கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2022
பார்வையிட்டோர்: 4,480 
 

உயர்நிலைப்பள்ளியில் படித்த உல்லாசமான காலம். நெருங்கிய நண்பன் ஒரு திறமைசாலி. சிறந்தபேச்சாளன், கவிஞன். அந்த காலத்தில் அவன்மேல் எனக்கு பொறாமை. இப்போது?

அவன் மேடையில் தமிழ் பேசும்போது கை தட்டல் காதைத் துளைக்கும். ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொருவாக்கியமும், வாக்கியத்துக்கிடையே சில விநாடி இடைவெளி என பேசுவதை இளம் வயதிலேயேகலையாக்கியவன் என் நண்பன். கை தட்டும் கும்பலில் நான். மனதின் அடித்தளத்தில் ஒரு மூலையில்பொறாமை பொறி… எனக்கு மட்டும் அவனைப்போல் மேடைப் பேச்சு வரவில்லையே?

ஒவ்வொரு முறையும் அவன் மேடைப்பேச்சை முடித்ததும் என் அபிப்ராயம் கேட்பான். என்ன சொல்வது? உண்மையை சொல்வேன். ‘உன் பேச்சு அருமை’ என்று பாராட்டுவேன்.

கூடவே ‘எனக்குக் கொஞ்சம் பொறாமையா இருக்குடா’ என்று சில சமயம் சொன்னதுண்டு. அவனோ ‘டேய், விடுடா… இதெல்லாம் பெரிய விஷயமா?’ என்று நடப்பான். ஆனால், அவனுடன் நடக்கும்போது ‘இவன்என்னுடைய நண்பன்’ என்ற கர்வம் என் முகத்தை பளிச்சிட வைக்கும்.

நண்பனின் கையெழுத்து மணிமணியாக இருக்கும். அவன் கவிதை எழுதும்போது எந்த தடையுமிருக்காது. ‘அருவி’ என்ற புனப்பெயரை நியாயப் படுத்துமாறு, அவன் கவிதைகள் கற்பனையிலிருந்து கொட்டும். என்பொறாமைக்கு இரண்டாம் காரணம்.

வேலை, குடும்பம் என ஆண்டுகள் உருண்டன. எங்களுக்குள் தொடர்பு நின்றது. நான் நண்பனை பார்க்கஊருக்குப் போனேன். அவனைப் பார்த்ததும் உறைந்து நின்றேன்.

அவன் வலது கை ஒரு கோணத்தில்மடங்கியிருந்தது. இடது கையால் என் தோளில் தட்டி ‘வாடா… எத்தன வருசமாச்சு’ என்று சொல்லி வீட்டுக்குள்அழைத்துப்போனான். நண்பனுக்கு மூளைவாத தாக்கலா? எப்போது? கவிதை எழுதிய கை உணர்ச்சி இல்லாதஉறுப்பாகிவிட்டதே? அருவி வற்றிவிட்டதா? அவன் பேசும்போது அவன் வாய் குழறியதே… மேடைப் பேச்சைகலையாக்கினானே? இப்போது எங்கே என் பொறாமை?

‘உன்னை கடவுள் இப்படி ஆக்கிட்டானே. ஏன் இந்த தண்டனை? சரியா பேச முடியல, கவிதை எழுதறகையில உணர்ச்சியே இல்ல…’ எனக்குத் தாங்கவில்லை. கண்ணெதிரே குலைந்து நிற்கும் நண்பனின்நிலைக்கு கண்ணுக்குத் தெரியாத கடவுள்தான் காரணமா? தத்துவக் கேள்விகள் சரமாரியகத் தொடர்ந்தது.

இடது கையை நீட்டிக் கொண்டே நண்பன் மெல்ல பேசினான். ‘வலது கையால் கவிதை எழுதமுடியாதுதான். ஆனா, கவிதை எழுதவே முடியாமல் இல்லயே… இப்பவும் இடது கையால கவிதை எழுதறேன்… ரொம்ப மெதுவாத்தான்… ஆனாலும் திருப்தியா இருக்குடா…’

‘என்னடா சொல்றே?’ திணறிவிட்டேன். புரியாமல் தவித்தேன்.

‘கடவுள் எனக்கு இப்படிச் செய்தாரே என்று நான் நினைக்கவில்லை. மேலும் என்ன வேண்டும் என்ற வரம்கேட்கவில்லை. இதுவரை கொடுத்ததுக்கு எல்லாம் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்…குடும்பம் இருக்கிறது, உன் போன்ற நெருங்கிய நண்பர்களும் இருக்கிறீர்கள்…நான் இன்னமும் உயிரோடு இருக்கிறேன்…’

அவன் பேச்சில் குழறல்… எண்ணங்களில் தெளிவு. அவனை வாஞ்சையுடன் அணத்துக் கொண்ட என்கண்கள் பனித்தன.

இந்த நிலையில் இப்படியும் ஒருத்தனா? இப்போதும் அவன் மேல் எனக்கு பொறாமைதான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *