நேர்





(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
எந்த வடிவததிலும் யானேயான அம்சமும் சுலந்து கிடக்கின்றது. அந்த அம்சம் ஒன்றிலே கூடியும் ஒன்றிலே குறைந்தும் காணப்படுகிறது என்பது மனப்பிராந்தியாகும்.’

அந்த மக்காச் சோளத்திற்குத் தன் உருவம் கோர மானது என்று மனக்குறை நெஞ்சுமுட்டி வழிந்தது. பாலா டையிலே கடைத் தெடுக்கப்பட்டதைப் போன்று கவர்ச்சிப் பொலிவு காட்டும் மல்லிகைப் பூவைப் பார்த்துப் பெருமூச்சு விட்டது.
‘இறைவன் ஓரவஞ்சகன். சிலவற்றிற்குச் சுந்தரஞ் சிந்தும் போக வடிவத்தையும். என்னைப் போன்ற சிலவற் றிற்குக் கோர வடிவத்தையும் வைத்திருக்கின்றான்…. -இந்த நினைவில் அதன் மனம் புழுங்கிச் சாம்பியது.
சோளத்தின் மனக்குறையை ஈசன் அறிந்தான். அதன் மாயையைப் போக்கும் கருணை அவன் உள்ளத்திற் சுரந்தது.
‘சோளமே! நீ இவ்வாறு கவலுறுதல் முறை கேடானது. வடிவங்கள் அவையவற்றின் யோகத்தைப் பொறுத்தன. போக வடிவமும் என்னுடையவையே. எந்த வடிவத்திலும் நானேயான அம்சமும் கலந்து கிடக்கின்றது. அந்த அம்சம் ஒன்றிலே கூடியும், ஒன்றிலே குறைந்தும் காணப் படுகிறது என்பது மனப்பிராந்தியாகும்….’ என்றான் ஈசன்.
‘ஈசனே! நீ சாமர்த்தியமாகப் புளுகுகின்றாய். மல்லிகைப் பூவுக்கும் எனக்கும் ஒரே அம்சம் இருக்கிறதா?’ எனச் சோளம் அவலக் குரலிற் சினந்தது.
‘ஏன் இல்லை? எல்லாம் என் வடிவங்களே என்று பாவனை செய்து கொள்வதற்குப் பக்குவ முதிர்ச்சி தேவை….
‘பாவனை, பக்குவம் ஆகிய தத்துவக் கிளவிகளின் அர்த்தங்களை நான் அறியமாட்டேன்….’
ஈசன் முறுவல் பூத்துத் தீயை மூட்டினான். தீயில் ஓ ஓடு ஏறிற்று. ஓட்டிலே மணல் சுடாக வறுக்கப் பட்டது.
‘சோளமே! ஓட்டில் இருக்கும் சுடு மணலிலே குதி’ என்றான் ஈசன்.
‘மாட்டேன். சுடுமணலிலே போட்டு என்னைக் கொல்லவா பார்க்கின்றாய்?” எனச் சோளம் பரிதாபமாக அலறியது.
அதன் ஆட்சேபனையைப் பொருட்படுத்தாது, அதனைத் தூக்கிச் சுடு மணலிலே போட்டு ஈசன் வறுத்தெடுத்தான்.
மறுகணம், சோளம் மல்லிகைப் பூவைப் போன்று பால் நகை சிந்தி மலர்ந்தது! தன்னுள் மறைந்திருந்த இறையம்சத்தைத் தரிசித்த நிறைவிற் குதூகலித்தது. இந்த அற்புதத்திற்கான விளக்கத்தை அறியச் சோளம் அவாவுற்றது. அதற்கிடையில் ஈசன் மறைந்தனன்!
– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.
![]() |
எஸ்பொ என அறியப்படும் ச.பொன்னுத்துரை (24 மே 1932 - 26 நவம்பர் 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பொன்னுத்துரையின்…மேலும் படிக்க... |