மூத்த மாப்பிள்ளை





ஒருசமயம் நான் என் நண்பர் ஒருவர் வீட்டிற்குப் போயிருந்தபோது, அவர் தன் அருகில் இருந்தவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். “இவர்தான் எங்கள் வீட்டு முதல் மாப்பிள்ளை. பெரிய மாப்பிள்ளையும் கூட. இவர் மிகவும் நல்லவர். ஏனெனில் எங்கள் குடுப்பத்துக்குப் பெரிய உதவி செய்துள்ளார். இதற்காக எங்கள் குடும்பமே இவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது” என்று முகமலர்ச்சியுடன் கூறினார்.
நான் வியப்படைந்து, அப்படிப்பட்ட உதவி இவர் என்ன செய்தார்?” என்று வினவினேன்.
அவர் மிக அமைதியாகச் சொன்னார். “இவருக்குப் பெண் கொடுத்த பின்புதான், இனிமேல் எவருக்கும் பெண் கொடுத்தால் நன்கு ஆலோசித்து கவனித்துப் பெண் கொடுக்க வேண்டும் என்ற அனுபவமே எங்களுக்கு உண்டானது. அது இவர் எங்களுக்குச் செய்த மிகப் பெரிய உதவியல்லவா?” என்றார்.
நான் இடிந்துபோய் உட்கார்ந்திருந்தேன். என்னத்தைச் சொல்ல?
– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை
கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும்…மேலும் படிக்க... |