எண்பது ரூபா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 3,811 
 

தூரத்தில் எங்கேயோ பௌத்த ஆலயத்திலிருந்து பிக்குகள் பிரித் ஓதும் சத்தம். ‘புத்தம் சரணம் கச்சாமி’ ‘சங்கம் சரணம் கச்சாமி’ என்று விட்டு விட்டுப் புத்தர் பெருமானின் திருப்பாதங்களைத் தொழுகின்ற அடியார்களது ஒலிகூடக் கந்தையாவை அமைதிப் படுத்தவில்லை. படுக்கையில் புரண்டு படுத்த அவனைக் கணநேரத்திற்குள் சுள் என்று குத்திய மூட்டைப் பூச்சி தட்டி எழுப்பிவிட்டது. பக்கத்து அறையில் இருந்த தனிக்குடித்தனக் காரர்களின் பழைய காலத்துப் ‘பிக்பென்’ மணிக்கூடு டாண் டாண் என்று பன்னிரண்டு தடவைகள் அடித்து ஓய்ந்தது. கந்தையாவுக்குப் பெரியதொரு பெருமூச்சு வெளிப்பட்டது. கடந்த காலமும் குடும்ப நினைவுகளும் அவனை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டன.

அப்பொழுது கந்தையாவுக்கு இருபது வயதிருக்கும். நெல்லியடி சென்றல் ஸ்கூலில் படித்து எஸ்.எஸ்.சி யைப் பாஸ் பண்ணிவிட்டு அதற்கு மேலே படிக்க முடியாமல் ஊர்ப்பொடியள் ஒன்றுகூடும் முருகையன் கோவிலின் பிள்ளையார் மண்டபத்திற்கு முன்னால் அந்தப் பன்னீர் மர நிழலில் உட்கார்ந்து அரசியல் தொடக்கம் சினிமா உலகம் வரையில் நண்பர்களுடன் விளாசித் தள்ளுவான் கந்தையா. சிலவேளைகளில் சுவாமியை வைத்துத் தள்ளும் பெரிய சகடைச் சில்லுகளின் மேல் உட்கார்ந்து கொண்டு நண்பர்களுடன் உலக விவகாரங்களையும் ஊர் விவகாரங்களையும் அவன் அலசும் விதமே தனி அலாதியாகவிருக்கும். அப்போதுதான் எல்லோரும் கிளறிக்கல் உத்தியோகத்திற்குப் பரீட்சை எடுப்பதற்கு விண்ணப்பம் போடுகிறார்கள் என்று அறிந்து ‘கோழி மேய்ச்சாலும் கோறண மேந்து உத்தியோகம் வேணுமடா மேனை’ என்று பக்கத்து வீட்டுச் சின்னாச்சியக்கை சொன்னதையும் ஞாபகத்திலை வைச்சுக்கொண்டு தானும் பதினைஞ்சு ரூபா முத்திரையொட்டிச் சமாதான நீதவானைப் பிடிச்சு ஒரு கையொப்பமும் வேண்டித் தன்னுடைய பேரில் ஒரு விண்ணப்பத்தைப் போட்டு வைத்தான். சமாதான நீதவானுடைய பெண்சாதி கூடத் தம்பி ‘நீ கவனமாகப் படிச்சுக் கிளறிக்கல் உத்தியோகம் பார்க்க வேணும். கொய்யாவின்ரை தோட்ட முயற்சி சரிப்படாது. இந்தக் காலத்துப் பொடியளுக்கும் தோட்டஞ் செய்யவோ, குனிஞ்சு நிமிர்ந்து மண்வெட்டவோ தைரியம் இராது. ஏதோ நல்லா வா மேனை. நாலு காசு சம்பாதிக்க வேணும்’ என்று வாழ்த்தி அனுப்பினது அவனுக்கு ஞாபகம் வந்தது.

எப்படியோ சோதினையும் பாஸ் பண்ணித் தபாற் தந்தித் திணைக்களத்திலை வேலை பார்க்க விட்டு விட்டார்கள். கந்தையா வேலையேற்று இப்ப கிட்டத்தட்ட எட்டு வருஷங்கள் முடிந்து விடடன. இன்னும் கந்தையா அந்த அடிப்படை எண்பது ரூபாச் சம்பளத்திலைதான் இருந்து வருகிறான். ஆனால், வேலை அதுவும் கந்தையா கொழும்பிலை அரசாங்க உத்தியோகம் என்றவுடன் சின்னாச்சியக்கை ஊரிலை ஆரையெல்லாமோ பிடிச்சு ஒருபடி தன் மகள் பாக்கியத்தைக் கந்தையாவுக்குக் கலியாணமும் கட்டி வைச்சுப் போட்டா. மகளின் கலியாணம் முடிஞ்ச அடுத்த மாசமே சின்னாச்சியக்கை சிவலோகம் போய்விட்டா. கந்தையாவுக்கு இந்தச் சிவலோகம் பரலோகத்திலை எல்லம் நம்பிக்கையில்லை. ஆனால் பிறப்பிலை சரியான நம்பிக்கை.

எட்டு வருஷத்திலை ஆறு பெண்களுக்கும் ஒரு ஆண்குழந்தைக்கும் தகப்பன் என்ற பெயரைப் பெருமையோடு தட்டிக் கொண்டான் கந்தையா. இதைப்பற்றி நண்பன் ஒருவன் கேட்டபோது ‘நானென்னப்பா உணர்ச்சியற்ற மரக்கட்டையா? அதுவும் இலங்கை பூமத்திய ரேகைக்கு அண்மையில் இருக்கும் உஷ்ண நாடு. அதன் சுவாத்தயத்தில் ஆண்டுக்கொன்றென்ன ஆறுமாசத்திற்கொரு குழந்தை பிறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை’ என்று லாவகமாகப் பேசித் தப்பித்துக் கொண்டான் கந்தையா.

கொழும்பில் ஒரு வீடு எடுத்து ஏழு குழந்தைகளையும் மனைவி பாக்கியத்தையும் கொண்டுவந்து வைத்திருக்கக் கந்தையாவுக்கு எவ்வளவோ ஆசை. வெள்ளவத்தை சவோய் தியேட்டரில் பாக்கியத்துடன் ஒரு ஆங்கிலப்படம் பார்க்க வேண்டுமென்றும் அப்புறம், முன்னாலுள்ள ‘சைனிஸ்’ ஹோட்டலில் அவளை அழைத்துச் சென்று முள்ளுக் கரண்டி பிடித்து ‘நூடிள்ஸ்’ சாப்பிட வேண்டுமென்றும் அவன் பல நாட்களாகக் கனவு கண்டிருக்கிறான்.

பிரதி வெள்ளிக்கிழமையும் வெள்ளவத்தைப் பிள்ளையார் கோவிலுக்குக் கணவனும் மனைவியுமாகத் தம்பதிகள் செல்வதையும் பெண்கள் காஞ்சிபுரம் பட்டுச்சேலை உடுத்தித் தலைக்குப் பூவைத்துத் தேர்போல அசைந்து செல்வதையும் கண்டு தானும் பாக்கியமும் இப்படி இருக்க முடியவில்லையே என்று எத்த்னையோ தடவைகள் மனத்துள் பொருமியிருக்கிறான்.

‘அலறிக்ஸ்’ ஐஸ்கிறீம் கடையில் ஆடும் கதிரையில் உட்கார்ந்து தானும் மனைவியும் ‘புருட் சலாட்’ சாப்பிடவில்லையே என்று வேதனைப்பட்டிருக்கிறான். இத்தனை இன்பங்களுக்கும் ஆசைகளுக்கும் அவனது சம்பளம் ஒத்துவரவில்லை.

ஆம். இன்னும் அவன் எண்பது ரூபா அடிப்படைச் சம்பளக்காரன். மாத முடிவில் மொத்தமாக நூற்றித் தொண்ணூறு ரூபா பத்துச்சதம் வரும். அதில் முத்திரை ஒட்டிக் கையொப்பமிடுவதற்குப் பத்துச் சதம் போக மீதி நூற்றித் தொண்ணூறு. மேலும் அஞ்சல் எழுதுவினைஞர் சங்கச் சந்தாப்பணம் இரண்டு ரூபாய் போக மீதி நூற்றி எண்பது. அதிலும் போன தீபாவளிக்கு என்று எடுத்த உற்சவ முன்பணம் பத்துரூபா கழித்து மொத்தமாக நூற்றி எழுபது கையில் கிடைக்கும்.

இதில் காரியாலய கண்டீனுக்குப் பத்துரூபா. ‘போட்ரெஸ்ரோறண்ட்’டுக்கு முப்பது ரூபா. வெள்ளவத்தை கிருஷ்ணபவனுக்கு இருபத்தைஞ்சு ரூபா. மல்லிகா வீதியிலுள்ள தனது இருண்ட அறைக்கு (பார்வைக்கு அறைபோல இருக்கும்) முப்பது ரூபா. மொத்தம் தொண்ணூற்றி ஐந்து ரூபா போக எழுபத்தி ஐந்து ரூபா. இது மட்டுமா? காமினி லோண்டரிக்கு எட்டு ரூபா. சிகரெட் ஐந்து ரூபா. புகையிரத சீசன் டிக்கட் ஒரு ரூபா. பஸ் போக்குவரத்தும் இடைத் தேனீர்ச் செலவும் பத்து ரூபா. சினிமா பார்த்தால் மாதத்திற்கு மூன்று ரூபா முப்பது சதம். மீதி 42 ரூபா 70 சதம்.

பாக்கியத்திற்கு ஒரு நல்ல சேலை எடுக்கக்கூட இந்தப் பணம் போதாது. இதற்கிடையில் ஏழு பிள்ளை நல்ல தங்காளின் குடும்பம் போலவுள்ள தன் பெரிய குடும்பத்தை எவ்வாறு கொண்டு நடத்துவது?

நல்ல காலம் பாக்கியம் நல்ல தங்காளைப் போலத்தன் பிள்ளைகளைக் கிணற்றுள் தூக்கிப் போடவில்லை. தாய் மீனாட்சியக்கை செய்து வந்த தோசை சுட்டு விற்கும் வியாபாரத்தை அவள் வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தாள். கந்தையாவுக்குத் தன் மனைவி தோசைசுட்டு விற்பது பெரிய கவலையைக் கொடுத்தது. ஆனால் என்ன செய்வது? வாழ்க்கை வண்டி ஓட வேண்டுமே?

ஊரில் மற்ற உத்தியோகத்தர்களின் மனைவிமார் மரக்கறி, மீன் வாங்கக்கூடக் கடைத் தெருவுக்குப் போறதில்லை. ஏதோ சமையலுண்டு அடுத்தவனின் வீட்டுக்கதையுண்டு என்று அவர்கள் உல்லாசமாக இருப்பதை எண்ணி எவ்வளவோ சிந்தித்திருக்கிறான். தன்னுடைய மனைவியும் ஏன் அப்படியிருக்க முடியவில்லை என்று சிந்தித்திருக்கிறான்.

ஆனால் அவன் தான் எண்பது ரூபா அடிப்படைச் சம்பளக் காரனாச்சே! சிங்கள மொழிச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசாங்க ஊழியருள் கந்தையாவும் ஒருவன். சிங்களம் படிக்கவில்லை என்பதால் அவனுக்கு ஆண்டுப்படி உயர்வு (இன்கிறிமென்ட்) இல்லை! இரண்டாந்தர உயர்வுப் பரீட்சை எடுக்கும் வாய்ப்பு இல்லை.

கந்தையாவுடன் ஒரே தினத்தில் சுகாதாரத் திணைக்களத்தில் வேலைக்குச் சேர்ந்த உமாகயிலாயநாதன், இறக்குமதித் திணைக்களத்தைச் சேர்ந்த தில்லைவாணன் ஆகியோர் சிங்களம் எஸ்.எஸ்.ஸி பாஸ் பண்ணி இரண்டாந்தர உயர்வுப் பரீட்சையும் எடுத்துச் சித்தியடைந்து இப்போது கொழுத்த சம்பளம் வாங்குவதும் அவனுக்குத் தெரியும். ஆனால் ஏதோவொரு வைராக்கியம் அவனைச் சிங்களம் படிக்காமல் செய்துவிட்டது.

கந்தையாவுக்கு வேற்றுமொழிகள் மீது வெறுப்பில்லை அல்லது தனது தமிழ் மீது அபார வெறியுமில்லை. ஆனால் பெரும்பான்மை இனம் தனது பலத்தைப் பிரயோகித்துச் சிறுபான்மை இனத்திடம் தனது மொழி ஆதிக்கத்தைத் திணிப்பதை அவன் விரும்பவில்லை. தமிழ் ஊழியர்கள் மூன்று வருடத்துள் சிங்களம் கட்டாயம் படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்திராவிட்டால் அவன் ஒருவேளை சிங்களத்தைப் படித்து ஒரு பண்டிதனாகக்கூட வந்திருப்பான்.

வெசாக் உற்சவத்தை முன்னிட்டு வெள்ளவத்தை டபிள்யூ ஏ.சில்;வா மாவத்தையில் போடப்பட்டிருந்த உயர்ந்த மேடையில் நடைபெற்ற கிராமிய நாடகத்தில் நடிகர்கள் சம்பாஷிக்கும் சத்தம் கந்தையாவின் காதுகளுக்கு எட்டியது.

தான் உத்தியோகம் பார்த்த இந்த ஏழு வருடத்தில் தனியாக நண்பர்களுடன் வெசக் பார்த்ததையும் அவர்கள் இளம் கன்னியர்களை வேண்டுமென்று கிட்டச் சென்று முட்டிமோதித் திரிந்ததையும் நினைத்து பெருமூச்சு விட்டான்.

அவனது தற்போதைய சூழ்நிலையில் எவ்வித கேளிக்கைகளிலுமே நாட்டஞ் செல்லவில்ல. காலையில் வந்த பாக்கியத்தின் – கடிதம் நெஞ்சை உறுத்தியது. ‘மூத்தபிள்ளை செம்பவளம் கிழிஞ்ச பாவாடையுடன் பள்ளிக்கூடம் செல்ல எனக்குக் கவலையாகவிருக்கிறது. பருவம் வந்த அவள் இனியும் கவனிக்காமல் விட முடியாது’ என்று என்னவெல்லாமோ எழுதியிருந்தாள்.

‘பாவம் பாக்கியம் கொழும்பமிலை குழாய்மாட்டின மாப்பிள்ளை என்று நம்பி வந்தாள். உத்தியோகத்துக்கு ஆசைப்பட்டாள் – அனால் அவள் கணவன் கந்தையாவோ இன்னும் எண்பது ரூபா சம்பளக்காரன் – பட்டமில்லை – பதவி உயர்வேயில்லை. ஒரே கதைதான்.

அதிகாலை ஐந்து மணிக்கு ஊதுகின்ற வெள்ளவத்தை நெசவாலைச் சங்கு பூம்…. பூம்….. என்று முழங்கியது. அப்போது விடிந்துவிட்ட தென்பதையும் தான் இரவு முழுவதும் தூங்கவில்லை என்பதையும் கந்தையா உணர்ந்தான்.

பக்கத்துக் கட்டிலில் சுப்பிரமணியம் நன்கு குறட்டைவிட்டு அசந்து தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவனுக்கென்ன? தனிக்கட்டை. கலியாணமும் வேண்டாம் கத்தரிக்காயும் வேண்டாம் என்று விட்டு இருக்கிறான். சிங்களமும் எஸ்.எஸ். ஸி பாஸ் பண்ணிப் போட்டு இரண்டாந்தர உயர்ச்சிப் பரீட்சைக்கு படித்துக்கொண்டிருக்கிறான். வேறு புதிய ஊழியர்களுக்குப் பின்னேர வேளையில் மாதம் பதினைந்து ரூபாய் வாங்கிச் சிங்களம் சொல்லிக் கொடுக்கிறான்.

ம்…. கந்தையா தனது துவாயைத் தட்டித் தோளில் போட்டான். கோபால் பற்பொடியைத் தேய்த்தபின் குளிக்கும் அறையை நோக்கி நடையைக் கட்டினான்.

அவன் குளித்த பிறகு அதே கிடாரத் தண்ணீர் ஒன்பது பேர் குளிக்க இருப்பதும் அவனுக்குத் தெரியும். எனவேதான் நேரத்தோடேயே காலைக் கடன்களை கழிக்கச் சென்று விட்டான். அவனது நடையிலே தளர்ச்சி, உடலிலே சோர்வு. உள்ளத்திலே குமைச்சல். பாவம் கந்தையா இப்பவும் அடிப்படைச் சம்பளம் எண்பது ரூபா.

(சுதந்திரன் – 03.09.1967)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *