கண்ணாடியால் விளைந்த கலகம்
கதையாசிரியர்: கி.வா.ஜகந்நாதன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 16, 2026
பார்வையிட்டோர்: 70

சீன தேசத்தில் முதல் முதலாக முகம் பார்க்கும் கண்ணாடி வந்த போது அதை மிகவும் சில பேர்களே வாங்கி வைத்துக் கொண்டார்கள். பெரிய பணக்காரர்கள் அதை வாங்கி மறைவாக வைத்துக் கொண்டு, அவ்வப்போது தம்முடைய முகத்தை அதில் பார்த்துக் கொண்டார்கள்.
ஒரு செல்வர் அதிக விலை கொடுத்து ஒரு கண்ணாடியை வாங்கினார். அதை யாருக்கும் தெரியாமல் ஒரு பெரிய பெட்டிக்குள் வைத்துக் கொண்டார். யாரும் பார்க்காத கோத்தில் அந்தப் பெட்டியிடம் சென்று அதைத் திறந்து கண்ணாடியைப் பார்ப்பார். அதில் தன்முகம் தோன்றுவது கண்டு மகிழ்ச்சி அடைவார். இப்படிச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டேயிருந்து பிறகு பெட்டியை மூடி விடுவார்.
ஆரம்பத்தில் சிலகாலம் இதை யாரும் கவனிக்கவில்லை. சிலநாட்கள் கழிந்தன. அவருடைய மனைவி அவர்தனியே உள்ளே போய்க்கதவை மூடிக் கொண்டு என்னவோ செய்துவிட்டு வருவதைக் கவனித்தாள்…ஒவ்வொரு நாளும் அந்தச் செல்வர் ஒருவரும் அறியாதபடி அப்படிச் செய்ததனால் அவளுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. அவரைக் கேட்காமல் உண்மையை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் பிறந்தது.
ஒரு நாள் அவர் வீட்டில் இல்லாதபோது அந்த அறையைத் திறந்து உள்ளே போனாள். மறுசாவி போட்டுப் பெட்டியைத் திறந்து பார்த்தாள். அதில் இருந்த கண்ணாடியில் அவள் முகம் தெரிந்தது. ஆனால் அதுதன் முகம் என்று அவள் தெரிந்து கொள்ளவில்லை. யாரோ ஒரு பெண்மணியைத் தன் கணவர் அந்தப் பெட்டிக்குள் ஒளித்து வைத்திருக்கிறார் என்று எண்ணினாள். அவளுக்குத் தன் கணவர் மேல் கோபம் வந்தது.
அன்று கணவர் வந்தவுடன் “உங்கள் திருட்டுத்தனம் எங்களுக்குத் தெரிந்து விட்டது” என்று கோபமாய்ச் சொன்னாள்.
”என்ன திருட்டுத்தனத்தைக் கண்டு விட்டாய்?” என்று செல்வர் கேட்டார்.
”நான் உங்களை நல்லவர் என்று எண்ணி யிருந்தேன். நீங்கள் பொல்லாதவர் என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்” என்று அவள் சொன்னாள்.
”என்ன தெரிந்து கொண்டாய்? அதைச் சொல்” என்றார் அவள் கணவர்.
”அதைச் சொன்னால் வெட்கக்கேடு; ஊராரிடம் சொன்னால் மானமே போய் விடும்” என்றாள் அவர் மனைவி. –
”இன்னதென்று சொல்லாமல் ஏன் இப்படிக் கோபமாகப் பேசுகிறாய்?” என்று மறுபடியும் அவர் கேட்டார். –
”நீங்கள் வேறு ஒரு பெண்ணை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று குற்றம் சாட்டினாள் அவள்.
”வேறு பெண்ணா? என்ன உளறுகிறாய்!”
”நானா உளறுகிறேன்? உள்ளதைச் சொன் னால் எரிச்சல் என்பார்கள். நீங்கள் ஒவ்வொரு
நாளும் மறைவாக உள்ளே போய் என்னவோ செய்கிறீர்களே என்று கவனித்தேன். குட்டு வெளிப்பட்டது. நீங்கள் வேறு ஒரு பெண்ணை உள்ளே அந்தப் பெட்டியில் வைத்திருக்கிறீர்கள் என்பது இன்றைக்கு எனக்குத் தெரிந்து விட்டது. இனிமேல் உங்களோடு வாழ்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை. அவளையே கட்டிக் கொண்டு அழுவுங்கள்” என்று அழத் தொடங்கினாள்.
அவள் கணவர் ஒன்றும் தெரியாமல் விழித்தார். அப்போது அங்கே ஒரு புத்த சந்நியாசி வங்தார். அந்தக் காலத்திலேயே சீன தேசத்தில் புத்த மதம் பரவியிருந்தது. அங்கங்கே புத்தசன்னியாசிகள் இருந்துமக்களுக்கு உபதேசம் செய்துவந்தார்கள். அவர்கள் தம்தலையை மொட்டையடித்திருப் பார்கள். அவர்களை பிட்சுகள் என்பார்கள்.
வீட்டுக்குள் வந்த பிட்சு கணவன் மனைவி இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். “ஏன் சண்ட போடுகிறீர்கள்?”என்று அவர் கேட்டார்.
”இவர் வேறு ஒரு பெண்ணைக் கொண்டு வந்து இந்த அறையில் பெட்டியில் வைத்திருக்கிறார். எனக்குத் தெரியாமல் ஒவ்வொருநாளும் அவளைப் பார்த்துப் பேசி வருகிறார்”என்று. அவள் குறை கூறினாள்.
”அப்படி நான் செய்யவில்லை, இவள் சொல் வது வீண்பழி” என்றார் கணவர்.
‘இவா சொல்வது பொய் என்பதை நானே நிரூபிக்கிறேன். இந்த அறைக்குள் வாருங்கள் சுவாமி!’ என்று சொல்லிப் புத்த பிட்சுவை அவள் உள்ளே அழைத்துச் சென்றாள்.
”அங்தப் பெட்டியை நீங்களே திறந்து பாருங்கள்” என்றாள்.
அந்த சந்நியாசி கண்ணாடியை அதுவரையில் பார்த்ததில்லை. இப்போது பெட்டியைத் திறந்து பார்த்தார். கண்ணாடியில் அவருடைய மொட்டைத் தலையும் முகமும் தெரிந்தன. அந்த முகம் தம்முடையது என்பதை அவர் தெரிந்து கொள்ளவில்லை. உடனே அவர், “பெண்ணே, நீ கவலைப்படாதே; இந்தப் பெண்’ அவமானம் தாங்காமல் தன் தலையை மொட்டையடித்துக் கொண்டு விட்டாள்” என்று கூவினார்.
அதைக்கேட்ட செல்வர் பிரமித்துப் போய் நின்றார்.
– தேன் பாகு (சிறுவர் கதைகள்), முதற் பதிப்பு: ஏப்ரல் 1991, அமுத நிலையம் லிமிடெட், சென்னை.
![]() |
கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் (1906-1988). இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அச்சம் தவிர்!
வளர்கவி
April 21, 2026
மூவர் செய்த மேஜிக்
இரா.கலைச்செல்வி
April 18, 2026
தேன்பாகு
கி.வா.ஜகந்நாதன்
April 16, 2026
