புத்தகப்புழு பாலா
கதையாசிரியர்: பே.செல்வ கணேஷ்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: January 29, 2026
பார்வையிட்டோர்: 3,014
அந்த ஊரில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் விடுமுறை நாட்களில் பாலாவின் வீட்டில்தான் இருப்பார்கள்.
அவனை அந்த ஊர் மக்கள் பாலா என்று அழைப்பதைவிட,”புத்தகப்புழு பாலா” என்று தான் அழைப்பார்கள்.
அவன் வீட்டை வீடு என்று கூறுவதைவிட, நூலகம் என்று தான் கூறுவார்கள்.
அவ்வளவு புத்தகங்கள் அவன் வீட்டில் குவிந்துக்கிடக்கும்,அந்த புத்தகங்களை அவன் படித்து பயன்பெறுவதோடு மற்றவர்களும் பயன்பெறட்டும் என்று அவ்வூரின் குழந்தைகளை அழைத்து அவர்கள் கைகளில் ஆளாளுக்கு ஒவ்வொரு புத்தகமாய் கொடுத்து அவற்றை படிக்கச் சொல்வான்.
மேலும்,தான் படித்த கதைகளையெல்லாம் கூறி குழந்தைகளை மகிழ்விப்பான்.
குழந்தைகளுக்குப் புரியாத கதைகளைக் கூட அவர்களுக்கு புரியும் விதமாக கூறி அவர்களை மகிழ்ச்சியடையச் செய்வான்.
தான் படித்த ‘பொன்னியின் செல்வன்,சிவகாமியின் சபதம்,பார்த்திபன் கனவு’ போன்ற வரலாற்று நாவல்களையும்,கதைகளையும் குழந்தைகளுக்கு புரியும் விதமாக கூறுவான்.
ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் அவ்வீட்டில் ஒரே மகிழ்ச்சி ஆரவாரமாக கேட்கும்,ஏனெனில் குழந்தைகள் தாங்கள் எழுதிய கதைகளை வைத்து ஒரு நாடகம் போன்று அவ்வீட்டில் அரங்கேற்றுவார்கள்.
இதுவும் பாலாவின் யோசனை தான்,ஆனால் அந்நாடகத்தின் முடிவில் கட்டாயம் ஒரு கருத்து இருக்க வேண்டும் என்பதுதான் அந்நாடகத்தின் முக்கிய விதி.
இதன் மூலமாக குழந்தைகளின் கற்பனை வளம் மேம்படுவதோடு,அவர்களது நடிப்புத் திறமையும் மேம்படும் என்று பாலா இந்த நாடக ஏற்பாட்டைச் செய்திருந்தான்.
மேலும்,அந்த வீட்டில் குழந்தைகள் மட்டுமல்லாமல் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளும் இருப்பனர்.
ஏனெனில்,பாலா அவர்களுக்கும் ஒருசில விஷயங்களை கற்றுத்தருவான், அதைவிட டிஎன்பிஎஸ்ஸி போன்ற தேர்வு எழுதத் தயாராகும் மாணவ மாணவிகளுக்கு எழும் சந்தேகங்களை தீர்க்க உதவிச்செய்வான்.
சிறுவர், சிறுமியர் எழுதும் சிறுசிறு கதைகள், கவிதைகள்,ஓவியங்கள் போன்றவற்றை மாத இதழ், வார இதழுக்கெல்லாம் அனுப்புவான்.
ஊரில் நடத்தப்படும் கட்டுரைப் போட்டிக்கு மாணவ மாணவிகளை பங்கு பெற வைப்பான்.
செல்போனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும்,போதைப் பொருட்களால் ஏற்படும் தீங்குகளைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக குழந்தைகளை வைத்து ஊர்மக்கள் முன்னிலையில் நாடகம் போல் அரங்கேற்றுவான்.
இப்படி அந்த ஊரில் உள்ள குழந்தைகளின் மகிழ்ச்சியில் ஒரு முக்கிய பங்காற்றி வந்தான் ‘புத்தகப்புழு’ என்று அழைக்கப்படும் பாலா.
காலங்கள் உருண்டன…
அவனிடம் கற்ற குழந்தைகள், மாணவர்கள், மாணவிகள் என பலர் இன்று அரசு வேலையில் அமர்ந்திருக்கிறார்கள், எழுத்தாளராக உருவாகியிருக்கிறார்கள், நடிகர், நடிகையாக மாறியுள்ளனர்.
இப்படி பல சாதனையாளர்களை உருவாக்கிய பாலா அவனது எழுபத்து இரண்டு வயதில், வயோதிகம் காரணமாக விண்ணுலகமடைந்தான்.
அவன் மறைந்தாலும் அவன் வாழ்ந்த வீடானது, அவனிடம் கற்ற மாணவ மாணவிகளால் அதேபோல் வழிநடத்தப்பட்டது.
அவன் இல்லை என்றாலும், அவனது வழியில் இன்னும் பல சாதனையாளர்களும், பாலாக்களும் உருவாகிக் கொண்டுதானிருந்தார்கள்…
தொடர்புள்ள சிறுகதைகள்
கந்தையரின் கடைசி வித்து!
மா.சித்திவினாயகம்
June 14, 2026
கைவிட்ட கடவுள்
எஸ்.பவிஷ்
June 14, 2026
என்ன நியாயம்?
ஜெயந்தி சங்கர்
June 14, 2026