காணாது போகுமோ காதல்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 10, 2022
பார்வையிட்டோர்: 4,483 
 

பாகம் 8 | பாகம் 9 | பாகம் 10

தீபக் கை வலியுடன் ஆபீஸில் அவன் அறையில் இருந்தான். செகரட்ரி‌ அனுமதி கேட்டு உள்ளே வந்தாள். தீபக் கையில் பேண்டேஜ் பார்த்ததும் “வாட் ஹேப்பண்ட் ஸார்.?”

“நத்திங். லேசாய் அடிபட்டுருச்சு. இன்னிக்கு ஃபைல்ஸ் எதுவும் ஸைன் பண்ண கொண்டு வராதீங்க. விஸிட்டர்ஸ் யாரையும் பார்க்கவில்லை. எனிதிங் எல்ஸ்?”

“நத்திங் ஸார்.” என ஒருசில பிஸினெஸ் லெட்டர் பற்றி கேட்டுவிட்டு போனாள்.

அவுட்லெட் ஸ்டோரில் சிவகுருவிடம் ஆதிரா கத்திக் கொண்டிருந்தாள். “நான் தப்பே பண்ணாம திட்டு வாங்கியிருக்கேன்.M.Dக்கு சொந்தக்காரங்களே திருடுறாங்க. அவர் என்னடான்னா வேலை பார்க்கிற அப்பாவி ஒர்கர்ஸை தரக்குறைவா பேசினா என்ன அர்த்தம்? M.D கிட்டே சொல்லலாம்னா மானேஜர் வேண்டாம்னு சொல்றாரு. ராத்திரி எல்லாம் எனக்குத் தூக்கம் வரலை.”

சிவகுரு “உனக்கு சொல்ல வேண்டுமென்றால் ஈவ்னிங் வீட்டுக்கு போறப்ப சொல்லிடு. இதுக்கு ஏன் இப்படி புலம்பறே?” M.Dகிட்டே சொன்னால் அமைதியாய் இருப்பே இல்லே.”

ஆதிரா “ஆமா.” என்றாள்.

அன்று என்னமோ பொழுது மெதுவாக போனது போல இருந்தது.மாலை ஐந்து மணி ஆபீஸிலிருந்து ஒவ்வொருவராய் கிளம்பிக் கொண்டிருந்தனர். ஆதிரா வேகமாக ஆபீஸ் காரிடாரில் தீபக் கார் உள்ளதா எனப் பார்த்தாள். கார் இருந்தது. ‘அப்பாடா M.D கிளம்பவில்லை.’ என தீபக் அறைக் கதவைத் தட்டிவிட்டு வேகமாய் உள்ளே வந்தாள். தீபக் சேரில் இல்லை. ‘எங்கே போனார் இந்த மனுஷன்?’

அவள் பின்புறம் தீபக் வந்து “என்ன விஷயம்?” என்றதும் ஆதிரா திடுக்கிட்டு திரும்பினாள். தீபக் கண்கள் சிவப்பாக முகம் கோபமாய் இருந்தது.

தீபக் “உங்களை யாரு உள்ளே விட்டது? என்கிட்டே பர்மிஷன் கேட்காமல் எப்படி என் ரூமிற்குள் வரலாம்?”

வெளியே காசிநாதன் ஒரு லெட்டரில் ஸைன் வாங்க தீபக் அறைக் கதவைத் தட்ட முயன்ற போது உள்ளே தீபக் கோபக் குரல் கேட்டு நின்று கவனித்தார்.

ஆதிரா “ஆபீஸ் விஷயமாக பேச வந்தேன்.”

தீபக் “இப்ப எதுவும் நான் கேட்கிற மூடில் இல்லை. ப்ளீஸ் கெட்அவுட்.”

ஆதிரா “எனக்குச் சொல்லி ஆகணும். ரெண்டு நாளா தூக்கமில்லை. இந்த எஸ்டேட்டில் திருடு நடக்குது தெரியுமா?”

தீபக் “சொல்ல வந்ததை இதோ இந்த டைரியில் எழுதி வச்சுட்டு போங்க. நான் டென்ஷனில் இருக்கேன்.”

ஆதிரா பேனாவை எடுத்து டைரியில் தான் பார்த்தவை அத்தனையும் எழுதினாள்.

காசிக்குப் புரிந்தது. இவள் தன்னைப் பற்றிதான் எழுதப் போகிறாள் என புரிந்து கொண்டு ‘உள்ளே போவதா? வேண்டாமா?’ என யோசித்த போது செக்யூரிட்டி வந்து “எல்லாரும் போயிட்டாங்க. ஆபீஸை பூட்டலாம்னு வந்தேன். M.D கிளம்பியாச்சா?” எனக் கேட்டபடி தீபக் அறை அருகே போனவனை காசி அவசரமாக தடுத்து ” போயிட்டார். நான், ரூம் ஏஸி, லைட் ஃபேன் எல்லாம் அணைச்சுட்டேன். நீ பூட்டிடு.” அவன் சரியென்று தலையாட்டி கதவை பூட்டினான். காசி அவனுடன் நடந்தபடி “அப்புறம் ஒரு விஷயம். M.D அவர் பிரண்ட் காரில் போயிட்டார். அதனால அவர் காரை வீட்டுக்குப் போகச் சொல்லிடு” என்றதும் அவன் சரியென்று தலையாட்டி விட்டு ஆபீஸ் எண்டரன்ஸ் கதவை பூட்டினான். காசி அவுட்லட் ஸ்டோருக்கு வந்தார். சிவகுரு பதட்டமாக “என்ன ஐயா இவ்வளவு தூரம்?”

காசி “என் அக்கா மகன் எஸ்டேட். நான் எங்கேயும் எப்பவும் வருவேன்.”

சிவகுரு “உண்மைதாங்க.”

காசி தெரியாதது போல “ஆதிரா எங்கே?”

சிவகுரு தடுமாறி ” M.Dயைப் பார்க்கப் போயிருக்கா. அவளுக்காகத்தான் காத்திருக்கேன்.”

காசி “நீங்க கிளம்புங்க. நான் ஷாம்மிற்காக வெயிட் பண்ணனும் அதனால் நீங்க போங்க. நான் இருக்கேன்.”

சிவகுரு‌ அரை மனதோடு கிளம்பி வெளியே நிற்கும் செக்யூரிட்டியிடம் “காசி ஸார் போனதும் பூட்டிடுப்பா.” என்று மெல்லிய குரலில் கூறிவிட்டுச் சென்றார். பல மணித்துளிகள் சென்றபோது ஷாம் வந்தான். “என்னப்பா இங்க உட்கார்ந்துட்டு என்ன பண்றே?” காசி நடந்ததைச் சொன்னார். ஷாம் யோசித்து “தீபக் கையில் போன் இருக்குமே. அதை வச்சு செக்யூரிட்டி கிட்டே பேசி கதவைத் திறக்கச் சொல்ல மாட்டானா?”

காசி சிரித்து “இன்னிக்கு ஏதோ டென்ஷனில் போனை வீட்டில் வச்சுட்டு வந்துட்டான். நான் கிளம்பறப்ப அக்கா தீபக் போனை என்னிடம் கொடுத்து அனுப்பினாள்.”

ஷாம் துள்ளலாக “சபாஷ். இன்னிக்கு தீபக் மாட்டினான். அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காத பெண்ணோடு ராத்திரி பூரா இருக்கப் போறான்.”

காசி “நம்மை மாட்டிவிடப் போன ஆதிராவுக்கும் இந்த தண்டனை வேணும். ராத்திரி ஒருத்தன் கூட இருந்தவளை யார் உத்தமின்னு நம்பு வாங்க? தீபக் ஆதிராவை கட்டிக்கிட்டா அவனுக்கு தண்டனை. கட்டலைன்னா ஆதிராவுக்குத் தண்டனை. இதையே காரணமாக வச்சு அந்த ஏழைப் பெண் ஆதிராவை அவன் தலையில் கட்டிவிட வேண்டியதுதான்.”

ஷாம் “ஸ்டேட்டஸ் ஸ்டேட்டஸ் என்று சொல்லி நம்ம ரேணுவை வேணாம்னு சொன்னவன் ஏழை வீட்டுக்கு மருமகனாகப் போகிறான்.”

இருவரும் சிரித்தனர்.

ஆபீஸ் ரூமில் ஆதிரா எழுதி முடித்து நிமிர்ந்த போது தீபக் ஜன்னல் அருகே கண்ணாடி வழியாக வெளியே பார்த்தபடி நின்றிருந்தான்.

ஆதிரா “எழுதியாச்சு. ஆனா..”

தீபக் “போகலாம். ” என்று ஒற்றை வார்த்தையில் சொன்னதும் ஆதிராவுக்கு அவன் மேல் ஒரு மரியாதை வந்தது. தன்னைப் போன்ற அழகான பெண்ணை அவன் கண்டுக்கவே இல்லையே! பொதுவாக எந்த பெரிய பதவியில் இருந்தாலும் ஆண்கள் பெண்களிடம் வழிவார்கள். ஆனால் இவன் கொஞ்சங்கூட சபலப்படவில்லை. இவன் சபலக்காரன் இல்லை ஆணவக்காரன். என்று மனதுள் நினைத்தபடி கதவைத் திறக்க முயன்றாள். பகீரென்றது. ‘என்ன இது திறக்க முடியலை.’ அழுகை வந்தது. “கதவைத் திறக்க முடியலை.” என கலக்கமாய் கூறியதும் தீபக் திரும்பிப் பார்த்தான். கதவை திறக்க முயன்று கொண்டிருந்தாள் ஆதிரா. தீபக் வந்து கதவை இழுத்துப் பார்த்தான். “செக்யூரிட்டி செக்யூரிட்டி” எனக் கதவைத் தட்டினான்.

“ஷிட் . முட்டாள் உள்ளே ஆள் இருக்கிறது தெரியாமல் பூட்டிட்டுப் போயிட்டான்.”

ஆதிரா அதிர்ச்சியில் அழுகை வர “என்னது பூட்டி விட்டுப் போயிட்டானா? ஐய்யய்யோ நான் வீட்டுக்குப் போகணும்.” அழ ஆரம்பித்த அவளை தீபக் விநோதமாகப் பார்த்தான். எப்போதும் துணிச்சலாகப் பேசுபவள் இப்ப குழந்தை மாதிரி அழறாளே!

ஆதிரா “ஜன்னலைத் திறந்து யாரையாவது கூப்பிடுங்க ஸார்.”

தீபக் “ஜன்னலை திறக்கறதா? கண்ணாடியை ஜன்னலில் ஃபிக்ஸ் பண்ணிருக்கு. திறக்க முடியாது.”

“கடவுளே! உங்க ஃபோனில் செக்யூரிட்டியைக் கூப்பிடுங்க.”

தீபக் பேண்ட் பாக்கெட்டில் சர்ட் பாக்கெட்டில் தேடினான்.

அப்போதுதான் நினைவு வந்தது. வீட்டில் விட்டு வந்தது.

ஆதிரா “என்ன?”

தீபக் “வீட்டில் ஜார்ஜ் போட்டு விட்டு மறந்து வந்துட்டேன்.”

ஆதிரா ஓவென்று அழுதபடி “நான் வீட்டுக்குப் போகணும் எங்க வீட்டில் தேடுவாங்க.”

தீபக் எரிச்சலாக “எங்க வீட்டில் தேட மாட்டாங்களா?”

ஆதிரா கோபமாக “எல்லாம் திட்டம் போட்டு செய்திருக்கீங்க. நீங்க உள்ளே இருக்கும் போது ஒரு செக்யூரிட்டி எப்படி பூட்டுவாங்க? செல்போனை வீட்டில் மறந்து விட்டுட்டு வர சான்ஸே இல்லை.”

தீபக் கோபமாக “நானும் வழி தெரியாம முழிச்சுட்டுதான் இருக்கேன். உங்களை நானா என் ரூமிற்கு வரச் சொன்னேன்? சரி வந்த உங்க கையிலாவது உங்க போன் இருக்கா?”

ஆதிரா “இல்லை. ஸ்டோரில் வச்சுட்டு வந்துட்டேனே.” தலையில் அடித்து அழுதாள்.

தீபக் ஆவேசமாக “அழுகை வேண்டாம். நிறுத்துங்க.”

அவன் ஆவேசத்தில் பயந்து அழுகையை நிறுத்தினாள்.

தீபக் தலையை இரு கைகளால் தாங்கியபடி சேரில் அமர்ந்தான். இருட்டத் தொடங்கியிருந்தது. ஆதிரா

சத்தமில்லாமல் அழுது கொண்டிருந்தாள். ஃபிரிட்ஜைத் திறந்து பார்த்தான். அதில் புதிதான பிரட்டும் ஜூஸூம் இருந்தது.

தான் ரெண்டு ஸ்லைஸ் பிரட் எடுத்துக் கொண்டு சின்ன பாட்டில் ஜூஸை தனக்கு எடுத்துக் கொண்டு மிச்சத்தை ஆதிராவிடம் நீட்டினான். ஆதிரா ஆத்திரமாக “ஸோ சாப்பிடுற ஐட்டம் வரை ரெடியா வச்சுருக்கீங்க”

தீபக் “பசிச்சா சாப்பிட எனக்காக பிரட் ஜூஸ்னு என் செகரட்ரி வாங்கி வைப்பா. இனி காலையில்தான் செக்யூரிட்டி வந்து கதவைத் திறப்பான். உங்களுக்கு பசிச்சா சாப்பிடலாம். வேண்டாம்னா விட்டுடுலாம். கட்டாயப்படுத்தமாட்டேன்.”

ஆதிரா அழுதாள். தீபக் “என்னதுக்கு இந்த அழுகை?”

ஆதிரா “உங்க மாதிரி பணக்கார ஆண்களை நம்ப முடியாது.”

தீபக் “நம்பினாலும் நம்பலைனாலும் இந்த ராத்திரி இங்கேதான்.”

ஆதிரா ஓவென்று அழுதாள்.

தீபக் “உஷ்…ஷ் எதுக்கு இப்படி அழணும்?”

ஆதிரா கேவியபடி “ஒரு வயசுப் பொண்ணு ஒரு ஆம்பளை கூட ராத்திரி முழுக்க இருந்தா…எ..ன்னை நா…ன் கெட்..டுப் போயிட்டேன்னு சொல்லுவாங்களே”

ஓலமிட்டு அழுதாள்.

‘நைனிகாவாகட்டும், ரேணுவாகட்டும் தன்னை ஆம்பளை இல்லேன்னு சொன்னதை கேட்டு கேட்டு துடித்தான். இன்று ஆதிரா தான் ஆம்பளை என்று சொல்கிறாள். தீபக் மனதுள் ஒரு மலர்ச்சி.

ஆதிரா அழுகையை நிறுத்தி விட்டு தீபக்கைப் பார்த்தாள். “இவன் ஏதோ யோசிக்கிறான். தப்பான எண்ணத்தை நானே நினைவு படுத்திவிட்டேனோ?’ என்று பயந்தவாறு எழ முயன்றவள் தலை சுற்ற மயங்கி விழுந்தாள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *