மண்டை ஓட்டின் மீள் அடக்கம்
கதையாசிரியர்: சு.அப்துல் கரீம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 20, 2025
பார்வையிட்டோர்: 77

அந்த மனுஷன் பேரு கட்டையன்.
ஆமா, பேரிலே என்ன கிடக்குது?
மனுஷனை நேரே பார்த்தால், இடுப்பிலிருந்து நிலம் வரைக்கும் தொங்கும் உயரமான கம்பம் மாதிரி இருப்பான் — சும்மா வெறும் எலும்பும் நரம்பும் மட்டும்தான். மனுஷன் நிழல் தர மாட்டான்.
ஆனா, அவன் நிறமோ கருவாட்டுக் கறியை வெயிலில் போட்டுப் பதப்படுத்தியது போல, இருண்டு, கறுத்து, கரித்துப் போயிருந்தது!
அவனோட கைகளைப் பற்றி என்னத்தைச் சொல்வது? செங்கல்லை அடுக்கி வெச்சுக் காயவைத்தது போல வெடிச்சுப் போய், அதில் இந்த உலகத்தின் வியர்வையும், கபருக்குக் குழிதோண்டி ஒரு வேளை சோற்றுக்காக வாங்கிய அன்றாடங்காய்ச்சியின் வறுமையும் — அதுக்குப் பேர்தான் பசை! — கெட்டியாக ஒட்டிக்கிடந்தது. கழுவித் துடைக்க முடியாத அழுக்கு!
ஆனா இந்தப் பக்கம் — கட்டையனோட நெஞ்சு மட்டும் இன்னமும் கொதிச்சுக் கிடந்தது. என்ன கஞ்சித்தண்ணியை ஊத்தினாலும் அணையாத நெருப்பு அது.
“பசி தாங்கனுமா? ஆமா, தாங்குறேன். வியர்வை சிந்தனுமா? எக்கச்சக்கமாய்ச் சிந்துறேன். ஆனா, யாராவது வந்து, ‘பாவம்டா இவன்!’ன்னு சொல்லிட்டாங்கன்னா — அது சாவுக்கும் மேலான கிண்டல்! சாவைக்கூடப் புன்னகையோடு சமாளிச்சிடுவேன்; ஆனா, அந்த ‘பாவம்’ங்கற வார்த்தையைக் கண்ணில் பார்த்தாலும் எனக்குக் குமுறல் வராதா பின்னே!”
என்று உள்ளுக்குள்ளேயே சிரித்துக்கொண்டான்.
அந்தச் சிரிப்பு, உதட்டோட ஒரு ஓரத்தைக் கிழிச்சிக்கிட்டு, உள்ளே குபுகுபுன்னு எரிஞ்ச நெருப்போட புகையைக் கக்கியது. அது வெறும் சிரிப்பல்ல — அது அடக்கப்பட்ட கோபத்தின் எரிமலைப் புன்னகை.
அந்தக் கோபம், அணைவதற்குத் தண்ணீர் ஊற்றினால் இன்னும் கொதித்தெழும் எண்ணெய்போல் கட்டையனின் நெஞ்சில் களிம்பாகப் படிந்திருந்தது.
இல்லாவிட்டால், கட்டையன் என்றைக்குமே தெருவோரம் யாரோ தூக்கி எறிந்த கல்லு மாதிரித் தேங்கிப் போயிருப்பான். அந்தக் கல்லுக்கு மேலேதான் — இந்த வியர்வைப் பசையும், வயிற்றைக் கிள்ளும் பசியின் கடுப்பும், உள்ளுக்குள் சுட்டெரிக்கும் கோபமும் அதனோடே ஒட்டிக்கிடந்ததால்தான் — அது இன்னமும் உயிரோட அசையுது போலத் தோன்றியது!
அந்த அசைவுதான், இந்த உலகத்தில் எஞ்சியிருக்கிற அவனோட வாழ்க்கை!
அழுக்கைப் பிடிச்சு, ‘இனிமேல் கிழிய முடியாதுடா’ என்று ஒயரு மாதிரி தொங்கிய லுங்கியைப் பார்த்தால் தெரியும் இவன் உலகம். வெயிலில் காய்ந்து, மாம்பழத்தைத் தோல் உரித்தது போலப் பட்டை எடுத்திருந்தது அவனோட முகம்.
இந்த மனுஷன் தோண்டிய குழிகளை எல்லாம் கணக்கு எடுத்தால், அவன் இந்த வாழ்க்கையில் வாங்கிய அடிகளோடு சரியாக இருக்கும். இதுக்கு சாட்சி யார்?
கட்டையனோட உலகம் ரொம்பச் சுருக்கம். அது எவ்வளவு தெரியுமா?
இங்கிருக்கிற அல்-நூர் ஜூம்மா பள்ளிவாசலும், அதையொட்டிய ஹஜ்ரத் ஸிராஜுத்தீன் நூர் ஷா அவுலியா தர்ஹாவும், அப்புறம் அந்த கபர்ஸ்தானோட மௌனமும்.
அவனுடைய ராஜ்ஜியம் அவ்வளவுதான்.
மழையோ, வெயிலோ, குளிரோ, பேய்க் காற்றோ — எது வந்தாலும் சரி, கட்டையனோட மண்வெட்டிக்கு ஓய்வு கிடையாது. சதா, ‘டொக் டொக், டொக் டொக்’ என்று மய்யத்தை* புதைக்கத் தாளம் போட்டுக்கிட்டே இருக்கும்.
இந்தப் பிழைப்பில்தான் என்ன ஒரு நியாயம்!
அவனுக்கு நியாயம் கிடைப்பது ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் — அவன் தோண்டும் குழியின் ஆழத்தில்! அவ்வளவுதான்.
அதற்கு மேலே இந்தக் கட்டையனுக்கு எதுவுமே இந்த மண்ணில் சொந்தமில்லை.
அன்னிக்கு, அந்தத் தர்ஹா பக்கத்துலேயிருந்து காத்துல மிதந்து வந்தது சத்தம் மட்டுமில்லை — அது ஒரு சலிப்பு.
உயிரோட இருப்பவள் போடும் சத்தம்!
ஒரு பொம்பளை, யாரையோ கெட்டியாகக் கட்டிக்கொண்டு, தலைவிரி கோலமா — அது ஒரு சடங்கு, இல்லை, ஒரு நாடகம்! — விம்மிக் கொண்டிருக்கிறாள்.
அந்தச் சத்தம், கட்டையன் தோண்டிக் கொண்டிருந்த குழியின் பாதாளம் வரைக்கும் வந்து, அங்கேயே உட்கார்ந்துகொண்டு, ‘கிகிக்’ என்று நாலு பல்லைக் காட்டிச் சிரித்தது போலிருந்தது!
அவளை, அவளோட தாயும், ஒரு தம்பியும் கைப்பிடிச்சுத் தாங்கி நிக்கிறாங்க. அங்கே… பச்சைப் பசேலென்ற ஜிப்பாவும், தலைக்கு ஒரு தப்பங்கட்டிய தலைப்பாகையும் வெச்சுக்கிட்டு, ஒரு மந்திரிப்பவர் நின்னார்.
அவர் அரபியிலே சூரா*க்களை ஓதி, முகத்துல தண்ணியத் தெளிச்சுக்கொண்டிருந்தார்.
வரப்போகிற ஜனாஸா*வின் சொந்தக்காரர் — அந்தப் பணக்காரச் சாயல் கொண்ட அன்வர் பாய் — வேலையை மேற்பார்வை பார்த்தபடியே, அந்த அலறலைக் கேட்டு, உதட்டை ஒரு பிதுக்கு பிதுக்கிட்டு, கட்டையங்கிட்ட சொன்னார்:
“பாவம்ய்யா… பேய் பிடிச்சிருக்காம்ல?”
குழிக்குள்ளே மல்லாக்கக் கிடந்த கட்டையன், மண்ணுக்கு மேல தன் மண்டையை மட்டும் நீட்டினான்.
வெற்றிலைக் கறை பிடிச்சு, சலிச்சுப் போன பல்லைக் காட்டி ஒரு சிரிப்பைச் சிதறவிட்டான். சிரிப்பா அது? இல்லை — வாழ்க்கையோட அவமானத்துக்கே அவன் துப்பிய புன்னகை.
“எங்க அய்யா இங்கதான் அவரு சாவுற வரைக்கும் ஒரு வாய் கஞ்சிக்குக் கூலி வேலை பார்த்தாரு. நானும் இந்த கபர்ஸ்தான்லதான் என்னோட பதினைஞ்சு வயசுலேருந்து புழு மாதிரி கெடக்கிறேன்.
இங்க பேய்-கீய்ன்னு மாயமோ மர்மமோ ஒண்ணும் கெடயாது பாய்… செத்துப் போனவன்தான், உயிரோட கஷ்டப்படுற நம்மள விட நிம்மதியாப் போய்ச் சேர்றான்.
இந்தப் பொண்ணு எதுக்குப் புலம்புறாளோ, இந்த ஹஜ்ரத் எதை விரட்டுறாரோ — அதெல்லாம் நமக்கு எதுக்கு?
ஆனா ஒண்ணு சொல்றேன் பாய்… நம்ம வயித்துப் பஞ்சத்தைப் பாத்து, அந்தக் கொடுமையைப் பாத்து, பேய்க்கே குமட்டிக்கிச்சு போல!
நான் தோண்டுன இந்தக் குழிக்குள்ள நிக்கக்கூட அதுக்குத் தைரியம் இல்லை பாருங்க!”
அவன் சிரிச்சது கிண்டல் இல்ல — அதுதான் அடிப்பட்டுப் போன கசப்பின் நிர்வாணமான சத்தியம்!
அன்வர் பாய் ஒரு சலிப்போடேயே தலையை ஆட்டிச் சிரிச்சுப்புட்டு, சொன்னார்:
“அப்படித்தான் இருக்கும் கட்டையா… உன்னையப் பேய் பிடிக்க வந்தா, நீ மண்வெட்டியாலேயே அதை அடிச்சு, மறுபடியும் குழி தோண்டிப் புதைச்சிடுவியோன்னு பயந்துதான், அதுங்க உன்னை தொடாமப் போயிருக்கும்!”
என்று சொல்லிவிட்டு, டீக்கடைப் பக்கமாகக் காலை நகர்த்தினார்.
ஏனென்றால் — மனுஷனுக்கு டீ முக்கியம்!
அவர் போனதும்…
கட்டையன் மறுபடியும் மண்வெட்டியப் பிடிச்சான்.
‘டொக்!’ — ஒரு சத்தம்.
மண்ணைத் துளைத்துக்கொண்டு போகவேண்டிய மண்வெட்டி, எதையோ உலோகம் போல மோதி நின்னுச்சு.
மண்ணை ஒரு கணம் விலக்கினான் —
பளிச்!
ஒரு மண்டை ஓடு!
அதுவும் சும்மா இல்லை. மண்டை ஓட்டை எடுத்த அந்தக் கெட்டியான கைகள், எரிச்சல்ல ஒரு நொடி நடுங்குச்சு.
“இவ்வளவு நேரம் பேய் இல்லன்னு சவால் விட்டுட்டு…”
என்று மனசுக்குள்ளே ஒரு குரல் சொன்னது.
சாய்ந்திருந்த நெத்தியும், அந்த அகலமான அமைப்பும் —
“ஆமாம்! ஞாபகம் இருக்கே!”ன்னு கட்டையனோட மனசுக்குள்ளே ஒரு பல்ப் எரிஞ்சுச்சு!
அந்த மண்ணறைப் பூமி, என்றைக்குமே பழைய கணக்கெல்லாம் மறக்காது போல!
மண்ணோடே புதைந்து, வெப்பமே இல்லாத அந்தக் குளிர்ந்த எலும்புக் கூடு — கட்டையனோட குடலை ஒரு புண்ணாக்கிக்கிட்டுக் கிடந்த பழைய வெறுப்பை, பசி போலக் கொடிய வெறுப்பை! — கிளறி விட்டுச்சு.
அவன் மறக்க முயன்றதெல்லாம்… மறைக்க நினைத்ததெல்லாம்… தப்பித்துப் போகப் பார்த்ததெல்லாம் —
அந்தக் குளிர்ந்த ஓட்டின் முன்னாலே மறுபடியும் நிஜமா நின்னுச்சு!
அந்த மண்டை ஓடு…
ஒரு காலத்தில் ஊரோட பணக்காரன், கமால் பாஷாவோட ஆணவ முகம்!
“டேய் கட்டையா, இங்க வா!”
அவன் அதிகாரமா கத்துன குரல், இன்னும் இந்த விசாலமான கபர்ஸ்தானத்தின் காத்துல எதிரொலிச்சுச்சு.
தலை குனியாத நடை, சதா சர்வகாலமும் பளிச்சென்று சலவை செஞ்ச வெள்ளை வேட்டி, சட்டை! அது உடையல்ல; அது அவனோட அதிகாரம்!
அவன் சும்மா இல்லை.
ஒரு ஏழு-எட்டு வருஷம் முன்ன நடந்த சங்கதி. கட்டையனோட பையனுக்கு அப்போ ஒரு இரண்டு வயசு இருக்கும். கட்டையனுக்கு சாராயப் பழக்கம் முளைச்சு, கூடவே வெளியூர்ப் பொண்ணு மேல ஒரு ‘காதல்’ வேஷம் அப்போதான் ஆரம்பமாயிருந்துச்சு.
இதெல்லாம் சும்மாவா? ஏழ்மையில் ஒரு கவிதை!
அப்போ தீபாவளி நேரம் வேற. மனைவி, மகனுக்கு நல்ல டிரஸ், பட்டாசு வாங்கணும். கூடவே, அந்த வெளியூர்ப் பொண்ணுக்கும் ஒரு பட்டுப் புடவை வாங்கிக் கொடுத்துட்டு, அவளோட குடிச்சுத் தன் இருண்ட இச்சையைத் தீர்த்துக்கிறணும்.
இந்தக் கூடுதல் செலவுக்காகத்தான் கட்டையன் கமால் பாஷா வீட்ல தோட்ட வேலைக்குப் போனான்.
அப்போதான் அந்தக் கூப்பாடு. கமால் பாஷாவின் பொண்டாட்டி, தன் நகைப்பெட்டியும் பணமும் காணாமப் போனதா — கத்தியிருக்காள்!
வீட்ல வேலை செஞ்சவன் கட்டையன் மட்டும்தானே? சந்தேகம் அவன் மேலதான்.
கமால் பாஷா ஆவேசமாகக் கத்தினார்:
“நீதான் எடுத்திருக்கணும்! உன்னைத் தவிர வேற யாரு இங்க வந்து தொலைப்பான்!”
கட்டையன்,
“ஐயா, நான் திருடலை!”
என்று கெஞ்சினான்.
அவனுடைய வார்த்தைக்கும் பசிக்கும் யார் மதிப்புக் கொடுப்பாங்க? அவர் காதில் வாங்கலை. போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். போலீஸ்காரங்க வந்து, விசாரணைன்னு சொல்லி, இழிவா நடத்துனாங்க.
“ஆமா… இவன் பெரிய ஜமீன்தார்!”
ன்னு கேலி செஞ்சாங்க.
அங்கேதான் கட்டையனோட ஆண்மையே ஒரு நொடி குனிஞ்சு போச்சு. போலீஸ்காரங்க சொன்ன வார்த்தையிலதான் எவ்வளவு உண்மை!
“உன் கிழிஞ்ச உடையும், கலங்கின முகமுமே நீ திருடன்னு காட்டுது!”
அந்த வார்த்தையைத் தாங்குற சக்தி கட்டையன் கிட்ட இல்லை. சும்மா வெறும் எலும்பும் நரம்புமாய் இருக்கிறவனுக்கு, இவ்வளவு கனமான வார்த்தை எப்படித் தாங்கும்?
ஆனா, கொஞ்ச நேரத்திலே…
அந்தச் சீமைக் காட்டுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.
கமால் பாஷா வீட்லயே வேற எடத்துல நகைப்பெட்டியும், பணமும் கிடைச்சுப் போச்சு!
அது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு!
கட்டையன் திருடன் இல்லை என்பதைவிட, இந்தச் சமூகத்தின் நியாயம் எவ்வளவு அநியாயம் என்பதை அந்தப் பெட்டி, சத்தமில்லாமல் நிரூபித்துக் காட்டியது.
போலீஸ்காரங்க கிட்ட:
“சந்தேகம்தான். விட்டுடுங்க!”
ன்னு சொல்லி அனுப்பி வெச்சாங்க.
இந்த உலகத்திலே, “சந்தேகம்தான்” என்று சொல்லி ஒரு மனிதனின் கௌரவத்தை அடித்து நொறுக்கிட்டு, அப்புறம் “மன்னிச்சுடுங்க” என்று சொல்வது ஒரு பெரிய தர்மம் போல!
கட்டையனோட மனசுல, அன்றைக்குத் திருடப்பட்ட அவனோட கௌரவம் ஒரு ஆறாத தழும்பாய் கெடந்துச்சு.
மண்டை ஓடு அந்தக் காயத்தை இப்போது மறுபடியும் கிண்டிவிட்டது.
அவன் அந்தக் கமால் பாஷாவின் மண்டை ஓட்டை வெறுப்போடு பார்த்தான்.
எட்டு வருடங்களாகப் புதைந்திருந்த அந்த வெறுப்பு — இன்னமும் கட்டையனுக்குக் குறையவில்லை.
மண்டை ஓட்டைத் தூக்கி, ஒரு ஆவேசத்தோடே, தூரமா இருந்த குப்பைக் குவியல் மேலே, ‘சட்’டென்று எறிஞ்சு விட்டான்.
அது அங்கேயும் சும்மா இல்லை. ஒரு உருட்டு உருண்டு, ஒரு பக்கமாகச் சாய்ந்து, அவனைப் பார்த்து, கேலி செய்ற மாதிரி இருந்தது.
போச்சு! பிணத்தை அடக்கம் செய்யப் போனால், அங்கே அடக்கமில்லாத மண்டை ஓடு!
அவனுக்கென்ன?
இப்போதைக்குச் செய்ய வேண்டிய வேலையைப் பார்ப்பதுதான் முக்கியம். இந்த உலகத்தில் வேலைதான் பிரதானம்!
கொஞ்ச நேரத்துல புது ஜனாஸா ஒன்று வந்தது. அதன் முகத்தைப் பார்த்ததும் கட்டையனுக்கு ஞாபகம் வந்தது:
டீக்கடையில சிரிச்சுக்கிட்டே,
“அண்ணே… டீ சாப்பிடுங்க”
ன்னு உரிமையாய்க் கூப்பிடுற ஒரு நல்ல இளைஞன்.
வாழ்க்கையைச் சரியாக ஆரம்பிக்கக்கூட இல்லாமல், ஏதோ பைக் ஆக்சிடன்டுல உயிரை விட்டுட்டான். அவனோட தந்தையின் அழுகைச் சத்தம், கட்டையனோட கல் மனசைக்கூட ஒரு கணம் உலுக்கிப் போச்சு.
ஆனாலும், அவன் சலிக்கவில்லை. சாக வேண்டியவன் செத்துப் போறான்; சாவாமல் மிஞ்சி, இவனாவது தன் வேலையைச் செய்கிறானே என்ற ஒரு மெல்லிய நிம்மதி கட்டையனுக்குள்ளே எழுந்தது.
வேலைதான் சத்தியம்; மற்றதெல்லாம் வெற்றுப் பேச்சு.
அவன் மீண்டும் மண்வெட்டியைத் தூக்கினான். டொக் டொக், டொக் டொக்.
அங்கிருந்த சில இளைஞர்கள் குழிக்குள் இறங்கி, அந்த ஜனாஸாவை பத்திரமாக வைத்தனர். மூங்கில் குச்சிகளை அதன் மேல் குறுக்கும் நெடுக்குமாகக் கிடத்தி, அதன் மேல் கீற்றுகளைப் பரப்பியது ஒரு மரியாதை நிமித்தமாகத்தான்.
நேரடியாக மண் போட்டாலும், அது ஜனாஸாவின் மீது விழுத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அந்த ஏற்பாடு.
பிறகு சிலர் மண்வெட்டியுடன் முன் வந்து குழியை மூட ஆரம்பித்தனர். வழக்கம் போல, வெள்ளைச் சட்டை அணிந்த ஓரிருவர் — எப்போதும் போல! — அழுக்குப் படாமல் கவனமாகக் நின்று கொண்டு:
“குச்சியை இப்படி வை.” “மண்ணை இந்த பக்கமா இழுத்துப் போடு.”
என்று அதிகாரம் செய்தனர்.
‘மரணத்தின் முன்னால் கூட, பணக்காரனின் சட்டை அழுக்காகக் கூடாது!’ என்பது ஒரு சட்டம் போல!
அடக்கத்திலும் அடங்காத அந்தப் பெருமையின் குரல்கள்!
பள்ளிவாசல் இமாம்* ஒரு துஆ* ஓதினார். அவ்வளவுதான்.
மக்கள் மெல்லக் கலைந்தபோது, ஒரே நாளில் நிர்வாணமான ஞானத்தைப் பெற்றவர்கள் போல, வாழ்க்கையின் நிலையாமை குறித்தும், ஹதீஸ்களைப் பற்றியும் பேசினர்.
சாவின் முன்னால் அற்ப மனிதன் எவ்வளவு தத்துவவாதி!
ஆனால், அந்தத் தத்துவத்தின் ஆயுள், இந்தக் கல்லறை பூமியின் மௌனம் விலகி, டீக்கடையின் ஆரவாரச் சத்தம் காதில் விழத் தொடங்கிய அடுத்த விநாடியே முடிந்துவிட்டது.
அத்தனை மேன்மையான தத்துவங்களும், நொடியில்:
“சரக்கு வண்டி இன்னும் ஏன் வரலை?” “காதர் பாயின் பையனுக்கு துபாய்ல வேலை கிடைச்சிருக்காம்ல?”
என்றும், அன்றாடக் கஞ்சிக் கவலைகளின் அற்பமான புலம்பல்களாக மாறிப் போயின.
மரணத்தின் பயம் மறைந்தது; வாழும் வாழ்க்கையின் பயம் மீண்டும் பிரதானமானது.
கட்டையன் கூலியைப் பிடுங்கிக்கொண்டு வீடு திரும்பினான்.
அவன் முகம் வாடியிருப்பதைக் கண்ட அவன் மனைவி செல்வி,
“என்னாச்சு… ஏன் முகம் ஒரு மாதிரியிருக்கு?”
என்று கேட்டாள்.
கட்டையன் எல்லாவற்றையும் சொன்னான்.
கமால் பாஷா என்ற ஒரு ஆணவம், இன்று ஒரு குளிர்ந்த ஓடாக வந்து தன்னைச் சீண்டிப் போனதையும், அதைத் தூக்கி குப்பையில் எறிந்ததையும்.
அப்போது, செல்வி அமைதியாக நின்றாள்.
அது ஒரு அமைதியல்ல — அது ஒரு பகீர்!
கணவனின் குற்றவுணர்ச்சியைப் பிளக்கும் ஒரு ரகசியத்தை, ஒரு சுடு உண்மையை, அவள் இப்போது திறந்தாள்:
“உனக்குத் தெரியாத விஷயம் ஒன்னு இருக்கு…”
கட்டையனின் இதயம் ‘டொக்’ என்றது.
இவ்வளவு நாள் புதைந்திருந்த நிஜம், எதுவாக இருக்கும்?
கட்டையன் வாயடைத்துப் போனான்.
செல்வி சொன்ன அந்த ரகசியம், அவன் வாழ்க்கையின் அடிப்படைக் கயிற்றையே அறுத்தது போல இருந்தது.
அந்தச் சம்பவம்…
அவள் குரலில் ஏதோ ஒரு பாரம். அது வெறும் அழுகையல்ல; அடிவாங்கிய பெண்ணின் ஆற்றலும், தாய்மையின் வலியும் இரண்டறக் கலந்த ஒரு உண்மைத் தீர்ப்பு!
அந்தச் சமயம்தான்!
அவன் சாராயத்துக்கு அடிமையாகி, மனைவியைக் கொடுமைப்படுத்திக், கூடவே அந்த வெளியூர்ப் பெண்ணுடன் ஒரு ‘காம வேஷம்’ நடத்திக்கொண்டிருந்தான்.
அந்தத் தவறான உறவு வெளிப்பட்டு, சண்டை முற்றி அவன் வெளியூருக்கு ஓடிப் போயிருந்த அந்தச் சமயத்தில் நடந்த கதை!
அவள் தொடர்ந்தாள்:
“ஒருநாள் ராத்திரி… தோட்டத்துல வௌயாடிக்கிட்டிருந்த நம்ம பையன், கால் தடுக்கி பாறையில விழுந்து, தலையில பலமா அடிபட்டான். ரத்தம் கொட்டு கொட்டுன்னு கொட்ட ஆரம்பிச்சுடுச்சு!
நான் கத்தினேன். கையில ஒத்த ரூபா இல்ல. உதவிக்கும் பக்கத்துல யாரும் இல்ல…
அப்போதான்… அந்தப் பக்கமா கமால் பாஷா வந்தாரு…”
“கமால் பாஷாவா…?!”
கட்டையனின் கண்கள் இப்போது வெறுமனே அதிர்ந்து போகவில்லை. அவை குத்தப்பட்டுப் போயிருந்தன!
“ஆமா… ஆம்புலன்ஸ் வர நேரமில்லை. பையன் மூச்சு விடச் சிரமப்பட்டான். கமால் பாஷாதான்… ‘என் கார்ல போலாம்’னு சொன்னாரு.
நான் பயந்தேன் — எவ்வளவு பெரிய மனுஷன்! நம்ம பையனை, ரத்தம் கசிஞ்ச உடம்போட, தன் கையில தூக்கிட்டு ஓடினாரு.
அவரோட வெள்ளை சட்டை முழுசும் சிவப்பாயிடுச்சு… ஆனாலும், ஒரு சொல்லு கூட அவர் சொல்லலை!
ஆஸ்பத்திரிக்கு ஓடிப்போய் டாக்டர்கிட்ட கத்தினாரு: “இவனை உடனே பாருங்க! உசிருக்கு ஆபத்து!”
அந்த ராத்திரி அவரு மட்டும் இல்லைன்னா… நம்ம பையன் இப்போ இங்க இருந்திருக்க மாட்டான்!”
அவள் குரல் இப்போது தழுதழுக்கவில்லை; அது அவனுடைய ஈரமில்லாத மனசைச் சவுக்கால் அடித்தது!
“அந்த நாள் கமால் பாஷா இல்லைன்னா, நம்ம பையன் இல்லை. அவர்கிட்ட உதவி வாங்கினது தெரிஞ்சா, நீ அவரு மேல உள்ள வெறுப்புல திட்டுவன்னுதான் இவ்வளவு நாளும் மறைச்சுட்டேன்.”
அவள் முடிக்கும்போது கண்களில் நீர் இல்லை; அது காலியான கிணறு போல வறண்டிருந்தது.
ஆனாலும், அந்தச் கிணற்றின் அடி ஆழத்தில், பல நூறு ஆண்டுகளாகப் புதைந்து கிடந்த ரகசியம், ஒரு நிமிடம் அதிர்ந்து உடைவதுபோல அவளது பார்வை இருந்தது.
அவள் ஏக்கம் தோய்ந்த, ஆனால் உறுதியான குரலில் கூறினாள்:
“அவரு உன்னை அவமானப்படுத்தியிருந்தாரு… அது உண்மை. ஆனா அந்தத் தப்புக்கு ஒரு பிராயச்சித்தமா அவரு உன் மகனை காப்பாத்திருக்கிறாரு.
அத கொஞ்சம் நெனச்சு பாரு.. இங்க தப்புப் பண்ணாத மனுசாளு யாரு இருக்கான்னு சொல்லு பாப்போம்?”
செல்வியோட கேள்விகள் கட்டையனை உள்ளுக்குள்ளேயே சல்லடைக் கண்ணாக்கினது. இதுநாள் வரை அவன் சுமந்திருந்த வெறுப்பும் ஆத்திரமும் இப்போது அங்கே சல்லடையாகி, வெறுமையாகத் தொங்கின!
“கமால் பாஷா உதவி செஞ்சிருக்கார்” இந்தச் செய்தி அவன் மனசுல இடி மாதிரி இறங்கலை; அது ஒரு நீதிமன்றத் தீர்ப்பு மாதிரி இறங்கிச்சு!
அவன் நாலு தலைமுறைக்குப் சாபம் விட்ட மனுஷனோட கை, தன் மகனோட உயிரைக் காப்பாத்தியிருக்கே!
இந்த நெனப்பு அவனை வெட்கத்துல குனிய வைக்கலை; அது அவனோட ஆணவத்தைக் குனிய வெச்சது!
சுவத்தாண்ட படுத்திருந்த மகனைப் பார்த்தான். இப்போதைக்கு அவன் நலமாய் இருக்கிறான். ஆனால், கட்டையன் கண்ணுக்கு, இப்போதைய நலம் தெரியவில்லை!
அவன் நினைவிலோ, ரத்தம் கசிந்து வாடிய முகம், மூச்சடங்கி நின்ற சிறிய கைகள் — அதிகாரத்தின் முன் ஏதுமற்ற ஏழையின் துயரம் — மட்டுமே நிலைத்தது.
இந்த உலகத்தில் ஏழையின் துயரம் மட்டும்தானே நிஜம்!
“அந்த நேரம் கமால் பாஷா இல்லை என்றால்…” என்ற சிந்தனை, அவன் நெஞ்சுக்குள்ளேயே ஒரு நன்றாக அணையாத நெருப்புத் துண்டாய்க் கிடந்தது.
அது எரிந்தது — ஆனால், சுடவில்லை!
சும்மா ஒரு உள்ளத்து வாதை!
மகனைத் தடவிப் பார்த்தான். அந்தத் தகப்பனின் உதடுகள் முணுமுணுத்தது:
“நான் இத்தனை நாளா வெறுத்த அந்த மனுஷன்… அவன் என் மகனோட உயிரைக் காப்பாத்துன ஒரு உன்னதமான ஆள்!”
அந்த வார்த்தைகள், அவன் இதுநாள் வரை நம்பிய நியாயத்திற்கே போட்ட ஓர் அடிபட்ட கேலி!
இத்தனை காலம் அவன் கண்ணுக்குப் பட்டது எது? வெள்ளைச் சட்டையின் ஆணவம் மட்டும்தான். இன்று? ரத்தம் படிந்த அதே வெள்ளைச் சட்டை! அதுதான் இந்தப் பாழாய்ப் போன உலகத்தின் கதி. என்ன ஒரு விசித்திரம்! அடேங்கப்பா!
அன்று அவனுக்குத் தூக்கம் என்பதே நிம்மதியாய்க் கிட்டவில்லை. கண்களை மூடினானோ இல்லையோ, அவனுக்குள்ளே ஒரு கனம் ஏறியது!
அது கனவுதான்! ஆனால், வெறும் கனவு அல்ல…
அந்தக் கனவிலே… செல்வி, ஒருவிதமான வெரிச் சிரிப்போடே நின்றாள். அவள் கையில் இருந்தது என்ன தெரியுமா? கட்டையனுடைய மண்டை ஓடு!
அதை எடுத்து, இந்த உலகத்தின் நெருப்புச் சுவாலைக்குள் எறிந்து, சிறு பிள்ளையைப் போல விளையாடினாள்.
அவள் வாயில் பல் இல்லை. ஆனால், அந்தப் பல் இல்லாத பயங்கரமான சிரிப்பு, இவனைப் பார்த்துச் சிரித்து, உயிரோடு கூப்பிட்டு எழுப்பியது.
அந்தச் சிரிப்பின் நடுவிலே — செல்வி, ஒரு கேள்வியை மனவுரத்தோடு கேட்டாள்.
அந்தக் கேள்விதான் அவனை உலுக்கி, தூக்கத்தின் வேரையே அறுத்தது:
“கட்டையா… நீ பண்ணாத தப்பா?”
கட்டையன் படுக்கையில் இருந்து வீறிட்டு எழுந்தான்.
அந்த நாற்காலியில், சுவரில், தரையில்… எல்லா இடத்திலும் செல்வியின் பல் இல்லாத சிரிப்புதான் தெரிந்தது.
அந்தச் சிரிப்பு, அவனுடைய கிழிந்த லுங்கிக்குப் பின்னே ஒளிந்துகிடந்த குற்றவுணர்ச்சியைக் கையால் பிடித்து இழுத்துக் காட்டிக் கொண்டிருந்தது!
மறுநாள் காலையில், கட்டையன் திரும்பவும் கபர்ஸ்தானில் இருந்தான். அவன் மனசுதான் அவனை அங்கே இழுத்து வந்திருந்தது.
குப்ப மேட்டுல நிராதரவாகக் கிடந்த அந்தக் கமால் பாஷாவின் மண்டை ஓட்டை கண்டான்.
இப்போது அது அவனைப் பார்த்தது கோபமோ, கிண்டலோ இல்லை. வெறுமனே ஒரு சிரிக்காத புன்னகையை உதிர்த்தது.
அது சொல்லியது ஒன்றே ஒன்று— “பகையோ, பாசமோ, பெருமையோ… எல்லாம் இறுதியில் எலும்பின் எடைதான்.”
அவன் கைகளால் அதை எடுத்தான். மண்ணோடு குளிர்ந்து போன எலும்போட குளிர்ச்சி, அவனுடைய விரல்கள்ல ஏறும்போ, அவன் உள்ளம் நடுங்கிப் போச்சு.
‘நான் இவனை எவ்வளவு வெறுத்தேன்!’
“அவன் பணக்காரன், நான் ஏழை. அவன் ஆணவக்காரன், நான் அவமானப்பட்டவன். ஆனா, மரணத்துக்கு முன்னால இதெல்லாம் என்ன? எல்லாமே வெறுமைதான்!”
அவனுக்குத் இப்போது தெரிந்த ஒரே உண்மை:
கமால் பாஷா, ரத்தத்துல நனைஞ்ச வெள்ளைச் சட்டையோட, தன் மகனை ஆஸ்பத்திரிக்கு ஓடிப் போய், உயிரைக் காப்பாற்றின அந்தக் காட்சி தான்.
அந்தக் காட்சி… அவன் கண்ணை நிறைச்சுச்சு. வேறு எதுவும் அவனுக்குத் தெரியவில்லை.
“கடைசியில இந்தப் பணக்கார மண்டை ஓடும், என்னோட பாழாப்போன மனசும் சேர வேண்டியது இந்த கபர்ஸ்தான்லதான் போல…”
பக்கத்துல யாரும் பாக்காத எடத்துல, ஒரு சின்னக் குழி தோண்டினான். அந்த மண்வெட்டியின் ‘டொக் டொக்’ சத்தம் இந்த முறை பிணத்துக்காகக் கேட்கவில்லை. பிராயச்சித்தத்துக்காகக் கேட்டது!
மண்ணோட குளிர்ச்சி அவன் விரல்கள்ல பரவுச்சு. அந்த இறுக்கமான குளிர்ச்சி, அவன் உள்ளத்துல இருந்த வெப்பத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிச்சுச்சு.
அந்த மண்டை ஓட்டை மெல்ல அதுல வெச்சு, மண்ணால மூடினான்.
மண்வெட்டியின் பின்புறத்தால மெல்ல மண்ணைத் தள்ளினான். ஒவ்வொரு பிடி மண்ணும், கமால் பாஷாவின் மண்டை ஓட்டை மூடுனப்போ, அது தன் நெஞ்சில இத்தனை நாளா சுமையா கனத்த பழைய வெறுப்பையும், “நான் மட்டும்தான் சரி”
என்று அவன் நம்பின முட்டாள்தனமான சுய ஏமாற்றத்தையும் சேர்த்து ஆழப் புதைப்பதாக உணர்ந்தான்.
அவனுடைய கசப்பு, இப்போ நிலத்துக்குள்ள இறங்கித் தணிந்துபோச்சு.
இப்போது அவன் மனசுல ஒரு அரை குறை அமைதி நிலவுச்சு. அந்த அமைதிகூட முழுசில்லை. ஏனென்றால், இந்த உலகத்தில் மனிதம் — அதன் இருண்ட பக்கத்துலயும், வெளிச்சமான பக்கத்துலயும் — கடைசியா அவனைத் தொட்டுப் போச்சு!
கட்டையன் மீண்டும் மண்வெட்டியைத் தூக்கினான். அவனுக்கு இன்னும் வேலை இருந்தது!
காற்று இன்னும் அந்தக் கபர்ஸ்தானிலே ஒரு வித வாசனையோட வீசிக்கிட்டிருந்தது.
அது எந்தப் பிணத்திலிருந்து வந்துச்சுன்னு சொல்ல முடியல.
சில பிணங்கள் மண்ணுக்குள்ள இருந்தன;
ஆனால் பல —
இன்னும் உயிரோட, மண்ணுக்கு வெளியேதான் நடந்துக்கொண்டிருந்தன…
வெறுப்போட, பகையோட, ஆணவத்தோட.
கபர் – சவக்குழி
சூரா – குர்ஆனின் சில வரிகள்
மய்யத் – மரணித்த உடல்
ஜனாஸா – இறந்த உடலுக்குரிய இறுதி சடங்கு
கபர்ஸ்தான் – இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடம்
இமாம் – பள்ளிவாசலில் தொழுகையை நடத்துபவர்
துஆ – அல்லாஹ்விடம் செய்யப்படும் வேண்டுதல்
![]() |
சு.அப்துல் கரீம் (மே 1979) மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கணிதம் படித்து, பின்னர் கணினி பயன்பாடுகளில் முதுநிலை பெற்றார். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றி வருகிறார். தொழில், வாசிப்பு, எழுத்து என அனைத்தையும் ஒருங்கே இணைத்து மதுரையில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலிருந்தே புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்ட இவருக்கு, அந்த வாசிப்பு தமிழின் மீதான காதலாகவும், பின்னர் எழுத்தின் மீதான…மேலும் படிக்க... |
