அப்புசாமி கலந்துகொண்ட க்விஸ்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 4, 2025
பார்வையிட்டோர்: 6,450 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பணத்தை மூர்மார்க்கெட் கடைக்காரரிடம் கொடுத்து விட்டு அங்கேயே புத்தகத்தைப் பிரித்து அப்புசாமி படிக்கத் தொடங்கிவிட்டார். பூகோளம், சரித்திரம், ஸயன்ஸ், ஸ்போர்ட்ஸ் என்று தலைப்புகள் வாரியாகப் பிரித்துப் போட்டுக் கேள்வி பதில்களைக் கொடுத்திருந்த முறை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. நடுநடுவே படங்கள் வேறு. 

‘சூடானின் தலைநகரம் கார்ட்டூம். நார்வேயின் தலைநகரம் ஆஸ்லோ… பிங்க் ஸிடி ஆஃப் இந்தியா ஜெய்ப்பூர்…சரி, போதும் ஜியாக்ரபி. இப்ப ஹிஸ்டரி பார்ப்போமா… ஹிஸ்டரி உடன் கட்டை ஏறுதல் எந்த வருஷம் நிறுத்தப்பட்டது? ஆயிரத்து எட்டு நூத்து இருபத்தொன்பது. பேஷ். அப்பவே நிறுத்திட்டாங்களா? நிறுத்தாம இருந்திருக்கலாம்… நாட்டிலே இவ்வளவு கெழவிங்க தொல்லை இல்லாம லிருந்திருக்கும் சரி… அதைப்பத்தி நமக்கென்ன… உடன் கட்டை ஏர்றது நிறுத்தனது ஆயிரத்தெட்டு நூற்று இருபத்தொன்பது…’ 

ஒரு வாரத்துக்கு முன் சீதாப்பாட்டிக்கு டி. வி. நிலையத்திலிருந்து ஓர் அழைப்பு வந்திருந்தது – க்விஸ் புரோக்ராம் ஒன்றை நடத்த வேண்டுமென்று. 

அப்புசாமிக்குத் தனக்கு வரும் கடிதங்களைப் பிரிப்பதை விட மனைவிக்கு வரும் கடிதங்களைப் பிரிப்பதில் ஓர் அலாதி ஆவல். ஆவல் மட்டுமல்ல. சந்தோஷ சமாசாரமாயிருந்தால் சீதாப்பாட்டி அவருக்கு பக்ஷஸ் தருவதுகூட உண்டு. 

“ஹை! சீதே! டி. வியில் க்விஸ் நடத்தப் போறியாமே? லெட்டர் பார்த்தேன். ஹி ஹி! நான்கூடப் பதில் சொல்றேன் சீதே. என்னையும் சேர்த்துக்கோ அம்மாடி!” என்று செல்லம் கொஞ்சியவாறு முன்கூட்டியே விண்ணப் பித்தார். சீதாப்பாட்டி அலட்சிய சிரிப்புடன், “மை குட்னஸ்! க்விஸ் ப்ரோக்ராமில் பார்ட்டிஸிபேட் பண்ண உங்களுக்கு அவ்வளவு போதாதே. ஜெனரல் நாலட்ஜில் நீங்க ரொம்ப வீக். இந்தியாவுக்குக் காபிடல் கேட்டால்கூட கெக்கேபிக்கே என்று முழிப்பீங்க. சீதாராமன் பையனுக்கு நீங்க, ஜியாக்ரபி டீச் பண்ணின லட்சணம் தெரியாதா எனக்கு?” என்பது போலப் பேசிவிட்டாள். 

“சீதே! ஒரு காலத்தில் நான் முட்டாளாயிருந்தால் எப்பவும் முட்டாள்னு சொல்லலாமா? டி.வி.யிலே வரணும்னு எனக்கு எவ்வளவு ஆசை தெரியுமா?” 

சீதாப்பாட்டி அவரைச் சமாளிப்பதற்காக, “அப்படி யானால் யூ டு ஒன் திங். இன்னும் ஒன் வீக் டைம் உங்களுக்குத் தர்றேன் அதற்குள் உங்க ஜெனரல் நாலெட்ஜை இம்ப்ரூவ் பண்ணிக்கணும்,” என்றாள். 

அப்புசாமி மூர்மார்க்கெட்டில் அறிவுப் பசி எடுத்து ஆலாய்ப் பறந்ததற்கு இதுதான் காரணம். 

“அப்போ நான் போய்விட்டு வர்ரேன்…டேக் கேர் ஆஃப்த ஹௌஸ். டி. வி. யில் ஞாபகமாகப் பாருங்க… தூங்கிடாதீர்கள்.” 

சீதாப்பாட்டி கிளம்பினாள். புடவைத் தலைப்பில் ஏதோ மாட்டிக் கொண்டு இழுத்தது. 

“சீதே!” என்றார் அப்புசாமி கெஞ்சலாக. “நான் கேள்வி நல்லாப் படிச்சிருக்கேன் சீதே.. என்ன வேணும்னாக் கேளு. கார்ட்டூம் தலைநகரம் சூடான்… ஆஸ்லோ தலைநகரம் நார்வே.. பிங்க் ஸிடி என்கிறது பெங்களூர்…மொரப்பூர். பெரம்பூர்.. பித்தாப்பூர். எத்தாப்பூர்… ஊஹூம் ஆ! ஜெய்ப்பூர்!” 

சீதாப்பாட்டி காரில் ஏறிக்கொண்டாள். 

“நீங்களும் ஏறிக்குங்க… ஐ மீன்… உங்களைத்தான் யு ஆர் ஆல்ஸோ கமிங்… ஏறிக்குங்க…” 

அப்புசாமிக்கு நம்பமுடியவில்லை. “சீதே! நீ மனித தெய்வி! பத்தினித் தங்கம், பத்தினி வைரம்! பத்தினி பிளாடினம்!” 

“ஒன் கண்டிஷன்,” என்றாள் சீதாப்பாட்டி. 

“கண்டிஷனா?” 

“அங்கே டி. வி. ஸ்டேஷனிலே விசிட்டர்ஸ் காலரியில் வேணும்னா நீங்க உட்காரலாம். பதில் சொல்றவங்களுடன் உங்களை உட்கார்த்தி வைக்கிறது நாட் ப்ராப்பர். அபத்தமா ஆக்வர்டா ஏதாவது உளறி வைப்பீர்கள்” 

“சீதே!” அப்புசாமி பல்லைக் கடித்துக்கொண்டார். ஆனால் முறைத்துக் கொண்டால் உள்ளதும் போய்விடப் போகிறது என்று சம்மதித்தார். 

டி. வி. ஸ்டேஷனிலிருந்த மேக் அப் பெண்மணி சீதாப்பாட்டியை வேறு எந்த விஷயத்துக்கு இல்லா விட்டாலும் பளிச்சென்று இருந்த அந்தக் கறுப்புப் புட்டாப் புடவைக்காக மிகவும் பாராட்டினாள். ஆனால் காமெரா அறைக்கு வந்த பிறகு அங்கிருந்த காமெராமேன் ஒரு சிறு ஆட்சேபம் தெரிவித்தார். பாட்டியின் காதுகளில் போட்டிருந்த வைரக்கம்மல் அதிகமான ஜொலிப்பு வீசிக் கொண்டிருந்ததால் படப்பதிவுக்கு இடையூறாக இருக்கும் என்று தெரிவித்தார். சாதாரண சிவப்பு பிளாஸ்டிக் தோடுகளைப் போட்டுக் கொள்ளும்படி வேண்டிக் கொண்டார். சீதாப்பாட்டி, “ஸாரி ஃபர்த இன்கன்வீனி யன்ஸ்… எனக்கு இது ஸ்டிரைக் ஆகாமல் போய்விட்டது,” என்று வைரத் தோடுகளைக் கழற்றி அப்புசாமியிடம் கொடுத்துவிட்டு மேக்கப் பெண் தந்த பிளாஸ்டிக் தோடுகளை அணிந்து கொண்டாள். 

க்விஸ் நிகழ்ச்சி சிறிது நேரத்தில் துவங்கியது. 

உற்சாகமாக எல்லோரும் அளித்த பதில், இடை டையே சீதாப்பாட்டியின் நயமான நகைச்சுவை, சிரித்துக் கொண்ட சிரிப்பு, கையில் பேப்பர் எதுவும் இல்லாமல் அனாயாசமாகக் கேள்வி கேட்ட மிடுக்கு, மைக்கை வைத்துக் கொணடு உஷா உதுப் மாதிரி இப்படியும் அப்படியும் சென்ற லாவகம் வை யெல்லாம்கூட அப்புசாமிக்கு எரிச்சலைத் தரவில்லை. 

அவருக்கு ஆத்திரமூட்டியெதல்லாம் தனக்கு ரொம்ப ரொம்பத் தெரிந்த கேள்விகள் தன்னிடம் சிலவற்றைக்கூடச் சீதே கேட்காமல் யாரையோ கேட்கிறாளே அநியாயமாய் என்பதுதான். 

“ஆக்ரா கோட்டையைக் கட்டியவர் யார்?” என்று சீதாப்பாட்டி ஒரு கிராஜுவேட் பெண்ணைக் கேட்க ஆரம்பித்ததுதான் தாமதம். விஸிட்டர்ஸ் காலரியின் உச்சியிலிருந்து அப்புசாமி,” எனக்குத் தெரியும்! எனக்குத் தெரியும்! அக்பர்! அக்பர்! அக்பர்!” என்று கத்திவிட்டார். 

சீதாப்பாட்டி எரிச்சலை அடக்கிக் கொண்டு, “தட் ஓல்ட் ஜென்டில் மேன் இஸ் ஹண்ட்ரட் பர்செண்ட் கரெக்ட்… தோ ஐ டிட் நாட் புட் இட் டு ஹிம்…” சமாளித் தாள். ஆனாலும் கண்கள் அப்புசாமிக்கு ரகசியமாக ‘கார்ட்டர் கட்டுப்பாடு போன்ற சமிக்ஞையை நாசூக்காகத் தெரிவித்தது. 

ஒரு வழியாகக் கேள்விகள் முடிந்தன. “நௌ ஜென்டில் மென்… லாஸ்ட் பார்ட் ஆஃப் ப்ரொக்ராம்…” என்ற சீதாப்பாட்டி, “உங்களில் யாராவது ஒரு திறமைசாலி முன் வரமுடியுமா?” என்று வேண்டுகோள் விடுத்தாள். “உங்கள் ஜாக்கிரதை உணர்ச்சிக்கும் ஞாபக சக்திக்குமாகச் சேர்த்து ஒரு சோதனை. ஹெல்ப் மி. கமான்.” 

இரண்டொருவர் கை தூக்கினார். ஆனால் சீதாப் பாட்டி அவர்களில் யாரையும் கூப்பிடவில்லை. நோ. நோ… ஐம் ஆம் கோயிங் டு செலக்ட் ஸம்படி இன் விஸிட்டர்ஸ் காலரி! தட் குட் ஓல்ட் மேன்… தயவு செய்து நீங்கள் வருகிறீர்களா?” 

அப்புசாமிக்குக் காதுகளை நம்பமுடியவில்லை. சிரிப்பும் மகிழ்ச்சியுமாக வந்தார். 

சீதாப்பாட்டி காரியத்தில் இறங்கினாள். சோதனையை விவரித்தாள். 

“இதோ பார்த்தீங்களா… இங்கே ஒரு பம்ப்கின்… பூசணிக்காய். இதை மேஜைக்குக் கீழே தரையில் வைத்திருக்கிறேன். இந்த ஜெண்டில்மேனின் கண்ணைக் கட்டி விடுவேன். இவர் மேஜையை மூன்று தரம் சுற்றிவர வேண்டும்…ஆனால் பூசணிக்காய் மீது கால்பட்டுவிடக் கூடாது…” 

அப்புசாமி பெருமிதமாகக் கண்ணைக் கட்டிக் கொண்டார். ஜாக்கிரதையாக, அதி ஜாக்கிரதையாக மேஜையைச் சுற்றத் தொடங்கினார். ஏன் எல்லாரும் ஹ ஹஹ என்று சிரிக்கிறார்கள்? எதற்கோ சிரிக்கட்டும்… நமக்குப் பந்தயம்தான் முக்கியம்… ஜாக்கிரதையாகக் காலை அகல எடுத்து வைத்துச் சுற்றினார். பிறகு கண்கட்டைத் தானே அவிழ்த்துக்கொண்டு பார்த்தார்… 

சீதாப்பாட்டியின் கையில் பூசணிக்காய்! இவ்வளவு நேரமும் அவர் வெறும் தரையிலேயே பூசணிக்காய் இருப்பது போல் மடையன் மாதிரி சுற்றியிருக்கிறார்! 

ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்தது. கூட்டம் முடிந்த பின்னும்கூட அவரைப் பார்த்து எல்லோருமே கேலி செய்வது போலிருந்தது. 

சீதாப்பாட்டி “யூ என்ஜாய்ட் இட்?” என்று நொந்த புண்ணில் வேல் ஏற்றுவதுபோல் கேட்டாள். 

மேக்கப் பெண்மணி வந்து சீதாப்பாட்டியின் காதி லிருந்த பிளாஸ்டிக் தோடுகளை வாங்கிக் கொண்டாள். சீதாப்பாட்டி கழற்றிக் கொடுத்துவிட்டு, அப்புசாமியிடம், என் தோட்டை எடுங்கள்,” என்றாள், 

அப்புசாமி ஜிப்பாப் பையைத் தடவினார். அதிலே ஒரு பெரிய ஓட்டை மூன்று விரல் இந்தப்பக்கம் வந்தது. 

“சீதே!” என்றார். 

“மை காட்! வாட் ஹாப்பண்ட்?” 

“ஐயோ சீதே! இங்கேதானே… அந்த ஜிப்பாவில் தானே … ஒருகால் க்விஸ் நடந்த இடத்திலே விழுந்து விட்டதோ… ஐயோ…நான் என்ன பண்ணுவேன்… 

அப்புசாமி விசாரம் பிடித்து நாற்காலியில் இடிந்து உட்கார்ந்துவிட்டார். 

“ப்ளூ ஜாகர் வைரம்! பத்தாயிரம் பெறுமே! சீதே! நான் தொலைச்சிட்டேனே.. பழுத்த சுமங்கிலியாப் போட்டுண்டு நல்லா இருந்தியே… இப்படித் தோட்டைத் தொலைத்துவிட்டு வெறும் தொளையோடு இருக்கியே… சீதே…” 

ஸ்டுடியோ பூராவும் வைரத்தோட்டைத் தேடியாயிற்று. ஸ்டேஷன் டைரக்டருக்கும் என்னவோ மாதிரி ஆகிவிட்டது. 

சீதாப்பாட்டி, வெளியில், “பரவாயில்லை.. டஸ்ன்ட் மாட்டர்.” என்று சொன்னாலும் உள்ளுக்குள் உற்சாகமாக க்விஸ் நிகழ்ச்சியை நடத்தின மகிழ்ச்சியெல்லாம் போய் விட்டமாதிரி இருந்தது. ராத்திரி சாப்பிடக்கூட இல்லை. 

எப்பேர்ப்பட்ட தோடு. அதனுடைய பேக்ரவுண்ட் எப்படிப்பட்டது… அது வந்த அதிர்ஷ்ட வேளை என்ன…

பன்னிரண்டு மணியே அடித்துவிட்டது. தூக்கம் வரவில்லை. 

“சீதே!” என்ற கொஞ்சும் குரல் அவளைத் தூக்கி வாரிப்போட்டது. 

அப்புசாமி! அவர் கையில் பளபளவென்று அவளுடைய தோடுகள். 

சீதாப்பாட்டி சீறினாள். 

“மை குட்னஸ்! உங்க மடியிலேயே வைத்துக் கொண்டா இத்தனை ரகளை பண்ணி, எனக்கு இவ்வளவு மனக் கஷ்டம் கொடுத்து…” 

“ஹிஹி! என்னை மேஜையை அனாவசியமாகச் சுற்ற வைத்து வேடிக்கை பார்த்தாய் அல்லவா? நான் உன்னைச் சுற்ற வைத்து வேடிக்கை பார்த்துவிட்டேன்?” அப்புசாமி கொக்கரித்தார். 

– அப்புசாமியும் பாரதி நாற்காலியும், முதற் பதிப்பு: 1999, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *