கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 20, 2025
பார்வையிட்டோர்: 55 
 
 

(1942ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27

அத்தியாயம் – 25

முதல் நாள் இரவு சுகமாகப் படுத்து நித்திரை செய்தவள் இன்று இரவு நரக வேதனையை அனுபவித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். முதல் நாள் சிரிப்பும் சந்தோஷமுமாக பேசிக் கொண்டிருந்தவர்களிடம் இன்று நாகம்மாவால் உற்சாகமாக நடந்து கொள்ள முடியவில்லை. மணியக்காரர் வீட்டு உட்புற ஆசாரத்தில் தூணில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறாள் நாகம்மாள். அடிபட்ட குழந்தை மேலும் கீழும் பார்ப்பதைப் போல மணியக்காரர் தம்முடைய கிருதா மீசையைத் தடவிக் கொண்டே ஆழ்ந்த யோசனையில் மூழ்கியிருந்தார். கெட்டியப்பன் குனிந்த தலை நிமிரவில்லை. முதலியார் முகத்தில் மட்டும் எவ்வித குறியுமில்லை. நாகம்மாளைப் பார்க்கும் போதெல்லாம் முகத்தில் அனுதாபக் குறியை எங்கிருந்தோ வரவழைத்துக் கொண்டார். அங்கொரு மூலையில் படுத்திருந்த பெரியவரின் கட்டில் கிறீச் சப்தமும் இடையில் மேல்புறத்திலுள்ள வண்ணான் வீட்டிலிருந்து அரைகுறைப் பேச்சுச் சப்தமும் காதில் விழும். அவன் அடிக்கடி, “கழுதை, கழுதை” என்று சொல்வது கழுதையைப் பற்றியோ அல்லது அவன் மனைவியைப் பற்றியோ என்பது நமக்குத் தெரியாது. “என்னவோ எல்லாமே போய்விட்டது போல் இப்படி உட்கார்ந்து விட்டீர்களே” என்று முதலியார் ஆரம்பித்து, “நாம் எதிர்பார்த்ததுதானே இவையெல்லாம்” என்றார். 

மணியக்காரர் திடுக்கென தலையைத் தூக்கினார். பாவம் அவர் இதொன்றையும் எதிர்பார்க்கவில்லை போலிருக்கிறது. “நீங்க சொல்ல வேண்டியிருக்க, சும்மா பேசாமெ இப்படிச் சிலை போல் உட்கார்ந்து விட்டால்?” என்றார் முதலியார். 

மணியக்காரர் கொஞ்சம் தொண்டையைத் தீட்டினார். ஆனால் கரகரப்பு நீங்கவில்லை. 

“எப்படி, அதை இன்னொரு தரம் சொல்லு, நேற்று நீ தூங்கிக் கொண்டிருக்கும் போது வந்து கதவைத் தட்டி…” என்று சொல்லி நிறுத்தினான் கெட்டியப்பன். “அதை சும்மா கேட்பதில் என்ன இருக்கிறது?” என்று சலிப்புத் தோன்றியவர் போல் மணியக்காரர் சொல்லவும், “நீங்க என்ன இப்படி எல்லாமே மெழுகி விடுகிறீர்களே. அப்புறம் பார்க்கப் போனா, கல்லும், முள்ளும் நிறைந்த இடம் கூட சுத்தமாகத்தானே இருக்கும்! சின்னப்பன் மேல் குற்றம் சொல்லுவதற்கே இடம் இருக்காது” என்று கொஞ்சம் அழுத்தமாகவே முதலியார் கூறினார். 

“எப்பொழுது தான் சின்னப்பனிடம் குற்றம் இருக்கப் போகிறது?” என்று பேச்சு முடிவதற்குள் பெரியவரிடமிருந்து பதில் வந்தது. அவர் கட்டில் சமீபத்திலிருந்ததால் அவர் சொல்வது நன்றாகவே இவர்களுக்குக் கேட்டது. 

“கட்டுச் சோற்றுக்குள் எலியை வைத்துக் கட்டியது போல்” என்று கெட்டியப்பன் வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டு, “உங்களையும் கட்டிலையும் அப்புறம் கொண்டு போய் வைத்துவிட்டுத் தான் நாங்கள் பேச வேண்டும்” என்று எழுந்தான். 

“சும்மா உட்காரு” என்று மணியக்காரர் அதட்டினார். பெரியவர், “நானே எழுந்து போகிறேன். ஆனால் உனக்குப் பயந்து கொண்டல்ல. என்ன கேட்டியணா, இங்கே ரொம்ப வேக்காடாக இருக்கிறது. காற்றாட அந்தப் பக்கம் போறேன். போறதிற்குள் சின்னபுள்ளெகிட்ட ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்” என்று நாகம்மாள் புறம் திரும்பினார். எப்போதும் மரியாதையாகவே அவரிடம் நடந்து வந்த நாகம்மாள் எழுந்திருக்க முயன்றாள். பெரியவர், “வேண்டாம் உட்காரம்மா. ஒரு வார்த்தை பாக்குக் கடிக்கிற நேரத்திற்குள் சொல்லி விடுகிறேன்” என்று தொடங்கினார். 

“திருமனை செய்யத் தெரியாதவன் தேர் வேலைக்கு அச்சாரம் வாங்கினானாம். ஒரு காணி நிலத்தை கிளறிப் பாங்காகப் பிழைக்கத் தெரியாத இந்தக் கெட்டியப்பனா உனக்குப் பங்கு வாங்கி கொடுக்கிறவன்! இது எல்லாம் நடக்காத சங்கதிகள். ஒரு நாளைய கூத்துக்கு மீசையைச் சிரைத்த கதையாக முடியும். இப்போது பாரு ஊடும் குடித்தனமா இருந்தவள் குழந்தையை விட்டுவிட்டு வெளியில் வந்து திண்டாட்டத்தில் மாட்டிக் கொண்டாய். நீ சொன்னதெல்லாம் நானும் கேட்டேன். நீ யாருக்காக இந்தப் பங்கு பிரிக்கச் சொல்லுகிறாயோ அந்தக் குழந்தை கூட, உன்னிடம் வர மறுத்து விட்டதென்றால், பின் என்னத்துக்கு இந்தச் சச்சரவு எல்லாம்? ‘இதெல்லாம் அவர்கள் போதனை அது, இது’ என்று காரணம் சொல்லாதே. அதிலெல்லாம் பிரயோஜனமில்லை. அது போகிறது. இப்போது முதலியார் சொன்னது போல் ‘எல்லாம் முழுகிப் போய்விடவில்லை.’ நீ காலையிலே பேசாமல் விசயம் மூணாம் பேருக்குத் தெரிவதற்கு முன்பே நல்லதனமா போய்விடுவது நல்லது.” 

நாகம்மாள் ஒன்றுமே பேசவில்லை. பதிலுக்குக் காத்திராமல் பெரியவரும் அப்பால் போய்விட்டார். 

“சரி, வழக்கப்படி இது நடப்பதுதானே. என்ன நீங்க கூடப் பேச்சிலே மயங்கிப் போய்விட்ட மாதிரியிருக்கிறதே” என்றார் முதலியார். 

“இதைப் போல ஐம்பத்தெட்டு பேச்சுத்தான் என்னை மயக்க முடியுமா? நான் வேறு சங்கதிகளைப் பற்றி ஆலோசித்தேன்” என்றார் மணியக்காரர். 

“அதைத் தான் சொல்லுங்களேன்” என்று நாகம்மாள் கேட்டாள். 

“நீ வீட்டுக்குப் போய்விடக் கூடாதா?” கொஞ்சம் தயங்கிக் கொண்டு தான் சொன்னார். அனைவரும் மௌனமாயிருக்கவே, “அங்கிருந்து கொண்டு நாம் காரியத்தைச் சாதிப்பதை விட வெளியில் இருப்பது அவ்வளவு சிலாக்கியமானதா?” என்றார். 

“அது சிலாக்கியமோ, கிலாக்கியமோ, இனி அந்தப் பேச்சு இல்லை. நான் அந்தப் பக்கம் கூட தலைவைத்துப் படுக்க மாட்டேன். அவர்கள் கொளமாத்தைத் தெரிந்த பிற்பாடு அங்கு இருந்து கொண்டிருக்கலாமா? வெசம் வைக்கக் கூட அஞ்ச மாட்டார்கள். உங்களை நான் நம்பினேன். நீங்கள் எப்படி உட்டாலும் செரி.” 

அவளுடைய வேகத்தையும் உணர்ச்சி உருக்கத்தையும் கண்ட முதலியார், “அடடா ஒரேயடியாகக் கோவிக்கிறீர்களே. நாளைக்கு நாலு பேருக்கு எதிரில் சின்னப்பனிடம் காட்ட கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள்” என்றான். 

“சும்மா இரப்பா, உனக்கு எழவு ஊடுன்னும், கலியாண ஊடுன்னும் வித்தியாசம் தெரிவதில்லை. சும்மா ஒரே சிரிப்புத்தானா? ஆனால் நீ சொன்னதிலும் உண்மையிருக்கிறது. அப்படிச் செய்தால் என்ன?” 

“எப்படி?” 

“எப்படியா? அதுதான் பொது மனிதர் பத்துப் பேரைக் கூட்டி இதற்கு என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்கலாமே. சின்னப்பன் நிலபுலன்களை விற்றுக் கொண்டு ஓடு விடுவதற்கா எல்லோரும் சாதகமாக இருப்பார்கள்?” என்று மணியக்காரர் சுற்றிலும் பார்த்துக் கொண்டே கேட்டார். கெட்டியப்பன், “இதிலெல்லாம் ஒண்ணும் காரியமில்லீங்க” என்றான். 

“இன்னொரு வழி இருக்கிறது” என்று நாராயணசாமி கூறினான். 

“என்ன?” என்று மற்றவர்கள் ஏக காலத்தில் கேட்டார்கள். 

“நாளைக்குக் காலையிலேயே ஏத்துப்பூட்ட சின்னப்பன் தோட்டம் வந்ததும், போய் தடுத்துவிடுவது.” 

“என்ன நம்முடைய ஆட்களை விட்டா?” என்று மணியக்காரர் இடைமறித்தார். “இல்லெ இல்லெ. நாகம்மாளை விட்டே ஏன் என்று கேளுங்கள். அப்படிச் செய்தால் தான் அக்கம் பக்கம் நாலு பேருக்குச் சங்கதி பளிச்சுனு படும். அப்புறம் பேச்சு எடுப்பதற்கும் பேசுவதற்கும் வகையா இருக்கும்” என்றான். 

“ஒரு வகையில் எனக்கும் சரியாகத் தோன்றுதப்பா” என்று மணியக்காரர் ஆமோதித்தார். 

“ஆனால் நான் ஒருத்தியும்…” என்று நாகம்மாள் சற்று தயக்கமாகச் சொல்லவும், “நான் எங்கே செத்தா போயிட்டேன்? கூட வேண்டுமானால் இன்னும் நாலு பேரைக் கூட்டி வாரேன்” என்றான் கெட்டியப்பன். 

“அடடே, கலகத்திற்குப் போகிற மாதிரி அப்படியெல்லாம் செய்துடாதே. சும்மா எங்கேயோ அசந்தர்ப்பமா போன மாதிரி போ. அது கூட வேண்டியதில்லை. என்ன நாகம்மா, ஆள் எதற்கு வேண்டும் சொல்லு பார்க்கலாம்? பின்னால் தான் பேசிக் கொள்ள நாங்கள் இருக்கிறோம். எவ்வளவு ஆனாலும் செரி. நான் இருக்கிறேன். உன்னை அந்தரத்தில் விட்டுவிட மாட்டோம். தைரியமாக இரு” என்றார் மணியக்காரர். 

“சரி காலையிலேயே நான் தோட்டத்துக்குப் போய் தடுத்துவிட வேண்டியது, அவ்வளவு தானே” என்றாள் நாகம்மாள். 

“எங்கப்பா நம்ம தடியைக் காணோம்” என்று கெட்டியப்பன் எழுந்தான். 

“நீயும் தூங்கப்போ” என்றார் மணியக்காரர். 

அத்தியாயம் – 26

ராமாயி இப்போது ஒரு புது வழக்கத்தை கைக் கொண்டிருந்தாள். அதுதான் பேசப் பேசத் தூங்குவது. என்ன கேட்டதென்பதே தெரியாது. ஏதோ வாயில் வந்ததைச் சொல்லிவிட்டு குறட்டை விடுவது ரொம்பச் சர்வசாதாரணமாகப் போய்விட்டது. சின்னஞ்சிறு சருகசைப்புக்கே திடுக்கிட்டுத் தலைதூக்கும் தன் மனைவி ஏன் இப்படித் தூங்குகிறாள் என்ற விவரத்தை ஏனோ சின்னப்பனும் கேட்பதில்லை. இப்போது இரண்டு தரம் குரல் கொடுத்தும் ராமாயி ‘உம்’ கொட்டிக் கொண்டே பேசாமலிருந்ததற்கும் இவன் கோபித்துக் கொள்ளவில்லை. 

சின்னப்பனுக்கு எத்தனையோ கவலைகள். மைத்துனன் பிரிவுக்குப் பின் தன் குடும்பத்திலும் பிளவு ஏற்பட்டு விட்டது. ஆனால் முக்கியமாக நாகம்மாள் வாசல்படி தாண்டியதுதான் அவனுக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது. அதிலும் மணியக்காரர் வீட்டிற்குப் போயிருக்கிறாள் என்பதைக் கேட்டு அதிக ஆத்திரம் கொண்டான். எதற்கும் தான் ஒன்றும் முன்னால் போவதில்லை என்று திடம் செய்து கொண்டான். ‘ஊரார் பேச்சைக் கேட்டு இப்படி குட்டிச்சுவராய் போய்விட்டாளே’ என்று நினைக்கவும் அவனுக்கு இரக்கமாத்தானிருந்தது. 

தன்னுடைய அண்ணன் காலத்தில் நடந்த அநேகம் சம்பவங்கள் நேற்றுத்தான் நடந்தது போலிருந்தது. இவனுக்குக் கலியாணமாகும் முன் குளிப்பதற்கெல்லாம் வெந்நீர் நாகம்மாளே எடுத்து வைப்பாள். வேண்டாமென்று மறுத்தாலும் ஒரு தரத்துக்கு இரண்டு தரமாக முதுகும் தேய்த்து விடாது இருக்க மாட்டாள். எந்த வித கல்மிஷமும் இல்லாதிருந்தவள் இன்று விஷமாக மாறிவிட்டது அவனுக்கு ஆச்சரியமாகத்தானிருந்தது. 

நாகம்மாள் கோபத்தில் வீட்டை விட்டுப் போய்விட்டாளே யொழிய அவள் குழந்தை ஏனோ தாயுடன் செல்ல மறுத்துவிட்டது. இதற்குக் காரணம் ராமாயி காட்டும் அபார வாஞ்சையா? 

யாரோ நடவையைத் திறந்து கொண்டு வரவும் வெளியே பந்தக்காலில் கட்டியிருந்த எருமை தான் உள்ளே வருகிறதாக்கும் என ‘த்த, கெரகம்’ என்று சின்னப்பன் விரட்டினான். இவனுடைய அதட்டலுக்கு எருமையாயிருந்தால் அடுத்த எட்டு எடுத்து வைத்திருக்காது. ஆனால் விருந்துக்கு அழைக்க வந்த மாரி நாவிதன் அப்படிப் போய் விட முடியுமா? வந்த சிரிப்பை அடக்க முடியாது அவன் சிரித்துக் கொண்டே வந்தான். 

“சாமி, பந்தி உட்டாச்சுங்க. தேவைக்காரர் வளவிலே சாப்பாட்டுக்கு கூப்பிடறாங்க” என்றான் மாரி. 

சின்னப்பன் சாப்பிட்டு வெகு நேரமாயிருந்தது. அவன் மனைவியும் முத்தாயாளும் கூடச் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டார்கள். மத்தியானமே விருந்துச் சங்கதி தெரியுமென்றாலும் அவனுக்குப் போக இஷ்டமில்லை. பத்துப் பேருக்கு முன்னால் இப்போதெல்லாம் போவதென்றாலே அவனுக்கு நெருப்பு மேல் நடப்பதைப் போலிருந்தது. அவனுடைய இஷ்டதெய்வம் பிரசன்னமாகி எங்காவது மனிதப் பூண்டற்ற ஒரு இடத்திற்கு அவனை அழைத்துப் போவதாகச் சொன்னால், சந்தோஷமாக அன்பு அழைப்புக்கு உட்பட்டிருப்பான். 

“இப்ப வாரமப்ப, நீ போ” என்று சின்னப்பன் சொன்னான். தான் போகாவிட்டாலும் வெளிக்கு ஏன் காட்டிக் கொள்ள வேண்டும் என்று இப்படிச் சொன்னான். 

“சரி, சட்டுனு வாங்க” என்று கூறிவிட்டு வேறு வீடுகளை நோக்கி மாரி வேகமாக நடந்தான். 

பந்தக் காலில் சாய்ந்தபடியே உட்கார்ந்து கொண்டே சின்னப்பன் எதையோ பற்றி யோசித்தான். எப்படிச் சிந்தை சென்றாலும் கடைசியில் நாகம்மாள் விஷயத்திலேயே வந்து நின்றது. ‘இன்னம் தான் என்ன, எம் பேச்சைத் தட்டுவாங்களா? நாம் பாத்து இது செரியில்லையின்னா கேக்கும்ங்கிற உறுதி இருக்குது. ஊடுன்னு இருந்தா கோபதாபம் இல்லாதையா இருக்கும்? என்னமோ, இப்போ போயிட்டாங்க வெடிஞ்சா வாராங்க’ இப்படி எண்ணும் போதே ‘கலைப்பார் கலைத்தால் கல்லும் கரையும். அந்த விடு சூளைகளும் அர்த்தம் கெட்ட மணியக்காரனும் என்ன பண்ணுவாங்களோ’ என்ற நினைவு வரும். 

‘சரி என்ன வந்தாலும் இந்தக் கட்டை அதரவா போகுது? எங்க அப்பன் காலத்திலும் அவர் ஒருத்தருக்கும் அடங்கி நடந்தவரல்ல. இந்த மணியக்காரனும், சித்தப்பனும், பெரியப்பனும் மண்ணுக் கவ்வினவங்க தானே! ஒரு கை பார்க்கிறது’ என்று திடம் செய்து கொண்டான். 

அப்பொழுது முத்தாயா என்னவோ தூக்கத்தில் உளறினாள். ராமாயியும் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள். தன் புருஷன் ஒருமாதிரி பந்தக் காலோரம் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, “ஐயோ சாமத்துக்கு மேலாகுது ஏன் முழிச்சிட்டு இருக்கீங்க” என்றாள். 

“இப்ப பலபலன்னு வெடிஞ்சு போயி நிலந் தெரியுது. தோட்டம் போக வேண்டாமா?” என்றான் சின்னப்பன். ஆனால் சிரிப்பை அடக்க அவனால் முடியவில்லை. 

ராமாயி கண்டு கொண்டாள். கண்ணைத் துடைத்துக் கொண்டு, “என்ன சத்தம் ஊரடங்கலியா?” என்றாள். 

“இந்தா அரகமா பேசாதே. அப்புறம் விருந்துக்காரர் ஊட்டிலிருந்து ஆள் வந்தாலும் வரும்.” 

“ஓ! அதுதான் சலம்பலடங்கிலைப் போலிருக்குது. நான் மறந்தே மறந்திட்டனுங்களே! ஆனா நீங்க தான் சோறு உங்கப் போயிட்டு வரப்படாதுங்களா?” 

“நான் என்னத்துக்கு அங்கு போறேன். வேணும்னா முய்யைக் குடுத்திட்டா போறது.” 

அப்போது, “ஆரு ராமாயாளா இந்நேரத்திலே பேசறது?” என்று பக்கத்து வீட்டுக்காரி சுவற்றுக்கு அந்தப்புறத்திலிருந்தபடியே கேட்டாள். 

“நாங்க என்னக்கா பேசறம்? இத்தனை நேரம் நானும் தூங்கிட்டுத் தான் இருந்தேன். இந்தப் பொழையா தூக்கமொன்னு” என்று கூறிச் சிரித்தாள். 

அவள் சிநேகிதையும் சிரித்துக் கொண்டே, “ஆமாம் எங்காயா நாகம்மாளைக் கண்ணிலே பாப்பமின்னாக் காணோமே” என்றாள். நடந்த விஷயம் ஒன்றும் இன்னும் அவள் காதுக்கு எட்டவில்லை. 

தன் கணவன் பக்கத்தில் இல்லாதிருந்தால் ராமாயியும் சங்கதியைச் சொல்லியிருப்பாள். இப்போது அதை எல்லாம் சொல்லத் தருணமில்லை. “எப்படியோ உம்மவள் ஒடம்பு நல்லானாச் செரி” என்று ஒரு விதமாகப் பேச்சை முடித்தாள். 

அத்தியாயம் – 27

“தூங்கப் போ” என்று மணியக்காரர் கெட்டியப்பனிடம் சொல்லும் போதே, ‘இன்றைக்கு தூக்கமேது?’ என்று அவன் தன்னுள் எண்ணிக் கொண்டான். ஆனால் அதை யாரிடமும் சொல்லவில்லை. “இதோ அப்படியே” என அங்கிருந்து கிளம்பினான். 

எங்கும் ஒரே இருள். மயிர் பிடித்தால் மயிர் தெரியாத அவ்வளவு இருட்டு. கரடுமுரடான நதிக்கரைத் திட்டுக்களைத் தாண்டிக் கெட்டியப்பன் தன் திசை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். மேலே போர்த்தியிருந்த துப்பட்டியை எடுத்து உருமாலாகத் தலையில் சுற்றிக் கொண்டு, “ஊருக்கூடிச் செக்குத் தள்ளுகிறதாம். ஊதி விட்டால் விழுகிற அந்த நோஞ்சானை தொலைக்க என் கையில் இருக்கிறது மருந்து” என்று வாய்விட்டுச் சொன்னான். யாராவது அக்கம் பக்கம் இருக்கிறார்களா என்று சுற்றிலும் ஒரு முறை பார்த்தான். அந்த மையிருளில் செடி, கொடிகளின் சாயல்தான் தெரிந்தது. பழைய பத்திய முறையை அனுசரித்து மருந்து கொடுக்கிறானா அல்லது சாஸ்திர சிகிச்சையைக் கையாளுகிறானா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 

இரண்டொரு இடத்தில் சேறு வழுக்கி விட்டதையும், குழுகுண்டுகளில் கால் இடறியதையும் சமாளித்துக் கொண்டு, நனைந்து போன கால் செருப்பைக் கழற்றித் தூர எறிந்துவிட்டு குடிசை போய்ச் சேர்ந்தான். இவனை எதிர்பார்த்துக் கொண்டு இரண்டு பேர் அங்கே காத்திருந்தார்கள். 

இவனைக் கண்டதும், “அடே, என்னப்பா நம்பினால் பெரிய கல்லாத்தான் தூக்கி கொடுத்திடுவாய் போலிருக்குதே. எந்நேரம் வரச் சொன்னது? இப்போ வந்திருக்கிறாய்” என்று ஒருவன் சொன்னான். 

இன்னொருவன், “குடிக்கத் தண்ணி கேட்டா குளிப்பாட்டக் கொண்டு வருவான். சாமி சத்தியமா பூசாரிக்குத் தெரியாதா? வெறும் பேச்சு பேசறதைவிட காரியத்தைப் பார்ப்போம்” என்றான். 

“சரி, சரி, வாஸ்தவமப்பா” என்று கெட்டியப்பன் சொல்லி அவர்களுக்கு முன்னால் தானே வழிகாட்டிப் போவதிலிருந்து அவனுக்கு முன்பே விஷயம் தெரிந்திருக்க வேண்டும். 

“ஆறிப் போனால் ருசிப்படாது. எல்லாம் சுடச்சுட பார்த்துடோணும்” என்றான் ஒருவன். 

“என்ன கெட்டீனா, அவன் தனியாக அங்கே காவலுக்கு இருக்கிறான். ஒவ்வொன்றாக பதம் பார்த்து சரிகட்டி விட்டால்?” என்று மற்றவன் சொன்னான். 

“அவனை உசிரோடு புதைச்சுட மாட்டேன். சரி எவனாச்சு முழிச்சுக் கொண்டிருக்கப் போறான். அங்கபோய் பேசிக்கலாம்” என்று கெட்டியப்பன் சொல்லவும் சம்பாஷணை அடங்கிற்று. 

காலடிச் சத்தங்கூட பலமாகக் கேட்காமல் நடந்து மூவரும் மடுவுத் தோப்புக்குள் நுழைந்து விட்டார்கள். அடிக்கு அடி பின்னிக் கிடந்த மரம், செடி, கொடிகளுக்கிடையே தங்கு தடையின்றி தாராளமாகச் சென்று ஒரு பாழடைந்த கிணற்று மேட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அந்தக் கிணறு ரொம்ப ஆழமில்லை. சும்மா பத்து அடிதான் இருக்கும். ஆனால் அந்த இருட்டில் வகை தெரியாமல் உள்ளே சிக்கிக் கொண்டால் ஊனமின்றிக் கரையேறுவது அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்ததே. அதற்குச் சற்றுத் தள்ளி ஒதுக்கமான ஓரிடத்தில் கொஞ்சம் வெளிச்சம் தெரிந்தது. “அதோ அங்கு தான்” என்று ஒருவன் கை நீட்டினான். 

“ஆமாம் கிணற்றுப் புறா மாதிரி ‘பொட, பொட’வென முழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான் பாரு. ஏண்டா டேய்” என்று கொஞ்சம் உற்சாகமாகக் கத்திவிட்டு, “மிச்சம் இருக்குதோ, இல்லையோ? எல்லாம் சுருட்டி வாய்க்குள் போட்டுக் கொண்டாயா?” என்றான் கெட்டியப்பன். 

“போனது போக இருக்கிறது மிச்சம்” என்று தன்னிடம் வந்த விருந்தினர்களை உபசரித்தான் அங்கிருந்த மரியாதை தெரிந்தவன். 

மூன்று பேரும் உட்கார்ந்தனர். 

“சரக்குத் தயார் தானப்பா” என்று அங்கிருந்தவன் கூறிக் கொண்டே கலயங்களை எடுத்து வந்தான். புதிதாக அப்போதுதான் இறக்கிய தென்னங்கள்ளு ‘சொய்’ என்ற சப்தத்துடன் நுரை மிதக்க நின்றது. அதைக் கண்டதும் ஆவலாக ஒருத்தன் அப்படியே கலையத்தோடு தூக்கினான். 

“என்னடா வெறி எடுத்தவனாக இருக்கிறாய். முதலில் இது முடியட்டும்” என்று பானையோடு வறுவல் வகைகளை அவன் எடுத்து வைத்தான். “பனங்கோட்டை ஒண்ணும் இல்லையா?” என்று பானம் செய்ய பண்டம் விசாரித்தவாறே கெட்டியப்பன் ஆகாராதிகளை சுவைக்கத் தொடங்கினான். 

அன்றைக்கு அங்கு நடந்த கோலாகலங்களை எல்லாம் நம்மால் வர்ணிக்க முடியாது. அடடா! துண்டுக்கறியும் ஒவ்வொரு வாய் மதுவும் உள்ளே செல்லும் போது அவர்களுக்கு இந்த லோகத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பே இருக்கவில்லை. 

வெகுநேரம் கொண்டாட்டம் போட்ட பிறகு, இன்பச் சுற்று சுற்றிய பின் மூன்று பேரும் தலை சாய்த்தனர். மஹா மயக்கத்தில் அவர்கள் இந்த வெறும் நிலத்தில் கண் மூடினர். ரோஜாப்பூ மெத்தை அளித்திருந்தால் கூட நித்திரைக்கு லாயக்குப் படாதென்று தள்ளியிருப்பார்களென்று நினைக்கிறோம். 

இத்தனை அமளி துமளியிலும் கெட்டியப்பன் நினைவு தவறாது மிதமாகவே இருந்தான். கண்கள் மட்டும் திரண்டு செஞ்சிவப்பா யிருந்தன. சிறு குழந்தைகள் கண்டால் நிச்சயம் பயந்துவிடும். 

“என்னடா விடிந்து விட்டதா?” என்று தன்னோடு உட்கார்ந்திருக்கும் செங்காளியிடம் கெட்டியப்பன் கேட்டான். செங்காளி பொட்டென்று கைத்தடியை ஊன்றி எழுந்து பார்த்துவிட்டு, “இப்பொழுது தான் கிழக்கு வெளுக்கிறது. ஆச்சு விடிகிற சமயம் தான்” என்றான். அப்போது ஒரு காகம் ‘கா’ எனக் கத்தியது. “அடே, டே கோழி கூப்பிடுகிறதே?” என்று எழுந்தான் கெட்டியப்பன். 

“எங்கே வயிற்றுக்குள்ளிருந்தா? இன்னும் சரியா செரிக்கவில்லை போலிருக்கிறதே?” என்று காளி சிரித்தான். 

“நீயும் வா” என்று கெட்டியப்பன் சொல்லிக் கொண்டே நடந்தான். எங்கே என்று கேட்காமலே. “நம்ம ஆசாமிகளின் தூக்கம் கலைவது எப்போ?” என்று கேட்டுக் கொண்டே செங்காளியும் பின் தொடர்ந்தான். வேறு விஷயங்களில் மற்றவர்களுடன் கெட்டியப்பன் எவ்வளவு தூரம் சரசம் வைத்துக் கொண்டாலும் ஏதாவது அந்தரங்க காரியமாயிருந்தால் செங்காளியைத் தான் தன்னோடு இட்டுச் செல்வான். செங்காளியும் குருவுக்கு ஏற்ற உத்தம சிஷ்யனாகவே இருந்தான். சாமி மாடு போல அவன் வஞ்சகமின்றி வளர்ந்திருந்தான். பனைமரத்து அடிக்கட்டை போல இருக்கும் அவன் தேகம். ஊரார் சொத்தை தின்றே சேகேறியிருந்தது. 

“தடி, பத்திரம்” என்று மட்டும் கெட்டியப்பன் சொன்னான். அவன் கால்கள் நேராகப் போக மறுத்தன. சில கட்டைகளில் மோதிக் கொண்டன. பள்ளங்களில் ‘கிணுக்’கென இறங்கினான். “என்ன தடம் தெரியலையா?” என்று கேட்பதையும் கவனியாது ஆற்றுக்குச் செல்லும் இட்டேறியில் இறங்கினான் கெட்டியப்பன். 

செங்காளிக்கும் கொஞ்சம் மசமசப்பாகத்தான் இருந்தது. இருந்தாலும் தடுமாறாது பின் நடந்தான். மிருதுவான கூதல் அடித்துக் கொண்டிருந்தது. பட்டிகளிலிருந்து உடம்பை உதறிக் கொண்டே பண்டம் பாடிகள் வெளிக் கிளம்பின. எங்கோ இரண்டொரு நாய்களின் அர்த்தமற்ற குரைப்புச் சத்தத்தோடு, ஆட்டுக்குட்டிகளின், ‘ம்மா’ வென்ற சப்தமும் சுருதிலயமாகக் கலந்தன. அவர் இருவரும் தோப்பைக் கடந்து, நதி மணல் தாண்டி ஊரடியில் உள்ள சின்னப்பன் தோட்டத்து வேலி வந்து சேர்ந்தனர். கெட்டியப்பன் கையிலிருந்த கழியால் வேலியை ஓங்கி ஒரு தட்டுத் தட்டினான். வேலி முட்கள் சிதறின. உள்ளே போக பெரிய வழி ஏற்பட்டது. “அந்தப் பக்கமாக தடம் இருக்கும் போது இது எதற்கு?” என்றான் செங்காளி. அந்த முட்களை சீராக எடுத்து வைக்கக் குனிந்தான். கெட்டியப்பன் திரும்பி, “வேறெ வேலை இல்லெ? காலையிலெ வேலி நடத்தான் இங்கே வந்தோமா? அங்கே பாரு கிணற்று ஓரம் ரொம்ப கூட்டமா இருக்கிறதா” என்றான். 

செங்காளி பார்த்துவிட்டு, “சரியாகத் தெரியவில்லையே. ஆனால் யாரோ நிற்கிறாப் போலிருக்குது. என்ன நாகம்மள் சங்கதியா?” என்றான். 

“ஆமாம் அந்த தொல்லைக்குத்தான் நான் போகிறேன்” என்றான். 

மணியக்காரர் வீட்டில் ஆலோசித்ததைப் போலவே நாகம்மாள் காலையில் போரைத் தொடுத்து விட்டாள். தோட்டத்தில் காலையில் ஏற்றுப் பிடிக்க வந்த சின்னப்பனைத் தடுத்தும் விட்டாள். தொல்லை ஆரம்பமாகி விட்டது. இனி எப்படி முடியுமோ? 

இவர்கள் கிட்ட நெருங்க நெருங்க சின்னப்பன் கடுமையாக அதட்டிப் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. 

“உங் கையைக் கால முறுச்சிருப்பேன். எனக்கு வந்த கோவத்தெ அடக்கீட்டேன். ஓடிப்போ, எம் முன்னாலே நிக்காதே!” என்றான் சினத்தோடு. 

“என்ன? நானா ஓடறடு? தலை துண்டாத்தாம் போவட்டுமே” என்றாள் நாகம்மாள். 

“அவ்வளவு தைர்யமா உனக்கு? அப்படீன்னா இன்னைக்கி அடிதடிக்கினே ஆளுகளையும் வரச் சொல்லிருக்கிறாயா? ஒரு கை பார்த்துட்டுத் தாம் போக உத்தேசமா?’ என்று சின்னப்பன் ‘படபட’வெனப் பேசிக் கொண்டே பின்னால் திரும்பினான். 

அவன் சொல்லியவாறே வந்தவர்களைப் போன்று கெட்டியப்பனும் செங்காளியும் காட்சியளித்தார்கள். 

அவர்களிருவரையும் கண்டதும் நாகம்மாளுக்கு மனம் ‘பகீர்’ என்றது. என்னவோ முன்னெப்பொழுதும் கண்டிராத ஒரு அதிர்ச்சி அவள் தேகத்தை நடுக்கியது. 

எதிரில் நின்று கொண்டிருந்த சின்னப்பனையும் அவனுக்குப் பின்னால் பனங்கருக்கோரத்தில் முத்தாயியை இடுப்பில் வைத்துக் கொண்டிருந்த ராமாயியையும் ஏக காலத்தில் பார்த்தாள். தன்னையே ஒரு தரம் மேலும் கீழும் பார்த்துக் கொண்டாள். அவள் கட்டியிருந்த தூய வெள்ளைக் காடாப்புடவை காற்றில் ‘படபட’வென அடித்தது. அந்தப் புடவைக்கும் சின்னப்பனுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருப்பது போலப் பட்டது. ஆமாம்! அன்று தாலி வாங்கின போது ‘பிறந்திடத்துக்கோடி’ அவளுக்குச் சுற்றின போது அருகில் நின்று கொண்டிருந்த சின்னப்பன் கதறியது அவளுக்கு இப்போது ஞாபகம் வந்திருக்கலாம். அவளால் ஒருவரையும் ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை. பேசவும் முடியவில்லை. 

சின்னப்பனுக்கு அடங்காத கோபம் வந்தது. பனம் கருக்கு ஓரம் நின்று கொண்டிருந்த தன் மனைவியை “இங்கு வா” என்று அழைத்தான். நல்ல நாளிலேயே பலமாகப் பேசாதவள் இவைகளைக் கண்டதும் பதுமை போல் மௌனமாகி விட்டாள். இடுப்பிலிருந்து குழந்தை கீழே இறங்க முயற்சித்தது. 

சின்னப்பன் உக்கிரமாக, “நீங்க ரண்டு பேரும் அவசிபார்சுக்கு வந்து சிப்பாய்களா? செரியான காணியாளனுக்கு பொறந்தவங்க தானா?” என்று ஆத்திரத்துடன், வந்தவர்களைப் பார்த்துக் கேட்டான். 

அப்போதும் அவன் வேகம் தணியவில்லை. இரண்டடி முன் வந்து… 

“இங்கே ஒரு கணம் நின்னுக்கிட்டிருந்தீங்கன்னா, அப்புறம் என்ன நடக்கும்னு தெரியாது!” என்றான். பிறகு சற்று நிதானித்து செங்காளியைப் பார்த்து, “அட, ‘முண்டைப்பயன் செங்காளி மூனூட்டுக்குப் பங்காளி’ன்னு செல்வாந்திரம் சொல்லுவாங்க. உனுக்கு இவ்விடத்தில் என்னடா வேலெ.” 

செங்காளிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். 

ஆனால் கெட்டியப்பன், கையிலிருந்த தடியைப் பிடுங்கிக் கொண்டு, “இப்போ என்ன சொன்னாய்? என்ன நடந்திரு?” என்று விரைப்பாகக் கேட்டுக் கொண்டே முன்னால் போனான். 

“மண்டைக் கிறுக்கு எடுத்து விட்டதா? நீ வருகிற விசையைப் பார்த்தா உனக்குப் போங்காலம் தட்டீட்டது போலிருக்குது” என்று சின்னப்பன் மடிக்குள் கையை விட்டான். 

நிலைமை எக்கச்சக்கமாய் விட்டதால் பயமுறுத்தத்தானோ என்னவோ சின்னப்பன் கத்தி எடுக்கப் போகிறான் என்று நினைத்துச் செங்காளி, “கெட்டீனா, இந்தா நில்லு அவசரப்படாதே” என்று கூறி அவன் கையிலிருந்த தடியைப் பிடுங்கப் போனான். ஆனால் அதற்குள் காரியம் மிஞ்சிவிட்டது. கெட்டியப்பன் தன் கைத்தடியால் ‘மடா’லென்று ஓங்கிச் சின்னப்பன் தலையில் அடித்துவிடான். அந்த அடியின் வேகத்தால் தடி கூடச் சின்னாபின்னமாக முறிந்து விட்டது. 

சின்னப்பன் நிலை கொள்ளாது பூமியில் சாய்ந்தான். 

சிரசினின்றும் ரத்தம் மளமளவென்று பெருகியது. சித்திரை வெயிலில் சோரும் வாழைக் குருத்தைப் போல அவன் அங்கங்கள் சுருங்கின. முதலில் சுவாசம் பலமாகி, பின் மெதுவாக அடங்கிற்று. குழந்தை ‘ஹே’ வெனக் கத்தி ராமாயியைத் தழுவியது. ராமாயி ‘ஹே’வெனக் கதறிக் கொண்டு சின்னப்பன் மேல் விழுந்தாள். 

(முற்றும்)

– நாகம்மாள் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1942, புதுமலர் நிலையம், கோயம்புத்தூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *