மன வயல்!
கதையாசிரியர்: சிறுவர் கதைகள்
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,864
ஓருநாள் மகான் புத்தர் பிச்சையேற்க ஒரு வீட்டின் முன் போய் நின்றார். அவரைக் கண்ட விவசாயியான அந்த வீட்டுக்காரன் கோபத்துடன், உடல் வலிமையோடு இருக்கிற நீர் ஏன் உழைக்கக் கூடாது? நான் வயலில் உழுகிறேன்; விதைக்கிறேன்; கடுமையாக உழைத்து எனக்குத் தேவையான உணவைப் பெறுகிறேன். என்னைப் போல நீயும் உழைத்தால் இப்படிப் பிச்சையெடுக்கும் இழிநிலை வேண்டாமே! என்னைப் போல கெüரவத்துடன் உண்ணலாமே? என்று கேட்டான்.
அதற்கு புத்தர் பெருமான், நானும் உழுது விதைத்துத்தான் உண்கிறேன் என்றார்.
அந்த விவசாயி வியப்புடன், நீர் உழவரா? அதற்கான அடையாளம் உம்மிடம் கொஞ்சம்கூட இல்லையே! கலப்பை எங்கே? காளைகள் எங்கே? விதைகள் எங்கே? என்று கேட்டான்.
உடனே புத்தர், அன்பனே! கவனமாகக் கேள். நம்பிக்கை என்னும் விதையை விதைக்கிறேன். என் நல்ல செயல்களை அந்த விதைக்கு மழைநீராகப் பாய்ச்சுகிறேன். விவேகமும் வைராக்கியமும் என் கலப்பையின் உறுப்புக்கள். என் உள்ளமே மாடுகளை வழிநடத்தும் கடிவாளம். தருமமே கலப்பையின் கைப்பிடி. தியானமே முள். மன அமைதியும் புலனடக்கமுமே எருதுகள்.
நான் மனமென்னும் வயலை உழுது, ஐயம், மயக்கம், அச்சம், பிறப்பு, இறப்பு ஆகிய களைகளை எடுத்து எறிகிறேன். அறுவடை செய்து கிடைக்கும் கனி – நிர்வாணம் என்னும் பிறப்பு இறப்பு இல்லாத நிலையாகும். இப்படி நான் அறுவடை செய்வதால் எல்லாத் துன்பங்களும் அழிந்துவிடுகின்றன என்று விளக்கம் தந்தார்.
இதைக் கேட்ட விவசாயி, அறிவுத் தெளிவு பெற்றான். மகான் புத்தரின் திருவடிகளில் விழுந்து மன்னிக்க வேண்டினான்.
– ஆச்சா (ஜனவரி 2012)
தொடர்புள்ள சிறுகதைகள்
நல்ல மனம் வாழ்க!
வளர்கவி
June 20, 2026
கருங்கல்லும் கூழாங்கல்லும்!
வளர்கவி
June 17, 2026
அறிவு அற்றங் காக்கும் கருவி!
வளர்கவி
May 31, 2026