கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 2, 2024
பார்வையிட்டோர்: 3,353 
 

(2002ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10

அத்தியாயம்-7

இருவரையும் எதிர்பார்க்காத பரத்தின் வியப்பு, முகத்தில் வெளிப்பட்டது. 

“இதென்ன அதிசயம்! தேவதைங்க என் ஆபீஸ் தேடி வந்திருக்கீங்க! வாங்க… வாங்க…!” என்று உற்சாகமாய் வரவேற்றான். 

பெண்கள் இருவருமே வெட்கப்பட்டு அமர்ந்தனர்.

“என்ன சாப்பிடுறீங்க?” 

“ஏதாவது…” என்றாள் அமுதா. 

உதவியாளரை அழைத்துக் குளிர்பானம் கொண்டுவரச் சொன்னான்.

“என்ன விசயம் அமுதா? காரணமில்லாம வரமாட்டியே!”

“எப்படி கண்டுபிடிச்சீங்க?” 

“ரொம்ப படபடப்பா இருக்கியே!” என்றான், ஓரக் கண்ணால் அஸ்வினியைப் பார்த்து. 

“நான் மட்டுமில்லே… அஸ்வினியும்தான். படபடப்பா இருக்கா. அவ மகிழ்ச்சி அடைகிற மாதிரி நீங்க ஒரு வார்த்தை சொல்லணும்!” 

“என்ன?” புரியாமல் பார்த்தான். கேட்டான். 

“நானும் அஸ்வினியும் எவ்வளவு நெருங்கிய தோழிகள்னு உங்களுக்கே தெரியும்.” 

“உம்…” 

“கல்யாணம்கூட எங்க நட்பைப் பிரிக்க கூடாதுங்கிறதுல உறுதியா இருக்கோம். அதனால வெளியூர் மாப்பிள்ளையைக் கட்டிக்கக்கூடாதுன்னு உறுதியா இருந்தோம். அதிருஷ்டவசமா எங்க ரெண்டு பேருக்கும் உள்ளூரிலேயே வரன் அமைஞ்சு போச்சு”. 

“என்ன சொல்றே?” திடுக்கிட்டான் 

அஸ்வினியும் தோழியைக் குழப்பமாய்ப் பார்த்தாள்.

“முழுசா சொல்லிடுறேன். எங்க ரெண்டு பேரோட கணவர்களும் எங்களை மாதிரி நண்பர்களாயிட்டா எங்களுக்குப் பிரச்சினையில்லே…. அஸ்வினியோட அதிருஷ்டம் பெரிய இடத்து சம்பந்தம் கிடைச்சிருக்கு”.

“எ…என்ன?” என்றலறினான், பரத். 

“ஆமாங்க. தொழிலதிபர் தயாளனோட மகன் கோபிக்கு அஸ்வினிய முடிவு பண்ணி இருக்காங்க. இன்னைலேருந்து கோபி என் நண்பர்னு இவகிட்டே சொல்லுங்க. அப்பதான் நிம்மதியா இருப்பா…!” 

“அ…மு…தா…!” 

அஸ்வினி இதை எதிர்பார்க்கவில்லை. தன் காதல் விசயம் பற்றிப் பேசுவாள் என்று நினைத்திருந்தாள். அவளோ எதையோ பேசுகிறாள்! 

தலை சுற்றுவது போலிருந்தது. 

அதைவிட பரத்திற்கு அந்தச் செய்தி மரண அடியாக இருந்தது.

‘கல்யாணமா?அஸ்வினி உனக்கா?இன்னொருவனுடனா? அப்படியானால் என் மனதை நீ புரிந்து கொள்ளவில்லையா? உன் விழிப் பார்வையைக் காதல் என்று எண்ணியதெல்லாம் தவறா? என்னைப் பார்த்தால் நாணத்துடன் தலை கவிழ்வதும் அமுதாவின் பின் ஒளிவதும் எதற்காக?’

‘சே ! நான் அவளைப் புரிந்துகொண்டது தவறா? அல்லது… என் காதலை அவள் புரிந்துகொள்ளாமல்விட்டது தவறா? இல்லை! தவறு என் மீதுதான்!” 

