கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 3, 2025
பார்வையிட்டோர்: 591 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“எவ்வளவோ ‘ட்ரை பண்ணிட்டேன் மாமா. ஆனா, ஒங்க பொண்ணு கொஞ்சம் கூட தன்னை மாத்திக்க மாட்டேங்கறா. ஒரே பிடிவாதம்”, நீண்ட நேரம் பேசியதன் முடிவுரையாக அப்பா விடம் சொன்னார் அத்திம்பேர். இருவரும் எலியட்ஸ் பீச் வரை நடந்து விட்டு வந்ததிலிருந்து, அப்பா ஏதோ அறியக் கூடாததை அறிந்து கொண்டதைப் போலவும், பதில் பேச என்ன இருக்கிறது என்பது போலவும் தன் மாப்பிள்ளை யின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். காலையில் கிளம்பும் போது இருந்த அப்பாவின் முகத்தை நினைவில் கொணர முயன்றேன், அவர் முகத்தையே பார்த்தபடி.

அவர்களது பேச்சின் தலையோ காலோ புரியாமல் தம்பியும் நானும் அங்கேயே ஹாலில் இருப்பதா இல்லை, நழுவி விடுவதா என்றறியாமல் உட்கார்ந்திருந்தோம். அம்மாவின் டிபனை மறுத்து விட்டு, “இதெல்லாம் இப்ப எங்கம்மாக்குத் தெரியாம இருக்கணுமேன்றது தான் என் ஒரே கவலை”, என்று சொல்லி விட்டுப் போனார் கிளம்பினார் ஆதம்பாக்கத்திலிருந்த தன் வீட்டுக்கு.

அதற்குப் பிறகு, அடிக்கடி கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்தாள் அக்கா. மணமாகி, சில மாதங்கள் கூட சகஜமாக இருந்தாளா என்பது தான் சந்தேகம். ஒரு வருடம் முன்புதான், தெரிந்தவர்களிடமெல்லாம் கை மாற்றாகவும் கடனாகவும் வாங்கி ஒரே பெண் என்று சொல்லிக் கொண்டே கிட்டத் தட்ட தடபுடலாகச் செய்து வைத்த திருமணம். நீடிக்குமா, பிளவு படுமா என்ற நிலையில் இருந்தது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கவலை அரித்தது. அரசல் புரசலாக எனக்கு விஷயம் தெரிய வந்தது. “சைக்கியாடிரிஸ்ட்டு கிட்ட கூட்டிண்டு போவேங்கறார்”, என்று அதை ஒரு குற்றச் சாட்டாக அக்கா சொன்னாளே தவிர, உதவ நினைத்த அத்திம்பேரின் அக்கறையை உணர மறுத்தாள்.

சீக்கிரமே அக்காவின் மாமியாருக்கு விஷயம் தெரியத் தான் வந்தது. பிள்ளையின் வாயுக்குக் கட்டுப் பட்டு எங்கள் வீட்டிற்கு வந்து கலாட்டா செய்யாமலிருந்தார் அவர் என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். இவற்றின் நீட்சியாக அம்மாவுக்கும் அப்பாவுக்குமிடையே அடிக்கடி சண்டை வந்தது. அம்மாவிற்கு ஏதும் சந்தேகம் வரவில்லையோ. இல்லை, நிச்சயம் வந்திருக்க வேண்டும். ஏன், வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை.

பதினோரு வருடங்களுக்கு முன்பு கௌஹாதியிலிருந்து ரிலீஃப் செய்யப் பட்டு சாமான்களையும் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு சென்னை வந்த பிறகு தான் அப்பாவுக்குத் தெரிந்தது, அவர் அமர வேண்டிய இடத்திலிருந்த பொறியாளர் இன்னமும் ரிலீஃப் ஆகவில்லை என்று. வட மாநிலத்துக்குப் போக மாட்டேனென்று அடம் பிடித்துக் கொண்டு இரண்டு மாதம் லீவு போட்டு விட்டுப் போயிருந்தார் அந்த மனிதர். சுந்தர் நகரிலிருந்து அப்பா மாங்கு மாங்கென்று தினமும் சாஸ்திரி பவன் சாஸ்திரி பவன் போய் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துப் பேசி விட்டு வந்தார். அவரின் முயற்சிகளுக்கு ஒரு பலனுமில்லாமலேயே போனது மூன்று வாரங்களுக்கு மேல்.

சித்தப்பா வீட்டில் நாங்கள் நால்வரும் சௌகரியமாத் தான் இருப்போம் என்று ஒரு நம்பிக்கை காலையில் போய் இரவில் வீடு திரும்பும் அப்பாவுக்கு. தன்னைப் போலத் தான் தன் தம்பியும் இருப்பான் என்ற ஒரு பெரும் போக்கான எண்ணம். கிச்சனுக்குப் போகாத படி பூட்டிட்டுப் போயிடறா. இதுகளுக்கு ரெண்டாம் தரத்துக்கு ஒரு உப்புமாவாவது கிளறிக் கொடுக்கணும்னாலும் வழியில்ல. ராத்திரி வரைக்கும் பசியோடயே இருக்குகள். வர போது பண்ணிண்டு வந்த பட்க்ஷணமெல்லாத்தையும் அந்தாத்துக்குக் கொண்டு போயிட்டா போல்ருக்கு”, என்று எப்போதாவது தப்பித் தவறி அம்மா ஏதும் சொன்னாலும், “இங்க பாரும்மா வேற வழியில்ல, அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. வாழப் பழமோ, பிஸ்கட்டோ வாங்கிக் குடு. இதையெல்லாம் பெரிசு படுத்தாத. எனக்கே ஆயிரம் கவல. இன்னும் ரெண்டு மாசச் சம்பளமும் கிடைக்காது போலத் தான் இருக்கு. அப்பறம் தான் சேர்த்து தருவான்னு நெனக்கறேன். அதுக்காப் புறமா தான் சுப்புணிக்கே இப்ப அவன் நமக்குப் பண்ற செலவுக்குக் கொடுக்கும் படியிருக்கும். நம்மால பாவம் அவனுக்கு தான் கஷ்டம். எதானாலும் நீ தாரா கிட்ட கேளேன்,” என்று தன் தம்பியைப் பற்றிய கவலையும், தம்பி மனைவிமேல் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் சேர்த்து வார்த்தைகளாய்ப் பேசினார்.

ஒரு நாள், ‘எல்லாரும் சாப்ட ஒக்காந்துண்டாச்சா, குளித்து விட்டு இடுப்பில் கட்டிக் கொண்ட துண்டோடும் பெரிய மனிதத் தோரணையோடும் சாப்பாட்டறை வாசலில் நிலையில் தன் இரு கைகளை ஊன்றிக் கொண்டு நின்று கேட்டான் அஜய்.

அதைக் கேட்டதும் அம்மாவின் முகத்திலும் அக்காவின் முகத்திலும் தெரிந்த வாட்டம் சில நிமிடங்களுக்குள் ஓராயிரம் வார்த்தைகளைப் பேசின. அம்மா கொஞ்ச நேரத்திலேயே சமாளித்துக் கொண்டு, “வாடா கண்ணா, உனக்கும் சாதம் போடறேன்”, என்றாள். “இல்ல பெரீம்மா, எனக்கு இப்ப பசிக்கல்ல. நா டிஃபன்ஸ் காலனிக்குப் போயி சாப்டுக்கறேன்”, என்று சொல்லி விட்டான். எப்படிப் பசிக்கும்? காலையில் ஆபீஸுக்கு கிளம்பு முன்பே அரைப்படி பாலில் நாலைந்து ஸ்பூன் பூஸ்டைப் போட்டுக் கலக்கிக் குடிக்க வைத்திருப்பாள் சித்தி. தீபா எழுந்ததுமே குடிக்கவென்று ஃப்ளாஸ்கில் ஊற்றி வைத்து விட்டும் போயிருந்தாள்.

தெரிந்தோ தெரியாமலோ பல சமயங்களில் தன் ஒன்பது வயதிற்கு அதிகமாகத் தான் பேசி விடுவான் அஜய். தன் அம்மாவும் அப்பாவும் எங்களிடம் பேசும் தொனியை உள் வாங்கிக் கொண்டு, அவர்களில்லாத நேரங்களில் மிக இயல்பாகவே வெளிப் படுத்தினான். அப்போது அவன் என்னை விட ஒரே வயது இளையவன். என் தம்பியை விட ஒன்றரை வயது மூத்தவனாக இருக்கலாம். அவனின் தங்கை தீபா என் தம்பியை விட ஓரு சில மாதங்களே இளையவள் .

அம்மா கமகமவென்று சமைத்திருந்த அன்றைய வெங்காய சாம்பாரைப் பாதிக்கு மேல் தூக்கில் கொட்டி, ஆபீஸுக்குப் போகும் வழியில் தன் பிறந்த வீட்டுக்குக் கொண்டு போய் விட்டிருந்தாள் சித்தி, இரண்டு வாரங்களாக செய்து வந்ததைப் போலவே. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை,” எங்க அஜய்க்கு அரைச்சுவிட்ட முள்ளங்கி சாம்பார்னா உயிர். நீங்க சூப்பரா பண்ணுவேளே மன்னி”, என்று தனக்குத் தோன்றியதையெல்லாம் சமைக்கச் சொன்னாள். மொத்ததில் வேலை வாங்க நன்றாகவே தெரிந்தது. நாங்கள் வந்த அன்று மட்டும் அரைத் தம்ளர் பால் குடித்ததாய் நினைவு. அடுத்த இரண்டே நாளில் வேலைக்காரி நிறுத்தப் பட்டாள். அதான் வீட்டுவேலைகள் எல்லாவற்றையும் செய்ய அம்மாவும் அக்காவும் இருந்தார்களே.

மூட்டை கட்டி லாரியில் ஏற்றி விடப் பட்டிருந்த வீட்டுச் சாமான்கள் எல்லாம் வந்தால் என்ன செய்யவென்ற கவலை ஒருபுறமும், மூன்று குழந்தைகளின் படிப்பு தடை படுமா, இல்லை ஏதாவது ஒரு பள்ளிக் கூடத்தில் தற்காலிகமாக இடம் கிடைக்குமா என்ற கவலை மறு புறமுமாக அப்போதெல்லாம் அப்பாவின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை.

அவ்வப்போது பேருந்து இலக்கங்களை கேட்டறிந்து கொண்டு அக்கா மட்டுமோ, அக்காவோடு நானுமோ சேர்ந்து, அப்பாவுக்கு குவார்டர்ஸ் பெஸண்ட் நகரில் கிடைக்கப் போகிறதா, இல்லை கேகே நகரிலா என்றே தெரியாததால், இரண்டு இடங்களிலும் சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கெல்லாம் சென்று வந்தோம். வகுப்புகள் மூன்று, ஐந்து மற்றும் எட்டில் இடம் வேண்டியிருந்தது.

இதற்கிடையில் லாரியில் சாமான்கள் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, தனக்கு ஒதுக்கப் பட்ட குவாட்டர்ஸை, ஆபீஸுக்கு அருகில் தானிருந்த வாடகை வீட்டிலிருந்து மாற விருப்பமில்லாத ஓர் அதிகாரி அப்பாவை எடுத்துக் கொள்ளச் சொன்னார். அது பெஸண்ட் நகர் பேருந்து நிறுத்ததிற்கு அருகில் இருந்தது. அப்பாவுக்கு சின்ன ஒரு நிம்மதி.

அங்கே போய் பார்த்த பின்னர் தான் தெரிந்தது, வீடு வசிக்குந்தரத்தை இழந்து பல வருடங்களாகிவிட்டிருந்தது. அதிலும் சமையலறையில் என்ன தான் செய்தார்களோ, அப்படியொரு ஆபாசமான அழுக்கும், கரியும். அக்காவும் அம்மாவும் மாறி மாறி பலமுறை சோப்பைப் போட்டுத் தேய்த்துக் கழுவிக் களைத்தார்கள். அப்பாவும் நானும் இடையிடையே உதவிக் கரம் நீட்டினோம். ஆனால், மேடையும் தரையும் அதன் சுயரூபத்தை அடையவேயில்லை.

மாலையில் ஸ்கூட்டரில் வந்த சித்தப்பாவும் சித்தியும் மேற்பார்வையிடும் தோரணையோடு, “என்ன கிளீனிங்க் எல்லாம் எந்த மட்டுல இருக்கு?”, என்று கேட்டனர். “நேத்திக்கி பார்த்ததுக்கு இன்னிக்கி க்ளீனாயிடுத்து இல்ல தாரா?” என்று அம்மா கேட்டதற்கு சித்தி, “எங்களோட ஸ்டாண்டடுக்குன்னா இல்லன்னு தான் சொல்லணும். ஒங்களுக்கென்ன மன்னி, அட்ஜஸ்ட் பண்ணிப்பேள்”, என்றாள், தன்னை உயர்த்தி அம்மாவைத் தாழ்த்தக் கிடைத்த அரிய வாய்ப்பை நழுவ விடாமல்.

சித்தப்பா சித்தியை எங்களுக்கு உதவச் சொன்னதும், “ம், அதுக்கென்ன, புடைவை டிரைக்கிளீனிங் பில்ல மட்டும் ஒங்களுக்கு அனுப்பிடறேன் அண்ணா”, என்று ஜோக்கடித்து தன் அந்தஸ்தை மேலும் உறுதியாக நிலை நாட்டினாள்.

ஹாலில் ஒரு ஃபேன் ரிப்பேர். ஆகவே, சித்தப்பா மிகவும் அன்பாக, அஜயும் தீபாவும் அந்தாத்துலயே படுத்துண்டுட்டா. பத்மினி, நீ வேணா இங்க வாயேன், என்று அக்காவைக் கூப்பிட்டவுடன் போய்ப் படுத்துக் கொண்டாள் அக்கா. கட்டிலிலிருந்து விழுந்து விடுவாள் என்று அம்மா சொன்னதற்கு,” அதுக்கென்ன மன்னி, ரெண்டு பேருக்கும் நடுவுல படுத்துக்கட்டும்”, என்று சொன்னார் பெரியப்பா.

நடு ராத்திரியில், அக்கா ஹாலுக்கு ஓடி வந்து, ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த அம்மாவின் தோளைப் பிடித்து உலுக்கினாள். என்னடி என்றபடி சலித்துக் கொண்டே எழுந்த அம்மாவிடம், “அம்மா,. பயமா இருக்கும்மா”, என்றாள். “என்னடி பயம்? பாத்ரூம் போணுமா? வரட்டா?”, என்று கேட்டாள்.

புரண்டு புரண்டு படுத்து, தூக்கத்தை வலுவில் வரவழைக்கும் முயற்சியில் இருட்டுக்குப் பழகி விட்டிருந்த என் கண்களுக்கு அக்காவின் தவிப்பும் உணர்ச்சிப் பெருக்கும் தெள்ளெனத் தெரிந்தது. நான் முழித்துக் கொண்டு விட்டிருந்தேன் என்று இருவருக்கும் தெரிந்திருக்கவில்லை.

“இல்லம்மா, யாரோ மாரைப் போட்டு மாவு பிசையற மாதிரி பிசஞ்சாப்ல இருந்துது. யோசிச்சுண்டே, திரும்பிப் படுத்துண்டு தூங்கிட்டேம்மா. மொதல்ல, ஒண்ணும் புரியல்ல. மறுபடியும் அதே மாதிரி வலிச்சுது. சட்டுன்னு முழிப்பு வந்துடுத்து. டக்குன்னு அந்தக் கையப் பிடிச்சேன். சொரசொரன்னு சித்தப்பாவோட கை. எனக்கு தூக்கி வாரிப் போட்டுது. இருட்டுல சித்தப்பா கண்ணுல பளீர்னு மின்னலா ஒரு பயம். எங்கைய உதறிட்டு செவுத்தப் பார்த்துத் திரும்பிப் படுத்துண்டுட்டா. நா எறங்கி இங்க ஓடி வந்துட்டேன்”, அக்கா விசும்பிக் கொண்டே அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அந்த வயதுக்குப் புரியக் கூடிய அளவே புரிந்த எனக்கு, அக்காவின் மீது பரிதாபம் மட்டுமே பிறந்தது. கட்டிலின் மறுபுறம் படுத்திருந்த சித்திக்கு நடந்தது தெரியாமல் போனது பெரும் புதிர் தான். ஆழ்ந்த உறக்கம் போலும்.

“என்ன வக்ரம், என்ன தைரியம், அண்ணன் மகள், தன் மகள் என்று உலகத்துல எல்லாரும் நம்பறதால, வெளியில சொன்னா, யாரும் நம்புவாளா? அந்தத் தைரியம் தானோ. தனக்கும் ஒரு பொண் இருக்கறதே மறந்து போச்சோ’, என்றெல்லாம் ஏதேதோ படபடவென்று பொரிந்து கொட்டிய அம்மா இறுதியில், சற்று தள்ளிப் படுத்துக் கொண்டு அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த அப்பாவைப் பார்த்தபடி, “இத யார் கிட்டயும் சொல்லாதடி. அப்பாவுக்குத் தெரிஞ்சா ரொம்ப வருத்தப் படுவா”, என்ற போது தான் நான் துணுக்குற்றேன். அந்த வயதிலேயே அம்மாவின் செயலில் இருந்த முட்டாள் தனம் புரிந்தது. அக்காவின் அண்ணனாகப் பிறக்காமல் போனேனே என்று முதல் முறையாகத் தோன்றியது.

அடுத்த நாளே அம்மா பிடிவாதமாக பெஸண்ட் நகர் குவாட்டர்ஸுக்குக் கிளம்பி விட்டாள். அன்று முதல் அம்மாவைத் தவிர குடும்பத்தின் மற்ற மூவரிடமும் முன் போல நெருங்கிப் பழகுவதை நிறுத்தி விட்டாள். வீடுமாறிப் போனதிலிருந்து சித்தப்பா குடும்பத்தினர் யாரும் வருவதில்லை.

வருடங்கள் உருண்டன. அக்கா தனக்கு நடந்ததை மறந்திருப்பாள் என்று நினைத்திருந்த அம்மாவுக்கு அக்காவினுள் ஆழமாய் ஏற்படுத்தியிருந்த சிறு வயது நிகழ்ச்சியின் பாதிப்பு நீங்கியிருக்கவில்லை என்ற உண்மை ஏற்றுக் கொள்ளும் படியிருக்கவில்லை என்றே தோன்றியது. கவலை அவளை ஒரு நோயாளியாக்கியது. எல்லோரும் முயன்ற போதிலும் அவளின் திருமணம் விவாகரத்தில் தான் முடிந்தது. அப்பா போய்ச் சேர்ந்தார் அந்தக் கவலையிலேயே.

துக்கம் கேட்க வந்த சித்தப்பாவும், தன் பங்குக்கு எல்லோருடனும் சேர்ந்து அப்பாவின் இறப்புக்கு அக்காவைக் காரணம் காட்டிப் பேசி விட்டுப் போனார். அப்போது கூட ஏன் அம்மாவால் முகத்துக்கே நேராகக் கேட்க முடியவில்லை என்றுதான் எனக்குக் கடைசி வரை விளங்கவேயில்லை. தன் பிரச்சனையை உளவியல் கண்ணோட்டத்தோடு பார்க்க மாட்டேன்று அக்கா ஏன் பிடிவாதமாக இருந்தாளோ என்று சற்று எரிச்சலாகவும் இருந்தது.

அம்மாவின் மேல் கோபமாய் வந்தது. எல்லாப் பெண்களும் இப்படித் தானா இல்லை, அம்மா மட்டும் இப்படியா? குட்டக் குட்டக் குனிந்து பழகி, குட்டாமலே குனிந்து பிறகு, நிமிரத் தெரியாமல் போன அடிமைத் தனம் எல்லாப் பெண்களின் மரபணுக்களிலும் பச்சென்று படிந்திருந்தது தான் காரணமோ. திணிக்கப் பட்டதை அப்படியே எற்று ஏற்று மரத்துப் போன போக்கோ. அக்கா மற்றும் அம்மாவின் அந்தரங்கத்தை மதித்து சித்தப்பாவிடம் பட்டென்று உடைத்துக் கேட்டு விடத் துடித்த என் நாவைக் கட்டுப் படித்துக் கொண்டது சரிதானா?

வங்கித் தேர்வுகளையெல்லாம் எழுதித் தேறினாள் அக்கா. சொகுசாய் காரில் வேலைக்குப் போய் வந்தாள் வங்கி அதிகாரியாக.

அக்காவின் முகத்தில் ஒரு தெளிவு இருந்தாற் போலிருந்தது. ஓரிரு வருடங்களில் பல முறை அம்மா கல்யாணப் பேச்சை எடுத்து விட்டாள். பிடி கொடுக்காமலே இருந்த அக்கா ஒரு நாள் தாங்க முடியாத எரிச்சலிலும் கோபத்திலும் “யாரும் என்னத் தொடக் கூடாதும்மா. அப்படியாராவது இருந்தாப் பாரு. உனக்காகப் பண்ணிக்கறேன்”, என்று அம்மா முகத்தைப் பார்த்துக் கத்தினாள். அறையில் இருந்த எங்களிருவரையும் திரும்பிப் பார்த்த அவள் கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டிருந்தது.

– பின் சீட் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, நிலா புக்ஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *