பயிற்சி தந்த நன்மை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 7, 2019
பார்வையிட்டோர்: 21,862 
 

சென்னை மாநகரத்தில் ஒரு பிரபலமான பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார்கள் ரம்யாவும், செல்வியும். இருவரும் அந்த பள்ளிக்கு

பள்ளி மாணவர்களை மட்டும் ஏற்றி செல்லும் ஒரு வாடகை காரில் தினமும் வந்து செல்வார்கள்.. இருவரின் பெற்றோர்கள் கொஞ்சம் தள்ளி இருக்கிற அடுத்தடுத்த அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார்கள். ரம்யாவின் தாயாரும், செல்வியின் தாயாரும், தோழிகள். இருவரும் சேர்ந்தே மதியம் பள்ளிக்கு வந்து குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்து விட்டு வீட்டுக்கு திரும்புவர். மாலை 4.30 மணிக்கு இருவரும் அதே வாடகை காரில் வீட்டுக்கு வந்து விடுவர்.

ஒரு நாள் பள்ளியில் காலை பிரேயர் வணக்கத்தில் மாணவ, மாணவிகளிடம் , பிரின்ஸ்பால், ஒவ்வொரு வகுப்புக்கும் வரிசைப்படி மாலை ஒரு மணி நேரம் ஆபத்து காலத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், மற்றவர்களை எப்படி காப்பாற்ற முயற்சிக்க வேண்டும் என்கிற பயிற்சியை தர உள்ளோம், விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம், வேண்டாமென்பவர்கள் வீட்டுக்கு போகலாம் என்று சொன்னார்..

ரம்யா செல்வியிடம், நாம் இருவரும் நம் வகுப்புக்கு அந்த பயிற்சியாளர் வரும் போது ஒரு மணி நேரம் இருந்து கற்றுக்கொள்ளலாம் என்று கூறினாள். செல்விக்கு அதில் அவ்வளவு விருப்பமில்லை. எனக்கு இதெல்லாம் வேண்டாம், என்று சொல்லி விட்டாள். ரம்யா செல்வியிடம் சும்மா ஒரு மணி நேரம்தானே அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கலாமே? ஹூஹூம், செல்வி மறுத்து தலையசைத்து விட்டாள்.

ரம்யாவின் வகுப்புக்கு மறுவாரம் இந்த ஆபத்து காலத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்கிற பயிற்சி கொடுத்தார்கள். ரம்யா மட்டும் அதில் கலந்து கொண்டாள். செல்வி வீட்டுக்கு போய் விட்டாள்.

நான்கைந்து மாதங்கள் ஓடியிருந்தது. ஒரு நாள் ரம்யாவின் அபார்ட்மெண்டில்

ஏழாவது தளத்தில் ஒரு வீட்டில் தீ பிடித்து கொண்டது. இவர்களின் அபார்ட்மெண்டில் சுமார் இருபத்தி ஐந்து வீடுகள் இருந்தன. எட்டு தளங்கள் கொண்டதாக இருந்தது. ரம்யாவின் பெற்றோர் நான்காவது தளத்தில் இருந்தனர்.

ஏழாவது தளத்திலிருந்து புகை வரவும், அங்கிருந்த அனைவரும் திடு திடுவென இறங்கி ஓடி வந்தனர். சத்தம் கேட்டு வெளியே வந்த ரம்யாவின் பெற்றோரும், பதட்டத்துடன் உடனே வீட்டை விட்டு ரம்யாவையும், அவள் தம்பி பாப்பவையும் இழுத்துக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாய் ஓட தயாராகினர்.

ரம்யா சட்டென்று அம்மாவின் கையை உதறிவிட்டு அவர்கள் தளத்தில் இருந்த எல்லார் வீட்டு கதவையும் தட்டி அங்குள்ள அனைவரையும் வெளியே கூப்பிட்டாள். ஒருவரையும் அந்த கூட்டத்தோடு ஓட விடாமல் அவர்களை அந்த தளத்தின் முன்புறம் வர சொன்னாள். அனைவரையும் முகத்தில் துணியை கட்டிக்கொள்ள சொன்னாள். பின் பெருகி வரும் புகையை சுவாசிக்காத வண்ணம் தரையோடு உட்கார் சொன்னாள். அதற்குள் கீழிருந்து ஆட்கள் இவர்கள் தளத்துக்கு

தீயணைப்பு துறை மூலம் ஏணியை வைத்து கொடுத்தனர்.

ரம்யா முதலில் வயதானவர்களையும், அப்புறம் பெண்களையும், குட்டி குழந்தைகளுடன் கீழிறங்க சொன்னாள். அதற்கப்புறம், சிறுவர்கள், பெரியவர்கள் எல்லோரையும் இறங்க வைத்தனர். ரம்யாவும் அவர்களுடன் பத்திரமாக இறங்கினாள்.

தீ அணைக்கப்பட்டு விட்டது. இருந்தாலும், அந்த புகை பரவியதாலும், அங்கிருந்து உயிருக்கு பயந்து ஓடி வந்ததால் கீழே விழுந்து நிறைய பேருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தது.

ரம்யா இருந்த தளத்தில் யாருக்கும் எந்த விதமான காயங்களோ, மூச்சு தினறலோ ஏற்படவில்லை என அங்கிருந்து வந்தவர்கள் சொன்னார்கள். ரம்யா இருந்த கீழ் தளத்தில் கூட பயத்தினால் நிறைய பேருக்கு காயங்களும், மூச்சு திணறலும் ஏற்பட்டிருந்தன.ரம்யாவால்தான் நாங்கள் எந்த காயங்களும் இல்லாமல், பதட்டப்படாமலும், இருக்கமுடிந்தது என்று அங்குள்ளவர்கள் சொன்னார்கள்.

ரம்யாவை நிறைய பத்திரிக்கைகள் பேட்டி கண்டன. ரம்யா எங்கள் பள்ளியில்

ஒரு நாள் ஆபத்து காலங்களில் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று பயிற்சி கொடுத்திருந்தார்கள். அதன்படி எங்கள் அருகில் இருப்பவர்களுக்கு நான் உதவ முடிந்தது.

ரம்யாவை பெற்ற அவர்கள் பெற்றோரும், படித்த பள்ளியும், இதனால் பெருமை பெற்றன. செல்வி கூட வருத்தப்பட்டாள், நான் கூட அந்த வகுப்பில் கலந்து கொள்ளாமல் போய்விட்டேனே என்று.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *