கருணை – ஒரு பக்க கதை

0
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,195 
 
 

தூண்டி முள்ளில் குத்தப்பட்டிருந்த புழு துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு மீன், ஆகா, மனிதனின் கருணையே கருணை! எனக்காக அவன் எங்கேயோ இருந்த புழுவைத் தேடிப்பிடித்து தூண்டி முள்ளில் வேறு குத்தி, தண்ணீருக்குள்
அல்லவா விட்டிருக்கிறான்? என்றது நன்றியுடன்.

அட முட்டாளே! கருணையாவது, கத்தரிக்காயாவது? அவன் உன்னைப் பிடித்துச் சாப்பிடுவதற்காக அல்லவா அதை ஏவி விட்டிருக்கின்றான்! என்றது தவளை.

நன்றிகெட்டதனமாகப் பேசாதே! எப்போதும் நல்லதையே நினை. நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்; கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும்! என்றது அது.

செய் அப்பனே, செய்; உனக்கு எது நல்லதோ அதையே செய்! என்றது இது.

அவ்வளவுதான்; துடித்துக் கொண்டிருந்த புழுவை விழுங்கிய மீனும் துடித்துக்கொண்டே அய்யோ ஏமாந்தேனே! என்றது பரிதாபமாக.

நன்றிகெட்டதனமாகப் பேசாதே! கெட்டதை நினைத்தால் கெட்டது நடக்கும்; நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும்! என்றது தவளை.

– விந்தன் (மே 2014)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *