தர்மத்தின் வாழ்வுதனை…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 12, 2021
பார்வையிட்டோர்: 3,192 
 

திருவான்மியூர் குளக்கரையைக் கடந்து வரும்போது என்னைத்தாண்டி சென்ற ஆட்டோவை கைகாட்டி நிறுத்தினேன். ஆளும் கட்சிக்கொடி உச்சியில் பறந்து கொண்டிருந்தது எனக்கு சற்று ஆச்சரியத்தை கொடுத்தது.

ஆட்டோ ஓர் சில அடிகள் தாண்டி நின்றது. நான் போக வேண்டிய இடத்தைச் சொல்லிக் கேட்டதும். அதற்கு அவர் கேட்ட தொகையும் நியாயமானதாக இருந்ததால், ஏறி அமர்ந்து கொண்டேன். ஆட்டோ கிளம்பி வேகம் பிடித்த ஓர் சில நொடிகளை அவனுக்கு முன்னால் இருந்த கண்ணாடியில் என் முகத்தை பார்த்த அந்த ஓட்டுநர் என்னைக் கேட்டார்.

‘சார்…இந்த உலகத்தில் தர்மம் ஜெயிக்குமா?’

எனக்கு ஒரு நிமிஷம் ஒன்றும் புரியவில்லை. பல ஆட்டோ ஓட்டுனர்கள் நான் பிரயாணம் செய்யும் போதே ஏதேதோ பேசிக்கொண்டு வருவதுண்டு. இதே போல் முன்பு ஒரு முறை ஓர் ஓட்டுநர் ‘கடவுள் இருக்கிறாரா?’ என்ற கேள்வியைக் கேட்டு என்னைத் திகைப்பில் ஆழ்த்தியதுண்டு. அது வேறு கதை.

இன்று இவர் கேட்கும் கேள்வி; இன்னொரு வகை.

‘ஏனப்பா இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கிறாய்?’ என்றேன் சிரித்தபடி.

‘இல்ல சார். பெரியவரை ஒரு மாதிரி கண்ணியமா இருக்கீங்களா. படிச்சவங்க மாதிரியும் தெரியுது. அதனால்தான் கேட்டேன்.’

‘நீ கேட்ட கேள்வியை பலகாலமாக பலர் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், இன்று அந்தக் கேள்வியை நீ கேட்க என்ன காரணம்?

‘நான் இப்போது ஒரு அதர்மத்தை எதிர்த்து போராடிக் கொண்டு இருக்கிறேன். அதுவும் கிட்டத்தட்ட தனி ஆளாக. அதனால்தான் கேட்கிறேன்’.

‘ஓ !’

‘ஆமாம் சார். நான் அங்கத்தினராக இருக்கிற ஆட்டோ ஸ்டாண்டில் கிட்டத்தட்ட 40 வண்டிக்காரர்கள் இருக்காங்க. அதில் இரண்டு பேர் மட்டும் கிட்டத்தட்ட 35-40 வருஷமாக இருக்காங்க. ஆனால், எங்களில் மிச்ச பேருக்கு அத்தனை வருஷம் அங்கத்தினர் அனுபவம் இல்லை. இதில், கிட்டத்தட்ட பத்து பேருக்கு ஆட்டோவும் கிடையாது. வாடகை வண்டியும் ஓட்டுவதில்லை. ஆனால், அதே ஸ்டாண்டில் தினம் வந்து அவங்க பாக்கற வேற வேலைகளை முடிச்சிட்டு வந்து உக்காத்திடுவாங்க. ஆனால், அவர்களும் அதிலே அங்கத்தினர்.’

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

‘அது எப்படி? சரி அப்படி அங்கத்தினராக இருப்பதில் என்ன லாபம்?’ என்றேன்.

‘எந்த சங்கமானாலும், அங்கத்தினராக பணம் கட்டவேண்டுமில்லையா? அந்த பண வரவு, செலவு கணக்குகளை அந்த அங்கத்தினராக இல்லாத ஒருவர்தான் பாத்துக்கிறார். அவர் இந்த ஏரியாவில் பலமான ஆசாமி. அவ்வளவுதான்…’

‘ம்…இத மற்ற அங்கத்தினர்கள் எப்படி சகித்து கொண்டிருக்காங்க?’

‘பலம் சார். அவங்க அவங்க தங்க வேலை ஆனா போதும்னு இருக்காங்க. கேட்க பயம்தான். நாந்தான் போன தடவை சங்கத்தின் கூட்டத்தில் இந்த கேள்வியை எழுப்பினேன்.’

‘அப்புறம்?’

‘அப்புறம் என்ன சார். அவங்க என்ன விரோதமா பாக்க ஆரம்பிச்சுட்டாங்க.’

‘அடேடே…நீ அந்த மூத்த இரண்டு ஆசாமிகள் கிட்ட பேச வேண்டியதுதானே? அவங்க நியாமானவங்கதான்னு நீ நம்புற இல்ல??’

‘நியாயமானவங்கதான்…ஆனால், என்ன காரணத்தினாலோ என் கேள்விக்கு அவ்வளவு சரியாய் பதில் தரல…மற்ற ஒரு சில டிரைவர்கள் என்ன ஆதரிச்சாலும் வெளிப்படையா பேச பயப்படறாங்க.’

‘நீ கொஞ்சம் எல்லார் கிட்டயும் பேசி பாக்கறதானே?’

‘பேசினேன் சார். அவங்க என் கருத்த ஏத்துக்கறாங்க..ஆனால், நேரிடையா பேச அந்த பத்து ஆசாமிங்கல மொத பயப்படறாங்க.’

எனக்கு சட்டென்று இவன் ஆட்டோவில் ஆளும் கட்சியின் கொடி பறந்தது நினைவுக்கு வந்தது.

‘ஏம்பா…நீதான் ஆளும் கட்சியை சேர்ந்தவன் போல இருக்கே? உனக்கு இங்குள்ள ஆளும் கட்சி ஆசாமிகளைத் தெரியாதா? அவங்க மூலமா ஏதேனும் பண்ண முடியாதா?’ என்றேன்.

‘பண்ணலாம் சார். ஆனா இதெல்லாம் ரொம்ப சின்ன சமாச்சாரம். அதிலே போய் அவங்கள ஈடுபடுத்த நான் அவ்வளவா விரும்பல்ல..’

‘அப்படி என் நினைக்கறே? ஆட்டோ ஓட்டுநர் சங்கம்கறது ஒரு பொதுவான நிறுவனம். அதில் சம்பத்தப் படாதவர்கள் உட்கார்ந்து அதிகாரம் பண்றது சமூகப் பிரச்சினை தானே?’

‘அப்ப கச்சிக்கறாங்க கிட்ட கொண்டு போகலாம்கறீங்க…’

‘போனால் தப்பில்லைன்னு நினைக்கிறேன்,’ என்றேன் நான் சற்று ஜாக்கிரதையாக.

‘நான் என் வண்டில கொடி வச்சு இருக்கறதையே பத்தி கமெண்ட் அடிச்சாங்க…சங்க விதிப்படி இருக்கக் கூடாது. எடுக்கணும்னாங்க..’

‘ஓஹோ?’

‘ஆனால், நான் முடியாதுன்னுட்டேன்.’

‘ம்ம்…’

‘இப்ப நான் சங்க விதிகள மீறறதாவும் அதனால என்ன சங்கத்திலிருந்தும், அந்த ஸ்டாண்டிலேந்தும் வெளியேத்த ரகசியமா பிரசாரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க.’

‘உனக்கு யாருமே சப்போர்ட் இல்லையா?’

‘நாப்பது பேர்ல அந்த பத்து ஆளுங்கள விட்டுடுங்க. மிச்ச முப்பது பேர்ல இருபத்தி எட்டு பேர் என்னாண்ட பேசும்போது எனக்கு சாதகமா பேசறாங்க.’

‘அந்த இரண்டு பேர் யாரு?’

‘அவங்கதான் அந்த சீனியர் ஆசாமிங்க. ‘

‘அவங்க நியாமானவங்கன்னு சொன்னியே?’

‘நல்லவங்கதான். ஆனா கொஞ்சம் அந்த வீக்னஸ் உண்டு,’ என்று ‘தண்ணி’ போடுபவர்கள் என்ற ஜாடை செய்தார்.

‘அந்த இருபத்தி எட்டு பேர்லேயும் ஓரளவு பத்து பெற தாஜா பண்ணி தங்க பக்கம் இழுத்துக்கிட்டாங்க.’

‘அடப்பாவமே’.

‘என்ன அங்கிருந்து விலக்க புகார் எழுதி எல்லார் கிட்டயும் கையெழுத்து வாங்கிட்டு வராங்க. நாப்பத்துலே பத்தொன்பது பேர் கிட்ட வாங்கிட்டாங்க. இன்னும் இரண்டு பேர். போட்டாங்கன்னா நாந்தான் வெளில போகணும். அதனால் தான் உங்க கிட்ட தர்மம் ஜெயிக்குமான்னு கேட்டேன்.’

எனக்கு உண்மையில் ஆச்சரியமாக இருந்தது.

எல்லா இடங்களிலும் போட்டியும், பொறாமையும் நிலவுவது தெரிகிறது. தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் பலப் பரீட்சை நடந்து கொண்டேதான் இருக்கிறது.

இதற்குள், நான் இறங்கும் இடம் வந்து விட்டது.

நான் ஆட்டோவை நிறுத்தத் சொல்லி, பயணத்திற்கான பணத்தை அந்த டிரைவரிடம் தந்தேன்.

அவர் பணத்தை பெற்றுக்கொண்டு ‘என்ன சார். ஒண்ணுமே பதில் சொல்லாம போறீங்க?’ என்று கேட்டார்.

நான் புன்னகை செய்தேன்.

‘நீ பகுத்தறிவு கட்சியை சேர்ந்தவன். இருந்தாலும் சொல்கிறேன். தமிழ் நாட்டில் தேர்தல் சமயங்களில் ஒரு சொல் வழக்கு உலா வருவதுண்டு. அது உனக்கும் தெரிந்திருக்கும். இருந்தாலும் சொல்கிறேன். ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். ஆயினும், தர்மம் வெல்லும்.’ என்பதுதான் அது. நீ அந்த ஸ்டாண்டிலிருந்து நாளையோ, அதற்கும் மறுநாளோ வெளியேற்றப்படலாம். அதனால், உன் வாழ்க்கையோ, தொழிலோ அஸ்தமித்து பொய் விடப் போவதில்லை. ஆனால், பின்னால் ஒரு நாள் அதே ஆட்டோ ஸ்டான்ட் அங்கத்தினர்கள் உன்னால் அழைத்து சங்கத்தில் சேர்த்துக் கொள்வதும் நடக்கத்தான் செய்யும். அதனால், கவலைப் படாதே. போய் வா.’ என்றேன்.

அந்த டிரைவரின் முகம் மலர்ந்தது.

‘ரொம்ப நன்றி சார். கை கொடுங்க. ‘ என்று வழிய என் கையை பிடித்து குலுக்கி விடை பெற்றார்.

ஜெயிக்குமா, ஜெயிக்கதோ -தர்மம் வெற்றி பெரும் என்று ஒருவர் சொல்வதைக் கேட்கும் போது நிச்சயம் மனசில் தனியாக ஒரு சக்தி பிறக்கிறது என்பது நிஜம்தான்.

ஆனால், தர்மம்தான் காலத்திற்கு காலம் மாறுபட்டுக்கொண்டே இருக்கின்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *