கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 2, 2023
பார்வையிட்டோர்: 3,997 
 

அத்தியாயம் 5 – 6 | அத்தியாயம் 7 – 8 | அத்தியாயம் 9 – 10

அத்தியாயம் – 7

“நெடிய உருவம். இரட்டை நாடி. தொப்புளுக்குக் கீழ் மடித்துக் கட்டிய லுங்கி… லுங்கியை இடுப்போடு அழுத்திப் பிடித்துக் கொள்ளவும், காசு பணம் வைத்துக் கொள்ளவும் வசதியாகத் துருத்திக்கொண்டுள்ள, பர்ஸ்ஸுடன் கூடிய, சாயம் போன பச்சை கலர் பெல்ட்.

கழுத்தில் மாலை போலத் தொங்கும் கலர் கலராய்க் கட்டமிட்டத் துண்டு…

அய்யனார் சிலை போல வஜ்ரமாய் இறுகிய அகலமான மார்பு…

வயிற்றை அரைகுறையாய் மறைத்தபடி காட்டும் நீல நிற முண்டா பனியன்.

தினவெடுத்து கரணை கரணையாக உருண்டுத் திரண்டு நிற்கும் புஜங்கள்…

வீச்சரிவாளை அழுந்தப் பிடித்திருந்ததால் வலது புஜம் அதிகமாய் திரண்டதுபோல் தெரிந்தது.

அடர்ந்து வளர்ந்து வளைந்த முரட்டு மீசைத் துடிக்கக் கண்கள் கோபத்தில் கோவைப்பழமாய்ச் சிவந்திருந்தது.

“அந்தப் பய எங்கே போனாலும் விடமாட்டேன். தலையை வெட்டி வீசுவேன்…” சவால் விட்டபடி நின்ற வீரமுத்துவிடம் நெருங்க முடியாத அளவுக்குக் ‘குப்’பென்று சாராய வாடை வீசியது.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பதை உணர்ந்த மாதய்யா சற்றே பொறுமையைக் கடைபிடித்தார்…

“வீரமுத்து…”

“………………….” அவன் பேசும் நிதானத்தில் இல்லாததால் கண்களை உருட்டி மாதய்யாவைப் பார்த்தான்.

“அம்மாவும், பாட்டியும் என்னா சேதி?’ ன்னு அப்போபிடிச்சிக் கேக்கறாங்களே…! பதில் சொன்னியா அவுங்களுக்கு…?” சாதாரணக் குரலில், நிதானமாகக் கேட்டார்.

‘கெஞ்சினால் மிஞ்சுதலும், மிஞ்சினால் கெஞ்சுவதும்’தானே நடைமுறை.

“அய்யா…! நீங்க இதுல தலையிடாதீங்கனு முன்னேமே சொல்லிப் போட்டேன்…!” என்றான் குரல் உயர்த்தி.

“ஊர்ல எதுக்குடா நாங்கல்லாம் இருக்கோம்…? வேடிக்கைப் பாக்கவா…? ஆம்பளைங்க இல்லாத நேரம் பார்த்து வீட்டுக்குள்ளே பூந்து ரகளை கட்டுவே…! ஊர்காரங்க சவுங்கையா நிக்கணுமா…?” சீறினார் மாதய்யா.

சீற்றம் கண்டு. இறங்கிப் பேசினான் வீரமுத்து.

“அய்யா… அது வந்து…!” என்று ஏதோ சொல்ல வந்தவனை மேலே பேசவிடாது அடக்கினார் மாதய்யா.

“என்னடா அது வந்து, இது போயி…னு…” வீரமுத்துவிடம் கர்ஜித்தார்.

அதைத் தொடர்ந்துத் தன் தெருவாசிகளிடம் பேசினார்.

“குடி போதைல பக்கத்து ஊரான், நம்ம ஊருக்குள்ள வந்து வீடு பூந்து ரகளை கட்றான். வேடிக்கை பார்த்துக்கிட்டு நிக்கறீங்களே…?”

“………………”

“இன்னிக்கு இவங்களுக்கு…! நாளைக்கு நமக்கு… நெனப்பிருக்கட்டும்….!”

“கிராம சேவகரய்யா..! நடந்தது என்னன்னு தெரியாம…!” ஞாயம் பேச வாயெடுத்தான் வீரமுத்து.

“அப்படி என்னடா கொலைக் குத்தம் செஞ்சிட்டான் எங்கத் தெருப் பையன்… அவன் என்னதான் தப்பு பண்ணட்டுமே… அதுக்காக, நீ இப்படி வீடு பூந்துருவியா.?”

“……………..”

“கேப்பாங்கேள்வி இல்லாத ஊருனு எண்ணமோ…? மொத வேலையா வீடு பூந்ததுக்கு உடையவங்ககிட்ட மன்னிப்புக் கேளு… அப்பறமா எதுவும் பேசு…!”

‘மன்னிப்புக் கேளு…!’ என்று மாதய்யா சொன்னதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள் தெருவாசிகள்.

“மன்னிப்புக் கேக்கணும்…! மன்னிப்புக் கேட்டுத்தான் ஆவணும்…!!” என்றெல்லாம் ஆங்காங்கேயிருந்து பரவலாகக் குரல் உயரத் தொடங்கியது.

“அய்யா…! உங்களுக்கு மரியாதை வெச்சி இறுதியாச் சொல்றேன். இந்த விசயத்துல நீங்க தலையிட்டா நல்லா இருக்காது… சொல்லிப்புட்டேன்…” எச்சரிக்கை செய்த வீரமுத்துவின் குரலில் உறுதி இருந்தது.

“வீரமுத்து… நீ மன்னிப்புக் கேட்ட அடுத்த நிமிசம்…; ஊர் பஞ்சாயத்துக் கூட்டி விசாரிச்சி அபராதம் போடறோம்…”

அந்த நேரத்தில், “டேய் மாது…! அவன் மன்னிப்பெல்லாம் கேட்க வாண்டாம், அவனை உடனே இடத்தைக் காலி பண்ணச் சொல்லு… பகவானே அவனை தண்டிக்கட்டும்…”

திடீரென்று பசுபதி குருக்களின் அம்மா, ராமுவின் பாட்டி, யாரும் எதிர்பாராமல் திடீரென்று குறுக்குச் சால் ஓட்டியதுதான் சூழ்நிலையை மேலும் இறுக்கமாக்கிவிட்டது.

வீரமூத்து குடிபோதையில் இருந்ததால், இன்னதுதான் பேசுகிறோம் என்கிற வரைமுறை இல்லாமல், ‘புழுத்த நாய் கூடக் குறுக்கே போக முடியாத’ வகையில் மிகவும் நாராசமாகப் பேசினான்.

கோபத்தின் ‘சுர்…ர்… ர்… ர்… ர்…’ என்று உச்சம் தொட்டது மாதய்யாவுக்கு.

ஒரே எட்டில் ‘சட்……’டென்த் தெருவாசலுக்குப் பாய்ந்தார்.

நந்தவன வேலியில் சமீபமாக நட்டுத் தளிர்ந்திருந்த பூவரசு வேலிக்காலை, இரண்டு ஆட்டு ஆட்டிப் பிடுங்கினார்.

சிலம்பம் சுற்றும் லாகவத்துடன், கையில் கோலுடன் வந்த மாதய்யா, வீரமுத்துவின் பின்னங்கால் பகுதியில் தாக்கப் போவதைப் போலப் போக்குக் காட்டினார்.

மாதய்யா ‘எக்ஸ்சர்வீஸ் மேன்’ என்பதாலும், தனக்குச் சூழ்நிலை சாதகமாக இல்லை என்றும் அறிந்த வீரமுத்து, சந்துப் பக்கமாக தப்பித்து ஓடினான்.

அவனைத் தொடர்ந்து, அவனால் ஏவப்பட்டக் கூலிப்படையும் தப்பித்தோம், பிழைத்தோம் என்று தலைதெறிக்க ஓடினார்கள்.

‘ராமு என்ன தப்பு செய்தான், எதற்காக இந்த கலாட்டா…?’ என்று ஊரில் யாருக்கும் தெரியவில்லை.

“வாராவாரம் வரும்போது ராமு வீரமுத்துவோட சாராயக்கடைல கடன் சொல்லி சரக்கடிச்சிருக்கான். கடனை வசூல் பண்ண வந்திருக்கான்…” வதந்தி பரப்பினார்கள்.

“அப்படியா…? ராமு குடிகாரனா…?” முகம் சுழித்தார்கள்.

“குருக்களாத்துப் பையனுக்கு குடிப்பழக்கம் எங்கேந்து வந்துது…?” வியப்புடன் வினவினார்கள்.

“கலிகாலம்…” என்று சமாதானம் செய்துகொண்டார்கள்.

“குருக்களய்யா ஏதாவது தெய்வ குத்தம் பண்ணியிருப்பாரோ…?” சம்சயமாய்ப் பேசினார்கள்.

“சிவன் சொத்து குல நாசம்னு சொல்றது சரியாத்தான் இருக்கு…” உறுதி செய்தார்கள்.

“நெருப்பில்லாம புகையுமான்னேன்….” சந்தேகித்தார்கள்.

“எந்தப் புத்துல எந்தப் பாம்புனு….” ஊகித்தார்கள்.

‘வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ…’ என்று கதை வைத்தார்கள்.

“சல்லிசானா… சந்தைக்கு வந்துத்தானே ஆகணும்…” எனக் காத்திருந்தார்கள்.

வீரமுத்துவும், கூலிப்படையும் ஓடிய பின், மாதய்யா உள்ளூர் ஜனங்களுக்குச் சொன்னார்.

“என்னதான் நம்ம ஊர் ஜனங்க தப்பேப் பண்ணியிருந்தாலும், தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனா ஆகறதை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கக்கூடாதுங்கறேன்…”

“………………..”

“ஊர்க்காரங்க நாம ஒத்துமையா இருந்தாத்தான் எதையும் சமாளிக்க முடியும்கறேன்…”

“………………..”

“அடிக்குப் பயந்து ஓடிட்டாங்க’னு நினைக்கப்படாது…! அடிபட்ட பாம்பு போல கருவங்கட்டிக்கிட்டு சமயம் பாத்துத் தாக்கிடுவாங்க…”

“………………..”

கிராமத்து ஜனங்களை எச்சரிக்கை செய்துவிட்டுப் புறப்பட்டபோது…

“மாது, செத்தே உள்ளே வந்துட்டுப் போயேன்…” என்று அழைத்தாள் பசுபதி குருக்களின் அம்மா.

“…………..” அமைதியாய் அருகே வந்தார்.

“மாது… என்னத் தப்பு தண்டா பண்ணிப்பிட்டான்’ ராமு. இப்படி அருவாளும் கையுமா என்னத்துக்கு வீரமுத்து இப்படிக் குதிக்கறான்…?

“…………….”

நம்மாத்து வாசல்ல வந்து இப்படி ஊர் சிரிக்கப் பண்ணிட்டானே…மாது…!”

“மாமி…! கொழந்தைகளுக்குக் காலாகாலத்துல செய்ய வேண்டியதைச் செய்யணும்…! இல்லேன்னா இப்படித்தான்…” குறிப்பாகச் சொன்னார்.

“என்னென்னமோ சொல்றேளே மாமா…! விவரமாச் சொல்லுங்கோ…!” பதறினாள் குருக்களின் மனைவி, ராமுவை பெற்ற தாய்..

“ராமுவுக்கு வீரமுத்து தங்கையோட…”

“என்ன சொல்றே மாது… வயத்துல புளி கரைக்கறதே…! இந்த கன்றாவியையெல்லாம் பார்க்கத்தான் பகவான் என்னை உசுரோட வெச்சிருக்கானோ… சிவ…சிவா…” ராமுவின் பாட்டி புலம்பினான்.

“ சும்மாப் பொலம்பறதுல அர்த்தமில்லே… நடந்தது நடந்ததுதான்… நடக்கவேண்டியதைப் பார்க்கோணும். அதுதான் புத்திசாலித்தனம்னேன்…”

“………………..”

“முள்ளு மேல துணி விழுந்து நன்னா சிக்கிண்டாச்சு. மெது மெதுவாத்தான் எடுக்கணும்னேன்.

“………………..”

பசுபதி வந்ததும் நீங்க அவனண்ட எதுவும் சொல்லவேண்டாம். என்கிட்ட அனுப்புங்கோ. எதபதமா எடுத்துத்சொல்றேன். பசுபதி ஹார்ட் பேஷண்ட் வேற…” சொல்லிவிட்டு வீடு திரும்பினார் மாதய்யா.

ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்குப் புறப்பட்ட பசுபதி, ரயிலடி வினாயகர் கோவிலுக்குச் சென்று நெற்றிப் பொட்டில் குட்டிக்கொண்டார். காதுகளை பிடித்தபடி தோப்புக்கரணம் போட்டார்.

கோவிலை விட்டு வெளியே வந்து பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து போகும்போது, கடந்த இரண்டு நாட்களாக ராமுவின் ஒவ்வொரு அசைவும் காட்சியாக விரிந்தது அவர் முன்.

பதினைந்து வயதில் அவனைக் கட்டி வைத்து அடித்த வேப்பமரத்தைப் பற்றிச் சொன்னானே…ஏன்…?

அதை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே நின்றானே மணிக்கணக்காய்… எதற்கு…?

கேள்விகளுக்கு விடை காண முடியவில்லை.

டவுன் பஸ் ஏறினார்.

‘மேற்கே போகும் ரயில்’ ஒன்று, குடமுருட்டிப் பாலத்தில் “டடட்ட்… டட்ட்… டடாங்க்… டட்ட்… டட்ட்… டடாங்க்…” என வேகத்துக்குத் தக்க பேரோசை எழுப்பியபடி விரைந்தது.

ரயில் தண்டவாளங்களுக்கு இணையான சாலையில், பசுபதி பயணித்த நகரப் பேருந்தைத், துரிதகதியில் கடந்தது ரயில்.

‘இந்த ரயிலைப் போல ‘எல்லாம் கடந்து போகணும்… ஈஸ்வரா….’ மனதுக்குள் ப்ரார்த்தனை செய்து கொண்டார்.

பஸ்ஸை விட்டு இறங்கின உடனேயே பட்டாணித்தெரு பரிபூரணம் குருக்களை அழைத்துப் பேசினான்.

அவன் மூலம் தன் வீட்டு விஷயம் கேள்விப்பட்ட பசுபதி, ஏதோ ஒரு கெட்ட கனவு கண்டதைப் போல இருந்தது. துடித்துப் போனார்.

ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு வந்தார்….

அழுத கண்ணும், சிந்திய மூக்குமாய், மனைவியும், வயதான தாயாரும்… நடந்ததை விவரமாகச் சொன்னார்கள்…

“மாதுவைப் போய் பார்…” என்றாள் அம்மா.

மாதய்யா, பூர்வ பீடிகையோடு எதபதமாக விவரத்தைச் சொன்னதும், பசுபதி ‘எள்ளிலை வேப்பலை’யாகக் குதிக்க ஆரம்பித்துவிட்டார்.

“இப்பவே போய் ராமுவை…” என்று ஆக்ரோஷமாகக் கத்தினார்.

‘கத்தட்டும்’ என்று விட்டார்.

ஆத்திரம் ஓரளவுக்கு அடங்கியதும் மாதய்யா எடுத்துச் சொன்னார்.

“பசுபதி… சொல்றதை கவனமாக் கேட்டுக்கோ…! உடனே டவுனுக்குப் போய் அடுத்த அறிவிப்பு வரும் வரைக்கும் ஊர்ப் பக்கம் வரவேண்டாம். உன் தலைக்கு ஆபத்து’னு ராமுவுக்கு ஒரு தந்தி கொடுத்துட்டு வந்துடு…”

“அவன் இங்கே வரலைன்னா, இந்த வீரமுத்து அங்கேயே போய் தலைய வாங்கமாட்டான்னு என்ன நிச்சயம் மாது…”

“………………..”

அவனுக்கு முன்னே நானே போய் அவன் கழுத்தை நெரிச்சிக் கொன்னுட்டு போலீஸ்ல சரண்டராயிடறேன்… கோடரிக்காம்பு…! கோடரிக்காம்பு…!!” அடக்க முடியாத ஆற்றாமையால் பொங்கிப் பொங்கிக் கத்தினார்.

“பசுபதி…! இந்த மாதிரி சமயங்கள்’லதான் விவேகம் வேணும். போ… நான் சொல்றபடி தந்தியோ, ட்ரங்கால் புக் பண்ணியோ, அல்லது ரெண்டுமோ பண்ணி, சேதியைக் கன்வே பண்ணிட்டு வா… மத்ததை அப்பறம் பாத்துக்கலாம்…”

“சரி மாது…!” என்று சொல்லிவிட்டு டவுனுக்குக் கிளம்பினார் பசுபதி குருக்கள்.

பேருந்து நிலையத்திற்குப் போகும்போதும்…

டவுன் பஸ் வரும் வரையிலும்…

பேருந்துப் பிரயாணத்தின்போதும்…

இறங்கித் தந்தி ஆபீஸ் போகும் வரை… நிறைய நிறையச் சிந்தனை செய்தார் பசுபதி.

சிந்தனையின் முடிவில், ‘மாதய்யா சொல்கிற யோசனை கொஞ்சமும் சரியில்லை…!’ எனப் பட்டது.

அவசரத்துக்குச் சேதி சொல்வதற்காக , ராமு கொடுத்துவைத்திருந்த ஃபோன் நம்பருக்கு முதல்முதலாக “ஹலோ…” சொன்னார்…! – பசுபதி

“… … … …”

“ராமு அப்பா பேசறேன்…”

“… … … …” சிறிது நேரம் மௌனமாக இருந்தது எதிர்முனை.

“ராமு இன்னும் ரூமுக்கு வந்து சேரலீங்களே…!”

“நான் ராமு அப்பா பேசறேன்..”

“ஆட்சேபணை இல்லேன்னா, என்னண்ட தகவல் சொல்லுங்கோ… கன்வே பண்ணிடறேன்…”

“தயவு பண்ணி, ராமுவை உடனே புறப்பட்டு கிராமத்துக்கு வரச்சொல்லுங்கோ…! ரொம்ப அர்ஜெண்ட்…!!”

“சரி சார். சொல்லிடறேன்…”

“… … … …”

எதற்கும் இருக்கட்டுமே என்று, ‘அவசரம்…! உடனே வரவும்’ என்று ஒரு தந்தியும் கொடுத்தார்.

ராமு, பூட்டைத் திறக்கும்போதே, ஹவுஸ் ஓனர் தகவல் சொன்னார்.

“ஏன்…? எதுக்கு…?.. ன்னு ஏதும் சொன்னாங்களா…?”

“ம்ஹூம்… உடனே புறப்பட்டு வரச்சொல்லுங்கோனு மட்டும்தான் சொன்னார் உன் தகப்பனார்…”

“அப்பாதான் பேசினாரா…? அவர் பேசும்போது…”

“பதட்டமாத்தான் இருந்துது அவர் குரல்…! என்ன சேதின்னு, கேட்டேன்… எதுவும் கேட்காதீங்கோ…! அவனை உடனே வரச்சொல்லுங்கோ, புண்ணியமாப் போகும்னு சொல்லிட்டு ஃபோன் கட் பண்ணிட்டாரு…”

‘இன்று வரை அப்பா இந்த நம்பருக்கு போன் செய்ததே இல்லை. உடனடியாக வரச்சொல்கிறார்… அப்பாவே டவுனுக்கு வந்து ஃபோன் செய்கிறார்…! என்னவாக இருக்கும்…?’

‘ஒரு வேளை பாட்டி…? அப்படியே பாட்டிக்கு ஏதாவதுன்னா ஃபோன்ல சொல்லியிருக்கலாமே…!’

யோசித்துப் பார்த்ததில் எதுவும் பிடிபடவில்லை ராமுவுக்கு.

உடனடியாக ‘போன மச்சான் திரும்பி வந்த கதையாயாய்’ கிடைத்த பஸ்ஸில் ஏறிப் பயணப்பட்டான்.

பக்கிரி சொன்னதை நம்பாத வீரமுத்து, கையும் களவுமாக அகப்பட்ட சாவித்திரியின் முடியைப் பிடித்து மொத்திவிட்டு, அரிவாளோடு கிளம்பிச் சென்றதும், சாவித்திரிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

ஒரு வேகத்தில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாலும், ‘எங்கு செல்வது..?, என்ன செய்வது..?, எப்படி ராமுவின் தலையைக் காப்பது…?’ புரியவில்லை,

‘அடுத்த பஸ்ஸில், டவுனுக்குப் போனாள்.

உடனே வரச் சொல்லி ராமுவுக்குத் தந்தி கொடுத்தாள்…’

டவுனிலிருந்து திரும்பியவள் வீட்டுக்குப் போகவில்லை.

அந்தனூருக்கு வந்தாள்.

எல்லையம்மன் கோவில் பிரகாரத்தில் வந்து அமர்ந்தாள். அங்கேயே தலைமறைவாக இருக்கத் தீர்மானித்தாள்.

‘இரவோடு இரவாகப் புறப்பட்டு வருவான் ராமு. அவனை இங்கேயே மடக்கி இழுத்துக்கொண்டு ,கண்காணாமல் ஓடிவிடலாம்…’ என்ற திட்டம் அவளுக்கு.

அன்று முழுவதும் ஏதும் பிரச்சனையில்லை.

‘இது மெல்ல மெல்ல அடங்கிவிடும்…’ என்றுதான் மாதய்யாவும் நினைத்தார்.

இரவு மணி எட்டு இருக்கும். கலியன் அவசரமாக வந்தான். “அய்யா…! வீரமுத்து தங்கச்சி வூட்டை விட்டு ஓடிருச்சாம்… ஆளு படைங்க அங்கங்கே வலைபோட்டுத் தேடுறாங்க…”

இந்தச் செய்தி பரவியதும், அந்தனூர் அக்ரகாரத் தெருவில் அன்றிரவு யாரும் தூங்கவில்லை.

“களுதை…! எங்கே போயிரப் போவுது… எங்கனா… பங்காளிங்க வூட்டுக்குப் போயிருக்கும்… களுதைய காலைல போய் தேடிக்கலாம்… வுடுங்க…!” என்று சொல்லிவிட்டான் வீரமுத்து.

எல்லையம்மன் கோவில் பிரகாரத்திற்குள் முதன் முதலாக நுழைந்தாள் சாவித்திரி.

இரவு கோவிலில் தங்கவிட முடிவெடுத்தாள்.

தான் கொடுத்த தந்தியை கண்டதும் உடனே கிளம்பி வந்துவிடுவான் ராமு, அவனை வழியிலேயே மடக்கிவிடலாம் என்று திட்டமிட்டாள்.

இரவை இங்கே எப்படிக் கழிப்பது என அச்சமாகவும் சவாலாகவும் உணர்ந்தாள்.

ஏழைகளைப் பாதுகாக்கும் குடிசைகளை இடித்துச் சாய்துவிட்டு, பலமாடிக் கட்டடங்களைக் கட்டும் பணக்கார வர்க்கத்தினரைப் போல, கோவிலைப் பாதுகாக்கும், காம்பவுண்டுச் சுவரைச் சாய்த்துவிட்டு, மரஞ்செடிகொடிகளைச் செழிப்பாய் வளர்ந்திருந்தது இயற்கை.

பிரகாரத்தில் காடாய் வளர்ந்துகிடக்கும் எருக்கு, துத்தி, தும்பை, வேம்பு, முடக்கத்தான், தூதுவளை, ஓணாங்கொடி, பாதாள மூலி (பிரண்டை), கண்டங்கத்திரி, வேளை, குப்பைமேனி, ஆனைநெருஞ்சி, கருநொச்சி, நன்னாரி, அம்மான் பச்சரிசி… இன்னும் பெயர் தெரியாத என்னென்னவோ செழித்து வளர்ந்திருந்தன

செடி-கொடிகள், புல்-பூண்டுகள், மரம்-மட்டைகள்…. எனக் காடாய் காட்சியளித்த அந்த வளாகம் அச்சத்தைத் தந்தன.

பள்ளிக்கூடத்தில், ஆங்கில ஆசிரியர் முருகுபாண்டி சார் நடத்திய As You Like It என்கிற Shakespeare நாடகத்தில் வந்த ஒரு காட்சி சாவித்திரியின் கண்முன் காட்சியானது.

Under the Greenwood Tree.

Come hither, come hither, come hither:

Here shall he see. No enemy

But winter and rough weather.

சகோதரனின் வஞ்சகத்தை விட இந்தக் காடு பாதுகாப்பானது என உணர்ந்து Duke Senior கானகத்தில் தஞ்சமடைந்ததைப் போல சாவித்திரியின் இந்தச் சூழலில் தன்னை இணைத்துக் கொண்டாள்.

‘எந்த நேரத்தில் பாசத்தைக் கக்குவான்… எந்த நேரத்தில் விஷத்தைக் கக்குவான் எனத் தெரியாத அண்ணனுடன் இருப்பதை விடக், காடுபோல் வளர்ந்த அடைசலில், பாம்பு… தேள்… பூரான்… அட்டை… ஜலமண்டலி… இத்யாதிகளிளோடு எச்சரிக்கையாக இருந்துவிடலாம்…’ என்று தீர்மானித்தாள்.

தெளிவான முடிவால், மரண பயம் நீங்கி, பயம் அற்றுப் போனது சாவித்திரிக்கு.

எல்லையம்மன் சந்நிதியில் ஒடுங்கி உட்கார்ந்தாள்.

எதற்கும் துணிந்துவிட்டதால், இரவின் அடர்ந்து கருத்த அமைதியோ, அந்த அமைதியைக் கீறும் சுவர்க் கோழியின் ‘கூ……………….’ என்ற இடைவிடாத கூக்குரலோ, தவளைகளின் க்வாக்க்… க்வாக்க்…க்கோ, ஆந்தைகளின “ப்ப்வே… ப்ப்வே… ப்ப்வே…” அலறலோ…

ஏதோ ஊர்ந்து செல்கையில் ஏற்படும் தாவரங்களின் அசைவோ…

குறுக்கும் நெடுக்குமாகப் பறக்கும் ஃப்ப்ஃப்… ஃப்ப்ஃப்…ப்… ஃப்ப்ஃப்…, என்ற ஓசையோ…

தலைகீழாய்த் தொங்கியும் இரவை அனுபவிக்கும் வவ்லால்களோ…

எதுவும் பாதிக்கவில்லை அவளை.

அவள் பள்ளியில் படித்தபோது தமிழ் புலவேந்திரன் அய்யா, சீவகசிந்தாமணியில் சீவகன் பிறப்பை

“வெவ்வாய் ஓரி முழவாக விளிந்தார் ஈமம் விளக்காக ஒவ்வாச் சுடுகாட் டுயர்அரங்கில் நிழல்போல் நுடங்கிப் பேயாட எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட இவ்வா றாகிப் பிறப்பதோ இதுவோ மன்னற் கியல்வேந்தே”

உயிர்ப்போடு நடத்திய அந்தப் பாடல் சாவித்திரியின் நினைவில் வந்தது.

தன்னையும் சீவகனின் தாயாராய் உருவகப்படுத்திக் கொண்டாள்.

நிலவு உமிழும் ஒளியையும், அவ்வப்போது மேகத்தின் மறைப்பால் வரும் வெள்ளை இருளையும் மாறி மாறிப் பார்த்தபடி கண்ணிமைக்காமல், கண் மூடாமல் அமர்ந்திருந்தாள் சாவித்திரி.

பாட்டுக் குரல் சன்னமாகக் கேட்க ஆரம்பித்து…

கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் அதிகரித்ததை கவனித்தாள் சாவித்திரி…

‘கடைசீ பஸ்ல இறங்கி, இருட்டு பயத்தைப் போக்கப் பாடிக்கிட்டே போறாக போல..’ என்று நினைத்துக்கொண்டாள்.

அதன் பிறகு அந்தவழியில் ஆள் நடமாட்டமே இல்லை.

‘மதியம் 3 மணிக்குத் தந்தி கொடுத்திருக்கிறோம்… தந்தியைப் பார்த்துட்டுப் புறப்பட்டாக்கூட… விடிகாலை ‘முதல் பஸ்’ல அவசியம் வந்துடுவான் ராமு…’ நினைத்துக் கொண்டாள் சாவித்திரி.

‘ஒருவேளை தந்தி சரியான நேரத்துக்குப் போய்ச் சேரவில்லையென்றால்…?’ ஒரு கணம் யோசனை வந்தது.

“எப்பவும் நெகட்டிவ் திங்கிங் கூடாது சாவி…!” அடிக்கடி ராமு சொல்வதை நினைத்துக்கொண்டாள்.

எப்போது தன்னை அறியாமல் அண் அயர்ந்தாளோ தெரியாது

கண் விழித்தபோது ‘பொல……பொல……’ வென வைகரை அவளைத் தழுவியது. ‘மணி ஐந்து – ஐந்தரை இருக்கலாம்…!’ எனத் தோன்றியது.

‘ஐந்து மணிக்கு எடுக்கும் முதல் டவுன் பஸ் பிடித்து இதோ இப்போது வந்துவிடுவான் ராமு…’ நினைவே மகிழ்சியைத் தந்தது.

விடிகாலை அமைதியை அற்புதமாக்கும், வைகரைப் புள்ளினங்களின் கூவல்களின் கூட்டு ஒலியையும் மீறி ‘கிரி…ச்ச்…ச்ச்..கீ…கீ…கீ…ச்ச்ச்…’ என்ற பிரேக் சத்தத்துடன் வந்து நின்ற பஸ் சத்தம் தெளிவாகக் கேட்டது.

கோவிலுக்கு வெளியே வந்து ஸ்தலவிருட்சத்தின் பின்னே மறைந்து நின்றுப் பார்த்தாள்.

‘அதோ அவசர அவசரமாக வருவது யார்…?’

‘ராமுவேதான்…!’ தெளிவாகத் தெரிந்தவுடன் ஓட்டமாய் ஓடி ஆரத்தழுவினாள்.

“சாவி… நீ…..! இந்த நேரத்துல இங்க…?”

“அப்படியே திரும்புங்க…! போயிக்கிட்டே பேசுவோம். விவரமாச் சொல்றேன்…”

“எதுக்கு பயப்படறே சாவி. வா கோவிலுக்கு உள்ளே போய் பேசுவோம்…”

கோவில் தலவிருட்சத்தில் ஜனங்கள் நேர்ந்துகொண்டு கட்டிய தாலிக்கயிறுகள், முடிகயிறுகள், தொட்டில்கள், கலர்க்கலராய் வளையல்கள், தேங்காய் நெற்றுக்கள், என்று தொங்கிக் கொண்டிருந்தன.

மேடையில் ஆங்காங்கே இருந்த அகல்கள், தேங்காய்மூடிகள், எலுமிச்சம்பழங்கள்,…இத்யாதிகள்

நேர்ந்துகொண்டு பொங்கல் வைத்ததன் அறிகுறியாய், கரிப் பிடித்த செங்கல்கள், எரிந்தும் எரியாத கொள்ளிக் கட்டைகள், நிர்மால்ய மாலைகள்… குங்குமம், மஞ்சள் தூள் பொட்டணங்கள்…

பிசுக்குப் பிடித்த அகல்விளக்குகள், சிக்குவாடையில் கிடந்த அரைகுறையாய் எரிந்த பஞ்சுத் திரிகள். பாகற்காய், பூசணிக்காய், தேங்காய் மூடிகள், எலுமிச்சைத் தோல் என பரிகாரத்திற்குத் தகுந்தாற்போல் விளக்கெறிந்த மிச்சச் சொச்சங்கள், உடைக்கும் முன், உடைத்த பின் பிய்த்துப்போட்ட தேங்காய் நார்கள்..

நசுங்கின தீப்பெட்டிகள், எரிந்தும் எரியாத ஊதுவர்திகள், காய்ந்த வெற்றிலைகள், பிரசாதம் சாப்பிட்டு வீசிய பாக்கு மட்டைகள், புரசு, வாழைச் சருகு தொன்னைகள், மரம் உதிர்த்த பழுப்பு இலைகள், காய்ந்து உதிர்ந்த சமித்துகள் (குச்சிகள்), துடைத்துப் போட்ட பிசுக்கு பிடித்த வஸ்திரங்கள்..

இப்படி என்னென்னவோ… மர மேடைக்குக் கீழ் கிடந்தன.

பல்வேறு உருவங்களிலும், வடிவங்களிலும், உயரங்களிலும்… பிரதிஷ்டை செய்யப்பட்ட, நாகர் சிலைகளும், நிறுத்தப்பட்ட உருவாரங்களும், மரத்தைச் சுற்றிலும் காவலர்களாய் நின்றன.

சாவித்திரி சொன்ன விபரங்கள் அனைத்தையும் கவனமாகக் காதில் வாங்கினான் ராமு.

“எங்காவது கண்காணாம ஓடிப்போயிரலாம்… நேரம் வளத்தாம புறப்படுங்க… ராமு” அவசரப்படுத்தினாள் அவள்.

“சாவி…! நாம கோழைகள் இல்லே…!” சொல்லிவிட்டு மேடைமேல் ஏறினான்.

மஞ்சள் கிழங்கோடு கட்டப்பட்ட தாலிசரடுகள், மரம் பூராவும் விழுகளாய் தொங்கின.

கைக்கெட்டிய தூரத்தில், வெகு சமீபத்தில் கட்டிய, புத்தம் புதிய தாலிச் சரடு கழற்றி எடுத்தான்.

வைகரைச் ஆதவன் தீபமாய் ஒளிர…

“டுப்… டுப்… டுப்… டுப்…” என ஓசையெழுப்பிக்கொண்டே பிரதான சாலையில் சென்ற ஏதோ வாகனத்தின் சத்தம் மேளமாய் முழங்க

விடிகாலைப் புள்ளினங்களின், ஓசைகள் நாயனமாய் ஒலிக்க…

தென்றலாய் வீசிய வைகரைக் காற்று அவர்களை தழுவ…

கோபுர பொம்மைகள், சுவர் ஓவிய உருவங்கள், உருவாரங்கள், சூலங்கள், வேல்கள், எல்லாம் திருமணத்தைக் கண்ட களிக்க…

மரஞ்செடிகொடிகள்…காற்றில் ஆடி, மணமக்களை மகிழ்வுடன் வாழ்த்த.

பல்வேறு உயரங்களில், பின்னிப் பிணைந்து நின்ற நாகர்களெல்லாம் ஆசீர்வதிக்க…

ப்ரும்ம முகூர்த்தத்தில் தாலியை சாவித்திரியின் கழுத்தில் கட்டினான் ராமு.

தாலிகட்டும்போது, மங்கல இசையாய், மாட்டின் சலங்கைச் ஓசை அவர்களை வாழ்த்துவதுபோல், அருகாமையில் கேட்டது.

மாதய்யா வழக்கம்போல் வீரனை ஓட்டிக்கொண்டு காவிரி ஸ்னானத்திற்கு வந்துகொண்டிருக்கிறார்.

“புறப்படலாமா…?” என்றாள் சாவித்திரி.

“நீ இப்போ என் பொண்டாட்டியாயிட்டே சாவி. அம்மன் சாட்சியா நாம கல்யாணம் பண்ணிக்கிட்டாச்சு…”

“……………..”

‘இப்ப வா ஊருக்குள்ள போயி நாம ஞாயம் கேட்போம்.”

“ஞாயமா…? எடுபாடுதுங்க… வெறிபிடிச்சு அலையற என் அண்ணன் முன்னால நிச்சயமா எடுபடவே படாதுங்க…”

“ஏன் வீணா பயப்படறே. ரிலாக்ஸா இரு சாவி…” என்று உரிமையோடு அவளை அங்குமிங்கும் தொட்டுக் கிளர்ச்சியூட்டினான் ராமு.,

தன்னை இழந்த சாவித்திரி கலகலவெனச் சிரித்தாள்.

வீரன் காளையை ஓட்டிக்கொண்டு வந்துகொண்டிருந்த மாதய்யா எல்லையம்மன் கோவில் முகப்புக்கு வரும்போது தொப்ளான் இறந்த அன்று புடலங்கொல்லையில் கேட்ட அதே சிரிப்பு…ச் சத்தம் கேட்டது அவருக்கு.

‘பிரமையோ…?’ என்று சந்தேகம் வந்த்து.,

‘எதற்கும் உள்ளே சென்று பார்ப்போமே…!’ எனத் தோன்ற வீரனை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றார்.

தலவிருட்ச மேடையில் ராமுவும் சாவித்திரியும்… ஒருவரை ஒருவர் அணைத்தபடி..இருக்க, அவள் கழுத்தில் தொங்கிய புத்தம்புதுத் தாலி.

“நீங்கதான் எங்களுக்கு வழிகாட்டணும்…” என்று ராமு மாதய்யா காலில் விழுந்தான்… அவனைத் தொடர்ந்து சாவித்திரியும் விழுந்தாள்.

“என் ஆசீர்தம் எண்ணிக்கும் உண்டுன்னேன்… உடனே தப்பிச்சு ஓடுங்கோ… என் மகன் துரையாத்துல போய் தங்கிக்கோங்கோ… சீக்கிரம் இடத்தைக் காலி பண்ணுங்கோ… இங்கே இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் உங்க ரெண்டு பேர் தலைக்குமே ஆபத்து…”

மாதய்யாவின் எச்சரிக்கையை அடுத்து இருவரும், தம்பதியர்களாக, பஸ் ஸ்டாண்டை நோக்கி ஓடினார்கள்.

“எல்லையம்மா…! இந்த இளம் ஜோடிகளைக் காப்பாத்து…” என்று மனமுருகப் பிரார்த்தித்துக்கொண்டு வீரனோடு ‘பெரிய வாய்க்காலை’ அடைந்தார் மாதய்யா.

பஸ் ஸ்டாண்டை இருவரும் நெருங்கியபோது, “டேய் நம்ம வீரமுத்தண்ணன் மவளை டவுனுக்கெல்லாம் போய் தேடவேண்டாண்டா… அதோ பாரு அந்தப் பய கூட…” என்று பஸ்ஸ்டாண்ட் டீக்கடையில் நின்ற பலரில் ஒருவன் கை காட்டியபடி துரத்திவந்தான்.

காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது…

A K Ramanujan என்ற இந்திய ஆங்கில கவிஞரின் River என்கிற கவிதையில், வைகை நதியின் வெள்ளப் பெருக்கை……..

Floods…

People everywhere talked

of the inches rising,

of the precise number of cobbled steps

run over by the water, rising

on the bathing places,

and the way it carried off three village houses,

one pregnant woman and a couple of cows

named Gopi and Brinda as usual என்று சொன்னதைப் போல

தண்ணீர் பெருகிக் கொண்டேயிருந்தது.

சாவித்திரியின் கையை கோர்த்தபடி ராமு, சாலையில் ஓட, வீரமுத்துவின் ஆட்கள் துரத்தியபடி ஓடிவந்தனர்.

ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை சாவித்திரியால்…

சாலையை ஒட்டி கரைபுரண்டு சுழித்து ஓடிக்கொண்டிருந்த காவிரியில் ‘தொபீர்…!’ எனக் குதித்தாள்.

“சாவீ…! இப்படிப் பண்ணிட்டியே என அவளைத் தொடர்ந்து அவளைக் காப்பாற்ற ராமுவும் குதித்தான்.

கோபியும் ப்ருந்தாவும் வைகை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதைப்போல,

இங்கே ராமுவும் சாவித்திரியும் காவிரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள்.

Death closes all:

but something ere the end,

Some work of noble note, may yet be done.

என்று Alfred Lord Tennyson சொல்வதைப்போல்…

அனைத்துப் பகைகளையும் ஓரங்கட்டிவிட்டு,

முத்தனூர்காரர்களும், அந்தனூர்க்காரர்களும் ஒன்றிணைந்து அகண்ட காவிரியில் சடலம் தேட ஆரம்பித்தார்கள்.

‘Death is a great Leveler!’ என்பதற்கு உதாரணமாய் அமைந்திருந்தது இந்த சடலத் தேடல்.

அத்தியாயம் – 8

‘குடகிலுள்ள பிரும்மகிரியில், தலைக்காவேரியாய், குறுகலாய்த் பிறந்து, அதேபோலக் குறுகலாய் பூம்புகாரில் சமுத்திரராஜனோடு சங்கமிக்கும் முன் காவிரித்தாய்தான் எத்தனையெத்தனைக் குழந்தைகளைப் (கிளை நதிகளைப் பெற்றுச் சம்சாரியாகி விடுகிறாள்.

அதுமட்டுமா, கால்வாய், பாசன வாய்க்கால், கன்னி வாய்க்கால், ஏரி, குளம், குட்டை, கிணறு…, ஆழ்துளைக்கிணறு,.. எனப் பல்லாயிரக்கணக்கான பெயர்த்திகளும், கொள்ளுப் பெயர்த்திகளும், எள்ளுப் பெயர்த்திகளும் பிறந்து, ஒட்டு மொத்த வம்சமும் பாரபட்சமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் தாயாய் ‘அமுது’ ஊட்டும் அவள் கரிசனம்தான் என்ன…!’

ஒரு முழம் அளவிற்குப் பிறக்கும் பெண் சிசு, கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து, பெரியவளாகிறாள், பூப்படைகிறாள், வம்சங்களை உருவாக்குகிறாள்.

இளைத்துக் களைக்கறாள். கம்பீரம் தளர்கிறது.

குறுகி ஒடுங்குகிறாள்.

இறுதியில் பிரும்மாண்டத்தோடுக் கலந்துவிடுகிறாள் அல்லவா. அதுபோலத்தான் , இந்த நதிப் பெண் காவிரியும் பரிபூரணமடைகிறாள்…!

தள தளவெனப் பம்மி மலர்ந்து, பருவச் செழிப்புடனும், ஊட்டத்துடனும், சுழித்துச் சூல் கொண்டுப் பரவிப் பெருகி வரும் அவள் இரட்டைக் குழந்தைகளைப் பெறுகிறாள் முக்கொம்பில்.

பேதைப் ‘12’ ம், பெதும்பை ‘24’ ம் கடந்த மங்கை, தன் மழலைக் குழவியைக் கையிலேந்தி, ரசித்து, உச்சி முகர்ந்து, முத்தமிட்டு, தேனுண்ட மயக்கத்தில், மந்தஹாசமாய் முறுவலித்து மயங்கி மகிழ்வதைப்போல, முக்கொம்பில் காவிரி மங்கை ‘ஹா……..’ வென மலர்ந்து முறுவலித்துச் சிரிக்கும் அழகே அழகு.

கண்ணிற் சிறந்த உறுப்பில்லை, கொண்டானின்
நுண்ணிய கேளிர் பிறரில்லை, மக்களின்
ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை, ஈன்றாளோடு
எண்ணக் கடவுளும் இல்.

விளம்பிநாகனாரின், நாண்மணிக்கடிகைக்குக் காட்சியாய் விரியும் காவிரி…

அதுவும், மலைய மாருதமாய் முருவலிக்கும் இளம் பிள்ளைக்காரியின் வசீகரமான கொள்ளை அழகுக்கு ஈடுதான் ஏது … இணைதான் ஏது…!

ஷட்டர் விட்டு அம்புபோல் நேருக்கு நேராய்ப் பாயும் நீர், ‘ஹா…‌ஷ்….ஷ்……ஷ்ஷ்…’ என்ற பேரோசையுடன் , தடுப்புக் கட்டையில் வலிந்து பலமாய் மோதி, மோதிய வேகத்தில் ‘சடக்’கெனத் திரும்பி ‘பல தலைப் பாம்பாய்’ எகிறி எகிறிச் சீறும்.

“க்வாஷ்…..ஷ்…ஷ்… என ஓசையெழுப்பியபடி பக்கவாட்டில் இரு பக்கமும் பாயும் நீர்கற்றை ராஜநாகமாய் வந்து வலிந்து மோதி “க்வாஹாஷ்……’ ஓசையுடன் இணைந்து புணர்ந்து நீரடித்து நீர் விலகாது என்பதை உறுதிப்படுத்தும்..

செருமிகு வாள் எயிற்ற அரவொன்று சுற்றித் திசை மண்ணும் விண்ணும் உடனே
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப

இமையோர்கள் நின்று கடைய,
பருவரை ஒன்று நின்று முதுகிற் பரந்து, சுழலக் கிடந்து துயிலும்,
அருவரை அன்ன தன்மை அடல் ஆமையான திருமால் நமக்கோர் அரணே!

திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியின் வர்ணணைக்கொப்ப,

அந்தப் புணர்வின் பொங்கல்…, பாற்கடலில் திரண்ட அமிர்த கடையலை கண் முன் நிறுத்தும். பொங்கி நுரைத்து விம்மி விடைத்துச் சீறிச் சுழல் விட்டு பெருநடை பழகும் நீர் நாயகியைக் காணக் கண்கோடி வேண்டும்.

Poet’s Poet என்று போற்றப்படும் Edumnd Spenser, Prothalamion என்ற கவிதையில்

Whose rutty bank, the which his river hems,

Was painted all with variable flowers,

And all the meads adorned with dainty gems,

Fit to deck maidens’ bowers,

And crown their paramours,

Against the bridal day, which is not long:

Sweet Thames, run softly, till I end my song.

தேம்ஸ் நதியின் அழகை வர்ணிக்கறாரே, அதைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்கு அழகானவளல்லவா நம் காவிரி.

புணர்ந்து இணையும் வேகத்தில் பால் வெண்மையாய்ப் ‘பும்…’ மெனப் பொங்கி, எகிறிப் பரவிப் பாய்கையில், ஆங்காங்கே அழகாய் மிதந்தாடும் நுங்கும் நுரையும், அந்த அழகிய ஈர ஆடையில் நுண்மையாய் நெசவு செய்த புட்டாக்களாய் ஜொலித் தொளிரும்.

உல்லாசப் பிரயாணம் செல்வோர் பயணிக்கும் ரயில் நகரும்போது, ரயில் நிலையத்தில் நின்று கைகளை அசைத்து, மகிழ்ச்சியாய் வழியனுப்பும் உறவினர்கள், நண்பர்கள், குழந்தைகள் போல…

தென்றலில் மயங்கி அசையும் தருப்பை, தாழை, ஊமத்தை, காட்டாமணி, துத்தி, கோவை, கோரைப்… போன்ற செடி கொடிகளின் இலைகள், வண்ண வண்ணக் ‘கரைப் பூக்கள்’ எல்லாம்… அலைகளின் நீரோட்டத்தில் ஆடி ஆடி உல்லாசமாய்ப் பயணிக்கும் ‘நுரைப் பூக்களுக்குக்’, கையசைத்து, சந்தோஷமாய் விடைகொடுக்கும்.

உத்தராசு, கல்யாண முருங்கை, எலந்தை, புளியமரம், ஆல், அரசு, அத்தி, போன்ற பெரு மரங்கள் தங்களின் பழுத்த இலைகளையும் பூக்களையும் உதிர்த்து நுரைப்பூக்களுடன் துணைக்கு அனுப்பி வைக்கும்.

இணைக்கிளிகள், தவுட்டுக் குருவி, நீர் நாரை, குயில், கூழைகிடா, நாமக்கோழி, கானாங்கோழி, வெள்ளை அரிவாள் மூக்கன், ஊல் அல்லிக்குருவி, சிவப்பு ஆள்காட்டிக் குருவி, பாம்புத் தாரா… இன்னும் பலப்பலப் புள்ளினங்களின் கூட்டுக் கூவல் ஒலி, தாவரங்களின் கையசைப்பிற்குப் பின்னணி இசையாய் அழகு சேர்க்கும்.

தன் வாழ்வாதாரமான தண்ணீரின் பெருக்கம் கண்டு கெண்டை, கெளுத்தி, அயிரை, வாலை, சென்னாங்குன்னி, விலாங்கு, ஜிலேப்பி, விரால் போன்ற மீன்கள், துள்ளிக் குதித்துக் களியாட்டம் போடும்.

துள்ளிக்குதிக்கையில் சில மீன்கள் மீன்கொத்திகளுக்கு இறையாகும்.

ரொம்பத் துள்ளினால் அதன் விளைவு இதுதான் என்பதை பிரபஞ்சத்துக்குச் சுட்டிக் காட்டுவது போல இருக்கும்.

ஒரு குழந்தை செவலையாக, நோஞ்சானாக புள்ளம்பாடிக் கால்வாய் என்றும்…

இன்னொன்று கொழுக் மொழுக் என்று பிரும்மாண்டமான கொள்ளிடமாகவும் பிறக்கிறது.

காவிரியாறு கல்லணை, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை வழியாகப் பயணப்பட்டு, கடைமடைப் பூம்புகாரில் வங்காள விரிகுடா எனும் பிரம்மாண்டத்தோடு ஐக்கியமாகிறது

காவேரியின் அதிக நீர்வரத்தாலும்,வெள்ள அபாயத்திலும் துன்பமுறும் காவேரிக்குக் கை கொடுக்கிறது கொள்ளிடம். இது கல்லணை, திருமானூர், ஜெயங்கொண்டம், அணைக்கரை, கொள்ளிடம், வழியாக வங்காள விரிகுடா கடலில் சங்கமமாகிறது.

புள்ளம்பாடி கால்வாய் திருச்சியின் வடபகுதியில் உள்ள அனைத்து விவசாயம் சார்ந்த கிராமப் பகுதிகளான குணசீலம், மண்ணச்சநல்லூர் , சமயபுரம், இலால்குடி ஆகிய பகுதிகளில் உள்ள பல கிராமங்கள் வழியாக புள்ளம்பாடி வரை விவசாயிகளுக்கு அமுதூட்டுகிறது.

இந்த மூன்றின் பிரிவையும் ‘கொம்பின் பிரிவுகளாகப் பார்த்து ‘முக்கொம்பு’ எனப் பொருத்தமாக பெயர் வைத்தவர் மிகுந்த ரசனைமிக்கவராகத்தான் இருக்கவேண்டும்.

முக்கொம்பில் இரட்டைப் பெண் சிசுக்களைப் பெற்று சற்றே இளைத்தாலும், அழகும், ஆற்றலும், கம்பீரமும், ஊட்டமும், வேகமும் சற்றும் குறையாமல் ஓடுகிறாளே காவிரிபெண்… அதன் ரகசியம்தான் என்ன..?!

கல்லணையில், திருவையாற்றில், கும்பகோணத்தை அடுத்த மணஞ்சேரியில்… என வரிசையாக நிறையக் குழந்தைச் செல்வங்களைப் பெற்றுத் தள்ளிகொண்டே செல்கிறாள் காவிரி அன்னை.

இப்போது போல அன்று அவ்வளவு பிரபலமில்லை முக்கொம்பு, என்றாலும் ஜனங்களுக்கு அது ஒரு உல்லாசப் பொழுதுபோக்குத் தலம்தான்.

காவிரியின் வடகரையில் குணசீலம் பெருமாள் கோவில்.

குணசீல மகரிஷி தவமிருந்து வணங்கி வழிபட்டு, வரம் பெற்ற திருத்தலம் இது.

பௌர்ணமி சிறப்பு பூஜையும் உத்திர வழிபாடும் இங்கே சிறப்பு.. திருவோண நட்சத்திர நாளிலும் விசேஷ வழிபாடுகள் நடைபெறும்.

மனநோயைத் தீர்க்கும் வல்லமை மிக்க பெருமாள் என்பது சிறப்பினும் சிறப்பு.

தென்கரையில் உள்ளோர், குணசீலம் செல்லும்போது, வழக்கமாக, முக்கொம்பின் காவிரிக் கரையில் அமர்ந்து கட்டுச் சோற்றை அவிழ்ப்பார்கள்.

சாப்பிட்டு, காவிரி நீரை இரண்டு கைகளால் அள்ளிப் பருகி, சற்றே ஓய்வெடுத்த பின் தலயாத்திரைத் தொடர்வார்கள்.

இளைஞர்கள், குறிப்பாகக் காதலன், காதலிக்கு நீச்சல் திறமையையும் காட்டுவதற்கு முக்கொம்பு அன்றும் இன்றும் என்றும் பிரசித்தம்.

அந்த ரூட்டில் இரண்டு கார்பரேஷன் பேருந்துகள் இயங்குகிறது. காலை ‘ஒரு சிங்கிள்’ மாலையில் ‘ஒரு ட்ரிப்’ பெட்டவாய்த்தலை வரை போகும் ஒரு பஸ்.

நடுவில் இரண்டு சிங்கிள்களில், ஒன்று ‘ஜீவபுரத்தோடும்’, இன்னொன்று ‘கொடியாலம்’ சென்றும் திரும்பும்.

பேருந்தில் ‘கைகளை வெளியே நீட்டாதீர்’

‘பெண்கள் அமருமிடம்’

‘படிகளில் பயணம் நொடியில் மரணம்’

‘ஊனமுற்றோர் இருக்கை’

‘புகை பிடிக்காதீர்கள்’

‘சில்லறையாகத் தரவும்’

இவைகளோடு திருவள்ளுவர் படத்துடன் திருக்குறளும் எழுதப்பட்டிருக்கும்.

முதலுதவிப் பெட்டியும் புத்தம் புதியதாய்க் காட்சியளிக்கும்.

இவ்வளவையும் முறைப்படி பராமரிக்கிற கார்ப்பரேஷன், இஞ்சினை மட்டும் ஏனோ கண்டுகொள்வதே இல்லை…

அவ்வப்போது பஸ் பிரேக்டவுன் ஆகிப் படுத்தாலும் கார்ப்பரேஷன் அதைப் பற்றிக் கவலையேப் படாது.

கார்ப்பரேஷன் என்ன…, மக்கள் கூட அப்படித்தான் பஸ் ஓடவில்லையே என எவரும் கவலைப்படாத காலமது…

பெரும்பாலும் யாரும் டவுன் பஸ்களை நம்பிப் பயணிப்பதே யில்லை.

The American Scholar என்ற பிரசித்தி பெற்ற கட்டுரையில் அமெரிக்க எழுத்தாளர் எமர்ஸன் அவர்கள்

We will walk on our own feet;

we will work with our own hands;

we will speak our own minds.

Then shall man be no longer a name for pity, for doubt, and for sensual indulgence.

என்று சொன்னதைப் போல சொந்தக் காலில் நிற்பவர்களாக, உடல் மற்றும் மன ஆரோக்யத்தோடு இருந்த காலமது.

குணசீலம் போக முடிவெடுத்துவிட்டால், முதல்நாள் மாலை முதல் வீடே அமளிதுமளிப்படும்.

அப்பளம் – வடகம் பொறிப்பார்கள். மோர் மிளகாய் வருப்பார்கள். வாழைக்காய், உருளைக் கிழங்கு வறுவல் மணக்கும் வீடு முழுவதும்.

கிலோக் கணக்கில் பட்டாணியும், வறுகடைலையும் வாங்கி வைத்துவிடுவார்கள்.

பட்டாணி கொரித்தவாறே பல காதம் நடந்த கதையெல்லாம் உண்டு அந்தக் காலத்தில்.

வாழைச்சருகை அலம்பித் சுத்தமாகத் துடைத்து வைப்பார்கள்.

பொட்டணம் சுற்றச் செய்தித்தாள்கள், கட்ட வாழை நார் எல்லாம் தயாராக வைத்திருப்பார்கள்.

மறுநாள், அதாவது பிரயாண நாளன்று விடிகருக்கலில் பெண்டுகள் வெண்கலப்பானை வைத்துச் சோறு வடிப்பார்கள்.

வடித்த சோற்றை தாம்பாளம் தாம்பாளமாகக் கொட்டிப் பரத்தி ஆறவைப்பார்கள்.

“ஏய்…! அந்த நல்லெண்ணை சம்புடம் எடு…”

“உப்பு கொஞ்சம் தூக்கலாப் போடு… ஊற ஊறப் புளியோதரை இழுத்துக்கும்…”

“எல்லாக் கூஜாவுலயும் தண்ணி ரொப்பியாச்சா…?”

“கூஜாவை டைட்டா மூடுடா…”

“லோட்டா எடுத்து வெச்சியா…?”

“ஸ்பூன், கரண்டிகள் எல்லாம் கவனமா எடுத்துக்கோங்கோ…”

“மாட்டு வண்டீல வைக்கோல் பரத்தி ஜமக்காளம் விரிச்சாச்சோ…?”

“………………..”

வாண்டுகள் முதல் வயோதிகர்கள் வரை அவரவற்கு ஏற்ற வேலையை சுறுசுறுப்போடு செய்துகொண்டிருப்பார்கள்.

விடிகாலையில் துயில் எழ முரண்டு பிடிக்கும் குழந்தைகளை எழுப்பி, கிளப்ப பெரியவர்கள் சாம கான பேத தண்ட முயற்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

முதல் நாள் தயார் செய்த புளிக்காய்ச்சலைக் கொட்டி, செழும்ப நல்லெண்ணை ஊற்றிப் பிசைவார்கள். வீடே ‘கம்… மென்று நறுமணக்கும்.

பால் சோறு பிசைவார்கள். நுணுக்கி நுணுக்கி நறுக்கிய கறிவேற்பிலை, கொத்துமல்லித் தழை, மாங்காய், மாங்காய் இஞ்சி, கேரட், மோர்மிளாகாய், முந்திரி, திராட்சை, என வசதிக்குத் தக்கபடி தயிர்சோற்றில் கலப்பார்கள். கடைசியில் சிறிது தயிர் விட்டுப் பிசைவார்கள்.

மதியம் சாப்பிடும்போது புளிக்காமல் கொள்ளாமல் வாய்க்கு இதமாக இருக்கும் தயிருஞ்சாதம்.

வடு மாங்காய், கிடாரங்காய், எலுமிச்சை, மாகாளி, நார்ந்த இலைப் பொடி (வேப்பலைக் கட்டி என்றும் கூறுவார்கள்) , என ஊறுகாய் வகைகளை சின்னச் சின்ன சம்புடங்களிலும் போட்டுக்கொள்வார்கள்.

வசதிப்பட்டவர்கள், மாட்டு வண்டி கட்டிக் கொண்டோ, குதிரை வண்டியிலோ கோவிலுக்குப் போவார்கள்.

ஏதாவது ‘அவரச-மாத்தரம்’ என்றால் மட்டுமே பஸ்ஸை நாடுவார்கள் மக்கள்.

அவசரமும் ஆத்திரமும் உந்தித்தள்ள, விடிகாலை ‘முதல் சிங்கிள்’ பஸ்ஸிலேயே முத்துனூர் வாசிகளும், அந்தனூர் வாசிகளுமாக, பெட்டவாய்த்தலை பஸ் நிரம்பி வழிந்தது.

நிரம்பி வழிந்தாலும், கண்டக்டருக்கு அதிக வேலை வைக்காமல், முத்தனூரார் ஒருவர் 40 டிக்கட்டுகளும், அந்தனூராரில் ஒருவர் 38 டிக்கட்டுகளும் முறையே மொத்தமாக வாங்கிக் கொண்டார்கள்.

எல்லோரும் எட்டி நிற்க, மாதய்யா உட்பட, ஒரு சில பெரியவர்கள் மட்டும் ‘லஸ்கரை’ அணுகி விவரத்தை விளக்கிச் சொன்னார்கள்.

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “ஸாரி சார்…!” நான் ஒண்ணும் செய்யறதுக்கில்லை…” என்று கை விரித்தார் லஸ்கர்.

ஜனங்கள், லஸ்கர் காலில் விழாத குறையாக ஷட்டர் போடக் கெஞ்சிக்கொண்டிருந்தபோது, “ஒங்களுக்கு நெஞ்சுல ஈரமே கிடையாதா…? மனிதநேயமே இல்லாம பேசுறீங்க…?” என்று ஒரு குரல் வந்தது.

முத்தனூர் கருணாமூர்த்திதான் இப்படி உணர்ச்சி வசப்பட்டுப் பேசினது.

“நான் மனிதநேயம் பார்த்து ஷட்டரை மூடினா மேலே இருந்து வர்ற பிரச்சனைகளை நீங்களா வந்து சமாளிக்கப் போறீங்க…? அப்பப்போ காவேரீல எவனாவது செத்துக்கிட்டுதான் இருப்பான்… ஒவ்வொரு சாவுக்கும் ஷட்டரை இழுத்து மூடிக்கிட்டிருந்தா, காவேரீல தண்ணியே ஓடாது…” என்றார் லஸ்கர் கடுப்பாக.

“………….” யாரும் பேசவில்லை. அமைதியாக நின்றார்கள். கருணாமூர்த்தி ‘ஆன்ட்டி கிளைமாக்ஸ்’ உருவாக்கி விட்டபிறகு அங்கு யார் என்ன பேச முடியும்…

“ ஷட்டர் போடறதுனால எவருக்கும் பாதிக்காதுய்யா… மனசாட்சியோட நடந்துக்கோங்க…” என்று மீண்டும் சீண்டிவிட்டான் கருணாமூர்த்தி.

“ஆமாம்யா…! நீ சொல்றது சரிதான். பாதிக்காதுதான்… காவிரிக்கரைல உட்காந்து கதைபேசும் காதல் ஜோடிங்களை பாதிக்காது.”

“ஓட்டாம்பாளத்தை வீசி காவேரித் தண்ணீல ‘தவக்களை’ விடறவனுக்கு பாதிக்காது.”

“அம்பாரம் துணிகளை அலச வற்ரவங்களுக்கு பாதிக்காது…”

“சாவுல கலந்துக்கிட்டு தலை முளுகறவங்களுக்கு பாதிக்காது…”

“காவேரினு கூடப் பாக்காம காலு களுவறவங்களை பாதிக்காது…”

“தலை முளுகிட்டு, படீல நின்னு ஜபம் செய்யறவங்களை பாதிக்காது.”

“ஊர் கடைக்கோடீல பாசனத்துக்குக் காத்திருக்கற நூத்துக்கணக்கான விவசாயிங்களை கடுமையா பாதிச்சிடும்யா…கடுமையா பாதிச்சிடும்…” லஸ்கரின் பேச்சில் சமூகப் பொறுப்பும் விவசாயிகளின் மீது உள்ள அக்கரையும் தெரிந்தது.

“நாளையோ மறுநாளோ, கல்லணைல மிதக்கும்…” சொல்லிவிட்டு வந்தவர்களை உதாசீனப்படுத்திவிட்டு அப்பால் சென்றுவிட்டார் லஸ்கர்.

தாட்சண்யமே காட்டாமல் பேசிய லஸ்கரிடம் இனி பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்துகொண்ட மாதய்யா ‘அடுத்து ஆகவேண்டியதற்குத் திட்டமிட்டுக் காயை நகர்த்தினார்.

யாரைப் பிடித்தால் பழுக்குமோ அவரைப் பிடித்தார் மாதய்யா. சுருக்கமாக விவரத்தைச் சொன்னார்.

மராமத்துத் துறை அமைச்சருக்குச் செய்தி போய் அவர் மராமத்துத்துறை அதிகாரிக்குக் கை லெட்டர் கொடுத்தார்.

லஸ்கரை அழைத்துப் பேசினார் மராமத்துத் துறை அதிகாரி.

என்னென்ன ‘பேப்பர் வொர்க்’ செய்யவேண்டும் என்று விளக்கினார்.

‘மெயிண்டனன்ஸ் அர்ஜெண்ட்’ என்ற விதியின் கீழ், மறுநாள் அடைக்க வேண்டிய ஷட்டரை இன்றே அடைப்பதாக அறிக்கை தயார்செய்யப்பட்டது.

ஒரு வழியாக லோக்கல் பெரியமனிதர் செல்வாக்கில் ஆளும் கட்சி அமைச்சரிடமிருந்து வந்த ‘லெட்டர்’ ‘ஷட்டர்களை’ இறக்கி மூடியது.

கொள்ளிடத்தில் தண்ணீர் மளமளவெனப் பெருகியது.

லைன்கரை வழியாகத் தேடிக்கொண்டேப் போனார்கள்.

கனமனூர், முருங்கப்பேட்டை, மான்சிங் பங்களா… என காவிரியில் இறங்கி ஆங்காங்கே வளர்ந்துள்ள நாணல் குத்துக்களையும், தர்ப்பைக் புதர்களையும் கவனமாகப் பார்வையிட்டார்கள்.

இதுவரை யார்யாரை எவ்வெப்போது இந்தக் காவிரி காவு வாங்கியிருக்கிறது, எதை எதை எப்படி எப்படிச் சமாளித்தோம் என்பதைப் பற்றி அவரவர்க்குத் தெரிந்த வகையில் பேசிக்கொண்டே நடந்தார்கள்.

கம்பரசம்பேட்டை வாட்டர் ஹவுஸ்க்கு முன்னால், பெரியார் வளைவுக்கு முன்னே, காவிரி மணல் திட்டில் பரபரப்பான கூட்டம் தெரிந்தது.

மாதய்யா ஊகித்துவிட்டார்.

அதே சமயம் லைன்கரையை ஒட்டிய சாலையில் சென்றவர்கள். “சின்னஞ்சிறுசுக…புதுசா கலியாணம் ஆனவங்கபோலத் தெரியுது… இப்படியா ஆவணும்…” என்று பேசிக்கொண்டே போனார்கள்.

“ஹோ…!” வென்று கதறினார் பசுபதி குருக்கள். “என் ஒரே மகனுக்கு இந்த கதியா வரணும்…”

“விநாச காலே விபரீத புத்தினு சொல்லுவாளே…! நீ சொன்னதைக் கேட்காம அவனை உடனே வரச்சொல்லி ஃபோன் பண்ணி, நானே அவனுக்கு எமனாயிட்டேனே மாது… நான் என்ன செய்வேன்… மாலையும் கழுத்துமா மணக்கோலத்துல பார்க்கவேண்டியவனை இப்படி பிணக்கோலத்துல பார்க்கறேனே…”

“………………..” மாதய்யா எதுவும் பேசவில்லை. என்ன பேச முடியும்…?

“மாது… என்னண்ட பதவிசா எடுத்துச் சொல்லியிருந்தா, ஜாதி என்ன ஜனம் என்னனு நானே முன்னால நின்னு கல்யாணத்தை பண்ணி வெச்சிருப்பேனே….” கதறியபடியே மூர்ச்சையானார் பசுபதி.

‘இருக்கும்போது எதையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பவன், அது அறவே இல்லையென்று ஆனபின் அதை கண்மூடித்தனமாக ஆதரிப்பதன் ரசவாதம்தான் என்ன…!’

கம்பரசம்பேட்டை ரோடு மேடெல்லாம் ஜனக்கூட்டம். கம்பரசம்பேட்டை ரயில் நிலையத்தில் ஈரோடு பாசஞ்சர் நின்று போனபின், அதிலிருந்து இறங்கிய ஓரிருவரும் (இப்போது அங்கே ரயில் நிலையம் கிடையாது) அந்தக் கூட்டத்தோடு வந்து கலந்தன. செத்த பிணங்களை வேடிக்கை பார்க்க வந்த சாம்பிணங்கள்.

“அய்யோ பாவம்…!”

“இந்தக் காவேரிதான் எத்தனைபேரை பழிவாங்கியிருக்கு…!”

“புது கல்யாண ஜோடிங்க… அதான் கொடுமை…!”

“காவிரியாத்து நீக்கு போக்கு தெரியாம விளையாடி, நீச்ச தெரியாம செத்துருக்கும்…”

“யோவ்… இது போலீஸ் கேசு. நம்ம ஊர்ல ஒதுங்கியிருக்கறதுனால நாம போலீஸ்ல சொல்றதுதான் நல்லது…”

“பேண்ட்டு சூட்டு போட்டிருக்கான்… பட்டணத்துலருந்து முக்கொம்பு பார்க்க வந்திருப்பாங்களோ…?”

“நீ சொல்றது சரிதான். இதுங்க முக்கொம்பு பாக்க வந்த ஜோடிதான்… சந்தேகமே இல்லை…”

“எதை வெச்சுச் சொல்றே…?”

“காலைல நுங்கும் நுரையுமா, வெள்ளமா ஓடின காவேரி, இப்போ தண்ணி வடிஞ்சி திட்டு தெரியுதுன்னா…என்ன அர்த்தம்…?”

“அதுவுஞ் செரிதான். மொறை கூட இன்னிக்கு மாறாதே… நாளைக்குத்தானே…!”

“இதுங்க, முக்கொம்புல விளுந்திருக்கும். கூட வந்தவங்க தேடிப்பாத்துட்டு, ஷட்டர் போட்டுட்டுத் தேடுவாங்களா இருக்கும்…!”

பலவாறாய்த் தங்களுக்குத் தோன்றியபடி பேசிக்கொண்டிருந்தனர் ஜனங்கள்.

முட்ட முட்டத் தண்ணீர் புகுந்த வயிறு. ஊறிப் பருத்த உடம்பு. ஊதல் தாங்காமல் தையல் விட்டுக்கொண்டு கிழிந்து அகன்ற உடைகள்.

மூக்கு, காது, வாய் என அனைத்து துவாரங்களிலும் புகுந்து அடைத்துக்கொண்ட வண்டல்.

மீன்கள் குதறிய கண்கள். விரைத்த கை கால்கள்… இப்படித்தான் என்று சொல்லமுடியாதபடிக்கு நீட்டியும் மடங்கியும் இருந்தன.

இத்தனைக்கும் நடுவில் அந்த தம்பதியர் கை கோர்த்தபடி விரைத்துக் கிடக்கும் காட்சிதான் அனைவரையும் அழவைத்தது.

“சட்டுனு உறவுக்காரங்களே அடையாளங்கண்டுக்கிர முடியாது… கண்ணு மூக்கெல்லாம் மீனு நோண்டி….” என்று பிரேதங்களை அருகில் பார்த்த ஒருத்தி வர்ணித்துக் கொண்டிருந்தாள்.

“எக்குத் தப்பாக் கிடக்கற பொணத்துமேல ஒரு துணி போத்தலாமில்ல… நின்னு வேடிக்கைப் பாத்துக்கிட்டு நிக்கிறீங்க…!”

சொல்லியவள், அம்பாரம் துணிகளை துவைக்க வந்தவள். துணிகள் ரெண்டு எடுத்து முகங்கள் மட்டும் தெரியப் போர்த்தி விட்டாள்.

துர்நாற்றம் வீசியதால் ஜனங்கள் எட்டடி, பத்தடித் தள்ளி நின்றே பார்த்தனர்.

கதறிக்கொண்டு ஓடிவந்தான் வீரமுத்து.

வந்த வேகத்தில் மண்டி போட்டுக்கொண்டு, நெஞ்சில் அடித்துக்கொண்டு, கதற ஆரம்பித்தான்.

“தங்கச்சி….மச்சான்….மச்சான்….தங்கச்சி….” என்று கத்தினான், கதறினான்…, கத்தியபடியே கண்ணீர்விட்டான்.

பசுபதி குருக்கள் விரக்தியின் உச்சத்தில் பிரமை பிடித்ததைப் போல உட்கார்ந்திருந்தார்.

மயக்கம் தெளிந்து எழுந்தது முதல், அவர் அழவில்லை. யாரோடும் பேசவில்லை. இப்படியேத்தான் உட்கார்ந்திருக்கிறார்.

அடுத்து ஆகவேண்டியதைப் பற்றி யோசித்தார் மாதய்யா. கலியனை அழைத்து ஏதோ சொன்னார்.

“சரிங்கய்யா…” அவன் உடனே புறப்பட்டான்.

அடுத்த பத்தாவது நிமிஷம், மாதய்யா ஏற்பாடு செய்த இடத்திலிருந்து பாரவண்டி கொண்டுவந்துவிட்டான் கலியன்.

“பிணங்களை வண்டீல ஏத்தலாம்…” என்று சொல்லிக்கொண்டே, மாதய்யா நான்கைந்து ஆசாமிகளோடு பிணங்களின் அருகே சென்றார்.

மரித்தான் வீரமுத்து. “என் மச்சான் பொணத்தை யாரும் தொடக்கூடாது. அதுகளை எப்படி அடக்கம் பண்ணணும்னு எனக்குத் தெரியும்…” கத்தினான். கெட்ட வார்த்தைகள் இரைத்தான்.

“என் மகன் பிரேதத்தையும், மருமகள் பிரேதத்தையும் வண்டீல ஏத்துங்க…” என்றார் அமைதியாக உட்கார்ந்திருந்த குருக்கள் ஆக்ரோஷமாக.

பசுபதி குருக்கள் வாயிலிருந்து இப்படி ஒரு உத்தரவை யாருமே எதிர்பார்க்கவில்லை.

“யோவ் குருக்களே… எவனாவது கைவெச்சா, இங்கேயே வெட்டி பொலி போட்ருவேன்…” கையில் வீச்சறிவாளோடு சீறினான் வீரமுத்து.

பிரேதங்களை பொதுவிடத்தில் வைத்துக்கொண்டு இப்படி வல்லடி வழக்கு செய்வது மாதய்யாவுக்குப் பிடிக்கவில்லை. கேலிக்கூத்தாக இருந்தது அந்தக் காட்சி. இதற்கொரு முடிவு கட்டத் தீர்மானித்தார்.

“அவங்கவங்க ஊர் பிரேதங்களை அவங்கவங்க கொண்டு போய் இடத்தைக் காலிபண்ணுங்கய்யா…” என்று ஒரு குரல் பின்னாலிருந்து வந்தது.

“பஞ்சாயத்து பேசற பரதேசி எவண்டா…? என் எதிர்ல நின்னு பேசுடா பாப்பம்…” என்று கடும் சொற்களை வீசினான் வீரமுத்து.

மாதய்யா ரௌத்ரமானார். “பிரேதங்களை எடுக்க விடப்போறியா இல்லையா வீரமுத்து… என்ன சொல்றே நீ…”

“முடியாதுங்க…”என்றான் உறுதியாக

“அப்படின்னா வேற வழியில்ல. இது போலீஸ் கேஸ். நான் உடனே போலீசுக்குத் தகவல் கொடுத்துடறேன். பிணங்களை ஆஸ்பத்திரீல கூறு போடுவாங்க…” என்று சொல்லிக்கொண்டே, சாலைப் பக்கம் நடக்கத் துவங்கினார் மாதய்யா.

‘மாதய்யா செல்வாக்கு உள்ளவர். எதையும் செய்வார்…’ என்பது தெரிந்த வீரமுத்து கொஞ்சம் இறங்கிவந்தான்.

“புது ஜோடிகளைப் பிரிக்கவேண்டாமே…’ என்று இரு சாராருக்கும் எண்ணம் இருந்தாலும், அவரவர்களுக்கு உள்ள போலி கௌரவமும், வீம்பும், தன்முனைப்பும், பாழாய்ப்போன பவித்ர அகங்காரமும், அந்த எண்ணத்தை தவிடுபொடியாக்கின.

அவரவர் பிரேதம் அவரவர்க்கு என்று ஒத்துக்கொண்டான் வீரமுத்து.

மனிதர்களுக்குப் பச்சாத்தாபம் இருக்கும்போது, சிலவற்றை ஒத்துக்கொள்வார்கள். சிலவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.

அனுதாபம் எவ்வளவு பெரிய தப்புகளையும் மூடி மறைத்துவிடுகிறது… அனுதாப அலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்பவன் புத்திசாலி. அதுதான் சாணக்கியம்.

தன் வயதிலும் அனுபவத்திலும் மாதய்யாவுக்கு இந்தச் சாணக்கியம் புரிந்தது.

இதுதான் சாணக்கியம் என்று சொல்லி விளக்கம்போது அது பைத்தியக்காரத்தனமாகிவிடுகிறது. கேலிக்கூத்தாக ஆகிவிடுகிறது.

“சாணக்கியம் செய்யப்போகிறேன் பார்…” என்று சவால் விடும்போது அது நகைப்புக்குள்ளாகிறது.

சாணக்கியம் செயல்முறைப்படுத்தப்பட்டபின் சாதாரண நிகழ்வாகிவிடுகிறது.

சாணக்கியம் என்பது செயல்தான். சொல்லில்லை.

செயலில் இறங்கும்போது மட்டுமே சாணக்கியம் வெற்றி பெறுகிறது.

மாதய்யா சாணக்கியம் செய்தார்.

அனுதாபம், துக்கம், பச்சாத்தாபம்… எல்லாம் ஒரு நேரத்தில் குறைந்துக் குறைந்து முற்றிலும் நீங்கி, இது இப்படித்தான் என்று சட்டம் பேசி பிடிவாதம் செய்யத் தொடங்கிவிட்டால் அதை சமாளிப்பது பெரிய பாடாகிவிடும். சாதாரண விஷயம்கூட சட்டசிக்கலாகிவிடுமே…!’ என்று எண்ணமிட்டவராய் அடுத்தடுத்த காரியங்களைத் துரிதப்படுத்தினார் மாதய்யா.

ஊருக்குள்ளேயே கொண்டு போக வேண்டாம்… ஸ்மஸானத்துக்கே (சுடுகாட்டுக்கே) நேரா கொண்டு போய் காரியத்தை செஞ்சுடலாம்” என்ற மாதய்யாவின் யோசனையை யாரும் ஏற்கவில்லை.

குருக்கள் வீட்டு ரேழியில் பிரேதம் கிடத்தப்பட்டதும், “உடனே க்ரிமேஷனுக்கு ஏற்பாடு பண்ணணும்னேன்…!” என்று அவசரப்படுத்தினார் மாதய்யா.

கடுஞ்சாவு என்பதால் பிடிவாதமாக நின்று வற்புறுத்தவும் மனம் இல்லை அவருக்கு..

பற்பல பின்விளைவுகளை மனதில் கொண்டு மாதய்யா சொன்ன இந்தக் கருத்தையும் யாரும் அங்கே ஏற்கும் நிலையில் இல்லை..

“ஈஸ்வரோ ரக்‌ஷது…”

‘கடவுள் விட்ட வழி…’

அவசியமில்லாமல், ‘டீகம்போஸ்’ ஆகிவிட்ட பிணத்தை வீட்டில் போட்டுக்கொண்டு ராப்பிணம் காத்தார்கள்.

‘தண்ணீரில் ஊறிய கட்டை’ தன் குணத்தைக் காட்டியது. துர்நாற்றம் குடலைப் புரட்டியது.

மாதய்யா அவ்வப்போது வீட்டுக்குச் சென்று தெருத்திண்ணைணில் உட்கார்வதும், பிறகு வருவதுமாய் இரவு முழுதும் தூங்காமல் பொழுதை ஓட்டினார்.

சாவித்திரியை அடக்கம் செய்வதற்குள் ராமுவை, கிரிமேஷன் செய்துவிடவேண்டும் என்று நினைத்த மாதய்யாவின் சாணக்கியம் பலிக்கவில்லை.

‘அடுத்தது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்… சமாளிக்கவேண்டும்…’ என்று எண்ணிக்கொண்டிருந்தபோதுதான் கலியன் வந்து எதிரில் நின்றான்.

“என்னடா கலியா… … இந்த நேரத்துல…நீ…!”

கழுத்தில் விரலிமஞ்சள் கோர்த்த புதுத்தாலிக்கயிறு மினுமினுக்க, தன் சுவாசமாய் வளர்த்த ஒரே சகோதரியை சகிக்க முடியாத தோற்றத்தில் பிரேதமாய்ப் பொறுக்கி எடுத்து வந்து அடக்கம் செய்த வீரமுத்துவுக்கு வயிறு பற்றி எரிந்தது.

காவிரியில் “மச்சான்… மச்சான்…” என்று கதறியவன் இப்போது மாறிப்போனான்.

“அந்த … ப்பயலாலத்தான் என் தங்கச்சி…. அந்தப் பயலை…” என்று உறுமினான்.

கெட்ட வார்தைகள் தெரிந்தன. அவன் உறுமலுக்கு ஊர் கூடியது.

அனுதாபம் மறைந்து, துக்கம் ஓடி ஒளிந்துகொண்டது.

கூடிய ஊர்க் கூட்டம், பஞ்சாயத்துக் கூட்டமாக உறுமாறியது.

பிரச்சனை திசை திருப்பப்பட்டது.

பெருசுகள் சொல்வதை விடலைகள் கேட்பதாக இல்லை…

பக்குவப்படாத, ரத்தத் திமிர் எடுத்த சிறுசுகளின் உணர்ச்சிவசப்பட்ட முடிவை பெரிய தலைகள் ஏற்க மறுத்தன.

வன்முறைக்கு எதிரில், தர்மம், நியாயம், மனிதநேயம், அனைத்தும் தலைகுனிந்து நின்றன.

“காலங்காலமா அந்தனூர் பொணம், நம்ம ஊர் வழியாத்தான் போவுது. அதைப் போவக்கூடாதுனு மறிக்கறது தப்பு… அதர்மம்…” என்று ஞாயம் பேசிய ஒரு பெரியவரை இளவட்டங்கள் கழுத்தைப் பிடித்துத் தள்ளியது.

முத்தனூர் ஊர்க் கூட்டத்தின் முடிவை அறிந்த கலியன் ஓடோடி வந்தான். மாதய்யாவிடம் விவரமாகச் சொன்னான்.

“கலியா… நான் எது நடக்கும்னு நினைச்சேனோ…; எது நடக்க விடாம தடுக்கணும்னு நினைச்சேனோ; அது நடந்துட்டுது… கலியா நான் சொல்றபடி செய்யி…”

“சொல்லுங்கய்யா…”

“கோவிலுக்குப் பின்னால நம்ப சம்பா காணீல நாலு ஆளுங்களை வெச்சி, வரப்பு சீர் பண்ணி பிணம் தூக்கிக்கட்டு நடக்கற அளவுக்குத் தயாரா வெச்சுப்பிடு…!” எதுக்கும் இருக்கட்டும்…

“ஏற்பாடு பண்ணிடுறேங்கய்யா…” என்று சொல்லிவிட்டு கிளம்பினான் கலியன்.

விடிவதற்குள் ஆட்களுக்குச் சேதி சொல்லி, பொலபொலவென விடிந்த நேரத்தில் தேவைப்பட்டால் சுடுகாட்டுக்கு பிணம் தூக்கிக்செல்ல மாதய்யாவின் விளைச்சல் நிலமான சம்பாக் காணியில் பாதை செப்பனிடும் வேலையைத் தொடங்கித் தொடர்ந்தான் கலியன்.

அடுத்து என்ன நடக்கும், எப்படிச் சமாளிக்கவேண்டும் என்று மாதய்யாவின் மனம் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தது.

– தொடரும்…

விகடன் மின் இதழான மை விகடன் இதழில், 02.05.2022 அன்று கலியன் மதவு என்ற சமூக நாவல் தொடங்கித் தொடர்ந்து 28.01.2023 ல் அதை நிறைவு செய்யும் வரை, அதைச் சிறப்பாக வெளியிட்டு ஊக்குவித்த ஆனந்த விகடன் ஆசிரியர், மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் – ஜூனியர் தேஜ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *