அம்மா, அவன், அவள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 26, 2025
பார்வையிட்டோர்: 5,741 
 
 

அம்மா

மாலதியின் மனம் சந்தோஷத்திற்கும், எதிர்காலம் பற்றிய சஞ்சலத்திற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்தது.

கணவர் சுந்தரராமன் ஆசைப்படி, மகனைக் கல்லூரியில் படிக்க வைத்ததில் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியவில்லை என்ற மனக்குறை சுந்தரராமனுக்கு உண்டு. அதனால், தன்னுடைய மகனாவது நன்றாகப் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்பது அவரது வாழ்க்கையின் லட்சியமாக இருந்தது.

பள்ளியிறுதி வரை படித்த சுந்தரராமன், தனியார் கம்பெனியில் வேலையில் இருந்தார். மகன் கார்த்திக் பள்ளி செல்ல ஆரம்பித்த சமயம் புற்று நோயால் காலமானார். அவர் இறந்த பின்பு, அவருடைய அலுவலகத்திலிருந்து கிடைத்த வைப்புத் தொகை, கருணைத் தொகை தவிர சேமிப்பு ஒன்றுமில்லை.

எட்டாம் வகுப்பு வரை படித்த மாலதிக்கு அலுவலக வேலை கிடைப்பது எளிதாக இல்லை. பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் நெருங்கிய சொந்தங்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு ஒருவரும் இல்லை. கணவர் ஆசைப்பட்டது போல மகனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற மனஉறுதி அவளிடம் இருந்தது.

தனக்குத் தெரிந்த சமையற் கலையில் முழு மூச்சுடன் இறங்கினாள் மாலதி. திருவல்லிக்கேணியில் ஒண்டுக் குடித்தனத்தில் மகனுடன் வசித்து வந்தாள். திருவல்லிக்கேணியில் விடுதிகளில் தங்கி சென்னை நகரில் வேலை செய்பவர்கள் அதிகம். அவர்களுக்காக காலைச் சிற்றுண்டி, மதிய உணவு, இரவு சிற்றுண்டி செய்து கொடுக்க ஆரம்பித்தாள். விடுதியில் தங்கி வேலை செய்பவர்களுக்கு மாலதியின் சமையல், வீட்டுச் சாப்பாடு போல சுவையாகத் தோன்றியது.

சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் முறுக்கு, சுண்டல் செய்து கடற்கரை, மற்றும் கோவில் அருகில் விற்று வருவாள். இந்த நாட்களில் கார்த்திக், மற்றும் அவன் நண்பர்களில் சிலர் உதவிக்கு வருவதுண்டு. அருகிலுள்ள ஹோட்டல்களுக்கு இனிப்பு, கார வகைகள், பொடி வகைகள், ஊறுகாய் தயாரித்து விற்று வந்தாள். மனதில் மகனின் படிப்பு என்ற லட்சியத்துடன் ஓய்வில்லாமல் பம்பரமாக இயங்கி வந்தாள் மாலதி.

கார்த்திக் படிப்பில் கெட்டிக்காரன். பள்ளியில் எப்போதும் முதலிடம். தன்னுடைய குடும்ப நிலையை உணர்ந்த அவன் எதையும் வேண்டுமென்று கேட்டு அடம் பிடிக்க மாட்டான். பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால் அவனுக்கு மேல்படிப்பு படிக்க உதவித் தொகை கிடைத்தது. பொறியியல் முடித்து, கல்லூரி மூலமாக அவனுக்கு மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

கணவரின் விருப்பப்படி, கார்த்திக் நன்கு படித்து நல்ல வேலையில் அமர்வதில் மாலதிக்கு மட்டற்ற மகழ்ச்சி. ஆனால், இந்த மகிழ்ச்சியுடன் எதிர் காலத்தைப் பற்றிய கவலை அவள் மனதை அரிக்க ஆரம்பித்தது.

அவளுடைய கவலைக்கு மூல காரணம் சௌம்யா, கார்த்திக்கின் காதலி. கல்லூரியில் தொடங்கிய அவர்கள் நட்பு, தீவிர காதலாக வளர்ந்து, கல்யாண சத்திரத்தின் வாயிலை தட்டிக் கொண்டிருக்கிறது. சௌம்யா, பணக்கார வீட்டுப் பெண். சிறிய வயதிலேயே அவர்கள் அமெரிக்காவில் குடியேறி விட்டார்கள். கல்லூரிப் படிப்பிற்காகத்தான் சென்னை வந்தாள் சௌம்யா.

சௌம்யாவின் பெற்றோர் கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால், சௌம்யா அமெரிக்கா குடியுரிமை பெற்றவள் என்பதால் கார்த்திக் நிரந்தரமாக அமெரிக்கா வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். சிறு வயதிலிருந்தே கார்த்திக் பல நாடுகள் பார்க்க வேண்டும் என்ற அவனுடைய ஆசையை சொல்வது வழக்கம். பணக்காரப் பெண்ணான சௌம்யாவை மணம் புரிந்தால் அவன் ஆசை நிச்சயம் நிறைவேறும். ஆனால், மாலதியின் நிலை என்னவாகும்? இந்தக் கேள்விக்கு மாலதிக்கு விடை தெரியவில்லை.

மேலை நாடு போவதாக இருந்தாலும், கார்த்திக் அம்மாவின் வளமான வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்து விட்டுச் செல்வான் என்ற நம்பிக்கை மாலதிக்கு உண்டு. இனி அடுப்படியில் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய நிலை வராது என்று மாலதிக்குத் தெரியும்.

ஆனால், வாழ்வின் ஒரே பிடிப்பாக இருக்கும் மகனை விட்டுத் தனிமையில் வாழ்வது சாத்தியமா? நினைப்பதே கடினமாக இருக்கிறது மாலதிக்கு. எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை என்று சொல்வது சுயநலம் இல்லையா? அது கார்த்திக்கின் முன்னேற்றத்தை பாதிக்காதா? சௌம்யாவை விரும்பும் அவன் மனம் உடைந்து போக மாட்டானா? சிறு வயதிலிருந்தே மனதின் ஆசையைக் கட்டுபடுத்தி “இது எனக்கு வேண்டும்” என்று கேட்காத கார்த்திக்கின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்பது சரியா? தாயே மகனின் வாழ்க்கையை சிதைப்பதா?

மாலதியால் ஒரு முடிவிற்கும் வர முடியவில்லை.

அவன்

கார்த்திக்கின் மனமும் திரிசங்கு சொர்க்கமாக இருந்தது. எந்த முடிவை எடுத்தாலும், அந்த முடிவு ஒருவருக்கு ஏமாற்றமாக இருக்கும். அதே சமயம் கார்த்திக்கையும் பாதிக்கும்.

“மகனின் முன்னேற்றம் வாழ்க்கையின் லட்சியம்” என்று வாழ்ந்த அம்மாவைத் தனிமையில் விட்டு உல்லாச வாழ்க்கைத் தேடிச் செல்வது சரியா? நிச்சயமாக ஊர் தூற்றும்.

சௌம்யா நல்ல பெண். செல்வச் செழிப்பில் வளர்ந்ததனால், வறுமையைப் பற்றி அவளுக்குத் தெரியவில்லை. என்னுடைய படிப்பிற்காக அம்மா பட்ட கஷ்டங்களைப் பற்றி அவள் அறிய மாட்டாள். அம்மா, சில மாதங்கள் அமெரிக்காவில் வந்து தங்கலாம் என்று கூறும் சௌம்யா, அம்மா நிரந்தரமாக தங்களுடன் தங்குவதை ஒத்துக் கொள்ள மறுக்கிறாள். இது மேலை நாட்டின் வாழ்க்கை முறைக்கு எதிரானது என்பது அவளுடைய வாதம்.

சென்னையிலேயே ஒரு வசதி படைத்த முதியோர் இல்லத்தில் அம்மாவை சேர்த்து விடலாம் என்பது அவளுடைய கருத்து. “அம்மா ஒரு வேலையும் செய்ய வேண்டிய தேவையில்லை. நன்கு கவனித்துக் கொள்ள டாக்டர்கள், உதவி செய்ய சிப்பந்திகள், நல்ல ஆரோக்கியமான உணவு, ஆன்மீகத் தேவைக்கான வசதிகள் இருக்கும். கார்த்திக் அம்மாவைப் பற்றிய கவலைப் பட வேண்டிய தேவை இருக்காது முதியோர் இல்லம் என்று சொல்வதை விட இந்த இல்லங்களை “மற்றவர் உதவியுடன் வாழும் வசதி” என்று சொல்லலாம். இதில் என்ன தவறு? இதற்கு நீ ஏன் தயக்கம் காட்டுகிறாய்” என்பது சௌமியாவின் கேள்வி.

சௌமியா இதைச் சொல்லும் போது கார்த்திக் அவனுடைய சிறுவயதில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை நினைவு கூர்ந்தான்.

அம்மாவுடன் ஒரு முறை தூரத்து உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தான். வசதி படைத்த அவர்கள், வீட்டில் ஒரு கிளிக் கூண்டும், அதில் அழகிய பஞ்ச வர்ணக் கிளியையும்

பார்த்தான். கிளியின் அருகில் வெள்ளிக் கிண்ணத்தில் பாலும், பழமும். இதைப் போலவே நம் வீட்டிலும் கிளி வளர்க்க வேண்டும் என்று அவன் மனதில் தோன்றியது.

கார்த்திக்கின் உள்ளக் கிடக்கையை அறிந்த அம்மா சொன்னாள். “கார்த்திக் உனக்கு கிளி வளர்ப்பது ஆனந்தமாக இருக்கலாம். ஆனால், கிளியின் நிலையிலிருந்து சிந்தித்துப் பார். என்னதான் பாலும், பழமும் கொடுத்தாலும், கிளி இருப்பது தங்கத்தால் செய்யப்பட்ட கூண்டாகவே இருந்தாலும், அதற்குள் கிளி அடைபட்டுக் கிடக்கிறதே தவிர சுதந்திரமாக இல்லையே. பறந்து திரிய வேண்டிய கிளியை, குற்றவாளி போல கூண்டு என்ற சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.” அம்மாவின் கருத்து சரியென்று தோன்றியது அவனுக்கு.

கிளியைக் கூண்டில் அடைப்பது சிறைத் தண்டனை என்று நினைக்கும் அம்மா, முதியோர் இல்லத்தில் வசிப்பதும் சிறை என்று நினைக்கலாம் அல்லவா? அவனுக்காகவே வாழ்ந்த என்னை சிறையில் தள்ளிவிட்டான் என்று அந்த மனது பாடு படாதா?

காதலா?, காதலித்தவளைக் கைப்பிடிப்பதன் மூலம் அடையப் போகும் வளமான வாழ்க்கையா? அல்லது தந்தை இல்லை என்ற ஏக்கம் மனதில் எழாத வண்ணம் வளர்த்து, படிக்க வைத்த அம்மாவின் பாசமா? அவனால் ஒரு முடிவிற்கும் வர முடியவில்லை.

அவள்

சௌமியாவும் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவிற்கு வர முடியாமல் தவித்தாள். “கார்த்திக், ஏன் யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் உணர்ச்சி பூர்வமாகச் சிந்திக்கிறான்? அம்மா என்பது புனித உறவு, மதிக்கக்கூடிய உறவு, அதற்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், வாலிபனாக வளர்ந்து வேலையில் அமர்ந்த பிறகும், அம்மாவின் புடவைத் தலைப்பை பிடித்துக் கொண்டு செல்லுவது சாத்தியமா? இந்தியாவில் ஒத்து வரலாம். ஆனால், அமெரிக்காவில்?

ஆணோ, பெண்ணோ படித்து வேலையில் அமர்ந்தவுடன் அவரவர் வழியில் செல்வது தான் மேலை நாட்டு வாழ்க்கை முறை. கல்யாண விஷயத்திலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர்க்கு ஏற்ற துணையைத் தேட பூரண உரிமையுண்டு.”

“அப்பாவின் வயதான தாய் மற்றும் தந்தையர் முதியோர் இல்லத்தில் வசிக்கின்றனர். மகனுடன் கூட வசிப்பதில்லை. அதைப் போலவே மணமானவுடன் நானும் என் கணவரும் தனியாகத் தான் வசிப்போம். அப்பா, அம்மாவுடன் வசிக்க மாட்டோம். அப்படியிருக்கையில், என்னுடைய அம்மா நம்முடன் இருக்க வேண்டும் என்று கார்த்திக் சொல்வது எப்படி சாத்தியமாகும்? கூட இருப்பது நடைமுறைக்கு ஒத்து வராது என்று கூறினால், கார்த்திக்கின் அம்மா மீது எனக்கு அன்பும், மரியாதையும் இல்லை என்று அர்த்தம் செய்து கொள்வது தவறல்லவா?”

“நாம் இருக்கும் இடத்திற்கேற்ப வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டாமா? படித்தவனான கார்த்திக், ஏன் இப்படி வளைந்து கொடுக்கும் தன்மை இல்லாமல் இருக்கிறான்?” இவை சௌமியா மனதின் எண்ண ஓட்டங்கள்.

கார்த்திக்கை மனமாற காதலித்த சௌம்யா, வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறிய அவனுடைய மன உறுதியை மெச்சினாள். அவன் முன்னேற்றத்தில் அவனுடைய அம்மாவிற்கு பெரும் பங்கு உள்ளது என்பதையும் அவள் மறுக்கவில்லை. அவனுடைய குடும்ப சூழல் பற்றியோ, வளர்ந்த விதம் பற்றியோ அவள் கவலைப்பட்டதில்லை.

இந்தியா பிடித்திருந்தாலும், கார்த்திக்கை மணந்து இந்தியாவில் நிரந்தரமாகத் தங்குவதை அவள் விரும்பவில்லை. மேலை நாட்டின் வேகமான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்ட சௌமியா, இந்திய வாழ்க்கை முறைக்கு முற்றிலுமாக மாற்றிக் கொள்வது கடினம் என்று

கருதினாள். அதைப் போல இந்திய வாழ்க்கை முறையில் பழகிய கார்த்திக் தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது எளிதல்ல என்று அவளுக்குப் புரிந்தது. அம்மாவை தனிமையில் விடுத்து அமெரிக்கா வருவதற்கு கார்த்திக் உடன்பட மாட்டான் என்று தோன்றியது அவளுக்கு.

காதலித்தவனுடன் கல்யாணமா? அல்லது வசதியான அமெரிக்க வாழ்க்கையா? எதை தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்யும் நிலைக்கு சௌம்யா தள்ளப்பட்டாள்.

அவன், அவள்

“கார்த்திக், உன்னுடைய முடிவுதான் என்ன?” என்று கேட்டாள் சௌம்யா.

“என்னை மன்னிச்சிடு சௌம்யா. அம்மாவைத் தனியா இந்தியாவில விட்டு என்னால அமெரிக்கா வர முடியாது. வயதான காலத்தில அம்மாவை காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு இருக்கு. நம்முடைய கல்யாணத்தைப் பற்றிய முடிவு உன்னுடைய கையிலதான் இருக்கு.” என்றான் கார்த்திக்.

“உனக்காக எதுவும் செய்வேன் அப்படின்னு சொன்னது வெறும் வாய் வார்த்தை தானா? உனக்குத் தெரியும் என்னால இந்த வாழ்க்கைக்கு மாத்திக்கிறது கடினம். என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு உனக்கு விருப்பமில்லை அப்படிங்கிறதை நீ நாசுக்கா சொல்லிட்டே” என்றாள் சௌம்யா விழியின் ஓரத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி.

“என்னுடைய அம்மாவிற்கு அப்புறம் என்னுடைய மனதளவில் நெருங்கினவள் நீ மட்டும் தான். ஆனால் காதல், கடமை இரண்டையும் பார்க்கும் போது என்னுடைய மனதில கடமை முக்கியமாத் தெரியுது. அப்பாவை சிறு வயதில இழந்த போது ஆதரவா என்னோட கையைப் பிடிச்சிக்கிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு ஆதரவா அவங்க கையை பிடிக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு.”

“உன்னுடைய அழகிற்கும், அறிவிற்கும் உனக்கு என்னை விட பொருத்தமான துணை கிடைக்கும். ஆனால், அம்மாவிற்கு நான் மட்டும் தான் துணை. நாம் நல்ல நண்பர்களாகப் பிரிவோம்” என்றான் கார்த்திக்.

கனத்த இதயத்துடன் கார்த்திக், சௌம்யா அவரவர் பாதையில் சென்றனர்.

அம்மா, அவன்

தன்னுடைய முடிவிற்கு அம்மாவின் சம்மதம் பெறுவது கடினமாக இருந்தது. முதியோர் இல்லத்தில் இருப்பதாகவும், கார்த்திக், சௌம்யாவை மணந்து அமெரிக்கா செல்ல வேண்டும் என்று அம்மா கூறினாள். நீண்ட விவாதத்திற்குப் பின் அம்மா, கார்த்திக் செய்கையை ஒத்துக் கொண்டாள். “நீ, திருமணமே செய்து கொள்ளப் போவதில்லையா” என்று கேட்டாள்.

“சிறிய வயதில் தரையில் ஓடும் பொம்மைக் கார் வேண்டுமென்று கேட்டேன். நம்முடைய வீட்டில் குண்டும் குழியுமாக இருப்பதால் சரியாக வராது என்று சொல்லி ஓடாத கார் வாங்கிக் கொடுத்தாய். நானும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டேன். நம்முடைய வாழ்க்கை முறைக்கு ஏற்ற பெண்ணை நீயே தேர்ந்தெடு. மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்” என்றான் கார்த்திக்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *