ஈசா உபநிஷத் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: June 28, 2021
பார்வையிட்டோர்: 14,268 
 

ஒரு முறை , வசிஷ்டர், துர்வாசர், விஸ்வாமித்திரர் போன்ற முனிவர்கள், மேரு மலையில் எல்லா முனிவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் .

பெரிய ஞானிகள், முனிகள், ரிஷிகள் அந்த சந்திப்புக்கு வர வேண்டும் எனக் கட்டளை . வராவிட்டால், பெரிய தோஷத்திற்கு, பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு, ஆளாக நேரிடும் எனவும் ஆணை விதித்தார்கள்.

எல்லா முனிவர்களும் ஆஜர். ஆனால், வைசம்பாயனர் எனும் முனிவர் மட்டும் ஏதோ காரணத்தினால், வர முடியவில்லை . இதனால் கோபமடைந்த துர்வாசர், விஸ்வாமித்திரர், வைசம்பாயனரருக்கு பிரம்ம ஹத்தி தோஷம் பீடிக்க சாபமிட்டனர் . ஆனால், வசிஷ்டர் மட்டும் இதற்கு ஒப்புக் கொள்ள வில்லை . அதனால் அவர் வைசம்பாயனர் எழு நாட்களுக்ளுள் சாந்த்ரனாயாதி ஹோமம் பண்ணினால், இந்த சாபத்திலிருந்து பிராயச்சித்தம் பெறலாம் என ஒரு உபாயம் சொன்னார்.

வைசம்பாயனருக்கு, சாபமும் , சாபம் நீங்க விமோசனம் பெற வழியும், திரிசங்கு எனும் அவரது மாணவர் மூலம் தெரிய வந்தது .

சரி என வைசம்பாயனரும் ஹோமத்தை ஆரம்பித்தார் . ஆனால், துரதிர்ஷ்டவசமாக , அவர் தனது குழந்தையை கோபத்தில் காலால் எட்டி உதைக்க , அந்த குழந்தை இறந்து விட்டது. உடனே வைசம்பாயனருக்கு பிரம்ம ஹத்தி தோஷம் பீடித்தது . அவருக்கு ஹோமம் பண்ண அருகதையும் போய் விட்டது .

அந்த ஹோமத்தை அவர், தன் மாணாக்கர்களிலேயே சிறந்த மாணவனான யக்ன வல்கரை தேர்ந்து எடுத்து, “ எனக்கு பதிலாக அந்த யாகத்தை செய் . யாகத்தின் பலனாக என் பிரம்ம ஹத்தி தோஷம் தீர்ந்து விடும்” என்றார்.

ஆனால், யக்ன வல்கர் மறுத்து விட்டார் . “ அந்த யாகம் செய்ய சிறந்த சிஷ்யர்கள் தேவை. நம்மிடம் இருக்கும் மாணவர்கள் அந்த யாகம் செய்ய தகுதி அற்றவர்கள். அதனால், நான் அந்த யாகம் செய்ய மாட்டேன் “

வைசம்பாயனர் எவ்வளவோ சொல்லி பார்த்தார். ஆனால், யக்ன வல்கர் மறுத்து விட்டார். இதனால் கோபம் கொண்ட வைசம்பாயனர், “ இப்போதே என் ஆசிரமத்தை விட்டு வெளியே செல் . செல்வதற்கு முன், நீ என்னிடம் கற்றுக்கொண்ட வேதங்களை, திரும்ப கொடுத்து விட்டு செல் “ என்று ஆணைஇட்டார்.

“ அப்படியே ஆகட்டும்- குருவின் ஆணை ” என்று யக்ன வல்கர், வைசம்பாயனர் சொல்லிக் கொடுத்த “ கிருஷ்ண யஜூர் வேதம்” முழுக்க வெளியே துப்பிவிட்டு , வேகமாக நடையை கட்டினார் . கிருஷ்ண யஜூர் வேதத்தில் பாண்டித்தியம் பெற்ற வைசம்பாயனருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . அவ்வளவு வேதமும் வீணாகிறதே என்ற கவலை அவருக்கு.

தன் மற்ற மாணவர்களை கூப்பிட்டு, “யக்ன வல்கர் துப்பிய கிருஷ்ண யஜூர் வேதம் முழுக்க சாப்பிட்டு விடுங்கள்” என பணித்தார். ரத்தமும் , பிண்டமுமாக இருந்த கிருஷ்ண யஜூர் வேதத்தை எப்படி உண்பது என மாணவர்கள் அசூயை பட்டனர் . அப்போது அந்த மாணவர்களை, தித்திலி பறவைகளாக மாற்றி “ இப்போது யக்ன வல்கர் துப்பிய கிருஷ்ண யஜூர் வேதம் முழுக்க சாப்பிட்டு விடுங்கள்” என்று மீண்டும் ஆணையிட்டார்.

அவர்களும் அப்படியே சாப்பிட்டு விட்டனர் . அந்த , தித்திலி மாணவர்கள் அந்த கிருஷ்ண யஜூர் வேத சாற்றை, “ தைத்திரேயா உபநிஷதுகளாக” பின்னர் மாற்றி எழுதினர் . இன்றும் கிருஷ்ண யஜூர் வேதத்தை சார்ந்த தைத்திரேயா உபநிஷதுகள் பிரசித்தம் .

வைசம்பாயனரை விட்டு பிரிந்த யக்ன வல்கர், சூர்ய பகவானை வேண்டி தவம் இருந்தார். சூர்ய பகவானே நேரில் வந்து, யக்ன வல்கருக்கு “ சுக்ல யஜூர் வேத” த்தை போதித்தார்.

இப்படியாக, வைசம்பாயனர் சுக்ல யஜுர் வேதத்திற்கும், தைதரேயா உபநிஷத் பிறப்பதற்கும் காரணியாக இருந்தார்.

இந்த வைசம்பாயனர்தான் பின்னாளில், ஜனமேஜயன் என்னும் ராஜாவுக்கு, மகா பாரதத்தை போதித்தார். அன்று சொல்லப் பட்ட மகாபாரத கதையை தான் இன்றும் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம், கேட்டுக் கொண்டிருக்கிறோம்!

பின்னொரு நாளில், யக்ன வல்கரை யாரோ கேட்டார்கள் . “நீங்கள் ஏன் வைசம்பாயனரை பிரிந்து வந்தீர்கள் ? “ அதற்கு அவர் சொன்ன பதில் “ நான் எங்கே வந்தேன் ? இது சுக்ல யஜுர் வேதம் வர அவரது நாடகம் ! நான் அதில் ஒரு வேஷ தாரி! இன்றும் நான் அவர் சீடன் தான்!”

யக்ன வல்கர் சுக்ல யஜுர் வேதம் போதித்தார் . பின்னாளில் , அதோடு சேர்ந்தது தான் ஈஸா உபநிஷத் .மிக முக்கியமான உபநிஷத் .

அந்த ஈஸா உபநிஷத் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

‘ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம்’ என்று தொடங்கிறது முதல் மந்திரம்.

ஈசா வாச்யமிதம் சர்வம்

யத்கிஞ்ச ஜகத்யம் ஜகது

தேனா த்யாகேத்ன புஞ்சித

மா கிரத கச்யச்வித்தானம்!

இந்த ஸ்லோகமே மொத்த வேதங்களின் சாரம் ஆகும்,

புலன்கள் காணும் புறப் பிரபஞ்சம் எங்கும், மனம் உணரும் அகப் பிரபஞ்சம் எங்கும் இறைச் சக்தியே நிறைந்துள்ளது என்பது இதன் பொருள். உலகெங்கும் இறைமையால் தீண்டப் படாத பொருள் என்று ஒன்றும் இல்லை.

எனவே, இவ்வுலகை நுகர்வுப் பொருளாகக் கருதாமல், பிறர் பொருளை விரும்பாமல் வாழ்க்கையை நடத்துக என்பது உபதேசம்.

“ஈஷா வாஸ்யம் இதம் ஸா்வம்” இந்த உலகம் அனைத்தும் இறைவனால் நிறைக்கப்பட வேண்டும் என்கிறது இம்முதல் மந்திரம். இந்த உபநிடதத்தின் அல்லது மொத்த வேதங்களின் சாரம் இதுவே ஆகும், இந்த அகிலமெல்லாம் இறைவனால் வியாபிக்கப்பட்டுள்ளது. வியாபித்தல் என்றால் ஒரு அறைக்குள் நறுமணம் போலல்லாமல், பானையில் உள்ள களிமண் போல எங்கும் நிறைந்து காணப்படுகிறது.

பானைக்கு களிமண்ணே காரணம். அதுபோல காரணமாயிருந்து வியாபித்துள்ளது. அனைத்தும் என்பதற்கு வரையறுக்கப்பட்ட பொருள் அல்ல. வரையறைக்குள் அடங்காத அனைத்தும் என்று பொருள். இங்கு உள்ளவர்கள் அனைவரும் உணவு உண்டாயிற்றா என்னும் கேள்வியில் உள்ள ‘அனைவரும்’ என்னும் சொல்லிற்க்கு இங்கு உள்ளவர்கள் என்று மட்டுமே என்று பொருள், அது போல் அல்லாமல் வரையறைக்கு உட்படாதது என்று பொருள். ஈஸ்வரனே இந்தப் பிரபஞ்சம் என்பதுதான் இதன் உட்பொருள்.

இரண்டாவதாக ஈஸ்வரன் என்னும் பாா்வையால் இந்த உலகம் மறைக்கப்பட்டுள்ளது என்று மற்றொரு பொருளும் கொள்ளலாம். இந்த உலகத்தை உள்ளது உள்ளபடியே பாா்ப்பது ஈஸ்வரபாா்வை. ஆனால் நமது விருப்புக்களுடன் நாம் ஒரு உலகத்தை சிருஸ்டி செய்து கொள்கிறோம். அவ்வாறு நாம் உற்பத்தி செய்த பார்வையைத்துறந்து, உள்ளது உள்ளபடியே விருப்பு வெறுப்பு இன்றி பார்க்கவேண்டும்.

வசியம் என்றால் மூடப்படவேண்டும் என்றும் ஈஸாவாஸ்யம் என்பதற்கு இந்த உலகத்தை இறைவன் என்னும் பாா்வையால் மூடப்படவேண்டும் என்றும் பொருள் கொள்ளலாம். இறைவன் என்ற புத்தியினால் இந்த அகில பிரபஞ்சத்தையும் மறைத்துவிடு என்றால் இருமையைத் தியாகம் செய்து பார்ப்பது அனைத்தையும் இறைவன் சொரூபமாகப் பார்க்க வேண்டும் என்று பொருள்படுகிறது.

அடைந்த இந்த ஞானத்தைக் காப்பாற்றுவதற்கு வழி அடுத்து வரும் சொற்றொடாில் வருகிறது. “தேனத்தியக்தேன புஞ்ஜீதா….” தியாகத்தினால் உன்னைக் காப்பாற்றிக் கொள் என்று கூறுகிறது. என்னுடையது, நான் என்று எதையும் ஏற்றுக் கொள்ளும் பாவனையைத் தியாகம் செய்ய வேண்டும். உண்மையில் இந்த உலகில் எந்தப் பொருளும் நம்முடன் சோ்ந்து பிறப்பிதில்லை. என்னுடையது என்பது ஒரு மன பாவனை தான் இதனைத் தியாகம் செய்ய வேண்டும் என்று உபநிடதம் கூறுகிறது.

இது என்னுடையது, இந்த உடல் “நான்“ என்ற எண்ணம்தான் அந்த பொருளையும் நம்மையும் சோ்க்கிறது. இந்த எண்ணத்தை தியாகம் செய்ய வேண்டும். தியாகம் என்பதன் பொருள் “இந்திாியங்களையும் உடலையும் நான் என்னும் பாவனையைத் தியாகம் செய்ய வேண்டும்” என்பதாகும் . பின் இந்த உலகத்தில் மனிதர்கள் மற்றும் பொருள்கள் மீது என்னுடையது என்ற எண்ணத்தினைத் தியாகம்செய்யவேண்டும்.

தியாகம் என்பதற்கு மற்றொரு பொருள், இந்த உலகத்திலிருந்து நீ காப்பாற்றப்படுகிறாய். இந்த உலகம் இருக்கும் வரை உனது சம்சாரம் இருக்கும். இந்த உலகத்தை விட்டுவிடு என்பது இந்த உலகத்தில் உள்ள சத்தியத்தை அதாவது இருக்கும் தன்மையை விட்டு விட வேண்டும். உலகம் வெறும் “நித்யா“, மாயை அல்லது வெறும் தோற்றம் என்று புாிந்து கொள்ள வேண்டும்.

பின்பு “கஸ்யஸ்வித் தனம்“ என்பது யாருடைய பொருளையும் அபகாிக்காதே என்பது. தனம் என்று ஒன்று கிடையாது. எல்லாமே ஆத்மாவாக இருப்பதனால் எதையும் ஆசைப்பட விரும்பாதே. மற்றவர்களுடைய பொருளையும் உன்னுடைய பொருளையும் கூட ஆசைப்படாதே என்று கூறுகிறது.

இந்த ஒரு மந்திரமே முழுமையான மந்திரமாகும்.

இந்த உபநிஷதின் சாந்தி மந்திரம் இவ்விதம் உரைக்கின்றது .

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம்
பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய
பூர்ண மேவா வசிஷ்யதே
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி: II

– ஈஸா வாஸ்ய உபநிஷதம்.

“அதுவும் பூரணம், இதுவும் பூரணம். பூரணத்தில் இருந்து பூரணத்தை எடுத்த பின் பூரணமே எஞ்சி உள்ளது. இவ்வாறு ப்ரம்மம் மாறுபடாதவராக உள்ளார். முழுமைத் தன்மையில் இருந்து குறைவுபடுவதில்லை. எனவே, முரண்பாடு வேண்டாம். உடல், மனம், ஆத்மா மூன்றிலும் அமைதி நிலவட்டும்.”

ஒரு புதிரின்மூலம் உலகத்தை விளக்க முற்படுகின்ற மந்திரம் இது. இறைவன் முழுமையானவராக, பூரணமானவராக இருக்கிறார். அவரிலிருந்து முழுமையான உலகம் தோன்றியுள்ளது. இருப்பினும் தனது பூரணத்துவம் குன்றாமல் முழுமையாகவே இருக்கிறார் அவர். இதனை மூன்று வழிகளில் புரிந்துகொள்ளலாம்.

1. ஒரு தீபத்திலிருந்து எண்ணற்ற தீபங்களை ஏற்ற முடியும். இதனால் முதல் தீபத்தின் முழுமை கெடுவதில்லை. அதிலிருந்து ஏற்றப்பட்ட தீபங்களும் முழுமையாக, நிறைந்த ஒளி தருவனவாகவே இருக்கும்.

2. நாம் எத்தனையோ பேரை நேசிக்கிறோம்; முழுமையாக அவர்களிடம் அன்பு வைக்கிறோம். இதனால் நம்முடமுள்ள அன்பு குறைந்ததாகக் கூற முடியாது. நமது அன்பு முழுமையாக இருக்க, நாம் எத்தனையோ பேருக்கு அன்பை முழுமையாகக் கொடுக்க முடியும்.

3. ஒரு செடியில் எத்தனையோ பூக்கள் மலர்கின்றன. ஒவ்வொரு மலரும் முழுமையாக உள்ளது. முழுமையான மலர்கள் பலவற்றைத் தருவதால் செடியின் முழுமை எந்த விதத்திலும் குறைவதில்லை. ஏனெனில் செடியின் முழுமை வேறு. அதுபோலவே, இறைவனிலிருந்து எத்தனையோ முழுமையான உலகங்களும் அண்ட சராசரங்களும் தோன்றலாம். ஆயினும் அவரது முழுமை ஒருபோதும் குறைவதில்லை.

இறைவனின் முழுமை உலகங்களின் தோற்றத்தாலோ மறைவாலோ பாதிக்கப்படாத ஒன்று; இறைவனிலிருந்து தோன்றியதால் உலகமும் இறையம்சம் பொருந்தியது என்பது இந்த சாந்தி மந்திரத்தின் கருத்து. இந்த உண்மையை உணர்ந்து வாழ்ந்தால் சாதாரண வாழ்கையே நம்மை இறைநெறியில் அழைத்துச் செல்ல வல்லதாகிவிடும். இந்தக் கருத்தையே உபநிஷதத்தின் முதல் மந்திரம் தெரிவிக்கிறது.

வேத மந்திரங்கள் அனைத்தும் இறுதியில் ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்று நிறைவுறுவதைக் காணலாம். சாந்தி: என்றால்அமைதி. மூன்று விதமான தடைகளிலிருந்து நாம் விடுபடுவதற்காக மூன்று முறை சொல்லப்படுகிறது.

1. ஆத்யாத்மிகம்: நம்மால் வரும் தடை; உடல் நோய், மனப் பிரச்சினைகள் போன்றவை.

2. ஆதி பௌதிகம்: பிற உயிர்களால் வரும் தடை.

3. ஆதி தைவிகம்: இயற்கைச் சக்திகளால் வரும் தடை; மழை, இடி, தீ போன்றவற்றால் வருபவை.

மூன்று முறை சொல்வதன்மூலம் இந்த மூவகைத் தடைகளிலிருந்து விடுபட்டு, இந்த உபநிஷதத்தைப் படிப்பதற்கான நமது முயற்சி வெற்றி பெறுவதற்காகப் பிரார்த்திக்கிறோம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *