மூவர் செய்த மேஜிக்
கதையாசிரியர்: இரா.கலைச்செல்வி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 18, 2026
பார்வையிட்டோர்: 99

ஒரு வீட்டில் ஆக்சிஜன் என்ற பெயரில் ஒரு அக்காவும், ஹைட்ரஜன் என்ற பெயரில் இரண்டு இரட்டை சகோதரர்களும் (தம்பிகள்) இருந்தார்கள்.
ஆக்சிஜன் அக்கா கொஞ்சம் அமைதியானவள். ஆனால் அந்த இரண்டு ஹைட்ரஜன் தம்பிகளும் செம வாலு பசங்க! அவர்கள் எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பார்கள். கட்டிப்பிடித்து உருளுவார்கள். அவர்களால் வீடே அமர்க்களப்படும்.
ஒரு நாள் அவர்களின் அம்மா சொன்னார், “நீங்க மூணு பேரும் தனித்தனியாக உங்க இஷ்டத்துக்கு விளையாண்டு வீட்டை அலங்கோலப்படுத்துகிறீர்கள். நீங்கள் மூவரும் சேர்ந்து ஒரே இடத்தில் ஒரே அறையில் விளையாடினால் என்ன.? அந்த அறையை மட்டும் நான் பிறகு ஒழுங்கு படுத்திக் கொள்வேன். இல்லையெனில் இனி நீங்கள் தான் அந்த இடங்களை பழையபடி ஒழுங்குபடுத்த வேண்டும். நீங்கள் மூவரும் ஒரே அறையில் சேர்ந்து விளையாடினால் உங்களுக்கு ஒரு நல்ல பரிசு தருவேன்” என்றார்.
உடனே அந்த மூன்று பேரும் யோசித்தார்கள். ஆக்சிஜன் அக்கா நடுவில் நின்றார். அக்காவின் வலது பக்கம் ஒரு ஹைட்ரஜன் தம்பி வந்து கையைப் பிடித்துக்கொண்டான். அவளின் இடது பக்கம் இன்னொரு ஹைட்ரஜன் தம்பி வந்து கையைப் பிடித்துக்கொண்டான். மூவரும் சேர்ந்து சுற்று சுற்றி விளையாண்டார்கள்.
உடனே அந்த அறையில் ஒரு மேஜிக் நடந்தது. இப்போது அக்காவும் , இரண்டு தம்பிகளும் மூவரும் கைகோர்த்து நின்று , சுற்ற ஆரம்பித்தவுடன், தனித்தனியே ஜாலியாக வாயுவாக சுற்றிக்கொண்டிருந்த அவர்கள், சட்டென்று குளிர்ச்சி அடைந்து, தெளிவான நீர்த்துளியாக மாறி , மாயாஜாலமாய் அந்த அறை முழுவதையும் நனைத்து விட்டனர். அந்த அறை முழுவதும் தண்ணீர்.
அம்மா அந்த அறையை வந்து பார்த்து ஆச்சரியப்பட்டு போனாள். குழந்தைகள் சேர்ந்து விளையாடியதும் ,இந்த அறை குளு குளு என்று சுத்தமாக இருக்கிறதே,! எப்படி .? பெரிய ஆச்சரியமாய் இருக்கிறதே என்று கூறிவிட்டு ,தனது குழந்தைகளை அடுத்த அறையில் போய் சேர்ந்து விளையாடச் சொன்னாள்!
என்ன குழந்தைகளே உங்களுக்கு இந்த உண்மை விளங்குகிறதா?
ஒரு ஆக்சிஜன் வாயு அக்காவும், இரண்டு ஹைட்ரஜன் வாயு தம்பிகளும் இணைந்தால் என்ன கிடைக்கும்?
தண்ணீர் என்பது தான் அறிவியல் உண்மை.
![]() |
இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க... |