‘வாயைத் திறந்து என் காதலைச் சொல்லியிருந்தால் இத்தனை பிரச்சினை வந்திருக்காது. அமுதா வேறு என்னைத் தன் கணவனாகவே முடிவு செய்திருக்கிறாள். அவள் பேச்சிலிருந்தே புரிகிறதே. ‘கோபியை எங்க நண்பர்னு இவகிட்டே சொல்லுங்க’ன்னு சொல்றதுக்கு என்ன அர்த்தம்?’ மனக வேதனையில் பொங்கியது. 

அதே எண்ணம்தான் அஸ்வினியினுள்ளும் ஓடியது.

‘எவ்வளவு பெரிய தவறான ஆசையை மனசுக்குள் வளர்த்திருக்கிறேன்? பரத், அமுதாவின் முறைமாப்பிள்ளை. அவளைப் பார்க்க வந்ததை, என்னைப் பார்க்க வந்ததாக அல்லவா தப்புக்கணக்கு போட்டுவிட்டேன்? அமுதா பூடகமாக பேசியதை எல்லாம் எனக்கு சாதகமாக எண்ணிக் கொண்டேன்? என் ஆருயிர் அமுதா ஆசைப்பட்ட பரத்தை நான் ஆசைப்பட்டது பெரிய தவறல்லவா?’ வேதனை தாளாமல் உருண்டு திரண்ட கண்ணீரை அமுதா அறியாமல் நாகுக்காய் அவள் துடைத்ததை பரத் பார்த்துவிட்டான்.

பரத்தின் மனசு துடித்தது. 

‘ஏன் அழுகிறாய் அஸ்வினி? உன் மனதில் என்ன இருக்கிறது? உரிமையோடு என்னால் கேட்க முடியவில்லையே! நீயாவது சொல்லிவிடு கண்மணி!’

அமுதா ‘வளவள’வென்று பேசிக்கொண்டிருந்தாள்.

இவர்கள் இருவரும் ஒப்புக்கு ஏதோ பேசினாலும் மவுனமாய் அழுதார்கள்.


“ஏ என்கிட்டே சொல்லாம மறைச்சிட்டே?” வகுப்பறையில் பக்கத்தில் அமர்ந்திருந்த அமுதாவிடம் கேட்டாள், அஸ்வினி. 

“எதை?” 

“பரத்தை நீ காதலிச்சதை!” 

“அதான் சொன்னேனே… அதிர்ச்சி செய்தியா இருக்கட்டும்னுதான். ஆனாலும் நான் சொல்லாமலேயே இப்ப கண்டுபிடிச்சிட்டியே!”

“இதுவே ரொம்ப தாமதம்தான்!” 

“இங்கே வந்திருந்தாரே… அப்பவே புரிஞ்சிருப்பேன்னு நினைச்சேன்!” 

“தப்புப் பண்ணிட்டேன்”. 

“என்னது?” 

“புரிஞ்சுக்காம போயிட்டேன்!” 

“ஏய்… இன்னொரு விசயம் தெரியுமா? பரத்தும், கோபியும் கல்லூரியில் படிச்சிருக்காங்க. அதுமட்டுமில்லே… பரத் குடியிருக்கிற தெருவிற்கு ரெண்டாவது தெருவில்தான் கோபியோட பங்களாவும் இருக்கு. இதை பரத் சொன்னப்ப எனக்கு இறக்கை கட்டிப் பறக்கிறமாதிரி இருந்தது. நாம் எப்படி எல்லாம் நினைச்சோமோ அதேமாதிரி வாழ்க்கை அமைஞ்சிருக்கு… ரொம்ப ஆச்சரியமாயில்லே?” 

சிறுகுழந்தையைப் போல் பரவசப்பட்ட அமுதாவைத் தோளோடு சேர்த்து அணைத்தாள், அஸ்வினி. 

“நம்மைப் பிரிக்காத கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்” என்றாள். 


அஸ்வினிக்கு கோபி என்று முடிவானபின் எதிலும் பற்றில்லாமல் இருந்தான், பரத். 

திருமணம் குறித்து அமுதாவின் பெற்றோர் வீடு தேடி பேசு வந்தபோது எல்லாவற்றிற்கும் தலையாட்டி வைத்தான்.

அதன்பின் திருமண வேலைகள் வேகமாய் நடந்தது. பரத்- அமுதா நிச்சயதார்த்தம் முடிந்தது. ஒரு வார இடைவெளியில் அஸ்வினி- கோபியின் நிச்சயதார்த்தமும் நடந்தது.

திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. அதிலும் ஆச்சரிய என்னவென்றால் ஒரே நாளில் தேதி குறித்திருந்தனர்.

ஒருவர் மற்றவர் திருமணத்தில் கலந்துகொள்ள வசதியா அமுதா தன் திருமணத்தை மூன்று நாள் கழித்து வைக்க ஏற்பாடு செய்தாள். 

புதுமண ஜோடிகள் ஒரு உயர்தர உணவகத்தில் சந்திக்க ஏற்பாடானது. இதுவும் அமுதாவின் ஏற்பாடுதான்.

அஸ்வினி முதலில் மறுத்தாள். 

“ஐயோ… வேண்டாம் அமுதா! கல்யாணத்துக்கு முன்னாடியே வெளியில் சந்திக்கிறது ரொம்ப தப்பு. வீட்டுக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க!” 

“தெரிஞ்சாதானே? சரியான பட்டிக்காடா இருக்கியே? கல்யாணத்துக்கு முன்னாடியே ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கிறதுக்கு இப்படிப்பட்ட சந்திப்புகள் அவசியம். பரத் என் மாமா மகன்தான். இருந்தாலும் அவரைப் பற்றி அதிகமா எனக்குத் தெரியாது. இப்படி நடந்துகிட்டா பிடிக்கும், பிடிக்காது. சாப்பிட இது பிடிக்கும், பிடிக்காது. இன்னும் நிறைய விசயம் இருக்கு. அதை விட்டுட்டு காலையிலே கல்யாணம், அடுத்து முதலிரவு. அதுக்குப் பிறகு பேசிப் பழகிப் புரிஞ்சுக்கிறதுங்கிறது ரொம்ப தப்பு.” 

“நீ சொல்றது சரிதான் அமுதா! ஆனா, கோபி தப்பா எடுத்துக்கிட்டாருன்னா…?”

“அம்மணி… இப்பவே வீட்டுக்காரருக்குப் பயப்படுறீங்ளோ? ஒரு உண்மையைப் போட்டு உடைக்கட்டுமா? இப்படி ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணுன்னு என்கிட்டே சொன்னதே உன் வருங்காலக் கணவர் கோபிதான்… தெரியுமா…?”

“ஏய்… என்ன சொல்றே…?”

“ஆமான்டி! கோபிக்கு உன் மேலே கொள்ளைப் பிரியம். உன் அமைதியும், அடக்கமும் அவருக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு வெளியிலே சந்திச்சுப் பேசணும்னு ஆசைப்படுறார். தவிர, நாங்க இன்னொரு திட்டமும் வச்சிருக்கோம்…”

“என்ன அது?” 

“நாளைக்குச் சொல்றேனே!* 

“எல்லாத்தையும் வச்சிதான் சொல்றே!” செல்லமாய் தோழியை அடித்தாள், அஸ்வினி. 


முன்னரே பதிவு செய்த மேசையை நால்வரும் ஆக்கிரமித்திருந்தனர். விதவிதமான உணவுப் பொருட்கள் எதிரே இருந்தன.

பெண்கள் இருவரும் ஒருபக்கமும், ஆண்கள் இருவரும் எதிர்ப்பக்கமும் அமர்ந்திருந்தனர். 

கோபி, அஸ்வினியை விழியகலாமல் பார்த்து பரவசப்பட்டான். 

‘அப்பா, எனக்கு அற்புதமான பெண்ணைத்தான் தேர்வு செய்திருக்கிறார்!’

பரத், பிறர் அறியாதவாறு அஸ்வினியைப் பார்த்து இதயத்திற்குள் நிரப்பிக்கொண்டான். அது தவறு என்று புரிந்தாலும், அவனால் அதைத் தவிர்க்க இயலவில்லை. 

“என்ன கோபி? இப்படியே பார்த்துக்கிட்டிருந்தா எப்படி? நிறைய பேசணும்னு ஆசைப்பட்டீங்களே பேசுங்க…!”  

வெட்கத்துடன் சிரித்தவன், “சாப்பிடு அஸ்வினி” என் உணவுத் தட்டை அவளருகில் தள்ளி வைத்தான்.
அஸ்வினி நாணத்துடன் தலைகவிழ்ந்தாள்.

“இவங்க சரி வரமாட்டாங்க… நீங்க பேசுங்க பரத்!”

“வியாபாரம் எப்படிப் போகுது கோபி?” 

“போன ஆண்டைவிட இந்த ஆண்டு ரெண்டு மடங்கு லாபம் கிடைக்கிற அளவுக்கு…” 

“ஐயோடா! இதைப் பேசவா இங்கே கூடி இருக்கோம்” தலையில் கை வைத்துச் செல்லமாய் அலுத்துக்கொண்டாள் அமுதா. 

“ரெண்டு பேரும் வியாபாரத்துல கவனமா இருந்தது இப்பதான் நாலஞ்சு ஆண்டா எங்களுக்குள்ளே தொடர்பு இல்ல…! அதுக்கு முன்னாடி நாங்க எவ்வளவு நெருங்கிய நண்பர்கள் தெரியுமா?”

“ஆமாம்… இதை நாங்க எதிர்பார்க்கவே இல்லை… உயிர் தோழிகள்தான் இந்த உயிர்த் தோழர்களுக்கு மனைவியாக வருவீங்கன்னு நினைக்கவில்லை, பரத்!” 

“அப்படியா…?” 

“ஆமா. இதுக்கு கடவுளோட அனுக்கிரகம்தான் காரணம். நீ ஏதாவது பேசு அஸ்வினி!” என்றாள், அமுதா.

“என்ன பேசுறது?” கிசுகிசுத்தாள். 

“அன்பே, ஆருயிரேன்னு பேசு!” 

“கிண்டல் பண்ணாதே… சும்மா இரு !” 

“அவளை உங்களுக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்க சொல்றா?” 

“ஏய்…!” தோழியின் கையைப் பற்றி அழுத்தினாள், அஸ்வினி. 

“ரொம்ப பிடிச்சிருக்கு!” என்றான், அழகான புன்னகையுடன். 

அஸ்வினி சட்டென அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு வெட்கமாய் தலை கவிழ்ந்தாள். இதயம் படக், படக் என அடித்துக்கொண்டது.

“நீயும் சொல்லு அஸ்வினி!” 

“என்னன்னு?” 

“கோபியைப் பிடிச்சிருக்குன்னு சொல்லு!” 

“ஊகூம்…” 

“இங்கே சொல்ல என் அஸ்வினிக்கு வெட்கமாக இருக்கிறதாம்!” 

பரத்திற்கு அங்கு அமர்ந்திருப்பதற்கே கஷ்டமாக

“வேறெங்கே சொல்வாளாம்?” குறும்புடன் கேட்டான், கோபி. 

“தனியே… அடுத்த வாரம் கொடைக்கானலில்?” 

“கொடைக்கானலா? என்ன சொல்றே நீ?” அஸ்வினியும் பரத்தும் ஒரு சேர கேட்க, அமுதாவும் கோபியும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தார்கள். 

“ஆமா… அடுத்த வாரம் நாம் நாலு பேரும் கொடைக்கானலுக்குப் போறோம்!” 

“அமுதா!” 

“என்ன…? 

“இதில் மறுத்துப் பேச யாருக்கும் உரிமையில்லை.” 

“அப்ப… கல்லூரியிலிருந்து சுற்றுலா போறதா சொல்லி விட்டு நாம் போறோம்… சரியா…?” என்றாள். அமுதா 

அத்தியாயம்-8

தன் வீட்டிலும், அஸ்வினி வீட்டிலும் கல்லூரிச் சுற்றலா என்று பொய் சொல்லி… எப்படியோ அனுமதி வாங்கி விட்டாள், அமுதா. 

இனி எப்போது போகப்போகிறார்கள்? திருமணமாக போகிறதே என்ற சலுகையுடன் இருவர் வீட்டிலும் சம்மதித்து விட்டனர். 

‘அஸ்வினியை நினைத்து உருகக்கூடாது. அவள் கோபியின் மனைவியாகப் போகிறாள். அவளை நேசித்ததை அறிந்தால் அமுதா வருத்தப்படுவாள். பாவம்… நல்ல பெண். கள்ள கபடமில்லாதவள். என் மீது உயிரையே வைத்திருப்பவள். அவளுக்கு உண்மையாய் மனசு கோணாமல் நடக்க வேண்டும். இந்த நேரத்தில் கொடைக்கானல் போவது நல்லதுதான். அவளிடம் ஆத்மார்த்தமாய் பழகலாம். காதலை வளர்கலாம்’ என்றெண்ணினான், பரத்.

கோபிக்கும் மனசு உற்சாகமாய் இருந்தது. 

அதென்னவோ அஸ்வினியைப் பார்த்த மாத்திரத்தில் ரொம்பவே பிடித்திருந்தது. அவள் நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த சாதாரணப் பெண் என்ற எண்ணமே எழவில்லை.

எந்தப் பெண்ணிடமும் இல்லாத ஏதோ ஒரு தனித்து அவளிடம் இருப்பது போல் பட்டது. தனக்காகக் கடவுள் அனுப்பி வைத்த தேவதையாகவே அவளைக் கருதினான்.

அவளுடன் தனியாகப் பொழுதைக் கழிக்கப்போகிரேன் என்கிற கற்பனையே சுகமாக இருந்தது. 

அவள் மடியில் தலைவைத்துப் படுத்து… பூவி விரல்களை நீவிவிட்டு, வெட்கத்தில் சிவக்கும் பட்டு கன்னத்தில் மெல்ல இதழ்பதித்து… அவள் நாணப்பட்டு சுதாரிப்பதற்குள் கன்னத்தைக் கவ்வி… 

அனுமதிப்பாளா? 

ஏன் மாட்டாள்? என்னைப் போன்ற கனவுகளும் ஏக்கமும் அவளுக்குள்ளும் இருக்காதா என்ன? பெண்கள் அவ்வளவு எளிதில் மனதிலுள்ள ஆசைகளை வெளிப்படுத்திவிட மாட்டார்கள். நாம்தான் வெளிக்கொணர ஆயத்தப்படுத்த வேண்டும்’ அவன் வயசுக்கே உரிய கனவுகளில் மூழ்கிப் போனான்.


ஒரே காரில் நால்வரும் கொடைக்கானலுக்குப் பயணமானார்கள். 

சிரிப்பும் அரட்டையுமாய் போய்ச் சேர்ந்த அவர்களைக் குளிர்த் தென்றல் ஆரத் தழுவி வரவேற்றது.

எங்கு நோக்கினாலும் பசுமை, மேகம்படர்ந்த மலைகள், சுவாசத்தைச் சுகப்படுத்திய யூகலிப்டஸ் மணம் கொத்துக் கொத்தாய்ப் பழங்களைத் தாங்கிக்கொண்டிருந்த பலா மரங்கள். மெத்தென்று கால்களை ஈரப்படுத்திய பசும்புற்கள். விதவிதமான மலர்கள், மலைப் பகுதிக்கே உரிய பாரம்பரிய வேலைப்பாடுகளுடன்கூடிய சிறு குடில்கள். 

அந்த ரம்மியமான சூழ்நிலை, இள வாலிப நெஞ்சங்களில் உணர்வலைகளைக் கிளப்பி, உசுப்பிவிட்டது.

முன்னரே ஏற்பாடு செய்திருந்த தனிக் குடில்களில் பெண்கள் தனியாகவும், ஆண்கள் தனியாகவும் தங்கி ஓய்வெடுத்தனர். 

“கொடைக்கானல் ரொம்ப அழகு இல்லே?” உள்ளங் கைகளைப் பரபரவென தேய்த்துக் கன்னத்தில் வைத்துக் கொண்டு கேட்டாள், அஸ்வினி. 

“ரொம்ப ரொம்ப!” 

“இங்கே வருவது எனக்கு இதுதான் முதல் தடவை! உனக்கு?” 

“பத்து வயசிலே வந்திருக்கேன். இங்கே அடிக்கடி விபத்து நடப்பதால் அம்மா அனுப்ப பயப்படுவாங்க. இப்பக்கூ ரொம்ப சமாளிச்சுதான் அனுமதி வாங்கினேன். ஆனாலும் இப்பதான் முதன்முதலா வர்ற மாதிரி இருக்கு. ஏன்னா, என பரத்கூட வந்திருக்கேனே!”

“இப்படி வந்திருக்கோமே… இது தப்பில்லையா அமுதா?”

“பைத்தியக்காரி மாதிரி பேசாதே. யாரோடு வந்திருக்கிறோம்? வருங்காலக் கணவனுடன்தானே?”

“தவறாக ஏதும் நடந்துவிடுமோன்னு பயமாக இருக்கு! அதுவும் நான்கு நாட்கள் தங்கப்போகிறோம்!”

“அது தப்பில்லை அஸ்வினி. அடுத்த மாதம் திருமண நடக்கப்போகுது. அதை ஞாபகம் வச்சுக்கோ!”

அழைப்புமணி அலறியது.

“யாரது?” என்று கேட்டாள், அமுதா.

“நாங்கதான்.”

கதவைத் திறந்தாள்.

பரத்தும் கோபியும், குளித்து உடை மாற்றி தயாரா வந்திருந்தனர்.

“நாங்க ரெடி. நீங்க ரெடியா?” கோபி கிண்டலாய் கேட்டான்.

“நாங்களும் ரெடி!” இப்போதும் அமுதாதான் பேசினாள்.

“அஸ்வினி வாயே திறக்கமாட்டாளா?” கோபி ஆதங்கமும் ஆர்வமுமாய்க் கேட்டான்.

“இப்ப சாவி உங்ககிட்டே இருக்கு. அவள் வாயை திறக்க வைக்கவேண்டியது உங்க பொறுப்பு!”

“ஏய்… சும்மா இரு. என்னென்னமோ பேசிக்கிட்டு”, அஸ்வினி கிசுகிசுப்பாய்க் கண்டித்தாள்.

பரத் வேண்டுமென்றே கவனத்தை வேறு பக்கம் செலுத்தினான்.

“நான் சொல்லலேன்னாலும் கோபி அதைத்தான் செய்வார்.”

“நிச்சயமா!” குறுகுறுவென அஸ்வினியையே பார்த்தான், கோபி

“சரி… கார் காத்திட்டிருக்கு. இப்ப கிளம்பினாதான், பார்க்கவேண்டிய இடங்களை ஒண்ணுவிடாம பார்க்கலாம்” என்றான், பரத்.

“கார் வந்து காத்திருக்குதா? என்ன சொல்றீங்க? நம்ம கார் என்னாச்சு?”

“நம்ம கார் பத்திரமாத்தான் இருக்கு. இந்த மலைச்சரிவுல ர் ஓட்டுறது கஷ்டம். இங்கேயே நிறைய சுற்றுலா கார்கள் இருக்கு. முக்கியமாய்ப் பார்க்கவேண்டிய இடங்களுக்கு அவங்களே கூட்டிக்கிட்டு போய்க் காட்டிடுவாங்க!”

“பரவாயில்லையே… நமக்கு வேலை மிச்சம் இல்லையா? நாங்களும் தயார். கிளம்பலாம்!” அமுதா சொல்ல அனைவரும் புறப்பட்டனர்.

காரில் முன்பக்கமும் பின்பக்கமுமாய் இரண்டு ஜோடிகளும் அமர்ந்தனர்.

பூங்கா, படகு சவாரி என்று ஒவ்வொரு இடமாகச் சுற்றினர். அமைதிப் பள்ளத்தாக்கு மிகவும் ஆபத்தான இடம் என்பதால் சுற்றுலாவாசிகள் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்தனர்.

சற்று தொலைவிலிருந்து பார்க்கும்போதே அதன் அழகு பரவசப்படுத்திற்று.

வெண்ணிறப் போர்வையொன்றைப் போர்த்தியது போல், அந்த ஆழமான, அகலமான பள்ளத்தாக்கைக் குளிர்மேகங்கள் அணைத்திருந்த அழகு பார்க்கக் கண் கோடி வேண்டும்.

அழகு ஆபத்தானது என்று இதைத்தான் சொல்லி இருப்பார்களோ?

கரணம் தப்பினால் மரணம் என்பது போல் கால் தவறினால் போதும் சர்ரென்று அதலபாதாளத்தில் விழவேண்டியதுதான். நினைத்தபோதெல்லாம் மழை பெய்யு இடமாகையால், சரிவான பாதை வழுக்கியது.

அமுதாவும், கோபியும் சமாளித்து விரைவாய் முன்னே போய் நின்று, இயற்கை அழகைக் கண்கொட்டாமல் ரசித்தனர்.

பரத் முன்னே செல்ல, அஸ்வினி மெல்ல பின்னே வந்தாள்.

ஈரமான களிமண் வழுக்கிவிட, “பரத்” என்றலறியபட அஸ்வினி சறுக்கி விழ, கண்ணிமைக்கும் பொழுதி அவளைத் தாங்கிப்பிடித்தான், பரத்.

அவன் மட்டும் இல்லையென்றால் சர்ரென்று வழுக்கி சென்று மேகக்குவியலில் விழுந்து காணாமல் போயிருக் வேண்டியதுதான்.

நினைத்துப் பார்க்கவேமுடியாத கொடுமை அது. பயத்தி உடல் நடுங்க அவனை இறுக்கிப் பிடித்துக்கொண்டாள்.

மிக நெருக்கத்தில் அவள் முகம்! வடிவான, சதை பிடிப்பான இதழ்கள் நடுக்கத்தில் துடித்தன.

அவளையே பார்த்துக்கொண்டிருந்த பரத்திற்கு அந்த துடிப்பை அடக்க வேண்டும் போல் ஆவல் எழுந்தது.

ஏனோ… இருவருக்குமே விலக மனமில்லை.

“என்ன… என்ன ஆச்சு? பார்த்து வரக்கூடாதா அஸ்வினி” பதறியபடி அருகில் ஓடிவந்தான், கோபி.

பின்னால் அமுதா.

சட்டென இருவரும் விலகினர்.


அழகழகான மலர்கள் கொத்துக் கொத்தாய் அணி வகுத்திருக்க… பார்வையாளர்கள் கூட்டம் அதிகமிருந்தது.

அமைதிப் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட அதிர்ச்சியில் அஸ்வினி களைத்திருந்ததால், ‘தன்னால் நடக்க முடியாது’ என்று புல்வெளியில் அமர்ந்துவிட்டாள்.

அமுதாவும், கோபியும் நேரத்தை வீணாக்காமல், சந்தர்ப்பத்தைச் சரியானபடி பயன்படுத்த வேண்டும் என்கிற கொள்கையுடன் ஒவ்வொன்றையும் ரசித்து கேமிராவில் பதிவு செய்தனர்.

அமுதா கேட்டுக்கொண்டதற்கிணங்க, பரத், அஸ்வினிக்கு துணையாக அமர்ந்திருந்தான்.

ஆனால், முன்பிலும்,அதிகமான தயக்கத்தினால் அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

“ஜோடிப் பொருத்தம் அமர்க்களமாயில்லை?” ஒரு வயதான தம்பதியினர் அவர்களைச் சிரிப்புடன் பார்த்துப் பேசிக்கொண்டே போக…

இருவரும் திடுக்கிட்டுப் பார்த்துக்கொண்டனர்.

இதயங்கள் துடிதுடித்தன… படபடத்தன.


“இந்த விளையாட்டு அவசியமா கோபி?”

“இதிலே என்ன இருக்கு? சும்மா விளையாட்டுக்கு ஏமாத்தறதுக்காக, நீ என் அறைக்கும், நான் உன் அறைக்கும் போகப்போகிறோம். அமுதா என்னைப் பார்த்து அசடுவழியப் போகிறா. அஸ்வினி உன்னைப் பார்த்து அசடுவழிவா. அவங்க ரெண்டு பேரும் தயாராகி வர்றதுக்குள்ளே… நீ என் அறைக்கு ஓடு… சீக்கிரம்!”

அரை மனதுடன் தலையாட்டினான், பரத்.

இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்திருந்தது வசதியாய்ப்போயிற்று. அதுவும் இரண்டு பேரும், ஒரே உயரம், நிறம் என்பது இன்னும் வசதியாய் இருந்தது.

நடைபாதையில் அமுதாவும் அஸ்வினியும் வந்து கொண்டிருந்தனர்.

“எனக்கென்னவோ இதிலெல்லாம் கொஞ்சம்கூட விருப்பமில்லை அமுதா! கல்யாணத்துக்கு முன்னால் அவருடன் தனியாவா? அது சரியில்லை.”

“இரவு முழுக்கவா தங்கப்போகிறோம்? சும்மா ரெண்டு மணி நேரம் பேசிட்டு, அப்புறம் நீயும் நானும் வழக்கம் போல தங்கிக்கப்போறோம். கோபி உன்கிட்டே தனியா பேச ஆசைபடுறார். நீ சரியான உம்மணா மூஞ்சியா இருக்கிறே! அவர் ஆசைப்படி பேசு, பழகு. அதனால என்ன குறைஞ்சிட போறே?”

அஸ்வினி அமைதியாய் இருந்தாள்.

அறை வாசலில் வந்து நின்றனர்.

“போ… உள்ளே !” கோபியின் அறையினுள் அஸ்வினியை தள்ளிவிட்டாள்.

பிறகு தானும் பக்கத்தில் இருந்த அறைக்குச் சென்றாள் அமுதா.

அவளுக்கு முதுகு காட்டியபடி ஜன்னலோரம் நின்று பொங்கிவந்த சிரிப்பை அடக்கிக்கொண்டிருந்தான், கோபி. காதலுடன் அவனை நெருங்கினாள், அமுதா.

“பரத்….”

“…”

“நம்ம கல்யாணத்தை அம்மா – அப்பா முடிவு பண்ணினாலும், கட்டினா உங்களைத்தான் கட்டுவேன்னு நான் எப்பவோ தீர்மானிச்சுட்டேன். ஏன்னா, நா உங்களைக் காதலிக்கிறேன்!” அவனை நெருங்கி முதுகோடு சேர்த்து அணைக்க முற்பட்டவளை… பெரிய சிரிப்புட திரும்பினான், கோபி.

“ஓகோ… அப்படியா?” என்றான், கேலியாய்.

அங்கு அவனை எதிர்பார்க்காத அமுதா தாளமாட்டாத வெட்கத்துடன் முகத்தை மூடிக்கொண்டாள்.

“தப்பா நினைச்சுக்காதே அமுதா. சும்மா உங்க ரெண்டு பேரையும் ஏமாத்த இப்படி ஆள் மாறினோம். அஸ்வினி அலறியடிச்சுக்கிட்டு வர்றவரைக்கும், “நீ பரத்தை எப்படி எல்லாம் காதலிக்கிறேன்னு சொல்லு” கதை கேட்கும் சுவாரசியத்துடன் அவள் எதிரில் அமர்ந்தான்.

– தொடரும்…

– மாலை மயக்கம் (நாவல்), முதற் பதிப்பு: நவம்பர் 2002, ராணி முத்து, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *