அப்பாவின் அசராத நம்பிக்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2024
பார்வையிட்டோர்: 8,825 
 
 

“நான் வசு என்கிற வசுதாரிணி பேசறேன். கல்யாணம் ஆகி மும்பையில் இருப்பவள். இந்த கல்யாணம் நடந்த விதமே ஒரு அதிசயம் மாதிரிதான். சில நம்பிக்கைகள் வீண் போறதில்லை அப்டீங்கற அனுபவம் தந்தது நேக்கு. எப்படின்னு கீழே கதையா சொல்லிருக்கேன் பாருங்கோ”.


“அம்மா, வசு, நான் கோயிலுக்கு போய் கர்ப்பக்கிரகம் சுத்தம் பண்றது, விளக்குகளை தயார் பண்றதெல்லாம் பாத்துண்டிருக்கேன், நீ பூமாலை, உதிரிப்பூ, துளசி எல்லாத்தையும் எடுத்துண்டு அரைமணிநேரம் கழிச்சு வந்தா போறும். இந்த பித்தளை குடத்தை நன்னா புளிபோட்டு தேச்சு அலம்பி தீர்த்தம் எடுத்துண்டு வா. தீர்த்த வட்டில், தாம்பாளம் எல்லாம் தேச்சிருக்கா? நான் எடுத்துண்டு போறேன். ” என் அப்பா நாராயண பட்டாச்சார்யார் சொன்ன வார்த்தைகள் இவை.

“சரிப்பா, வட்டில், தாம்பாளம் எல்லாம் அங்கே சின்ன பெஞ்சு மேலே வச்சிருக்கேன். நான் அப்புறமா இதையெல்லாம் எடுத்துண்டு வர்றேன். நீங்க பாத்து போங்கோ. வட்டில் எல்லாம் கூட நானே கொண்டு வருவேனே, உங்களுக்கு எதுக்கு சிரமம்?” என்றேன்.

“பெருமாள் காரியம் செய்யறதிலே என்னம்மா சிரமம் வந்துடப்போறது? அப்படியே வந்தாலும் அந்த மாலோலன் என் அப்பன் நரசிம்மன் பாத்துப்பான். நீயும் அதையே செய். சின்ன சொம்பாலே கிணத்துலேர்ந்து ஜலம் எடுத்து வட்டிலுக்கு வச்சுப்பேன். சரி, நான் கிளம்பறேன்.நாழி ஆயிடுத்து. இன்னிக்கு உத்திராபதி பிள்ளை அர்ச்சனை பண்ணணும்னு சொல்லிருக்கார். குடும்பத்தோட வந்துடுவா எல்லாரும். நீ மத்ததெல்லாத்தையும் எடுத்துண்டு வா. பிரசாதம் வேற மடப்பள்ளியில் தயார் பண்ணணும்.” என்று சொல்லிண்டே அப்பா படியிறங்கி நரசிம்மர் கோயில் நோக்கி நடந்தார். “சரிப்பா” என்று சொல்லி நான் பூ தொடுக்க ஆரம்பித்தேன்.

எங்க ஊர் பெயர் மஞ்சளூர். கிராமமும் இல்லை, நகரமும் இல்லை. ஒரு சுமாரான, ஆனால் பெரும்பாலான வசதிகள் உள்ள நடுத்தர நான்காம் வரிசையில் நிக்கற ஊர் எனலாம். நான் பள்ளிப்படிப்பை இங்கே முடிச்சுட்டு, இங்கிருந்து தினமும் திருச்சிக்கு போய் காலேஜ் படிப்பையும், தொலைக்கல்வி மூலம் எம்.பி.ஏ படிப்பையும் முடிச்சேன். வேலை தேடிண்டிருக்கும் நேரத்தில், எழுபத்தைந்து வயதான அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போயிடுத்து.

சாதாரண தலைவலி என்று படுத்தவர், மறுநாள் ஜுரம் அதிகமாகி, மூச்சு விட கஷ்டப்பட்டு திணறும் நிலைக்கு போய் விட்டார். ஒருவாரம் சிகிச்சைக்கு அப்புறமா அப்பா பழையநிலைக்கு வந்தார். அந்த பத்து நாளில் அப்பாவுக்கு தன் உடம்பை பத்தி கவலை இல்லாமல், கோவிலைப்பத்தியும், பெருமாள் பத்தியும் தான் கவலை இருந்தது.

என் அம்மா ருக்மணி. வயது எழுபது. அப்பாவும், அம்மாவும் ரொம்பவும் ஏழ்மையான குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்தவா. ரெண்டு பேருக்கும் லேட்டாதான் கல்யாணம் நடந்தது. கல்யாணம் ஆகி முதல்லே பிறந்த குழந்தைகள் எல்லாம் தங்காம போய் கடைசியா அவாளோட ஆறாவது கல்யாண வருஷத்தில நான் பொறந்தேன். அவாளுக்கு எல்லாமே நான்தான். ரெண்டு பேரும் என்னை பையன் மாதிரியும் பொண்ணு மாதிரியும் எல்லாத்தையும் கத்து கொடுத்து வளத்திருக்கா. மாட்டு வண்டியும் ஓட்டுவேன். காரும் ட்ரைவ் பண்ணுவேன். கிணத்துலேர்ந்து தண்ணீர் இறைக்கவும் செய்வேன். கம்ப்யூட்டர் ஆப்பரேட்டும் பண்ணுவேன். கோயில் பூஜை ஸ்லோகங்களை நன்னா சொல்வேன். கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர், டி.எம்.எஸ்,எஸ்.பி.பி, சுசீலா, ஈஸ்வரி இவாளோட பாட்டும் பாடுவேன். மடிசாரும் கட்டிப் பேன்.ஜீன்ஸும் போடுவேன்.

அம்மாவோட பிறந்த ஊர் மருதானூர்.இங்கேர்ந்து தெற்கே அம்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமம். அக்காலத்து பதினொண்ணாம் வகுப்பு வரை படிச்சு, பாட்டு கிளாஸ், தையல் கிளாஸ் இதெல்லாம் சேர்ந்து திறமையான பெண்மணியா உருவானவள். அய்யங்கார் சமையல் அத்துப்படி. ஒவ்வொரு பட்சணமும் அம்மா செய்றது அருமை.

இதுக்கெல்லாம் இடையே, ஆத்து வேலைகளை மிகவும் சுறுசுறுப்பாக செய்துடுவா. எனக்கு நிறைய விஷயத்தில் அம்மா ஒரு நல்ல வழிகாட்டி. அழுது புலம்பும் வழக்கம் அம்மாவுக்கு பிடிக்காது. ‘ ஏதாயிருந்தாலும், தைரியமா எதிர்கொள்ளணும்டீ, குழம்பாம ஒரு நிமிஷம் அமைதியா இருந்து முடிவெடுக்கணும் பிரச்சினைகள் வரும்போது’ இப்படியெல்லாம் அட்வைஸ் பண்ணுவாள். அப்பாவோட அடுத்த தேவை, கேள்வி என்னவா இருக்கும், அவர் என்ன எதிர்பார்ப்பார், என்பதை அம்மா மிகத் தெளிவாக புரிஞ்சுப்பா. அழகழகா கோவில்ல கோலங்கள் போடுவா.நான் வேலை தேடும் படலம் ஆரம்பிக்கும்போதும் அதை தயங்காமல் ‘என்கரேஜ்’ பண்ணாள். ஆனால் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனதும் ‘நீ இங்கேயே இருடி, எங்களுக்கு ஒத்தாசையாக, ஏதாவது ஆத்தில் இருந்தபடி செய்யலாமான்னு ‘ட்ரை’ பண்ணு’ அப்படின்னு சொல்லிவிட்டாள். அப்புறம் என்ன, இங்கேயே இருந்துட்டேன். இப்போ அப்பாவைப்பத்தி சொல்லிடறேன்.

வீரராகவன் அய்யங்கார், என் தாத்தாவுக்கு மூணு பிள்ளைகள். வேதாந்தம், கிருஷ்ணன், நாராயணன். மூணுபேரும் ஸ்கூல் படிக்கும்வயதிலயே பாட்டி வஞ்சுளவல்லி இறந்து விட்டாள். வேதாந்தம், கிருஷ்ணன், என்னுடைய பெரியப்பாக்கள் படிப்பில என்னிக்கும் முதல். அப்பவே காலேஜ் படிப்பெல்லாம் படிச்சு மும்பை, டில்லி போய் பெரிய வேலைலே அமர்ந்து நல்ல செல்வ வாழ்க்கை அமைச்சுண்டுட்டா. அவாளோட வாரிசுகள் இப்போ வெளிநாடுகளில் வசதியாக இருக்காங்க.

என்னோட ஒன்று விட்ட சகோதர,சகோதரிகளே என்றாலும் எப்பவாவதுதான் நான் பார்த்திருக்கேன். ஏதாவது கல்யாணத்தில் இல்லைன்னா அவா இந்த பக்கம் கோவிலுக்கெல்லாம் வரும்போது இப்படித்தான் பரிச்சயம்.

அதில் ஒரு சகோதரன் சௌரிராஜன் இந்த கிராமத்துக்கு அடிக்கடி வருபவர். இங்கே இருக்கும் நரசிம்மர் கோவில் மேல் ரொம்ப இஷ்டம். நரசிம்மர் பக்தர். பூனாவில் சொந்தமாக எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை விற்கும் ‘ரீடெயில் ஸ்டோர் ‘ வைத்திருப்பவர். அப்படித்தான் ரெண்டு வருஷம் முன்னாடி வந்தவர் எனக்கு ஒரு ‘லேப்டாப்’ வாங்கிண்டு வந்தார். அதுக்கப்புறம் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்த போது பார்க்க வந்தார். ஆத்துலே இருந்துண்டே ‘அமேஸான்’ மூலம் எப்படி எல்லாம் பிஸினஸ் சின்னதா பண்ணலாம்னு எனக்கு ‘ஐடியா’ கொடுத்தார். எனக்கு இருக்கற ஈடுபாடு, புத்தி சாதுரியம் இதையெல்லாம் பயன்படுத்திக்கோன்னு சொன்னார்

சரி, இப்போ, எங்க அப்பா படிப்பு விஷயம் என்னன்னு சொல்லிடறேன். அதுக்கு முன்னால் என் தாத்தா வீரராகவன் அய்யங்கார் பத்தி கொஞ்சம் சொல்லியாகணும். அவர் மூன்று வேதங்களையும் சரளமாக கற்றவர். எல்லா ஹோமங்கள், சம்பிரதாயங்கள், பெருமாள் கோவில் புனருத்தாரணம் எல்லாம் நன்றாக செய்பவர். அவைகளை செய்துண்டு, கிராமத்தில் அவருக்கு சொந்தமான ரெண்டு ஏக்கர் நிலத்தையும், ஆத்துக்கு பின்னாடி உள்ள தோட்டத்தையும் பராமரிச்சுண்டு, நரசிம்மர் கோவில் கைங்கர்யங்களையும் நிறைவா செஞ்சுண்டு வாழ்ந்தவர். இங்கே இருந்த பெரிய பண்ணைக்காரா எல்லாரும் முக்கியமான அவா குடும்ப விஷயங்களுக்கு தாத்தாவோட அட்வைஸ் கேக்க வந்துண்டே இருப்பா. நான் சின்ன வயசுலே நிறைய பாத்துருக்கேன்.

என் அப்பா நாராயணன் அவர்களுக்கு படிப்பு சுமார்தான் அப்படின்னு தெரிஞ்சதும் “நாராயணா, உனக்கு இந்த படிப்பு எதுவரைக்கும் முடியறதோ அதுவரை படிச்சுட்டு,என்னோட வேதம் கிளாஸுக்கு வந்து வேதங்கள் படிக்க முயற்சி செஞ்சு பாருடா, உனக்கு திருப்தியா இருந்தா அதையே தொடர்ந்து படி.நம்ப ஊரு நரசிம்மர் பெருமாளுக்கு எனக்கப்புறம் நீ கைங்கர்யம்

செய்துண்டு இரு.தோட்டம், நிலத்தையும் பாத்துண்டு ஊரோடு இருந்துக்கலாம். யோசிச்சு சொல்லுடா” என்றவரிடம் என் அப்பா “பதினொண்ணாம் கிளாஸ் பாஸ் பண்ணிடறேன் எப்படியாவது, அதுக்கப்புறம் நீங்க சொல்ற அந்த வேதங்களிலதான் என் மனசு லயிச்சிருக்கு அப்பா “என்று சொல்லி, அப்பா இந்த ஊரில் ‘ செட்டில்’ ஆகிட்டார். பெருமாளோட நண்பன் கிட்ட பேசற மாதிரி பேசுவார். அபார நம்பிக்கை நரசிம்மர் மீது. போகப்போக எதுக்கெடுத்தாலும் பெருமாள் பேரைச் சொல்லி தியானம் பண்ணிண்டே இருக்கற அளவுக்கு மாறிட்டார். எங்க எல்லாரையும் ஒரு நாளைக்கு பத்து தடவையாவது நரசிம்மர் ஸ்லோகத்தை படிக்க சொல்வார்.

இந்த பெருமாள் கோவில் மஞ்சளூரில் முன்னூறு வருடங்களுக்கு முன்னால் இருந்த பெரிய பண்ணையார் வேதமூர்த்தி அய்யர் காலத்தில் அவர்கள் குடும்பத்தாரால் கட்டப்பட்டு அதற்கப்புறம் அவர் பையன் ராமமூர்த்தி அய்யர் நிர்வாகம் செய்து, பின்னால் நரசிம்ம அய்யர் கவனித்துக் கொண்டிருந்தார். அவருக்கு பிறந்த வாரிசுகள் ஜெயராமன், கணேசன் இருவரும் பெரிய படிப்பெல்லாம் படிச்சு வடக்கில் ‘செட்டில்’ ஆக கிளம்பும்போது அப்பாவிடம் எல்லா பொறுப்பையும் ஒப்படைச்சுட்டா. அப்பா அவ்வளவு சீக்கிரம் அதுக்கெல்லாம் சம்மதிக்கலே. இந்த ஊர்ல இருக்கிற இன்னொரு பெரிய குடும்பத்தில் வந்த வாரிசு உத்திராபதி பிள்ளை அப்பாவிடம் ” அய்யா, நானும் அந்த பெருமாள் பக்தன். நீங்க ஆன்மீக விஷயங்கள் எல்லாத்தையும் பாத்துக்கங்க. நான் மத்த நிர்வாக வேலைகளை கவனிச்சுக்கறேன். வரவு, செலவு பண விவகாரங்களுக்கு என் ‘ரைஸ்மில்லில்’ இருக்கும் மேனேஜரை நியமிச்சுடறேன்.உங்களை விடத் தகுதியானவர் இந்த பெருமாள் கோவிலை கவனிச்சுக்க ஆள் யாரும் இல்லை.” அப்படின்னு சொல்லி அப்பாவை சம்மதிக்க வச்சார். இதெல்லாம் எனக்கு அப்பா, அம்மா, உத்திராபதி பிள்ளை இவர்கள் எல்லாம் சொல்லி தெரிந்தவைகள்.

அப்பாவுக்கு உடல் நலக்குறைவு வந்ததுக்கப்புறம் வேலை தேடாமல் இருந்தேன் இல்லையா? அதுக்கு நாலு வருஷம் முன்னாடி ‘ நிலத்தையெல்லாம் பாத்துக்க எனக்கு தெம்பில்லை, பிள்ளைவாள் நீங்க குத்தகைக்கு எடுத்துண்டு வருஷா வருஷம் சாப்பாட்டுக்கு நெல் கொடுத்துடுங்கோ.’ அப்படீன்னு சொல்லி உத்திராபதி பிள்ளையிடம் எழுத்து மூலம் தந்துட்டார் அப்பா.அவரும், அவர் மகன் கார்த்திகேயனும் முறை தவறாமல் இன்னிக்கு வரை செய்றா.

நான் கோவில் வேலைல அப்பாவுக்கு உதவியாக இருந்துண்டே வேற ஏதாவது செஞ்சு கொஞ்சம் சம்பாதிக்கலாம்னு நினைச்சேன். மஞ்சளூரில் பெரிய ஹை ஸ்கூல் இருக்கு. இருபது கிலோமீட்டர் தூரத்தில் காலேஜும்

இருக்கு.ஆனால் மாணவர்கள் ஏதாவது பாட சம்மந்தமான விஷயங்கள் பிரிண்ட் எடுக்கவோ, ஜெராக்ஸ் எடுக்கவோ வசதி இல்லை. இங்கேருந்து ரெண்டு கிலோமீட்டர் தூரத்தில் ஏதோவொரு சின்ன கடைதான் இருந்தது. இங்கே இருக்கற நிறைய பேருக்கு ‘பேங்க்’ ‘ போஸ்ட் ஆஃபீஸ் ‘ சம்பந்தமா லெட்டர் எழுதறதுக்கு, மனு எழுத்துக்கு, ஈமெயில் அனுப்பறதுக்கெல்லாம் கூட நாம் உதவியா இருக்கலாம்னு நினைச்சு இந்த திட்டத்தை என் ‘கஸின் பிரதர் ‘ சௌரிராஜன் கிட்டே சொன்னேன். அவர் அடுத்த மாதமே இங்கே வந்து ஒரு வாரம் தங்கி அதுக்கெல்லாம் உதவி பண்ணிட்டார்.அவருடைய தெரிஞ்ச ‘காண்டாக்ட்’ மூலம் ஒரு ‘பேங்க் லோனுக்கும்’ ஏற்பாடு செஞ்சு, நான் அதுக்கு வேண்டியவைகளை வாங்கி வியாபாரத்தையும் தொடங்கி நடத்தி வந்ததை ஒரு நாள் இருந்து பாத்துட்டுதான் ஊருக்கு போனார்.

இது நடந்து அஞ்சு வருஷம் ஆயிடுத்து. கடனை யெல்லாம் அடைச்சுட்டேன். ரெண்டு வருஷம் முன்னாடி சிறுதானியங்கள்ல செய்ற நொறுக்கு தீனிகளுக்கு ஏஜென்சி எடுத்து அதுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. வயசு முப்பது தொட்டுடுத்து. ஆத்துலே சும்மா இருப்பாளா, கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணி மூணு வருஷங்கள் ஆயிடுத்து. ஒண்ணும் சரியா அமையலே. நான் கவலைப்படலே. ஆனால் அப்பாவும், அம்மாவும் இதைப்பத்தி பேசிப்பேசி மன சங்கடத்தோடவே இருக்கா ரெண்டு வருஷமா.நான் குடும்ப செலவை பாத்துண்டு கொஞ்சம் கொஞ்சமா சேமிச்சுண்டு வர்றேன். திடீர்னு மராமத்து செலவு, மோட்டார் ரிப்பேர் செலவு, இப்படி ஏதாவது வரும். நான்தான் சமாளிப்பேன். ஆனால் அப்பாவும், அம்மாவும் ‘ நீ உன் கல்யாண செலவுக்கு சேத்து வச்சுக்கோடி குழந்தே, நாங்க பாத்துக்கறோம்’ அப்படிம்பா. நான் சிரிச்சுண்டே, ‘ இன்னிக்கு உங்களுக்கு செய்ற உதவிலதான் என் மனசு சந்தோஷப்படும். கல்யாணம் வரன் எல்லாம் அமையறப்போ பாக்கலாம். நீங்க சொல்ற அந்த பெருமாள் பாத்துக்க மாட்டாரா,என்ன’ அப்படீன்னு கேப்பேன். ரெண்டு பேரும் அமைதியாயிடுவா.

நாளைக்கு ‘ நரசிம்ம ஜெயந்தி ‘ வரப்போறது. அதை இந்த வருஷம் நன்னா கொண்டாடணும்னு அப்பாவும் மத்த சில ஊர் பெரிய மனுஷாளும் முடிவு பண்ணி வசூல் பண்ணிண்டிருக்கா. ஆனால் அவா எதிர்பார்த்த தொகை சேரலே. கொரோனாவுக்கப்புறம் இப்போதான் எல்லாரும் மெதுவா ‘நார்மல்’ நிலைக்கு வந்துண்டிருக்கறதாலே, பணப்புழக்கம் குறைஞ்சுடுத்து. முந்தி ஐநூறு கொடுத்த மனுஷாளெல்லாம் இப்போ இருநூறுதான் கொடுக்கற நிலையில் இருக்கா. அப்பாவுக்கு கவலையும், மனக்கஷ்டமும் தாங்கலை. ராத்திரி சாப்பாடு முடிஞ்சதும் அம்மாகிட்ட வருத்தப்பட்டு சொல்லிண்டிருப்பார். ‘கவலைப்படாதீங்கோ, என்னோட சங்கிலி, வசுவுக்கு

கல்யாணத்துக்கு வாங்கின வளையல்கள் இதெல்லாம் இருக்கு. அடகு வச்சிட்டு பணம் ஏற்பாடு பண்ணிக்கலாம் ‘ அப்படீன்னு அம்மா சொல்லுவா.

அப்பாவுக்கு அது இன்னும் கஷ்டமாயிடும். ‘ சீச்சி, குழந்தை நகையெல்லாத்தையும் தொடக்கூடாதுடீ, உன்னோட நகையை வாங்கிண்டு போறதே பாவம். பாக்கலாம். நரசிம்மன் கிட்டே சொல்லிருக்கேன். இந்த வருஷம் நன்னா ஜெயந்தி நடக்கவும், என் குழந்தைக்கு கல்யாணம் ஆகவும் நீ பொறுப்பை எடுத்துக்கோ, உன்னை நம்பி விடறேன் அப்படீன்னு.அவன் நிச்சயமா ஏதாவது செய்வான்’ இப்படி சொல்லிண்டே தினமும் தூங்கப்போவார்.

அப்பா சொன்னபடி மாலை, உதிரிப்பூக்கள், துளசி, பிரசாதம் கொடுக்க தொன்னை எல்லாத்தையும் எடுத்துண்டு நரசிம்ம பெருமாள் கோவிலுக்குள் நுழைஞ்சேன். உத்திராபதி பிள்ளை, அவர் மனைவி கனகம்மாள், மகன் கார்த்திகேயன், பேரக்குழந்தைகள் எல்லோரும் உட்கார்ந்திருந்தா. ” வாம்மா, வசு, நல்லா இருக்கியா? அம்மா வரலையா? எப்படி இருக்காங்க?” கனகம்மாள் கேட்டார். ” நான் இதை எல்லாம் எடுத்துண்டு முன்னாடி வந்துட்டேன். அம்மா சுண்டல் பிரசாதம் எடுத்துண்டு வருவா. விளக்குக்கெல்லாம் திரி போட்டு ரெடியா வைக்கணும்னு நான் முன்னாடி வந்துட்டேன்” நான் சொன்னேன்.

அப்பா மடப்பள்ளியில் ராமனுடன் பேசிக்கொண்டே புளியோதரை பிரசாதம் தயார் பண்ணிண்டிருந்தார். ராமன் அப்பாவுக்கு மடப்பள்ளியில் உதவி செய்ய வருபவர். அம்பத்தைந்து வயதான பிரம்மச்சாரி. ” அப்பா, மாலை, துளசி எல்லாத்தையும் தாம்பாளத்தில் வச்சிருக்கேன். விளக்குக்கு திரியெல்லாம் போட்டுட்டேன். வெத்திலை, பாக்கு, பழம் எல்லாம் எடுத்து வச்சுட்டேன். ராமன் மாமா, நன்னா இருக்கேனா, ” நான் கேட்டேன். “ரொம்ப நன்னா இருக்கேன் வசு, நீ எப்படி இருக்கே” ராமன் கேட்டார். “சூப்பரா இருக்கேன்” என்றேன்.

அப்போது அம்மா சுண்டல் எடுத்துண்டு வந்தாள். அப்புறம் அப்பா திருமஞ்சனம், பூஜை, அர்ச்சனைகள் எல்லாத்தையும் முடிச்சுட்டு, வந்தவாளுக்கெல்லாம் தொன்னையை விநியோகம் செய்யச் சொன்னார். பிரசாதம் எல்லாருக்கும் கொடுத்தோம். கூட்டம் கலைந்து போயிண்டு இருந்தது. அப்போது உத்திராபதி அப்பாவிடம் “அய்யா, வசூல் ரொம்ப கம்மியாத்தான் இருக்குதுன்னு மேனேஜர் சொன்னார். நிறைய பத்திரிகை கொடுத்துட்டோம். எப்படியும் ஒரு ஐயாயிரம் பேராவது வருவாங்கன்னு நினைக்கிறோம். இன்னும் ஒரு இருபதாயிரம் நான் தர்றேன். நல்லபடியா எல்லாம் நடத்திட முடியுமா? உங்க கணக்குப்படி இன்னும் எவ்வளவு இருந்தா நல்லா செய்யலாம் அய்யா? ஏன்னா மூணு வருஷத்துக்கு அப்புறம்

இப்போதான் பெருசா செஞ்சுடலாம்னு நினைச்சோம். உங்க யோசனை என்ன?” அப்டின்னு சொன்னார்.

” பிள்ளைவாள், வர்ற ஆச்சார்யாளுக்கு தனி மரியாதை செய்யணும். பெருமாளுக்கும் தாயாருக்கும் ஏதாவது சின்ன அளவிலயாவது தங்க அணிகலன் ஒண்ணு போடணும். குறைஞ்ச பட்சம் ரெண்டு பிரசாதம், சுண்டல், பானகம், நீர்மோர் இதெல்லாம் தாராளமா செஞ்சு விநியோகிக்கணும். இதைத்தவிர அன்னதானம் ஏற்பாடு, மேள வாத்தியங்கள், பல்லக்கு தூக்கறவாளுக்கு மரியாதை இந்த செலவெல்லாம் இருக்கு. என் உத்தேசப்படி இன்னும் அறுபது எழுபது ரூபாய் வேண்டிருக்கும்னு நினைக்கிறேன். அவர் கிட்ட சொல்லிட்டேன். அவர் நடத்திப்பார் பாருங்கோ. உங்களால் முடிஞ்ச எக்ஸ்ட்ரா தொகைய கொடுங்கோ. பாக்கலாம். ஏதாவது ஒண்ணு குறைச்சுக்க வழி இருக்கான்னு யோசிப்போம். ” அப்பா நம்பிக்கையோடு பேசிண்டே என்னைக் காட்டி “இதோ, இவளோட கல்யாண விஷயத்தையும் அவரண்டயே விட்டுட்டேன். ” உணர்ச்சி வசப்பட்டு பேச்சை நிறுத்தினார்.

” கவலைப்படாதீங்க அய்யா, இன்னும் முப்பதாயிரம் வரை நான் பணம் ஏற்பாடு பண்றேன்.நடத்திடலாம். அதே போல வசுவுக்கு நிச்சயம் இந்த மாசமே கல்யாணம் ஆகிடும் பாருங்க. உங்க பக்திக்கு பெருமாள் நிச்சயமா செவி சாய்ப்பார் பாருங்க.” என்றவர் கோவில் வாசலில் யாரோ புதுசா ஒருத்தர் வேகமா வர்றதை பாத்துட்டு அவரைப் பார்க்கப் போனார்.

வந்த நபர் “அய்யா முதலில் பெருமாளை வேண்டி வழிபட்டு அப்புறமா பேசறேன். ரொம்ப அழகான நரசிம்மர், தாயார் சந்நிதி. பார்த்தவுடன் என் மனசு அமைதியாகிடுச்சு” என்றார். அப்பா அவருக்காக, பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி காட்டி, சடாரி, தீர்த்தம், துளசியையும், தொன்னையில் பிரசாதங்களையும் கொடுத்தார்.

அந்த நபர் பிரசாதம் சாப்பிட்டு முடிச்சு பேச ஆரம்பிச்சார். “அய்யா, நான் கல்யாணராமன். என் முதலாளி ராஜகோபாலன் அவர்களுக்கு கார் ஓட்றவன். அவர் பெரிய தொழிலதிபர். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃபேக்டரி கர்நாடகாவில இருக்கு. ஆனால் வருஷா வருஷம் இங்கேருந்து அறுபது கிலோ மீட்டர் துரத்தில இருக்கற மங்களக்குளம் கிராமத்து நரசிம்மர் கோவிலுக்கு நரசிம்ம ஜெயந்தி இல்லேன்னா புரட்டாசி சிரவணம் இந்த நாள்ல வருவோம். அவர் மூதாதையர்கள் வழிபட்ட கோவில் அது அப்படீன்னு அவரு தனியாவோ சிலசமயங்களில் குடும்பத்தோடயோ வருவாங்க. இந்த ஊர் வழியாத்தான் போவோம். இப்போ அவரும், அவர் பையன் வைபவ் இவங்களோட வரும்போது காலைலே கார் ரிப்பேர் ஆயிடுச்சு. சின்ன ரிப்பேர்தான்னு நினைச்சு பக்கத்து டவுன்ல இருந்த மெக்கானிக் வந்து பாத்தப்புறம்தான்

தெரிஞ்சுது, உள்ளே ஒரு ஸ்பேர் மாத்தினாதான் வண்டி சரியாகும்னு. பூனா இல்லே பெங்களூர்லேர்ந்துதான் ஸ்பேர் பார்ட் வரணும்.அது வரைக்கும் அவங்க ‘டோ’ பண்ணி திருச்சிக்கு எடுத்துட்டு போய்டுவாங்க, வேற வண்டி ஏற்பாடு செய்திருக்கோம். அது இன்னிக்கு சாயந்திரம்தான் வரும். என் முதலாளியும், அவர் மகனும் நரசிம்ம ஜெயந்திக்கு போக முடியாதே, வேண்டியதை தயார் செய்றதுக்கு லேட்டாயிடுமேன்னு கவலையோடு பேசிட்டிருந்தப்போ, அங்கே இருந்த ஒருத்தர் இந்த கோவில் பத்தியும், நாளைக்கு நரசிம்மர் ஜெயந்தி ஏற்பாடு செய்றதையும் சொன்னாரு. உடனே என்னை இங்க அனுப்பி அவங்களே செலவை ஏத்துக்கறோம், ஊர் மக்கள் ஒப்புதலோடு இதை செய்ய அனுமதிப்பாங்களான்னு கேட்டு வர சொன்னாரு.” மூச்சு விடாம சொல்லி முடிச்சுட்டு கல்யாணராமன், பேச்சை நிறுத்தி அப்பாவையும், உத்திராபதி பிள்ளையையும், பாத்து பதிலுக்காக காத்துண்டிருந்தார்.

அப்பா ஒரு தடவை பெருமாளைப்பாத்து கைகூப்பிட்டு, ” கல்யாணராமா,அவாளை கவலைப்படவேண்டாம்னு சொல்லி நம்மாத்துக்கு அழைச்சிண்டு வா. இப்போ எங்க இருக்கா அவா ரெண்டு பேரும்?” அப்படீன்னு கேட்டார். ” ரோட்டு முனையில் இருக்காங்க. சர்பத் கடைகிட்ட” கல்யாணராமன் சொல்ல, பிள்ளை சொன்னார்,”நான் என் வண்டியை அனுப்பறேன். நீ போய் அவங்களை கோவிலுக்கே அழைச்சிட்டு வந்துடு. அவங்களும் சாமி தரிசனம் செஞ்சுடட்டும், நாம் பேசிக்கலாம்” அப்டீன்னார். கார்த்திகேயன் வண்டியை எடுத்துண்டு கல்யாணராமனோடு போய் அவாளை கோவிலுக்கு அழைச்சுண்டு வந்தார்.

பெரிய தனவானாக இருந்தாலும் ரொம்ப சிம்பிளாத்தான் இருந்தார் ராஜகோபாலன். அவர் பையன் வைபவ், நன்னா ஸ்மார்ட்டா, சிரிச்ச முகமா இருந்தார். வந்தவர்கள் பெருமாளை சேவிச்சா. சடாரி, தீர்த்தம், துளசி, பிரசாதம் இதெல்லாம் ஆனவுடனே, பேச ஆரம்பிச்சார் ராஜகோபாலன். ” இவ்வளவு வருஷமா இந்த ஊர் வழியா போயிருக்கேன். இப்படி ஒரு அழகான அம்சத்தோட அமைஞ்சிருக்கற பெருமாள் கோவில் பத்தி இன்னிக்குதான் தெரிய வந்திருக்கு.அதான், நேரம்கிறது. நீங்க என்ன எஸ்டிமேஷன் போட்டிருக்கேள், எவ்வளவு வேண்டும் சொல்லுங்கோ, நான் தர்றேன். இருந்து எல்லாத்தையும் நடத்திட்டு நாங்க ரெண்டு பேரும் ஊருக்கு போறோம். ஒரு நாளைக்கு தங்கறதுக்கு மட்டும் ஏதாவது முடிஞ்ச அளவில் ஏற்பாடு பண்ணா நன்னா இருக்கும் ” அப்டீன்னார். ” அய்யா, நாங்க கொஞ்சம் வசூல் பண்ணிருக்கோம். பத்தாக்குறையா எழுபதாயிரம் வரை இருக்கும் போல இருக்கு. நீங்க முடிஞ்சதை கொடுத்தீங்கன்னா, நாங்க மீதியை போட்டு நல்லா நடத்திடலாம். அப்புறம் நீங்க நம்ம நாராயண பட்டாச்சார்யார் வீட்லயே

தங்கிக்கலாம். வசதியா இருக்கும். ” பிள்ளை இப்படி சொல்லிட்டு அவர் குடும்பத்தை, என் அம்மாவை, என்னை அவாளுக்கு அறிமுகப்படுத்தி விட்டார். வைபவ் ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா என்னை திரும்பி பாத்து புன்னகைச்சுண்டு இருந்தார்.” நீங்க வசூல் பண்ணதெல்லாம் கோவில் சேமிப்புல வச்சுக்கோங்கோ, நான் உங்க பட்ஜெட்டுக்கு உண்டான மொத்த பணத்தையும் தந்துடறேன். ஜெயந்தியை நன்னா நடத்திடுங்கோ. அன்னதானத்துக்கெல்லாம், இன்னும் வேணும்னாலும் கேளுங்கோ, தர்றோம்.” இப்படி ராஜகோபாலன் சொன்னதைக்கேட்டு, அப்பா ஆனந்தக் கண்ணீர் விட்டார். பிறகு உத்திராபதி பிள்ளை அவர்கள்” ரொம்ப நல்லது அய்யா. நான் சாயந்திரமா பட்டாச்சார்யார் வீட்டுக்கு வந்து உங்களை சந்திக்கிறேன். இப்ப கிளம்பறேன். நீங்களும் போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க. இந்த ஊர் பத்தி எல்லாம் உங்களுக்கு வசு சொல்லுவா, அம்மா நல்லா கவனிச்சுக்கோ இவங்களை, உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லே” இப்படி சொல்லிண்டே கிளம்பினார்.

புது மனுஷாளை நாங்க, எங்காத்துக்கு அழைச்சிண்டு வந்தோம். ” இடம் ரொம்ப நன்னா இருக்கும்மா, நீ என்ன பண்றே, என்ன படிச்சிருக்கே” ராஜகோபாலன் கேட்க, நான் எல்லாத்தையும் விவரமா சொல்லிண்டு இருக்கும்போது, உன்னிப்பா கவனிச்சிண்டிருந்தார் வைபவ். அப்பப்போ என்னை பாராட்டிண்டு இருந்தார். அம்மா காபி கொண்டு வந்து கொடுத்தார். ” சூப்பரா இருக்கு” ன்னா. “அப்பா கோவில்லேர்ந்து பன்னண்டு மணிக்கு வருவா. நீங்க இந்த ரூம்ல ரெஸ்ட் எடுத்துக்கோங்கோ. நான் என் கடைக்கு போய்ட்டு வரேன். நாளைக்கு கோவில் வேலைகள் இருக்கும்,அதனால இன்னிக்கு பிஸினஸை கெடுத்துக்கப்படாது ” நான் சொன்னேன். “சூப்பர், இப்படித்தான் பிஸினஸ்ல ஃபோகஸ்டா இருக்கணும். ஐ அப்ரிஷியேட்” ” வைபவ் உற்சாகத்துடன் சொன்னார்.

மறுநாள், மிகவும் தடபுடலா நடந்தது நரசிம்ம ஜெயந்தி. எல்லாரும் ஆச்சரியப்படற அளவில் உத்திராபதி பிள்ளை, இன்னும் ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து முதல் நாளே நன்னா ஏற்பாடு பண்ணிட்டா. வேண்டிய செலவுக்கு பணம் வைபவ் கொடுத்துண்டே இருந்தார். ராத்திரியே அன்னதானம் தயாரிப்புக்கு சமையல்காரா எல்லாரும் வந்து சிறப்பா ஆகாரம் எல்லாம் பண்ணிருந்தா. ஐயாயிரம் பேருக்கு குறையாமல் கூட்டம் இருந்தது.அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ஏக சந்தோஷம். இடைக்கிடையே வைபவுக்கு காபி பிடித்தம்கிறதை தெரிஞ்சுண்ட நான், காபி கொண்டு வந்து கொடுத்தேன். அவருக்கு பரம திருப்தியாயிடுத்து. கணேசனும் இந்த காரியங்கள்ல பங்கெடுத்துண்டு நன்னா என்ஜாய் பண்ணார்.

இன்னிக்கு அவா கிளம்பற நேரம் ஆயிடுச்சு. ராஜகோபாலன் அப்பாவையும், அம்மாவையும் நடு ஹாலுக்கு கூப்பிடறார். பிள்ளையும் வந்திருக்கார். அப்பா, அம்மா வந்ததுக்கப்புறம் ராஜகோபாலன் தட்டு நிறைய பழம், வெத்திலை, பாக்கு, பூ இதையெல்லாம் வச்சு, ஐயாயிரம் ரூபாய் பணம் வச்சு தட்டை அப்பா கையில் கொடுத்தார். கூடவே, ” பட்டாச்சாட்யார் ஸ்வாமிகளே, உங்கள் பெண் வசுதாரிணியை எங்காத்துக்கு மாட்டுப்பெண்ணா வர்றதுக்கு சம்மதம் தரணும். என் பையன் நேத்திக்கே எனக்கு பச்சைக்கொடி காட்டிட்டான். இவ்வளவு நாளா கல்யாணத்தில் இன்டரஸ்ட் காமிக்காம இருந்தவன் இவளைப் பார்த்தவுடன் மனசு மாறிட்டான். எல்லாம் அந்த நரசிம்மர் கருணை. அவர்தான் இப்படி ஒரு திட்டம் போட்டு எங்களை இங்கே அழைச்சிண்டு வந்திருக்கார்.நீங்க என்ன சொல்றேன்” இப்படி கேட்டவுடன், ” அய்யா, அவரைப்பத்தி எனக்கு தெரியும். அவருக்கு சந்தோஷத்தில் வார்த்தை வராது. இதுக்கு சம்மதிக்காம இருப்பாரா, அவர்? அம்மா நீங்க என்னம்மா சொல்றீங்க” அப்படீன்னு பிள்ளை அம்மாவை பார்த்து கேட்டார். “இது சந்தோஷமான விஷயம்தான். திருப்தி இல்லாமயா இருக்கும். ஆனாலும் இவாத்து மாமியும் சம்மதம் தரணும் இல்லையா” அம்மா கேட்டார்.

“மாமி, சரியான பாயிண்ட் பிடிச்சுட்டேள். நான் சம்பிரதாய முறைல அவளோட அடுத்த மாதம் வர்றேன். இப்போ நீங்க ஓகே சொல்லி அனுமதி கொடுங்கோ” ராஜகோபாலன் சொன்னார்.


இப்படியாக என்னோட கல்யாணம் ஒருவழியாக நிச்சயம் ஆகி, அதே ஆவணியில் நடந்து, இப்போ மும்பையில் இருக்கேன். இவர் பிஸினஸை விஸ்தரிச்சு இங்கே ஒரு பெரிய ப்ரான்ச் திறந்திருக்கார். எனக்கு ரெண்டு குழந்தைகள். பையன் கேஷவ் நாலு வயசு. பொண்ணு சௌபாக்யா ஒரு வயசு. இப்படித்தான் என் கதை.

அப்பா பெருமாளிடம் வச்ச நம்பிக்கை வீணாப்போகல. முடியற வரைக்கும் அவருக்கு கைங்கர்யம் செஞ்சுண்டு அங்கேயே இருப்பேன். நீ வருஷா வருஷம் வந்துட்டு போ அப்படி சொல்லி மஞ்சளூர்லயே இருக்கார். நாங்க ஆறு மாசத்துக்கு ஒரு தடவை போய் பாத்துட்டு வருவோம். எல்லாம் சிங்கப்பெருமான் அருள்.இப்போ நானும் அதையே தொடர்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *