கார்ந்திருந்தான்.
“உனக்கென்னடா பைத்தியமா பிடிச்சிருக்கு? ஏண்டா இப்படி இன்னிக்கு இந்த மாதிரி நடந்துக்கறே? ஃப்ரெண்ட்ஸ்களுக்குள்ள ஏதாவது சண்டையாடா? உன்னை யாராவது ஏதாவது சொல்லிட்டானா, இன்சல்ட் பண்ணிட்டானா? எத்தனை மணிக்கு ராத்திரி வந்தேடா நீ? இனிமேல் கொண்டு சாவியை அங்கே வைக்க மாட்டேன். நீ லேட்டா வந்தா பெல் அடி. நான் வந்து திறக்கறேன். வாடா, சாப்பிட வாடா, குளிச்சிட்டீல்ல?” என்று அக்கறையுடனும், கோபத்துடனும் சரஸ்வதி சத்தம் போட்டாள்.
அப்போது வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. ” உங்கப்பா வந்துட்டார் போல இருக்கு. சீக்கிரமா எழுந்து எல்லாத்தையும் எடுத்து ஒழுங்கா அடுக்கி வச்சிட்டு சாப்பிட வாடா” என்று சொல்லிக்கொண்டே வெளிக்கதவை திறந்தாள்.
அங்கே பக்கத்து வீட்டு பெண் தேவகி நின்று கொண்டிருந்தாள். அவள் ஒரு நரம்பியல் நிபுணர். மருத்துவத்துறையில் நல்ல பெயர் எடுத்திருக்கிறாள். அவள் கணவன் பெயர் ஜானகிராம். அவனும் ஒரு மருத்துவர்.
சரஸ்வதி, உலகநாதன் இருவருக்கும் மிகவும் நல்ல நண்பர்கள். இருவரும் மருத்துவத்துறையில் இருப்பதால் பல விஷயங்களுக்கு உதாரணமாக ஏதேனும் கூரியர் வந்தால் வாங்கி வைத்துக் கொள்ள, மின் கட்டணம், தண்ணீர் கட்டணம் இவைகளின் அலகு கணக்கு எடுக்க வருபவர்களுக்கு உதவுவது போன்றவைகளுக்கு சரஸ்வதிதான். தேவகி வீட்டில் காவலாளி இருந்தாலும் சரஸ்வதியின் பார்வையில் அவைகள் நடக்கும்.
அதே போல் இவர்களின் உடல்நலக் குறைவுகள் ஏதேனும் தென்பட்டால் உடனே தேவகியும், ஜானகிராமும் சிகிச்சை அளிப்பார்கள். நிறைய முறை புவனேஷுக்கு சிறிய, பெரிய சிகிச்சைகள் செய்திருக்கிறார்கள்.
“வாங்க டாக்டர் தேவகி, உள்ளே வாங்க, நானே உங்களுக்கு கால் பண்லாம்னு இருந்தேன். நீங்களே வந்துட்டீங்க. ” என்று சரஸ்வதி வரவேற்றாள்.
“சரஸ்வதி, இப்ப நேரமே இல்லை. ரொம்ப அர்ஜண்ட்.நாங்க ரெண்டு பேரும் இன்னிக்கு ஈவினிங் ஃப்ளைட்ல மதுரை போய்ட்டு அங்கிருந்து கொடைக்கானல் போகறதா பிளான். ஐந்து நாளுக்கு இருக்க மாட்டோம்.
ரொம்ப நாள் கழிச்சு இது போல ரெண்டு பேருக்கும் இப்படி அமைஞ்சிருக்கு. அதனால் ரிலாக்ஸாக இருக்க விரும்பறோம். என் ஹஸ்பண்ட் ஃப்ரெண்ட் ஒரு டாக்குமெண்ட் நாளைக்கு கொண்டு வந்து தருவார். அதை உங்கள் வீட்டில் கொடுக்க சொல்லிருக்கோம். செக்யூரிட்டி கிட்ட சொல்லலாம். இவர்தான் இங்கேயே தரச் சொல்வோம்னு சொன்னார். அது என்னன்னு வந்தவுடன் சொல்றேன். நீங்க வாங்கி வச்சுக்கோங்க. இதை பர்சனலா சொல்லணும்னுதான் வந்தேன்.” என்று தேவகி சொல்லி முடித்தாள்.
“ஓகே.அது ஒரு பிரச்னையே இல்லை தேவகி. நான் உங்களை கூப்பிடணும்னு நினைச்சேன்னு சொன்னேன் இல்லையா, அதுக்கு காரணம் என்ன தெரியுமா, இந்த புவி இன்னிக்கு மார்னிங்லேர்ந்து ஒரு மாதிரியாவே இருக்கான். ஏதும் பேசாமல் பித்து பிடிச்சவன் போல் நடந்துக்கறான். கொஞ்சம் நீங்க பாத்துட்டு போறீங்களா? டைம் இருக்கா?” என்று சரஸ்வதி கெஞ்சிய குரலில் கேட்டாள்.
“நோ பிராப்லம். எங்க இருக்கான் புவனேஷ்? இருங்க, அதுக்கு முன்னாடி செக்யூரிட்டிக்கு ஃபோன் செய்து என்னோட ஸ்டெத்தாஸ்கோப்பை எடுத்து வரச் சொல்றேன்” என்று கூறி ஃபோன் செய்து விட்டு, புவனேஷ் எங்கே போய் வந்தான், தூங்கினானா, அதைப்பற்றி கேட்டாள் சரஸ்வதியிடம்.
இதயத்துடிப்புமானி வந்தவுடன் புவனேஷ் அறைக்குள் சென்று அவன் பிரமை பிடித்து போல் உட்கார்ந்திருந்ததைக் கண்டுவிட்டு ” ஏய் புவி, வாட்ஸ் ராங் வித் யூ? இப்ப உன்னை செக் பண்ணத்தான் நான் வந்திருக்கேன். எழுந்திரு” என்று தேவகி சொல்லி, புவனேஷ் சட்டென எழுந்து நின்று ” ஒண்ணுமில்லை டாக்டர். நல்லா இருக்கேன்” என்றான். ” டேய், அதை நான் சொல்லணும்டா” எனச்சொல்லி, அவனை மூச்சு இழுத்து விடச் சொல்லியும், விழிகள், நாக்கு இவைகளை பரிசோதனை செய்து விட்டு, ” சரஸ்வதி, ஐ திங்க் அவன் டயர்டா இருக்கான். வேற பிரச்னை இருக்கற மாதிரி எனக்கு தெரியல. நாடித்துடிப்பு, பிரஷர் இதெல்லாம் நார்மலா இருக்கு. ஒரு வைட்டமின் டேப்லெட் எழுதி தரேன். அதை ஐந்து நாட்கள் சாப்பிடட்டும். சரியாகிடுவான். மாதுளை, ஆப்பிள் ஜூஸ் கொடுங்க.கவலை வேண்டாம்” என்றாள் தேவகி. “இப்ப உங்க கிட்ட பேசினானே அதுதான் இன்னிக்கு காலைலேர்ந்து பேசின முதல் பேச்சு தேவகி” என்றாள் சரஸ்வதி.
தேவகி மாத்திரை எழுதிக்கொடுத்துவிட்டு வெளியே செல்லும் நேரம் உலகநாதன் உள்ளே வந்து கொண்டிருந்தவன் ” ஹலோ, டாக்டர்” என்று தேவகியை புன்னகையுடன் அழைத்தான். அவளும் பதிலுக்கு” ஹலோ” என்றாள். சரஸ்வதி அவளிடம்” தேவகி நீங்க போங்க, நான் அவர்கிட்ட சொல்லிக்கிறேன் ” எனச்சொல்லி வழியனுப்பினாள்.
உலகநாதன் உள்ளே வந்ததும் எல்லாவற்றையும் கூறினாள். அவனும் உடனே புவனேஷை போய் பார்த்து, அவன் பங்குக்கு கேள்விகள் கேட்டான். புவனேஷ் அதே போலவே இருந்தான். ” சரிடா, ஒண்ணும் சொல்ல வேண்டாம். என்னோட உட்கார்ந்து சாப்பிடு. அப்புறமா மாத்திரை வாங்கி வந்து தரேன். அதையும் எடுத்துக்கோ. நல்லா தூங்கு. சரியாகிடும்.வாடா” என்று கூறிவிட்டு” நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன் ” என்று அவன் அறைக்குள் சென்றான்.
“புவி, அடம் பிடிக்காமல் எழுந்து டைனிங் டேபிளுக்கு வந்துடுடா ” சரஸ்வதியும் அவள் பங்குக்கு புவனேஷிடம் கத்தி விட்டுப் போனாள்.
‘ப்ச், ப்ச், ச்சே, ஹூம் ‘ என்றெல்லாம் சொல்லி மண்டையை ஆட்டியபடி புவனேஷ் கோபத்துடனும், அலுப்புத்தட்டிய தோரணையில் சாப்பாட்டு மேசைக்கு வந்தான்.உலகநாதனும் வந்து உட்கார்ந்தான். சரஸ்வதி எல்லாவற்றையும் கொண்டு வந்து வைத்துவிட்டு ” சிம்பிள் சமையல்தாங்க. பீர்க்கங்காய் துவையல், தக்காளி ரசம், கோஸ் பொரியல். புவிக்கு ரொம்ப இஷ்டமான பொரியல்.” என்றாள்.” போதும் சரசு, இதுவே ஓகேதான்.டேய், புவி, வெஜிடபிள் எடுத்துக்கோடா, உனக்கு பிடிச்சது, சாப்பிட்டவுடன் மாத்திரை வாங்கி வரேன். அதை எடுத்துட்டு தூங்கு பேசாமல். அஞ்சு மணிக்கு கிளம்பணும். என்ன புரியுதாடா?” என பேசியவாறு, உலகநாதன் சாப்பிட ஆரம்பித்தான். “ம், ம்” என்று தலையை ஆட்டிவிட்டு புவனேஷும் சாப்பிடத் தொடங்கினான். சரஸ்வதியும் சாப்பிட அமர்ந்தாள்.
“இன்னும் கொஞ்சம் ரைஸ் போட்டுக்கடா, என்ன இவ்வளவு கொஞ்சமா எடுத்திருக்கே?” சரஸ்வதி செல்லமாகக் கடிந்து கொண்டாள்.
“ஓ, ஓ, யெஸ், அங்கதான் இருக்கும், கரெக்ட். எஸ். ஊஹூ, ஆஹா” என்று பெரிதாக கத்திக் கொண்டே புவனேஷ் ‘ தடக்’ என ரசம் சோறை பாதியில் வைத்துவிட்டு, அவசரமாக கையை கழுவிவிட்டு அவன் அறையை நோக்கி ஓடினான். ” ஏய், டேய் புவி, என்னடா சொல்றே, எது எங்கடா இருக்கு? கிறுக்கா, எங்கடா ஓடறே, ” என்ற உலகநாதனுக்கும்,” ஏதா இருந்தாலும் சாப்டுட்டு போடா, டேய் புவி” என்று கத்திய சரஸ்வதிக்கும்” இப்ப வரேன், ரெண்டே நிமிஷம், வந்து சொல்றேன் ” என்று பதில் தந்தபடி அறைக்குள் சென்று விட்டான். ” நீங்க சாப்பிடுங்க, நான் போய் பாக்குறேன்” என்று உலகநாதனிடம் சொல்லி விட்டு கையை தட்டில் உதறியவாறு எழுந்தாள் சரஸ்வதி. ” இல்லை சரசு, நான் போறேன். இதோ முடிச்சுட்டேன்” என்று உலகநாதன் சொல்லிவிட்டு தண்ணீர் குடித்து விட்டு எழுந்தான்.
அந்த நேரத்தில் ” கிடைச்சிடுச்சு, அப்பாடா, இப்பதான் நிம்மதி, இப்ப நல்லா பசிக்குது அம்மா. எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை அப்பா.ராத்திரி வந்து படுக்கையில் படுத்தேனா, அதுக்கு அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு புத்தகத்தை தேடி லாஃப்ட் ஷெல் ஃபில் பாத்துட்டு இருந்தேன். புக் கிடைச்சது. அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் படிச்சுட்டு, அப்படியே தூங்கிட்டேன். காலைல எழுந்திருச்சதும் மொபைலை தேடினேன். காணும். எங்க விட்டேன்னு நினைவுக்கு வரலை. ராத்திரி புக் தேடற நேரத்தில சைலண்ட்ல போட்டிருந்த மொபைலை லாஃப்ட் ஓரத்தில் வச்சுட்டு, புக் கிடைச்ச சந்தோஷத்தில இதை மறந்துட்டேன். நான் படுக்கற கட்டில் சட்டத்துக்கும் அந்த தலமாட்டு பலகைக்கும் நடுவில் ‘கேப்’ இருக்கறதுல விழுந்திடுச்சோன்னு தேடிப்பாத்து கிடைக்கலங்கறதை நினைச்சு ஒரே ‘அப்செட்’ ஆகிட்டேன். வீட்டுக்கு எடுத்துட்டு வந்த ஃபோனை எங்க போட்டேன்னு யோசிச்சிட்டே இருந்தேன். ஃபோன் இல்லாமல் ரொம்ப கவலையா போயிடுச்சு. மேல ஓரமா வச்சது ஞாபகம் வரலை. உங்க கிட்ட சொல்லி உங்களை குழப்ப விரும்பலை. இப்ப சாப்டுட்டே இருக்கும் போது திடீர்னு ஞாபகம் வந்தது. அதான் ஓடினேன் ” என்று ஒரே மூச்சில் சொல்லி புன்னகையுடன் கையிலிருந்த அலைபேசியை காட்டினான் புவனேஷ்.
“அடப்பாவி, ஏண்டா இதுக்காடா, இப்படி பித்து பிடிச்சது மாதிரி உட்கார்ந்து இருந்தே?உங்களை எல்லாம் என்ன செய்றது? ஒரு மொபைல் பக்கத்தில இல்லேன்னா சோறு, தண்ணிய விடு, அப்பன், ஆத்தாளையே மறந்துடுவீங்களாடா? என்னடா உலகம், உங்க உலகம்?” என்று அங்கலாய்ப்புடன் கூறி உலகநாதனைப் பார்த்து” ஏங்க, இது எந்த மாதிரியான வியாதிங்க? இதுக்கு என்னதான் மருந்து இருக்கு?” கேட்டாள்.
இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த உலகநாதன் “சரசு, இதுக்கெல்லாம் கவலைப்பட்டு உடம்பைக் கெடுத்துக்காதே. இன்னும் இந்த காலத்தில் என்னென்னவோ பாக்கப்போறோம். மருந்து கண்டு பிடிக்கறவனே திண்டாடிட்டு இருக்கான் இப்ப யங்ஸ்டருக்கு முளைக்கிற மனநல பாதிப்புக்கு மருந்து கண்டு பிடிக்க முடியாமல். டேய், புவனேஷ், நீ எதுவா இருந்தாலும் எங்க கிட்ட சொல்லிடு. உன் பிரச்னை தீர நாங்களும் ஹெல்ப் செய்வோம்டா. அதை விட்டு நீ மனசுக்குள்ளயே போட்டு நொந்து வீணாப்போகறதை இன்னியோட விடுடா. நல்ல வேளை, இப்பவே உனக்கு ஞாபகம் வந்ததே, நான் போய் மாத்திரை வாங்கி வந்து அது வேறு தெண்டச்செலவா இருந்திருக்கும். சரி மீதி சாப்பாட்டை சாப்பிட்டு தூங்கு ” என்று உலகநாதன் வாசல் பக்கம் சென்றான்.
“இந்த மாதிரி நடப்பதை எல்லாம் பார்த்து தைரியமா இருக்க நான்தான் விட்டமின் சாப்டணும். என்ன பிள்ளைகளோ, இதுக்கு மருந்தே இல்லை போடா” என்று சரஸ்வதி கூறி எழுந்தாள்.
மிகவும் அமைதியாகவும், எதுவும் நடக்காதது போன்றும் எண்ணி, தன் தட்டிலிருந்த உணவை ரசித்து உண்டு கொண்டிருந்தான் புவனேஷ். அவ்வப்போது மொபைல் மீது பார்வைகளை ஓட்டினான்.
அவனை நோட்டம் விட்ட சரஸ்வதி மீண்டும் ‘ இதுக்கு மருந்து உண்டா’ என்று தனக்குள் பேசிக்கொண்டாள்.
Classic 😀