கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: July 28, 2023
பார்வையிட்டோர்: 2,056 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16 – 20 | அத்தியாயம் 21 – 25 | அத்தியாயம் 26 – 30

21. முகுந்தன் கோரிக்கை 

மகாராஜாவோ மாதவியோ முற்றும் எதிர்பாராத வித மாக முகுந்தன் திடீரென மகாராஜாவின்மீது பாய்ந்து அவரை உருட்டிவிட்டுச் சாளரத்தை நோக்கி ஓடுவதற்கும் அறைக்குள் மகாராஜாவிருந்த இடத்துக்கு அருகில் ஒரு கூரிய குறுவாள் விழுந்து ‘கிளாங்’ என்ற விபரீத ஒலியை எழுப்புவதற்கும் இடைவெளி சிறிதுமில்லாததால் யாரும் பேசுவதற்கோ எதையும் நினைப்பதற்கும் அவகாசம் அடி யோடு இல்லாதிருந்தது. சாளரத்தை நோக்கி ஓடிய முகுந்தன் வெளியே எட்டிப் பார்த்துவிட்டுப் பெருமூச்சு விட்டு திரும்பி அறைக்குள் வந்த பின்பே தரையிலிருந்து எழுந்த விஷ்ணுகோபன் தனது ஆடைகளைச் சரிப்படுத்திக் கொண்டு மீண்டும் பழைய ஆசனத்தில் உட்காராமல், நின்ற வண்ணம் தனது கண்களாலேயே கேள்விகளை எழுப்பினான் துறவியை நோக்கி. மாதவியின் அதிர்ச்சி நிரம்பிய அழ கிய விழிகளும் அவனை ஏறெடுத்து நோக்கின; வினவின விஷயம் என்னவென்று. இருவர் விழிகளையும் மாறி மாறி ஒரு வினாடியே பார்த்த வாலிபத் துறவி, மன்னன் உட் கார்ந்த ஆசனத்தை எடுத்து அறையில் இரு சாளரங்களுக் கும் இடையிலிருந்த சுவரை ஒட்டிப் போட்டான். ராஜா இப்படி அமரலாம்” என்றும் கூறினான். 

மகாராஜா ஒரு விநாடி அவனை உற்று நோக்கினார். பிறகு பேசாமல் அவன் போட்ட ஆசனத்தில் அமர்ந்தார். அவர் எதிரே நின்று கொண்டிருந்த முகுந்தன், மகா ராஜா இனிமேல் நீங்கள்இந்த அறைக்கு வரும்போதுஇந்த இடத்தில் அமருவது நலம். சாளரத்தின் மூலம் எட்டிப் பார்த்தாலும் நீங்கள் இருப்பது தெரியாது. எதிரே இருப்பதோ சுரங்கக் கதவு. அது திறக்கப்பட்டால் தங் களுக்கு ஆபத்தில்லை. அது எப்படியும் எச்சரிக்கைச் சத்தம் அளிக்கும். அடிக்கடி உபயோகப் படுத்தாத கதவு பாருங் கள்” என்று தனது ஏற்பாட்டுக்குக் காரணம் கூறினான். 

பெரிய அனர்த்தம் ஏதும் ஏற்படாதது போலவும், சர்வ சகஜமாகவும் பேசிய முகுந்தனைப் பார்த்த மகாராஜாவின் விழிகள் வியப்பால் மலர்ந்தன. என்னைக் கொல்ல நடந்த இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீ அதிக அக்கறை ஏதும் காட்ட வில்லையெனத் தெரிகிறது” என்று சொன்னார் மகாராஜா. 

முகுந்தன் நிலத்தைப் பார்த்தான் பதிலுக்கு. ‘மகாராஜா! அந்தஸ்து அதிகமாக ஆக ஆபத்தும் அதிகம். நமது அருகிலேயே எதிரி இருக்கும்போது இத்தகைய நிகழ்ச்சிகளை எதிர்பார்க்க வேண்டியதுதானே?” என்றான் நிதானமாக. 

அதுவரை மௌனமாயிருந்த மாதவியின் கண்களில் கோபம் உதயமாயிற்று, இந்த இடத்திலா?” என்ற கேள்வியிலும் சீற்றம் இருந்தது. 

துறவி தனது பார்வையைச் சற்று எட்ட நின்றிருந்த மாதவி மீது திருப்பினான். “ஏன் இந்த இடத்திற்கென்ன?” என்று வினவினான். 

“இது…. இது….” இரண்டு ‘இது’களுக்கு மேல் நா இயங்காததால் மென்று விழுங்கினாள் மாதவி. 

“தேவகியின் பள்ளியறை” என்றான் துறவி. “இந்த மஞ்சங்களையும் மற்ற பொருள்களையும் கவிழ்த்தவன் ரசிகத் தன்மையில்லாதவன்’ என்று குற்றமும் சாட்டினான். 

“இது தேவகியின் அறை என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?” மாதவியின் கேள்வியில் சீற்றத்துடன்’ சங்கடமும் புலப்பட்டன. 

“கிட்டதட்ட உன் அறையைப் போலவே இருக்கிறது…” 

“அதனால்?”

“இத்தனைப் போகப் பொருள்களை மகாராஜாதான் அளிக்க முடியும். எல்லாம் விலை உயர்ந்தவை.”

“அதனால்?” 

“மகாராஜா இங்கு வருவதற்கு நியாயமிருக்கிறது…. ஆனால்….” 

“ஆனால்?” 

“நீ அவருடன் வர நியாயமில்லை. இருப்பினும் வித்தி யாசம் யாருக்குத் தெரியப் போகிறது? நீங்கள் இருவரும் ஒரே அச்சில் வார்த்த மாதிரி இருக்கிறீர்கள்….” 

இந்தச் சமயத்தில் மகாராஜா உரையாடலில் குறுக்கிட் டார். “முகுந்தா! மாதவியைத் தவறாக நினைக்காதே” என்று விண்ணப்பித்துக் கொண்டார். 

“மாதவியைப் பற்றி ஏதும் நினைக்க எனக்கு என்ன உரிமையிருக்கிறது மகாராஜா” என்று கேட்டான் துறவி. 

மகாராஜா இதற்கு நேரடியாகப் பதில் சொல்ல வில்லை. “முகுந்தா? என் வலுக்கட்டாயத்தின் மேல்தான் மா தவி இங்கு வந்தாள்” என்று விளக்கினார், தாம் ஏதோ தவறு செய்து விட்டவரைப் போல. 

“மகாராஜா கட்டாயப்படுத்தினால் யார்தான் வரா திருக்க முடியும்? மகாராஜாவின் இஷ்டப்படி நடப்பது, ஏன் குறி நோக்கி நடப்பதுங் கூட, குடிமக்கள் கடமையல்லவா?” என்று வினவிய முகுந்தன், “மகாராஜா! மகிழம்பூ ஜாடை கண்டு நானே வரவில்லையா?’ என்றும் கேட்டான். அவன் தங்களைப் பார்த்து நகைக்கிறான் என்பதை மகா ராஜா மாதவி இருவருமே புரிந்துகொண்டார்கள். அவ்விருவரில் மாதவியே பேசினாள் முதலில். “சோழநாட்டு வீரரே! எதையும் வெளிப்படையாகப் பேசுவது நல்லது” என்றாள். 

“அதுமட்டும் காஞ்சியில் முடியாது” என்று திட்டமாகச் சொன்னான் துறவி. 

மாதவி அவனை நெருங்கிவர இரண்டு அடி எடுத்து வைத்தாள். பிறகு சட்டென்று நின்று “ஏன் முடியாது? காஞ்சி என்ன பித்தலாட்ட அரங்கமா?” என்று வினவினாள். உள்ளேயிருந்த சினம் சொற்கள் மூலம் கனல் கக்க. துறவி மெல்லப் புன்முறுவல் செய்தான் அவளை நோக்கி. பிறகு மெதுவாகப் பதில் சொன்னபோது அவன் சொற்கள் அர்த்தபுஷ்டியுடன் வெளிவந்தன; “இதைக் கலையரங்கம் என்று நம்பித்தான் சோழ மண்டலத்தி லிருந்து வந்தேன். கலைக்கூடங்களை இன்னும் பார்க்க வசதி யில்லை. சிறைக் கூடத்தைப் பார்த்திருக்கிறேன். காதல் கூடங்களை, பள்ளியறைகளை, இவற்றையும் பார்த்திருக்கிறேன். எல்லாவற்றிலும் மர்மம் புதைந்து கிடக்கிறது. மர்மம் என்ற சொல்லுக்குப் பலபடி பொருள் கொள்ளலாம். நமக்குப் புரியாதது என்பது ஒன்று. அது நமது புத்திக் குறைவாலும் புரியாதிருக்கலாம். பிறர் பித்தலாட்டத்தின் திறமையாலும் புரியாதிருக்கலாம்” என்று விவரித்தான் முகுந்தன். 

அவன் உள்ள நிலையைத் தெளிவாக விளக்காவிட்டா லும் உட்பொருள் வைத்தே பேசியிருக்கிறானென்பதை, மகாராஜா மாதவி இருவருமே புரிந்துகொண்டதால் ஏதும் பதில் பேசவில்லை இருவரும். கடைசியில் மகாராஜா பேசிய போது அவர் குரலில் வெறுப்பு ஒலித்தது. முகுந்தா! மகாராஜாவின் வாழ்க்கை நல்ல வாழ்க்கையல்ல” என்றார். 

துறவி மகாராஜாவை நன்றாகவே நோக்கினான். மகாராஜா உங்கள் வாழ்க்கையைவிடப் பொறுப்புள்ள வாழ்க்கை கிடையாது. காஞ்சி மண்டலத்தின் நலன், பல்லவ குலத்தின் பிற்காலம், இரண்டும் உங்கள் கையில் தானிருக்கின்றன” என்று கூறினான். அவன் சொற்களிலிருந்த ஒலி, “உன் கடமையைச் சரியாகச் செய்” என்று சொல்வது போலிருந்தது மகாராஜாவுக்கு. 

மகாராஜா சிந்தித்தார் சில விநாடிகள். பிறகு சொன் னார். “எல்லாம் ஆண்டவன் கைகளில் இருக்கின்றன” என்று. 

“ஆண்டவன் சித்தம் மனிதர்கள் மூலம் செயல் படுகிறது” என்றான் துறவி. 

மகாராஜா தலையசைத்தார் ஆமோதிப்பதற்கு அறிகுறியாக. ‘இப்பொழுது என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?” என்று வினவினார். 

“செயல்படச் சொல்கிறேன்” துறவியின் பதில் திட்டமாயிருந்தது. 

“விளக்கமாகச் சொல்.” 

“உங்கள் எதிரியைச் செயலற்றவராகச் செய்யச் சொல்கிறேன். 

”யார் அது?” 

“உங்களுக்குத் தெரியும்.” 

”உனக்கு?” 

“திட்டமாகத் தெரியாது. ஊகம்தான்”. 

“உன் ஊகம் சரியென்று வைத்துக்கொள்வோம்.என் நிலையில் நீ என்ன செய்வாய்?” 

“முதலில் எதிரியைத் தொடமாட்டேன்.” 

“அதைத்தான் நானும் செய்கிறேன்.”

“அது மட்டும் போதாது.”

மகாராஜா புருவங்களைத் தூக்கினார் வேறு என்ன செய் வது என்று கேட்கும் பாவனையில். துறவி சொன்னான் பதிலை ‘“துறவியைச் சேர்ந்தவர்களை ஒவ்வொருவராகச் சிறைசெய்யலாம்” என்று. 

மகாராஜா எழுந்தார் ஆசனத்தைவிட்டு. “அது சுலப மென்று நினைக்கிறாயா!’ என்று வினவினார். அப்படியும் இப்படியும் இருமுறை நடந்து, பிறகு சட்டென்று நின்று துறவியை நோக்கினார். 

“தங்களுக்குச் சுலபமில்லை….” என்றான் துறவி.

“வேறு யாருக்குச் சுலபம்?” 

“தங்களால் நியமிக்கப்படும் அதிகாரிக்கு.”

“அந்த அதிகாரி எதிரியைச் சேர்ந்தவனாயிருந்தால்?” 

“புது அதிகாரியை நியமிப்பது”. 

மகாராஜா பெரிதாக நகைத்தார். “அப்படி யார் கிடைப்பார்கள்? அதுவும் காஞ்சியில்! வெறும் பகற்கனவு முகுந்தா!” என்றார் நகைப்பின் ஊடே. 

“காஞ்சியைச் சேர்ந்தவனைத்தான் நியமிக்கவேண்டு மென்பது என்ன கட்டுப்பாடு?” என்று வினவினான் துறவி மெதுவாக. 

மகாராஜாவின் கண்களில் ஒரு விவரமற்ற பார்வை விரிந்தது. ”நீ சொல்வது புரிகிறது முகுந்தா” என்றார் துக்கம் நிறைந்த குரலில். 

“புரிந்தால் செயல்பட வேண்டியது தானே” என்றான் முகுந்தன். 

“முடியாது, முகுந்தா முடியாது. எனது எதிரி சாமான்யப்பட்டவனல்ல. மிகுந்த அறிவாளி. எதையும் விநாடியில் ஊகிக்கக் கூடியவன்” என்று மகாராஜா கூறினார். 

முகுந்தன் முகத்தில் அப்பொழுதுதான் சினம் துளிர்த் தது சிறிதளவு…. “அச்சம் அரசர்களுக்கு அழகல்ல” என்றான் சலிப்புடன். 

மகாராஜாவின் முகத்திலும் சினம் லேசாக உதய மாயிற்று. “அச்சம் என்பது என்னவென்று எனக்குத் தெரியாது முகுந்தா. ஆனால் விவேகமற்ற காரியத்தில் நான் பிரவேசிப்பதில்லை” என்ற மகாராஜா, ”முகுந்தா அந்த எதிரியைச் சமாளிக்க உன்னை நியமிக்கச் சொல்கிறாய்” என்றும் கூறினார். 

‘“ஆம்!” சிந்தனை சிறிதுமின்றிப் பதில் வந்தது முகுந்தனிடமிருந்து. 

“உன்னை நியமித்தால் ஏற்கனவே உள்ள படைத்தலைவனை அகற்ற வேண்டும்” என்றார் மகாராஜா. 

“அவசியமில்லை. அவனுக்கு உபதலைவனாக நியமிக்கலாம்”.  

“அவனுக்கு ஒரு உபதலைவன் ஏற்கனவே இருக்கிறான்”.  

“ஓர் அரசில் இரண்டு மூன்று உபதளபதிகள் இருப்பது சகஜந்தானே?” 

“இந்த ஊரில், இந்தச் சமயத்தில், அது, சகஜமல்ல”.  இதை மிகத் திட்டமாகச் சொன்னார் மகாராஜா.

“அப்பொழுது ஒன்று செய்யலாம்” என்றான் துறவி.

“என்ன?”

“எனக்குப் பதில் எனக்கு வேண்டிய ஒருவரை நியமியுங்கள்” என்றான் துறவி. 

“யாரை?” மகாராஜாவின் கேள்வி வியப்புடன் வந்தது. பதில் கூறினான். 

மகாராஜாவுக்கு உலகமே சுற்றுவது போலிருந்தது. 

“நீ சுயபுத்தியுடன் தானிருக்கிறாயா?” என்று வினவினார் எரிச்சலுடன். 

22. தேடிவந்த சொர்க்கம் 

மகாராஜா விஷ்ணுகோபனுக்கு அத்தனை கோபம் வந்த. திலோ அவர் கேட்ட கேள்வியிலோ தவறு ஏதுமே இல்லை. அத்தகைய யோசனையை யாரும் ஏற்க முடியாத வழியைச் சொன்னான் வாலிபத் துறவியான முகுந்தன். “மாதவியை நியமித்து விடுங்கள்” என்று அவன் சொன்னது மன்னன் காதுகளுக்கு நாராசமாயிருந்தது. இருப்பினும் முதலில் சினத்தின் வசப்பட்ட மகாராஜா சிறிது தன்னைத் திடப் படுத்திக் கொண்டு “முகுந்தா, மாதவியை உபதளபதியாக நியமித்தால் காஞ்சி என்ன சொல்லும்? என்ன கேட்கும்?” என்று வினவினார். 

துறவி சிறிதும் சிந்திக்காமல் உடனடியாகப் பதில் சொன்னான்: “மகாராஜாவுக்கு சமுத்திரகுப்தன் படையெடுப்பால் பைத்தியம் பிடித்துவிட்டதென்று சொல்லும். ஏன்? இந்தக் காஞ்சி மண்டலத்தில், வீரர்களுக்கு இருப்பிடமான தமிழ் நாட்டில் ஆண்மகன் எவனுமே கிடைக்க வில்லையா என்று கேட்கும்” என்றான். 

“இத்தனையும் தெரிந்துமா மாதவியை இந்தப் பதவிக்கு நியமிக்கச் சொல்கிறாய்?” என்றார் மகாராஜா அடுத்தபடி. 

துறவி மாதவியை நோக்கினான் ஒரு விநாடி. அடுத்த விநாடி தலையை ஏதோ முடிவுக்கு வந்துவிட்டவன் போல் ஆட்டிக்கொண்டு, “ஆம், மகாராஜா! நன்றாக யோசித்த பிறகே இந்த முடிவுக்கு நான் வந்தேன். மாதவியை நியமிப்பதில் அனுகூலங்கள் பல இருக்கின்றன” என்று கூறினான். 

“அவை என்னவோ?” மகாராஜா கேள்வி கேட்டுத் துறவியை உற்று நோக்கினார். 

“முதலில் அவள் பெண். யாரும் கொல்ல மாட்டார்கள்….”

இங்கு மகாராஜா இடைமறித்தார். “அதெப்படி நிச்சயமாகச் சொல்ல முடியும்?” என்றும் கேட்டார். 

“அந்த நிலைக்குத் தமிழகம் இன்னும் வரவில்லை யென்று நினைக்கிறேன். தவிர, பெண்ணைக் கொன்றால், அது மக்களுக்குத் தெரிந்தால், அப்புறம் தங்கள் எதிரி காஞ்சி மண்டலத்திலிருக்க முடியாது. பல அநீதிகளைச் சமூகம் பொறுத்துக் கொள்ளும். ஆனால் அநீதி அளவுக்கு மீறினால் சமுதாயம் என்ன செய்யும், எதுவரையில் போகும் என்று சொல்ல முடியாது மகாராஜா. இந்த விஷயத்தில் தங்கள் எதிரிகூட எச்சரிக்கையாயிருப்பான்” என்று விளக்கினான். 

எதையும் மிகத் தெளிவுடன் நோக்கக் கூடிய விஷ்ணுகோப மகாராஜாகூடக் குழப்பமடைந்தார் துறவியின் சொற்களால். துறவி சொன்ன எதிலும் லவலேசம் – தவறு இல்லை யென்பதை அவர் புரிந்து கொண்டுதானிருந்தார். ஆனால் தனிப்பட்ட கொலைகளால் சமுதாயம் விழித்துக்கொண்டு விடாது என்பதிலும் அவருக்குச் சந்தேக மில்லை. ஆகவே மாதவியைப் பகிரங்கமாக உபதளபதி யாக்குவதில் பல கஷ்டங்களிருப்பதை அவர் உணர்ந்தார். பிறகு கேட்டார், “பெண்ணை நியமிப்பதானால் தேவகியை நியமித்தாலென்ன?” என் ன்று. 

கூடாது என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான் துறவி. “தேவகி தங்கள் காதலியென்பதைக் காஞ்சி அறியும்” என்றும் சொன்னான். 

“அதனாலென்ன?”

“காதலிக்குப் பதவி கொடுக்க நீங்கள் அவளை நியமிப்பதாக மக்கள் நினைப்பார்கள். அந்த நியமனத்தை ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள்.” 

“மாதவியை நியமித்தாலும் அப்படித்தானே? காதலியின் தங்கையை நியமித்ததாகச் சொல்லமாட்டார்களா?”

“சொல்லமாட்டார்கள்; என் யோசனைப்படி நடந்தால்.”

“என்ன யோசனை?” 

“மாதவி எனக்குப் பாடம் சொல்லத் தினம் சிறைச் சாலைக்கு வருவாள்” சொற்களைத் துறவி முடிக்குமுன்பே மகாராஜா, மாதவி இருவருமே அதிர்ச்சியடைந்தார்கள். 

துறவியும் அவர்கள் அதிர்ச்சியைக் கவனிக்கவே செய்தான். அதனால் புன்முறுவல் கொண்டு மேலும் தொடர்ந்தான்: “மகாராஜா! மாதவி எனக்குப் பாடம் சொல்ல இந்த நிலவறை வழிமூலம் வரவேண்டியதில்லை. பகிரங்கமாகச் சிறையின் பெருவாசல் வழியாக வரலாம். இதில் மஹாயனரும் நமக்கு உதவியாயிருப்பார். அவர் உத்தரவுப் படிதான் மாதவி பாடம் சொல்லுகிறாளாதலால் அதை அவர் ஆட்சேபிக்க மாட்டார். அவர் ஆட்சேபிக்காததைக் காஞ்சி மண்டலத்தில் யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். பத்ரவர்மன்கூட இதில் தலையிட மாட்டான். தவிர உதவவும் செய்வான்.”

இந்த விவரம் மகாராஜாவுக்கு இன்னும் அதிக வியப்பை அளித்தது. “உனக்குப் பத்ரவர்மன் உதவுவானா? நானில்லாவிட்டால் மன்னன், அவன் என்பது உனக்குத் தெரியுமல்லவா?” என்று வினவினார் மகாராஜா, வியப்பு குரலிலும் ஒலிக்க. 

துறவி மகாராஜாவின் வியப்பைக் கண்டு அசரவில்லை. “நீங்கள் மாதவியை நியமிப்பதே பத்ரவர்மன் கையைப் பலப்படுத்துவதாகும். மகாராஜா, தாசிலோலன் என்று வதந்தி கிளப்பிவரும் பத்ரவர்மன், மாதவியை நீங்கள் உபதளபதியாக நியமித்து, அவள் எனக்குப் பாடம் சொல்ல வருவதை அறிந்ததும் இந்த நியமனம் போலி நியமனம் என்று பறைசாற்றுவான். மகாராஜா மாதவி மூலம் அந்த சோழநாட்டானுக்குத்தான் பதவி வழங்கியிருக்கிறார் என்று புரளி கிளப்புவான். பல்லவ நாட்டில் யாருமில்லையா இந்தப் பதவிக்கு என்றும் கேட்பான்” என்று விளக்கினான் மேலும். 

மாதவி இதைக் கேட்டுச் சீற்றமடைந்தாள். “என்னைப் பற்றி உங்கள் அபிப்பிராயமென்ன?” என்று கேட்டாள். 

துறவி அவளை நன்றாக நோக்கினான் ஒருமுறைக்கு இருமுறை. “எனது அபிப்பிராயங்களை நான் அடிக்கடி மாற்றிக் கொள்வதில்லை” என்று கூறினான் முடிவில். 

“அதாவது….?” என்று கேட்டாள் மாதவி சீற்றமும் தயக்கமும் இணைந்த குரலில். 

“சேராத சேர்க்கை நீ” என்றான் துறவி.

“சேராத சேர்க்கையா?” 

‘“ஆம்; முதலில் நீ அழகி….”

“உம்.” 

“இரண்டாவது நல்ல அறிவாளி.”

“நன்றி.” 

“நன்றி தேவையில்லை. அழகும் அறிவும் சேருவது கிடையாது. ஆகையால்தான் சேராதசேர்க்கை என்றேன்” என்றான் துறவி. 

இந்த அனாவசியத் தர்க்கத்தை வளர்த்த மகாராஜா இஷ்டப்படாததால் ”முகுந்தா!” என்று சற்றுக் கடுமையாகக் குரல் கொடுத்தார். 

‘“மகாராஜா!” என்று பணிவுடன் கேட்டான் துறவி.

“உன் யோசனைக்கு நான் ஒப்புக்கொண்டால்?” என்று மகாராஜா வினவினார். 

“காஞ்சி மீது யாரும் கைவைக்க முடியாது” இதைத் திட்டமாகச் சொன்னான் துறவி. மேலும் கூறினான்: “மகாராஜா! நான் வந்து நேரமாகிறது. நீங்கள் மாதவியை விட்டு என்னை அழைத்த காரணத்தைச் சொல்லவில்லையே?” என்று கேட்டான். 

“சொல்ல வேண்டியதெல்லாம் தர்க்கத்தில் முடிந்துவிட்டது. நான் இன்னும் நான்கு நாட்களில் காஞ்சியை விட்டுப் புறப்படுகிறேன்” என்று மகாராஜா கூறினார். 

“அது நல்ல ஏற்பாடு” என்று கூறிய துறவி “நான் வருகிறேன் மகாராஜா. மாதவியை நாளைக்கு அனுப்பி வையுங்கள்” என்று கூறிவிட்டு ரகசியக் கதவுக் கருகில் சென்றான். அதைத் திறக்க விசையைத் திருகு முன்பு “மாதவி, இப்படி வா” என்று அழைத்தான். 

மாதவி அவனை நெருங்கினாள். 

“சுரங்கப் பாதையிலுள்ள இன்னொரு கதவை நான் திறக்கவில்லை என்று மகாராஜாவிடம் கூறிவிடு” என்று காதோடு சொல்லிவிட்டு விசையைத் திருகி மர்மக் கதவு வழியாக நிலவறைப் படிகளில் இறங்கிவிட்டான். 

அவன் இறங்கியதும் பழையபடி மூடிக்கொண்ட கதவை அசக்கிப் பார்த்த மாதவி திரும்பவும் மகாராஜாவிடம் வந்தாள். அவள் முகத்திலிருந்த திகிலை மகாராஜா வனித்தார். “அப்படியானால் அதுவும் அவனுக்குத் தரியுமா?” என்று வினவினார். 

”தெரியும் மகாராஜா” என்ற மாதவியின் கண்களில் நீர் மெள்ளத் துளிர்க்கலாயிற்று. 

“மனத்தைத் தளரவிடாதே மாதவி. உன்னிடம் அன்பு வைத்திருக்கும் துறவி ஈடு இணையற்ற அறிவாளி. உனக்கு இனி எந்தக் குறைவுமில்லை” என்று தைரியம் சொல்லி மாதவியின் முதுகைத் தடவியும் கொடுத்தார் ஆறுதலாக. 

நிலவறைப் படிகளில் இறங்கிய துறவி, வந்த வழியே மிகத் துரிதமாக நடந்து சென்று தனது அறையை அடைந்தான். திருப்தியுடன் படுக்கையில் படுத்துக்கொண்டு மோட்டு வளையை நோக்கிச் சிந்தனையில் இறங்கினான். நாழிகைகள் ஓடின. வெள்ளி முளைக்கும் நேரம் வருவதற்குச் சிறிது முன்பாகவே சிறைச்சாலைக்குள் பல புரவிகள் வரும் சத்தம் கேட்கவே மிகுந்த திருப்தியுடன் கண்களை மூடிக்கொண்டான் துறவி. புரவிகளில் வந்தவர்கள் அவ னிருந்த அறைக் கட்டிடத்துக்கு முன்பு கீழே குதித்த அரவம் கேட்டது துறவிக்கு. பிறகு அவன் அறைக் கதவும் பலமாகத் தட்டப்பட்டது. “திற கதவை” என்று பத்ரவர் மன் அதிகாரக் குரல் மிகப் பலமாக ஒலித்தது வெளியே. துறவி மெள்ளப் படுக்கையிலிருந்தே கேட்டான் “யாரது” என்று 

“திற கதவை” பத்ரவர்மனின் குரல் கடுமையுடன் ஒலித்தது இரண்டாம் முறை. 

துறவி கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டு தள்ளாடி நடந்தான் கதவை நோக்கி.தாழ்பாளை அகற்றிக் கதவைத் திறந்து, “யாரடா அவன்?” என்று சீறி நோக்கினான். 

பக்கத்தில் வீரனொருவன் ஏந்திய விளக்கொளியில் பத்ரவர்மன் முகத்தைக் கண்ட துறவி, “தாங்களா!” என்றான் வியப்புடன். 

“ஆம்” என்று கூறிக் கொண்டே உள்ளே நுழைந்த பத்ரவர்மன் அறையை ஆராய முற்பட்டான். அவன் எதையோ தேடுவதாகத் தோன்றியதால் “என்ன தேடுகிறீர்கள்?” என்று வினவினான் துறவி. 

பத்ரவர்மன் கண்களைத் துறவி மீது நிலைக்க விட்டான் ஒரு விநாடி, ‘‘சற்றுமுன்பு இங்கு வந்தேன்” என்றான் கடுமையுடன். 

அது பொய்யென்பதை உணர்ந்த துறவி, “அப்படியா?” என்றான் சர்வ சாதாரணமாக. 

“கதவையும் தட்டினேன்” என்று மீண்டும் கூறினான். 

“அப்படியா?’’ 

‘“ஆம்.” 

‘“எதற்காக?’” 

“உன்னிடம் பேச.” 

‘“மகிழ்ச்சி”

“எதற்கு மகிழ்ச்சி?” 

“இவ்வளவு பெரிய மனிதர் என்னுடன் பேச வந்த தற்கு; அதுவும் இரவிலே” என்ற துறவி புன்முறுவல் கொண்டான். 

அதைக் கவனித்த பத்ரவர்மன் “அப்பொழுது நீ கதவைத் திறக்கவில்லை” என்றான். 

”உறங்கும்போது யார் கதவைத் தட்டினாலும் திறக்கும் வழக்கமில்லை”. 

“நீ உறங்கவில்லை.” 

‘“ஓகோ!” 

“அறையில் நீ இல்லை.”

இதைக் கேட்ட துறவி சிறிது நேரம் சிந்தனை வசப்பட் டான். “ஆம் உண்மை” என்றான். 

“எங்கு போயிருந்தாய்?” பத்ரவர்மன் குரலில் சந் தேகம் ஒலித்தது. 

“சொர்க்கத்துக்கு.” 

“என்ன!”

”ஆம் சொப்பனத்தில்” என்ற துறவி இடிஇடி என்று நகைத்தான், பத்ரவர்மன் முகத்தருகில். 

“சொர்க்கத்துக்கு உன்னை நிஜமாகவே சீக்கிரம் அனுப்புகிறேன்” என்று கூறிவிட்டு வெளியே சென்றான் பத்ரவர்மன். 

அன்று நடுப்பகலில் மாதவி வந்தாள் சிறைக்கு துறவியைச் சந்திக்க. “பத்ரவர்மன் என்ன என்னை அனுப்புவதாகச் சொல்வது சொர்க்கத்துக்கு? சொர்க்கமே என்னைத் தேடி வருகிறது” என்று தன்னுள் சொல்லிக் கொண்டான் துறவி மாதவி சிறையின் பிரதான வாயிலில் நுழைவதைப் பார்த்ததும். சொர்க்கம் மெள்ள மெள்ள அவன் அறையை நோக்கி நடந்து வந்தது. அதன் நடையும் இன்பமாக இருந்தது. 

23. பாடம் சொல்லும் படலம் 

நடுப்பகலில் இன்ப நடைநடந்து சிறைச்சாலையில் இரு புறங்களின் அறைகளையும் பார்த்துக் கொண்டும், தீவிர சிந்தனை வசப்பட்டும் வந்த மாதவி நீண்ட நேரத்துக்குப் பிறகே துறவியின் அறையை அடைந்தாள். அடைந்ததும் திறந்திருந்த கதவுகளை நோக்கியும் அறைக்குள் புகாமல், எட்ட இருந்த சிறைக்காவலர் தலைவனை அருகில் வருமாறு கையால் சைகை காட்டி அழைத்தாள். அவள் சைகை காட்டி அழைத்த விதத்தில் ஏதோ புதுமை இருந்திருக்க வேண்டும். காவலர் தலைவன் விழிகளில் வியப்பு நிரம்பி நின்றது. அந்த வியப்பின் விளைவாகச் சிறிது துரிதமாகவே வந்த காவலர் தலைவன், “அம்மணி! தங்களுக்கு ஏதாவது தேவையா?” என்று வினவினான். 

‘’தேவை எனக்கில்லை, உள்ளே யிருக்கும் துறவிக்கு உணவளித்து விட்டாயா?” என்று அதிகாரக் குரலில் வினவினாள் மாதவி. 

என்றும் எந்தவித அதிகாரத்தையும் செய்யாதவளும் மிக இன்பமாகவும் நயமாகவும் பேசக் கூடியவளுமான மாதவியின் அதிகாரத் தோரணையும் குரலும் காவலனுக்குப் புதிதாக இருக்கவே, அவன் அவளை அதிசயத்துடன் பார்த்தான். ‘மாதவி அம்மையாருக்கு வேண்டியவர்களைப் பட்டினி போட எங்களுக்கு என்ன பைத்தியமா?’ என்று தன் சாதுர்யத்தைக் காட்டினான் காவலன். 

மாதவியின் கண்கள் கோபத்தைக் கக்கின. ‘நீ எத்தனை நாட்களாகச் சிறைத் தலைவன் உத்தியோகத்தைச் செய்து கொண்டிருக்கிறாய்?” என்று வினவினாள், கடுமை நிரம்பிய குரலில். 

சிறைத் தலைவனுக்கு வியப்புத் தாங்கவில்லை. எதற்கும் பதில் சொல்லி வைத்தான் “மஹாயனர் நியமித்த காலத்திலிருந்து” என்று. 

‘‘அதாவது?’” 

“நான்கு ஆண்டுகளாக.” 

“உயர்ந்த அந்தஸ்திலிருப்பவர்களுக்கு வேண்டிய சிறை வாசிகளுக்கு மட்டுந்தான் உணவளிக்கும் பழக்கம் நான்கு ஆண்டுகளாக நடந்து வருகிறதா?” 

”அம்மணி….” சற்றுத் தயங்கினான் சிறைத்தலைவன். “துறவிக்கு உணவளித்துவிட்டாயா என்று கேட்டேன். எனக்கு வேண்டியவராகையால் போட்டு விட்டதாகச் சுட்டிக் காட்டுகிறாய். அப்படியானால் எனக்கு வேண்டாதவரைப் பட்டினி போடுவாயா?” என்று அதட்டிய மாதவி, “உன்னை இன்றிலிருந்து வேலையிலிருந்து நீக்கி விட்டேன். உனக்கு அடுத்தபடி வேலை பார்ப்பவனை வரச் சொல்” என்றாள். 

சிறைத் தலைவன் இதைக் கேட்டதும் நகைத்தான் வெளிப்படையாக “என்னை நியமித்தவர் மஹாயனர். அவரைத் தவிர வேறு யாரும் என்னைப் பதவியிலிருந்து நீக்கமுடியாது” என்றான் திட்டமாக. 

“அப்படியா?” என்று சர்வ சாதாரணமாகக் கேட்டாள் மாதவி. 

தன் நகைப்பாலும் மஹாயனர் பெயராலும் அவள் பயந்து விட்டதாக நினைத்துக்கொண்ட சிறைத்தலைவன், “அம்மணி! தவறாக நினைக்க வேண்டாம். நீங்கள் பேசியது ஏதோ முன் கோபத்தில் பேசினாலும் நடக்காததைப் பற்றிப் பேசியதால் நானும் உணர்ச்சி வசப்பட்டேன். தாங்கள் உள்ளே செல்லுங்கள். துறவி காத்திருக்கிறார்” என்றும் கூறினான். 

அவன் தன்னைப் பார்த்து நகைக்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட மாதவி புன்முறுவல் கொண்டாள். பிறகு, “சிறைத்தலைவரே! தங்களுக்குப் படிக்கத் தெரியுமா?” என்று வினவினாள். 

“சிறை அதிகாரி, அதுவும் மன்னரிடமிருந்தும் பத்ரவர்மரிடமிருந்தும் வரும் உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டியவன், அப்படியிருக்கும் எனக்குப் படிக்கத் தெரிய வேண்டாமா?’ என்றான் சிறைத்தலைவன். 

மாதவி அதற்குப் பதில் சொல்லவில்லை உடனடியாக அறைக்குள் எட்டிப் பார்த்து, ”துறவியாரே! இப்படிச் சற்று வருகிறீர்களா?” என்று அழைத்தாள். 

அதுவரை மாதவிக்கும் சிறைச்சாலை அதிகாரிக்கும் நடந்த சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டு கட்டிலைவிட்டு அகலாமல் கல்லுப் பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருந்த துறவி மெள்ள எழுந்து வெளியே வந்து மாதவியின் பக்கத்தில் நின்றான். மாதவி தனது மடியிலிருந்து ஓர் ஓலைச்சுருளை எடுத்துக் கொண்டாள். பிறகு துறவியை நோக்கி, “துறவியாரே! சிறை அதிகாரியின் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்.அவனைத் தப்ப விடாதீர்கள்” என்று கூறினாள். 

இதைக் கேட்ட சிறைச்சாலை அதிகாரி அச்சத்தின் வசப் பாட்டன். திரும்பவும் முயன்றான். ஆனால் மாதவி சொற்களை முடிக்கு முன்பாக அதிகாரியின் கையைத் துறவியின் இரும்புக் கரங்கள் பிடித்துக்கொண்டன. இந்த நிலையில் திரும்பக் கேட்டான் துறவி, “இவனைத் தூக்கிச் சிறைச் சாலைக்கு வெளியே போட்டு விடட்டுமா அல்லது ஏதாவது சிறை அறை ஒன்றில் தள்ளிப் பூட்டிவிடட்டுமா?” என்று. 

சிறைச்சாலை அதிகாரி மிதமிஞ்சிய வியப்பினாலும் துரிதமாக ஏற்பட்டுவிட்ட நிகழ்ச்சிகளாலும், கைகளோடு புத்தியும் சுவாதீனத்தை இழந்துவிட்டதாலும், திகைத்து நின்றான். அவன் திகைப்பை நீக்க இஷ்டப்பட்ட மாதவி தனது மடியிலிருந்து எடுத்துக் கையில் வைத்துக்கொண்டிருந்த ஓலையைச் சிறைத் தலைவன் கண்களுக்கு முன்னால் காட்டி “இதைப் படி” என்றாள். 

அதைப் படித்த அதிகாரியின் முகத்தில் அச்சமும் அதிர்ச்சியும் ஒருங்கே பளிச்சிட்டன. “அம்மணி! இதை முன்னமே தாங்கள் சொல்லவில்லையே” என்றான். அவன் குரலில் அது வரையிலிருந்த திமிர் மறைந்து கெஞ்சலுக்கு இடம் கொடுத்தது. 

“உன்னை என்ன இங்குள்ள யாரையும் நியமிக்கவோ நீக்கவோ எனக்கு அதிகாரமிருப்பதைப் புரிந்துகொண்டா யல்லவா?” என்று கேட்டாள் மாதவி. 

“புரிகிறது உபதளபதியாரே! புரிகிறது” என்று கெஞ்சினான் சிறை அதிகாரி. அதுவரை சிறை அதிகாரியின் கையைப் பிடித்துக்கொண்டிருந்த துறவி ஏதுமறியாதது போல் மாதவியை நோக்கித் திரும்பி, “உபதளபதியா! யார் உபதளபதி?” என்று வினவினான். 

“அவனையே கேளுங்கள்” என்றாள் மாதவி. 

”உனக்கு புத்தியிருக்கிறதா?” என்று சீறினான் துறவி. “துறவி! யாரிடம் பேசுகிறாயென்பதை எண்ணிப் பேசு. மரியாதைக் குறைவாகப் பேசாதே” என்று அறிவுரை கூறினான் சிறைத் தலைவன். 

“உன்னைக் கேட்கவில்லை. சும்மா இரு” என்று சிறைத் தலைவனை அடக்கிய துறவி மாதவியை நோக்கி, “நான் உன்னைக் கேட்டால் நீ அவனைக் கேட்கச் சொல்கிறாயே. உனக்கு லவலேசம் புத்தியிருக்கிறதா?” என்று சீறினான். 

“துறவி!” என்று கூவினான் சிறைத் தலைவன். 

“உன் உபத்திரவம் தாங்கவில்லை. எதற்காகக் கூவுகிறாய்?” என்ற துறவி சீறினான் சிறைத் தலைவனை நோக்கி. “உன் மாதிரி பேசித்தான் எனக்கு வேலை போய் விட்டது” என்றான் சிறை அதிகாரி. 

”எனக்கு வேலை எதுவும் கிடையாது. ஆகையால் போக முடியாது” என்றான் துறவி. 

‘உனக்குப் போதாத காலம். சிறையில் மரியாதையாக நடத்தப் படுகிறாய். இனி அதுவும் போய்விடும்.” 

”ஏனோ?”

“உபதளபதியை மரியாதையின்றிப் பேசுகிறாய்.”

“உபதளபதி யாரென்று கேட்டேன் உன்னை.”

“துறவி! என்னை ஒழுங்காகப் பதில் சொல்லவிட்டால் தானே நீ! மாதவி அம்மையார்தான் உபதளபதி” என்று பணிவு நிரம்பிய குரலில் கூறினான் சிறைத் தலைவன். 

துறவி முகத்தில் போலி ஆச்சரியத்தைக் காட்டினான். “மாதவி! நீயா! உபதளபதியா?” என்று கேட்டான், போலி ஆச்சரியத்தைக் குரலிலும் காட்டி. 

பதிலுக்கு மாதவி தன் கையிலிருந்த ஓலையைத் துறவியின் எதிராகவும் பிடித்தாள். அதைப் படித்த துறவி பெரிதாக நகைத்தான். 

“காஞ்சியில் ஆண்பிள்ளைகள் இல்லை போலிருக்கிறது. பெண் உபதளபதியாகிவிட்டாள்” என்று கூறி இரண்டாம் முறையும் நகைத்தான்; சிறை அதிகாரியின் கைகளையும் விட்டுவிட்டான். 

சிறை அதிகாரி துறவியின் எமப் பிடியால் செயலற்ற தனது மணிக்கட்டுகளை உதறிவிட்டுக் கொண்டான். பிறகு நிமிர்ந்து நின்று ஒருமுறை குனிந்து மாதவியை வணங்கி, 

“உபதளபதியாரே? இந்தத் துறவியை என்ன செய்யட்டும்?” என்று வினவி அவள் உத்தரவுக்கு எதிர் பார்த்து நின்றான். 

‘‘அவருக்கு எனது நியமனம் தெரியாததால் மன்னித்துவிடுவோம்” என்ற மாதவி, “சிறைத் தலைவரே! நீங்கள் செல்லுங்கள். இவரை நான் கவனித்துக் கொள்கிறேன்” என்று கூறவே சிறைத்தலைவன் படுவேகத்தில் படிகளில் இறங்கிச் சென்றான். 

மாதவி துறவியின் அறைக்குள் நுழைந்தாள். “துறவி யாரே! வாருங்கள்” என்று அவனுக்கு அழைப்பு விடுத்தாள். மாதவி உள்ளே செல்ல, துறவி அவளைத் தொடர்ந்தான். மாதவி அவன் படுத்திருந்த பஞ்சணைக்கு எதிரிலிருந்த மஞ்சத்தில் உட்கார்ந்து கொண்டாள். 

“ஏன்? அப்படி உட்காரலாமே” என்று பஞ்சணையைக் காட்டினான் துறவி. 

“அதில் நானாக உட்கார முடியாது” என்றாள் மாதவி.

“ஏன்?” 

“அப்படிப் பழக்கவில்லை நீங்கள்” என்று கூறிய மாதவி புன்முறுவல் செய்தாள். 

“வேறு எப்படிப் பழக்கியிருக்கிறேன்?” துறவி கேட்டான் குழப்பத்துடன். 

‘“என் மாளிகையில் உங்கள் அறைக்குள் வந்தபோது என்ன செய்தீர்கள்?’ என்று மாதவி வினவினாள் தலை குனிந்த வண்ணம். 

அவளைத் தான் கட்டிலில் அள்ளிப் போட்ட காட்சி துறவியின் நினைவுக்கு வந்ததால் கலகலவென நகைத்தான். “உபதளபதி உத்தரவிட்டால் இப்பொழுதும் அதைச் செய்யத் தடையில்லை” என்றான் நகைப்பை அடுத்து, 

மாதவி புன்முறுவல் காட்டினாள். ஆனால் அதற்குப் பதில் சொல்லவில்லை. “நாடகத்தின் அடுத்த காட்சி என்ன?” என்று கேட்டாள். 

“படிப்புப் படலாம்” என்ற துறவி அவள் காலடியில் உட்கார்ந்தான். சட்டென்று எழுந்திருக்க முயன்ற மாதவியின் துடைகளைப் பிடித்து அழுத்தி உட்கார வைத்தான். “நாடகம் ஆடுவதென்றால் சரியாக ஆடவேண்டும். இன்று நீ இங்கு வந்திருப்பது உபதளபதிப் பதவியைப் பிரகடனப்படுத்த அல்ல” என்றும் கூறினான். 

”வேறு எதற்கு?” மாதவி கேட்டாள் குழப்பத்துடன். 

“மஹாயனர் உத்தரவை நிறைவேற்ற!”

“என்ன உத்தரவு அது?”

”எனக்குப் பாடம் சொல்ல உன்னை நியமித்தார். அதைச் செய்” என்றான். 

மாதவியின் உதடுகளில் உதயமான இளநகை முகம் பூராவும் படர்ந்தது. 

“எந்த இடத்தில் ஆரம்பிக்கட்டும்?” என்று வினவினாள். 

“சங்கத் தமிழ் எதுவாயிருந்தாலும் துவங்கலாம். அல்லது வேத உபநிஷத் சாஸ்திரப் பகுதிகள் எதையும் துவங்கலாம்” என்றான். 

துவங்கினாள் மாதவி முதல் பாடத்தை. ஆரம்பமே சுவாரஸ்யமாயிருந்தது. அதை மறைவிலிருந்து கேட்ட மஹாயனர் மகிழ்ச்சியின் எல்லையை எய்தினார். 

24. காவிய மாதவியும் காஞ்சி மாதவியும் 

பாடத்தைத் துவங்கு முன்பு மாதவி ஒரு கேள்வி கேட்டாள். “துறவியாரே! எதைத் துவங்கட்டும்? தமிழ்க் காவியம் சொல்லட்டுமா? வடமொழியில் தர்ம சாஸ்திரம் சொல்லட்டுமா?’” என்று வினவினாள். 

“சோழ நாட்டான் எதை விரும்புவான்? தமிழே சொல்லுங்கள்” என்றான் துறவி. 

“சொல்லுங்கள் என்று மரியாதை என்ன வேண்டிக் கிடக்கிறது? மாதவி என்று அழைத்தால் போதும்” என்று சொன்னாள் மாதவி. 

“இப்பொழுது நீங்கள் குரு ஸ்தானம். அந்த மஞ்சத்தில் இருக்கும்வரை அப்படித்தான் அழைப்பேன்”. 

“இறங்கிய பின்?” 

“எப்படி அழைப்பேனோ, என்ன சொல்வேனோ தெரியாது”. 

துறவியின் சொற்களைக் கேட்ட மாதவி நகைத்தாள். “நல்ல குரு, நல்ல சீடர்” என்று கூறிவிட்டு “சீடப் பிள்ளாய்!” என்று கம்பீரமாக அழைத்தாள் அவள். 

“குரு!” என்று பணிவுடன் கேட்டான் முகுந்தன்.

“இன்று சிலப்பதிகாரம் துவங்கப் போகிறேன்.”

“துவங்குங்கள், ஆனால்….” என்று இழுத்தான் துறவி. 

“ஆனால்?” 

“அதில் தாசிகளைப் பற்றி வருமே.”

“வந்தாலென்ன?”

“நான் துறவி.” 

“சிலப்பதிகாரத்தை எழுதியவர் உம்மைவிடப் பெரிய உண்மையான துறவி.”

“அப்படியானால் நான் போலித் துறவியா?” 

“அப்படிச் சொல்லவில்லை. ஆனால் காஞ்சிக்கு வந்ததிலிருந்து நீங்கள் ஈடுபட்டிருக்கும் செயல்கள், என்னிடம் நடந்து கொண்ட முறைகள், எதிலும் சந்நியாசி லட்சணத்தைக் காணோம்” என்ற மாதவி புன்முறுவல் கொண் டாள். 

“அப்படி நான் ஏதாவது தவறாக நடந்துகொண்டால் காரணம் நானல்ல” என்றான் முகுந்தன் வருத்தம் தோய்ந்த குரலில். 

“வேறு யார் காரணம்?” 

“நான் யாரிடம் படிக்க வந்தேனோ அவர். மஹாயனர்”.  

“அவர் என்ன செய்தார்?’” 

“பாடம் சொல்ல உன்னை நியமித்தார்.”

“அது தவறா?” 

“தவறோ என்னவோ தெரியாது. வாழைப்பழத்தையும் வைத்து குரங்கையும் பக்கத்தில் வைத்தால் என்ன ஆகும்?” என்று கேட்டான் முகுந்தன். 

அந்த உவமையைக் கேட்ட மாதவி நகைத்தாள் கல கலவென்று. “இரண்டு உவமைகளில் ஒன்று சரி” என்றும் கூறினாள் நகைப்பின் ஊடே. 

“எது?” தெரியாதது போல் கேட்டான், துறவி. 

“குரங்கு. அது உங்களைத்தான் குறிக்கும்” என்ற மாதவி “நீங்கள் ஊருக்குள் வந்ததே மதிள்மீது தொத்தி ஏறித்தானே?” என்று விளக்கினாள். 

துறவி அவளைக் கூர்ந்து நோக்கினான். “இரண்டு உவமைகளும் சரி” என்றான். 

“அதாவது?” விளக்கம் கேட்டாள் மாதவி.

“நீ வாழைப்பழம் போலத்தான் இருக்கிறாய்.”

”அப்படியா?” 

“ஆம். குரங்கு வாழைப்பழத்தை என்ன செய்யும்?” என்ற துறவி “கடிக்கும். நான் உன்னைக் கடிக்கட்டுமா?” என்று வினவினான். 

மாதவி பொய்க் கோபம் காட்டினாள் தனது அழகிய முகத்தில். “மரியாதையாகப் பேசுங்கள். குருவிடம் உன்னை என்று சொல்லக்கூடாது” என்றாள். 

“மறந்துவிட்டேன். மன்னிக்கவேண்டும். குருநாதரே! உங்களைக் கடிக்கட்டுமா?” என்று பணிவுடன் வினவி நகைத்தான். 

“விளையாட்டிருக்கட்டும் பாடத்துக்கு வருவோம்” என்ற மாதவி சிலப்பதிகாரத்தைத் துவங்கினாள். “உற்றுக் கேளுங்கள் சீடரே! சிலப்பதிகாரம் பல காதைகளாகப் பிரிக் கப்பட்டிருக்கிறது. அதில் இசையும், கூத்தும் கலந்த மாதவியின் அரங்கேற்றுக் காதையின் நுட்பத்தைச்சொல்லுகிறேன், கேளுங்கள்” என்று கூறிய மாதவி, “மாதவி தெய்வாம்சம் வாய்ந்தவள். உலகத்தில் ஒரு காப்பியம் பிறக்கவே அவள் தோன்றினாள். ஊர்வசியின் அவதாரம் என்று அடிகள் காப்பியத்தில் கூறுகிறார். அகத்திய முனிவர் சாபத்தால் அவள் ஆடல் மகளாக இங்கு பிறந்தாள்” என்று விளக்கம் சொல்லி, “தெய்மால்வரைத் திருமுனி அருள” என்ற காப்பிய வரிகளையும் தொடங்கினாள். தொடர்ந்தாள் மேலும். 

அழியாக் காவியமான அந்த அருந்தமிழ்க் காப்பியத் தின் அரங்கேற்றுக் காதை வரிகளை அவள் சொல்லச் சொல் லத் தேனைப்போல் சுவைத்தான் வாலிபத் துறவி. “எழு கோல் அகலத்து, எண்கோல் நீளத்து, ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி” அமைக்கப்பட்ட அருந்தொழில் அரங் கத்திலே என அரங்க இலக்கணம் கூறிய மாதவி, மேலும் காவிய மாதவியின் ஆடலைப் பற்றிக் கூறினாள். அவள் ஆயிரம் பொற்கழஞ்சுகள் பெறும் தலைக்கோலியான உரிமை பற்றியும் கூறினாள். அதைச் சொன்ன மாதவி உணர்ச்சிப் பெருக்கால் சிறிது பாடத்தை நிறுத்தினாள். “என்ன வாழ்க்கை அது! பணத்துக்காகக் காமம்” என்று அலுத்துக் கொண்டாள். 

ஆயிரத்து எட்டுக் கழஞ்சுகள் பெறுமான அந்த மாலை யைப் பெருந்தெருவிலேயே கூனியொருத்தி மூலம் விலை கூறிய மாதவியின் தாய் கோவலனை வளைத்த கதையையும், பிறகு மாதவியும் கோவலனும் இன்பம் துய்த்த சீர்மையை யும் எடுத்து விளக்கினாள். மாதவியின் தழுவலால் எப்படிக் கோவலன் மனையாளை மறந்தான் என்பதையும் எடுத்துச் சொன்னாள். 

அப்பொழுது துறவி மாதவியின் மடிமீது கையை வைத்தான், காப்பிய வரிகள் அவன் சிந்தையில் கள்வெறி ஊட்டியதால்.”ஆனால் மாதவி இங்கு ஒரு வேறுபாடு இருக்கிறது” என்றும் சொன்னான், கையை அவள் மடியைவிட்டு எடுக்காமலே. அவன் கைபட்ட காரணத்தால் மாதவியின் உணர்ச்சிகள் கரை புரண்டன. அவள் குனிந்து அவனை நோக்கி “என்ன வேறுபாடு?” என்று வினவினாள். 

“எனக்கு மனைவி யாரும் கிடையாது மயக்க” என்றான் துறவி. 

“அதனால்?’’ 

“மாதவியிடம் நான் ஈடுபட்டால் யாருக்கும் நஷ்டமில்லை.” 

“என்ன சொல்கிறீர்கள்?’” 

“அந்த மாதவியை நான் கண்டதில்லை. இந்த மாதவியைக் கண்டு கொண்டிருக்கிறேன்”. 

“நீங்கள் துறவி. நினைப்பிருக்கட்டும்” என்ற மாதவி, அதிகமாகக் குனிந்தாள் அவனை நோக்கி. 

துறவியின் உதடுகளுக்கு வெகு அருகாமையில் மாதவியின் மாம்பழக் கன்னம் இருந்தது. அதனால் அவன் உதடுகள் அதை லேசாகத் தடவவும் செய்தன. இந்த இடம் சிறை என்பதையும் அறைக்கதவு திறந்திருந்ததையும் இருவருமே மறந்தார்கள். உணர்ச்சி வேகம் அவர்களை ஆட் கொண்டிருந்தது. அந்த நிலையில் மாதவியின் கழுத்தைத் துறவியின் ஒரு கை வளைத்தது. “மாதவி!” என்று மெதுவாக அழைத்தான் துறவி, கன்னத்திலிருந்து நீக்கி உதடுகளை அவள் காதுக்கருகில் கொண்டு சென்று. 

‘”என்ன?” மாதவி முணுமுணுத்தாள். 

“கதை மாறுகிறது மாதவி” என்று துறவியும் ரகசியம் பேசினான். 

“என்ன கதை?”

“நம் கதை?”

“எப்படி மாறுகிறது?” 

“சாதாரணமாகச் சம்சார வாழ்க்கை, பிறகு துறவறம்”.  

“உம்….”

“இப்பொழுது எனக்குத் துறவறத்திலிருந்து சம்சார வாழ்க்கை ஏற்படும் போலிருக்கிறது”. 

‘திருமணமா?”

“ஆம்.” 

“ஒருக்காலும் நடக்காது.” இதை மாதவி வருத்தத்துடன் சொன்னாள். 

துறவி கேட்டான், “ஏன் மாதவி?’ என்று. அதை வாய் கேட்டது; கை அவள் இடையைச் சுற்றியது. 

“பத்ரவர்மன் என்னை வேசியென்று அழைக்கவில்லையா எங்கள் மாளிகையில்” என்று நினைவுபடுத்தினாள் மாதவி. 

“அழைத்தான்”. 

“அது உண்மையானால் நீங்கள் என்னைத் திருமணம், செய்து கொள்ள முடியாது”. 

இதற்கு முகுந்தன் பதில் சொல்லவில்லை. தரையி·லிருந்து எழுந்தான். ”நீ வேசியென்று நான் நம்பவில்லை. இந்த ஊரில் நான் நம்பக்கூடியவர் மஹாயனர் ஒருவர் தான். அவர் உன்னை வேசியென்று சொன்னால் நம்புவேன். அப்படியே வேசியாயிருந்தாலும் உன்னை மணம் புரிவேன்” என்று திட்டமாகக்கூறி அவளை அப்படியே மஞ்சத்திலிருந்து இடுப்பைப் பிடித்துத் தூக்கித் தன் எதிரில் நிற்க வைத்தான். “மாதவி! என் கண்களை உற்றுப்பார்” என்றும் உத்தரவிட்டான். 

மாதவி கண்கள் அவன் கண்களுடன் கலந்தன. விநாடிகள் ஓடின. கடைசியில் அவளைச் சுற்றித் தன் கைகளை ஓடவிட்டான் துறவி. “மாதவி! நீ வேசியல்ல, என் குருநாதர் மீது ஆணை” என்றான். 

“மஹாயனர் மீதா?” 

”ஆம், வேறு யார் குருநாதர்?” 

“நான்?” விளையாட்டாகக் கேட்டாள் மாதவி. 

“நீயும் ஒருவகையில் குருநாதர்தான்.” 

‘“ஒருவகையில் என்றால்?’’ 

“என் குருநாதரால் நியமிக்கப்பட்டவள்”. 

‘“எதற்கு?”

“பாடம் சொல்ல.” 

“என்ன பாடம்?” 

“குருநாதரிடம் நீயே கேள்” என்ற துறவி சட்டென்று குரலை மாற்றி, “உபதளபதி! இங்கு எதற்கு வந்தீர்கள்?” என்று இரைந்து கூறிவிட்டு அவளிடமிருந்து விலகி நின்றான். 

‘‘உபதளபதியா?” என்று விசாரித்துக் கொண்டு மஹாயனர் உள்ளே நுழைந்தார். 

25. மஹாயனர் போதிக்கிறார் 

மஹாயனர் உள்ளே நுழைந்ததும் திடுக்கிட்டவன் போல் பாசாங்கு செய்த துறவியும், உண்மையாகவே திடுக்கிட்டு விட்ட மாதவியும் சரேலென்று விலகி நின்றதும் குருநாதர் இதழ்களில் புன்முறுவல் பெரிதும் படர்ந்தது. நல்ல வெண்மையான உடையணிந்ததாலும், வெளே ரென்ற சரீரத்தாலும் மிகக் கம்பீரமான தோற்றத்தைப் பெற்றிருந்த குருநாதர் புன்முறுவலில்கூட பெரும் கம்பீரமும் விவரிக்க இயலாத ஒரு பொருளும் புதைந்து கிடந்தது. அதைக் கவனித்த துறவி குருநாதர் தாள்களில் தனது தலையை வைத்து தரையில் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கினான். அவனை எழுந்திருக்கப் பணித்த மஹாயனர், “முகுந்தா! யாரையோ உபதளபதி என்று அழைத்தாயே அது யார்?” என்று வினவினார். 

முகுந்தன் மறுபடியும் தலையைச் சிறிது தாழ்த்தி, கையால் மாதவியைச் சுட்டிக் காட்டினான். மஹாயனர் தனது கண்களை மாதவியை நோக்கித் திருப்பினார். ‘“மாதவியா!” என்று வினவினார் பெருவியப்புடன். 

”ஆம் குருநாதர்களே” என்றான் துறவி. 

“குருநாதர்களா!” ஆச்சரியத்தைக் குரலில் காட்டினார் மஹாயனர். 

“ஆம்”. 

“எத்தனை குருநாதர்கள் உனக்கு?” 

“இருவர்.” 

”இருவரா?’’ 

“ஆம். நீங்கள் ஒன்று. உங்களால் நியமிக்கப்பட்ட மாதவி ஒன்று”. 

“நன்று, நன்று” என்று சிலாகித்த மஹாயனர், “அப்படியானால் இரண்டாவது குருநாதரிடம் பாடத்தைத் துவங்கலாமே” என்றார். 

“துவங்கி விட்டேன், ஆனால்….” 

“என்ன ஆனால்?”

“பாடம் தொடராது போலிருக்கிறது.”

“ஏன்?”

“இரண்டாவது குருநாதர் உபதளபதியாகி விட்டதால்.”  

மஹாயனர் சிறிது சிந்தித்தார். சிந்தித்தார். “என்ன பாடம் தொடங்கினார் இரண்டாவது குருநாதர்?” என்று வினவினார். 

“சிலப்பதிகாரம்’” என்றான் துறவி. 

“நல்ல நூல், தமிழர் தலை நூல். அதுவும் சிறந்த சமண நூல்” என்று சிலாகித்த மஹாயனர் முகத்தில் பெரு மகிழ்ச்சி படர்ந்தது. 

“இலக்கியத்திலும் மதவேறுபாடுகள் உண்டா?” என்று கேட்டான் துறவி. 

“இலக்கியத்தைப் படைப்பதே மதத்தை உணர்த்து வதற்குத்தான்” என்றார் மஹாயனர். அத்துடன் கேட்டார்; “ஆமாம்: பாடம் தொடராது என்றாயே அது ஏன்?” என்று. 

“மாதவி உபதளபதியாகிவிட்டதால் பாடம் சொல்ல அவகாசம் இருக்காது. அதுவும் சமுத்திரகுப்தர் படையெடுத்தால் காஞ்சியைப் பாதுகாக்கும் பொறுப்பு மாதவியிடம் சேரும். அப்புறம் பாடம் எப்படிச் சொல்லுவாள்?” என்று துறவி கேட்டான். 

மஹாயனர் மீண்டும் சிந்தனையில் இறங்கினார். அவர் சிந்திக்கத் தொடங்கியதும் முகுந்தன், “குருநாதரே! ஏன் நிற்கிறீர்கள்; இப்படி உட்கார்ந்தாலென்ன?” என்று கேட்டு பஞ்சணையையும் காட்டினான். 

அதை மகா வெறுப்புடன் நோக்கிய மஹாயனர், “என்னைப் போன்ற துறவி உட்காரத் தகுந்த இடமா அது?”என்று வினவிவிட்டு “முகுந்தா! வா, சிறையின் அறைகளைச் சுற்றிப் பார்ப்போம்” என்று அவனையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றார். மாதவி அறைக் கதவைப் பிடித்துக் கொண்டு அவ்விருவரும் செல்வதைப் பார்த்துக் கொண்டு நின்றாள். 

அந்த அறையை விட்டுக் கிளம்பி, தாழ்வரையையும் தாண்டி சிறையின் பெருங்கதவுகளுக்குச் செல்லும் பாதையில் வந்ததும் மஹாயனர் மெள்ளத் துவங்கினார் உரையாடலை. “முகுந்தா!” என்று அழைத்த அவர் குரலில் குழைவு பெரிதும் இருந்தது. 

“குருநாதரே!”அதைவிட அதிகமாகக் குழைந்தான் முகுந்தன். 

“நீ பாடம் கேட்கும் அழகைப் பார்த்தேன்” என்றார் மஹாயனர். 

“பாடம் சொல்பவர் அழகாயிருந்தால் அது கேட்பவரையும் தொத்திக் கொள்கிறது” என்றான் துறவி. 

புரிந்து கொண்டதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார் மஹாயனர். “இனி மாதவி பாடம் சொல்ல வேண்டாம் உனக்கு” என்று கூறவும் செய்தார். 

“ஏன்?”

“அவளிடம் பாடம் கேட்டால் நீ கெட்டுப்போவாய்.”

“இன்று கெட்டுப்போன மாதிரி”. 

“எப்படிக் கெட்டுப் போவேன்?” 

“இன்று கெட்டுப் போனேனா?” 

”ஆம்; அவளை மணம் செய்து கொள்வதாகச் சொன்னாயல்லவா?” 

இந்தக் கேள்வியைக் கேட்டதும் பெருவியப்பைக் காட்டினான் முகுந்தன். 

“அது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான். 

“நான் சற்று முன்பே வந்துவிட்டேன்….” 

மஹாயனர் ஏதோ சொல்ல வாயெடுத்து நிறுத்தினார். பிறகு கேட்டார் மெதுவாக, “முகுந்தா! காஞ்சியின் படைபலம் அத்தனை கேவலமென்று நினைக்கிறாயோ?” என்று. 

”ஆம்”. 

“எதனால் நினைக்கிறாய்?” 

“பத்ரவர்மன் ஓர் உபதளபதி. மாதவி ஓர் உபதளபதி. என்னைச் சிறையில் அடைக்க ஒரு தடியனை அனுப்பினீர்களே, அவன் ஒரு உபதளபதி. இவர்களைக் கொண்டு சமுத்திரகுப்தனை எதிர்த்துவிட முடியுமா?” 

இதைக் கேட்ட மஹாயனர் புன்முறுவல் கொண்டார். “முடியாதென்பது எனக்குத் தெரியும். ஆனால் விஷ்ணு கோபனுக்கு அது தெரியவில்லையே” என்றார் புன்முறுவலின் ஊடே. 

முகுந்தன், பேசிக்கொண்டே நடந்தவன் சட்டென்று நின்றான். 

“தாங்கள் அனுமதி கொடுத்தால் மன்னரிடம் இதை நானே தெரிவித்து இவர்கள் அனைவரையும் நீக்கிவிடச் செய்கிறேன்” என்றான். 

மஹாயனரும் நின்றார். “யாரை நீக்கினாலும் மாதவியை நீக்க முடியாது” என்று திட்டமாகச் சொன்னார். 

“ஏன் முடியாது?” என்று சீறினான். “கேவலம் அவள் ஒரு பெண்” என்றும் கூறினான். 

“இருப்பினும் மாதவிக்கும் மன்னனுக்குமுள்ள தொடர்பை நீ அறியமாட்டாய்” என்றார் மஹாயனர் மெதுவாக. 

“என்ன தொடர்பு மஹாயனரே!” திகிலுடன் எழுந்தது கேள்வி துறவியிடமிருந்து. 

“மன்னனுக்கும் மாதவி போன்ற அழகிக்கும் என்ன தொடர்பிருக்க முடியுமோ அந்தத் தொடர்புதான்” என்று கூறிய மஹாயனர் வெறுப்புடன் நடந்தார் மேலே. 

துறவி அதைப் பற்றிச் சங்கடப்பட்டதாகத் தெரியவில்லை. அவருடன் வேகமாக நடந்து, “குருநாதரே! இதை ஏன் எனக்கு நீங்கள் முன்பே தெரிவிக்கவில்லை?” என்று கேட்டான். 

“அப்பொழுது அவசியமில்லை.”

“இப்பொழுது?”

“அவசியமேற்பட்டிருக்கிறது. நீ அவளை மணக்க விரும்புகிறாய். அதை முறிக்க, சோழர் குலத்தைக் காக்க முயல்வது எனது கடமை” என்று சற்று உஷ்ணத்தைக் குரலில் காட்டிய மஹாயனர், “மாதவியை மறந்துவிடு. இன்றிரவு வேகவதியைத் தாண்டி சமண காஞ்சியிலுள்ள நமது மடத்திற்கு வந்து சேர்” என்று கூறினார். 

”எப்படி வர முடியும்? நான் சிறையிலிருக்கிறேனே!”

“மாதவிக்கு அதிகாரமிருக்கிறது. அவளை விடுதலை செய்யச் சொல்.”

“அதை நீங்களே சொல்லுங்கள். நீங்களே விடுதலை செய்தாலென்ன? நீங்கள்தானே என்னைச் சிறையில் தள்ளினீர்கள்?” என்று வினவினான் வாலிபத் துறவி. 

மஹாயனர் சற்றுத் திரும்பி அவனை நோக்கினார்; “நான் செய்யும் எதற்கும் காரணமிருக்கும். ஆகவே சொல்படி கேள்”. 

“மாதவியைக் கொண்டு விடுதலை அடை. இரவு என் மடத்துக்கு வந்து சேர்” என்று கூறிவிட்டு வெளியேறினார். 

அவர் கதவுகளைத் தாண்டி, கதவுகள் மூடப்பட்டதும், சர்வசாதாரணமாகத் திரும்பினான் தனது அறைக்கு. அங்கு கதவைப் பிடித்து நின்றிருந்த மாதவியைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றான். மாதவியையும் உள்ளே இழுத்து, கதவையும் சாளரங்களையும் மூடினான். பிறகு அவளை அவசரமாகப் பஞ்சணையில் படுக்க வைத்தான். 

மாதவிக்கு அவன் செயல்களுக்கு ஏதோ காரணமிருப்பதாகத் தெரிந்ததால், அவள் மௌனமாகவே அவன் சேஷ்டைகளுக்கு உட்பட்டாள். அவள் இதழ்களுடன் தனது இதழ்களை இணைத்தான் துறவி நீண்ட நேரம். பிறகு சொன்னான்: “மாதவி! நீ திமிறி வெளியே சென்று காவலர்களை அழைத்து என்னைக் கடுங்காவலில் வைத்துவிடு” என்று கூறினான். அவள் வெளியே செல்லுமுன்பு “ஆடைகளைச் சிறிது கலைத்துக் கொள்” என்று கூறித் தானே சிறிது கலைத்தும் விட்டான்.

– தொடரும்…

– மாதவியின் மனம் (நாவல்), பாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *