புதுப்புடவை – ஒரு பக்க கதை
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 11,806
வசுந்தரா கணவனை இழந்தவள். மகன் வினோத்தின் வளர்ப்பில் கணவனின் பிரிவை மறந்து வாழ்ந்து வருபவள்.
அன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரமாய் வீடு வந்தவள் அவனின் அறையை சுத்தம் செய்ய முனைந்தபோது அட்டைப்பெட்டியில் புதுப்புடவை அவள் கண்ணில் பட்டது.
என்ன இது யாருக்காக வாங்கி இருக்கான். ஏதாவது காதல் அது இது என்று மாட்டிக் கொண்டானா? வழக்கம்போல இரவு பத்து மணிக்கு வந்த வினோத் சாப்பிடாமல் கூட படிக்கணும்மா, என்னை தொந்தரவு செய்யாதே என உள்ளே சென்று கதவை தாழிட்டுக் கொண்டான்.
எதுவும் பேச முடியாமமே போயிற்று வசுந்தராவுக்கு. விடிந்ததும் கேட்டு விடலாம் என்று வந்த கோபத்தை தன்னுள் அடக்கி கொண்டு படுத்தவளுக்கு உறக்கம் எப்போது கண்களை தழுவியது என தெரியாது.
அம்மா, ஹேப்பி பர்த்டேம்மா, எழுந்திரும்மா என விடிந்ததும், விடியாத காலைப்பொழுதில் மகன் அழைக்க கண் விழித்தாள்.
அவன் கையில் அந்தப் புதுப்புடவை, மகனின் மாற்றத்திற்கு காரணம் தெரிந்ததும் பூரித்துப் போனாள்.
– வி.புவனா (ஜூலை 2010)