காலத்துக்கும் வெளிக்கும் இடையிலான விவாதம்






இருத்தலின் எல்லையற்ற பரப்பில், ப்ரபஞ்சத்திற்கும் காலத்திற்கும் இடையே கடுமையான விவாதம்.
நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களால் மின்னும் ப்ரபஞ்சம் கர்வத்தோடு கூறியது:
“ஒரே ஒரு அணுவிலிருந்து விரிவாக்கம் அடைந்தவனும், எல்லையற்றவனும், இன்னும் விரிவடைந்துகொண்டே இருப்பவனுமான நான்தான் பெரியவன்!”
காலம், அமைதியான, ஆனால் சக்திவாய்ந்த குரலுடன் எதிர்த்தது:
“உன்னையே இயக்குகிற நான்தான் பெரியவன்! நானும் மைக்ரோன் விநாடியிலிருந்து விரிந்து யுகங்களாக நீள்கிறவன். நான் இல்லையெனில் உனது இருப்பு அசைவற்ற பிம்பமாக, இத்தனை இருந்தும் எதுவுமே இல்லாததாக, அர்த்தமின்மையின் முடிவற்ற நீட்சியாக மட்டுமே இருக்கும்.”
அப்போது அண்டப் பெருவெளியின் ஏதோ ஒரு மூலையில் துளியாக உள்ள பூமிக் கிரகத்தில், நிலத்தைத் துளைத்தபடி ஒரு புல்லின் நுனி வெளிப்பட்டது.
அந்த நொடியில் ப்ரபஞ்சமும் காலமும் ஆழமான ஒன்றைப் புரிந்துகொண்டன. அவர்கள் எதிரிகள் அல்ல; மாறாக, ஒரே முழுமையின் இரு பகுதிகள்.
பிறகு வெளி பெண்ணாயிற்று; காலம் ஆணாயிற்று. இரண்டும் ஒன்றையொன்று ஆரத் தழுவிக்கொண்டன.
– நடுகல் இணைய இதழ், மார்ச் 2025.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |