கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 17, 2021
பார்வையிட்டோர்: 23,309 
 

ரா.கி.ரங்கராஜன் palakku-pic2நோக்கும் திசையெல்லாம் கூப்பிய கரங்கள், கசகசவென வியர்வை வடித்தது ஜனக்கூட்டம். “அப்பனே! என்னை ஆண்டவனே!” என்ற பிரார்த்தனைகள். “என் கஷ்டத்தை நீக்கு! காணிக்கைச் செலுத்துகிறேன்” என்ற இறைஞ்சல்கள்.

“ஆகட்டும். ஆகட்டும்!” என்று துரிதப்படுத்தினார் தர்மகர்த்தா தேவரங்கம்.

நூறு நூறு கிண் கிணி மணிகள் ஆர்த்தன, சிசர்களின் சிறுநகை போல, கண்ணாடிப் பட்டைகளும், ஜிகினாப் பூக்களும் இனவெயிலின் ஒளிபட்டு, கண் கூச மின்னின. கம்பீரமாய் எழுந்தது. சௌரி ராஜப் பெருமாளின் ஸப்தஸ்தானப் பல்லக்கு.

பெருமாளின் ஏழுர் விஐயம் முடிந்து விட்டது. சௌரிராஜன் கோயில் கொண்டிருக்கும் பதி பெருமாள் மலை. ஏழாவது ஊராகிய இந்த மல்லித் துறையிலிருந்து பதினேழாவது மைலில் இருக்கிறது. பொழுது சாயும் முன் அங்கே போயவிட வேண்டும். அர்ச்சகர் அழகிய நம்பிகை சளைக்காது. திருத்துழாயும் குங்குமமும் வினியோகித்துக் கொண்டிருந்தார். நெற்றித் திருச்சூர்ணம் வெயிலில் உருகி ஓடிக் கொண்டிருந்தது. ரத்தக்கோடு போல. அவிழ்ந்திருந்த சிகையை எடுத்து முடியக்கூட அவகாசமின்றி பக்தர் குழாத்தைப் பிரீதி செய்து கொண்டிருந்தார். அவருக்கு வயது அறுபது இருக்கும். நேமம் தவறாத பண்பு: அனுஷ்டானத்தால் வளர்ந்த உடலுரம். ஆகமங்களில் பெற்றிருந்த அறிவு. எல்லாமாக கண்ணிலே ஒளியும், குரலிலே திடமூம் கொடுத்தன.

“தட்டை வாங்கிக் கொள்ளாதீர்கள். இனி நேரமில்லை” என்று தர்மகர்த்தா கூச்சலிட்டு முடிக்கு முன் ஒரு கிழவி அருகே வந்து விட்டாள்.

“காத்திருக்க நேரமில்லை. புறப்படுங்கள்!” என்றார் தேவரங்கம்.

“பாதகமில்லை. அன்பர்களுக்காக ஆயிரம் ஆண்டு காலம் காத்திருக்கக் கூடியவனாயிற்றே என் இறைவன்! இந்த நிமிட நேரத் தாமதமா காக்க மாட்டான்?” என்று சாந்தமாகச் சொன்னபடி பழம், தேங்காய் கொண்ட தட்டைக் கிழவியிடமிருந்து பெற்றுக் கொண்டார் அழகிய நம்பி.

தேவரங்கம் பல்லைக் கடித்துக்கொண்டார் அவர் செய்யக் கூடியது அதைத் தவிர வேறில்லையே!

அர்ச்சனை முடிந்ததும், “இனிப் புறப்படலாம்,” என்றார் அழகிய நம்பி.

“நான் முன்னே காரில் போகிறேன்” என்று கூறி விடை பெற்றுக் கொண்ட தர்மகர்த்தா, “மூக்கா!” என்று குரல் கொடுத்தார்.

பல்லக்குத் தூக்கிகளின் முன் வரிசையில் இருந்த மூக்கன் தலையை நீட்டி “எஜமான்!” என்றான் பணிவோடு.

“பகலுக்கு ராயன் சத்திரத்தில் சாப்பாடு தயார்ப் பண்ணியிருக்கிறது. கால் மணிக்கு மேலே அங்கே தாமதிக்க வேண்டாம். என்ன”

“ஆகட்டுங்க” என்று பதில் வந்தது.

‘ரங்க, ரங்கா!’ என்று கோடியிலிருந்த ஆள் ஒருவன் கூவினான். பவனிவரும் பட்டத்து யானையைப் பால, ராஜ கம்பீரமான ஒரு குலுக்குடன் பல்லக்கு புறப்பட்டது. சில வினாடி நேரங்களுக்கு ஜனத்திரளின் நெரிசல் பலத்தது. “ரங்க ரங்கா! ரங்க ரங்கா!” என்ற பல்லக்குத் தூக்கிகளின் கோஷம் நாலு திசைகளிலும் எதிரொலித்தது. சௌரிராஜப் பெருமானின் பட்டாடைகளும் பொன்னாபரணங்களும் ஒன்றேடொன்று உரசிச் சலசலத்தன. தெய்வத்தின் திருமுகத்தில் தேஜஸ் ஜொலித்தவாறிருந்தது.

அர்ச்சகர் அழகிய நம்பி பல்லக்கின் பக்கத்தோடு நடந்தார். வீதியின் இருபுறமும் நின்றிருந்த மாந்தர்களின் எண்ணிக்கை சிறுகச் சிறுகத் தேய்ந்தது.

இப்போது பல்லக்கு மல்லித் துறையின் எல்லையைத் தாண்டி விட்டது. இனி ஒரே பொட்டல் காடு. செம்மண் பாதை குடேறிக் கொதித்தது. இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்த பனைமரங்களின் நிழல் பூமியிலே விழாமல் அவற்றின் மேலேயே விழுந்தது.

“கொஞ்சம் வாங்கிக்க அண்ணே” என்ற குரல் கேட்ட அழகிய நம்பி, பின் வரிசையில் தோள் கொடுத்துக் கொண்டிருந்த மாரி விலகி வெளியே வந்து தலை முண்டாசை அவிழ்த்து உதறுவதைக் கண்டார்.

“என்னடா மாரி, ஏண்டா?” என்று அவர் வினவியதற்கு அவன் பதில் சொல்லவில்லை. தலையைக் கைகளால் அமுக்கிக் கொண்டு மைல் கல் ஓரமாக உட்கார்ந்து விட்டான்.

பல்லக்கு நின்றது.

‘உடம்பு சௌகரியமில்லையா?’ என்று கவலயுடன் அருகே சென்று வினவினார் அழகிய நம்பி,

“ஒண்ணும் இல்லீங்க, தலையை லேசா வலிக்குது” என்று சொல்லிவிட்டு எழுந்து வந்து வரிசையில் சேர்ந்து கொண்டு சிரித்தான் மாரி.

“சுத்தச்சோம்பேறிப் பயல் சாமி! காலப் பலகாரம் சாப்பிடாமலேயே வந்து விட்டானுங்க, அதான்!” என்று மூக்கன் தகவல் தந்தான்.

“ஏண்டா மாரி அப்படிச் செய்யலாமா? பதினேழு கல் நடக்க வேண்டுமென்று உனக்குத் தெரியாது!” என்று உரிமையுடன் கடிந்து கொண்டார் அழகிய நம்பி.

“பசிக்கலீங்க அப்போ” என்று மறுபடி சிரித்தான் மாரி. அந்தச் சிரிப்பு உதட்டிலே இல்லாமல் அவனை அவர் பார்த்ததே இல்லை.

“நீ வேண்டுமானால் சும்மாவே நடந்து வாயேன். தோள் கொடுக்க வேண்டாம்” என்றார் அர்ச்சகர்.

“அட ஒண்ணும் இல்லீங்க, சரியாப் போச்சுது; இரண்டு கல் தாண்டினால் ராயர் சத்திரத்தில் சாப்பாடு!”

“சோம்பேறிப் பயல், சோம் பேறிப் பயல்,” என்று மூக்கன் அவனைத் திட்டிக் கொண்டு வர, பல்லக்கு இரண்டு மைலக் கடந்து ராயர் சத்திரத்தை அடைந்தது.

பகல் போஜனம் ஆயிற்று.

சுவாமி தரிசனத்திற்காக கூடிய ஏழெட்டு முதியவர்கள் அவ்விடத்திலேயே பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு பிரிந்து விட்டார்கள்.

பகல் ஒரு மணி சுமாருக்கு பல்லக்கு மீண்டும் புறப்பட்டது.

கிட்டத்தட்ட ஐந்துமைல் தாண் டியாயிற்று. “ஐயையோ! சாமி, வயித்தை ஒரேயடியாக வலிக்குதே!” திடீரென்று மாரி கூக்குரலிட்டான்.

திடுக்கிட்ட அழகிய நம்பி திரும்பிப்பார்க்கு முன்னே “ஆத்தா!” என்று அலறியபடி சுருண்டு விழுந்தான் அவன்.

“அடடே!” என்று அவனுக்குப் பின்னாலிருந்த மற்றவர்கள் கூச்சலிடும் போதே, முன்னே இருந்தவர்கள். இரண்டு அடி எடுத்து வைத்து விட, ஒருவன் மாரியின் தொடையை மிதித்துத் தானும் அலற. அந்த அமளியின் நடுவே பல்லக்குத் தண்டோடு இணைத்துக் கட்டப்பட்டிருந்த தாங்குக் கட்டை அறுந்து மாரியின் நெற்றியில் விழுந்து விட்டது.

கண்ணிமைக்கும் நேரம் தான்.

தாங்குக்கட்டையின் இரும்புக் கொக்கி செங்குத்தாக விமுந்து நெற்றியில் குத்தியதால், ரத்தம் பெருக்கிட்டு மண்ணோடு கலந்து கட்டி தட்டிற்று.

“மாரி, மாரி” என்று உலுக்கிக் குலுக்கினார் அழகிய நம்பி.

பதிலே இல்லை.

பத்துத் தப்படிக்கு அப்பால் பல்லக்கை நிறுத்தி வைத்த மற்ற ஆட்களும் ஓடிவந்தார்கள். “மடப் பயல்! சத்திரத்திலேயே தங்கிடுடான்னேன்; கேட்டானா?” என்றபடி மூக்கன் மாரியை மடியில் கிடத்திக் கொண்டான்.

சட்டெனத் தம் தோள் மீது கிடந்த உத்தரியத்தை எடுத்து மாரியின் நெற்றியைச் சுற்றிக்கட்டினார் அழகிய நம்பி. ரத்தப் பெருக்குக் குறைவது போல் தோன்றியதே யொழிய, மாரி நினைவை அடையவில்லை.

ரா.கி.ரங்கராஜன் palakku-pic3“சாமீ! என்ன காரியம் பண்ணிணீங்க?”

மண்டியிட்டு அமர்ந்திருந்த அழகிய தம்பி “என்ன விஷயம் மூக்கா?” என்று கேட்டார்.

“இது சாமி – அவன் தலையிலே கட்டியிருக்கீங்களே காயத்துக்கு – இதைப் பார்த்தீங்களா?”

அழகிய நம்பி அப்போது தான் கவனித்தார். கௌரவப்பட்ட பெரிய மனிதர்களுக்குச் சடாரி சாத்தும் போது தலையில் சுற்றும் பட்டுப் பரிவட்டம் மாரியின் தலைக்காயத்துக் கட்டப்பட்டிருந்தது. “மூக்கா ஆபத்துக்கு பாவமில்ல என்கிறது உனக்குத் தெரியாதா? அடுத்ததாக நடக்க வேண்டியதைக் கவனி!” என்றார்.

“பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறானே பாவிப்பய! விட்டிட்டுப் போக முடியாதுங்களே” என்றான் ஒருவன்.

“அது சரிதான் அண்ணே! ஆனால் இன்னும் ஏழுகல் போயாவணுமே? தூக்கிட்டா போவ முடியும்?” என்றான் இன்னொருவன்.

“தூக்கிட்டுப் போவ வேண்டியது தான்” என்றான் முதல்வன் பிடிவாதமாக. “நாம் எல்லோரும் முறை வைச்சு ஆளுக்குக் கொஞ்சம் நேரம்னு தோளிலே தூக்கிட்டுப் போவோம்.”

“நீ சொல்லுவே அண்ணாச்சி! எங்களுக்கல்ல தெரியும் சிரமம்!” என்று ஒரு வாலிபன் இந்த போசனையை ஆட்சேபித்தான். “ஏற்கனவே மாரி இப்படிப் படுத்திட்டதிலே ஒரு ஆளு குறைஞ்சிட்டுது. அவனைத் தூக்கறத்துக்கு இன்னெரு ஆளு போயிட்டா மத்தவங்களாலே சாமி தூக்கிப் பல்லக்கைக் கோவிலுக்குக் கொண்டு போய்ச் சேர்க்க முடியாது. நினைவு வச்சுக்க!”

அழகிய நம்பி இவர்கள் விவாதத்தால் பயன் எதுவும் விளையா தென்பதை உணர்ந்தார். “கொஞ்சம் காத்திருந்து பார்ப்போம். வண்டி, மோட்டார் ஏதாவது வரலாம்,” என்றார்.

சோதனை போல எதுவும் வரவில்லை. அரைமணி நேரம் வீணானது தான் மிச்சம். மாரியோ இன்னும் நினைவு திரும்பாமலே மூச்சுப் பேச்சின்றிச் சவம்போல் கிடந்தான். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிஷமும் அவன் உயிருக்கு உலை வைக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்து தான் இருந்தார்கள்.

“சாமி, நான் சொல்றேன் கேளுங்க” என்று உறுதியாகப் பேசினான் மூக்கன். “இவனை இங்கேயே விட்டிட்டுப் போக வேண்டியது தான். வேணா நடையைக் கொஞ்சம் எட்டிப் போடலாம். ஊர் எல்லையை மிதிச்சதும் எவனண்டையாவது சேதி சொல்லி இங்கே ஆள் அனுப்புவோம்!”

“அதான் சாமி சரி. கோவிலுக்குள்ளாற பல்லக்கு துழையறத்துக்கு வேளை பார்த்திருக்காங்க. தெரியுமில்ல! வேளை தவறிடுச்சின்னா எல்லாருக்கும் பொல்லாப்பு!” என்று மற்றவர்களும் ஆமோதித்தார்கள்.

ரா.கி.ரங்கராஜன் palakku-pic4அழகிய நம்பிக்கு மனமே இல்ல. ஆயினும் வேறு வழியில்லை போல் தோன்றியது. மௌனமாகத் தலையை அசைத்தார்.

“ரங்க. ரங்கா” என்ற கோஷத்துடன் பல்லக்கு பூமியினின்றும் எழும்பியது.

“நிறுத்துங்கள்” என்று திடிரென்று சொன்னார் அழகிய நம்பி. அகத்தின் உறுதி அவர் கண்ணிலும், காலிலும் பிரதிபலித்தது.

பல்லக்கு பூமியை மீண்டும் தொட்டது. அழகிய நம்பி உறுதியுடன் பேசினார். நாம் செய்வது மகத்தான பாவம். ஆண்டவனுக்கே அடாத செயல், இப்படி ஒரு மனிதனை அனாதையா வனாந்தரத்திலா விட்டுச் செல்வது”

“வேறு வழி?” எவனோ கேட்டான்.

“இருக்கிறது!” என்றார் அழகிய நம்பி. ” மாரியைப் பல்லக்கில் கிடத்திக் கொண்டே ஊருக்கு எடுத்துச் சென்று விடலாம்!”

“சாமி” என்று பத்துப் பன்னிரண்டு குரல்கள் பீதியுடன் கூவின.

“பதட்டப்படாதீர்கள். அன்பே உருவான தெய்வம், ஆபத்தில் சிக்கியவனைக் கைவிடும்படியாகவா சொல்லுகிறது? அடுத்தவனை ஆதரிப்பவனுக்கு உய்வுண்டு என்று நமது தர்மசாஸ்திரங்கள் போதிக்கின்றன. ஆகவே, இது பாவமாகாது”.

அழகிய நம்பி எவர் பதிலுக்கும் காத்திருக்கவில்லை. யாருடைய ஆட்சேபத்துக்கும் தயங்கவில்லை. பாதையோரமாகக் கிடந்த மாரியைத் தானே மார்போடணைத்து எடுத்துப் பல்லக்கில் பெருமாளுக்குப் பக்கத்தில் கிடத்தினார்.

“தெய்வமே, இது அபசாரமானால் என்னை மன்னி” என்று இறைஞ்சி விட்டு நோக்கிய போது. பெருமானின் திவ்வியத் திருமுகத்தில் புன்னகை சுடர் தெறிப்பது போல் தோன்றியது அவருக்கு.

“சாமி! இறக்கிடுங்க மாரியை! ஒரு கார் வருது!” என்று மூக்கன் கத்தினான்.

அழகிய நம்பி நிமிர்ந்து நோக்கினார். தூரத்தில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஒரு சிறு கார் வருவது தெரிந்தது.

“ஆ! தர்மகர்த்தாவின் காரல்லவா அது?”

கன வேகமாக வந்த கார் சடக் கென்று நின்றது, பல்லக்கின் அருகே. வெகு அவசரமாகக் கதவைத் திறந்து கொண்டு தர்மகர்த்தா தேவரங்கம் வெளியே குதித்தவர், “பல்லக்கு ஏன் இங்கே நிற்கிறது. இன்னும் ஊருக்கு வந்து சேரவில்லையே என்ற கவலையில் தான் நான் திரும்பிப் புறப்பட்டேன்….ஆ! என்ன அது….” என்று நிறுத்தினார்.

பல்லக்குக்கு வெளியே விறைத்து நீட்டிக் கொண்டிருந்த மாசியின் கால் அவர் கண்ணில் தென்பட்டு விட்டது.

ஒரே பாய்ச்சலில் அருகே சென்று பார்த்தவர், புலனடைத்துப் போனவராய்த் திக்பிரமித்து நின்று விட்டார். சத்தம் ஜிவு ஜிவு வென்று நெற்றி காம்புகளில் புடைத்தேறி நின்றது. கண்கள் கனல் கக்கின.

“ஐயோ! ஐயோ! என்ன அக்கிரமம் ஐயா. இது” என்று வெடித்துக் கொண்டு வந்தன வார்த்தைகள்.

அழகிய நம்பி சாந்தமாக “ஒரு அக்கிரமமுமில்லை. திடுமென்று அவனுக்கு இந்த மாதிரி ஏற்பட்டு விட்டது. வேறு வழியில்லை” என்றார்.

“வேறு வழியில்லையா?” என்று ஏறும்போதே, தேவரங்கம் மாரியின் தலையில் சுற்றியிருந்த பரிவட்ட வஸ்திரத்தையும் பார்த்து விட்டார்.
“அபசாரம்! அபசாரம்! எப்படித்தான் உமக்குக் கண் அவியாமல் இருக்கிறதோ இன்னும் ஏண்டா கடாமாடுகளா, நீங்களும் பார்த்துக் கொண்டா இருந்தீர்கள் கீழே பிடித்துத் தள்ளடா அவனை! ஐயோ கடவுளே” என்று கூச்சலிட்டார்.

முன்னே வந்து மறித்துக் கொண்டார் அழகிய நம்பி. “அவனுக்கு வேறு வழி எதுவும் பண்ணாமல் இறக்குவது சரியல்ல” என்றார்.

அவரது அமைதியான கோரிக்கை அந்தச் சமயத்தில் கிண்டலாகப் பட்டது தர்மகர்த்தாவுக்கு.”நிறுத்தும் ஐயா உங்கள் உபதேசத்தை!” என்று நெருப்பைக் கக்கினார்.

“கோபப்படக்கூடிய சமயமா இது உங்கள் கார் இருக்கிறது. அதில் ஏற்றிச் சென்று விடுங்களேன்!” என்றார் அழகிய நம்பி.

தேவரங்கத்தின் கோபம் மேலும் அதிகரித்தது. தம்மை விட அதிக மனிதப் பண்பும், அதிக இரக்க உணர்ச்சியும் இருப்பது போல அர்ச்சகர் பேசுவது அவரது ஆத்திரத்தைக் கிண்டி விட்டது. சாதாரண நிலையில் தாராளமாக ஒப்புக்கொண்டிருக்கக் கூடிய ஒரு செயலைச் செய்ய அவர் இந்தச் சந்தர்ப்பத்தில் மறுத்தார். “முடியாது! அவன் எக்கேடு வேண்டுமானாலும் கெடட்டும்! எனக்கு அக்கறையில்லை; இறக்குங்களடா அவனை” என்று ஆணையிட்டார்.

“மன்னிக்க வேண்டும்” என்றார் அழகிய நம்பி.

“இந்தப் பெருமாளின் அர்ச்சகர் நான். பல்லக்கு என் ஆதீனத்தில் இருக்கிறது.”

“ஓகோ! நீர் என் ஆதீனத்தில் இருக்கிறீர் என்பதை மறக்க வேண்டாம்! புரிகிறதா இந்த நிமிஷமே நீர் போகலாம், உமது பாவ மூட்டையுடன்!”

ரா.கி.ரங்கராஜன் pallakku-picஅழகிய நம்பி மறு பேச்சுப் பேசவில்ல. மாரியை ஜாக்கிரதையாகத் தாமே இறக்கித் தோள் மீது சாத்திக் கொண்டார். தள்ளாத வயது, உடல் நடுங்கிற்று: மனம் நடுங்கவில்லை. கால்கள் தள்ளாடின; உறுதி தள்ளாட வில்லை.

ஸப்தஸ்தானப் பல்லக்கைத் திருப்பியும் பாராமல் நேரே முன்னே நடந்தார், சுமையுற்ற தேக்கத்துடனும் – சுமையற்ற கெஞ்சுடனும்.

“ஊம்! புறப்படுங்கள்!” என்று உறுமினார் தர்மகர்த்தா.

“ரங்க, ரங்கா!”

பிரம்மாண்டமானதொரு குலுக்கல். பல்லக்கு மீண்டும் எழுந்தது.

“ஐயையோ!” என்று ஓர் ஆள் கூவினான்.

தட தடவென்று ஒரு பெருஞ் சப்தம்.

சௌரிராஜப் பெருமாளின் விக்கிரகம் இடம் பெயர்ந்து சாய்ந்து: பல்லக்கிலிருந்து கீழே விழுந்தது. கயிற்றுக் கட்டு மட்டுமல்ல, தர்மத்தின் கட்டும் அற்றுவிட்டதல்லவா அங்கே…?

– குமுதம் 20-6-55ம் தேதியிட்ட இதழில் ‘சூர்யா’ என்ற மாற்றுப் பெயரில் எழுதப்பட்ட இக்கதை, 1955ல் வெளியான சிறுகதைகளுள் சிறந்ததெனத் தேர்வு பெற்று தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தங்கப் பதக்கம் பெற்றது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *