ஒருவன் தன்னிடத்தில் வைத்த முத்தை இல்லை என்றது
கதையாசிரியர்: மரியாதைராமன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 18, 2025
பார்வையிட்டோர்: 1,512
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒருவன் விலையுயர்ந்த இரண்டு முத்துகளைச் சம்பாதித்துத் தன்னிடத்திலே விசுவாசம் உள்ளவனைப் போலிருந்த மற்றொருவன் கையிலே கொடுத்து, “இதுகளை நான் வருமளவும் காப்பாற்றி வை” என்று சொல்லிவிட்டுச் சிலகாலம் சஞ்சாரம் செய்து திரும்பி வந்து அவனை அந்த முத்துக்களைக் கொடுவென்று கேட்டதற்கு அவன் “நான் உன் கையிலே வாங்கினதே இல்லை” என்று சாதித்தான்.
பின்பு கொடுத்தவன் மரியாதைராமனிடத்துக்குப் போய்ப் பிராது பண்ணினான். அப்போது மரியாதை ராமன் அவனை அழைப்பித்து அவன் வாய் விசேஷங் களைக் கேட்டு மோசத்தை முகக்குறிப்பினால் அறிந்து கொண்டு தீர்ப்புக் கொடுக்காமல் அவர்களைப் போகச் சொல்லிச் சிலநாள் பொறுத்து வாதி வாயைக் கண்டு அந்த முத்துக்களின் மாதிரியைத் தெரிந்துகொண்டு பிரதி வாதி கையிலே அந்த மாதிரியாகத் தொண்ணூற்றெட்டு முத்துக்களை ஒரு நைந்த சரட்டிலே கோத்துக்கொடுத்து ”இச்சரம் நூறு முத்துகளுள்ளது. சரடு நைந்து இருக்கிறபடியால் வேறொரு சரட்டிலே கோத்துக்கொண்டு வந்தி (வா) யோக்கியனாகக் காணப்படுகிறபடியினாலே உன்னை நம்பிக் கொடுக்கிறேன்” என்று சொல்லிக் கொடுத்து அனுப்பினான்.
அந்த மோசக்காரன், அதுகளைத் தன் வீட்டுக்குக் கொண்டுபோய்க் கோத்து எண்ணிப் பார்த்தபோது இரண்டு முத்துகள் குறை ஆகக் கண்டு அவ்விரண்டை யும் தான் போக்கடித்ததாகவே எண்ணிக் கொண்டு திகிலடைந்து தான் அபகரித்து வச்சிருந்த இரண்டு முத்துகளையும் கூடச் சேர்த்துக் கோத்துக் கொண்டு போய்க் கொடுத்துச் சணப்பன் வீட்டுக்கோழி தானே விலங்கிட்டுக் கொண்டது போலத் தந்திருட்டைத் தானே வெளிப்படுத்தினான்.
அப்போது நியாயாதிபதி அவன் திருட்டை அறிந்து இரண்டு முத்துகளையும் உடைமைக்காரருக்குச் சேர்த்து விட்டு அவனுக்கு ஏற்ற தெண்டினையும் செய்தான்.
– மரியாதைராமன் கதைகள் (ஆய்வுப் பதிப்பு), இரண்டாம் பதிப்பு: மே 2001, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரசுவதி மகால் நூலகம் வெளியீடு, தஞ்சாவூர்.
![]() |
பதிப்பாசிரியர் முகவுரை (மரியாதைராமன் கதைகள் - பதிப்பியல் நோக்கில சில குறிப்புகள்) மரியாதைராமன் கதைகள் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இவ்வேளையில், முதற்பதிப்பு வெளிவந்த காலத்திற்குப்பின் இக்கதைகள் தொடர்பாக என்னால் தொகுக்கப்பெற்ற சில அரிய குறிப்புகளை இங்குப் பதிவுசெய்கிறேன். அவற்றோடு இப்பதிப்பினைக் குறித்தும், மரியாதைராமன் கதைப்பதிப்புகள் குறித்தும் குறிப்பிடத் தக்க செய்திகளையும் இங்கே அளிக்கின்றேன். இச்செய்திகள் இக்கதையிலக்கிய ஆர்வலர்க்கும் அன்பர்களுக்கும் பயன்மிக நல்கும் பான்மையனவாகும். புகழ்மிகு கதையிலக்கியங்கள் : விக்கிரமாதித்தன்…மேலும் படிக்க... |
