ஆட்டோ அங்கிள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 17, 2019
பார்வையிட்டோர்: 6,397 
 

சார் லோன் விஷயமா ஆறு மாசாமா வருகிறேன், இதோ, அதோங்கிறிங்க, என்ன சார் கிடைக்குமா? இல்லைன்னா சொல்லுங்க ,என் அலைச்சலாவது மிச்சமாகும், என அலுத்துக் கொண்டே புலம்பினார். ஆறு மாதமாக ஆட்டோ ஒன்று வாங்க வங்கி லோனுக்காக அலைந்து ஏமாற்றத்தையே சந்தித்த ஆட்டோ ஓட்டுநர் கலைசெல்வன்.

ஆறுமாசம் முன்னரே இருந்த மேனேஜர், இவர் ஜாமீன் போட்ட ஆளு ஒருத்தன் தவணைக் கட்டாத்தாலே இவருக்கும் கடன் தர மறுத்து எழுதி விட்டார், அதன் பின் அந்த ஆளுடைய பணத்தை தானே முன்னின்று வங்கியில் கட்ட வைத்து முடித்து வைத்தார்.

ஆனால் அதையே காரணம் காட்டி அன்று எனக்கு கடன் தர மறுத்து அவரும் பணி மாறுதலடைந்து சென்று விட்டார். அன்றிலிருந்து இவர் அலைந்துக் கொண்டு இருப்பதுதான் மிச்சம். இவர் இழந்தது பல பள்ளிப் பிள்ளைகள், மற்றும் மன நிம்மதியையும்.

ஒரு ஆட்டோவை வைத்துதான் இத்தனை நாள் பிழைத்தோம்,தனது மகனுக்கு ஓர் ஆட்டோ எடுத்துக் கொடுத்து நாமும் உயரலாம் என்று முயன்றால் அது முடியாத காரியமா போகுதே?

ஏழைகள், ஏழைகளாகவே இருந்து , வாழனும்ங்கிறது விதியோ!

காலத்தின் சதியோ?

என தன்னையே நொந்துக்கொண்டு வங்கியில் சோர்ந்து அமர்ந்து இருந்து விட்டு வீட்டிற்கு கிளம்பினார்.

யோவ்,உன்னைத்தேடி காந்தி நகரிலிருந்து வந்தாங்க, இந்தா விலாசக் கார்டு! மாலை வந்து பார்க்க சொன்னாங்க.

என்னது ? யாரு, ஒன்றும் புரியலை கலைக்கு. சரி பார்ப்போம், என சாப்பிட அமர்ந்தான்.

என்னய்யா ஆச்சி, இன்றைக்கும் ஒன்றும் வேலை நடக்கலையா? போதும்யா, இந்த ஒரு ஆட்டோ வைச்சு அவன் ஓட்டி சம்பாதிக்கிறது. நீ அவனுக்காக மெனக்கெட்டு லோனைப் போட்டு நம்மாலே கட்டி முடியுமா? ஏற்கனவே எல்லா ஸ்கூல்லேயும் பஸ்சை வுட்டுடாங்க. யோசிச்சு செய்யா என அறிவுறுத்தினாள் மனைவி.

அவர் சொல்றதும் சரிதான்,நமக்கோ வயசு 60 கிட்ட ஆவப்போவது,கடன் எடுத்து அடைக்க முடியாம உள்ளதும் போச்சுனு ஆயிடப் போவது என தனது மகனை நினைத்து முதல் முறையாக பயந்தான்.

தான் ஆட்டோ ஓட்டிய அந்த காலக் கட்டத்தை நினைத்துப் பார்த்தான், எவ்வளவு மகிழ்வான காலம், பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று பத்திரமாக இறக்கி,திரும்ப வீட்டிற்கு அழைத்து வருவதை இதை ரசித்து செய்தான். அத்தனை குழந்தைகளையும் கண்ணுங்களா !என்றே விளிப்பார். குழந்தைகள் குட்டித் தேவதைகளாய் ஆட்டோவில் பேசி, சிரித்து,அழுது, சமாதானமாகி ஆகா,என்னென்ன அனுபவங்கள்.

பள்ளி விடுமுறை நாட்களில் பித்து பிடித்தவன் போல் வீட்டில் இருப்பார், அந்த அளவுக்கு பிள்ளைகளை நேசித்தார்.

தன் கையில் உள்ள தழும்பு ஒன்றைத் தடவிப் பார்த்தான்.

பல வருடங்களுக்கு முன், தனது ஆட்டோவில் ஆறாம் வகுப்பிலிருந்து பள்ளிக்குச் செல்லும் சுமதி என்ற மாணவி, நினைவுக்கு வந்தாள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் சமயத்தில்,
ஆட்டோவை ஒரு வாலிபன் வழி மறித்து அவளை இறக்கி விடச் சொல்ல, இவர் மறுத்து அவனை விரட்ட முயன்றதில் அவன் கத்தியால் இவர் கையில் மணிக்கட்டில் வெட்டி விட்டு ,
ரத்தம் கொட்டுவதைப் பார்த்தவுடன் ஓடி விட்டான்.என்ன என்று விசாரித்ததில் அவன் ஒரு வருடமாக இவளை பின் தொடர்வதும், காதலிப்பதாகவும் இவள் மறுக்கவே இன்று அவளை தாக்க வந்துள்ளதாதாக அவள் கூறினாள், நடந்ததை சுமதி வீட்டிற்கு சொல்லவேண்டாம் என்று வேண்டிக்கொண்டதால் இவர் மறைத்தது , தனக்கு கையில் எட்டு தையல் போட்டதும், ஆட்டோவே ஓட்டமுடியாமல்,பல பிள்ளைகளின் பெற்றோர்கள் வேறு ஆட்டோவிற்கு மாற்றியதில் அன்றாட சாப்பாடிற்கே கஷட்டப்பட்டது, ஆட்டோவையுத் தவணைக் கட்டாததால் தூக்கி கொண்டுபோனதும், மனைவி கோபித்துக்கொண்டு மகனையும் அழைத்துக்கொண்டு போனது எல்லாம் நினைவில் வந்து போனது.

தன் மனைவி கொடுத்த விலாச அட்டையை எடுத்துக் கொண்டு தேடி அந்த அழகான வடிவமைப்பில் கட்டப்பட்டதே பறைசாற்றியது, வசதியான வீடு என்று.

வீட்டை அடைந்து, சார்,என அழைக்க ஒரு இளம் பெண் துள்ளி வந்து அவர் முன் நின்று வீட்டினுள் அழைத்துச் சென்றாள்.

அங்கிள் நல்லா இருக்கிங்களா? எனக் கேட்டாள்.

இவருக்கோ ஒன்றும் புரியலை, அப்பாவை பார்க்கனும்மா! என்றார்.

நான்தான் உங்கள் வீட்டிற்கு வந்தேன், என் அப்பாவின் கார்டைக் கொடுத்து உங்களை வரச் சொன்னேன்.

ஏம்மா? என்னைத் தெரியுமா? எனக்கேட்டார்.

அவளோ பதிலுக்கு என்னைத் தெரியலையா? எனக் கேட்டாள்.

இவரோ விழித்தபடி தெரியலை, பசங்க எல்லாம் சட்டுனு வளர்ந்திடுறீங்க, எப்படிம்மா கண்டு பிடிக்கிறது? உங்க பேர் என்ன கண்ணு? என்றார்.

சுமதி என்றாள். அவரின் கையைப் பற்றிக் கொண்டு தழும்பைத் தடவிக் கொடுத்தாள்.

அவர் கண்களில் நீர் ததும்பி வழிய ஆனந்தமாக, தன் நிலையிழந்து கையைப் பற்றி கண்ணில் ஒற்றிக் கொண்டார்.

நீயாடா கண்ணு, இப்படி வளர்ந்துட்டே? சின்னப் பொண்ணா உன்னைப் பார்த்தது. என்னையும் ஒரு ஆளா நினைச்சு ஞாபகம் வந்து பார்க்கனும்னு வரச் சொன்னியாம்மா? நீ நல்லா இருக்கனும் என வாழ்த்தினார்.

உங்களாலேதான் நான் உயிரோடவே இருக்கேன்.

இப்போ நம்ம ஊருக்கே இணை ஆட்சியரா பணியில் சேர வந்து இருக்கேன் என்றாள்.

கண்ணீர் ததும்ப..

அப்படியா? ரொம்ப சந்தோசம்.

ஒரு கலெக்டரை என் ஆட்டோ சுமந்திருக்குன்னா எனக்கும் பெருமைதானே, என்று ஆனந்தத்தில் ததும்பினார்.

அப்பா எங்கம்மா? என்றார்.

நீங்கத்தான்! என்றாள்.

அது சரி, அப்பாவைக் கூப்பிடுங்க. என்றார்.

அப்பா இறந்து ஒரு வருடமாகிறது, கொஞ்சம் பொறுங்கள் இதோ வருகிறேன் எனச் சொல்லி வீட்டின் உள்ளே சென்றாள்.

அப்பா, இதைப் பிடிங்க, முதல் சம்பளத்திலே ஏதாவது நல்ல காரியத்திற்கு செலவு செய்யச் சொன்னாங்க எங்க அம்மா, இதை நீங்க எனக்காக வாங்கிக்கனும், என்று அவர் கையில் ஒரு லட்ச ரூபாயைத் தினித்தாள்.

இல்லை,வேண்டாம்,பிரதிபலனா தெரியுதம்மா,என மறுத்தார்

எங்க அப்பா எனக்கு உயிர் கொடுத்தார்,படிப்பைக் கொடுத்தார், ஆனால் நீங்கள் எனக்கு என் வாழ்க்கையை மீட்டுக் கொடுத்தீர்கள், இது பிரதிபலனாக இருந்தாலும் தவறில்லையே,
வாங்கிக் கொள்ளுங்கள்.

அவள் அம்மாவும், அங்கே வந்து குலத்தை காக்கும் குலதெய்வத்திற்கு முதல் சம்பளத்திலே ஆராதனை செய்வதில்லையா? அது போலத்தான், நீங்க ஏத்துக்கிட்டுத்தான் ஆகனும் என வற்புறுத்தினார்கள்.

அவரோ யோசித்தபடி நின்று மறுத்துக்கொண்டே இருக்க..

இது உங்கள் கடமைக்கு கிடைத்த பரிசாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

இது இணை ஆட்சியரின் உத்திரவு மீறக்கூடாது என ஆணையிட்டார்.

மகிழ்ச்சி கடலில் மனிதம் பூத்து குலுங்கியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *