கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: June 26, 2021
பார்வையிட்டோர்: 67,586 
 

“சூரியனின் மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சில இரசாயன மாற்றத்தால் இந்த காந்த புயல் உருவாகியுள்ளது.

அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் இந்த புயலுக்கு ‘அரோகா’ என பெயர் சூட்டியுள்ளனர். இந்த புயல் பூமியில் அண்டார்டிகா பகுதி வழியே கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பூமியில் புவியீர்ப்பு காரணமாக, காந்தப்புயல் ஈர்க்கப்பட்டு, அனைத்து பகுதியை தாக்க வாய்ப்புள்ளது.அதன் தாக்கம் பல நாட்கள் நீடிக்கலாம் ‘ என்று அமெரிக்க அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

தற்சமயம் அந்த புயல் 7,500 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நெருங்கி கொண்டிருக்கிறது.விஞ்ஞானிகளின் கணிப்புபடி, ஐந்து நாட்களில் பூமியை சூழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது முற்றிலும் வித்தியாசமான ஒரு காந்தப்புயல். மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.மேலும் இதன் தாக்கம் எப்படி இருக்குமென்று கணிக்கப்பட முடியாத நிலை உள்ளது என ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது” என்று கட்டுமரம் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் செய்தியை கேட்டபடியே பதட்டத்துடன் அசோக் அமர்ந்திருந்தான்.

இந்த காந்த புயலின் தாக்கங்கள் எப்படி இருக்குமென்று தெரியாத நிலையில் உலகம் முழுவதும் அந்தந்த நாட்டு அரசு ஊரடங்கு பிறப்பித்தது.அதுபற்றியும்,இந்த காந்தப் புயலால் உலகம் அழியும் நிலை ஏற்படுமென வதந்திகளும் வாட்ஸ்அப்பிலும், பேஸ்புக்கிலும் வந்த வண்ணம் இருந்தன. அதனைப் பார்த்துக் கொண்டு இருந்தான் அசோக். தன் குடும்பத்தாரிடம் காந்தப்புயலை பற்றி பேசிக் கொண்டிருந்தால் அசோக்கின் மனைவி திவ்யா.

சென்னையின் முக்கிய நகரான கேகே நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 7 வது மாடியில் தங்கி இருக்கிறான் அசோக். தொலைக்காட்சியை அணைத்துவிட்டு தன் வீட்டின் பால்கனியில் இருந்து அந்த ஊரின் சூழலை பார்த்துக் கொண்டிருந்தான். மாலை நேரம் சூரியன் மறைந்து இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. அருகே முக்கிய சாலை.அதில் பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
அப்போது செல்போன் மணி அடித்தது.போனை எடுத்து “ஹலோ” என்றான்.

மறுமுனையில் அவன் வேலைப்பார்க்கும் நிறுவனத்தின் மேனேஜர், “ஹலோ, அசோக், ஒரு வாரத்தில் உலகத்தை காந்தபுயல் தாக்கப் போகுது” என்றார்.

“தெரியும் சார்” என்றான்.

“ஆமாம். அதனால,அரசு ‘யாரையும் பணிக்கு வர வேண்டாம்’ என்று உத்தரவு போட்டாங்க. அதனால சில முக்கிய கோப்புகள் எல்லாத்தையும் இன்னும் அரை மணி நேரத்துக்குள்ள என்னோட மெயிலுக்கு எல்லா தகவலையும் அனுப்பு” என்றார்.

“சார் எல்லா கோப்புகளையும் நான் அனுப்புனால் ரொம்ப நேரமாகும்” என்றான்.

“பரவால்லை. அனுப்பு, நான் எல்லா கோப்புகளையும் இன்னைக்கு சரி பாத்துக்குறேன்” அப்படின்னு சொல்லிட்டு மேனேஜர் இணைப்பை துண்டித்தார்.

“ஊர்ல யார்,யாருக்கோ சீக்கு வந்து சாகுறாங்க. இவனுக்கு ஒன்றும் ஆக மாட்டிக்கிது. சாக மாட்டேங்குறான்” என்றுமேனேஜரை திட்டிக்கிட்டு மடி கணினியை எடுத்து தகவல்களை மெயில் அனுப்ப ஆரம்பிச்சான் அசோக்.

அப்போ,குழந்தை வந்து குறுக்க,மறுக்க ஓடி விளையாடியது. உடனே அதட்டினான். மனைவி வந்து, “சாப்பிடுறீங்களா” என்று கேட்டாள்

“இல்ல, இல்ல” என்று சொல்லிட்டு மும்மரமாக வேலைய பாக்க ஆரம்பிச்சேன்.

சாதாரணமாக ஐடி கம்பெனி வேலையில் தினமும் மன அழுத்தம் இருக்கும். தற்போது, வீட்டிலிருந்தபடியே வேலை என்பதால் அசோக்கிற்கு கூடுதல் மன அழுத்தம்.

எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் சமாளிப்பான்.காரணம், மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம். உள்ளூரிலேயே இரண்டு லட்ச ரூபாய் வாங்குவது சும்மா இல்லை.

ஆனால் இந்த வேலையால் அவன் வீட்டில் மனைவி, குழந்தையை சரிவர கவனிப்பது இல்லை.

அவன் தாய்,தந்தையையும் கவனித்துக்கொள்ளாமல் அவர்களை இரண்டு வருடங்களுக்கு முன்பே முதியோர் இல்லத்தில் சேர்த்து இருக்கிறான். தன் இயந்திர வாழ்க்கை நிலையை நினைத்து அவ்வப்போது கூட அவன் வருத்தம் கொண்டது இல்லை.

வேலை இல்லாத நேரங்களில் செல்போனில் முகநூலை பார்த்தபடி முழ்கி போவான்.

இது சில நேரங்களில் அவனுக்கு மிகப்பெரிய சிக்கலை அவனுக்கு ஏற்படுத்தியுள்ளது.

அது என்னவென்றால், எப்பொழுதும் அலைபேசியில் டிக்டாக் வீடியோ போட்டுக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுப்பெண்ணின் வீட்டிற்கு, செல்போனில் முகநூலிலை பார்த்தபடியே மறதியில் ‘தன் வீடு’ என்று நினைத்து பக்கத்து வீட்டுக்குள் நுழைந்திருக்கிறான் அசோக்.

போனைப் பார்த்தபடியே சென்று சட்டையை கழற்றி இருக்கிறான். வீட்டில் உள்ள சோபாவிலும் அமர்ந்திருக்கிறான். வந்தவன் தன் கணவன் என்றே தெரியாமல் வீட்டில் இருக்கும் அந்த பெண்ணும், சீரியலை பார்த்துக் கொண்டே ‘டீ’ கொண்டு வந்து கொடுத்திருக்கிறாள்.அந்த சமயம் அவளின் நிஜக் கணவன் வீட்டிற்குள் வருவதை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறாள். இதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு,அது மிகப் பெரிய சிக்கலில் கொண்டு போய் முடிந்திருக்கிறது. இப்படியான நகர வாழ்க்கையை பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

‘வரப்போகும் காந்தப்புயலின் தாக்கம் எப்படி இருக்குமென்று’ தெரியாமல் திவ்யா தனக்குத்தானே புலம்பினாள்.

வேலையை முடித்து,போனில் முகநூலை பார்த்து கொண்டிருந்தான்.அதில் காந்தபுயல் பற்றிய ஸ்டேட்டஸ் பார்த்து கொண்டிருந்தான்.

அதில் ‘காந்தபுயலின் தாக்கம் உலக மக்களை சாம்பலாக்கும்’ என்று சில ஸ்டேட்டஸ் பார்த்து அச்சம் கொண்டான்.

“இது அரோகா இல்ல.உலகமே அரோகரா” என்று மீம்ஸ்

அப்போது எந்த கவலையுமின்றி விளையாடிக் கொண்டிருந்த தன் மகனை அணைத்து தூக்கினான். உள்ளே இருந்த தன் மனைவியை அழைத்து தன் அருகில் அமரச்செய்து சற்று நேரம் பேச தொடங்கினான்.

“ஒரு ஊரில் பிரச்சனை என்றால் மற்றொரு ஊருக்கு சென்று விடலாம். ஒரு நாட்டின் பிரச்சனை என்றால் மற்றொரு நாட்டிற்கு கூட அகதியாக சென்று வாழலாம். ஆனால் ஒரு உலகுக்கே பிரச்சினை என்றால் வேறு எங்கே செல்லமுடியும். ‘நாளை உயிரோடு இருப்போமா ?’ என்று கூட தெரியவில்லை. அதற்குள்ள, எங்க அம்மா அப்பாவை பார்க்க நினைக்கிறேன்” என்று சொல்லி தன் மனைவியிடம் அசோக் அழுதான்.முதியோர் இல்லம் சென்று தன் பெற்றோரை வீட்டிற்கு அழைத்து வந்தான்.

உலகமே கவலையில் ஆழ்ந்தது.’இன்றே கடைசி’ என்று பலர் கூத்தும்,கும்மாளங்களுமாக இருந்தனர்.

பலர் தன் குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்தனர்.பல நாடுகளில்,பல இடங்களில் கற்பழிப்பு அரங்கேறியது.

பலரது ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன. பலரது கனவுகள் நிறைவேற்றப்பட்டது. பலர் தனக்கு விரும்பியதை வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.பலர் பிறரது ஆசைகளை நிறைவேற்றி மகிழ்ந்தனர். பலர் தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டனர்.

அந்த நாளும் வந்தது.அன்று மாலை 4 மணிக்கு காந்த புயல் தாக்கியது. மஞ்சள் கலந்த கருமையான நிறத்தில் மேகங்கள் மாறின. அது வேற மாதிரியான சூழ்நிலையை உருவாகி போனது. திடீரென இன்டர்நெட், மொபைல் சேவை எதுவுமே செயல்படாமல் போனது. ஆனால் மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்கள் மற்றும் இயற்கைக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல் இருந்தது. ஒரு ஆச்சரியமான காந்தப்புயலாக இருந்தது.

பாதிப்பை குறைக்க,ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். யாரும் வீட்டை விட்டு வெளியில் வராத காரணத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது. உலகம் முழுவதும் இந்த காந்த புயல் தாக்கம் இருந்தது. இன்டர்நெட் சேவை இல்லாததால் யாரும் அலைபேசி,இண்டர்நெட், சமூக வலைதளங்கள் பயன்படுத்த முடியாமலும்,சில முகநூல் பைத்தியங்கள்,முகநூல் போராளிகள் ஸ்டேட்டஸ் போட முடியாமலும், அதைப் பற்றி எந்த தகவலும் மற்றவருக்கு பகிர முடியாமலும் தவித்தனர். தொலைக்காட்சியும் இயங்கவில்லை.

இரண்டு நாட்கள் இதே சூழ்நிலை நீடித்தது. மூன்றாவது நாள் மக்கள் இயல்பாக வெளியில் வர ஆரம்பித்தனர்.

“இந்த காந்தபுயலால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று அனைவரும் தெரிந்துக் கொண்டனர்.வெளியில் நடமாட தொடங்கினார்கள்.

“இன்டர்நெட் சேவை, தொலைத் தொடர்பு சேவைகள் தடைபட்டு இருப்பதால் மற்றவர்களின் நிலைமை,நாட்டின் நிலவரம் தெரியாத சூழல் உருவானது. அலைபேசி கம்பெனிகளின் வேலை இழப்பு ஏற்பட்டது.அனைத்தும் பெரும் நட்டத்தை சந்தித்தது. உலகில் பெரும் பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டதும். 30 வருடங்களுக்கு முந்தைய காலத்திற்கு சென்றது.

அதாவது 1990 ம் ஆண்டு காலகட்டத்தில் வாழ்ந்த வாழ்க்கைதான்.

காந்தபுயலால் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் அழிந்து, முதலில் இருந்த வாழ்க்கை போல் அனைவரின் வாழ்க்கையும் தொடங்கியது.பத்து நாட்களுக்கு பிறகு பழைய கேபிள் இணைப்பு முறையில் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆனது.

காந்தபுயல் தாக்கத்தால் அஞ்சி, வீட்டில் ஏ.சி,பிரிட்ஜ் மற்றும் அனைத்து அறிவியல் சாதனங்களை மக்கள் உபயோகிக்காமல் இருந்தான்.

பல அலுவலகங்களும் கணினி இல்லாத வேலை சற்று மந்தமாகவே இருந்தது. ஐடி கம்பெனிகளில் அசோக்கிற்கும் வேலை இழப்பு ஏற்பட்டது. இன்டர்நெட், கணினி சேவை இல்லாததால் காந்தபுயல் தாக்கம் குறையும் வரை கணினி,இன்டர்நெட் சார்ந்த ஐடி நிறுவனங்கள் முடங்கின.

தன் தந்தையின் ஆலோசனைப்படி, “கிராமத்திற்கு சென்று பண்ணையில் உள்ள மாடுகளை மேய்க்கும் வேலை செய்து, நிலைமை சீரான பிறகு இங்கு வரலாம்” என்று முடிவெடுத்தார்கள்.

உலகமே திடீர் மாய உலகமாக மாறியது. இயற்கை உணவுகளும், உணவுப் பொருட்களும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டன. பாஸ்ட்புட் உணவுகளை மக்கள் வாங்கி உண்ண அஞ்சினர். கெமிக்கல் உணவுகள், அறிவியல் சாதனங்கள் என அனைத்தையும் மக்கள் உபயோகிக்க பயந்தன. பொழுதுபோக்குக்காக மக்கள் பூங்காக்களை பயன்படுத்தினர். அருகில் உள்ள வீட்டில் இருப்பவர்களிடம் நன்றாகப் பேசினார்கள். வாட்ஸ்அப் குழுவில் உரையாடி வந்தவர்கள் இப்போது அருகில் வீட்டில் உள்ளவர்களிடம் மணிக்கணக்காக உரையாடினார். காலையில் உடற்பயிற்சி செய்யவும், நண்பர்களோடு நேரில் சென்று பேசவும் நேரத்தை செலவிட்டார்கள்.

வீட்டு குழந்தைகள்,பக்கத்து வீட்டு குழந்தைகளோடு விளையாடி மகிழ்ந்தனர்.

இப்படியே பல மாதங்கள் நீடித்தன.

அலைபேசி, இன்டர்நெட் இல்லாத வாழ்க்கையை மக்கள் மறந்தனர். புதிய வாழ்க்கை வாழ்வது போல் அனைவரும் உணர்ந்தனர். பேருந்து நிலையங்களில், வெளியில் அலைபேசியை பார்த்தபடி செல்லும் மக்களுக்கு மத்தியில், தற்சமயம் பக்கத்தில் இருப்பவர்கள் யாராயினும் அவர்களோடும், உடன் இருப்பவரோடும் மகிழ்ச்சியாக நலம் விசாரித்து பேசுகின்றனர். செய்தித்தாள் வாசிக்கின்றன. பல புத்தகங்கள் வாசிக்க தொடங்கினர்.

நாட்டில் பல வேலையிழப்பு ஏற்பட்டிருந்த நிலையில் மீண்டும் கம்பெனிகளில் வேலைக்கு ஆட்கள் எடுக்க தொடங்கினார்கள்.அசோக்கிற்கும் அதே நிறுவனத்தில் வேலை கிடைத்து சென்றான். அவனின் மாற்றம்,வீட்டில் உள்ளவர்களை ஆச்சரியப்படுத்தியது.

அலைபேசி மூலம் கையிலேயே உலகத்தை கண்டு,டிவி,ரேடியோ எல்லாம் இருந்தும் எதையும் சரிவர பயன்படுத்தாமல், வெத்து பந்தாவா இருந்தவனின் காலம் மாறிப் போய், “பீட்ஸா, பர்கர்” என்று விதவிதமான உணவு உண்டவன், “என்ன இருந்தாலும் வாழை இலை சாப்பாட்டுக்கு இணையுண்டா” என்று அசோக் கடைசியில் மனமாற்றம் அடைந்திருப்பது வீட்டில் உள்ளவர்களை ஆச்சரியப்படுத்தியது.

எல்லாவற்றையும் நினைத்துப்பார்த்தால், அசோக்கிற்கு எல்லாமே ஒரு மாயையாக தோன்றியது.

“இதுதான் உண்மை. முன்பு வாழ்ந்தது நிழல் வாழ்க்கை” என்று உணர தொடங்கினான்.

இந்த காந்தப்புயல் மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. இது இன்டர்நெட்,தொலை தொடர்பு சேவைகளை தடைப்படுத்தி மனிதத்தை உணர செய்தது.ஆனால்
தொடர்ந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் காந்தபுயலால் பாதிப்பு ஏற்படாத புதுவகை கணினி,அலைபேசி கண்டுபிடிக்க மும்மரமாக செயல்பட்டனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *